வீணாகவும் உபயோகமற்றதாகவும் எதுவுமே இயற்கையில் இல்லை…!

வீணாகவும் உபயோகமற்றதாகவும் எதுவுமே இயற்கையில் இல்லை…!

 

இன்று உலகினிலே பல வகையான ஜீவராசிகள் உள்ளன. ஒவ்வொன்றும் தன் நிலைக்கு ஏற்பச் சுவாச நிலையை எடுக்கின்றது.
1.மனிதரின் சுவாச நிலை தான்
2.எல்லாத் தன்மையையுமே தன் சுவாசத்தில் ஈர்க்கும் நிலையில் உள்ளது.

மனிதனின் சுவாச நிலை அவன் ஒவ்வொரு எண்ணம் கொண்டும் எண்ணிடும் பொழுது அந்நிலையில் அவன் எடுக்கும் சுவாச நிலையைப் பொறுத்து அவன் வாழ்கின்றான்.

இவ்வுலகினிலே நாகப்பாம்பைப் போல்
1.நச்சுத் தன்மையுள்ள கொடிய விஷத்தைத் தன்னுள் ஈர்த்து எடுத்திடும் ஜீவராசிகள் இல்லாவிட்டால்
2.இந்தக் காற்றில் கலந்துள்ள கொடிய விஷங்கள் எல்லாம் பெரும் தீங்கைத் தான் விளைவித்திருக்கும்.

அவ் ஈசனின் சக்தியிலிருந்து நம் கண்ணிற்கும் நம் எண்ணத்திற்கும் தெரிந்திடாமல் பல வகை உண்மை நிலைகள் உள்ளன. எல்லாமே அவ்வீசனின் சக்தியில் வந்தவை தான்.

ஒவ்வொரு தாவரமும் ஒவ்வொரு நிலையில் உற்பத்தியாகி வளர்ந்திருக்கின்றன. தாவரங்கள் எல்லாம் அதனதன் சுவாச நிலை மேல் நோக்கி அந்தச் சூரியனின் சக்தியை நேராக ஈர்க்கும் நிலையில் உள்ளன.

பல வகைத் தாவரங்களிலும் பல வகை நல்ல உணவாகவும் மனிதருக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் அமையப் பெற்றுள்ளன.

நாம் எண்ணுகின்றோம். உபயோகமில்லாமல் இப்படி ஏன் பல வகைத் தாவரங்கள் உள்ளன என்று…? அச்சக்தியின் அருள் பெற்றுத் தான் அவையும் வளர்கின்றன… நல்ல கனி கொடுக்கும் தாவரங்களும் வளர்கின்றன.

அந்தக் கொடிய விஷமுள்ள தாவரங்கள் எல்லாம் இல்லாவிட்டால் இந்தக் காற்றிலிருந்து இன்னும் பல தீய நஞ்சு கலந்த அணுக்கள் தான் சுற்றிக் கொண்டிருக்கும்.
1.அந்த விஷ அணுக்களையே உண்டு உயிர் வாழும் தாவரங்கள் இருப்பதால் தான்
2.நம்மைச் சுற்றியுள்ள இந்தக் காற்றையே சுத்தமாக்கி நாம் சுவாச நிலைக்கு ஈர்த்துக் கொள்ள முடிகிறது.

இந்த உலகில் தோன்றியவை எதுவுமே வீணாகவும் உபயோகமற்றதாகவும் தோன்றவில்லை.
1.ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தன் சுவாச நிலையைக் கொண்டு தோன்றி
2.இந்த உன்னதமான உலகத்தைப் பல கோடி ஆண்டுகள் காத்து வருகின்றது.

இன்றைய உலகத்தில் விஞ்ஞானம் என்ற பெயரால் பல வினைகளைச் செய்து… தன்னையே தான் அழித்துக் கொள்ளும் இந்த மனிதரின் நிலைகாள் எல்லாம்… இன்னும் ஜீவனுடன் உயிர் வாழ்கிறதென்றால் எந்நிலையில்…?

நச்சுத் தன்மையைத் தானே உண்டு வாழும் நாகப் பாம்புகளும்… நச்சுடன் நச்சாக வளர்ந்து பெரும் விஷத் தன்மையுள்ள நாம் சொல்லும் செடி கொடிகளும் இல்லாவிட்டால்…! இன்று வீசும் காற்றே பெரும் விஷமுள்ளதாக வீசி எந்த ஜீவராசிகளுமே உடலுடன் வாழ்ந்திட முடிந்திருக்காதப்பா…!

இந்த நச்சுத் தன்மை பாம்பிலும் தாவரங்களிலும் தான் உண்டு என்று இம்மனிதர்கள் எண்ணுகின்றார்கள். இவை எல்லாம் நமக்கு நன்மையைத்தான் அளிக்கின்றன.

இம்மனிதனாக வாழ்வதற்கு மாபெரும் தவமிருந்து நமக்கு அந்தச் சூரியனிலிருந்து பல ஜென்மங்கள் எடுத்து பெரும் வாழ்க்கையை வாழும் பாக்கியம் பெற்ற நாம் “நம் மனைதையே விஷமாக்கி வாழ்கின்றோம்…!”

இந்த மனித உடலைப் பெற்று வாழ்வதுவே நாம் செய்த பாக்கியம் தான். இந்தப் பாக்கியம் பெற்ற நாம் இந்த மனித உடல் உள்ள பொழுதே நாம் பிறவி எடுத்த பயனைப் புரிந்து “நம் மனதையே நல் மனதாக்கி வாழ்ந்திட வேண்டும்…!”

பிறவி எடுத்த புனிதத் தன்மையைப் போற்றிக் காத்து எவன் ஒருவன் வாழ்கின்றானோ… அவனெல்லாம் அச்சக்தியின் சக்தி பெற்ற… நம்முள் கலந்துள்ள பல தேவர்களின் தேவர்களைக் கண்டிடலாம்.

1.அந்தத் தேவர்களின் தேவர்களாகவும் நாம் ஐக்கியப்பட்டு
2.நம் உடலை விட்டு நம் ஆத்மா செல்லும் நிலைக்குள் சகல நிலையையும் பெற்றிடும் பாக்கியம் பெறத்தான்
3.இந்தப் பாட நிலையெல்லாம் அளிக்கின்றேன்.

“மண்ணுடன் மண்ணாகும் மாய வாழ்க்கை…”

“மண்ணுடன் மண்ணாகும் மாய வாழ்க்கை…”

 

சூரியனின் சக்தியிலிருந்து ஒவ்வொரு நாளும் எண்ணிலடங்கா ஜீவ அணுக்கள் தோன்றித் தோன்றி மறைகின்றன.
1.ஒவொரு ஜீவராசியும் எந்த நிலை கொண்டு ஜீவன் பெற்றதோ
2.அந்நிலையில் அந்த ஜீவராசிகள் எண்ணம் ஈடேறியவுடன்
3.அதனுடைய ஜீவ உடலைப் பெற்ற நிலையும் மாறிவிடுகின்றது.

அதே போல் தான் பறவைகள் மிருகங்கள் மனிதர்கள் எல்லோருடைய நிலையும் உள்ளன.

மனிதர்களுக்கு… மனிதன் ஜீவன் பெற்ற நாளிலிருந்து தாயின் கருவில் எப்படிப் பத்து மாதங்கள் இருந்து பிறக்கின்றதோ அந்நிலை வைத்து மனிதனின் சராசரி ஆயுட்காலமும் உள்ளது. யானையின் ஆயுட்காலம் கருவில் இருபது மாதங்கள் இருந்து அதனுடைய சராசரி ஆயுட்காலமும் கூடி இருக்கின்றது.

இப்படி ஒவ்வொரு மிருகத்தின் நிலையும் கழுதைக்கு ஏழு ஆண்டுகள் கோழிக்கு இரண்டு ஆண்டுகள் நாய்க்கு பதினாறு ஆண்டுகள் இப்படிப் பறவைகள் நிலையிலும்
1.அவை அவை எத்தனை நாட்கள் அடைகாத்துக் குஞ்சு பொரிக்கின்றனவோ
2.அந்நிலை கொண்டு தான் அதனதன் ஆயுட்காலமும் உள்ளன.

உங்கள் எண்ணத்தில் மனிதர்கள் ஏன் ஆறு ஆண்டுகளும் வாழ்கிறார்கள்… அறுபது ஆண்டுகளும் வாழ்கின்றார்கள்…? என்று எண்ணக்கூடும்.

அற்ப ஆயுளில் ஜீவன் பிரிவதெல்லாம் அவரவர்கள் எண்ணத்தைக் கொண்டு தான்…!

ஆனால் இந்த மனித உடல்களுக்கு மட்டும் தான் அந்தச் சூரியனின் சக்தியிலிருந்து அழியா உடலையும் அழியா உயிரையும் அவ்வாண்டவனின் சக்தியில் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்நிலை பெற்ற நாம் எல்லோரும்
1.அந்த ஆண்டவனின் சக்தியை அந்த நிலையில் நாம் பேணிக் காத்து
2.இந்த உலகில் நாம் உதித்ததையே அழியாச் செல்வமாக்கி
3.நாம் சேர்த்திடும் ஒரே சொத்து… உன்னதமான சொத்து… நம் உயிராத்மாவுக்கு அளிப்பது தான்…!

அந்தச் சூரியனின் சக்தியிலிருந்து பல ஒளிக்கதிர்கள் நம் பூமியைத் தாக்கிப் பெற்ற செல்வங்கள் தான் இன்றைய உலகில் உள்ள எல்லாமுமே…!

அந்த இயற்கையிலிருந்து தான் செயற்கையையும் செய்கின்றோம். அந்தச் செயற்கை அழிந்தாலும் இயற்கையுடன் தான் கலக்கின்றது.

இந்தப் பூமியில் உள்ள
1.இயற்கைத் தன்மையும்…
2.செயற்கைத் தன்மையும்…
3.நம் உடல்..
4.நாம் சேர்த்த பொருள் எல்லாமுமே
5.மண்ணுடன் மண்ணாகத் தான் ஆகின்றது.

அழியாச் செல்வமான நம் ஆத்மா மட்டும் தான் ஆண்டவனிடம் ஐக்கியமாக முடியும். ஆகவே
1.மண்ணுடன் மண்ணாகும் இந்த உடலுக்காகவும் பொருளுக்காகவும் வாழாமல்
2.வாழ்வாங்கு வாழச் செய்யும் உயிராத்மாவை ஆத்ம ஜோதியாக்குவோம்…!

எதிர்மறையான மோதல் இல்லை என்றால் வளர்ச்சியே (இயக்கச் சக்தி) இல்லை

எதிர்மறையான மோதல் இல்லை என்றால் வளர்ச்சியே (இயக்கச் சக்தி) இல்லை

 

நம் பிரபஞ்சத்திற்கு சனிக்கோள் மிகவும் முக்கியமானது. தனக்குள் வரும் ஆவியின் தன்மைகளை எல்லாம் நீராக மாற்றும் திறன் பெற்றது.

சனிக்கோளின் உணர்வு எது எதில் எல்லாம் கலக்கின்றதோ
1.அந்த அணுவின் தன்மை ஜீவன் பெறுவதற்கு அதுவே மூலமாகும்.
2.சனிக்கோளின் உணர்வுகளை எது பெறவில்லையோ அந்த அணுக்கள் ஜீவன் இழந்துவிடும்.

சனிக்கோளின் சக்தி பெறவில்லை என்றால் வான் வீதியில் உருவாகும் நிலைகள் அது வெறும் பாறை ஆகிவிடும்… கரைந்து விடும். வளர்ச்சி பெறுவதற்குண்டான நிலைகள் அதிலே இருக்காது.

ஆகவே தான் ஜீவன் பெறச் செய்வதற்கு சனிக்கோள் மிகவும் முக்கியமானது. நம் உடல் உறுப்புகளில் எதை எதை எல்லாம் எவ்வாறு மாற்றுகிறதோ அதைப் போல இந்த பிரபஞ்சத்திற்கு… சனிக்கோள் மிகவும் முக்கியமானது.

சனிக்கோள் செயல் இழந்து விட்டால் இந்தப் பிரபஞ்சம் இருக்காது…!

உதாரணமாக 27 நட்சத்திரங்களும் ஒன்றுக்கொன்று “எதிரியானது…” அந்த மின் அணுக்களின் தன்மை… கதிரியக்கச் சக்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி விட்டால் “மின்னலாகப் பாய்கின்றது…” அப்போது அணுக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து அது கருகி… துகள்களாக மாறுகின்றது.

ஒன்றுடன் ஒன்று மோதப்படும் பொழுது ஒரு நட்சத்திரத்திற்கும் இன்னொரு நட்சத்திரத்திற்கும் எதிர்நிலை. ஆக
1.அந்த அணுக்கள் மோதும் பொழுது தான் பொறிகளாகி
2.மின்னணுவாக அது ஓடும் பாதையில் ஊடுருவி இதனுடைய செயலாக்கங்கள் மாற்றிவிட்டு மற்ற உணர்வின் நிலைகள் மாறுகின்றது.

இந்த 27 நட்சத்திரங்களின் மாற்றங்கள்
1.ஒன்று மற்றொன்றுடன்… ஒன்று மற்றொன்றுடன் என்ற நிலையில்
2.இப்படி மாறி மாறி மாறி வருவதைத்தான் உலகில் கல் மண் எல்லாம் உருவாகிறது.

அதாவது வான் வீதியில் உருப் பெறும் மின்னணுக்களை மற்ற கோள்கள் தூசிகளாக மாற்றி விடுகின்றது அது நுகர்ந்த உணர்வு மற்ற கோள்கள் உமிழ்த்தும் உணர்வுடன் கலந்த பின் உணர்வின் மாற்றங்கள் ஆகி பாறைகளாகவும் கல்லாகவும் மற்ற நிலையாகவும் ஆகிறது.

பூமியின் தன்மை நீருடன் கலந்து உணர்வின் சத்தை எடுக்கப்படும் பொழுது
1.தாவர இன வித்தாக உருவாகும் தன்மை வருகின்றது.
2.தாவர இன சத்தை உருவாக்கும் இந்த நிலை பெற்ற பின் “உயிரணு தோன்றி” நுகரும் தன்மை வருகின்றது.

ஆனால் உயிரணு தோன்றி மனிதனாக உருவான பின் சர்வத்தையும் உணரும் நிலையாக இயக்கச்சக்கியாக மாற்றுகின்றான் மனிதன்.

ஆக
1.அறிவின் ஞானம் கொண்டு இந்த உலகையே அடக்கிடும் தன்மை பெற்றவன் என்று
2.விநாயகர் தத்துவத்தில் ஆதிமூலம் என்ற உயிர்… பல கோடிச் சரீரத்தில் சேர்த்துக் கொண்ட நிலைகள் மனித உடலாக ஆனாலும்
3.அங்குச பாசவா…! இந்த பிரபஞ்சத்தை அடக்கி ஆட்சி செய்யும் சக்தி பெற்றவன் என்று காட்டுகின்றார்கள்.

அப்படிப்பட்ட ஆற்றலை முதன் முதலிலே பெற்றவன் அகஸ்தியன் இந்தப் பிரபஞ்சத்தில் வருவதை எல்லாம் ஒளியின் உணர்வாக மாற்றி… எதற்கும் அடிமையாகாது ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்.

அகஸ்தியன் பெற்ற அந்த ஆற்றலை நாமும் பெற வேண்டும்.

இதைப் படித்துப் பதிவாக்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் “தெய்வ சக்தி” பெறுவீர்கள்

இதைப் படித்துப் பதிவாக்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் “தெய்வ சக்தி” பெறுவீர்கள்

 

இன்றைய உலகில் பல வகையான வாகனங்கள் உண்டு. ஒவ்வொன்றும் மனிதன் தனது எண்ண ஆற்றல் கொண்டு வேகமாகச் செல்லும் நிலைக்கு உருவாக்கப்பட்டது தான்.

ஆக அந்தந்த வாகனங்களின் கதிக்கொப்ப அது ஓடுவதைப் போன்று
1,மனித ஆற்றலின் உந்து விசையையும் அதிகப்படுத்தினால்
2.வேகம் கூட்டும் வாகனங்களின் ஆற்றலின் அறிவுத் திறன் வளர்ந்ததைப் போல்
3.மெய் ஞான வளர்ச்சியில் விருப்புடன் பயணிக்கும் பாதையே மனித சக்தியைக் கூட்டும் எண்ண ஆற்றல் ஆகும்.

உலகம் எப்படித் தன் ஈர்ப்புப் பிடிப்புடன் தன் வளர்ப்பின் செயலுடன் சுழன்று வருகிறதோ அதைப் போல்
1.நம் உயிராத்மாவை இந்தப் பூமியின் ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபட்டுச் செல்ல
2.தன் எண்ணத்தின் உந்து விசையால் நீரமிலக் காற்றில் விண்ணுலக ஒளி அமிலத்தைச் சுவாசத்தால் உடல் எடுக்க
3.நாம் மேற்கொள்ளும் தவத்தின் தனித்துவத்தால் தரணியின் மெய்யை உணர்ந்து
4.தான்… மெய் ஞான விழிப்பெய்த மூல நாடியாக மூச்சலையின் சக்திதனை மூலமாக்கிய
5.அந்த மகரிஷிகளின் சக்திகளை நாமும் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

உணர்வின் எண்ணத்தில் செழிப்பின் ஆசைதானப்பா மனிதச் செயலின் மூலாதாரமே. ஆனால் வித்தை காணும் ஆசை ஓட்டத்தில் “பேராசையின் எண்ணம் கொண்ட விளைவுதானப்பா…” இன்றைய மனித நிலை.

யுகங்கள் யுகங்களாக மகரிஷிகளின் தொடர்பலைகள் வளர்ச்சியின் செயலுற்று அவர்கள் வழி வகுத்துத் தந்த அந்த மெய் ஞான விழிப்பே மனிதனின் ஞானத்தின் வளர்ச்சிக்குச் செயலாற்றும் “திறவு கோல்” ஆகும்.

இன்றைய விஞ்ஞான கலியுகத்தில் மனித ஞானத்தை விழிப்புறச் செய்ய மெய் ஞானிகள் கொண்ட ரிஷிகளின் தொடர் அலையின் கருத்தின் கோர்வைகளை அவகள் கண்ட உண்மைகளை இங்கே தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்துள்ளோம்.

செடி கொடிகள் எப்படித் தனக்கொத்ததை ஈர்த்து… வளர்ந்து… விளைந்த பின் பலன் தருவதைப் போல் நாமும் அந்த மாமகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நம்முடைய சுவாச அலையின் செயல் தன்மையைச் சீராக்கிடல் வேண்டும்.

1.இதைப் படித்துப் பதிவாக்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் தெய்வ சக்தி பெற்று
2.இந்தப் பூமியின் சுவாச கதியில் ஒளிச் சரீரமாக உங்கள் ஆத்ம உயிரை மெய் ஞான விழிப்புப்படுத்துங்கள்.

உடலில் விபூதி (சாம்பல்) பூசுவதன் உண்மை

உடலில் விபூதி (சாம்பல்) பூசுவதன் உண்மை

 

பிடர் வழி என்பதே எண்ணத்தின் உந்தும் குண அமிலச் சக்தியின் வீரியமாகச் செயல் கொள்ளும் பக்குவ கதிக்கு ஊக்கம் என்ற சொல் நாம முயற்சியை நல்லாக்கத்திற்குப் பயன்படுத்துதலே நல்லது.

ஆனால் குணங்களின் செயல் மாற்றத்தால் ஏற்படும் செயலின் தன்மை சரீர கதியில் எதிர் மோதல் ஏற்படும் நிலையில் வள்ளுவன் சொன்ன வேதப்படி “ஆக்கத்தின் ஆக்கம் ஊக்கம் அதுவல்லது போக்கது இல்லாச் செயல்…” என்ற சொல்லிய உண்மையும் உண்டு.

1.ஆகவே குணங்களில் மாற்றம் கண்டால்
2.பிடருகின்ற வழிகளில் சக்தியும் குறைவுபட்டுப் போகும்…! என்ற உண்மையை உணர்ந்து
3.நல்லாக்கச் சூட்சம கதிக்கே ஞானச் செல்வங்கள் செயல் கொள்ள வேண்டும்.

பால்வெளியில் படர்ந்துள்ள கோடானு கோடி அமில குணச் சக்திகளில் மறைந்துள்ள மறை பொருள் வண்ண குண அமிலமும்… ஒலி நாதத்தின் அமில குணமும்… ஆதிசக்தியின் அமில குண நீர் சக்தியுடன் ஒன்றிச் செயல் கொள்ளும் பொழுது திடமாகின்றது.

“பால்வெளியில் படர்ந்துள்ள பரமாத்மா…” என்ற சூட்சமத்தில் உயிரணுக்கள் செயல் கொள்ளும் செயலின் நிலையால் ஒன்றுடன் ஒன்று குண அமில ஈர்ப்பில் கலந்து பிறிதொன்றை உருவாக்கிக் கொண்டே உள்ளது.
1.பிரம்மமாகச் சிருஷ்டியாகின்றது.
2.அதையே பிரம்மத்தின் உள் மறைந்துள்ள “அனித்தியமான சூடு…!” என்று காட்டப்பட்டுள்ளது.

ஏனென்றால் இந்தச் சரீரம் கொண்டு ஈர்ப்பு நிலை சக்தி பெற்று… “மூல சக்தியில் கலந்துவிடும் செயல்பாட்டின் இரகசியத்தை…!” ஒவ்வொரு உயிராத்மாவும் தன்னைத் தான் உணர்ந்து கொண்டு தன் வழியில் சக்தியை வலுக்கூட்டி அறிந்து கொள்ள வேண்டும்.

1.சரீர பிம்பத்தில் இரு கரங்களும் இணைக்கப்படும் பொழுது
2.அதன் அமைப்பே ஓர் வட்டச் சுழற்சியின் செயலாக முதலும் முடிவும் அற்ற நிலையில்
3.பால்வெளிப் பூதியில் உருவாக்கும் பிடர் சக்தியின் வழித் தொடரில்
4.பூதியை விபூதி என்ற காட்டிய தத்துவம் – உண்மையை உணர்ந்து கொள்ளத்தானே தவிர
5.அதில் விதிவிலக்கும் ஒன்றுண்டு – சூட்சமப்படுத்தப்பட்ட அந்தச் செயலைத் தவிர
6.சரீரம் முழுக்க வேடமிட்டுக் கொள்ளும் இந்தக் கால கட்டத்தில் உண்மையின் பொருளை யார் உணர்ந்தார்கள்…?

(அதாவது ஆவியாக இருப்பது திடமாகிறது… திடமானது மீண்டும் ஆவியாக மாறுகிறது. முதலும் முடிவும் இல்லாது இது நடந்து கொண்டே உள்ளது. பூதி… விபூதி…! திடமான சரீரத்தில் விபூதியைப் பூசுவதன் உண்மை அது தான்…!)

“பிரம்ம சூத்திரம்…”

“பிரம்ம சூத்திரம்…”

 

“நாபிக் கமலம் என்ற ஜோதி…” தன்னுள் கிளைத்து… எழுந்த மூலப் பொருளாக விளங்கும் தன்மையின் சூட்சமம்… அறிவின் துணை என்னும் சாமரத்தால் வீசப்படும் காற்றும்… காற்று என்று பொருள்பட அறிவை உபயோகிக்கும் பொழுது… சிந்திக்கத் தலைப்படும் பொழுது தான் உயர் ஞானமாக எழும்.

அறிவின் நற்குணம் – சாந்தம் என்ற சாமரத்தால் வீசிப் பெறப்படும் காற்று… வீர குணத்தைக் கொண்டு எழும் ஜோதி…
1.மீண்டும் மீண்டும் இந்தக் குணங்களை எண்ணி வீசும் பொழுது… வீசும் காற்றாகிய எண்ணச் செயலின் செயல்பாடு
2.வீர குணத்தின் விளை நிலமாக ஆக்கும் செயலுக்கு உறுதியாகி
3.படைப்பின் படைப்பாக தைரிய குணத்தால் சாந்த குணத்தால் எண்ணி எழும் செயலுக்கு வித்தாகப் “பிரம்ம ஞானம்” உதிக்கும்.

ஆகவே பிரம்ம சூத்திரமாகவே மாறும் செயல் நிலை என்பது “அடையும் வழி இது தான்…!” என எண்ணித் தெளிந்து… பின் கைக்கொள்ள வேண்டிய செயலாகச் சித்தன் காட்டிய வழியில் எல்லாம் உருவகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

1.மனித எண்ணத்திற்குள் எழும் மதமாகிய வீரியத்தை அடக்க அங்குசமும்
2.எண்ணமே உணர்வாகி அந்த உணர்வுகளின் வழி செல்லும் எண்ணமான செயல் காமத்தின் அடியாக எழும் மோகத்தை
3.அதே எண்ணச் செயல் உயர்வைக் கொண்டு வீழ்த்தும் நிலை கரும்பு வில்லும் கைக் கொண்டு
4.உயிர் ஆன்மப் பிணைப்பையே வலியுறுத்தப் பாசக்கயிறும்
5.தன் நிலை என்றென்றும் மணமாக எண்ணத்தில் நிலை பெறக் கையில் மலரைக் கொண்டு
6.சித்தன் காட்டிய தத்துவ செயலைக் கைக்கொள்ளும் ஞானி தன் சுவாச எண்ண ஓட்ட உயரிய நற்செயலால் அக்கினி ஜோதியாகி
7.நாபிக் கமலத் தாமரை மேல் அமரும் படைப்பின் படைப்பாக அமரலாம் என்பதே “பிரம்ம சூத்திரம்…!”

கர்ப்பமான தாயின் வயிற்றில் உருவாகியிருக்கும் கரு அதாவது அந்தச் சிசு ஆகாரம் எடுக்கும் வழி நாபிக் கொடி ஆகும். அது போல்
1.அமில நிலை ஆகார உயர்வின் சிறப்பாக நாம் எடுக்கும் சுவாசத் தியானத்தால்
2.கரு நிலையின் முதல் நிலையான நம் உயிர் தன்மையையே “ஜோதி ஸ்வரூபமாக்குதல்…” வேண்டும்.

படைப்பின் படைப்பாக இணைக்கும் உயர் தன்மை என்பது…
1.தாய் சக்தியும் அந்தத் தாய் சக்தியின் ஆன்மக் கலப்போ அல்லது
2.இல்லற வாழ்வில் சிவ சக்தி நிலையாக எண்ணத்தால் ஒன்றுபட்டு ஆத்ம ஐக்கிய நிலை பெறும் வழியோ
3.படைப்பின் படைப்பாவது மட்டுமல்லாது அது புரியும் தொழில் தன்மையாகக் “காத்தல்” என்பது
4.தான் முயன்று பெற்ற “உயரிய ஆன்ம சக்தியே” சூட்சமப் பொருள் ஆகும்

அழித்தல் என்பது
1.உயிர்ச் சக்தியின் செயலுக்கு உயர் நிலை எற்படுத்தாமல் மாறுபாடு ஏற்படுத்தப்படும் பொழுது
2.அந்தச் சிவமாகிய சக்தி அழிக்கின்றான்…! என்று பொருள் கண்டு தெளிந்து…
3.ஏனென்றால் அழிக்கப்பட வேண்டியது துர்க்குணங்களே..! என்று அதைச் சம்ஹரிக்கும் நிலையில்
4.உயிர்த் தன்மை ஆதி சக்திக்குள் கலக்கும் பொருளே “மறைத்தல்” என்றும்
5.படைப்பின் படைப்பான உருக்கோலமே… அன்பு நிலைக் குணமாக “அருளல்…” என்பதுவும்
6.இந்தப் பேருண்மையின் சாராம்சங்களை உணர்ந்து அந்த நிலையைப் பெறுதல் வேண்டும்…!

ஓ…ம் என்று பிரணவமாகிய யானைகள்

ஓ…ம் என்று பிரணவமாகிய யானைகள்

 

உலகோதய எண்ண ஓட்டத்தில் நாம் செயல்படும் காலங்களில் கீழாம் அறிவு நிலையில் பூவி ஈர்ப்பின் சுவாச ஈர்ப்பில் சிக்குண்டு ஒவ்வொரு நாளும் நாம் அலைக்கழிக்கப்படுகின்றோம். (இதை இல்லை என்று யாரும் சொல்ல முடியாது).

அலைக்கழிக்கப்படுவதோடு மட்டுமல்லாது
1.நம்முடைய எண்ண வலு வீரியமும் கீழான அறிவு என்ற செயலுக்கே ஈர்க்கப்பட்டு
2.அந்தந்த இச்சையின் குணங்களை ஏற்படுத்திக் கொண்டு கலக்கமுறும் காலங்களாக
3.மீள வழியில்லாதபடி மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் கால சகடத்திலேயே (CYCLE) சுழன்று கொண்டிருக்கின்றோம்.

உண்மை உயர் ஞானத்தைப் பெற விழைவோனுக்கு இதைப் போன்ற பந்தக் கட்டுக்களைத் தகர்த்தெறிய ஞானிகளால் சூட்சமப்படுத்திக் காட்டப்பட்டதே “மத்தகமும் கோடும் (கோடாயுதமும்)…!”

1.தீதெண்ணச் சங்கட அலைகளை எல்லாம் தவிர்த்து
2.மனித எண்ணம் என்ற உறுதி… “மலை மேல் நின்று…!”
3.காரிருளாகக் காட்டிய அசுர குண மாயைகளை “கோடாயுதத்தைக் கொண்டு…” மாய்த்தொழிக்க வேண்டும்.

சிற்றறிவின் ஆசைகள் எல்லாம் அகன்று பேரின்ப சாயுஜ்யமாக (உயிருடன் கலக்கும் நிலை) மேலாம் அறிவின் ஞானமாகப் பரவெளி ஞானத்தில் கலந்திடும் செயலுக்குத் தத்துவமாகக் காட்டப்பட்டதே “நீல வண்ண ஒளி பெறும் ஆத்மாவின் மறைபொருள்…”

1.மத்தகம் என்றாலே முன் மூளைப்பகுதி இரண்டும் சிறு மூளைப் பகுதி ஒன்றாக
2.ஞான உணர்வின் எண்ணம் ஆட்கொண்ட காலத்தில்
3.நெற்றிப் பொட்டில் ஜோதித் தத்துவமாக அறிந்திட வேண்டிய செயல் ஆகும்.

நீலவண்ண ஆத்மா சூட்சமத்தில் கலந்திடவே பேரின்பப் பெருநிலையில் இணைந்து செயல் கொள்ளும் மேலெழும் சக்தியாகக் காட்டியதே கணங்களின் பதி… “கணபதி…”

1.பரவெளியில் படர்ந்துள்ள ஒளிகாந்த மின் நுண் அணுக்கள் (நடத்திடும்) எண்ணம் கொண்டு (நட்சத்திரங்களின் கதிரியக்கச் சக்திகள்)
2.ஒன்றுடன் ஒன்று இணையும் செயலில் உயிர் ஆத்மாவாக மேலும் எண்ண வலு கூட்டிக் கொள்ள ஈர்த்திடும் தொடரில்
3.அதன் எண்ணமே வீரியமாகச் செயல் கொண்டிடும் பக்குவத்தில்
4.சரீரத்தில் ஆண் பெண் சங்கமத்தில் கருவாகத் தோன்றி வினையின் நாயகன் விநாயகன் என்ற சொல்லுக்கேற்ப
5.மேற்கொண்டு தான் ஈர்த்து உயிராத்மாவாகப் பின் கருவாக வந்துதித்த செயலில்
6.அதே எண்ண வலுவின் ஈர்ப்பினால் மேன்மேலும் உயிரணுக்களைக் கூட்டிக் கொண்டு
7.கணங்களாகிய சரீர உயிரணுக்களுக்கு.. “உயிராத்மா” – பதி என்ற பொருள்பட கணபதி ஆகின்றது.

அதே நிலை மனிதச் சரீரத்திலும் உயர் ஞான அறிவு கொண்டு விளங்கிக் கொள்ளும் பக்குவத்தில் ஓ…ம் என்ற ஒலி நாதம் சொல் வடிவ சூட்சமாகச் சுட்டிக் காட்டினர் ஞானிகள்.

1.சிரசைக் காட்டி… சிரசில் மேற் பகுதி அசையா நிலையும்
2.தாடை என்ற கீழ்ப் பகுதி அசையும் நிலையும்
3.ஓ…ம் என்ற பிரணவமாகிய யானைகள் கலந்தன..! என்று சூசகப்படுத்தி
4.வாயிலும் உள் நாக்கில் மேலெண்ண நடுப்பகுதியும் உச்சிக்குக் கீழும் ஒளியின் சுடர்ந்த நிலையைத் தெளிவுபடுத்திக் கூறியவற்றில்
5.கடைவாயின் பற்கள் விநாயக உருவத்தில் கொம்பு என்றெல்லாம் மறைமுகப்படுத்தியதற்குப் பொருள்கள் பல உண்டு.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்று உணர்ந்திடல் வேண்டும்.

மனிதனுடைய இந்த உலக வாழ்க்கையில் உடல் பற்றில் வரும் எத்தனையோ எண்ணங்களையும் உணர்வுகளையும்
1.வைராக்கிய சிந்தனை என்ற கொம்பாயுதம் கொண்டு
2.மத்தகத்தால் தகர்க்கப்பட்டால்
3.மெய் ஞானிகள் பெற்ற மேலாம் அறிவு நிச்சயம் சித்திக்கும்…! என்பதே பொருள்.

உருவை எண்ணி ஜெபிப்பதா…? உணர்வை (சக்தியை) எடுத்து வளர்ப்பதா…?

உருவை எண்ணி ஜெபிப்பதா…? உணர்வை (சக்தியை) எடுத்து வளர்ப்பதா…?

 

மனிதன் தன்னாலே சிந்திக்கத் தலைப்பட்டுத் தன்னுள் எழுந்த வினாவாக “நான் என்பது யார்…?” என்றே தன்னைத் தான் அறிந்து கொண்டிடும் முயற்சியாகத் தான் கண்டுணர்ந்த வழி வகைகளை மெய் உணர்வுகளை மறை பொருளாக்குபவர்களும் உண்டு.

ஏனென்றால் மேன்மேலும் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ள மனித எண்ணத்தின் செயல்பாட்டில் “விதி முறைகள்…!” என்றே சூட்சமப்படுத்தி அப்படி இருக்கக்கூடாது… இப்படிச் செய்யக் கூடாது… அது தீட்டு… இது தோஷம்… இது பாவம்…! என்பார்கள்.

இப்படி உணர்த்திக் கொண்டு அவ்வாறு உபதேசிப்பவனையே (தன்னையே) எண்ணும்படியும்… தன்னையே ஜெபித்திடும் நிலைகளுக்கும்… ஏற்படுத்திக் கொண்டு
1.குரு என்ற பெயரில் குருவின் சரீரத்தையே எண்ணி ஜெபித்திடும்
2.பிற ஆத்மாக்களின் எண்ணத்தின் செயல்பாட்டின் வலுவைத் தான் ஒருவனே பெற்று
3.தன்னை உயர்த்திக் கொள்ளச் செயல்படும் அனைத்துப் புறச் செயல்களில் “உருவ வழிபாடும் ஒன்று…”

“நான் என்பது எண்ணத்தின் செயல்பாடு..” என்றால் அந்தச் செயல்பாட்டின் உந்துதல் கொண்டு எதை வளர்ச்சிப்படுத்துதல் வேண்டும்…?

பழி தீர்க்கும் உணர்வு கொண்டு மற்ற ஆன்மாக்களைத் தன்னுடன் இணைக்கும் செயலாகத் (மாந்திரீகமும் தாந்திரீகமும் செய்யும் சில சாமியார்கள்) தன் எண்ணத்தின் ஆசைகளை நிறைவேற்றும் பொருட்டு உலவிடும் ஆவி ஆத்மாக்களின் தன்மைகளையும் இறப்பின் பின் அதன் தன்மைகளையும் பல முறை விளக்கி வந்துள்ளேன்.

உடலுடன் உள்ள பொழுதே சரீர பக்தியெனும் போர்வையில் தான் கொண்ட எண்ணத்தையே ஊட்டி
1.தன் சரீர பிம்பத்தையே… தன் உருவத்தை எண்ணி ஜெபிப்போரிடம் பதிவு நிலைப்படுத்திக் கொண்டு
2.தன் ஆன்மாவிற்குப் பிற ஆன்மாக்களையும் அடிமையாக்கிக் கொண்டு
3.உபதேசிகன் ஒருவன் தன்னை உயர்த்திடும் செயல்…
4.அன்றைய “பாஷாண்டகம்..!” எண்ணத்தின் செயல்பாட்டில் இரு விதம் உண்டு.

பிறிதொன்றின் ஈர்ப்பில் ஒன்றுவது ஒன்று… மற்றொன்று தன் உயிராத்ம சக்தியை வலுக்கூட்டும் “தன் நல வளர்ப்பு…”

நான் என்பது எண்ணத்தின் செயல்பாட்டில் பிறிதொருவன் சக்தியை ஈர்த்துக் கொண்டு தனக்களித்துத் தான் வளர்வது என்ற தன் எண்ணம் தன்னுள் வளர்ந்து விட்டால் அந்த எண்ண வளர்ச்சியின் முதிர்வே சூட்சமப் பொருள் பதிந்த பாஷாண்டகமாம்.

1.தன் ஆன்மாவைத் தான் வளர்க்க…
2.உயிர் கொண்ட உடலே கருவிகளாக..
3.உணர்வு கொண்ட தியானத்தின் வழியாக…
4.எண்ணத்தின் செயல்பாடே நான் என்று உணரும் பொழுது…
5.இரு விதச் செயல் நிலைகளை ஆங்கு தெளிந்து கொண்டால்
6.நான் என்பது உடலா…?
7.நான் என்பது உயிரா…?
8.நான் என்பது உணர்வா…?
9.நான் என்பது எண்ணமா…? ஆத்மாவா…? என்ற வினாக்களுக்கும்
10.தன்னுள் தெளிந்த தெளிவைப் பெற்றிடலாம்…!

ஆத்ம முலாமின் வலுவை வலுவாக்கிக் கொண்டு
1.“தான்..” என்பதே ஆத்மாவாக உயிருடன் ஒன்றியே.. உயர் நிலை பெற்றே…
2.எண்ணத்தின் செயல்பாட்டில் நானும் வேண்டுமப்பா…!
3.ஒவ்வொரு உயிராத்மாவும்… ஒன்றுடன் ஒன்று ஒன்றி…!
4.ஒன்றில்லாமல் ஒன்றில்லை… ஒன்றுடன் ஒன்றியே பல வளர்ந்து… சக்தி ஈர்த்தல்…! என்று கூறியதிலும்
5.அதற்குள் இருக்கும் உண்மைகளை அறிந்து… உணர்ந்து கொண்டால்
6.தன் உயிராத்மாவின் சுய வளர்ச்சி நிலை “மிக மிகத் தெளிவு பெறும்…!”

உயிர்க் காற்று

உயிர்க் காற்று

 

பஞ்ச பூதங்கள் என்ற ஆகாயம் காற்று நீர் நெருப்பு மண் இவைகள் சரீரத்தில் செயல்படும் செயலுக்குப் பிராணன் என்றிட்ட உயிர் காற்று நாடிகள் வழியோடி அந்தந்த இடங்களில் சுவாச அலையைக் கூட்டி இயக்குகின்றது.

அதாவது மனிதச் சரீரத்தில் இயற்கையாக நடைபெறும் சுவாசத்தின் கதியே சரீரத்தின் உட்கருவிகள் செயல்பட நாடிகளின் வழி ஓடி அங்கங்கு பஞ்சேந்திரிங்களின் தொழிலுக்குச் செயல்பட “இந்தச் சுவாசக் காற்றே பற்பல செயல்களுக்கு வழி வகுக்கின்றது…!”

உயிர்க் காற்று என்று கூறப்படும் பிராணக் காற்று என்பது
1.இருதயப் பகுதி நாடிகளிலிருந்து மேலெழுந்து சென்று வெளிச் சுவாசங்கள் மோதிடும் நெற்றிப் பொட்டில் கலந்து
2.அங்கு செயல்படும் சூரிய அக்கினி சந்திரன் என்ற முத்தலை நாடிகளுள் சந்திர நாடியின் வழி கீழே ஒடி
3.மூலத்தைச் சுற்றி மேலெழுந்து நாபிப் பகுதியில் பத்துத் தலையுள்ள பச்சை வண்ண நாடியில் சுற்றி ஓடும் பெரிய சுவாச நாடியில் கலந்து
4.மீண்டும் மேலெழுந்து சிரசின் மூளைப் பகுதியில் சுவாச நாடிகளின் வழி இரண்டு சுற்றுகளாகச் சுற்றி
5.மீண்டும் வெளிச் சுவாச அலைகள் மோதிடும் நெற்றிப் பொட்டில் கலந்து ஈர்த்து அதே மோதலில் செயல்படுகின்றது.

சரீரத்தில் சுவாசம் நாசியின் வழியாக உட்செல்லும் பொழுது உடலினுள் இயங்கும் இந்த உயிர்க் காற்று என்பது நொடிக்கும் குறைவான நேரத்தில் நாடிகளின் வழியாக ஓடிச் செயல்படுகிறது… செயல்படுத்துகின்றது. பசி தாகம் ஏற்படுவதெல்லாம் இந்த உயிர்க் காற்றின் மூலம் தான்.

சரீரச் செயல் அனைத்தையும் ஒரு கட்டுக்குள் வைத்து பஞ்சேந்திரியங்கள் புற வாழ்க்கைச் செயலில் இயங்கும் இயக்கத்தை நிலை நிறுத்தி
1.ஒருமையும் ஐந்தடக்கி தியானத் தொடரில் நிலை பெற்று விட்டால்
2.காற்றிலிருந்தே ஆகாரம் பெற்றிடும் அமைப்பு ஏற்பட்டுவிடும்.

சரீரத்தின் குறி ஸ்தானம் என்றிட்ட மர்ம ஸ்தானத்திலும் மலம் கழியும் இடமாகிய மூல இடத்திலும் வட்ட வடிவில் சுழன்றோடும் காற்று அங்குள்ள நாடிகளின் வழியே செயல்படும் பொழுது உணர்வின் உந்துதலாக மலம் நீர் இவற்றை வெளியேற்றும் செயலுக்கும் ஆண் குறியின் சுக்கிலத்தைக் கிளர்ந்து வெளித் தள்ளும் செயலுக்கும் இயக்குகிறது. அதை மூலத்தின் காற்று என்பர்.

சுவாசக் காற்றின் செயல் நாபிப் பகுதியில் உள்ளிட்ட நாடிகளில் ஓடிடும் பொழுது இரைப்பையில் உணவை ஜீரணித்துச் சாறு என்றும் சக்கை என்றும் பிரித்திடும் செயலுக்கு உதவுகின்றது,

அதே சமயத்தில் உணவின் சத்துக்களை நரம்புகளின் வழி கொண்டு சென்று சரீரத்தின் அனைத்து உறுப்புகளுக்கும் பகிர்ந்தளிக்கும் சுவாசக் காற்றாகவும் சுவாசத்தின் கதியில் காற்று நூலாகச் செயல்கள் நிகழ்கின்றன.

இயற்கையின் மூலாதாரம்

இயற்கையின் மூலாதாரம்

 

“உஷ்ண நாதமே காக்கும் விஷ்ணுவாக…!” என்ற சொல் சூட்சமத்தில் மனித சரீரத்தில் செயல் கொள்ளும் உஷ்ண நாதம் உடலினுள் ஓடிடும் 72000 நாடி நரம்புகளில் செயல்படுகிறது.

அவைகள் செயல்படும் கதியை… எண்ணம் கொண்டு செயல்படுத்தும் பஞ்சேந்திரியங்களும்… அவைகளின் தொழில் நிகழ்வுக்குப் பஞ்ச பூதங்களில் காற்றின் அமிலக்கூறு “மின்காந்தச் செயலாக” நடைபெறுகின்றது.

அதி தீவிரச் செயல்பாடு கொண்ட நாடிகள் ஆயிரத்து எட்டும் சரீரத்தில் தொப்புள் பகுதியில் அமைந்துள்ள பத்துத் தளைகள் கிளைத்துள்ள சுவாசத்தின் முக்கியக் கேந்திரத்தில் செயல்படும் நாடி ஒன்றும் கிளைத்துச் செல்லும் அந்த இடத்தில் வட்டமிட்டுச் சுழன்றே செல்கின்றன.

பச்சை வண்ண ஒளி காட்டும் பத்துத் தளைகள் கிளைத்தது போல் காணப்படும் தொப்புள் கொடி பஞ்ச பூத சரீரத் தத்துவத்தில் நீரமில சக்தி கொண்டது.

அண்டத்தையே பிண்டத்தில் கண்ட ஆத்ம ஞானிகள் நல்லெண்ணச் சுவாசம் கொண்டு இந்தச் சரீர கதியின் செயல்பாட்டைக் கொண்டே பரவெளியில் படர்ந்துள்ள பரமாத்மாவை உணர்ந்து தெளிந்தனர்.

பஞ்ச பூதத் தத்துவபடி (ஆகாயம் நீர் காற்று அக்கினி மண்)
1.”ஆகாயம்…” என்பதே கண்டம் என்றிட்ட சரீரத்தில் உள்ள தொண்டைப் பகுதியும்
2.அங்கு செயல்படும் நாடிகள் தொண்டையின் குழிப்பகுதியில் பதினாறு தலையுள்ள கிளைகள் போல் ஓடுவதும்
3.ஆகாயத்தின் மேகத்தின் வண்ணம் போலத் தோன்றி மிகுந்த ஒளி போல் விளங்குவதையும்
3.அந்த நாடிகளே ஜீவ பிம்பச் சரீரத்தில் சுவாசத்தின் தன்மைக்குச் செயல்படும் நாடிகள் என்றும்
4.பதினாறு தலையுள்ள அந்த நாடிகள் ஒன்றாக இணைந்து சர்ப்பத்தின் அசைவைப் போல் தெளிவாக உருவம் காட்டி
5.”பஞ்ச பூதத் தத்துவத்தில் நீரமில சக்தி…” செயல்படும் தொப்புள் பகுதியில் அமைந்துள்ள பத்துத் தலை அமைப்பாக உள்ள பச்சை வண்ண நாடியை
6.சர்ப்பம் வட்டமிட்டுச் சுருண்டு கிடக்கும் அமைப்பாக அமைத்துக் கொண்டுள்ளன.

உடலில் இருதயம் அமைந்துள்ள இடத்திலுள்ள மற்றொரு நாடி “பஞ்சபூதத் தத்துவத்தில் காற்றமிலச் செயல்பாடாக…” இயற்கை கதிச் செயலாக தலை சாய்த்த மலராகத் தோற்றம் காட்டுகிறது.

பன்னிரெண்டு தலைகளாக நிலைத்திட்ட அந்த நாடி வயிற்றில் தொப்புள் பகுதி நாடியைச் சுற்றி இரைப்பையில் போடப்படும் உணவுகளைச் செரிக்கச் செய்யும் கருவியாகச் செயல்படுகின்றது.

தொப்புள் பகுதியைச் சுற்றி வட்டமிடும் மற்றொரு நாடி
1.“பஞ்ச பூதத் தத்துவத்தில் அக்கினிக் கேந்திரமாக…”
2.ஆண் பெண் குறி என்ற மர்ம ஸ்தானத்தில் ஆறு தலை போல் கிளைத்து
3.உயிர் உற்பத்தி ஸ்தானமாகச் சரீரத்தில் செயல்படுகின்றது.

“பஞ்ச பூதத் தத்துவத்தில் மண்ணமிலத் தன்மையாக…” மற்றொரு நாடி நான்கு தலைகளுடன் கூடி மலவாயில் என்ற மூலத்தில் தொடங்கி தொப்புள் பகுதியில் அமைந்துள்ள பச்சை வண்ண நாடியைச் சுற்றிச் செல்கின்றன.

இந்தப் பஞ்ச பூத அமைப்புகள் அனைத்தையும் செயல் நடத்திடும் “கட்டளைக் கேந்திரம்…” (உயிர்) சிரசின் நெற்றிப் பகுதியில் உள்ளது.

சூரிய சந்திர அக்கினி என்ற மூன்று நாடியாகத் தொடங்கி… ஆகாயம் என்ற கண்டப் பகுதி… காற்று என்ற இருதயப் பகுதி… நீர் என்ற வயிற்றுப் பகுதி… அக்கினி என்ற குறிப் பகுதி… மண் என்ற மூலப் பகுதி… இவை அனைத்தையும் இணைத்துக் கொண்டு அந்தக் கட்டளைக் கேந்திரம் செயல்படுகிறது.

அதே சமயத்தில் சிரசின் உச்சிப் பகுதியில்
1.ஆயிரம் தலையுள்ள நாடிகள் ஒன்றாக இணைந்த அந்த இடத்தை
2.நீல வண்ண ஆத்மாவின் ஜோதி தத்துவமாகக் காட்டினான் அன்றைய ஞானி.

அதை எல்லாம் காட்டியிருந்தாலும் இன்றைய உலகோதய நடைமுறை வாழ்க்கைச் செயலில் பரபரப்பான எண்ணச் செயலில் மனிதர்களின் சுவாசத்தின் கதி என்பது…
1.ஒரு நாளில் இலட்சக்கணக்கான மூச்சலைகளாகச் சுவாசத்தின் கனமாகச் சுவாசத்தில் ஓடும் பொழுது
2.பல வகையான எண்ணங்கள் மோதிடும் செயல்பாட்டில்
3.சக்தி வலுவிழந்து விடுகின்ற நிலையே இன்று அதிகம் உள்ளது.

மூச்சையும் காற்றையும் பற்றிச் சிந்திப்பாரும் இல்லை. அதைப் பற்றி அறிய விரும்புவாரும் இல்லை… அதனின் இரகசியத்தை அறிய முயற்சிப்போரும் இல்லை…!

காற்று நூல்…! என்ற வழி வகையில் பஞ்ச பூதங்களாக அமைவு காட்டிய இடங்களில் செயல்படும் நாடிகளில் “சுவாசகதி…” ஓடுவதைத் தியான வழி கொண்டு கண்டு அன்றே தெளிந்தார்கள் சித்தர்களூம் ஞானிகளும்.