“வாழ வைக்க வேண்டும்…” என்ற எண்ணம் தான் நமக்கு வர வேண்டும் என்றார் குருநாதர்

“வாழ வைக்க வேண்டும்…” என்ற எண்ணம் தான் நமக்கு வர வேண்டும் என்றார் குருநாதர்

 

யாம் ஒரு முறை குருதேவர் ஆணைப்படி இமயமலைக்குச் சென்றோம். அப்பொழுது உடலில் கோவணம் மட்டுமே அணிந்திருந்தோம். வேறு எந்தத் துணியும் எம்மிடம் இல்லை.

அங்கே நிலவும் குளிரில் குருதேவர் அருளிக் கொடுத்த உணர்வுகளை யாம் நுகர்ந்து கொண்டிருந்ததால் எம் உடலில் வெப்பம் உருவாகி… குளிர் எதுவும் தாக்காத வண்ணம் அங்கே நடந்து சென்று கொண்டிருந்தோம்.

அந்த பனிமலைப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது யாம் ஒரு இடத்தைக் கடந்திருப்போம். சற்று நேரத்தில் கால் வைத்து நடந்த பகுதி இடிந்து தகர்ந்து விழுந்தது. தகர்ந்து விழுந்த இடத்தைப் பார்த்தால் பெரிய பாதாளமே அங்கே இருந்தது.

அதைப் பார்த்தவுடன் எமது சிந்தனைகள் எங்கே சென்றது…?
1.எமது குழந்தைகள் எமது குடும்பம் எவ்வாறு இருக்கின்றதோ…?
2.யாம் மீண்டும் அவர்களைச் சந்திக்க முடியுமா…? அல்லது இங்கேயே விழுந்து இறந்துவிடுவோமா…?
3.இந்த பாதாளத்தில் விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்…? என்றுதான் எமது சிந்தனைகள் சென்றன.

உடல் மீது தான் ஆசை தோன்றியது. குரு கொடுத்த உணர்வுகளை அந்த நேரத்தில் மறந்துவிட்டோம்.

இதனால் எமது உடலில் குளிரெடுத்தது. இதயம் “பட…பட…” எனத் துடித்து இரைச்சலாகி… சற்று நேரத்தில் “இறந்தே விடுவோம்”என்ற நிலை எம்மிடத்தில் உருவானது.

அப்பொழுது குருதேவர் எமக்கு முன்னால் உதயமானர்.

மனமே இனியாகிலும் மயங்காதே,
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே.
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ…?
மின்னலைப் போல மறைவதைப் பாராய்.

நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ…?
நிலையில்லா இவ்வுலகம் உனக்குச் சதமா…?
மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே…!
என்ற இந்த பாடலைப் பாடினார்.

சோதனையான சமயத்தில் “இப்படி ஆகின்றதே”என்று வருந்தி “உன் குழந்தைகளையும் மற்றவர்களையும் எண்ணிப் படபடப்பாகி மயங்குகின்றாய்.

ஆனால் சற்று நேரத்திற்கு முன் உனது உயிர் போயிருந்தால் இந்தப் பொன்னடி பொருளை எங்கே காணப் போகின்றாய்…? என்று கேட்கிறார் குருதேவர்.

ஆகவே
1.ஆசையின் உணர்வை விடுத்து அருள் ஒளியின் உணர்வை எடுத்து
2.என் குழந்தைகள் அருள் ஞானம் பெற வேண்டும்… இருளை அகற்றி மெய்ப் பொருள் காண வேண்டும்
3.அவர்கள் வாழ்க்கை நலம் பெற வேண்டும் என்ற உணர்வினை எடுத்தால் அவர்களை வாழ வைக்கலாம்.

நமக்குள் அருள் உணர்வைக் காக்கலாம் என்றார் குருதேவர்.

1.மனிதருக்கு “வாழ வைக்க வேண்டும்” என்ற எண்ணம்தான் வரவேண்டுமே தவிர
2.“இப்படி ஆகி விட்டதே”என்று எண்ணக் கூடாது.

ஏனென்றால் இப்படி ஆகி விட்டதே…! என்று வேதனையை எடுக்கப்படும் பொழுதுதான் விஷத்தின் தன்மையைக் கவர நேருகின்றது. அதனால் மனிதரின் செயலாக்கத்தின் தன்மை குறைகின்றது.

இது போன்று யாம் செல்லும் பாதையில் விபத்துக்கள் நேரிடும் பொழுதெல்லாம் எமக்குக் குடும்பத்தின் ஞாபகம் வரும். அப்பொழுது இதிலிருந்து எப்படி காத்துக் கொள்வது…? என்று நினைவுபடுத்திக் கொண்டே இருப்பார் குருநாதர்.

ஆகவே குரு காண்பித்த அருள் வழியில்
1.நாம் அனைவரும் “நம் உடல் நமக்கு சொந்தமில்லை…!” என்று உணர வேண்டும்.
2.உயிருடன் ஒன்றும் உணர்வை அருள் ஒளியின் உணர்வாக இணைத்துச் சொந்தமாக்குதல் வேண்டும்
3.மகரிஷிகளின் அருளைப் பற்றுடன் பற்றுதல் வேண்டும்.
4.நமது வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றுதல் வேண்டும்.

ஒவ்வொரு சமயத்திலும் மனிதர் தாம் சந்தர்ப்பத்தால் அறியாது வரும் தீமைகளில் சிக்கிக் கொள்வதை உணர்த்தி “மனிதர் தாம் எவ்வாறு தீமைகளிலிருந்து மீள்வது…?” எனும் நிலையை அனுபவரீதியாக எமக்கு உணர்த்தினார் குருநாதர்.

பித்து நிலையிலிருக்கும் இந்த உலகிலிருந்து “விடுபட்டுச் செல்கிறேன்” என்றார் குருநாதர்

பித்து நிலையிலிருக்கும் இந்த உலகிலிருந்து “விடுபட்டுச் செல்கிறேன்” என்றார் குருநாதர்

 

இந்த வாழ்க்கையில் பித்தனைப் போல் தான் இருந்தார் நமது குருநாதர்.

“இந்த உலகமே பித்து நிலையில் இருக்கின்றது” என்பதை உணர்த்துவதற்கு இந்த உலகில் உள்ளோர்க்கு அவரைப் பார்த்தால் பித்தனாகத்தான் தெரியும்.

ஆனால் இந்த உலக மக்கள் பித்துப்பிடித்துப் பித்தனாக உள்ளனர். இதிலிருந்து நான் விடுபட்டே செல்கின்றேன் என்றார். இந்த உண்மையின் உணர்வின் இயக்கத்தை அவர் தெளிவாகப் பதிவு செய்து கொண்டார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

ஆகையினால்
1.மற்றவர்கள்… யார் தவறு செய்கின்றார்கள்…?
2.எப்படிச் செய்கின்றார்கள்…? என்பதைச் சிந்திப்பதில்லை.
3.அதை அவர் ஏற்றுக்கொள்வதும் இல்லை.

உயிர் உணர்வு உடல் – இயக்கம்

உயிர் உணர்வு உடல் – இயக்கம்

 

ஒரு மரம் பட்டு அதனுடைய சத்தெல்லாம் இழந்தாலும்… அதில் விளைந்த சத்தினைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து சேமித்து வைத்துக் கொள்கின்றது.
1.சேமித்த உணர்வின் தன்மை பூமியின் பரத்தில் பரமாத்மாவில் அலைகளாகத் தொடர்கின்றது… பரமாத்மாவாக இருக்கின்றது.
2.மண்ணிலே ஊன்றப்பட்ட வித்து தன் தாய் மரத்தின் உணர்வை நுகர்ந்து மரமாக விளைந்து மீண்டும் தன் இனத்தின் வித்தை உருவாக்குகின்றது.

இதைப் போல தான் சூரியனால் உருவான இந்த உணர்வுகள் அதனுடைய அலை வரிசைகள் தொடர்ந்து எதன் எதன் வழிகளில் அது கவர்ந்ததோ அந்த இன வித்துக்கள் மாறுவதும்… மரம் ஒன்றுடன் ஒன்று இணையப்படும் பொழுது மரத்தின் இனங்கள் மாறுவதும்… தாவர இனங்களும் மாறுகின்றது.

இதைப் போன்று… நம் உடலுக்குள் இருக்கும் உயிர் “நாம் எண்ணியது எதுவோ… அதை ஜீவ அணுக்களாக மாற்றி…” அந்த உணர்வின் மலமாக உடலாக மாற்றி அமைக்கின்றது.

சூரியனைப் போல உயிர் மாற்றிக் கொண்டிருக்கும் நிலையில்
1.இந்தப் பூமியில் காற்றுடன் கலந்துள்ளது
2.ஆனால் நம் உடலில் ரத்தத்துடன் கலக்கின்றது.

நாம் எண்ணியது எதுவோ அது அனைத்தும் ஜீவ அணுக்களாக ரத்தங்களிலே உருப் பெறுகின்றது.

பல கோடி வித்துக்களாக உருப்பெற்றாலும் அந்தந்த மரம் காற்றிலே மிதந்து வரும் தன் இனத்தின் சத்தை எடுத்து விளைவது போல நமக்குள்ளும் விளைகின்றது.

ஒருவன் தீமையாகப் பேசுகின்றான்…! அவனிடமிருந்து சொல்லாக வருகின்றது… அவனில் விளைந்த வித்தாக அது வெளிப்படுகின்றது. நாம் அதை உற்றுப் பார்க்கப்படும் பொழுது ஊழ்வினையாக நமக்குள் பதிவாகின்றது. வினை தான் வித்து என்பது.

ஒரு வித்து தன் சத்தைக் காற்றிலிருந்து எவ்வாறு கவர்கின்றதோ அதைப் போல்
1.நமக்குள் எண்ணங்களாகப் பதிவு செய்த ஊழ்வினை மீண்டும் தன் உணர்வின் சத்தை ஆன்மாவாக மாற்றுகிறது.
2.மாற்றிய பின் சுவாசித்து உயிரிலே பட்டு அது தான் எண்ணமாக மாறுகின்றது.
3.அது உடலுக்குள் செயல்படும்போது அந்த உணர்வின் உந்து விசையால் நம் உடல் அங்கங்கள் அதற்குத்தக்க அசைகிறது.

நாதத்தின் சுருதி கொண்டு வாத்தியங்களை இசைக்கிறார்கள். அதைக் கேட்டு… அந்த இனிமை கலந்த உணர்வுகளை ஒரு தரம் பதிவாக்கி விட்டால் அந்த ராக இணைப்பிற்கு அந்த இசையின் வாசிப்பிற்கு நம்முடைய அங்கங்கள் இசைந்து இயக்குகின்றது.

வாசிக்கத் தெரியவில்லை என்றால்… சீராகப் பதிவு செய்யவில்லை என்றால் என்னதான் வாத்தியம் வாசித்தாலும் அது வராது.

இனிமை கொண்ட வாத்தியத்தின் உணர்வின் தன்மையை தனக்குள் பதிவு செய்யும் பொழுது அது பதிந்த பின் தன்னிச்சையாக அவருடைய அங்கங்களை அசைப்பதும் மீண்டும் ரசனையை அவர்கள் கூட்டும் பொழுது அதற்கு தகுந்தாற் போல் அந்த வாத்தியங்கள் மிகவும் நயமாகவும் பிறரை மகிழ்விக்கும் நிலையும் ஆட்டிப்படைக்கும் நிலைகளும் வருகின்றது.

இதைப் போன்று தான்
1.ஒரு மனிதன் கோபித்த உணர்வின் தன்மையைப் பதிவு செய்து கொண்டால்
2.அந்த உணர்வின் நாதங்கள் நமக்குள் கோப உணர்ச்சிகளைத் தூண்டி இந்த உணர்வுக்கொப்ப நம் அங்கங்களை இயக்குவதும்
3.அதே உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் மற்றவரை அழித்திடும் நிலையோ… இம்சிக்கும் நிலையாகவோ அது நமக்குள் தோன்றும்.

அவ்வாறு தோன்றிய உணர்வுகள் நம் உடலுக்குள் இம்சைப்படும் உணர்வுகளாகவே உருப்பெறுகின்றது. அப்பொழுது மகிழ்ச்சியாக உருவான இந்த உடல் நலியும் தருணம் வருகின்றது.

பிரபஞ்சத்தில் சூரியன் இயக்குவது போல
1.நாம் எண்ணிய உணர்வுகள் எவையோ அவை அனைத்தையும்
2.உயிர் உடலுக்குள் அணுக்களாக மாற்றிக் கொண்டே இருக்கிறது.

“தங்கத்தைப் போன்று…” எங்கள் மனம் மங்காத அந்த அருள் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா

“தங்கத்தைப் போன்று…” எங்கள் மனம் மங்காத அந்த அருள் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா

 

தியானமிருந்து பழகிக் கொண்டவர்கள் ஆத்ம சுத்தியைக் கடைப்பிடிக்க வேண்டும். எப்பொழுது நாம் வீட்டைவிட்டு வெளியில் சென்றாலும் கண்டிப்பாக ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

உதாரணமாக… நம்முடைய நண்பர் ஒருவர் நம்மிடம் அவருடைய கஷ்டத்தைச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நாம் காது கொடுத்துக் கேட்கிறோம். அவருடைய கஷ்டத்தை நாம் கேட்கும் பொழுது நமது உடல் சுருங்குகின்றது… நம்மையறியாமலேயே முகம் வாடுகின்றது.

அவ்வாறு அவருடைய கஷ்டத்தையெல்லாம் நாம் கேட்டுணரும் பொழுது
1.அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் சென்று
2.அது உமிழ் நீராக மாறி நம் ஆகாரத்துடன் கலந்து
3.நாம் எந்த நல்ல குணத்துடன் கேட்டோமோ அந்த உணர்வான சத்து ஆகாரத்துடன் கலந்து
4.நாம் எண்ணிய நல்ல எண்ணங்களுக்குள் கஷ்டமான உணர்வு கலந்து விடுகின்றது.

அவருக்கு நாம் பணத்தைக் கொடுத்து உதவி செய்தாலும் கூட அவருடைய துன்பமான உணர்வுகள் உமிழ் நீராக வடிக்கப்பட்டு நம் ஆகாரத்துடன் கலந்து இரத்தத்துடன் கலந்து விடுகின்றது.

அப்படி இரத்தத்தில் கலந்து செல்லும்போது அதை நமது நுரையீரல்… சுவாசப்பை எடுத்து
1.இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் உறுப்புகளுக்கு அனுப்பப்படும் பொழுது
2.அவர்கள் எப்படி வேதனைப்பட்டார்களோ அந்த உணர்ச்சிகள் நம் உறுப்புகளில் முதலில் ஏற்படும்.

அப்பொழுது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் கிட்னி அதைச் சரியாகச் சுத்தப்படுத்தாது. அவ்வாறு சுத்தப்படுத்தாமல் அனுப்பும்போது
1.நம் உடல் முழுவதற்கும் அந்த இரத்தம் செல்லும் பொழுது
2.நமது உடலுக்குள் வேதனையை உண்டாக்கும் நிலை வருகிறது.

அந்த வேதனையான உணர்வுகள் செல்லும்போது அந்த நல்ல குணத்துடன் இது இரண்டறக் கலந்து விடுகின்றது.

உதாரணமாக… ஒரு தொட்டியில் நீரை ஊற்றி ஒரு தங்கக் கட்டியை எலக்ட்ரானுடன் இணைக்கப்பட்டு நீருக்குள் போட்டுவிடுவார்கள். அதே சமயம் ஒரு செம்புக் கட்டியுடன் எலக்ட்ரானிக்கைக் கலக்கச் செய்து நீருக்குள் போட்டுவிடுவார்கள்.

1.செம்பில் எலக்ட்ரானிக்கை அதிகமாகக் கூட்டித் தங்கத்திலே குறைத்துக் கொடுக்கும் பொழுது
2.தங்கத்திலிருக்கக்கூடிய (தங்கச்) சக்திகள் கரைந்து
3.அதிகமாகக் கூடிய செம்பின் எலக்ட்ரானிக் அதைக் கவர்ந்து
4.செம்புக்குள் தங்க முலாம் பூசிவிடும்.

உள்ளே இருக்கக்கூடிய செம்பு கறுப்பதை விடுத்து இந்தத் “தங்கத்தின் முலாமாக ஆகி…”அது தெளிவாகின்றது.

ஆனால் அதே சமயம்,
1.தங்கத்திற்குள் எலக்ட்ரானிக்கை அதிகமாகச் சேர்த்து செம்பில் குறைவான எலக்ட்ரானிக்கைச் சேர்த்தால்
2.செம்பின் சக்திகள் கரைந்து தங்கத்திற்குள் முலாம் பூசிவிடும்
3.அடிக்கடி செம்பு எப்படிக் கருக்கின்றதோ அதே மாதிரி தங்கம் கறுத்துவிடும்.

அதே போல் தான் நல்ல எண்ணங்கள் கொண்டு ஒருவருடைய துன்பமான உணர்வைக் கேட்டறியும் போது அந்த உணர்வுகள் நம் இரத்தத்துடன் கலந்து அது உடலுக்குள் செல்லும்போது
1.நாம் எந்த குணம் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தோமோ
2.அந்த நல்ல குணத்தில் துன்ப உணர்வுகள் முலாமாகப் பூசிவிடும்.

ஏனென்றால் நல்ல குணம் கொண்டு நாம் பேசினாலும் அவர் படும் துன்பத்தின் மேல் எண்ணங்களை அதிகமாகச் செலுத்தி
1.“உனக்கு எப்படி இப்படிக் கஷ்டம் வந்தது…?” என்று கேட்கப்படும் போது
2.அந்த நல்ல உணர்வுகளுடன் அவரின் நோயான உணர்வுகள் முலாம் பூசிவிடும்.

முதலில் நம் நல்ல குணங்கள் நோயற்ற நிலையும் தெளிவான நிலைகளும் உடலில் தெம்பாக இருந்தது. ஆனால் கஷ்டத்தைக் கேட்டவுடன் மங்கிவிடுகிறது.

அதாவது… தங்கம் எப்படிப் பளப்பளப்பாக இருந்ததோ அதைப் போல நமது தெளிவான எண்ணங்களில் அவருடைய துன்ப உணர்வுகள் கலக்கப்படும் பொழுது நம்மை அறியாமலேயே சோர்வடைந்து விடுகின்றோம்.

இது நாளாக நாளாக… நமக்குள் நோயாக வந்து சேர்ந்து விடுகின்றது. நமது எண்ணமும் தெளிவற்றதாகப் போய்விடுகின்றது. நாம் துன்பத்தைக் கேட்டறிந்தோம்… அதை உடனே துடைக்க வேண்டுமல்லவா…?

அதைத் துடைப்பதற்குத்தான் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம். துன்பத்தைக் கேட்டறிந்தபின்,…
1.உடனே “ஈஸ்வரா” என்று நம் உயிரை எண்ணி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளை நுகர்ந்து நம் உடலுக்குள் செலுத்தி
3.நம் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணித் தியானித்து அதைச் சுத்தப்படுத்த வேண்டும்.

பின்… துன்பப்பட்டவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்றுத் துன்பத்திலிருந்து விடுபடும் அருள் சக்தி அவர்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நாம் தியானித்து “அந்த அருள் சக்திகளை அவர்களுக்குப் பாய்ச்ச வேண்டும்…!”

இப்படி ஆத்ம சுத்தி செய்து நம் நல்ல குணங்களை மங்காது நாம் காத்துக் கொள்ள வேண்டும்.

ஈசனுக்கு மகிழ்ச்சி

ஈசனுக்கு மகிழ்ச்சி

 

நாம் இங்கே கற்றுக் கொண்ட நிலைகள் நம் குடும்ப வாழ்க்கையிலும் சரி… நம் எதிரியாக இருந்தாலும் சரி… நம் சொல்லின் நிலைகள் அங்கே இனிமைப்படுத்த வேண்டும்.

1.மற்றவர்கள் காரமான நிலைகளில் பேசினாலும் நாம் எடுத்துக் கொண்ட ஜெபத்தின் பலன்
2.பிறர் காரமாகப் பேசக்கூடிய உணர்வுகளைத் தடுத்து நிறுத்தும் ஆற்றலாகப் பெற வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்குள் அந்த ஆற்றல் பெறுவதற்கு சதா நீங்கள் “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தை எடுத்து உங்கள் உயிரை ஈசனாக மதித்துச் செயல்படுத்திப் பாருங்கள்.

1.ஆலயங்களில் அந்த ஈசனுக்குப் “பாலாபிஷகம்” செய்வது போன்று
2.உங்கள் ஈசனுக்கு அந்த மெய் ஞானியின் அருள் சக்தியை நீங்கள் சுவாசித்து அபிஷேகிக்க வேண்டும்.

அந்த மெய் ஞானிகளின் உணர்வின் மணங்கள் உங்களுக்குக் கிடைக்கச் செய்வதற்காக உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து “அந்த அபிஷேகத்தை யாம் செய்து கொண்டே இருக்கின்றோம்…”

ஆகையினாலே ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தியைச் செய்து அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைச் சுவாசித்து உங்கள் உயிரான நிலைகளை மகிழச் செய்யுங்கள்.

ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை நாம் எடுத்துப் பயன்படுத்தி பிறருக்குச் சொன்னாலும்
1.நாம் வெளிப்படுத்தும் இந்த உணர்வுகளை அவர்கள் சுவாசித்து
2.அவர் உடலில் இருக்கக்கூடிய உயிரான ஈசனிடம் ஒலிகள் பட்டு அதே உணர்வுகள் தூண்டப்படுகின்றது.

நாம் பேசிய உணர்வுக்கொப்ப அந்த உணர்வின் நிலைகள் அந்த உடலை இயக்கச் செய்து நம்மைப் பக்குவப்படுத்துவதோ நல்ல சொல்லைச் சொல்வதோ போன்ற நிலைகள் ஏற்படுகின்றது.

இதையெல்லாம் கண்டுணர்ந்த நாம் ஒவ்வொரு நிமிடமும் இதைப் பாச அணைப்புடன் செயல்படுத்த வேண்டும்.

குழந்தை தவறு செய்தாலும் பாசத்துடன் அணைத்துக் கொள்கின்றோம். நம் உடலிலே வேதனையாகும் பொழுது ஒரு அசுத்தம் பட்டு விட்டால் அசுத்தம் என்ற நிலைகளை எண்ணாதபடி அதைத் துடைக்க முற்படுகின்றோம்.

அதைப் போன்று
1.பிறருடைய எண்ணங்களில் அசுத்த சொற்கள் வந்தாலும்
2.நாம் எண்ணத்தாலே துடைக்கும் பக்குவம் கொண்டு செயல்பட வேண்டும்.

பிறரிடம் அசுத்த உணர்வின் எண்ணங்கள் தோற்றுவித்தாலும் நாம் “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி அவருடைய அசுத்தத்தை நீக்கும் ஆற்றலை நாம் செய்து பழகுவோமேயானால் நமக்குள் ஐக்கியமாகும் நிலைகள் பிறக்கும்.

1.இதன் மூலம் நாம் அனைவரும் ஏகாந்தமாக மகிழ்ந்து வாழலாம்.
2.அந்த மகரிஷிகள் சென்ற எல்லையை அனைவரும் எளிதாக அடைய முடியும்.

எமது அருளாசிகள்.

தீமைகளைப் பற்றித் தெரிந்து கொள்வது பெரிதல்ல… தெரிந்த பின் உடனே அதை நீக்க வேண்டும்

தீமைகளைப் பற்றித் தெரிந்து கொள்வது பெரிதல்ல… தெரிந்த பின் உடனே அதை நீக்க வேண்டும்

 

நாம் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருப்பினும்… ஒருவர் வேதனைப்படுவதைப் பார்க்காமல் இருக்க முடியாது. அவர் சொல்லைக் கேட்காமல் இருக்க முடியாது.

ஒருவன் குற்றம் செய்கிறான் என்றால் அதைப் பார்க்காமல் இருக்க முடியாது. குற்றம் செய்தவர்களால் நேர்முகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் வேதனைப்படுவதையும் நாம் பார்க்கத்தான் செய்கின்றோம்.

1.அதையெல்லாம் அறிவால் அறிகின்றோம். அறிந்த உணர்வு நமக்குள் பதிவாகின்றது.
2.எத்தகைய உணர்வுகளைப் பார்த்தாலும் அறிந்து தெரிந்து கொண்டாலும்
3.கார்த்திகேயா என்று தெரிந்திடும் அறிவு இருந்தாலும் “அதை நீக்கிடும் அறிவு வேண்டும்…”

நம் உடல் ண்ஹாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் இருக்கும் நஞ்சினை மலமாக மாற்றி விட்டு நல்ல உணர்வினை உடலாகச் சேர்க்கின்றது. அந்த நல்ல உணர்வால் நாம் இடும் மணத்தால் நல்ல எண்ணங்கள் கொண்டு தீமையை அகற்றிடும் நிலைகளை உருவாக்குதல் வேண்டும்.

1.நல்லவைகள் எதுவாக இருப்பினும்
2.தீமைகளைப் பற்றித் தெரிந்திடும் அறிவு இருந்தாலும்
3.தெரிந்த பின் அந்தத் தீமையை நீக்க வேண்டும் அல்லவா.

வேலை செய்கின்றோம்… கை அழுக்காகின்றது. அதை நாம் கழுவாதபடி அடுத்து உணவை உட்கொள்வோமா…? அப்படி உட்கொண்டால் அழுக்கின் சுவையே தான் வரும்… உணவு சுவையற்றதாக மாறி உடலுக்கும் தீங்கு விளைவிக்கின்றது.

இதைப் போன்று தான் மகிழ்ச்சி கொண்டு மற்றவர்கள் கஷ்டத்தைக் கேட்டறிந்தாலும்… அதைத் தெரிந்து கொள்ளும் அறிவு இருந்தாலும்…
1.அவருடைய தீங்கு நம் நல்ல அறிவுடன் இணையும் பொழுது
2.அதைத் துடைக்கவில்லை என்றால் அவரின் தீமையின் உணர்வே நமக்குள் விளையும்.

துடைக்கா விட்டால் உடலில் நோயின் தன்மையாகிவிடும். மீண்டும் நல்ல உணர்வை எடுக்க முடியாதபடி தவிக்கும். அப்பொழுது சிந்தனைகள் சிதறும். சிதறும் பொழுது உடலில் நடுக்கமும் நடுக்கத்தால் வரும் கோபமும் சிந்தனையற்ற செயல்களாக நம்மை இயக்கி விடுகின்றது.

இதைப்போன்ற நிலையில் இருந்து நாம் மீள்தல் வேண்டும்.

ஆகவே… சந்தர்ப்பத்தால் எத்தகைய தீமைகள் புகுந்தாலும் அந்தத் தீய வினைகளை உடனுக்குடன் துடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குத் தியானமும் ஆத்ம சுத்தி பயிற்சியும் கொடுக்கின்றோம்.

எந்த நேரம் ஆனாலும்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்து
2.உடனுக்குடன் தீமை செய்யும் உணர்வுகளை நீங்கள் அகற்றிட முடியும்.
3.உங்கள் நல்ல எண்ணங்களை உணர்வுகளை வலுப்படுத்திக் கொள்ள முடியும்.

அந்த ஞானிகள் பெற்ற அறிவின் ஞானத்தையும் நாம் நமக்குள் வளர்த்து இந்த வாழ்க்கையில் என்றுமே பொருளறிந்து செயல்படும் திறனாக அருள் வழியில் வாழ முடியும்.

“ஒரேடியாக தியானமிருந்து அருளைப் பெறுவேன்…” என்று சொன்னால் அது நடக்காது

“ஒரேடியாக தியானமிருந்து அருளைப் பெறுவேன்…” என்று சொன்னால் அது நடக்காது

 

உதாரணமாக சில வருடங்களுக்கு முன் ஒருவன் நமக்குக் கெடுதல் செய்திருப்பான். அதனால் நம் குடும்பமே நஷ்டம் அடைந்திருக்கும். இல்லாததைச் சொல்லி இருப்பான்.

மீண்டும் அவனைப் பார்த்தவுடன் கஷ்டமான நிலைகள் நமக்குள் ஏற்கனவே பதிவானது இழுத்து நம் ஆன்மாவில் வந்துவிடும். அப்பொழுது அவனை வெறுக்கும் நிலைகள் நமக்குள் உருவாக ஆரம்பித்துவிடும்.
1.சிறிது நாள் அதற்குச் சாப்பாடு இல்லாமல் இருந்தது.
2.சாப்பாடு கிடைத்ததும் வீரியம் அடைய ஆரம்பித்துவிடும்.

மண்ணுக்குள் எத்தனையோ வித்துகள் மறைந்து இருக்கின்றது. சிறிது காலம் மழை இல்லையென்றால் வறண்டு போய்விடுகின்றது. ஒரு நாள் மழை பெய்து விட்டால் தள… தள…என்று வெளியில் வரத் தொடங்கி விடுகின்றது.

இதைப் போன்றுதான் பகைமை கொண்டு அவன் செய்த தவறான நிலைகள் நமக்குள் பதிவானாலும்
1.அவனைப் பார்த்தவுடனே அந்த இனத்தைத் தனக்குள் கவர்ந்து
2.அதனின் செயலாகத் தனக்குள் ஆகாரம் தேட ஆரம்பித்துவிடும்.

அப்பொழுது நாம் இவ்வளவு தியானம் எடுக்கின்றோம்… “அவனைப் பார்த்தவுடனே கோபம் வருகின்றதே…!” என்று நினைப்போம்.

இந்த உணர்வு இங்கு வந்தபின் இரவு தூங்கினால் கெட்ட கனவாக வரும். அந்த வெறுப்பின் உணர்வுகள் நமக்குள் வரும் பொழுது எப்படியெல்லாம் இருந்தோமோ நம் எண்ணத்திற்கு அவன் நினைவு வராது.

கெடுதல் செய்தவனைப் பார்த்து அந்த உணர்ச்சி நமக்குள் தூண்டப்பட்டாலும் அவன் உரு நமக்குள் நினைவிற்கு வராது. அந்த நேரத்தில்… மற்ற மனிதர்களிடத்தில் உருவான கெடுதல் செய்த உணர்வின் தன்மை நமக்கு எதிரில் இருந்தால் அது வந்துவிடும்.

1.இரவில் தூங்கும் பொழுது யாரோ கெடுதல் செய்கின்ற மாதிரி இன்னொரு உரு நமக்குள் தெரியும்.
2.நாம் முன்பின் பார்த்திருக்க மாட்டோம்… அந்த மனிதனின் உருவம் நமக்குள் தெரியும்.
3.அப்பொழுது நம்மை அறியாமலே இரவு வேளைகளில் தீமையின் உணர்வுகள் நம் தூக்கத்தைக் கெடுக்கும்.

நாம் இரவில் தூங்கும் பொழுது அத்தகைய உணர்வுகள் வரும் பொழுதெல்லாம் “ஈஸ்வரா…” என்று உயிரை வேண்டி நம் நினைவைத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து அதைப் பெற வேண்டும் என்று எண்ணி உடலுக்குள் “பல முறை செலுத்த வேண்டும்…”

அதைச் செலுத்தியவுடன் தன்னை அறியாமலே தூக்கம் வரும்.

எந்தெந்த வகையில் தீமைகள் வந்தாலும் இப்படி நாம் எடுத்துக் கொண்டால்தான் நமக்குள் தூய்மைப்படுத்த முடியுமே தவிர
1.ஒரேடியாக ஜெபமிருந்து அருளைப் பெறுவேன் என்று சொன்னால் நடக்காது.
2.ஒவ்வொரு நிமிடத்திலும் உணர்ச்சிகளைத் தூண்டிக் கொண்டே இருக்கும்.
3.அவ்வப்பொழுது அந்த அருள் ஞானிகளின் அருள் உணர்வை நமக்குள் இணைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
4.அதை அடக்கிக் கொண்டே வரவேண்டும்.
5.இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை அடக்கிக் கொண்டே வரவேண்டும்.
6.அப்படி அடக்கிக் கொண்டே வந்தோம் என்றால் அது அப்படியே உறைந்துவிடும்.
7.எல்லா உணர்வுகளிலும் அந்த மகரிஷிகளின் உணர்வைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்படித் தான் இந்தப் பூமியில் எத்தனையோ விதமான விஷங்கள் கோபங்கள் வெறுப்புகள் இவைகளை எல்லாம் மனிதன் அடக்கினான். அவ்வாறு அடக்கி அந்த உணர்வைச் சேர்த்துக் கொண்டு வரும் பொழுது “பேரானந்தப் பெரும் செல்வம்” கிடைக்கின்றது.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் இணைத்துப் பழக வேண்டும். இல்லையென்றால்
1.நான் எல்லாம் செய்கின்றேன்… ஆனால் உலகில் எங்கு திரும்பிப் பார்த்தாலும் இப்படித்தான் இருக்கிறது என்று
2.மற்ற உணர்வுகளுக்கு இதற்கு வலு கொடுத்து விடுகின்றோம்.
3.அப்பொழுது நாம் புவியின் ஈர்ப்பிற்கு வந்து விடுகின்றோம்.

எது எப்படி இருந்தாலும் எவ்வளவு கடுமையான நிலைகளை நாம் பார்த்துணர்ந்தாலும்… ஒவ்வொரு நொடியிலும் நம் ஆன்மாவில் கலக்கும் நிலையை அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்து தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

இது தான் ஆத்ம சுத்தி என்பது.

இதை முறைப்படி நம் வாழ்க்கையில் செய்து கொண்டே இருக்க வேண்டும். காற்று பலமாக அடிக்கும் பொழுது தூசி வருகின்றது. அதிகமாகத் தூசி வரும்போது ஒதுங்கிக் கொள்கின்றோம்.

இதே மாதிரி
1.தீமையான உணர்வு வரும் பொழுது அந்த எண்ணத்தில் இருந்து விலகி நிற்க
2.அந்த மகரிஷிகளின்\ உணர்வை ஆதாரமாக வைத்து அதிலிருந்து சிறிது நேரமாவது விலகி நிற்க வேண்டும்.

நாம் எப்படியும் ஒரு இடத்திற்குப் போக வேண்டும் என்று நினைக்கின்றோம். அங்கு வெயில் குறைவாக இருந்தது. போகப் போக வெயில் சூடு அதிகமாகின்றது. அதிகமான அந்த நேரத்தில் விலகி நிற்கின்றோம்.

இதைப் போன்று
1.நம் வாழ்க்கையில் கடுமையான நிலைகள் வரும் நேரத்தில்
2.மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து
3.அந்த எண்ணத்திலிருந்து விலகி இருக்க வேண்டும்.

ஆத்ம சுத்தியின் மூலக்கூறு இது தான்.

பிரச்சினைகளையும் சங்கடங்களையும் சந்திக்கும் நேரத்தை “நன்மை பயக்கும் நேரம்” என்று எடுத்துக் கொள்ளுங்கள்

பிரச்சினைகளையும் சங்கடங்களையும் சந்திக்கும் நேரத்தை “நன்மை பயக்கும் நேரம்” என்று எடுத்துக் கொள்ளுங்கள்

 

ஒரு உணர்வின் தன்மை ஒரு அணுவின் தன்மை சேர்க்கப்படும் போது அது எந்தெந்தக் குணத்தின் தன்மை அதிகமாகச் சேர்க்கின்றதோ அது ஆற்றல் பெறுகின்றது. இதைப் போன்றுதான் இயற்கையின் உண்மையினுடைய நிலைகள்.

நாம் மெய்யுணர்வின் தன்மையை அறிந்துணர்ந்தபின் அந்த மகரிஷிகள் அருள் வழியைக் காட்டியபின் இந்த உடலில் இருக்கப்படும் பொழுதே யாம் சொல்லும் நிலைகளில்…
1.எப்பொழுதெல்லாம் உங்கள் வாழ்க்கையில் பிரச்சினைகளையும் சங்கடங்களையும் எதிர் கொள்கின்றீர்களோ
2.அதையெல்லாம் “உங்களுக்கு நன்மை பயக்கும் நேரம்” என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

எப்படி…?

‘’இப்படி என்னைத் திட்டிவிட்டானே… இரு நான் பார்க்கின்றேன்…!’’ என்றால் துன்பத்தைக் கொடுக்கும் நாள். அல்லது நம் பையனே “இப்படிப் பேசிவிட்டானே…” என்ற உணர்வுகள் ஆத்திர உணர்வுடன் தீர்க்கப்படும்போது அது நமக்குக் ‘’கெட்ட நாள்…” நமக்குள் அந்த உணர்வின் தன்மையைக் கூட்டுகின்றது.

நம்மை யாராவது திட்டினால் இந்த உணர்வின் தன்மை கொண்டு, உணர்ச்சிவசப்பட்டு ஏசும் நிலை வந்தாலும்
1.‘’ஓம் ஈஸ்வரா…’’ என்று உயிரை எண்ணுங்கள்.
2.“மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும்…’’ என்று ஏங்குங்கள்
3.”எங்கள் ஜீவாத்மா அந்த சக்தி பெற வேண்டும்…’’ என்று உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.

அப்பொழுதே இது அடங்கும்.

அதாவது ஒருவர் உணர்ச்சிவசப்படும்படியாக நம்மைத் தூண்டும் நேரத்திலும் நாம் அந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொண்டால்
1.அவர்களால் சங்கடமாக ஏற்படுத்திய உணர்வுகள் நம்மை ஆட்டிப் படைக்காதபடி
2.அதை அடக்க இந்த ஆயுதம் உதவும்… “அப்போது உயர்ந்த சக்தியையும் நமக்குள் பெறுகின்றோம்…”

அடுத்து யார் நமக்கு தவறு செய்தார்களோ… “மகரிஷிகளின் அருளால் அவர்கள் நாளை செய்வது நல்லதாக வேண்டும்…” என்று ஆணையிடுங்கள். உங்களுக்குள் இந்த உணர்வுகளைத் தடுக்கச் செய்யுங்கள்.

இப்படி ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் அருள் ஒளிகளைச் சேர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

மனித வாழ்க்கை அது எந்த நிமிடமென்று சொல்ல முடியாது. மனிதருடன் வாழப்படும் பொழுது குறைகளைக் காணாமல் இருக்க முடியாது. இன்றைய விஞ்ஞான உலகத்தில் குறைகள் கண்டு கொண்டுதான் இருக்கிறது.

ஆனால் ஒவ்வொரு நிமிடமும் நாம் இந்த ‘’ஆத்ம சுத்தி’’ செய்து மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் சேர்க்கும் “அந்த புனிதப் பயணமாக இருக்க வேண்டும்…”

உங்களிடம் யாம் கேட்பது என்ன…?

நீங்களெல்லாம் மகிழ்ந்திருந்தால் தான்… நீங்கள் மகிழ்ச்சியான சொல்களைச் சொன்னால்தான் எமக்கும் மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

அதைப் போல நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்டு… யாராவது துன்புற்று வந்தாலும்… “அவர்களுக்கு நன்றாகிப் போகும்” என்று நீங்கள் சொல்லுங்கள். அவர்களுக்கு உடல் நலமாகிவிடும். அந்த மகிழ்ச்சியான எண்ணங்களை உங்களுக்குச் சொந்தமாக்குங்கள்.

இப்பொழுது நான் எப்படி உங்களுக்கு நல்லதாக வேண்டுமென்று எண்ணுகின்றேனோ அதைப் போன்று நீங்கள் ஒவ்வொருவரும் இந்த ‘’ஆத்ம சுத்தி’’ செய்து கொண்டு இந்த எண்ணத்தைப் பரப்புங்கள்.

1.நம்முடைய மூச்சு பிறருடைய துன்பங்களைப் போக்க உதவ வேண்டும்.
2.துன்பமான உணர்வுகளை காதிலே கேட்டு நம் உடலுக்குள் அந்தத் துன்பங்கள் வந்து நம்மை ஆட்டிப் படைத்துவிடக் கூடாது.

ஏனென்றால் நாம் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் பிற துன்ப அலைகள் எல்லாம் விஷம். அது ஊடுருவி நம்மைக் கெடுக்கத் துரித நிலைகளில் செயல்படும். அதை மாற்றுவதற்கு நமக்குள் மெய் ஞானிகளின் அருள் ஒளி இருந்தால்தான் முடியும்.

1.மெய் ஞானிகளின் அருள் ஒளி நெருப்பு… அந்த நிலையினை நாம் பெற வேண்டும்.
2.ஆனால் இதற்குக் குருவின் துணை வேண்டும்.

குருவின் இணைப்பு கொண்டு அன்று மகரிஷிகள் எவ்வழிகளில் எடுத்தார்களோ அந்த உணர்வின் ஆற்றல் கொண்டு அதைப் பின்பற்றி நடப்போர் அந்தச் சக்தியைப் பெற முடியும்.

ஆகவே… உங்களை அறியாமலே உங்களைத் துன்பப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையை மாற்றுவதற்குத்தான் தக்க ஆயுதமாக ”மிஷின் கண்” (MACHINE GUN) போன்று ‘’ஆத்ம சுத்தி’’ என்ற ஆயுதத்தைக் கையில் கொடுக்கிறோம்.

நீங்கள் ஒவ்வொருவரும் ஆத்ம சுத்தி செய்து இந்த வாழ்க்கையில் புனிதம் பெறுவதற்கு எடுத்துக் கொள்ளும் முயற்சி உங்களுக்கு வெற்றியைத் தரும்.

உங்கள் குடும்பத்தில் யாருக்கு எந்தச் சிக்கல் வந்தாலும் இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்,. எல்லாமே நல்லதாக வேண்டுமென்று எண்ணுங்கள்.

1.இதைப் போன்று சிறிது நாளைக்கு முயற்சி எடுத்துப் பாருங்கள்.
2.இந்த உண்மை நிலைகளை நீங்கள் உங்கள் உடலுக்குள்ளும் உணர்வுக்குள்ளும் பார்க்கலாம்.

எமது அருளாசிகள்.

நுகர்ந்த உணர்வின் இயக்கங்கள்

நுகர்ந்த உணர்வின் இயக்கங்கள்

 

ஒருவருடைய செயலைப் பார்த்து “மோசமானவர்…” என்று அவரை நினைக்கின்றோம் அந்த மோசமான உணர்வு நமக்குள் வளர்ந்த பின் நாமும் அதை போன்ற செயலைச் செய்ய தொடங்கி விடுகின்றோம்.

நம்மை அறியாமலே அது இயக்கும்…!
1.நாம் தவறு செய்யவில்லை என்று நினைக்கின்றோம்.
2.ஆனால் “தவறு செய்கின்றான்…” என்று எண்ணியவுடன் அந்தத் தவறின் இயக்கம் நம்மை இயக்கி விடுகின்றது.

அதை மாற்றும் சக்தி இருந்தாலும் முடியாத நிலை ஆகி விடுகிறது.

அந்தத் தவறிலிருந்து விடுபடும் முறைக்கே உங்களுக்குள் ஞானிகள் உணர்வைப் பதிவாக்குகின்றோம். எண்ணியவுடனே அந்த அருள் சக்திகளைப் பெற முடியும்.

நாம் பல விதமான உணர்வுகளைப் பதிவாக்கியுள்ளோம். அதிலே வேதனைப்படும் சொல்களைக் கேட்டவுடன் அந்த உணர்வுகள் உந்திய பின் அதைச் சுவாசித்து நம் உடல் சோர்வடைந்து விடுகின்றது. வேதனையான அணுக்கள் வளர்ந்து விடுகின்றது.
1.இரண்டு நாளைக்கு இந்த உணர்வுகள் சேர்த்தால்
2.இரத்த நாளங்களில் இது கலக்கப்படும் பொழுது மற்ற அணுக்களையும் செயலற்றதாக மாற்றும்.

நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் இரத்த நாளங்களில் தான் கலக்கின்றது. காற்று மண்டலத்தில் எப்படிக் கலக்கின்றதோ இதைப் போன்று தான் இரத்தத்தில் கலக்கப்படுகிறது.

இரத்தம் தான் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு உணவை எடுத்துச் செல்கின்றது. அதில் இருக்கும் உணர்வின் சத்தை எடுத்துத்தான் உடலில் உள்ள அணுக்கள் விளைகின்றது.

நாம் நுகர்ந்தது உயிரிலே ஆவியின் தன்மை அடைந்த பின் நம் உடலில் ரத்தத்தில் கலந்த பின் இந்த உணர்வின் தன்மை கொண்டு செயலாகிறது.

நாம் உணவாக உட்கொள்ளும் போது அதிலே நீரைப் பிரித்து விட்டு அதில் இருக்கக்கூடிய சத்தை இரத்தமாக மாற்றுகின்றது நம் உடல் உறுப்புக்கள்.

இரத்தத்தின் தன்மை கொண்டு வரும் பொழுது அணுக்களின் ஆகாரம் அதன் வழியில் பெறப்படுகிறது. நல்ல உணவைப் படைத்துச் சாப்பிட்டாலும் நல்ல உணர்வை எண்ணினால் நல்ல அணுக்களுக்கு ஆகாரமாகச் சேர்கிறது.

அதே சமயத்தில் நல்ல உணவை உட்கொண்டாலும்
1.வேதனையான உணர்வைச் சுவாசித்தால் இந்த உணர்வின் தன்மை இதற்குள் ஆன பின்
2.வேதனை உணர்ச்சிகள் தூண்டப்படும் பொழுது நல்ல உணவையே உட்கொள்ள முடியாதபடி ஒதுக்கிவிடும்.

ஏனென்றால்
1.நாம் எண்ணும் உணர்வுகளை உயிர் அதை அணுக்களாக மாற்றுவதும்
2.உணர்வின் செயலாக்கங்களாக நம்மை மாற்றிக் கொண்டே உள்ளது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

துன்பத்தை மனதார ஏற்றுக் கொண்டு “இன்பத்திற்குண்டான மெய் ஒளியைப் பெற…” வழி காட்டுகின்றோம்

துன்பத்தை மனதார ஏற்றுக் கொண்டு “இன்பத்திற்குண்டான மெய் ஒளியைப் பெற…” வழி காட்டுகின்றோம்

 

சந்தர்ப்பத்தால்… வாழ்க்கையில் நமக்குத் துன்பம் என்ற நிலைகள் எப்போது வருகிறதோ
1.அந்தத் துன்பத்தை மனதார நாம் ஏற்றுக் கொண்டு
2.இன்பத்திற்குண்டான வழியை அந்த மெய் ஞானியின் அருள் ஒளியை நாம் ஏற்றுக் கொண்டு
3.அந்தத் துன்பத்தை நீக்கும் முயற்சியை எடுப்பதற்கு இந்தச் சந்தர்ப்பத்தை எடுத்து
உங்களுக்குத் தியானமும் ஆத்ம சுத்தியும் கொடுக்கின்றோம்.

ஆத்ம சுத்தி என்றால் “ஓ…ம் ஈஸ்வரா…” என்று உயிரான ஈசனை எண்ணிப் புருவ மத்தியில் நினைவினைச் செலுத்தி விண்ணிலிருந்து நம் பூமிக்குள் வந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களிலே கலந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று உடலுக்குள் கண்ணின் நினைவினைச் செலுத்த வேண்டும்.

ஆத்ம சுத்தியை இவ்வாறு எடுக்கப்படும் பொழுது வாழ்க்கையில் வரக்கூடிய துன்பத்தை நீக்கி… மனிதனாகப் பெற்ற புனிதத் தன்மையை நாம் பெறுகின்றோம்.

சந்தர்ப்பவசத்தால்
1.எல்லை கடந்து துன்பங்கள் வரப்படும்பொழுது நாம் ஏங்கியிருக்கக்கூடிய நிலைகள்
2.நம்மை மறந்து… துன்பத்தை மறந்து…
3.நாம் மெய் ஒளியின் தன்மை பெற வேண்டும் என்று தியானத்தின் வழி விண்ணின் ஆற்றலை நாம் பெற முடியும்.

ஆகவே நாம் ஒவ்வொரு நாளும் மெய் ஒளி பெறும் தியானத்தைக் கூட்டிக் கொள்வோம்.

ஒரு நாள் முழுவதும் உடலுக்காக வேண்டி நாம் பாடுபட்டு உழைத்தாலும் மெய் ஒளி பெறும் அந்தச் சந்தர்ப்பத்தை ஒவ்வொரு நாளும்
1.ஒரு 10 நிமிடமாவது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தியானித்து
2.அந்த ஆற்றல் மிக்க காந்தத்தைக் கூட்டிக் கொள்வோம்.

அதை நம் உடலிலே சேர்த்துக் கொண்டு நமக்குத் துன்பம் வரும் போது “ஈஸ்வரா…” என்ற எண்ணத்தைக் கொண்டு “மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… அது என் ஜீவாத்மா பெற வேண்டும் என்று நாம் எண்ணிச் சுவாசித்து நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.

ஒரு சமயம் இல்லாவிட்டாலும் ஒரு சமயம்
1.எதிர்பாராத சங்கடத்தில் நாம் துன்பப்பட்டு நம் உணர்ச்சிகளைத் தூண்டி
2.மிக அதிகமான கஷ்டங்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பத்திலே
3.உணர்ச்சியின் வேகங்கள் உந்தி நாம் விண்ணின் ஆற்றலை
4.மிக ஆற்றல் மிக்க நிலைகளைத் “துரித நிலைகளில் பெறும் சந்தர்ப்பமும்…” கிடைக்கலாம்.

இதைப் போன்றுதான் நமது வாழ்க்கையிலே நாம் சாதாரண மனிதனுக்குள் பழக்கப்பட்டுப் பழகி வரப்படும் பொழுது எதிர்பாராத சலிப்போ சஞ்சலமோ பயமோ ஆத்திரமோ கோபமோ வேதனையோ இதைப் போன்ற உணர்ச்சிகள் தூண்டும் பொழுதெல்லாம் அடுத்தகணம் நாம் ஆத்ம சுத்தி செய்து அந்தத் துன்பங்களை அகற்றிட வேண்டும்.