
உங்கள் கரு விழிக்குள் யாம் பதிவாக்கும் உயர்ந்த சக்தி
“நீங்கள் மெய் வழி செல்ல வேண்டும்…” என்ற உணர்வின் நிலைகளைச் செலுத்துகின்றீர்கள்.
1.இதற்கு உங்களைப் பிரார்த்திக்கக்கூடிய குரு வேண்டும்.
2.அப்படிப் பிரார்த்திக்கக்கூடிய குருவினுடைய தன்மை பெற்றால் தான் உங்கள் உணர்வின் தன்மை வலு கூடும்.
நாம் அனைவருமே T.V. RADIO மூலமாக அனைத்தையும் பார்த்து… கேட்டு அறிகின்றோம். இதைப் போன்று விஞ்ஞான அறிவு கொண்டு செயற்கைக்கோள் எங்கேயோ விண்ணிலே பரவக்கூடிய அந்த உணர்வின் அலைகளை எடுத்துப் படங்களை அனுப்புகின்றது.
அந்தப் படங்களை எடுத்துக் கொள்வதற்காக வேண்டி கம்ப்யூடர் சிஸ்டம் என்று வைத்துள்ளார்கள். ஒன்றுக்குள் ஒன்று இணையச் செய்து
1.அது விண்ணிலே எத்தனையோ கோடி மைல்களுக்கு அந்தப் பக்கம் பறந்து கொண்டிருந்தாலும்
2.அது அங்கிருக்கும் உணர்வலைகளைப் படமெடுத்துத் தரையிலிருக்கும் ஆண்டெனாக்களிலே இயக்கப்படுகின்றது.
3.கம்ப்யூடர் அந்த நிலையை இழுத்துப் பதிவு செய்து விடுகின்றது.
இதைப் போன்று
1.உங்கள் உடலின் தன்மை அனைத்துமே “இயந்திரம்…!” நம் கண்ணின் புலனறிவு “ஆண்டெனா…!”
2.அந்தப் பவரின் சக்தி கொண்டு (மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று) தியானிக்கப்படும் போது
3.நம் உடலுக்குள் எத்தனை உணர்வுகள் இருந்தாலும் கண்ணுக்குள் தொடர்பு உண்டு.
நாம் எந்தெந்த நிலைகளில் நினைவைச் செலுத்துகின்றோமோ அந்த உணர்வின் தன்மை ஆற்றல்மிக்க நிலைகள் கொண்டு கண்ணுக்குள் இருக்கக்கூடிய கரு விழிக்குள் அது தொடர்பு கொள்கின்றது.
அவ்வாறு அது தொடர்பு கொள்ளும் பொழுது நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி
1.உங்கள் கண்ணுக்குள் இருக்கக்கூடிய அந்தக் கரு விழிகளிலே
2.மெய் ஞானிகளின் அருளாற்றல்களை நீங்கள் பெற வேண்டும் என்ற உணர்வை உந்தச் செய்து அங்கே பதிவு செய்கின்றோம்.
அதாவது கண்ணாலே பார்ப்பதும் அந்தப் பார்வையின் நிலைகள் கொண்டு உணர்வின் ஆற்றலைப் பெருக்கச் செய்யும் நிலையாக இது அமைகிறது.
குருநாதர் எமக்கு எவ்வாறு காட்டினாரோ அந்த உணர்வின் நிலைகள் கொண்டே
1.உங்கள் கருவிழிக்குள் அந்த உணர்வின் திரை ஈர்ப்பின் சக்தியைப் பெறச் செய்யும் போது
2.நீங்கள் இரவிலே படுத்துக் கொண்டிருக்கும்போது இது பதிவு ஆகின்றது.
இவ்வாறு நீங்கள் பழக்கப்படுத்திக் கொண்ட பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று இரவிலே ஆத்ம சுத்தி செய்து விட்டு நீங்கள் படுக்கும் போது “இந்த உணர்வலையின் ஓட்டங்கள்…” இருந்து கொண்டிருக்கும். அப்பொழுது
1.சப்தரிஷி மண்டலங்களில் இருந்தும் துருவ நட்சத்திரத்தில் இருந்தும் வரக்கூடிய அலைகளை
2.அது தன்னிச்சையாகவே அந்த உணர்வுகளைக் கவர்ந்து இழுத்துவிடும்.
3.இரவு முழுவதுமே தியானமாக அது அமைந்து விடும்.
