“மூன்று மணி நேரம் ஆறு மணி நேரம் என்று…” எதற்காக அப்படி உபதேசம் கொடுக்கின்றோம்…?

“மூன்று மணி நேரம் ஆறு மணி நேரம் என்று…” எதற்காக அப்படி உபதேசம் கொடுக்கின்றோம்…?

 

1.நான் ஏட்டைப் படிக்கவில்லை… குரு அருளை எடுத்து அந்த உணர்வுகளை வளர்த்து அதன் வழி நடந்தேன்.
2.காற்றில் அனைத்துச் சக்திகளும் இருக்கின்றது… நீங்களும் என்னைப் போல் அறியலாம்… அதை உங்களுக்குள் வளர்க்க முடியும்.
3.அந்த நல்லதைப் பெறச் செய்வதற்குத்தான் உபதேசிக்கின்றோம்.

தீமை எவ்வாறு வருகின்றது…? அந்தத் தீமையை எப்படி மாற்றுவது…? என்ற உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது நீங்கள் அதை நுகர்கின்றீர்கள். உங்கள் இரத்தத்தில் கலக்கின்றது.

கூடுமான வரையிலும் உங்கள் உடலில் உள்ள அணுக்களுக்கு அந்த அருள் சக்திகளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்க வேண்டும் என்பதற்குத்தான் மணிக்கணக்காக உபதேசிக்கின்றேன்.

நேரம் போகின்றதே…! என்று எண்ணக் கூடாது.

இந்த அருள் உணர்வுகளை உங்களுக்குள் சேர்த்துக் கொண்ட பின்
1.அந்தத் தீய அணுக்கள் கொஞ்சம் மூச்சுத் திணறும்.
2.அப்பொழுது சிறுகச் சிறுக அந்த அருள் உணர்வுகளை உங்களுக்குள் சேர்க்க வைக்கின்றேன்.
3.இடைவிடாது பேசிக் கொண்டிருக்கின்றேன்… இடைவிடாது நீங்கள் நுகர்கின்றீர்கள்.
4.உங்கள் ரத்தத்தில் அருள் உணர்வுகள் கலந்து கொண்டே இருக்கின்றது… கலக்கச் செய்கின்றேன்,

எனக்கு குருநாதர் மணிக்கணக்காக உபதேசிப்பார். இரண்டு நாள் மூன்று நாள் கூடப் பட்டினியாக இருக்கும்படி செய்வார். இந்த அருள் சாப்பாட்டைக் கொடுப்பார். என் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு அந்த உபதேசக் கருத்துக்களை உணவாகக் கொடுப்பார்.

மற்றவர்கள் அரை மணி நேரத்திலே பேசி விட்டுச் சென்று விடுவார்கள். சாமி மூன்று மணி நேரம் ஆறு மணி நேரம் “ஜவ்வு மிட்டாய் மாதிரிப் பேசுகின்றார்…” என்று சிலர் எண்ணி விடுவார்கள்.
1.உங்களுக்குள் அந்த அருள் சக்தியைப் பெறச் செய்வதற்குத் தான் இவ்வாறு செயல்படுத்துவது.
2.அந்த மகரிஷிகளின் உணர்வுகளை உங்கள் ரத்தங்களிலே கலக்கச் செய்து
3.கெட்ட அணுக்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கச் செய்கின்றோம்.
4.மகரிஷிகள் உணர்வை உங்களுக்குள் புகுத்தச் செய்கின்றோம்.

அந்த வழி தெரிந்து தான் இதைச் செய்கிறோம்.

விஞ்ஞான அறிவு கொண்டு அலுமினியத்தையோ தங்கத்தையோ அத்தகைய கடினமான உலோகங்களையும்… காற்று அழுத்தத்தை அதிகமாக்கி அதிலே மோதும்படிச் செய்து அதைத் தூசியாக மாற்றுகின்றார்கள்… (ATOMISATION) கரைத்து விடுகின்றார்கள்.

இதைப் போன்று தான்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து உங்களுக்குள் சேர்க்கும்படி செய்து “அது அழுத்தமான பின்… வேக சுழற்சி ஆகும்…”
2.தீமையின் உணர்வுகளுக்குள் அதை ஊடுருவும்படிச் செய்கின்றோம்.

விஷம் எப்படி ஒன்றுக்குள் ஊடுருவி அதன் இயல்பை மாற்றுகின்றதோ இதைப் போல விஷத்தை மாற்றிய உணர்வுகளை உங்கள் ரத்தத்தில் கலக்கும்படிச் செய்கின்றோம்.

1.உங்கள் உடலில் உள்ள அணுக்களுக்குள் ஊடுருவி
2.அதை மாற்றக் கூடிய சக்தி பெற வேண்டும் என்பதற்குத்தான் மணிக்கணக்கில் பேசுவது.

ஒரு சிலர் சாமி மணிக்கணக்காகப் பேசுகிறார் நம்மால் உட்கார முடியவில்லை என்று வேறு பக்கம் சென்று விடுவார்கள்… வாழ்க்கையின் நிலைகள் கொண்டு.

1.அப்படிப் போவோர்கள் தவிர மிஞ்சுபவர்கள் தான்
2.”எப்படி இருந்தாலும் அந்தக் குரு அருளைப் பெற வேண்டும்…” என்ற நிலையில் இங்கே நிற்பார்கள்.

பிறகு… நீங்கள் கொஞ்சம் கொஞ்சம் பேசப் பேச அவர்களுக்கும் இதிலே கொஞ்சம் பற்று வரும். பின் வரவேண்டும் என்று சொல்லி வருவார்கள்.
1.நீங்கள் வளர்ச்சி அடைந்த நிலைகள் கொண்டு உங்கள் மூச்சு பூமியில் உள்ள தீமைகளை நீக்கும்.
2.உங்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவரையும் திருந்தும்படிச் செய்யும்.

தெருவிலே ஒருவருக்கொருவர் போக்கிரியாக இருக்கின்றார்கள்… போக்கிரித்தனமாகச் செயல்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த உணர்வை நுகர்ந்தால் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் அதே வெறி உணர்வு இயக்கும்.

ஆனால் உங்களுக்குள் அந்த மகரிஷிகள் உணர்வு வளர்ந்த பின் அவருடைய துன்பத்தை மாற்றக்கூடிய சக்தியாக மாறும். இல்லையென்றால் அது ஆட்கொண்டு விடும். அதனால் தான் உங்களுக்கு இதையெல்லாம் ஞாபகப்படுத்துகின்றோம்.

சமையல் செய்யும் பொழுது அவசரப்பட்டுச் சாதத்தை ஆக்கினால் என்ன ஆகும்…?

சில ஓட்டலில் அரிசியை முக்கால் பாகம் வெந்தபின் போட்டு விடுவார்கள். கூட்டமாக இருக்கிறது சீக்கிரம் போட வேண்டும் என்று கல்யாண வீட்டில் கூட… அவசரப்பட்டு வேகுவதற்கு முன்பே சாதத்தைப் போட்டுவிடுவார்கள்.

அந்தச் சாப்பாட்டைச் சாப்பிட்ட பின் எனக்கு வயிற்றால் போகின்றது நெஞ்சு வலிக்கிறது என்று சிலர் திட்டுவார்கள்.

ஆக… அது போன்று அவசரப்பட்டு மெய் உணர்வுகளைச் சமைத்துக் கொடுத்தால் என்ன ஆகும்…? வித்தியாசமாக நினைப்பீர்கள். அப்படி நீங்கள் வித்தியாசமாக நினைத்துவிடக் கூடாது என்பதற்குத் தான் உங்களுக்குப் “பொறுமையாக உபதேசத்தைக் கொடுக்கின்றேன்…”

ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வுக்குத் தக்க பதிவாகும். ஒவ்வொரு நொடியிலும் வாழ்க்கையில் தீமைகள் வந்தது என்றால்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை அனைத்திலும் சேர்த்துக் கொண்டே வரவேண்டும்.
2.அவ்வாறு சேர்த்துக் கொள்ளும் அந்தப் பருவத்தைச் செயல்படுத்துவது தான் இத்தகைய உபதேசங்கள்.

குழம்பு வைக்கும் போது அதிலே ஒரு பொருளுடன் ஒரு பொருளைச் சேர்த்து ருசியாக மாற்றுகின்றோம் அல்லவா… அது போல் தான்…!

நாம் வேதனையான குணங்களை எடுத்து விட்டால் நல்ல அணுக்களை மாற்றும்படிச் செய்து விடுகின்றது. அந்த அணுக்களை மீண்டும் நல்லதாக மாற்றிக் கொண்டு வர வேண்டும் என்றால் அந்த அருள் உணர்வைச் சேர்த்து இதற்கு மேல் இதை மாற்ற வேண்டும். அந்தத் தீமையை அடிமையாக்க வேண்டும்.

வெங்காயச் சருகு உருவாவது போன்று ஒவ்வொரு உணர்வின் தன்மை வரும் போதும்…
1.அணுவுக்குள் அணு… அணுவுக்குள் அணு… ஓமுக்குள் ஓம்… ஓமுக்குள் ஓம்… ஓம்… ஓம்…! என்று இணைத்து
2.ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரணவத் தத்துவமாகக் கொண்டு வரும்.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு அணுக்களிலும் அந்த நுண்ணிய அணுக்களாக மாறி மாறி அதைச் சேர்த்துத் தான் உடலாக மாறியது.

அதே போன்று நாமும் இந்த அருள் உணர்வுகளை ஒவ்வொரு நொடியிலும் எடுத்து வளர்த்துக் கொண்டு வர முடியும்.

குருநாதர் கொடுத்தது எக்கச்சக்கமாக எனக்குள் இருக்கின்றது… கொஞ்சம் தான் சொல்கின்றேன்

குருநாதர் கொடுத்தது எக்கச்சக்கமாக எனக்குள் இருக்கின்றது… கொஞ்சம் தான் சொல்கின்றேன்

 

விஞ்ஞான அறிவு கொண்டு கம்ப்யூட்டரில் எண்ணிலடங்காதவைகளைப் பதிவு செய்கின்றார்கள். பதிவு செய்த பின் மீண்டும் இயக்கப்படும் பொழுது அனைத்தும் தெரிய வருகிறது.

இன்றைய நவீன நிலைகள் கொண்டு அதனுடைய இயக்கங்களில் தவறுகள் வந்தாலும் கூட “தன்னாலேயே அதைத் திருத்திக் கொள்ளும்படியாக அதில் வைத்திருக்கின்றார்கள்…”

அதே போன்று
1.அன்றாட வாழ்க்கையில் மனிதர்கள் நாம் காலையிலிருந்து இரவு வரை
2.எத்தனையோ உணர்வுகளைப் பதிவு செய்கின்றோம்… நமக்குள் சேமிக்கப்படுகின்றது.

கம்ப்யூட்டர்களில் பார்த்தோம் என்றால் பல கோடி நிலைகளைப் பதிவாக்கி அதை இயக்கும் வசதிகளையும் (CAPACITY) இன்றைய நவீன நிலைகள் கொண்டு உருவாக்கி வைத்துள்ளார்கள்.

அதே போன்று நமது மனித உடலில் எத்தனையோ விதமான ரெக்கார்டுகள் உண்டு.

அனுபவம் பெறுவதற்காக நான் காட்டிற்குள் சென்று மிருகங்களை எல்லாம் பார்த்தேன் என்றால்
1.அங்கே பெற்ற அனுபவங்களை எல்லாம் இப்பொழுது சொல்லிக் கொண்டு வருகிறேன் என்றால்
2.நான் சென்ற இடமெல்லாம் இப்பொழுது நினைவலைகளில் வந்து (அது தெரிந்து தான்) தான் சொல்ல முடிகின்றது.

உதாரணமாக நீங்கள் ரோட்டிலே செல்கின்றீர்கள். யாராவது திட்டினார்கள் என்றால்… சண்டை போட்டு அவர்கள் மோசமாகத் திட்டியிருந்தார்கள் என்றால்… ஒருவருக்கொருவர் தாக்கியிருந்தால்… அதை ஒரு தரம் நாம் பதிவாக்கி விட்டோம் என்றால்
1.அந்த இடத்திற்குச் சென்ற பின் இருவர் சண்டையிட்டால்
2.அவருடைய நினைவலைகள் அங்கே தெரிய வரும்… உடனே தெரிந்து கொள்ளலாம்.

ஏனென்றால் நம் உடலில் இது போன்று கண் கருவிழி ருக்மணி பதிவாக்கி விடுகின்றது. மீண்டும் அந்த மனிதர்களை எண்ணும் பொழுது அது இயக்குகின்றது.

இதே போன்றுதான்
1.இயற்கையின் உண்மை நிலைகளை அறிந்து கொள்வதற்காக குருநாதர் எண்ணிலடங்காத பதிவுகளைக் கொடுக்கின்றார்…
2.எக்கச்சக்கமாக எனக்குள் இருக்கின்றது.
3.கொஞ்சம் மட்டும் தான் உங்களிடம் சொல்லி வருகின்றேன்
4.அந்தந்தச் சமயத்திற்குத் தக்கவாறு.

காரணம்… ஒரு உடலில் விளைந்ததை அடுத்த உடலுக்குள் பாய்ச்சினால் அதன் நிலைக்கே மாற்றும்.

அது போல் தான் அகஸ்தியன் தான் கண்டறிந்த உண்மைகளை எல்லாம் தன் மனைவிக்கு எடுத்துச் சொல்கின்றான். இருவரும் ஒன்றாகிறார்கள்.

நம் பூமி துருவத்தின் வழி விண்ணுலக ஆற்றலை எவ்வாறு கவர்கிறது…? என்பதை உற்று நோக்குகின்றார்கள். அதிலிருந்து வரக்கூடிய சக்தியை நுகர்கின்றார்கள். அவர்கள் எடுத்துக் கொண்ட சக்தியால் கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றாகின்றது… உணர்வுகள் அனைத்தையும் ஒன்றாக்குகின்றார்கள்.
1.மின்னல்கள் வரும் பொழுது ஒளிக் கற்றைகளை இவர்கள் சுவாசிக்கின்றார்கள்
2.இரண்டு பேர் உடலிலும் ஒளியான அணுக்கள் உருவாகின்றது.

துருவப் பகுதியை எண்ணி வளர்த்துக் கொண்ட நிலையில் இரு உயிரான்மாக்களும் வெளி வரும் பொழுது எதைக் கூர்மையாக உற்று நோக்கினார்களோ அங்கே செல்கின்றார்கள். இரு உயிரும் ஒன்றாகிறது.

1.அகஸ்தியன் உடலில் இரண்டு நட்சத்திரத்தினுடைய சக்தி கார்த்திகை நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம்
2.அவன் மனைவி உடலில் அதே போன்று இரண்டு நட்சத்திரம் வேறு ஒரு ஆண் நட்சத்திரம் வேறு ஒரு பெண் நட்சத்திரம்
3.அவர்கள் இரு உயிரும் ஒன்றான நிலையில் “அந்த நான்கும் சேர்ந்து பிரம்மமாகின்றது…”
4.மின்னல் எப்படி ஆகின்றதோ… அதை உருவாக்கக்கூடிய சக்தி பெறுகின்றார்கள்.

அப்படியானது தான் துருவ நட்சத்திரம்.

அந்தத் துருவ நட்சத்திரம் நம் பூமியின் வடகிழக்குப் பகுதியில் துருவப் பகுதியின் ஈர்ப்புக்கு நேராக இருக்கின்றது. அதன் வழி தான் அதனுடைய சக்திகள் இங்கே உள்ளே வருகின்றது
1.அதை நுகர்ந்து உங்களுக்குள் வளர்த்துக் கொள்வதற்குத் தான்
2.இத்தனை உபதேசங்களையும் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.

மெய் ஞானம் பெறும் ஆற்றல்

மெய் ஞானம் பெறும் ஆற்றல்

 

ஒருவருக்கொருவர் துணை இல்லாது யாரும் வாழ முடியாது. துணையில்லாத உயிரினங்கள் சுத்தமாகவே அழிந்து விடுகின்றது… அது மடிய மடிய அந்த இனத்தின் ரூபங்களே முழுவதுமாக மடிந்து விடுகின்றது.

கடந்த காலங்களில் மனிதர்கள் உருவாவதற்கு முன் வலிமைமிக்க மிருகங்கள் வாழ்ந்திருந்தாலும்…
1.அந்தந்த இனத்தின் வலிமை அதிகமாகும் பொழுது அதற்குள்ளேயே ஒன்றை ஒன்று கொன்று புசிக்கும் நிலை விளைந்து
2.இறந்த அலைகள் வந்த பின் அதை நுகர்ந்த… பற்றுடன் வாழ்ந்த அந்த இனம் பூராமே அழிந்துவிட்டது.

பல இனப் பெருக்கங்களும் தடைப்பட்டு கடந்த கால ரூபங்கள் எல்லாம் எப்படி மறைந்தது…? என்பதை குருநாதர் இமயமலைப் பகுதிகளுக்குச் செல்லப்படும் பொழுது சில பகுதிகளிலும் சூட்சும நிலைகள் கொண்டு சில பிரதேசங்களுக்கு அழைத்துச் சென்றும்
1.அன்று வாழ்ந்த மிருகங்கள் அதன் இனமே இல்லாது எப்படி அழிந்தது…?
2.அது வாழ்ந்த நிலைகள் அங்கே எப்படிப் பதிவாகியுள்ளது…?
3.அந்த அலைகள் எப்படி உள்ளது…? அதனுடைய ரூபங்கள் எப்படி இருக்கிறது…? என்பதை குருநாதர் காண்பித்தார்.

இதை நீ வெளியிலே மற்றவர்களிடம் சொன்னாய் என்றால் போற்றலுக்கு உண்டான நிலை வரும். அந்த ரூபத்தை வரைந்து கொடுத்தால் பணமும் கிடைக்கும்.

ஆனால் விஞ்ஞான அறிவு கொண்டு இந்த உணர்வை வைத்து அந்த அலைகளை கம்ப்யூட்டர் மூலம் பிரித்து எடுப்பார்கள். அதனுடைய எண்ண அலைகள் தொடர்பு கொண்டதைக் காற்றில் இருப்பதையும் பிரிப்பான்.

உனக்குள் விளைந்த உணர்வின் தன்மையைக் கம்ப்யூட்டரில் இணைக்கப்படும் பொழுது அந்த அலைகளின் தொடரை வைத்து அந்த ரூபத்தை அறிவான். அதைக் காணும் நிலையும் வரும்.

ஆனால் அது ஜீவனுள்ளதாக வராது.

கம்ப்யூட்டர் மூலமாக உருவத்தைக் கொண்டு வந்தாலும் நுகர்ந்த உணர்வுகள் மீண்டும் அந்தக் கடந்த கால நிலைகள் எதுவோ இந்த உணர்வுகள் வளர்க்கப்பட்டு விஞ்ஞான அறிவு கொண்டு கண்டறிந்தாலும் அவன் கொண்ட நினைவாற்றல் மனித ரூபத்தை விட்டு
1.அந்த அகோரமான உணர்வுகள் இணைக்கப்பட்டு இந்த உணர்வின் தன்மை வெளிவந்த பின்
2.இன்றைய சூழ்நிலைக்குமில்லாது கடந்த காலச் சூழ்நிலைக்கும் இல்லாது இந்த உயிர் இதற்கு இணையான ரூபத்தை மாற்றிக் கொடூர மிருகமாக மாறும்.

விஞ்ஞான அறிவால் அந்த நிலை தான் வரும். அந்த ரூபங்களைப் பார்க்கும் பொழுது உடல் இச்சைக்காக அதைச் செய்தாலும் அதனுடைய பின் விளைவுகள் இப்படி இருக்கும் என்று அதையும் குருநாதர் காட்டுகின்றார்.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு பூமிக்கடியில் மண்ணைத் தோண்டுகின்றார்கள். அந்த மணலை எடுத்து
1.நுண்ணிய அலைகள் கொண்டு அதிலே திரவகத்தை இணைக்கப்படும் பொழுது மேல் எழுந்தவாறு ஆவிகளாக மாறி
2.அதிலே வலிமை பெற்றதும்… ஒவ்வொரு நிலையாகப் படிப்படியாக அந்த திரவகத்தின் அடர்த்தியைக் கூட்டக் கூட்ட
3.இன்னென்ன காலங்களில் இவ்வளவு வலிமை பெற்றது… அந்த வலிமையை இவ்வளவு காலத்தில் பெற்றது என்று
4.அந்த திரவகத்தை ஊற்ற ஊற்ற அந்த வலிமை கொண்டு கரைந்து கரைந்து செல்வதை
5.அதனுடைய காலகட்டத்தை விஞ்ஞான அறிவால் அறிகின்றார்கள்… இந்தப் பாறை இத்தனை காலத்திற்கு முந்தையது…! என்று.

இதைப் போன்றுதான் குருநாதர் விண்ணுலக ஆற்றலின் உணர்வுகளை இன்னென்ன காலங்களில் விளைந்தது என்பதை நீ நுகர்ந்து பார். அந்த உணர்வின் ஒலி அலைகள் எப்படி வருகிறது…? என்று அதனை நீ அறிந்து கொள்.

ஆனால் அதற்காக வேண்டி காலத்தைச் செலவழிக்காதே. நீ அறிந்து கொள்ளவே இதை உனக்குக் கொடுக்கின்றேன்.

இந்த அறிவின் தெளிவை மற்றவர்களுக்கு நீ ஊட்டினால் விஞ்ஞான அறிவிக்கே அடிமையாகி மனித உடலில் இச்சைகள் உருவாக்கப்பட்டு அதன் வழியில் அழியும் பருவத்தைப் பெறுவாயே தவிர… என்றும் உயிருடன் ஒன்றி நிலை கொண்டு ஒளியின் சரீரமான அந்த மகரிஷியின் அருள் வட்டத்தில் நீ இணைய முடியாது என்று தெளிவாகக் காட்டினார்.

ஆகவே அதன் வழிப்படி நான் அந்த வழிக்குச் செல்லவில்லை.
1.மெய்ஞான உணர்வுடன் வளர்ந்து கொண்டிருக்கும் ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அருள் மகரிஷிகள் உணர்வுடன் உங்களை ஒன்றச் செய்து
2.அந்த உணர்வுகளை உங்களுக்குள் விளையச் செய்து இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத் தன்மைகளை அகற்றச் செய்ய வேண்டும்.

என் ஒருவனால் அது முடியாது. நீங்கள் அனைவரும் அந்த அருள் உணர்வுகளை எடுத்து உங்களுக்குள் நினைவு கொண்டு அந்த மகரிஷியின் ஆற்றலைப் பெற வேண்டும்.

மகரிஷிகள் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும்… நாங்கள் பார்ப்போர் எல்லாம் பெற வேண்டும்… என்னைப் பார்ப்போருக்கெல்லாம் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும். நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்ற உணர்வினை உங்கள் எண்ணத்தால் பரப்பினால்
1.இது சிறுகச் சிறுக வளர்ந்து ஒவ்வொரு மனிதருக்குள்ளும் விளைந்து உணர்வலைகளைப் பெருக்கி
2.அதன் வலு கொண்டு இந்தக் காற்று மண்டலத்தில் விஞ்ஞான அறிவால் வரும் நச்சுத்தன்மைகளை மாற்ற முடியும்.

இன்று நீங்கள் சிறு கூட்டமாக இருக்கலாம்… இது பெரிதாக வளரும்

இன்று நீங்கள் சிறு கூட்டமாக இருக்கலாம்… இது பெரிதாக வளரும்

 

இன்று பார்க்கலாம்… அரசியல் பேதத்தால் எத்தனையோ பேரழிவுகள் வந்து கொண்டிருக்கின்றது இன பேதத்தாலும் மொழி பேதத்தாலும் அழிவுகள் வந்து கொண்டுள்ளது. இதிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்.
1.மக்களைக் காக்க வேண்டும். உலக மக்கள் அமைதி கொண்டு வாழ்ந்திட வேண்டும்
2.ஒவ்வொருவரும் கடவுளின் தன்மை அடைய வேண்டும்.
3.மனிதனுக்குள் அறியாத புகுந்த தீமைகளை அகற்றிட வேண்டும்.
4.இத்தகைய உணர்வுகளை நமக்குள் ஓங்கி வளர்த்திடல் வேண்டும்.

அதுவே நமது குருநாதர் காட்டிய அருள் வழி.

இன்று நீங்கள் சிறு கூட்டமாக இருக்கலாம்… இது பெரிதாக வளரும். கர்ப்பமான தாயின் கருவிலே வளரும் சிசுக்களுக்கு மகரிஷிகளின் அருள் உணர்வுகளை ஊட்டினால் உலகை காத்திடும் மகரிஷிகளை “உங்களால் சிருஷ்டிக்க முடியும்…”

1.இந்த நாட்டிலே வரும் தீமைகளைப் போக்க முடியும்… நல்ல அரசியலையும் கொண்டு வர முடியும்.
2.நம் எண்ணத்திற்குள் அத்தகைய உயர்ந்த மாற்றங்கள் வேண்டும்.

ஏனென்றால் இன்று உலகெங்கிலும் ஒருவருக்கொருவர் குறை கூறும் நிலைகளே வளர்ந்து கொண்டுள்ளது. அதைக் கேட்டுப் பதிவாக்கி அதன் வழி சென்றால் நாமும் குறையைத் தான் வளர்க்க முடியும்… தீமையைத் தான் பெருக்க முடியும் பகைமைகளைத் தான் உருவாக்க முடியும். பகைமையற்ற உலகை நாம் சிருஷ்டிக்க முடியாது.

ஆகவே தயவு செய்து இதைக் கேட்டுணர்ந்தோர்… “சாமி ஏதோ அரசியல் பேசுகிறார்…” என்று எண்ண வேண்டாம்.

மனிதனில் விளைய வைக்கும் உணர்வுகள் எதுவயே அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது… அலைகளாகப் பெருக்குகின்றது. மனிதனின் உணர்வுக்குள் எது பெருகுகின்றதோ அந்த அலைகள் படரப்படும் பொழுது
1.எதை எதை மனிதனுடைய ஆசையால் பெருக்குகின்றானோ… எதை எதையெல்லாம் எண்ணத்தால் அழிக்க எண்ணுகின்றானோ
2.அந்த உணர்வுகள் வெளியிலிருந்து வருவது அதுவே பதிவாகின்றது… கேட்போர் உணர்வுகளிலும் பதிவாகின்றது… அதுவே விளைகின்றது.
3.காற்றலைகளும் அதனால் மாறுகின்றது… மனிதனை அழித்திடும் உணர்வுகள் மனிதனுக்குள்ளேயே விளைகின்றது.

இதையெல்லாம் மாற்ற வேண்டும்… இதை நீ செய்வாய்… செய்யக் கடவாய் என்றார் குருநாதர். உனக்குள் இதை விளையச் செய்… காத்திடும் உணர்வுகள் அனைவருக்குள்ளும் விளையட்டும். தீமைகள் அகலட்டும்… “மகிழ்ந்திடும் நிலைகளில் அருள் உலகம் மலரட்டும்…!” என்று தான் குரு சொன்னார்.

அதைத்தான் உங்களிடமும் உணர்த்துகின்றோம். ஆகவே பேதங்கள் அனைத்தையும் அகற்றுங்கள்… நாடு நலம் பெற வேண்டும் என்ற உணர்வை உயர்த்துங்கள்.

இங்கே தோன்றும் மெய் ஞானிகளின் ஆற்றல்கள் அது உலகெங்கிலும் எல்லோருக்குள்ளும் தோன்றும்… நிச்சயம் இது பரவும்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பது போன்று
1.ஞானிகள் உணர்வுகளை நீங்கள் ஒவ்வொருவரும் செயல்படுத்துங்கள்.
2.அந்த நல்ல நிலைகளை நிச்சயம் நாம் பெற முடியும்… அதை நாம் உருவாக்க முடியும்.
3.அதையெல்லாம் உங்கள் வாழ்க்கையிலே பார்க்கலாம்… உங்கள் அனுபவத்திலும் பார்க்கலாம்.

அருள் ஞானிகளின் சக்திகளை உங்களுக்குள் பதிவு செய்கிறேன்… குரு அருள் உறுதுணையாக இருக்கும்

அருள் ஞானிகளின் சக்திகளை உங்களுக்குள் பதிவு செய்கிறேன்… குரு அருள் உறுதுணையாக இருக்கும்

 

உலகில் நடக்கும் எத்தனையோ நிகழ்ச்சிகளை… நடப்புகளை ஒளிபரப்பு செய்கின்றார்கள். டி.வி. மூலம் அந்தந்த ஸ்டேஷனைத் திருப்பி வைக்கும்போது அந்த அலைவரிசையில் இருந்து அதை நாம் காண முடிகின்றது.

இதைப் போல
1.மனித வாழ்க்கையில் தீமை நன்மை என்ற நிலையில் நாம் பதிவு செய்துள்ளோம்.
2.தீமை செய்வோரை எண்ணும் பொழுது அந்த உணர்வுகள் நம்மை இயக்குகின்றது… தீமையின் செயலாக ஆக்குகின்றது
3.தீமையின் உணர்வே நமக்குள் உருவாகின்றது… நோயாகவும் மாறுகின்றது.

அவ்வாறு ஆகாதப்படி தடுக்க தீமை அகற்றிய அருள் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். அதை நினைவுக்குக் கொண்டு வந்து மகரிஷிகள் அருள் சக்திகளை நாங்கள் பெறுவோம்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கி இந்த வாழ்க்கையைத் தொடருங்கள்.

1.துன்பமோ நஷ்டமோ கஷ்டமோ வந்தாலும் அதை மனதில் பதிவு செய்யாதீர்கள்.
2.மகரிஷிகள் அருள் சக்திகளை நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்…
3.உடலில் உள்ள ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று அதை வலுவாக்குங்கள்.

நோயாளியைப் பார்த்தால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரோளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்றும் அந்த நோய் நீங்க வேண்டும் உடல் நலம் பெற வேண்டும் என்றும் எண்ணுங்கள். பின் மகரிஷிகள் சக்தியால் அவர் நோய்கள் நீங்கி உடல் நலமாக வேண்டும் என்று சொல்லுங்கள்.

அவர்களையும் இதைப் போன்று மகரிஷிகள் அருள் சக்தியால் உடல் நலம் பெற வேண்டும் அருள் ஞானம் பெற வேண்டும் என்று சிறிது நேரம் எண்ணும்படி சொல்லுங்கள். அவ்வாறு அவர்களைப் பெறச் செய்தால்
1.முதலில் அவர்களை உற்றுப் பார்த்து நாம் பரிவுடன் நுகர்ந்து அவருக்கு உதவி செய்திருந்தாலும் அந்த உணர்வு நமக்குள் வராது தடுத்து
2.அருள் ஒளியை அவருக்குள் பாய்ச்ச முடியும்… இருளை அகற்ற முடியும்.

இந்த முறைப்படி செயல்பட்டு வாருங்கள்… எந்தத் தீமையும் நமக்குள் வளராது தடுக்க முடியும். தொழிலில் நஷ்டம் வந்தாலும் நஷ்டத்தைப் பற்றி எண்ணாதீர்கள்.

ஒரு வீட்டைப் புதிதாகக் கட்ட வேண்டும் என்றால் எத்தனையோ நிலைகளை அதற்குத் தயார் செய்கின்றோம். அதிலே குறைபாடுகள் வந்தால் திருத்திக் கொள்கின்றோம்.

இது போன்று புறநிலையில் குறைகள் வரும் போது அவைகளை நாம் திருத்திக் கொள்கின்றோம்.

1.எத்தகைய சூழ்நிலையிலும்… வாழ்க்கையில் நாம் எண்ணியது நடக்கவில்லை என்றால் வேதனைப்பட வேண்டியது இல்லை.
2.நாளை இதைச் சீர்படுத்துவோம்… உயர் ஞானத்தால் அதை மாற்றியமைப்போம்… தொழில் வளம் பெறுவோம்
3.எல்லா நலமும் வளமும் பெறுவோம் என்ற உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.
4.உங்கள் எண்ணம் அதை ஈடேற்றும்… செயலாக்கும்.
5.மகரிஷிகள் உணர்வுகளுடன் ஒன்றியே நீங்கள் இதைச் செயல்படுத்துங்கள்.

எம்முடைய உபதேசங்களை எல்லாம் நீங்கள் கேட்கின்றீர்கள். விடிய விடிய அதைக் கேட்டுவிட்டுக் காலையில் எழுந்த பின் இராமனுடைய சகோதரி சீதையா…? என்பது போன்று மீண்டும் கேட்டு விடாதீர்கள்.

உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த அருளை நீங்கள் ஒவ்வொருவரும் பரப்புங்கள். அறியாது வரும் இருளைப் போக்குங்கள். உங்கள் அருகில் உள்ளோருக்கும் உங்கள் பார்வையால் அவர்கள் தீமையைப் போக்கும் சக்தியாக நீங்கள் வளருங்கள்.

அந்தச் சக்தியை நீங்கள் பெறவே அடிக்கடி உபதேசிக்கின்றோம். அருள் உணர்வுகளைப் பதிவு செய்கின்றோம்.

டி.வி.யில் நாம் குறிப்பிட்ட ஸ்டேஷனைத் திருப்பி வைத்த பின் அதன் மூலம் கவர்ந்து படங்களை நாம் காணுவது போன்று அருள் ஞானிகள் உணர்வுகளைக் காற்றில் இருந்து எளிதில் பெற முடியும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கினால் அந்த அருளை உங்களுக்குள் பெற ஏதுவாகும். உங்கள் சொல் பிறர் தீமைகளை அகற்றும். உங்கள் எண்ணம் உங்கள் தொழிலை உயர்வாக்கும்… வாடிக்கையாளர்களை உயர்வாக்க உதவும்.

ஆகவே… தியானத்தின் மூலம் உங்களுக்குள் அருள் சக்திகளைக் கூட்டிக் கொள்ளுங்கள்.
1.இருந்த இடத்திலிருந்தே உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க யாம் உதவி செய்கின்றோம்.
2.அருள் வழியில் வாழுங்கள்… அருளானந்தம் பெறுங்கள்.

குருநாதர் எனக்குச் சக்தி கொடுத்தாலும்… ஆயுதம் இருக்கின்றது என்று தவறு செய்வதற்கு அல்ல…!

குருநாதர் எனக்குச் சக்தி கொடுத்தாலும்… ஆயுதம் இருக்கின்றது என்று தவறு செய்வதற்கு அல்ல…!

 

சமையல் கூடத்தில் பல காய்கறிகளையும் பல வகையான பொருட்களையும் இணைத்துக் கூடடமைப்பாகச் (சமையல் மாஸ்டர்) சமைக்கின்றார்கள். அவர்கள் செய்கின்றார்கள் என்று அதே மாதிரி நாமும் செய்தால் என்ன ஆகும்…?

அவர்கள் அதையெல்லாம் பக்குவப்படுத்தி
1.வேக வைக்கும் நேரம் பார்த்து எதனுடன் எதைச் சேர்க்க வேண்டும்…? எப்பொழுது சேர்க்க வேண்டும்…? என்று செயல்படுத்துவார்கள்
2.ஒரு பகுதி வெந்த பின் தனியாக எடுத்து வைத்து விடுவார்கள்.

அதாவது கடினமான காயாக இருக்கும். அதைத் தனியாக வேக வைத்துத் தாளித்து எடுத்து வைத்துக் கொள்வார்கள். சீக்கிரம் வேகுவதைத் தனியாகப் போட்டு எடுத்து வைத்துக் கொள்வார்கள் அதற்குப்பின் இதை இரண்டையும் சமமாகக் கலக்கும் பொழுது ஒன்று போல இருக்கும்.

ஆனால் நாமும் செய்கிறோம் என்று இரண்டு காயையும் ஒன்றாக வைத்து வேக வைத்தால் என்ன ஆகும்…? நேரம் கழித்து வேகுவதும் சீக்கிரம் வேகுவதும் ஒன்றாகச் சமைக்கப்படும் பொழுது ருசி இல்லாமல் போய் விடும்.

அவர்கள் செய்தார்கள் ருசியாக இருக்கின்றது. நாம் செய்தோம் ருசி வரவில்லை என்பர்கள்.

அதே போல அந்த கொதித்து வரும் பருவத்தைப் பார்த்து உப்பைச் சேர்ப்பார்கள்… அது மேல் பருவமாக இருக்கும்.
1.ஆனால் ஒரு சிலர் குழம்பில் முதலிலேயே உப்பைப் போட்டு விடுவார்கள் காய்கறி அந்த உப்பை எல்லாம் எடுத்துக்கொள்ளும்.
2.குழம்பில் உப்பு இல்லை என்று மீண்டும் சேர்ப்பார்கள்… எல்லாமே மாறி விடும்.

சில பெண்கள் அந்தந்த சமயம் பார்த்து குழம்பைக் கிளறி விடுவார்கள். அந்தக் காலப்பருவங்களைப் பார்த்து அது கொதிக்கும் நிலையினைக் கண்டு அந்த நெருப்பை அவர்கள் கூட்டிக் குறைத்து வைப்பார்கள்.

1.குழம்பு வைக்கும் போது நெருப்பைக் கூட்டுவதிலும் குறைப்பதிலும் அத்தனை வித்தியாசம் இருக்கின்றது. அந்தக் குழம்பின் மணமும் நன்றாக இருக்கும் சுவையும் நன்றாக இருக்கும்.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள் என்ன நடக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக… ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் குழந்தைக்கு ஆசிரியர் சொல்லிக் கொடுக்கின்றார். “அ” என்று சொல்கின்றார். ஆனால் ஆ என்று குழந்தை திருப்பிச் சொன்னால் அப்படிக் கிடையாது அ என்று சொல்ல வேண்டும் என்று திருப்பிக் கற்றுக் கொடுப்பார்.

1.குழந்தை “ஆ…” என்றே சொல்லிக் கொண்டிருக்கின்றான்.
2.இவனுக்குப் படிப்பு வராது என்று சொல்லி பள்ளியை விட்டு ஆசிரியர் அவனைப் போகச் சொல்ல முடியுமா…?
3.பள்ளியிலே கற்றுக் கொடுப்பவர்கள் அந்த நெறிப்படித் தான் சொல்லி வழி நடத்துகின்றார்கள்.

அது போலத் தான் நம் குழந்தையாக இருந்தாலும் அவன் சுட்டித்தனம் செய்யும் போது அவர்களை நெறிப்படுத்தும் நிலையாக தாய் தந்தையர் ஞானத்தைக் குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும். “என்ன சொன்னாலும் இப்படியே செய்கிறான்… இவன் உருப்பட மாடடான்…!” என்று சொல்லி விடக்கூடாது.

1.என் குழந்தை அருள் ஞானியாக வரவேண்டும் உலகைக் காத்திடும் அரும்பெரும் சக்தியாக வளர வேண்டும் என்று கருவிலேயே இந்த உணர்வுகளை ஊட்டினால்
2.தெய்வக் குழந்தைகளாக நிச்சயம் உருவாக்க முடியும்… அந்தச் சக்திகளைத் தாயும் பெறுகின்றது குழந்தையும் பெறுகின்றது.

கடப்பாரையைக் கொடுத்துள்ளார்கள். அதை வைத்துப் பூமிக்கடியில் செல்லும் எலெக்ட்ரிக் வயரை எடுக்க வேண்டும் என்றால் சூதானமாகத் தோண்ட வேண்டும். வேகமாகத் தோண்டி விடலாம் என்று கடைப்பாரையால் குத்தினால் வயரிலே பட்டால் உடனே எர்த் ஆகும். அதுவும் பழுதாகி விடும்… நம்மையும் தூக்கி எறிந்து விடும்.

இதை எல்லாம் ஏன் சொன்கிறோம் என்றால்
1.குருநாதர் எனக்குச் சக்தி கொடுத்தாலும்… ஆயுதம் இருக்கின்றது என்று தவறு செய்வதற்கு அல்ல…!
2.நன்மை செய்வதற்குத்தான் குருநாதர் சக்தி கொடுக்கின்றார்.

அதை நாம் சீராகக் கையாள வேண்டும். அதற்குத்தான் தான் இத்தனை பக்குவங்களையும் சொல்லிக் கொடுக்கின்றோம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர்கள் காண்பித்த அருள் வழியில் யாம் அருள் உணர்வுகளைப் பெற்றோம். ஆகவே யாம் குரு அருளைத்தான் போற்றுகின்றோம்.

குருநாதர் காண்பித்த அருள் வழியில் யாம் நுகர்ந்து கொண்ட அருள் உணர்வுக்குத் தக்க யாம் நன்மைகள் அடைந்தோம்.

அதே போன்று தியானவழி அன்பர்களும் குரு காண்பித்த அருள் வழியில் தாம் நுகர்ந்து கொண்ட அருள் உணர்விற்குத் தக்க நற்பயன்களைப் பெற முடியும்.

1.யாம் சந்திக்கும் அனைவருமே அருள் ஞானம் பெற வேண்டும் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி
2.இதற்காக அனைவரையும் தயார்ப்படுத்த வேண்டும் என்ற ஆசையில்தான் யாம் செயல்படுகின்றோம்.

இது எவ்வளவு பெரிய சக்தி…!

எத்தனையோ வருடம் கஷ்டப்பட்டு என்னென்ன வழியில் செயல்பட்டு எத்தனை சிரமங்கள் அனுபவித்து… அத்தனை சிரமங்களையும் தாங்கித் தாண்டி வருகின்றோமென்றால் எதற்காக…?

அனைவரும் இந்த அரும் பெரும் சக்தியைப் பெற வேண்டும் என்ற ஆசையில்தான்.

தபோவனம் வளர வேண்டும். தபோவனம் எம்மால் வளரவில்லை… குருநாதரால்தான் வளர்கின்றது.
1.குருநாதருடைய உணர்வு தான் நம் அத்தனை பேருக்கும் அமைந்துள்ள நல் சந்தர்ப்பம் ஆகும்.
2.“எல்லோருக்கும் அருள் ஞானம் கிடைக்க வேண்டும்” என்ற ஆசை உங்களுக்கு வர வேண்டும்.

நமது வாழ்க்கையில் எந்த நிலைகள் இருந்தாலும் உத்தராயணம் என்ற அந்த நிலைகள் வரவேண்டும். அந்த வலிமை நமக்குள் வர வேண்டும். குரு காட்டிய அருள் வழி கொண்டு உயிரை ஈசனாக மதித்து அவனால் உருவாக்கப்பட்ட உடலைச் சிவனாக நாம் மதித்தல் வேண்டும்.

1.இந்த உடலில் பகைமை புகாது… எதிரி வராது… அருள் உணர்வை நீங்கள் ஒவ்வொருவரும் கூட்டி
2.இனி “பிறவியில்லா நிலை பெறும் நிலையாக” பேரின்பப் பெரு வாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.

அருள் பற்று… குடும்பப் பற்று

அருள் பற்று… குடும்பப் பற்று

 

அருள் உணர்வுகளை நாம் பற்றுடன் பற்ற வேண்டும். அதன் வழி சென்றால் அருள் வழி வாழ முடியும். இருந்தாலும் குடும்பப் பற்றினை அதிகமாகச் சேர்த்து அருள் பற்றினைக் குறைக்கப்படும் பொழுது சிந்தனையை இழக்கும்படி ஆகிவிடுகின்றது.

1.என் குழந்தைக்கு இப்படியாக வேண்டும் மற்றவர்களுக்கு இப்படியாக வேண்டும் என்ற உணர்வு வந்து விட்டாலே
2.நமக்குள் பதிந்திருந்த பழைய உணர்வுகள் அனைத்தும் முன்னுக்கு வந்துவிடும்.
3.அது முன்னுக்கு வந்துவிட்டால் அதைக் காப்பது என்பதே மிகவும் சிரமம்.

ஆகவே நாம் ஒவ்வொரு நொடியிலும் ஒரு காரியத்தைச் சித்தியாக்க வேண்டும் என்றால் அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று “அதை வலுவாக்கித் தெளிந்த நிலை பெற வேண்டும்…” என்ற இந்த உணர்வை அடிக்கடி கூட்டி வந்தால் சரியாக இருக்கும்.

அதற்குக் கண்களைத் திறந்து விண்ணை நோக்கி ஏங்கி மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் ஒரு ஐந்து நிமிடமாவது எண்ணி வாழ்க்கையில் எது குறையாகத் தென்படுகின்றதோ அது நிறைவேற வேண்டும். குழந்தைக்குத் திருமணம் சீக்கிரம் நடக்க வேண்டும் அது எதிர்காலம் சிறந்த நிலை பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

ஆனால் பெண்ணுக்கு வயதாகிவிட்டது… திருமணமாகவில்லையே…! என்ற ஏக்கம் வருகின்றது. ஆனால் அந்த ஏக்கம் திருமணம் நடக்க வேண்டும் என்ற நிலையாக இருந்தால் அதில் வேதனை வராது.

சில குடும்பங்களில் வேலையில் இருந்து அவர்கள் பணி ஓய்வு பெற்று இருப்பார்கள்.
1.அந்த வயதான காலகட்டத்தில் சம்பாத்தியம் இல்லாததால் உணர்வுகள் மாறி விஷத்தின் தன்மையாகிப் புவியின் பற்று அதிகரித்து விடுகின்றது.
2.உடலின் பற்று அதிகரித்து அருள் ஞானிகள் பற்று தணிக்கிறது.

ஆனால் ஞானிகள் பற்றினைக் கூட்டினால் இந்த வாழ்க்கையில் வரும் பற்றுகள் எதையும் வெல்ல முடியும்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் எடுக்கும் உணர்வுகள்… அது ஆர்வமாக வேகமாக இருக்கும் பொழுது நலமாகிறது. ஆனால் தளர்ச்சி அடைந்தால் விஷத்தின் தன்மை கூடி விடுகின்றது ஆனால் இத்தகைய உணர்வுகள் கூடிவிட்டால் அருள் ஞானத்தை இழக்கும் சந்தர்ப்பம் ஆகி விடுகிறது.

ஒரு சிலருக்குத் தாய் கருவில் இருக்கும் பொழுது ஒன்றிலிருந்து 90 நாட்களுக்குள்
1.ஒருவருக்குத் திருமணம் ஆகவில்லை என்ற இத்தகைய குறைவான உணர்வுகளைக் கேட்டு நுகர்ந்துதிருந்தால்
2.அந்த அதிர்ச்சியின் உணர்வு கருவிலே பதிவாகி விளைந்து விடுகின்றது.
3.இது பூர்வ புண்ணியமாக அமைந்து அதனால் சில தடைகள் வருகின்றது.

ஆனால் இத்தகைய தடைகள் வந்தாலும் நாம் அந்த அருள் உணர்வுகளைப் பெற வேண்டும்… மகரிஷிகளின் அருள் சக்தி என் குழந்தை உடல் முழுவதும் படர வேண்டும். திருமணம் ஆகி அது செல்லும் குடும்பத்தில் செல்வம் செல்வாக்கு பெற வேண்டும் என்று நாம் இத்தகைய உணர்வைப் பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.

மாறாக “வயதாகி விட்டதே…” என்று சோர்வை எடுத்தால் அதனால் வேதனையும் வருகிறது. பாலிலே பாதாமைப் போட்டு விஷத்தைப் போட்டது போன்று சக்தி இழந்து விடுகின்றது.

பக்தி மார்க்கத்தில் வந்த நிலையில் நல்லது நடக்கும் பொழுது மகிழ்ச்சி வருகின்றது. அதிலே சிறிது தடை ஆகிவிட்டால் அந்தக் குறையைத் தாங்கும் நிலை அற்றுப் போய் விடுகின்றது. அந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்குத் தான் இந்த தியானமே உங்களுக்குப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்

வராகன் நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வை எடுத்தது போன்று
1.இந்த வாழ்க்கையில் வரும் இருளான உணர்வுகளை மாற்றிட அருள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றி அந்த உணர்வுகளை வலுவாக்கி
2.நாம் தெளிந்து தெரிந்து தெளிவான நிலைகள் கொண்டு நாம் செயல்பட வேண்டும்.

நம் காரியங்களை அதன் வழி கொண்டு சித்தியாக்க முடியும்.

காற்று மண்டலத்தில் நாம் அனைவரும் பரப்ப வேண்டிய அருள் சக்திகள்

காற்று மண்டலத்தில் நாம் அனைவரும் பரப்ப வேண்டிய அருள் சக்திகள்

 

இன்றைய உலகில் ஆசையில் செல்கின்றார்கள். எந்த ஆசையை எடுத்துக் கொண்டார்களோ அதன் தன்மையில் தான் செல்கின்றார்கள்.

1.ஆனால் நாம் அருள் ஞானிகள் காட்டிய உணர்வினை… காவியத் தொகுப்பினை மக்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும்.
2.நாம் ஒவ்வொருவரும் அருள் ஞானிகள் உணர்வுகளைத் திரும்பத் திரும்ப எண்ணி எடுக்கப்படும் பொழுது அது நமக்குள் வளர்கின்றது.

குறைகளைக் காணும் பொழுது குறை வளர்கின்றது.

அதே போன்று அந்த அருள் உணர்வுகள் எல்லோருக்குள்ளும் வளர வேண்டும் என்றால் துருவ தியானத்தில் நாம் பெற்ற துருவ நட்சத்திரத்தின் சக்தியை நண்பர்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களையும் அதைக் கேட்க வைக்க வேண்டும்.

1.அந்த உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்ளவும்
2.சொல்லாக வெளிப்படும் உணர்வுகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து கொள்ளவும்
3.கேட்போர் உணர்வுகளில் பதிவாகவும்
4.அதை அவர்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது அவர்களை அதை நுகரும்படி செய்ய வேண்டும்.

ஏனென்றால் நமக்குள் உருவான அருள் ஞானிகள் உணர்வின் தன்மையை வெளிப்படுத்திக் காட்ட வேண்டும்.

எம்மைச் சந்திக்க இரண்டு பேர் வந்தாலும் மூன்று பேர் இருந்தாலும் நான் இந்த அருள் உணர்வுகளைச் சொல்லிக் கொண்டே இருப்பேன்.

இருவருக்குப் பதிவு செய்தாலும் அவர்களுக்குள் அந்த அருள் உணர்வுகளை வளர்த்து
1.அவர்கள் அடுத்து அதைச் சொல்லால் சொல்லும் பொழுது காற்றில் பெருகி
2.அந்த அருள் சக்திகளை மற்றவர்கள் எடுக்க ஏதுவாக இருக்கும்… அவர்களையும் காக்க உதவும்.

அதற்காக வேண்டித் தான் அந்த அருள் ஞானிகள் உணர்வுகளை எனக்குள் இந்த உடல் வாழ்க்கையில் வளர்த்துக் கொண்டே உள்ளேன். எல்லோரும் அந்த அருள் ஞான உணர்வுகளை வளர்க்க வேண்டும் என்று விரும்புகின்றேன். இதே வழியினை ஒவ்வொருவரும் செயல்படுத்தும் படி வேண்டிக் கொள்கின்றேன்.

அருள் ஞானத்தை ஒவ்வொருவரும் வளர்த்து வாழ்க்கையில் வரும் இருளைப் போக்கி நோய்களைப் போக்கி அந்த அருள் உணர்வுகளை வளர்த்திடும் சந்தர்ப்பமாக அமைக்க வேண்டும்.

ஆகவே
1.அருள் ஞானத்தை நாம் அழியாச் சொத்தாகச் சேமிப்போம்.
2.இருளை வென்று ஒளியினை உருவாக்கும் தன்மையை நாம் அனைவரும் பெறுவோம்.

எனது வேலை ஞான வித்தை உங்களுக்குள் வளர்ப்பது தான் 

எனது வேலை ஞான வித்தை உங்களுக்குள் வளர்ப்பது தான் 

 

மீனுக்கு இரையைப் போடுகின்றோம். அது வந்து சாப்பிடுகின்றது. உடனே தூக்கிப் பாக்கெட்டில் போட்டுக் கொள்கின்றோம்.

இதே மாதிரித் தான் உங்களுக்குள் இருக்கக்கூடிய ஆசையின் உணர்வுகளுக்கு அந்த இரைகளைப் போட வேண்டும் என்று வருகின்றேன்.
1.தொழிலில் லாபம் வேண்டும் என்று வருகிறீர்கள்.
2.அப்படி வந்த பின் அந்த வழிகளில் எடுத்து அந்த அருள் ஞான வித்தை உள்ளுக்குள் செலுத்தி விடுகின்றேன்.
3.அந்த அருள் வழியை அடுத்து நீங்கள் பின்பற்றினால் இந்த ஆசையின் நிலைகள் எதுவோ
4.அடுத்து நீங்கள் தேடாமலே செல்வங்கள் தேடி வரும். தேடாமலே உங்களுக்குள் மகிழ்ச்சி வரும்.

அந்த மகிழ்ச்சி என்று உருவாக்கப்படும் பொழுது அந்தச் செல்வம் வந்தாலும் தாராளமாக அதைச் செலவழிக்க வேண்டி வரும்.

செல்வம் இருந்தாலும் பொதுவாக அதைப் பாதுகாக்கும் ஞானம் இருக்காது. சிக்கனம் செய்வோம்… சாப்பிடாமல் கூட செய்வோம்… ஒருவரை வெறுத்துப் பேசுவோம்… சண்டைக்குப் போவோம். அதற்குச் செலவழிப்போம்.

அதே சமயத்தில் அன்புடன் இருப்போம் பரிவுடன் இருப்போம்… இருந்தாலும் அதைத் துடைக்க முடிவதில்லை.

1.வேதனைப்பட்டவரை நுகர்ந்தால் நோயாகி விடுகின்றது.
2.இந்தப் பணத்தைச் செலவழித்தாலும் அது போய் விடுகின்றது.
3.இது எல்லாம் போன பிற்பாடு அந்த நோயை நீக்க முடியுமா என்றால் முடியாது.

காசை வைத்து ஆன்மாவை விலைக்கு வாங்க முடியாது…!

அருள் ஞானிகள் உணர்வை அழியாச் செல்வமாக துருவ நட்சத்திரம் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த உணர்வினை நமக்குள் சேர்த்துப் பழக வேண்டும். வாழ்க்கையே தியானம் ஆக்க வேண்டும்.

உட்கார்ந்து தியானம் செய்து கொண்டேயிருந்தால் சக்தி கிடைக்கும் என்றால்… அடுத்து சாப்பாட்டுக்கு எங்கே செல்வது…? உட்கார்ந்து கொண்டே இருந்தபின் சாப்பாடு இல்லை என்றால்… அதை யாரும் கொடுக்கவில்லை என்றால் அந்த நேரத்தில் நாம் ஏங்கிக் கொண்டிருக்க வேண்டி வரும்.

ஆகவே
1.நமக்குள் அந்த மன வலு கொண்டு தொழிலையும் பார்க்க வேண்டும் உடலையும் காக்க வேண்டும் அதற்குப் பொருளும் வேண்டும்.
2.அதற்குத் தான் ஞாபகப்படுத்துவதற்கு உங்களுக்குப் பிரசாதம் கொடுக்கும் பொழுது அதில் காசைச் சேர்த்துக் கொடுக்கின்றோம்.
3.அந்தச் செல்வம் உங்களுக்கு வரும்… மகிழ்ச்சி கிடைக்கும்.

அதையாவது எடுத்து வளர்த்துக் கொண்டீர்கள் என்றால் செல்வம் தன்னாலே வரும் என்று சொல்கிறோம்.

ஆனால் அதை விடுத்துவிட்டு… நான் தொழில் செய்கின்றேன். கஷ்டம் என்ன விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது. வாங்கியவன் பணத்தைக் கொடுக்க மாட்டேன் என்கிறான். அதனால் நான் வாங்கியவனுக்குக் கொடுக்க முடியவில்லை என்று இந்த ராகத்தைத் தான் பாடுகின்றோம்.

ஆகவே… அந்த அருள் ஞானத்தை வளர்க்க வேண்டும். அந்த அருளொளியைக் கூட்டி வளர்த்தால் காலத்தால் அந்த மகிழ்ச்சியை ஊட்டும். அருள் செல்வம் வளரும்.

அருள் செல்வம் வளர வளர யார் நம்முடன் பகைமையாக இருப்பினும் இந்த உணர்வுகள் சேரச் சேர உண்மைகளை அங்கே உணர்த்தும். தவறு என்ற உணர்வுகளை அவர் உணர்வார்.

உணரவில்லை என்றாலும் இந்த உணர்வின் தன்மை அவர் வலுவை இழக்கச் செய்யும். அவர் செய்யும் தவறுகளால் மற்ற இடங்களில் சிக்க வைக்கும்.

ஆக…
1.நம்மைப் பாதிக்கும் நிலை வராது.
2.நம்மைப் பாதுகாக்கும் நிலை வருகின்றது நல்லதைக் காக்கும் நிலை உருபெறுகின்றது

இதையெல்லாம் நாம் வழிப்படுத்துதல் வேண்டும்.