உங்கள் எண்ணங்கள் தன்னிச்சையாக விண்ணை எட்டும்

உங்கள் எண்ணங்கள் தன்னிச்சையாக விண்ணை எட்டும்

 

நீங்கள் எத்தகைய துயர் பட்டுக் கொண்டிருந்தாலும்… அல்லது சாபவினைகளோ பாவ வினைகளோ தீய வினைகளோ உங்களுக்குள் சேர்ந்திருந்தாலும்… அதை எல்லாம் நீக்க
1.யாம் உபதேச வாயிலாக… அருள் வாக்கின் தன்மையாக
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்தி உள்ளேன்.

ஆனால் வாக்கினைக் கொடுத்த பின்பும் அதை நீங்கள் விரயம் செய்தால் அது உங்களுடைய அதிர்ஷ்டம் தான்.

நீங்கள் எல்லோரும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று சதா உங்கள் உயிரை ஈசனாகவும் ஆண்டவனாகவும் குருவாகவும் மதித்து நான் தியானிக்கின்றேன் (ஞானகுரு).

நீங்களும் அதே போன்று மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் தொடர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

காலையில் எழுந்தபின் இவ்வாறு செய்யுங்கள். உங்கள் நோயை மறந்து விடுங்கள்… நோயின் தன்மை அது செயலிழந்து விடும்.

1.எந்த அளவுக்கு யாம் கொடுத்த வாக்கினை நீங்கள் கூட்டிக்கொண்டு வருகின்றீர்களோ
2.அது அனைத்தும் உங்களுக்குள் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறும்.

ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அதிலே ஆயிரம் குடம் நல்ல பாலை விடும்பொழுது அந்த நஞ்சின் தன்மை வலு இழப்பது போன்று நீங்கள் “ஆயிரம் தரம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வினைக் கூட்டினால்” உடலில் உள்ள நோய்கள் தானாகவே போய்விடும் அது செயலிழந்து விடும்.

1.காலையில் படுக்கையில் கண் விழித்த பின் இதைச் செய்யுங்கள்
2.அதற்குப் பின் இடைவெளியில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்யுங்கள்
3.வெளியிலே வாகனங்களில் சென்றால் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணுங்கள்
4.இரவிலே படுக்கையிலே படுக்கும் போதும் அதே மாதிரி எண்ணுங்கள்.

உயர்வான உணர்வுகள் உங்களுக்குள் பெருகத் தொடங்கும்… பின் நினைவின் எண்ணங்கள் உங்களுக்குள் சக்தி வாய்ந்ததாக மாறும்.

எங்கள் குடும்பம் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் எங்களை அறியாது சேர்ந்து தீய வினைகள் சாப வினைகள் பாவ வினைகள் நீங்க வேண்டும்.

மகரிஷிகள் அருள் சக்தி எங்கள் குடும்பத்தில் படர்ந்து எங்கள் தொழில்களிலும் படர்ந்து குடும்பத்தில் உள்ளோர் மன பலம் மன நலம் உடல் நலம் பெற்று மகிழ்ந்து வாழ வேண்டும்.

எங்களிடம் தொழில் செய்வோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று… மன பலம் மன நலம் உடல் நலம் பெற வேண்டும். அவர்கள் தொழில்கள் நலம் பெற வேண்டும் சீராக வேண்டும். அவர்கள் குடும்பம் நலம் பெற வேண்டும் என்று இதைப் போல் எண்ணுங்கள்.

இப்படி எண்ணும் போது இங்கள் தொழில் சிறப்பாக நடக்கும். உங்கள் மனமும் உயர்ந்த நிலையில் இருக்கும்.
1.உங்கள் எண்ணங்கள் விண்ணை நோக்கிப் பற்றும்.
2.இதற்கு முன் உங்களை அறியாது சேர்ந்த தீய வினைகள் நசியும்.
3.ஞானிகள் உணர்வுகள் உங்களுக்குள் விளையும்.
4.இந்த உணர்வின் தன்மை எட்டா தூரத்தில் இருக்கும் அருள் ஞானிகள் உணர்வுகளை எட்டும்படி செய்யும்…
5.உங்களுக்குள்ளேயே அந்த இயக்கங்கள் வருவதைப் பார்க்கலாம்.

பின் எந்த சாப வினைகளும் உங்களை அணுகாது. அதே சமயத்தில் உங்கள் சொல்லால் மூச்சால் பேச்சால் பார்வையால் பிறருடைய சாப வினைகளைப் போக்கும் சக்தியும் பெறுவீர்கள்.

இதை நீங்கள் செய்து பாருங்கள்.

ஒவ்வொரு குடும்பத்திலும் இதே போன்று நோய்களைப் பற்றி எண்ணாது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணி அதை வளர்த்துக் கொள்ளுங்கள்.

சிலவற்றை மறைத்தே உரைத்திட வேண்டியதுள்ளது

சிலவற்றை மறைத்தே உரைத்திட வேண்டியதுள்ளது

 

சரீரத்தில் தாக்கப்படும் நோயை நீக்க மருத்துவ அறிவின் எண்ணமானது நோயின் குணத் தன்மைகளை நாடி அளவறிந்து “மருந்து கொடுப்பது…” என்பது அணுபோக முறைப்படி செயல்படுத்த வேண்டும்.

சரீரத்தில் செயல்படும் தன்மைகளை நாடிகளின் துடிப்பலையால் காலம் அறிந்து அந்த நோயின் தன்மைகளை அறிந்து கொண்டு நோய் கடிந்திடும் செயலின் மூலம் மருத்துவப் பொருள்களைச் “சூரணம்…” செய்து கொடுத்து நற்பயன் விளைவித்தனர் அக்காலங்களில்.

அப்படிக் கொடுக்கப்பட்ட வைத்திய முறையில் மனப்பக்குவம் பெற்றிடும் வழி முறைகளுக்கு
1.“நாவின் அதி சுவை குணங்களை…” நீக்கிடும் எண்ணத்திற்கே
2.மருத்துவத்தின் தன்மைக்கொப்ப விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டன.

ஆனால் இன்றைய விஞ்ஞான மருத்துவத்தில் நோயின் குணங்களைச் சரீரத்தில் கண்டவுடன் அந்த நோயை நீக்கிடும் செயலுக்கு அதி தீவிர செயல் புரிந்திடும் மருந்துகளைச் சரீரத்தினுள் செலுத்தி நோயைக் கண்டவுடனேயே மருத்துவத்தால் குணமாக்கினாலும்… “பல்கிப் பெருகிடும் புதிய புதிய நோய்கள் ஏற்படக் காரணம் என்ன…?”

1.மாறு கொண்ட எண்ணங்களால் நற்குணங்களையே சூரணம் செய்து
2.தீமையான குணங்களுக்கு அவைகளையே உரமாக்கிக் கொள்ளும் எண்ணம் செயல்படுவதால்
3.ஜீவாத்மா பிறவி என்ற நோயில் அகப்பட்டு வதைப்படுகிறது.
4.இத்தகைய செயலுக்கு மூல காரணம் யார்…?

ஆனால் ஆத்ம பலத்தில் பரிபூரணம் பெற்றிட வேண்டும் என்றால் உலக வாழ்க்கைச் சூழலில் நம்மை மோதிடும் எதிர் நிலைகளுக்கு நம் எண்ணத்தைச் செலுத்திடலாகாது… அதற்கு அடிமையாகிவிடக் கூடாது.

1.இந்த உண்மையின் முழுமையைக் கொண்டு ஆக்கம் பெற்றிடவும்
2.எண்ணத்தில் பீடித்துள்ள பிணிகளை நீக்கிச் செயல் கொள்ளவும்
3.நற்சுவாசப் பரிசுத்தம் கொள்ள வேண்டும் என்றே உரைக்கின்றேன்.
4.ஞானச் செல்வம் பெற்றிட வேண்டும் என்றே கூறுகின்றேன்.

பேரருள் சக்தியாகத் தன்னுள் “மெய் ஞான விழிப்பு…” கண்டால் எண்ணத்தின் பரிசுத்தத்தால் ஈஸ்வரரின் ஆசி கொண்டு மகரிஷிகளின் அருளாசி பெற்றிடலாம்.

சிலவற்றை மறைத்தே உரைத்திட வேண்டியதுள்ளது. பேரருள் உலகோதயச் செல்வத்தை அளித்திடும் நிலையில் இன்று இல்லை.

இன்றைய மனிதனின் எண்ணத்தின் மாறுபாடே காரணம் என்றால் சூட்சமங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
1.எண்ணத் தூய்மை கொண்ட இந்தத் தியானத்தின் வழியிலேயே பேரருள் ஆசி பெற்று
2.வாழ்க்கை நிலையும் கூட உயர்வு பெற முடியும்.

நல்லது செய்பவர்களுக்கு (அவர்களை) அறியாமல் வரும் துன்பங்கள்

நல்லது செய்பவர்களுக்கு (அவர்களை) அறியாமல் வரும் துன்பங்கள்

 

உதாரணமாக இரண்டு பேர் குடும்பத்தில் சண்டை இடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒருவனை இன்னொருவன் ஏசுவதைக் கண்டு (சமரசத்திற்காக) சரி… விட்டு விடு போகட்டும் என்று நாம் சொல்வோம்.

ஆனால் பார்… அவன் எப்படிப் பேசுகின்றான் பார்….! என்பான்.

இவன் பேசிவிடுவான். ஆனால் அது அவனுக்குள் பட்ட உடனே உணர்ச்சிகள் பொங்கி
1.இவன் ஒரு சொல்லைச் சொன்னால் அவன் பல சொல்களைச் சொல்வான்.
2.அந்த உணர்வின் வேகத் துடிப்பு வரும் போது
3.தர்மத்தையோ நியாயத்தையோ மற்ற நல்ல வழிகளைச் சொன்னாலும் இருவருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஒரு மிளகாய்ச் செடி தனக்குள் கார உணர்வை எடுத்துத்தான் மிளகாயை உருவாக்கும்… மிளகாயை வித்துக்களாக. எதிலிருந்து மிளகாயாக விளைந்ததோ அந்த வித்தின் தன்மை தாய்ச் செடியின் சத்தைக் கவர்ந்து தன் இனத்தைத் தான் அது விருத்தி செய்யும்.

இதைப் போல்
1.ஒருவருக்கொருவர் ஏசிப் பேசிய உணர்வுகள் வித்தாகும் பொழுது
2.எவ்வளவு சாபமிட்டுப் பேசினானோ… அடுத்தவனும் அதே உணர்வைச் சுவாசித்துச் சாபமிட்டுக் கொண்டே இருப்பான்.
3.இவர்கள் சாபமிடுவதைக் கேட்டுணர்ந்தவரும் இதைப் போன்று சாபத்தை விட்டுக் கொண்டே இருப்பார்கள்.
4.இந்த அலைகள் படர்ந்து படர்ந்து… நல்ல குணங்கள் இயங்காது தடைபடுத்தி விடும்.

சாப அலைகள் இவருக்குள் விளைந்து எதையெல்லாம் இவர்கள் சொன்னார்களோ அது அனைத்தும் அங்கே படர்ந்து… இருவருடைய குடும்பங்களிலும் வீரியமாகப் பேசுவார்கள்.

இந்த வீரிய உணர்வுகள் குடும்பத்தில் பாசத்தையும் பற்றையும் அறுத்துவிடும். பாசத்துடன் இருப்போரும் ஒருவருக்கொருவர் வெறுப்பான நிலைகள் ஆகிவிடும். ஆனால் ஏசியவன் தப்பி விடுவான்.

குடும்பத்தில் பாசத்துடன் உள்ளோர் நிலைகளில் இது படப்பட்டு இந்த உணர்வு துரிதமாக விளைந்து நோயாக மாற்றி அவனை முதலிலே வீழ்த்தி விடும்.

ஆக அண்ணன் இப்படிப் பேசுகின்றானே…! என்று தம்பியோ… தம்பி தான் சொன்னபடி கேட்கவில்லை என்று அண்ணன் “இப்படிச் செய்கின்றானே…” என்று தம்பியைக் கோபித்தாலும்… ஒருவருக்கொருவர் இடும் சாப அலைகளை உற்று நோக்கினால் அவர்களுக்குள் தீயவினைகள் வளர்ந்து நோயாக மாறி… அவர் குடும்பத்திலே வெறுப்பின் தன்மை வந்துவிடும்.

அவர்களுடைய தாய் தந்தையரோ சரி விட்டு விடுடா…! என்று சொன்னாலும் “நீ பேசாமல் இரு” என்று வேகமான சொல் பாய்ந்து அங்கேயும் வெறுப்பைத் தூண்டும்… சாப அலைகள் அங்கேயும் படர்ந்து விடும்.

அதே சமயம் குடும்பத்தில் பெண்கள் கர்ப்பமாக இருந்தார்கள் என்றால் இதே சாப அலைகள் அந்தக் கருவிலும் பதிந்து… பிறக்கும் குழந்தையையும் சாப அலைகள் தொடர்ந்து… இயக்கத் தொடங்கி விடுகிறது.

இது அவர்களோடு போனாலும் பரவாயில்லை…!
1.மற்றவர்கள் வேடிக்கையாகப் பார்த்தாலும் அவர்களுக்குள்ளும் பாய்ந்து அவர் குடும்பத்திலே கர்ப்பமுற்றிருந்தால் இது பதிவாகி விடும்.
2.உன் கால் முடமாகும் உன் கண்கள் குருடாகிவிடும் என்று ஏசிப் பேசிச் சாபமிட்டிருந்தால்
3.கர்ப்பமற்ற தாய் அதைக் கேட்டிருந்தால் (வேடிக்கை பார்த்திருந்தாலும்) இந்த உணர்வுகள் கருவிலே இணைந்துவிடும்.
4.பிறக்கும் குழந்தையின் கால் மூடமாகிவிடும்… கண்கள் குருடாகிவிடும்
5.எதைச் சொல்லிச் சாபமிட்டார்களோ அதே உணவின் தன்மை வளர்ச்சி அடைந்து அந்தந்த உறுப்புகளைச் செயலற்றதாக ஆக்கிவிடும்.

பரிணாம வளர்ச்சியில் உயர்ந்த நிலையாக மனிதன் வளர்ச்சி பெற்று வந்திருந்தாலும் இந்த உணர்வின் இயக்கங்கள் இப்படி இயங்கத் தொடங்கி விடுகின்றது.

அது நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களை இயக்க விடாதபடி தீய செயல்களாகி… தீய உணர்வுகள் உடலில் நோயாக மாறி
1.நம் சொல் பிறருக்கு தீமையை விளைவிப்பதாகவும்
2.சாப வினைகள் நம் ஆன்மாவாக ஆகும் பொழுது தொழில்களிலும் இந்த உணர்வு படரப்பட்டு
3.நண்பர்களையும் எதிரி ஆக்கி நம் தொழிலையும் கெடுத்துவிடும்.

ஒரு விஷச் செடியைக் கண்டால் நாம் எப்படி விலகிச் செல்கின்றோமோ அது போல் ஒருவன் சாபம் விடுவதாக இருப்பினும்… நாம் பலருக்கு நன்மை செய்பவராக இருப்பினும்… நாம் தவறு செய்யாமலேயே சாப நிலைகளே முன் நின்று “நமக்கு எதிரிகளை உருவாக்கிக் கொண்டிருக்கும்…”

விஷச் செடியை நுகர்ந்த பின் அதைக் கண்டு வெறுத்து ஓடுவது போன்று சாப வினைகள் முன் நிற்கும் பொழுது… நாம் எடுக்கும் வெறுப்பான உணர்வுகள் பிறர் நம்மைப் பார்க்கும் பொழுது அவர்களுக்கும் இந்த நிலை ஆகிவிடுகிறது.

ஆகையினால் தான் ஒவ்வொரு நிமிடத்திலும் உங்களை யாம் அடிக்கடி ஆத்ம சுத்தி செய்யச் சொல்வது. எத்தகைய நிலையைச் சந்தித்தாலும்
1.அடுத்த கணம் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து அதை நமக்குள் கலந்து வலுவாக்கிக் கொள்ள வேண்டும்
2.நாம் நுகர்ந்த பிறிதொரு உணர்வு நமக்குள் இயக்கக் கூடாது… தீய வினையாக மாற விடக் கூடாது.

ஞானத்தில் உயர்வடைய… “தான் எடுக்கும் எண்ண ஓட்ட சுவாச கதியை உயர்வாக்க வேண்டும்…”

ஞானத்தில் உயர்வடைய… “தான் எடுக்கும் எண்ண ஓட்ட சுவாச கதியை உயர்வாக்க வேண்டும்…”

 

மனித குலம் உண்மையை உணர்ந்து வாழவும்… அந்த வாழ்வில் உயர் ஞானச் செயலின் சிறந்த பேறு பெறும் வழியாகவும்… மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய குணங்களின் விசேஷத் தன்மைகளைச் சிலை வடிவில் சித்தர்கள் அன்று உணர்த்தினார்கள்.

அந்தச் சித்தர்கள் மனித குல உயர்விற்கு வழி காட்டிய தெய்வச் சிலைகளின் தத்துவத்தையே கேடுறச் செய்து… ஆர்ப்பரித்துப் பகட்டைக் காட்டிடும் நிலைக்கு இன்று வந்து விட்டார்கள்.

சித்தன் படைத்த செயலையே மனிதன் பகட்டிற்காகவும் கௌரவ வாழ்விற்கும் பயன்படுத்திச் சீர்குலைத்து விட்டனர். அப்படிச் சீர்குலைக்கப்பட்டதால்
1.வாழையடி வாழையாக வழி வரும் மெய் ஞான உயர் சக்தி பெற விழைந்த ஆத்ம ஞானிகளால்
2.உட்பொருள் வெளிப்படுத்தும் எண்ணமின்றி மறைக்கப்பட்டு விட்டது.

விநாயகர் உருவத்தைக் காட்டி ஆற்றங்கரையில் வைத்த நிலை எல்லாம் இன்று கேலிக்குரிய நகைச்சுவைப்படுத்தி ரசித்து மகிழும் நிலைக்குச் சென்று விட்டது.

இன்றைய மனித மனங்கள் உட்பொருளை நாடி அறிந்து கொள்ளத் தயங்குதுவும்… பயம் என்ற போர்வை கொண்டு பக்தி என்ற குளிர் போக்கத் தானும் நடுநடுங்கி… அறிவொழிந்து…! அதிலிருந்து விடுபட முடியாத நிலை ஆகிவிட்டது.
1.ஜோதி என்ற தன் உயிர்க்கனலின் நெருப்பே
2.பக்தி என்ற குளிரை விரட்டும்…! என்று அறியாமல் போனதென்ன…?
3.அந்தக் குளிரை நீக்க வந்தவனும் உட்பொருளை அறிந்ததில்லை…!

ஆவியான நீர் அமிலங்கள் எல்லாம் தன் செயலில் தான் நெருங்கி… ஒன்றோடொன்று கண பரிமாணம் கொண்டு… பிறிதொன்றின் சேர்க்கையில் நீர்த் திவலையாகும் நிலையில் “அதுவே சிவமாகின்றது” (திடமாகி உருவமாகின்றது).

அது பூமிக்குள் வரும் காரிய நிலை கொண்டு சுழலும் தன்மையிலே சக்தியாகவும்… பூமியில் படிந்து பின் எழும் செயலின் தொடர்பில் மீண்டும் நீராகவும்… அதுவே எழும் தொடரில் ஆவி நீர் அமிலமாகவும் செயலுறும் தொடர்புகளை அறிந்து கொள்தலே “பிரம்மம்…!”

அத்தகைய பேருண்மைகளை அறிந்து கொண்டவர் தான் “அகத்தியர்…!”

அவர் உயிரணுவின் செயல் சுழலும் சக்தியாகப் பரிணமித்துப் பூமிக்கு வந்த காரியத்தில் வினையான தன்மைக்கு நாயகனாக இந்தச் சரீரம் பெற்றார்.

வினையின் நாயகனே விநாயகர் என்று தன் உயிர் ஆன்ம சக்தியையே உயர்த்திக் கொள்ளும் வழியாக
1.எல்லா உயிர்த் தொகைகளுக்கும் உயிரணுக்கள் பொதுவாகவும்
2.அது பெறும் வீரியத்தில் வித்தியாசமும்… அதுவே பின் எண்ணத் தொடரில் சரீரமாகவும்
3.தன் அமில குண நிலைக்கொப்பத் தனக்குகந்த… தான் பெற்ற தன்மை கொண்டு… ஞான வழியில் “ஒவ்வொரு சரீரமும் பெறுகிறது…” என்றார் அகத்தியர்.

அத்தகைய உயிரணுக்களுக்குள் வீரிய சக்தி கொண்டது “யானை…” என்றும் அது பெற்ற சக்திக்கு அதன் “சுவாசமே…” காரணம் என்று தெளிவாக உணர்த்தினார்.

மனித குலம் ஞானத்தில் உயர்வடைய வேண்டும் என்றால் “தான் எடுக்கும் எண்ண ஓட்ட சுவாச கதியை உயர்வாக்க வேண்டும்…” என்பதற்காக விநாயகரை உருவகப்படுத்திக் காட்டினார் அந்த அகத்தியர்.

நீர்ச் சக்தியைத் தன் எண்ண ஓட்ட கதியுடன் ஒன்றுபடுத்திக் கண்ட அந்த அகத்திய மாமகரிஷி “சுவாச வழியில் வீரியம் பெறும் நிலையைப் புகட்டினார்…!”
1.வினைக்கு நாயகனே விநாயகன் என்று
2.தன் உயிர் குருவைக் கண்டு கொண்ட பின்
3.அவர் சென்ற வழியின் உயர்வே “கணபதி…”

கணங்களை ஆளக்கூடிய தலைவன் “கணநாதன் என்ற உயிர்ச் சக்தியானது” தன்னுள் உள்ள கணம் என்ற கூட்டமாகிய அனைத்து உயிரணுக்களுக்கும் நாயகனாக வினையின் நாயகனாகச் செயல்படுகிறது.

1.கணங்களுக்கெல்லாம் (உயிரணுக்களுக்கெல்லாம்) அதிபதியாக ஒரு வழிகாட்டியாக
2.உயிர் ஆத்ம சக்தி… தான் சக்தி பெறும் மார்க்கமாகச் சக்தி பெற்று
3.தான் பெறும் சக்தியையே சரீர உயிரணுக்களுக்கும் ஊட்டிடும் நிலையே கணங்களின் பதியான கணபதி ஆவான் என்று
4.உயிர் பெறும் உயரிய தன்மைக்குச் சித்தனால் காட்டப்பட்டதே விநாயகர் என்பதை அறிந்துணர்தல் வேண்டும்.

காசு வாங்காமல் யாம் பயிற்சி கொடுத்தால் அதைச் சாதாரணமாக எண்ணிவிடுகின்றார்கள்

காசு வாங்காமல் யாம் பயிற்சி கொடுத்தால் அதைச் சாதாரணமாக எண்ணிவிடுகின்றார்கள்

 

உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலம் போக வேண்டும் என்று தனிப்பட்ட நிலையிலிருந்து சொல்லாதீர்கள். குடும்பத்தில் உள்ள பத்து பேர் சேர்ந்து இணைந்து அதைச் செயல்படுத்துங்கள். காரணம்…
1.சிலர் துர்மரணம் அடைந்திருக்கலாம் அல்லது மிகவும் கடினமான நோய்வாய்ப்பட்டு உடலை விட்டு வெளியே சென்றிருப்பார்கள்.
2.அவருடைய உணர்வின் தன்மை நம்முடைய உடல்களில் உண்டு.
3.அவர் மேல் உள்ள பாசத்தால் சப்தரிஷி மண்டலம் செல்ல வேண்டும் என்று எண்ணினால்
4.பாலிலே நஞ்சினை விட்டு அதிலே பாதாமைப் போட்டாலும் அது செயலற்றதாக மாறுவது போல்
5.அந்த ஆன்மாக்கள் நம் உடலுக்குள் வந்துவிடும்….!

அதைப் போன்று இல்லாதபடி குடும்பத்தில் கூட்டாக அமர்ந்து சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அனைவரும் ஒருங்கிணைந்த நிலையில் எண்ணி “சப்தரிஷி மண்டல உணர்வுகளை வலுவாக்கிக் கொள்ள வேண்டும்…”

அதற்குப் பின் எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் ஒருங்கிணைந்து சொல்லுங்கள்.

அப்படிச் செய்ய முடியவில்லை என்றால் தியானம் செய்யக்கூடியவர்கள் ஒரு இருபது பேரை அழைத்துக் கூட்டுத் தியானம் இருந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை பிறவா நிலை பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு செய்யப்படும் பொழுது அவர்கள் விண் சென்று விடுகிறார்கள். உடல் பெறும் உணர்வுகள் சப்தரிஷி மண்டல ஒளிக் கடலிலே (கங்கை) பட்ட பின் அது கருகி விடுகின்றது. உயிருடன் ஒன்றிய அறிவாக ஒளியாக நிலைத்து விடுகின்றது.

குருநாதர் காட்டிய வழியில் இவ்வாறு தான் செயல்படுத்த வேண்டும்.

அவர்களை விண் செலுத்திய பின் உங்கள் வாழ்க்கையில் எத்தகைய இடையூறுகள் வந்தாலும் அந்த நேரங்களில் எல்லாம் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியைப் பெற முடியும்…. அந்த நினைவாற்றலை நாம் பெருக்க முடியும். இடையூறுகளை அகற்றிட முடியும்.

சப்தரிஷி மண்டலங்களின் நினைவாற்றல் பெருகப் பெருக… இந்த உடலை விட்டு எப்போது பிரிந்தாலும் நாமும் அங்கே செல்ல முடியும்.

ஏனென்றால் முன்னோர்களின் ஆன்மாக்கள் ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று அங்கே உந்தித் தள்ளுகின்றோம்… உடல் பெறும் உணர்வுகள் அங்கே கறுக்கப்படுகின்றது.

அதன் துணை கொண்டு அந்தச் சப்தரிஷி மண்டலங்களை எண்ணும் பொழுது அந்த ஆற்றலை நாம் எளிதில் பெற முடியும். அனைவருமே இந்தத் தகுதி பெற முடியும்.

இதை எல்லாம் உங்களுக்குப் பயிற்சியாகத் தான் கொடுக்கின்றோம்… யாரும் செய்வதில்லை.

காசைக் கொடுத்துப் பணத்தை செலவழித்து பயிற்சி பெற்றுக் கொள்ளுங்கள் என்றால்… எவ்வளவு நேரம் ஆனாலும் அங்கே காத்திருந்து அதைப் பெறுகின்றார்கள்.

1.நீங்கள் எல்லோரும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று குரு அருளைப் பாய்ச்சி
2.உங்கள் முன்னோர்கள் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று பயிற்சியாகக் கொடுத்தால்
3.எங்களுக்கு நேரமில்லை இதைச் செய்வதற்கு எங்களால் முடியவில்லை என்று சொல்லி விடுகின்றார்கள்.

மணிக்கணக்கில் காத்திருந்து இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சொன்னால் காசையும் கொடுத்து விட்டு காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் எளிமையாக யாம் (ஞானகுரு) சொன்னாலும் அதைக் கேட்பதில்லை. இது போன்ற நிலை இல்லாதபடி உங்களை நீங்கள் நம்பி இதைச் செய்து பழக வேண்டும்.

முன்னோர்களை விண் செலுத்துவது மிகவும் முக்கியமானது.

“தனக்குத் தானே உபதேசத்தை ஏற்றுக் கொண்டவன் தான்” பிறருக்கு உபதேசிக்கத் தகுந்தவன்

“தனக்குத் தானே உபதேசத்தை ஏற்றுக் கொண்டவன் தான்” பிறருக்கு உபதேசிக்கத் தகுந்தவன்

 

பரவெளியில் படர்ந்துள்ள ஒளியான மின் அணுக்கள் காந்தத்தின் உள் நிகழ்வாக அசையும் நிலை சூட்சமமாக அதற்குள் இருந்தாலும் சஞ்சலமில்லாத மனத்திறன் கொண்டு வைராக்கியப் பற்று கொண்டோன் நல் ஆக்கத்தின் செயலுக்காகத் தன்னைத் தான் உணர்கின்றான்.

உணர்ந்து தெளிந்த வழியின் ஈர்ப்பினால் சகலத்தையும் தன்னுள் சக்தியாகக் கூட்டும் செயலாகப் “பேரருள்…” என்ற மூலத்தில் கலக்கின்றான்.

சகலத்தையும் அறிந்து கொள்வது என்பது நடைமுறைச் சாத்தியம் இயலாது என்றாலும்
1.தனக்குள் தானே நல் வழி ஆக்கத்திற்காகச் செயல்படும் விதம்
2.ஒவ்வொருவரும் தன் ஆத்மாண்டவனை உயர்த்தும் செயலே கடமை விதி.

அதே போல் சரீரத்துடன் கலந்து எண்ணிடும் செயல் அனைத்திற்கும் ஓர் வரைமுறைக்கு உட்படுத்தப்பட்ட செயலைக் காட்டும் கடமை விதியும் உண்டு.

உலகோதய நடைமுறை வாழ்க்கை நெறியில் தன் சிந்தனையைத் தெளிவாக்குவதற்காகக் குருவை நாடுகின்றான். குரு என்றால் என்னப்பா…?

குரு என்றாலே “ஒளி நிலை…” என்பது பொருள்…!

1.தனக்குத் தானே உபதேசத்தை ஏற்றுக் கொண்டவன் தான்
2.பிறருக்கு உபதேசிக்கத் தகுந்தவன்.

அவ்வகையில் கூறும் குரு எண்ணம் சொல் செயல் அனைத்தும் நேர்கோடாகப் பரிணமிக்கத் தன் செயல் நடைமுறைகளால் குருவாகின்றார்.

கடமை விதி சிஷ்யர்களாகிய அனைவருக்கும் உண்டு என்றாலும் குருவிற்கும் உண்டு.
1.கடமை விதி… உலகோதய நிலை விடுத்துப் பேரருள் தெய்வத் தன்மை நிலை அடைவதற்கு
2.ஓர் வழி காட்டும் அமைப்பே குரு.

பேரருள் சூட்சமம் அறிந்த கோடானு கோடி உயிராத்மாக்கள் நல்லாக்கச் செயல் நிகழ்வுகளில் மூலத்தில் கலந்து வாழ்கின்றனர்.
1.ஆனால் சிலரே அனைத்து உயிர்களும்
2.அந்தப் பேரானந்த லயத்தில் இன்புறுதல் வேண்டும் என்று கண்டுணர்த்தினர்.

அவர்கள் காட்டிய அன்பு நெறிகளில் “நான்…!” என்ற நிலை இல்லையப்பா…!
1.நான் என்ற சொல்லும்
2.நான் தான் பெற்றுத் தருவேன்…! என்ற சொல்லும் எதற்கப்பா…?

“தனித்துவமான சக்தி…” பெறும் நிலையன்றோ நாம் புகட்டியது.

ஒவ்வொரு உயிராத்மாக்களும் நல் நிலை பெற வேண்டும் என்று எமக்குள்ள ஆசையால் தானே எல்லாமுள் எல்லாமாக விளங்கும் பேரருள் சக்தியுடன்… மாமகரிஷிகளின் ஆசியுடன்… “மறைக்கப்பட்ட இந்த உண்மை நிலைகளை…” இங்கே எடுத்து இயம்பிக் கொண்டிருக்கின்றோம்.

1.இதில் நான் என்ற நிலை எங்கே உள்ளது…?
2.பரப்பிரம்ம நிலைதனில் சகல உயிர்களையுமே
3.அந்த ஈஸ்வரனாக எண்ணிச் செயல் கொள்ளும் அன்பு வழியைத்தானே இங்கே காட்டுகின்றோம்.

குருவே உன் உயிராக ஆத்மாவில் இயக்கும் செயலில்… சரீரம் கொண்டு செயல்படும் நிலையில் எல்லாம்… கடமை விதி என்பது பக்தி நிலை தானே தவிர “நீ உன்னை உயர்த்தும் சிங்கார அழகு எங்கே…?”

1.குருதேவர் (ஈஸ்வரபட்டர்) ஊட்டுவார்…! குருதேவரே ஊட்டட்டும் என்று
2.உன் முயற்சியின் வழியை விலக்கினால்
3.உன் உயிராத்மா உயர்ந்த சக்தி பெறும் அந்த ஒளியின் அழகு சுயப்பிரகாசமாக வளர்வது எங்கே…?
4.யாம் விரும்புவதே ஒவ்வொரு ஆத்மாக்களின் சுய முயற்சிதான்.
5.அதுவே நல்லாக்கத்தின் வழி.
6.வினைக்கு நாயகன் விநாயகன்..! என்று தன்னைத்தானே அறிந்து கொள்வதே குரு காட்டிய கடமை விதி.

உன்னை நீ உணர்ந்து சித்தன் காட்டிய விநாயகரின் உருவத்தில் மனித உடலும் யானையின் தலையும்…? எதற்காக என்ற வினாவிற்குரிய தெளிவை அறிவின் துணை கொண்டு தெளிதலே நல்லாக்கத்தின் வழி.

தெளிந்த பின் தன் உயிராத்ம சக்தியை வலுக் கூட்டிக் கொள்ளும் செயலும் வேண்டும்.

மூதாதையரின் ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் இணைய வேண்டும் என்று “ஒரு நாளைக்கு ஆயிரம் முறை எண்ணுங்கள்”

மூதாதையரின் ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் இணைய வேண்டும் என்று “ஒரு நாளைக்கு ஆயிரம் முறை எண்ணுங்கள்”

 

இந்திய மண்ணிலே தோன்றிய ஞானிகளால் வளர்க்கப்பட்ட ஆன்மீகத்தின் நிலைகளை எவரும் பழித்திடும் நிலை வராது… வரக்கூடாது என்பதை குருநாதர் அன்றே சொன்னார். அவர் காட்டிய வழியினைத்தான் நானும் (ஞானகுரு) இப்பொழுது சொல்கின்றேன்.

விநாயகரை வணங்கும் பொழுதெல்லாம்
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் மூதாதையர்கள் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

மேலும்…
1.ஒரு நாளைக்கு ஆயிரம் தடவையாவது
2.எங்கள் மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து
3.பிறவா நிலை என்னும் பெரு நிலை அடைய வேண்டும் என்று எண்ணுங்கள்.
4.சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்திற்குள் அவர்களை உந்தித் தள்ளுங்கள்… அந்த உணர்வின் ஆற்றல் உங்களுக்குள்ளும் சேரும்.
5.அந்த மாமகரிஷிகளின் அருள் சக்தி இந்த உலகம் முழுவதும் படர வேண்டும்…
6.தீமைகளை விளைய வைக்கும் “தீய உணர்வுகள் அகல வேண்டும்” என்ற உணர்வுகளைப் பாய்ச்சுங்கள்.

தத்துவ ஞானிகள் வளர்ந்து தீமைகளை அகற்றிய நாடு இது. முதல் நிலையாக உலகெங்கிற்கும் மெய் ஞானத்தை உணர்த்திய பூமி இது. தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று நிலைகளை இங்கிருந்து தான் உலகிற்குத் தெளிவுற எடுத்துரைத்தது.
1.விண்ணுலகின் ஆற்றலை ஒளியின் சரீரமாகச் சிவமாக்கியவன் அகஸ்தியன்.
2.எந்த நாட்டவரும் அகஸ்தியன் பெற்ற ஆற்றலைப் பெற முடியும்.

சீவலிங்கமாக இன்று இருக்கின்றோம். அகஸ்தியன் உணர்வை எடுத்து அதனின் துணை கொண்டு “உயிருடன் ஒன்றிய இராமலிங்கமாக” எண்ணத்தின் வழிகளிலே எண்ணத்தால் உருவாக்கப்பட்ட தன்மை கொண்டு… என்றும் ஒளிச் சரீரமாக இருக்க முடியும்.

இந்த உலகில் தீய சக்திகள் பரவிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் யாம் இதை வெளிப்படுத்த வேண்டி இருக்கின்றது.

தீமைகள் பரவாது தடுக்கச் செயுயும் அந்த ஞானிகள் உணர்வுகள் இங்கே அனைவரையும் காக்கக்கூடிய சக்தியாக வளர வேண்டும் எல்லோருக்கும் பேரானந்த அமுதாக இது கிடைக்க வேண்டும் என்று தான் குருநாதர் கூறினார்.

அதன் வழியில் தான் நான் இதைச் செயல்படுத்துகின்றேன் சாமி வேகமாகப் பேசுகிறார் என்று யாரும் எண்ண வேண்டியதில்லை.

உலகில் நல்லது என்று சிந்தித்துச் செயல்படுத்தும் மக்களை வீழ்த்திடும் நிலைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. எளிமையானவர்களிடமிருந்து பொருள்களைத் தட்டிப் பறிக்கும் நிலையே உருவாகிக் கொண்டுள்ளது

வளர்ச்சி அடைந்த நாடுகள் மற்ற நாடுகளை அடிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் (அங்கிருந்து) ஆணையிடுவதை சிரம் மேல் ஏற்று நடப்பவர்கள் அசுர உணர்வு கொண்டோர் இங்கே நம் நாட்டிலும் உண்டு. அதிலிருந்து மக்கள் காக்கப்பட வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்கின்றேன்.

மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா எங்கள் உடல் முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ண வேண்டும்.

சாஸ்திரப் பிரகாரம் நரசிம்ம அவதாரமாக தீமைகளை அகற்றிய அந்த மகரிஷிகளை நினைவுக்குக் கொண்டு வந்து… உயிருடன் ஒன்றி… விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகளின் சக்தி பெற வேண்டும் என்ற வேட்கையைக் கூட்டி ஒருங்கிணைந்து செயல்பட்டு தீமைகளை அகற்றுங்கள்.

அதே போன்று
1.மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்களை விண் செலுத்தும் உணர்வுகளை அடிக்கடி கூட்டிக் கொண்டே வாருங்கள்.
2.அது உங்களுக்கு நல்ல பயனைத் தரும்
3.அவர்கள் முன் சென்றால்… அடுத்து நாமும் நிச்சயம் பிறவா நிலை பெற முடியும்.

ஆத்மாவின் முழுமை புலப்படும் வழி

ஆத்மாவின் முழுமை புலப்படும் வழி

 

ஒவ்வொரு உயிராத்மாவும் தன்னைப் பற்றிய உண்மையை உணரச் சிந்திக்கும் தொடரில் “நான் என்பது யார்..?” என்கிற வினா எழும் பொழுது தன் சுயத்தின் வளர்ப்பாகத் தியானத்தின் வழியாக உணர்ந்து கொள்ளும் பொழுது “ஆத்மாவின் முழுமை” புலப்படும்.

உடலுக்கு உயிர் குரு. உயிரின் குரு சூரியன் என்ற விளக்கத்தின் பொருளில் ஆத்மா என்பதே மறை பொருளாக்கப்பட்டு விட்டது.

எண்ணத்தின் செயல்பாட்டில் செயல்பாட்டின் வினைப் பொருள் எதுவோ அதுவே விளை பொருளாக ஆக்கம் பெறுகிறது
1.எண்ணத்தின் செயல்பாட்டில் “நான்…” என்பது வினையானால்
2.அந்த வினையின் விளை பொருள் விளைப் பொருளாக ஆக்கும் “சக்தி”
3.வலுக் கொண்டு ஒன்றுவது எங்கே..? என்ற வினாவின் மூலத்தை ஊன்றிப் பார்க்க வேண்டும்.

ஆத்ம பலம் பெற வேண்டும் என்று சொல்வது எதற்கப்பா…?

எண்ணத்தின் செயல்பாடு நான் என்பது புகழ் தேடும் வழியாக உபதேசித்தல் என்பது… விளை பொருள் ஆக்கும் செயல் கொண்ட எண்ணத்தின் “மாறுபாடே…!”

அஞ்ஞானத்தின் செயல்பாட்டில் வினைபொருள் செயல் கொள்ளும் எண்ணமாக எதை எண்ணி வலுக்கூட்டும் செயல் நிகழ்வோ அதுவும் ஆத்மாவில் பதிவு நிலை பெறுகின்றது.

1.செயல்பாட்டில் நான் என்பதில் உரைத்திட்ட
2.வேறுபாட்டின் பொருளில் செயல்பாட்டில் கொள்ள வேண்டிய நான்
3.ஆத்மாவின் மூலச் சக்தியாக நான் என்பதற்கு வலுக்கூட்டும் நானாக அமைவு பெற்றால் இரண்டும் ஒன்றே.

ஒன்றில்லாமல் ஒன்றில்லை உரைத்த உரையில்… இயற்கையின் கதியில் சூரியனை மையம் கொண்டே சுழன்றோடும் கோளங்களும்… ஒன்றுடன் ஒன்று ஒளி காந்த ஈர்ப்பில் சக்தி பெற்றுப் பரிணாம வளர்ச்சி கொண்டு வளர்ந்திடும் செயலை ஒவ்வொரு உயிராத்மாவும் தன் வளர்ப்பின் சக்தியில் முழுமை பெற்றிட
1.அந்த இயற்கையின் கதியில் ஒன்றி
2.சுய சக்தி வளர்ப்பாக்கும் நிலைக்கு வளர வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் ஒரு உயிராத்மா மற்றொரு உயிராத்மாவை எண்ணியே சக்தி பெறும் பாஷாண்டகம் – பிற ஆத்மாக்களை அடிமை கொண்டு தன் உயிராத்மாவின் சக்தியை வலுக் கூட்டிக் கொள்ளும் செயலுக்குச் சென்றால் இறந்த ஆவி ஆத்மாக்கள் செயல் கொள்ளும் நிலைக்கே செல்ல வேண்டி வரும்.

1.உண்மையின் சக்தி…
2.என்றும் நிலை பெறும் பரிபூரணத்துவ…
3.அகண்ட… பிரகாச… பேரின்ப ஜோதியாக…
4.ஆத்மாவாக – உயிராத்மாவாகச் செயல் கொள்ளும் செயலுக்கு
5.ஆத்மாவிலிருந்து பெற்றிடும் ஒளியே அறிவின் செயல்பாட்டின் காரணமாக
6.அந்தக் காரணத்தின் உண்மையை உணர்ந்து கொண்டிடும் செயலில் ஆனந்தமும்
7.இவைகளின் செயல்பாட்டில் எண்ணத்தின் வலுவாக வினையின் பொருள் நான் என்பதே ஆத்மா என்று உணர்ந்திடும் பக்குவத்தில்
8.அறிவு… காரணம்… ஆனந்தம்…! அனைத்துச் செயல்பாட்டின் நிகழ்வில் ஒன்றுடன் ஒன்று ஒன்றி
9.ஆத்மாவிலிருந்து ஒளி பெற்று வளர்ச்சியின் வலுவை எப்படிக் கொண்டதோ…
10.அந்த வலுவே ஒளியாக மீண்டும் ஆத்மாவின் வலுவை வலுவாக்கும் சூட்சமமே மூல சக்தி…!

ஆக மொத்தம் பேரானந்தப் பேரருளின் ஒளியின் ஒளிக் கதிர்களில் “ஒரு ஒளிக் கதிர் தானப்பா ஓர் ஆத்மா என்பது…!”

வினைகளை நீக்கும் மகரிஷிகளின் அருள் ஞானம்

வினைகளை நீக்கும் மகரிஷிகளின் அருள் ஞானம்

 

அன்றாட வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரையிலும் எத்தனையோ குற்றம் குறைகளைப் பார்க்கின்றோம்… எத்தனையோ தீமைகளைக் கேட்டுணர்கின்றோம். அவை எல்லாம் தீய வினைகளாக நமக்குள் வந்து விடுகின்றது.

அதே சமயத்தில் பிறர் செய்யும் தவறான உணர்வுகள்… சாப வினைகளாக வருவதை… நாம் உற்று நோக்கப்படும் பொழுது நம்மை அறியாமலே நமக்குள் அது புகுந்து விடுகிறது.

அதே சமயத்தில் ஒருவன் செய்யும் பாவச் செயல்களை உற்று நோக்கும் போது அந்தப் பாவ வினை நமக்குள் வந்துவிடுகிறது. சாப வினையும் பாவ வினையும் மிகவும் கடினமானது

காரணம் எத்தகைய தொழில் செய்தாலும்
1.பிறரை நாம் பார்க்காமல் இருக்க முடியாது பழகாமல் இருக்க முடியாது ரோட்டிலே நாம் செல்லாமல் இருக்க முடியாது.
2.பிறர்படும் துயரத்தையும் சாபமிடும் நிலைகளையும் வேடிக்கையாகப் பார்த்தாலும்
3.அது நமக்குள் புகுந்து சாப வினைகளாக விளையத் தொடங்கி விடுகின்றது.

நாம் விஷமான பொருளைக் கையில் எடுத்து வேலை செய்த பின் உடனே தூய்மைப்படுத்த வேண்டும். தூய்மைப்படுத்தவில்லை என்றால் விஷம் நமக்குள் வந்து உடலைச் செயலற்றதாக்கிவிடும்.

அதே போல் ஒரு விஷ வித்தாக இருந்தாலும் மண்ணிலே விழுந்து விட்டால் அது முளைக்கத்தான் செய்யும். விஷ வித்து என்று அதைப் பிடுங்கி எறிந்தாலும் மறு பக்கம் விழுந்தால் அது அதனின் நஞ்சின் தன்மை இயக்கத்தான் செய்யும்.

ஆகவே நம்மை அறியாது சேரும் தீய வினைகளை சாப வினைகளை பாவ வினைகளை அகற்ற வேண்டும். நமது குருநாதர் இத்தகைய வினைகளை எல்லாம் நீக்கும் ஆற்றல்களை…
1.மகரிஷிகள் எவ்வாறு தனக்குள் கற்றுணர்ந்தார்கள்…?
2.தீய வினைகளை எப்படி அகற்றினார்கள்…?
3.சாப வினைகளை எப்படி அகற்றினார்கள்…?
4.பாவ வினைகளை எப்படி அகற்றினார்கள்…?
5.தீமைகளை நீக்கும் உணர்வுகளை எவ்வாறு சேர்த்துக் கொண்டார்கள்…?
6.அது எவ்வாறு அவருக்குள் விளைந்தது…?
7.அதன் துணை கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியாக இன்றும் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்…? என்ற உண்மையை எனக்கு உணர்த்தினார்.

அதை நீங்களும் பெற முடியும் அவர் காட்டிய மார்க்கத்தினைத் தான் உங்களுக்கும் இப்போது உபதேசிக்கின்றோம். இந்த உணர்வின் ஆற்றலை நல்வினையாகப் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு)

பதிவு செய்ததை ஓங்கி எண்ணும் பொழுது தீய வினைகளை அகற்றுவதும் பாவினைகளைப் போக்குவதும் உங்களால் முடியும்.

ஆகவே மகரிஷிகளின் அருள் சக்தியை நான் பெறுவேன்… என்னை அறியாத வந்த தீயவினைகள் சாப வினைகள் பாவ வினைகளை நீக்குவேன்…! என்ற உறுதி கொள்ளுங்கள்.

இதைச் செயல்படுத்தினால் அந்த உண்மைகளை நீங்கள் காணலாம்.

உருவை எண்ணி ஜெபிப்பதா…? உணர்வை (சக்தியை) எடுத்து வளர்ப்பதா…?

உருவை எண்ணி ஜெபிப்பதா…? உணர்வை (சக்தியை) எடுத்து வளர்ப்பதா…?

 

மனிதன் தன்னாலே சிந்திக்கத் தலைப்பட்டுத் தன்னுள் எழுந்த வினாவாக “நான் என்பது யார்…?” என்றே தன்னைத் தான் அறிந்து கொண்டிடும் முயற்சியாகத் தான் கண்டுணர்ந்த வழி வகைகளை மெய் உணர்வுகளை மறை பொருளாக்குபவர்களும் உண்டு.

ஏனென்றால் மேன்மேலும் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ள மனித எண்ணத்தின் செயல்பாட்டில் “விதி முறைகள்…!” என்றே சூட்சமப்படுத்தி அப்படி இருக்கக்கூடாது… இப்படிச் செய்யக் கூடாது… அது தீட்டு… இது தோஷம்… இது பாவம்…! என்பார்கள்.

இப்படி உணர்த்திக் கொண்டு அவ்வாறு உபதேசிப்பவனையே (தன்னையே) எண்ணும்படியும்… தன்னையே ஜெபித்திடும் நிலைகளுக்கும்… ஏற்படுத்திக் கொண்டு
1.குரு என்ற பெயரில் குருவின் சரீரத்தையே எண்ணி ஜெபித்திடும்
2.பிற ஆத்மாக்களின் எண்ணத்தின் செயல்பாட்டின் வலுவைத் தான் ஒருவனே பெற்று
3.தன்னை உயர்த்திக் கொள்ளச் செயல்படும் அனைத்துப் புறச் செயல்களில் “உருவ வழிபாடும் ஒன்று…”

“நான் என்பது எண்ணத்தின் செயல்பாடு..” என்றால் அந்தச் செயல்பாட்டின் உந்துதல் கொண்டு எதை வளர்ச்சிப்படுத்துதல் வேண்டும்…?

பழி தீர்க்கும் உணர்வு கொண்டு மற்ற ஆன்மாக்களைத் தன்னுடன் இணைக்கும் செயலாகத் (மாந்திரீகமும் தாந்திரீகமும் செய்யும் சில சாமியார்கள்) தன் எண்ணத்தின் ஆசைகளை நிறைவேற்றும் பொருட்டு உலவிடும் ஆவி ஆத்மாக்களின் தன்மைகளையும் இறப்பின் பின் அதன் தன்மைகளையும் பல முறை விளக்கி வந்துள்ளேன்.

உடலுடன் உள்ள பொழுதே சரீர பக்தியெனும் போர்வையில் தான் கொண்ட எண்ணத்தையே ஊட்டி
1.தன் சரீர பிம்பத்தையே… தன் உருவத்தை எண்ணி ஜெபிப்போரிடம் பதிவு நிலைப்படுத்திக் கொண்டு
2.தன் ஆன்மாவிற்குப் பிற ஆன்மாக்களையும் அடிமையாக்கிக் கொண்டு
3.உபதேசிகன் ஒருவன் தன்னை உயர்த்திடும் செயல்…
4.அன்றைய “பாஷாண்டகம்..!” எண்ணத்தின் செயல்பாட்டில் இரு விதம் உண்டு.

பிறிதொன்றின் ஈர்ப்பில் ஒன்றுவது ஒன்று… மற்றொன்று தன் உயிராத்ம சக்தியை வலுக்கூட்டும் “தன் நல வளர்ப்பு…”

நான் என்பது எண்ணத்தின் செயல்பாட்டில் பிறிதொருவன் சக்தியை ஈர்த்துக் கொண்டு தனக்களித்துத் தான் வளர்வது என்ற தன் எண்ணம் தன்னுள் வளர்ந்து விட்டால் அந்த எண்ண வளர்ச்சியின் முதிர்வே சூட்சமப் பொருள் பதிந்த பாஷாண்டகமாம்.

1.தன் ஆன்மாவைத் தான் வளர்க்க…
2.உயிர் கொண்ட உடலே கருவிகளாக..
3.உணர்வு கொண்ட தியானத்தின் வழியாக…
4.எண்ணத்தின் செயல்பாடே நான் என்று உணரும் பொழுது…
5.இரு விதச் செயல் நிலைகளை ஆங்கு தெளிந்து கொண்டால்
6.நான் என்பது உடலா…?
7.நான் என்பது உயிரா…?
8.நான் என்பது உணர்வா…?
9.நான் என்பது எண்ணமா…? ஆத்மாவா…? என்ற வினாக்களுக்கும்
10.தன்னுள் தெளிந்த தெளிவைப் பெற்றிடலாம்…!

ஆத்ம முலாமின் வலுவை வலுவாக்கிக் கொண்டு
1.“தான்..” என்பதே ஆத்மாவாக உயிருடன் ஒன்றியே.. உயர் நிலை பெற்றே…
2.எண்ணத்தின் செயல்பாட்டில் நானும் வேண்டுமப்பா…!
3.ஒவ்வொரு உயிராத்மாவும்… ஒன்றுடன் ஒன்று ஒன்றி…!
4.ஒன்றில்லாமல் ஒன்றில்லை… ஒன்றுடன் ஒன்றியே பல வளர்ந்து… சக்தி ஈர்த்தல்…! என்று கூறியதிலும்
5.அதற்குள் இருக்கும் உண்மைகளை அறிந்து… உணர்ந்து கொண்டால்
6.தன் உயிராத்மாவின் சுய வளர்ச்சி நிலை “மிக மிகத் தெளிவு பெறும்…!”