
“மூன்று மணி நேரம் ஆறு மணி நேரம் என்று…” எதற்காக அப்படி உபதேசம் கொடுக்கின்றோம்…?
1.நான் ஏட்டைப் படிக்கவில்லை… குரு அருளை எடுத்து அந்த உணர்வுகளை வளர்த்து அதன் வழி நடந்தேன்.
2.காற்றில் அனைத்துச் சக்திகளும் இருக்கின்றது… நீங்களும் என்னைப் போல் அறியலாம்… அதை உங்களுக்குள் வளர்க்க முடியும்.
3.அந்த நல்லதைப் பெறச் செய்வதற்குத்தான் உபதேசிக்கின்றோம்.
தீமை எவ்வாறு வருகின்றது…? அந்தத் தீமையை எப்படி மாற்றுவது…? என்ற உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது நீங்கள் அதை நுகர்கின்றீர்கள். உங்கள் இரத்தத்தில் கலக்கின்றது.
கூடுமான வரையிலும் உங்கள் உடலில் உள்ள அணுக்களுக்கு அந்த அருள் சக்திகளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்க வேண்டும் என்பதற்குத்தான் மணிக்கணக்காக உபதேசிக்கின்றேன்.
நேரம் போகின்றதே…! என்று எண்ணக் கூடாது.
இந்த அருள் உணர்வுகளை உங்களுக்குள் சேர்த்துக் கொண்ட பின்
1.அந்தத் தீய அணுக்கள் கொஞ்சம் மூச்சுத் திணறும்.
2.அப்பொழுது சிறுகச் சிறுக அந்த அருள் உணர்வுகளை உங்களுக்குள் சேர்க்க வைக்கின்றேன்.
3.இடைவிடாது பேசிக் கொண்டிருக்கின்றேன்… இடைவிடாது நீங்கள் நுகர்கின்றீர்கள்.
4.உங்கள் ரத்தத்தில் அருள் உணர்வுகள் கலந்து கொண்டே இருக்கின்றது… கலக்கச் செய்கின்றேன்,
எனக்கு குருநாதர் மணிக்கணக்காக உபதேசிப்பார். இரண்டு நாள் மூன்று நாள் கூடப் பட்டினியாக இருக்கும்படி செய்வார். இந்த அருள் சாப்பாட்டைக் கொடுப்பார். என் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு அந்த உபதேசக் கருத்துக்களை உணவாகக் கொடுப்பார்.
மற்றவர்கள் அரை மணி நேரத்திலே பேசி விட்டுச் சென்று விடுவார்கள். சாமி மூன்று மணி நேரம் ஆறு மணி நேரம் “ஜவ்வு மிட்டாய் மாதிரிப் பேசுகின்றார்…” என்று சிலர் எண்ணி விடுவார்கள்.
1.உங்களுக்குள் அந்த அருள் சக்தியைப் பெறச் செய்வதற்குத் தான் இவ்வாறு செயல்படுத்துவது.
2.அந்த மகரிஷிகளின் உணர்வுகளை உங்கள் ரத்தங்களிலே கலக்கச் செய்து
3.கெட்ட அணுக்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கச் செய்கின்றோம்.
4.மகரிஷிகள் உணர்வை உங்களுக்குள் புகுத்தச் செய்கின்றோம்.
அந்த வழி தெரிந்து தான் இதைச் செய்கிறோம்.
விஞ்ஞான அறிவு கொண்டு அலுமினியத்தையோ தங்கத்தையோ அத்தகைய கடினமான உலோகங்களையும்… காற்று அழுத்தத்தை அதிகமாக்கி அதிலே மோதும்படிச் செய்து அதைத் தூசியாக மாற்றுகின்றார்கள்… (ATOMISATION) கரைத்து விடுகின்றார்கள்.
இதைப் போன்று தான்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து உங்களுக்குள் சேர்க்கும்படி செய்து “அது அழுத்தமான பின்… வேக சுழற்சி ஆகும்…”
2.தீமையின் உணர்வுகளுக்குள் அதை ஊடுருவும்படிச் செய்கின்றோம்.
விஷம் எப்படி ஒன்றுக்குள் ஊடுருவி அதன் இயல்பை மாற்றுகின்றதோ இதைப் போல விஷத்தை மாற்றிய உணர்வுகளை உங்கள் ரத்தத்தில் கலக்கும்படிச் செய்கின்றோம்.
1.உங்கள் உடலில் உள்ள அணுக்களுக்குள் ஊடுருவி
2.அதை மாற்றக் கூடிய சக்தி பெற வேண்டும் என்பதற்குத்தான் மணிக்கணக்கில் பேசுவது.
ஒரு சிலர் சாமி மணிக்கணக்காகப் பேசுகிறார் நம்மால் உட்கார முடியவில்லை என்று வேறு பக்கம் சென்று விடுவார்கள்… வாழ்க்கையின் நிலைகள் கொண்டு.
1.அப்படிப் போவோர்கள் தவிர மிஞ்சுபவர்கள் தான்
2.”எப்படி இருந்தாலும் அந்தக் குரு அருளைப் பெற வேண்டும்…” என்ற நிலையில் இங்கே நிற்பார்கள்.
பிறகு… நீங்கள் கொஞ்சம் கொஞ்சம் பேசப் பேச அவர்களுக்கும் இதிலே கொஞ்சம் பற்று வரும். பின் வரவேண்டும் என்று சொல்லி வருவார்கள்.
1.நீங்கள் வளர்ச்சி அடைந்த நிலைகள் கொண்டு உங்கள் மூச்சு பூமியில் உள்ள தீமைகளை நீக்கும்.
2.உங்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவரையும் திருந்தும்படிச் செய்யும்.
தெருவிலே ஒருவருக்கொருவர் போக்கிரியாக இருக்கின்றார்கள்… போக்கிரித்தனமாகச் செயல்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த உணர்வை நுகர்ந்தால் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் அதே வெறி உணர்வு இயக்கும்.
ஆனால் உங்களுக்குள் அந்த மகரிஷிகள் உணர்வு வளர்ந்த பின் அவருடைய துன்பத்தை மாற்றக்கூடிய சக்தியாக மாறும். இல்லையென்றால் அது ஆட்கொண்டு விடும். அதனால் தான் உங்களுக்கு இதையெல்லாம் ஞாபகப்படுத்துகின்றோம்.
சமையல் செய்யும் பொழுது அவசரப்பட்டுச் சாதத்தை ஆக்கினால் என்ன ஆகும்…?
சில ஓட்டலில் அரிசியை முக்கால் பாகம் வெந்தபின் போட்டு விடுவார்கள். கூட்டமாக இருக்கிறது சீக்கிரம் போட வேண்டும் என்று கல்யாண வீட்டில் கூட… அவசரப்பட்டு வேகுவதற்கு முன்பே சாதத்தைப் போட்டுவிடுவார்கள்.
அந்தச் சாப்பாட்டைச் சாப்பிட்ட பின் எனக்கு வயிற்றால் போகின்றது நெஞ்சு வலிக்கிறது என்று சிலர் திட்டுவார்கள்.
ஆக… அது போன்று அவசரப்பட்டு மெய் உணர்வுகளைச் சமைத்துக் கொடுத்தால் என்ன ஆகும்…? வித்தியாசமாக நினைப்பீர்கள். அப்படி நீங்கள் வித்தியாசமாக நினைத்துவிடக் கூடாது என்பதற்குத் தான் உங்களுக்குப் “பொறுமையாக உபதேசத்தைக் கொடுக்கின்றேன்…”
ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வுக்குத் தக்க பதிவாகும். ஒவ்வொரு நொடியிலும் வாழ்க்கையில் தீமைகள் வந்தது என்றால்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை அனைத்திலும் சேர்த்துக் கொண்டே வரவேண்டும்.
2.அவ்வாறு சேர்த்துக் கொள்ளும் அந்தப் பருவத்தைச் செயல்படுத்துவது தான் இத்தகைய உபதேசங்கள்.
குழம்பு வைக்கும் போது அதிலே ஒரு பொருளுடன் ஒரு பொருளைச் சேர்த்து ருசியாக மாற்றுகின்றோம் அல்லவா… அது போல் தான்…!
நாம் வேதனையான குணங்களை எடுத்து விட்டால் நல்ல அணுக்களை மாற்றும்படிச் செய்து விடுகின்றது. அந்த அணுக்களை மீண்டும் நல்லதாக மாற்றிக் கொண்டு வர வேண்டும் என்றால் அந்த அருள் உணர்வைச் சேர்த்து இதற்கு மேல் இதை மாற்ற வேண்டும். அந்தத் தீமையை அடிமையாக்க வேண்டும்.
வெங்காயச் சருகு உருவாவது போன்று ஒவ்வொரு உணர்வின் தன்மை வரும் போதும்…
1.அணுவுக்குள் அணு… அணுவுக்குள் அணு… ஓமுக்குள் ஓம்… ஓமுக்குள் ஓம்… ஓம்… ஓம்…! என்று இணைத்து
2.ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரணவத் தத்துவமாகக் கொண்டு வரும்.
புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு அணுக்களிலும் அந்த நுண்ணிய அணுக்களாக மாறி மாறி அதைச் சேர்த்துத் தான் உடலாக மாறியது.
அதே போன்று நாமும் இந்த அருள் உணர்வுகளை ஒவ்வொரு நொடியிலும் எடுத்து வளர்த்துக் கொண்டு வர முடியும்.








