விஷ்ணு தனுசை எடுத்தால் தான் வேதனைகளை அகற்ற முடியும்

விஷ்ணு தனுசை எடுத்தால் தான் வேதனைகளை அகற்ற முடியும்

 

தன் குழந்தையைக் காக்க தாய் தந்தையர்கள் எத்தனையோ வேதனைகள் படுகின்றார்கள்.

பிள்ளைகளுக்காக வேண்டிச் சேமித்து வைக்க வேண்டும் என்ற நிலை தான் வருகின்றது. நாம் கஷ்டப்பட்டோம் ஆனால் பிள்ளைகள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்.. ஆரோக்கியமாக இருக்க வேண்டும். என்று விரும்புகின்றனர்.

பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டுமென்று எண்ணும்போது
1.பிறர் வேதனைப்படுத்தும் உணர்வுகளையோ வேதனையான செயல்களையோ பார்க்கப்படும்போது
2.தன் குழந்தையைக் காக்க வேண்டுமென்ற உணர்வு தான் வருகின்றது
3.இருந்தாலும் அந்த வேதனை என்ற உணர்வு முதலில் உள்ளே நுழைந்து விடுகின்றது.

அதே போல் நாம் எண்ணியபடி குழந்தை வளர வேண்டும் என்று விரும்புகின்றோம். பள்ளியில் அவன் சரியாகப் படிக்கவில்லை என்றால் உடனே இவன் எதிர்காலத்தில் எப்படித்தான் வாழப்போகின்றானோ…! என்ற வேதனை வருகின்றது.

வேதனை வரும்போது அடுத்து கோபம் வரும். இந்த உணர்வு உடலிலே பட்டபின் சிவ தனுசு (உடலைக் காக்கும் உணர்வு) என்ன செய்யும்…?

1.இப்படிச் செய்கின்றானே…! என்று சொல்லி நாம் உணர்வுகளை வெளிப்படுத்தும் போது
2.அது அவனைப் போய்த் தாக்கும்.

எது…? நம்மை அறியாமலேயே நாம் இந்த ஆயுதத்தைப் (சிவ தனுசை) பயன்படுத்துகின்றோம்.

அப்போது நமக்குள் உருவானது ஓ…ம் நமச்சிவாய…! உடல் சிவமாகின்றது. மீண்டும் சிவாய நம ஓம்…! “இப்படிச் செய்கின்றானே…!” என்று அவனைச் சொல்லப்படும் போது அதே உணர்ச்சிகள் அங்கே பாய்கின்றது.

ஆக…
1.அவனைத் திருத்துவதற்கு மாறாக அவன் செயலையே மீண்டும் ஊக்குவிக்கும் நிலைக்குத்தான் நாம் செல்கின்றோமே தவிர
2.அவன் செயலை நல்லதாக மாற்றும் தன்மை இல்லாது போய்விடுகிறது.

குழந்தை படிக்கவில்லை என்றால் உடனே என்ன செய்கின்றோம்…?

அவன் எதிர்காலத்தைப் பற்றி வர்ணிக்கின்றோம். அவன் படிக்கவில்லையே என்ற உணர்வின் தன்மையை நமக்குள் வளர்த்துக் கொண்டபின்… இப்படி இருக்கின்றான்… எதிர்காலம் என்ன ஆகுமோ…? என்ற வேதனை வருகிறது.

வேதனையின் தன்மை வரப்படும்போது சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றோம். அந்த சிந்திக்கும் தன்மை இழந்தபின் திருப்பிப் பேசுகின்றோம். அதுதான் ஓ…ம் நமச்சிவாய சிவாய நம ஓ…ம்.

வேதனை என்ற உணர்வுகள் நமக்குள் வரப்படும்போது வாலி ஆகின்றது.
1.வாலி என்ற உணர்வுகள் உள்ளே சென்று
2,நம் நல்ல குணங்களைச் செயலிழக்கச் செய்து அது வலிமை பெறுகின்றது.

அது வலிமை பெற்ற பின் நம் குழந்தை தான் என்று காக்க வேண்டும் என்று சொன்னாலும் கூட அந்தச் சந்தர்ப்பத்தில் அவனை உதைக்கத்தான் சொல்லும்…. அல்லது அவனைத் திட்டச் சொல்லும்… அவனைச் சாபமிடச் செய்யும்…!

இதை எல்லாம் அவன் நுகர்ந்தால் என்ன செய்யும்…? அவன் என்ன செய்வான்…?

நம்மைப் பார்த்தாலே ஜிர்…! என்று வருவான். ஓ…ம் நமச்சிவாய சிவாயநம ஓ…ம். அதாவது இராமன் அம்பை எய்தால் தன் கணைகளைத் திருப்பி வாங்கிக் கொள்வான்.
1.நாம் எதைச் சொல்கின்றோமோ
2.திருப்பி அந்த பதில் தான் நமக்கும் வரும்.

எவ்வளவோ சொத்து வசதி எல்லாம் இருந்தாலும் நீங்கள் ஒரு தடவை உங்கள் பையனைத் திட்டிப் பாருங்கள். அங்கிருந்து என்ன பதில் வரும்…! என்று தெரியும் உங்களுக்கு.

இரண்டாவது தடவை மூன்றாவது தடவை திருப்பிச் சொல்லிச் சொல்லி இரண்டு பேரும் கடைசியில் எதிரி ஆகிவிடுவார்கள்.

என் பிள்ளையாவது..? என் அம்மாவாவது என் அப்பாவாவது..! என்று இப்படித்தான் வரும். இது தான் சிவதனுசு… தன் தன் உடலைக் காக்க இந்த உணர்வின் நிலைகள் எதைப் பெற்றதோ இந்த உடலைக் காக்கத் தான் (நுகர்ந்த உணர்வுகள்) அது எண்ணுகின்றது.

ஆனால் விஷ்ணு தனுசு…! இந்த உயிரின் நினைவு கொண்டு உடலில் வந்த தீமைகளை நீக்கி ஒளியானது துருவ நட்சத்திரம். வாழ்க்கையில் வந்த இருளை அகற்றிப் பேரொளியாக ஆனது தான் அங்கே…!

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகும் பொழுது விஷ்ணு தனுசு. உயிருடன் ஒன்றி ஒளியாகவே இருக்கின்றது. எதையும் அது வென்றிடும் ஆற்றல் பெற்றது.

நம் வாழ்க்கையில் எந்தத் தீமை வந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று
1.அதை எடுத்துப் புருவ மத்தியில் நிறுத்தி
2.நம் உடலுக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று
3.அந்த விஷ்ணு தனுசைப் பாய்ச்சுதல் வேண்டும்.
4.அப்பொழுது நமக்குள் வந்த கோபத்தையும் வேதனையையும் அது அடக்குகின்றது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து நமக்குள் இருக்கும் நல்ல குணத்தையும் காத்து நம் குழந்தைக்கும் நல் உணர்வினைப் பாய்ச்ச முடியும். வேதனைகளிலிருந்து நாம் முழுமையாக விடுபட முடியும்.

வினை செய்தவனிருக்க வினைப்பயனை நாம் ஏன் ஏற்க வேண்டும்…? ஈஸ்வரபட்டர்

வினை செய்தவனிருக்க வினைப்பயனை நாம் ஏன் ஏற்க வேண்டும்…? ஈஸ்வரபட்டர்

 

நம்முடைய சகஜ வாழ்க்கையில் ஏற்படும் சஞ்சலமும் சோர்வும்… சோர்விலிருந்து ஏற்படும் கோபமும்… கோபத்தினால் உண்டாகும் ஆத்திரமான வெறியுணர்வுகளாலும்…
1.இதிலிருந்து விடும் சுவாசத்தினால் ஏற்படும் உடலின் அமில சக்தி மாறுபட்டு
2.அதிலிருந்து பல உபாதைகளை நாமே நம் உடலுக்குள் ஏற்றிக் கொள்கின்றோம்.

கோபம் ஏற்பட்டவுடன் நம் உடலிலுள்ள அனைத்து அணுக்களும் துரிதம் கொள்கின்றது. அந்த நிலையில் நாம் எடுக்கும் சுவாசமே கடினமாக நம் உடலில் ஏறுகின்றது.

1.இக்கனமான சுவாசத்தை ஈர்க்க ஈர்க்க…
2.நம் உடலிலுள்ள அனைத்துப் பாகங்களும் ஒருநிலைப்படாமல் துடிக்கும் நிலை கொள்கின்றது.

அதனால் நம் உடலிலுள்ள இரத்த நாளங்கள் துரிதமாகச் செயல்பட்டு மனிதனின் உடல் நிலைக்கே மூலகாரண வித்தாக இருக்கும் நல் நிலைகள் மாறி பல வியாதிகள் ஏற்படும் நிலைக்கு நாம் ஆளாக வேண்டியுள்ளது.

மனச் சஞ்சலத்திலிருந்து நாம் ஏற்றிக் கொள்ளும் நிலைதான் நமக்கு ஏற்படும் தொடர் நிலையெல்லாம்…!

1.சஞ்சல நிலை ஏற்பட்டவுடன் மன நிலையை அமைதிப்படுத்தி
2.அதனால் ஒரு நிலை கொண்ட சுவாசத்தை ஈர்த்தால் சஞ்சலத்திற்குத் தெளிவு பெறலாம்.
3.தெளிவை நாமே தான் ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

உதாரணமாக நாம் செய்யாத தவறுக்காக ஒருவர் ஏசுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் ஏசலைக் கொண்டு இப்படிச் செய்கின்றாரே… நாமென்ன தவறு செய்தோம்…? என்று எண்ணுகின்றோம்.

ஆனாலும்… நம்மிடம் தவறில்லாத பொழுது நம்மை ஏசுபவனை ஆத்திரத்துடன் எண்ணி…
1.இப்படியெல்லாம் செய்பவன் அவனே அந்தத் தண்டனையை அனுபவிக்கட்டும் என்று
2.தவறு செய்பவன் இருக்க நம்மையே நாம் தவறாக்கிக் கொள்கின்றோம்.

நம் எண்ணத்தில் அவன் ஏசும் சொல்லை ஏன் அண்டவிட வேண்டும்…?

1.அவர்கள் நல் உணர்வு பெறட்டும்… நல் வழி படட்டும் என்ற எண்ணத்தில்
2.நம்முடன் அச்செயலை மோத விடாமல் எண்ணும் பொழுது நம் உணர்வே நலம் பெற்று
3.நம் எண்ணத்தில் தீட்சண்ய சொல் தாக்காமல் நம்மைப் புனிதப்படுத்திக் கொண்டால்
4.நம்மையே நாம் பல இன்னல்களிலிருந்து காத்துக் கொள்கின்றோம்.

வினை செய்தவனிருக்க வினைப்பயனை நாம் ஏன் ஏற்க வேண்டும்…?

ஏனென்றால் பிறரை ஏமாற்றியோ வஞ்சனை செய்தோ துவேஷித்தோ வருபவனெல்லாம் தன்னைத்தானே ஏமாற்றி வாழ்கின்றான். பிறரை ஏமாற்றுவதாக எண்ணி தன்னையேதான் ஏமாற்றி வாழ்கின்றான்.

1.மன நிலையை ஒரு நிலைப்படுத்தி…
2.சமமான வரையறை கொண்ட வாழ்க்கைதனை வாழும் பக்குவத்திற்குப் பல நெறி முறைகள் உண்டப்பா…!

மனித வாழ்க்கையில் இன்று கேள்விக்குறியாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்

மனித வாழ்க்கையில் இன்று கேள்விக்குறியாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்

 

இன்றைய சூழ்நிலையில் காலையிலிருந்து இரவு வரையிலும் பண்பு கொண்ட மனிதன்… அன்பு கொண்ட மனிதன்… பரிவு கொண்ட மனிதன்… ஈகை கொண்ட மனிதன்… பிறருடைய துயர்களைக் கேட்கப்படும்போது அதை நுகரப்படும்போது உயிரிலே அந்த உணர்வுகள் உராய்ந்து அந்த உணர்ச்சிகள் தான் உடல் முழுவதும் சுழல்கின்றது.

அதனால் துயரப்படும் உணர்ச்சிகளே இயக்குகின்றது. ஆக.. மனிதன் தனது வாழ் நாளில் கேள்விக்குறியாகவே இன்று வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளோம்.

ஏனென்றால் இன்று உலக நிலைகளில் அரசியல் நிலைகள் பூராமே மனிதனை முழுமையாக அறவே அழிக்கச் செய்து அரக்க உணர்வுகள் பெறும் சக்தியே விஞ்ஞான அறிவால் உருவாக்கப்பட்டு விட்டது.

நாம் செல்வத்தைத் தேடினாலும்…
1.அந்தச் செல்வத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம் என்று சொன்னாலும்
2.அதற்கு வேண்டிய உத்திரவாதமும் இன்று இல்லை.

அதே சமயத்தில் உயர்ந்த குணங்கள் கொண்டு நாம் வாழ்ந்தாலும் நமது நல்ல பண்புகள் நமக்குள் நிலைத்திருக்குமா…? என்று பார்த்தால் “அதுவும் இல்லை…” என்ற நிலை தான் உள்ளது.

பண்பு கொண்டு வாழ வேண்டும் அன்புடன் வாழ வேண்டும் அரவணைத்து வாழவேண்டும் என்ற எண்ணங்களை மக்கள் எண்ணினாலும் வேதனை வேதனை என்று அதைத்தான் அதிகம் சுவாசிக்க நேருகின்றது.

சீரிய பண்பு கொண்டு வாழவேண்டுமென்று இருப்பினும் இன்று அத்தகைய பண்பு கொண்ட மனிதர்கள் அனைவரும் வேதனை வேதனை வேதனை என்ற உணர்வினையே சுவாசிக்க நேருகின்றது.

அந்தப் பண்பும் பரிவும் பாசமும் தன்னுடன் நிலைத்து இருப்பதில்லை…! அன்புடன் பண்புடன் பரிவுடன் பேசுபவர்கள் என்றால் ஏதோ கொஞ்சம் ஓரளவுக்கு வசதியாக இருப்பவர்கள் தான் அவ்வாறு பேசிக் கொள்வார்கள்.

ஆனாலு அப்படி வசதியாக இருப்பவர்கள் மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டுமென்று எண்ணத்தில் உதவி செய்தாலும் அவர்கள் படும் வேதனை வேதனை என்ற சொல்லைக் கேட்டுக் கேட்டு அதை நுகர்ந்து அறியக்கூடிய நிலைகள் வருகின்றது.

ஆக… வேதனைப்படுத்துவோரைப் பார்த்து “இப்படி நடக்கின்றதே…!” என்று அந்த வேதனை உணர்வைத்தான் சுவாசிக்க நேருகின்றது. அதைத்தான் அதிகமாக நேசிக்க முடிகின்றது.

பத்திரிக்கைகளைப் படித்தாலே “உலகம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கின்றது…” நாம் எப்படி நாளை இங்கே வாழ முடியும்…? என்ற நிலைகள் வருகின்றது.

1.பத்திரிக்கையைப் பார்த்தாலே மனிதன் வேதனைப்படும் உணர்வே வருகின்றது
1.இந்த சகஜ வாழ்க்கையில் அன்பு கொண்ட உள்ளங்கள் அனைத்தும்
2.அரவணைக்கப்பட வேண்டுமென்ற உள்ளங்கள் அனைத்தும்
3.கடும் வேதனையைத்தான் அவர்கள் நுகர நேருகின்றது.
4.அந்த வேதனையைத்தான் அவர்கள் உடல்களில் உருவாக்க முடிகின்றது.

இதிலிருந்து விடுபட வேண்டாமா…? என்று சற்று சிந்தியுங்கள்.

“பேயை ஓட்டுகிறேன்…” என்று சொல்பவர்களின் உண்மைச் செயல் என்ன…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

“பேயை ஓட்டுகிறேன்…” என்று சொல்பவர்களின் உண்மைச் செயல் என்ன…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

எண்ணற்ற காலம் முதற்கொண்டே ஆவிகளை வசியப்படுத்திச் செயல்படுத்திடும் பல நிலைகள் பல ஆயிரம் காலங்களாகவே இருந்து வருகின்றன. நற்காரியங்களுக்காகவும் தன் பேராசையின் நிலைக்காகவும் இந்நிலையைச் செயல்படுத்தி வந்தார்கள்.

மந்திரம் மாயம் செய்வதெல்லாம் ஒரு கலையாகவும் வம்ச வழியாகவும் நிலைப்படுத்திச் செயல் கொண்டு வருகின்றனர்…. பேய் ஓட்டுதல் மந்திரத்தில் என்பன போன்ற பல நிலைகள் நடக்கின்றன.

எண்ணத்தில் சோர்வு கொண்டவரின் உடலில் அவர்கள் எந்த எண்ணத்தைக் கொண்டு உள்ளனரோ அவ்வெண்ண நிலைக்கொப்ப ஆவிகள் அவர்கள் உடலில் ஏறிவிடுகின்றன.

உதாரணமாக… பல ஆசை நிலையுடன் வாழும் ஒருவன் தன் இல்லத்தில் குழந்தைகளின் பற்றைக் கொண்டு பல நினைவுகளுடன் இல்லத்திலிருந்து வெளி இடங்களுக்குச் செல்லும் நிலையிலும் இல்லத்தில் இருந்த நிலையின் எண்ண ஆசையுடன் தன் குழந்தைகளுக்கு வேண்டிய பொருள் வாங்கும் ஆசையில் அதே எண்ண நிலையில் செல்கின்றான் என்று வைத்துக் கொள்வோம்.

அதே எண்ணம் கொண்டு அந்த ஆசையில் மற்ற போக்குவரத்தின் இடையூறுகள் கவனிக்கப்படாமல் விபத்து ஏற்பட்டுவிடுகின்றது. அப்பொழுது அகால மரணம் எய்தி குருதி வெள்ளத்தில் அடிபட்டு ஆத்மா பிரிந்து விடுகிறது.

1.அத்தகைய ஆத்மா அவ்வாசை நிலையுடன் அங்கேயேதான் சுற்றிக் கொண்டிருக்கும்.
2.அதே நிலைகொண்ட எண்ண நிலையுடன் இன்னொருவன் அந்த நிலைக்குச் செல்லும் பொழுது
3.இவ்விரண்டு எண்ணங்களும் ஒரு நிலைப்பட்டவுடன் இவன் உடலில் அந்த ஆவி ஏறிக் கொள்கின்றது.

இவனுடைய செயலுடன் அவ்வாவியின் செயலும் ஒன்றுபட்ட பிறகு இவன் உடல் நிலையில் அவ்வுடலில் அவ்வாவி மனிதனாய் வாழ்ந்த காலத்தில் இருந்த நிலையெல்லாம் இவன் உடலிலும் ஏறிக்கொள்கின்றது.

இப்படிப்பட்ட நிலையின் காரணமாக…
1,தன் நிலையே தான் மறந்து
2.உடலில் உள்ள ஆவிக்குத் தன்னையறியாமல் அடிமைப்பட்டு வாழும் நிலை ஏற்பட்டு
3.சோர்வு கொண்ட நிலையாகி அதை மாற்றிட மந்திரவாதிகளிடம் செல்லும் நிலை மிகுந்து விட்டது.

இந்த நிலை கொண்டவன் மந்திரவாதியிடம் சென்றால் அவனுக்கு இவன் உடலில் ஏறியுள்ள மற்றோர் ஆவி ஆத்மாவின் நிலையைப் புரிந்து கொண்டு
1.பேய் ஓட்டுவதாகச் சொல்லி மீண்டும் இதற்கு மேல் சக்தி கொண்ட மற்றும் ஒரு குட்டிச்சாத்தானை இவன் உடலில் ஏற்றி
2.அதன் சக்தியைச் செயல்படாமல் செய்து
3.பேய் ஓட்டுவதாய் அவ்வாத்மாவைப் பல இம்சைகள் செய்து
4.அவன் பொருளீட்டிக் கொள்கின்றான்.

இவன் உடலில் ஏறிய குட்டிச்சாத்தானின் ஏவலிலிருந்து இவன் உடல் அழியும் வரை தப்புவது இயலாத காரியம். இத்தகைய பேயோட்டும் நிலையினால் ஒவ்வொருவரையும் அவர்கள் வாழ் நாள் முழுமைக்குமே அதற்கே அடிமைப்படுத்துகின்றனர்.

இந்நிலையிலிருந்து தப்புவதற்கு என்ன செய்ய வேண்டும்…?

நம் உடலில் எவ்வாத்மா எவ்வாவி நிலைகள் ஏறி இருந்தாலும்
1.எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தி சப்தரிஷிகளின் உணர்வுடன் ஒன்றச் செய்து அந்த எண்ணத்தை வலுவாக்கி
2.உடலில் உள்ள ஆவி புனித நிலை பெற வேண்டும் என்று எண்ணினால் அதனின் இயக்கத்திலிருந்து தப்ப முடியும்.

பூரண நிலவு போன்று நாம் முழுமை அடைந்து பிரகாசிக்க வேண்டும்

பூரண நிலவு போன்று நாம் முழுமை அடைந்து பிரகாசிக்க வேண்டும்

 

பிறர் வேதனைப்படுவதைப் பார்க்கும் போது உங்கள் மனம் இருண்டு விடுகின்றது. உங்களுடைய செயலாக்கங்கள் மாறுகின்றது. இது வளர்ந்து விட்டால் அந்த நல்லறிவின் செயலே முழுமையாக இழந்து விடுகின்றது.

அதை மாற்றுவதற்குத்தான் சப்தரிஷிகளின் அருளையும் துருவ மகரிஷியின் அருளையும் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வலைகளையும் இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களை நுகரச் செய்து உங்கள் கண்ணின் வாயிலாகப் பதியச் செய்கின்றேன் (ஞானகுரு).

1.உங்கள் ஆறாவது அறிவை…
2.எதனையுமே அறிந்து தெளிவாக்கிடும் அந்த ஞானத்தின் நிலையைக் காத்திடவே இதை உபதேசிப்பது.

உங்களை அறியாமலேயே பதியச் செய்கின்றோம்.

பதிவானதை மீண்டும் எண்ணும் போது உங்களை அறியாமலே பல அற்புதங்கள் நடக்கும். தீமைகளை நீக்கிடும் ஆற்றலை நீங்கள் பெறுகின்றீர்கள்.

அதைப் பெறச் செய்வதற்குத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய் ஞானியின் உணர்வை நுகரும்படி செய்கிறோம். மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் அந்த உணர்ச்சியைத் தூண்டச் செய்கின்றோம்.

உங்களை அறியாது நல்ல குணங்களை மறைத்துக் கொண்டிருக்கும் சிறு திரையை நீக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களின் நல்ல குணங்களுக்குள் ஆழமாக இணைக்கச் செய்கின்றோம்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நீங்கள் நினைவு கொண்டால் ஒவ்வொரு நொடியிலும் உங்கள் நல்ல குணங்களை நீங்களே தெளிவாக்கிக் கொண்டுவர முடியும்.

அவ்வாறு நீங்கள் தெளிவாக்கிக் கொண்டு வந்தால் உங்கள் வாழ்க்கையில் இது முழுமை பெற்றால் சந்திரன் எப்படி பூரண நிலாவாகின்றதோ அதைப் போல இந்த உடலிலுள்ள உணர்வுகள் அனைத்தும் அந்த ஒளியின் சிகரமாக மாறும்.

ஒளியாக மாறிய பின் இந்த உடலை விட்டுச் சென்ற பின் இந்த உயிராத்மா பிறவியில்லா பெரு நிலைகள் அடையும்.
1.அத்தகைய நிலை பெறச் செய்வதற்கும்
2.இந்த வாழ்க்கையில் அறியாமல் வரும் தீமைகளை அகற்றிடவும்
3.தீமையற்ற செயலாக நம் உடலுக்குள் வளர்த்திடவும்
4.நம் எண்ணத்தால் நம்மைக் காத்துக கொள்வதற்கும் தான் இதை உபதேசிப்பது.

இப்போது பதிவு செய்ததை நீங்கள் ஒவ்வொரு நொடியிலேயும் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் ஈஸ்வரா…! என்ற நினைவினைச் செலுத்தினாலே போதும்…!

நம் எண்ணநிலை (சுவாச நிலை) ஒருநிலைப்பட்டு விட்டால் எந்தத் தீமையும் நம்மைத் தாக்காது – ஈஸ்வரபட்டர்

நம் எண்ணநிலை (சுவாச நிலை) ஒருநிலைப்பட்டு விட்டால் எந்தத் தீமையும் நம்மைத் தாக்காது – ஈஸ்வரபட்டர்

 

ஏவல்… குட்டிச்சாத்தான்… மையிட்டு மந்திரம் செய்வோரிடம் நாம் சிக்கிடாமல்… அவர்கள் செயல்கள் செயல்படாவண்ணம் “நம் ஆத்மாவை..” நம்மைக் காத்திடும் நிலையை அறிந்து வாழ்ந்திடல் வேண்டும். பல எண்ணங்களின் நிலையிலிருந்து நம்மைக் காத்திடல் வேண்டும்.

1.சோதனை கொண்ட காலங்களில் சோர்வு நிலை கொண்டு முடங்கிடலாகாது
2,இவ் ஏவல்களின் தன்மையெல்லாம் சோர்ந்தவர்களை அதி விரைவில் அண்டிக் கொள்ளும்.

இத்துர் ஆவிகள் நடமாட்டத்தைப் பல மிருக ஜெந்துக்கள் எப்படி உணர்கின்றன…?

ஏவலும் சூனியமும் மிருக ஜெந்திற்குச் செயல் கொள்ளாது…! அதன் உடலிலேயே உணரும் தன்மை கலந்துள்ளது. இச்சுவாச சக்தி நாய்க்கு அதிகம். புலிக்குத் தன் பார்வையிலேயே கண்டிடும் சக்தியுண்டு.

இவ் ஏவலின் நடமாட்டமுள்ள இடங்களையெல்லாம் இவற்றை அறியும் தன்மை கொண்ட மிருகங்கள் உணர்ந்துவிடும்.

முந்தைய காலங்களில்… வீடுகளில் நாய் பூனை இவற்றைத் திருடர்களிடமிருந்து காப்பதற்காக மட்டும் வளர்க்கவில்லை. துர் ஆவிகளிடமிருந்து அவற்றின் ஏவல் இல்லங்களில் உட்சென்று செயல்படாமல் காக்கவும் இம் மிருகங்களை வளர்த்தனர்.

1.ஏவல்காரனையும் குட்டிச்சாத்தான் செயல் உடையபனையும் கண்டால்
2.இந்நாய் நரி பூனைகள் குரைத்துச் சப்தமிட்டு உணர்த்திவிடும்.

அக்கால இல்லங்களில் எல்லாம் இல்லத்தில் முன் வாயிலுக்கு மேல் நிலைக்கண்ணாடியைப் பதித்திருப்பார்கள். சாதாரண நிலையில் இருக்கும் நிலையில் நம் கண்ணிற்குத் துர் ஆவிகளின் நடமாட்டம் தெரிந்திடாது.

ஆனால் நிலைக்கண்ணாடியில் தெரியும் நிலையென்ன…?

நிலைக்கண்ணாடியில் பூசியுள்ள அவ்வமில சக்தி இத்துர் ஆவிகளின் சக்திக்கு எதிர் கொண்டது. நாயில் உடலிலுள்ள அமில சக்திக்கும் நிலைக்கண்ணாடியில் உள்ள அமிலத்திற்கும் தொடர்புண்டு.

இத் துர் ஆவியின் நிலையைப் பலர் காண்கின்றனர். பேயின் நடமாட்டத்தைக் கண்டேன் என்பவர் பலர். பேயல்ல அது குட்டிச்சாத்தானின் உருவ நிலை அது.

சிலருக்கு மட்டும் புலப்படும் நிலையென்ன…?

ஒவ்வோர் உடலுக்கும் அவரவர்களின் அமிலத்தன்மை ஒன்று உண்டு என்று உணர்த்தினேன் அல்லவா…! இவற்றைக் காணும் அமிலத்தன்மை கூடியவர்கள் உடல் இந்த நிலையை அறியலாம்.

சிலரின் நிலையில் அவர்களின் உடலிலுள்ள அமிலத் தன்மையே அபூர்வத் தன்மையில் இயற்கையிலேயே கூடிப் பிறந்திருப்பர். எண்ணத்தில் ஞானசக்தி நிறைவு கொண்ட அபூர்வப் பிறவியெடுத்தவர் பலர் உள்ளனரே. அவர்களுக்கு இயற்கையின் அமிலமே தன்னுள் கூடி பிறவியெடுத்து பிறந்து வளர்பவர்கள்.

1.பல பிறவியில் சேமித்த அமிலத்தின் கூட்டு நிலையினால்
2.பல ஞானிகள் மற்ற ஏவலின் சக்தியில்லாமல் வாழ்கின்றனர்.
3.ஆகவே நம்முள் உள்ள நிலையையே நல் நிலையில் வளரும் பக்குவத்தை நாம் பெறல் வேண்டும்.

நமக்காக ஏவாமல் பிறருக்காகச் செய்த மந்திர நிலையும் நம்மைத் தாக்கும் நிலையும் உண்டு. நம் நிலையில் ஒரு நிலைப்பட்டுவிட்டால் (சுவாச நிலை) எத்தகைய தீய தன்மைகளும் நம்மை வந்து தாக்காது.

நம் நல்ல அறிவைக் காக்கும் சக்தி…!

நம் நல்ல அறிவைக் காக்கும் சக்தி…!

 

பிற மண்டலங்களிலிருந்து வருவதை 27 நட்சத்திரங்கள் நவக்கோள்கள் கவர்ந்து வெளிப்படுத்துவதை சூரியன் கவர்ந்து தன் சுழற்சி வேகத்தால் அந்த அணுக்களில் உள்ள விஷத்தினைப் (அல்ட்ரா வயலட்) பிரித்து விடுகின்றது.

மனிதனுடைய ஆறாவது அறிவோ நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்த நஞ்சினை மலமாக மாற்றி அதை நீக்கிவிடுகின்றது.

இந்த மனித வாழ்க்கையில் எத்தனையோ பேருடன் நாம் பழகுகின்றோம்… பார்க்கின்றோம். ஆனால் சந்தர்ப்பத்தால் அவர்கள் படும் வேதனைகளைப் பார்த்தாலும் அந்த வேதனையான உணர்வுகள் நம் நல்ல எண்ணங்களில் இணைந்திடாது ஆறாவது அறிவு கொண்டு அதைத் தடுக்க வேண்டும்.

1.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
2.அந்த அருள் உணர்வினை நம் நல்ல அறிவில் இணைத்து நல்ல அறிவு மங்கிடாது
3.எதனையுமே தெளிவாக்கிடும்… அந்த அறிந்திடும் தெளிந்திடும் அந்த அறிவை நாம் வளர்த்திடல் வேண்டும்.

ஆனால் வேதனை கொண்ட நிலைகள் கொண்டு விஷத்தின் தன்மையை இதிலே கலந்து விட்டால் இங்கே மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும் அதை உங்களால் நுகர முடியாது. நுகர்ந்தாலும் அதை வைத்து உங்கள் வேதனைகளை நிவர்த்தி செய்ய முடியாது.

1.அதாவது பிறிதொரு மனிதன் வேதனைப்பட்ட உணர்வு நம் நல்ல அறிவை மறைக்கும் போது
2.இன்னொரு சாதாரண மனிதன் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து அதை மாற்ற முடியாது.

மாற்ற வேண்டும் என்றால் “வேதனை என்ற நஞ்சினை நீக்கி… அதை ஒளியாக மாற்றிடும்…” அந்த மகரிஷிகளின் உணர்வை நீங்கள் ஏங்கிப் பெற்று உடலுக்குள் இணைக்க வேண்டும்.

மீண்டும் இதைத் தெளிவாக்குகின்றேன்…!

உங்கள் வாழ்க்கையில் நல்லது செய்வதாக எண்ணி ஒரு வேதனைப்படும் மனிதனை உற்றுப் பார்த்து நுகர்ந்து அவர்களுக்கு நீங்கள் நல்லது செய்கின்றீர்கள்… உதவி செய்கின்றீர்கள்…!

ஆனால் உங்களிடமிருக்கும் நல்லது செய்யும் எண்ணத்திற்குள் அவரின் வேதனைப்பட்ட அந்த விஷமான உணர்வு இணைந்து உங்கள் நல்ல அறிவை மறக்கச் செய்கின்றது… மறைத்து விடுகின்றது. இதுதான் சிறு திரை – “சித்திரை…” என்பது.

அந்தச் சிறு திரையை உடனே நீக்க வேண்டும். அதை நீக்க வேண்டும் என்பதற்குத்தான் ஞானிகளின் உணர்வைப் பதிவாக்குகின்றோம்.

உங்கள் நினைவாற்றலை அங்கே ஞானிகளின் பால் ஒன்றச் செய்து இங்கே நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும்போதே அந்தத் துருவ மகரிஷியின் உணர்வுகளை உங்களுக்குள் இணைக்கின்றோம்.

உங்கள் நினைவாற்றலை அந்த மகரிஷிகளுடன் இணைத்து விட்டால் அந்த வேதனையான உணர்வினை நுகர்வதைத் தவிர்த்து அருள் உணர்வுகளை வலுப் பெறச் செய்யும்.

அப்படி அந்த மகரிஷிகளின் உணர்வை வலுப்பெறச் செய்யும் நிலைக்குத்தான் உங்களுக்குத் தெரியாமலேயே இந்த உபதேசத்தின் வாயிலாக அதைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).

உங்கள் நல்ல அறிவைக் காக்க இது உதவும்…!

குட்டிச்சாத்தானை வைத்துச் செயல்படுபவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

குட்டிச்சாத்தானை வைத்துச் செயல்படுபவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

கிளி… எலி… அணில்… ஜோதிடம் இப்படிப் பல நிலைகளைச் செய்வது எந்த நிலை கொண்டு…?

இவை எல்லாமே கரு வித்தையின் செயல்தான். அந்தந்தப் பிராணிகளின் உடலில் கருவின் மையை ஏற்றிவிடுவார்கள். அவரின் பழக்கப்பட்ட பரிபாஷைகள் இப்பிராணிகளுக்குத் தெரிந்திடும்.

இவர்கள் சொல்லும் பெயர் நாமத்தைக் கேட்டு அந்தப் பிராணிகள் ஜோதிடம் செப்பிடும் நிலையாக வரும். அதாவது…
1.அந்தப் பிராணியின் உடலிலுள்ள குட்டிச்சாத்தான்தான்
2.அவன் சொல்லும் நாமகரணத்திற்குகந்த செயல் கொண்ட
3.எந்த நிலை பெற்ற குண நிலைக்குகந்த ஏடுகளை ஓதிட வேண்டுமோ அதனையே சரியாக எடுத்துத் தரும்
4.இவர்கள் மன நிலைக்குகந்த சொல்வாக்கே அதிலும் காணப்படும்.

அவ்வெண்ணமுடனே இவர்கள் செயல்பட்டால் அதன் தொடர்ச்சி நிலையில்தான் அவர்களின் வாழ்க்கை நிலையும் இருந்திடும். இவ் உலகினில் பல பாகங்களில் இச்சூனிய வேலை நடக்கின்றது.

பிறரைத் தன் வசியப்படுத்தவே இக்கரு வித்தை வேலையெல்லாம் செய்யப்படுகின்றன. ஆவியின் தொடர்புப்படுத்தி தன் உடலிலேயே பல ஆவிகள் துர் ஆவிகளை ஏற்றிக்கொண்டு அதனை ஏவி சூனியம் செய்வார்கள்.
1.சூனியத்திற்கு அடிமைப்பட்டவன்
2.அச்சூனியத்தினாலேதான் அதனுடைய ஆத்மாவும் பிரியும்.

பிற இடத்தில் ஜெபம் செய்து பல பொருட்களை வைத்துவிட்டு இக்குட்டிச்சாத்தானின் தொடர்புடைய நாமத்தை இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து ஜெபித்தால்…
1.அவ்வாவியான குட்டிச்சாத்தானே அப்பொருளை இவர்கள் “வா…!” என்றவுடன்
2.இவர்களின் கையில் அப்பொருள் கிடைக்கும் நிலையில் செய்து தரும்.
3.இவர்கள் வைத்த பொருள்தான் அங்கிருந்து வருமே ஒழிய
4.ஆகாயத்தில் இருந்து ஆண்டவனால் செய்விக்கப் பெற்ற உருவச் சிலையோ விபூதியோ புஷ்பமோ
5.எவையுமே இவர்களிடத்திற்கு மாறுபட்டு வராது.

இந்த நிலையிலுள்ள எந்தெந்தச் சாமியார்கள் ஆகட்டும்… அல்லது மந்திரவாதிக ஆகட்டும்… அவர்களால் மக்களை ஏமாற்றிடும் செயலுக்குத் தன் புகழ் உயர.. தன் நாமத்தினால் பொருளீட்டி… இச்செயலையெல்லாம் செய்வித்து
1.மக்களை மட்டும் அவர்கள் ஏமாற்றவில்லை
2.தன் ஆத்மாவையே… தானே ஏமாற்றி வாழ்கின்றார்கள்.

சொந்தமில்லா இவ்வுடலின் வாழ்க்கை எத்தனை நாட்களுக்குச் சொந்தமப்பா…?

“இருக்கும் ஒரே சொந்தம்” நம் ஆத்ம சக்தியை இயற்கை என்னும் சொந்தமுடன் சொந்தமாக்கி நம் ஆத்மாண்டவனை நல்வழியில் செயலாக்குவதை விட்டு சாமியார்கள் என்ற நாமத்தில் ஏன் ஆண்டவனின் நாமத்தையே அடிமைப்படுத்திடல் வேண்டும்…?

இன்று மக்களுக்கு ஏற்பட்டுள்ள மூட நம்பிக்கையின் வித்தே இத்தகைய சூனியக்காரர்களினால் வந்த நிலைதான். நம் பூமியில் நாம் வாழும் இக்கண்டத்தில் தன்னை றியாமலே நம்மில் பலர் இதற்கு அடிமை கொண்டு வாழ்கின்றனர்.

நமக்கும் மேல் சீனாவிலும் ஜப்பானிலும் இன்னும் சில ஆப்பிரிக்கக் கண்டங்களிலும் அரேபிய நாடுகளிலும் இந்த நிலை அதிகம். ஒவ்வோர் இடத்திலும் வாழும் மனிதர்களின் எண்ண நிலைக்கொப்ப அங்கு வாழும் கருவித்தை வேலைகளும் நடக்கின்றன.

நம் பூமியில் இங்கே இந்த இந்திய தேசத்தில்தான் பல ரிஷிகளும் சப்தரிஷிகளும் உரு பெற்று… “உயர்ந்த நிலை எய்தியவர்கள் அதிகம் வாழ்ந்த பூமி இது…”

அவர்களின் எண்ண ஓட்டமும் (சப்த அலைகள்) அவர்கள் விட்ட சுவாசத்தின் சப்த அலையையும் தாங்கி வாழும் நிலைதான் இப்பூமியின் நிலை.

கரு வித்தையின் குட்டிச்சாத்தான் ஏவலில் உள்ளவர்கள் இதை உணர்ந்து நல் ஆத்மாவாய் இப்பொருள் என்னும் பேய்க்கு அடிமைப்படாமல் வாழ்ந்திட வேண்டும்.

அதற்குத் தான் இதை எல்லாம் உணர்த்துகின்றேன்…!

உயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலைகளில் தான் நாம் இன்று இருக்கின்றோம்

உயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலைகளில் தான் நாம் இன்று இருக்கின்றோம்

 

அருள் மகரிஷிகளின் அருளால் நாம் நம்முடைய மூதாதையர்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து அவர்களைப் பிறவியில்லா நிலை அடையச் செய்வோம்.

அவர்கள் அந்த ஒளி நிலை பெற்றால் அதனுடைய துணை கொண்டு நாம் இந்தப் புவியில் வரும் தீமைகளை அகற்றிவிட்டு அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திட முடியும்.

உடலுக்குள் வரும் தீமைகளில் இருந்து விடுபட்டு நம் உணர்வின் தன்மை என்றும் நாம் மகிழ்ந்து வாழ முடியும்.

1.இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல… உயிரே நமக்குச் சொந்தம்.
2.உயிரின் தன்மை சொந்தமாக்க வேண்டுமென்றாலும்
3.இப்பொழுது உயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலைகளில் தான் இருக்கின்றோம்.

நாம் எதை எண்ணுகின்றோமோ உயிரிலே பட்டவுடன் உயிர் இந்த உடலை இயக்குகின்றது. உயிர் தான் இயக்குகிறது என்று யாரும் எண்ணவே இல்லை. “நான்…” என்று இந்த உடலைத் தான் எண்ணுகின்றோம்.

ஆனால் அவனால் உருவாக்கப்பட்டதுதான் இந்த உடல் என்ற நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும். உயிரை வேண்டி நாம் எதை எண்ணி எடுக்கின்றோமோ அதையே உருவாக்குகின்றது.

1.ஒருவருக்குக் நாம் கடுமையான தீங்கு செய்ய வேண்டுமென்று எண்ணுகின்றோம்
2.அதை உயிர் உருவாக்குகின்றது… அந்த உணர்வை உடலுக்குள் பரப்புகின்றது.
3.அதனின் செயலாகவே அந்தத் தீமை செய்யும்படி நம்மைச் செய்கின்றது.

அதே சமயத்தில் ஒருவருக்கு நன்மை செய்ய வேண்டுமென்று எண்ணுகின்றோம். அந்த நல் உணர்வின் தன்மையை உயிர் அதை இயக்கிக் காட்டுகின்றது.

ஆனாலும்…
1.நாம் தீமையின் உணர்வைப் பெற வேண்டுமென்று எண்ணினால்
2.அந்தத் தீமை செய்யும் உணர்வின் அணுக்கள் நமக்குள் விளைந்து
3.இந்த உடல் அழுகுகின்றது… வேதனைப்படுகின்றது….!

எவரை வேதனைப்படச் செய்ய வேண்டுமென்று எண்ணுகின்றோமோ அந்த வேதனைப்படும் உணர்வுகள் அணுக்கள் நமக்குள் விளைந்து அதே வேதனையை உருவாக்குகின்றது.

கீதையிலே சொன்னபடி “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…!” என்று அதனின் வளர்ச்சியாகத் தான் நாம் அடைகின்றோம்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் மீள வேண்டும்.

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று
2.தீமையை அகற்றிய அருள் ஞானிகளின் உணர்வை நீங்கள் நுகர்ந்தால்
3.தீமையை அகற்றும் உணர்வுகள் நமக்குள் பெருகி
4.தீமையற்ற உணர்வாக நமக்குள் ஆகி… “நாம் அதுவாகின்றோம்…”

ஆகவே முதலில் மூதாதையருடைய உயிரான்மாக்களை விண் செலுத்துங்கள். ஒவ்வொரு நொடியிலும் இதைப் போல செய்யுங்கள்… மறவாதீர்கள்…!

மை… தாயத்துக்கள்…! உருவாக்கும் மந்திரவாதிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மை… தாயத்துக்கள்…! உருவாக்கும் மந்திரவாதிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

மலைப் பிரதேசங்களில் வாழ்ந்திடும் மந்திரவாதிகள் பல மண்டை ஓடுகளை வைத்துப் பூஜிப்பர். அதுவும் அல்லாமல் அம்மண்டை ஓட்டின் சொந்தம் கொண்ட உடலின் நிலையிலிருந்து மை எடுத்து அதனையும் இம்மண்டை ஓட்டையும் வைத்துப் பூஜிப்பார்கள்.

மையை யார் யாருக்கெல்லாம் தாயத்துகளாய்த் தருகின்றார்களோ அவர்களின் நிலையும் மந்திரவாதியின் நிலைக்கும் தொடர்பு பட்டு சில நிலைகளை அறிந்திடத்தான் இவர்கள் பூஜையில் அம்மண்டை ஓட்டை வைப்பது.

இவர்கள் மை தயாரிப்பது எந்நிலையில்…?

மயானத்தில் அர்த்த ஜாமத்தில் சில உடல்களை கூடிய வரை கருச் சிசுக்களைத்தான் (இறந்த சிசுக்களை) இவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். வளர்ந்து ஆசைப்பட்டு குடும்பப் பற்றுடன் நீத்தாரின் உடல்கள் இவர்கள் செயலுக்கு செயல்பட்டு வராது.

அவர்களின் ஆத்ம எண்ணமே தன் குடும்ப நிலையில் சுற்றிக் கொண்டிருக்கும். அதனால்தான் இக்கரு வித்தை மந்திரவாதிகள் எல்லாரும் தாயின் கர்ப்பத்தில் தோன்றும் முதல் சிசுவை அது இறந்துவிட்டால் (தலைச்சன்) அதனுடைய உடலை புதைத்துச் சென்ற பிறகு அதைத் தோண்டியெடுத்து இவர்களின் செயலுக்காக அவ்வுடலை ஈடுபடுத்துகின்றனர்.

நம் மூதாதையர் காலத்தில் முதல் தலைச்சன் சிசு காலமானால் அதன் உடலை சிறிது பின்னப்படுத்தித்தான் அடக்கம் செய்வார்கள். பின்னப்படுத்திய அச்சிறு சதையை இவர்கள் தாயத்தாக்கி பூஜிப்பார்கள். அந்நிலையில் அச்சிசுவின் ஆவி இங்கு செயல்கொள்ளும் ஏவலின் நிலைக்கு ஒத்து வராது.

இப்பின்னப்ப்டா இறந்த சிசுவை எடுத்துச் சென்று பெரிய மண் பானையில் அச்சிசுவின் உடலை இட்டு அப்பானைக்கும் கீழ் இரண்டொரு பானைகளை வைத்து பெரும் நெருப்பிட்டு எரியவிட்டு கீழ் எரியும் நிலையிலிருந்து மேல் பானைக்கு அவ்வுஷ்ணம் பட்டு அச்சிசுவின் உடலில் இருந்து கசியும் அதன் அமில நீர் சக்தி எல்லாம் எரிய எரிய வடிந்து இக்கீழ்ப் பானையில் மெழுகு போன்ற மை பதத்தில் ஒட்டிக் கொள்ளும்.

சிசுவை இட்டுள்ள பானைகளில் துவாரம் வைத்திருப்பார்கள். இச்சிசுவின் மைக்கு வேண்டிய அமில நீர் சக்தியெல்லாம் ஈர்த்த பிறகு அச்சிசுவின் சக்கை உடலை அதே நெருப்பிலிட்டு அதன் அவயங்களையும் சேகரித்து அதன் அவயவத்தை வெந்த நிலையில் வைத்து மண்டை ஓடுகளுடன் அங்கங்களையும் சேர்த்துப் பூஜிப்பார்கள்.

இவ்வமில நீரில் அவ்வுடலின் வெந்த சாம்பலையும் சேர்த்து மைபோல் மசிய வைத்து பூஜித்து பில்லி சூனியம் ஏவல் மையிடுதல் போன்ற நிலைக்கெல்லாம் இச்சிசுவின் நிலையை ஏவுவார்கள்.

கருப்பு நிறம் கொண்ட இந்த மையையே தன் நெற்றியில் இட்டுக் கொண்டும் தாயத்துக்கள் செய்து மையை அதனில் வைத்துத் தன் உடலிலும் அணிந்து கொள்வார்கள்.

இவர்களின் பொருளாசைக்குகந்த நிலைப்படுத்திட இக்குட்டிச்சாத்தானை ஏவுவார்கள். ஒவ்வொரு மந்திரவாதியும் ஒரு சிசுவிலிருந்து மட்டும் தன் ஏவலைச் செயல்படுத்துவதில்லை. பல சிசுக்களையும் இந்நிலையில் செயல்படுத்துகின்றார்கள்.

இவர்கள் ஏவிய நிலைக்கெல்லாம் அக்குட்டிச்சாத்தான்கள் ஆவி உருவில் சென்று பல உண்மைகளை அறிந்து வரும்.

1.“மாரியம்மாள் காளியம்மாள்…” என்று மனிதர்கள் மத்தியில் இச்சக்தியின் நாமத்தைச் செப்பியே பேய் ஓட்டுவதைப் போலவும்
2.“மாரியாத்தா ஆடு கேட்கிறாள்… கோழி முட்டை கேட்கின்றாள்…!” என்றெல்லாம் சொல்லி
3.அவர்கள் வைத்திருக்கும் குட்டிச்சாத்தான்களின் ஆசைக்கு உகந்த உணவுகளைப் படைத்து
4.இவர்கள் தங்களுக்குகந்த செயலை முடித்துக் கொள்கின்றனர்.

எந்த மாரியம்மனும் காளியம்மனும் உயிரைப் பலி கேட்பதில்லை…! மனிதன் தன் ஆசைக்குத் தான் இது போன்ற செயலைச் செய்கின்றான்.