
“அன்பு” தானப்பா கடவுள்
அன்பு வழி காட்டிட்டு… அன்பு கொண்டே ஊட்டிடும் செயலாய் செயற்படுபவன்…
1.தன்னுள் ஈர்த்துக் கொண்டு தன்னை வளர்ச்சிப்படுத்தும் தன்மைக்கு “அன்பே கடவுள்” என்று சொல்லிய சொல்லிலும்
2.பிற உயிர்களையும் தன்னுயிர் போல் நேசிக்கும் செயற்பாடு உடையவனாய் இருத்தல்
3.தன்னுள்ளே வேரூன்றி வளர்ச்சி கொண்டிட்ட அன்பினில் நிறைவு போதனையாய் வெளிப்படும் பொழுதே போதனையை ஏற்று
4.தன் ஆக்கத்தின் வளர்ச்சிக்கு உபதேசத்தை ஏற்றவன் அந்த நன்நெறியில் பிறழாமல்
5.அவ்வன்பையே பற்றுக் கோடாய்க் கொண்டிட்ட எண்ண செயலினால்
6.நல் வழிவகைச் செயலைக் கைக் கொள்வோன் மனிதன் என்ற முழுமை பெறுகிறான்.
7.அன்பும் பரி பூரணத்துவம் பெறுகின்றது.
இயேசு காட்டிட்ட அன்பு வழி… “மதம்” என்ற ஆக்ரோஷ வலைக்குள் அகப்பட்டுத் தத்தளிக்கின்றது. ஆனால் எம்மதத்தினரையும் குற்றம் குறைகள் காண்பதல்ல நம் வழி.
மனித எண்ணத்தையும் அன்பு சாம்ராஜ்யத்தையும் ஆள வந்த அம்மகானுக்கே தந்திட்ட பரிசு “சிலுவை ஏற்றுதல்…” இன்றும் உண்மையைப் புகட்டினாலும் மத வழிச் செயலில் ஏற்றுக் கொள்வோர் இல்லையப்பா…!
அன்பு வழி காட்டிய மாமகான் இயேசு தான் தெளிந்த உண்மைகளை உலகினுக்கு உவட்டாமல் ஊட்ட வந்த நிலை என்னப்பா…?
1.குழந்தைக்குத் தாய் உணவை ஊட்டும் பொழுது தாயின் மனத்தின் எண்ண நினைவு எத்தகையதோ அதே உணர்வால்
2.உலக மக்கள் படும் இன்னல்களுக்காக தன்னையே அர்ப்பணிக்க வந்த மகான் இயேசு தாய்மையின் உணர்வு கொண்டே
3.ஜெபம் கொண்டு உயர் ஞான சித்தியின் வழி உயர் நிலை பெறவே ஊட்டிட்டார்… ஊட்டிட்டார்… அன்பு கொண்டே ஊட்டிட்டார்.
தாய் முகம் கண்ட குழந்தை தாவி ஓடுவதைப் போல் மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு உபதேசங்களை செவிமடுத்தினர் என்றால்… அன்றைய கால கட்டத்தில் அரசாட்சியின் அதிகாரத்தில் அறிவின் ஆற்றல் செயற்படாதொழிந்த குழப்ப சூழ்நிலையில் உண்மையை உணர்த்தி அளித்திட்ட போதனைகள் மக்களுக்கு தெளிந்த சிந்தனை அளித்து ஈர்த்தது என்றால் அன்பின் திறத்தை என்னவென்பது…?
அன்புதானப்பா கடவுள்.
சத்திய நிலை கடைப்பிடித்த மகான்களுக்கே அவச்சொல் என்றால்
1.சிந்தனா சக்தி செல்லும் வழிதான் என்ன…?
2.தன் குடும்ப நலத்தைப் பெருக்கிக் கொள்வதற்காகவா… அல்லது வளப்படுத்திக் கொள்வதற்காகவா கூட்டங்கள் கூட்டினார்….!
இன்றைய நடைமுறை வழி அதைத்தான் காட்டுகிறது.
ஆனால் அன்று அவர் காட்டிய அன்பு வழியில் உயர் ஞான சக்தி பெறுவோர் அம்மத வழிதனில் எண்ணிக்கையில் பலர் இருப்பினும்… அவர்களும் வழி வந்த குருக்களின் போதனையால் அறியாத வெறி உணர்வுகளுக்கே செலுத்தப்படுகின்றனர்.
உண்மை வழியறிந்து அம்மகான் காட்டிட்ட வழிதனை கடைப்பிடிக்க முயலுவோர் முயலட்டும்.
அன்பு கொண்டு குணங்களின் செயலை தன்னுள் கண்ட இயேசுபிரான்
1.’சைத்தான்’ என்று காட்டியது தீய குணங்களைத் தான்.
2.சைத்தானின் குணங்களுக்கு ஆட்படும் பொழுது அதி ஆசைகளின் வழி செல்லும் மாற்று நிலைகளைக் காட்டி
3.அவைகளைப் பக்குவமாய் விலக்கிடவே தியானத்தின் வழி காட்டியதே “அப்பமும் மீனும்…”








