ஞானத்தை எப்படிப் பெற வேண்டும்…? எப்படி வளர்க்க வேண்டும்…? – ஈஸ்வரபட்டர்

ஞானத்தை எப்படிப் பெற வேண்டும்…? எப்படி வளர்க்க வேண்டும்…? – ஈஸ்வரபட்டர்

 

கண்டார் விண்டதில்லை… விண்டார் கண்டதில்லை…! இதன் பொருள் என்ன…?

கண்டார்..! என்பதற்கு…
1.இந்த உலகின் உண்மை ஞானத்தைக் கண்டவர்கள் விண்டு…
2.வீண் விரய நிலையில் புரளிகளாக எந்த உண்மையையும் சொல்ல மாட்டார்.

விண்டார் கண்டதில்லை… என்பதன் பொருள்
1.விண்டவன் தன் எண்ணத்தில் ஏற்றிக் கொண்ட செயலைத்தான் விண்டு புகட்டுகின்றான்.
2.இவன் கண்டது எவற்றை…?
3.ஞானப் போர்வையைப் புகழ்படுத்திக் காண்பவன் விண்டு உணர்த்தும் நிலையாகத் தான் அது இருக்கும்.

ஞானத்தைப் புகழ்ந்து சொல்வது முக்கியமில்லை… அதை நமக்குள் வளர்க்க வேண்டும்.. அது தான் முக்கியம்…!

ஆக…
1.தன் ஞானத்தை வளர்க்க வேண்டும் என்றால் தியானம் வேண்டும்..
2.தியானம் பெற ஞானம் வேண்டும்.

ஞானம் என்பது மனிதனுக்கு எப்படி வளருகின்றது..?

பல குண நிலையில் வாழும் மனிதன்
1.தன் எண்ண கதியிலேயே… தன் குணமுடனே…
2.ஞானம் பெறல் வேண்டும் என்றால் எந்த ஞானமும் வளராது.
3.பல குணங்களுடன் உள்ளவனால் தியானத்தின் செயல் முறைக்கே வர முடியாது.

தியானம் என்பது… மனிதனின் குணத்தைச் சமமான சாந்த நிலை பெற்ற பிறகு
1.சாந்தத்தினால் இவ்வெண்னத்தை ஓ…ம் என்ற நாதமுடன் எடுக்கும் முறைப்படுத்தி
2.தன் கவன நிலையை அதன் வழி செலுத்தும் பொழுது தான் ஞானம் பிறக்கின்றது.

மனிதனின் வாழ்க்கையில் சலிப்பு சங்கடம் கோபம் ஆத்திரம் இப்படியெல்லாம் ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று வளர்வது இயற்கையே.

இருந்தாலும்… அந்த இயற்கையின் கதியில்… அதே வேகத்தில்… நம் எண்ணத்தைப் பாய்ச்சி விட்டால் வளரும் நிலையற்று அழிக்கும் நிலைக்குச் செல்கின்றான் மனிதன்.

நம் ஆடையில் ஏற்படும் கறையை…
1.எப்படி அகற்றினால் அது போகும் என்று “பாங்காக…” (பக்குவமாக)
2.மற்ற இடத்தில் கறைபடியாமல்…
3.படிந்த இந்தக் கறையைப் போக்க நம் செயல்கள் இருந்தால்…
4.துணி பாழ்படாமல் சுத்தமாக அகற்றி விடலாம்.

கறை படிந்து விட்டதே…! என்று சலிப்புப் பட்டு அதை அடித்துத் தோய்த்துச் செயல்பட்டால் அந்தக் கறையும் போகாது… துணி தான் நைந்து போகும்.

மின்சாரத்தைப் பாய்ச்சி ஒளியைக் காண்கின்றோம். எந்த அளவு விகிதம் செலுத்தப்படுகின்றதோ அதற்குகந்த வெளிச்சத்தைத் தான் அந்த மின் ஒளி ஏற்றித் தருகின்றது.

அதைப் போல்… இவ்வெண்ணத்தை எந்த ஒரு செயல்முறைக்கும்
1.சாந்தமாக ஞானத்தைக் கொண்டு ஆராய்ந்து செயல்பட்டால்
2.வாழ்க்கையில் ஏற்படும் குறைகளுக்கு வழி முறை அமைத்துக் கொள்ளலாம்.

சலிப்பையும் சங்கடத்தையும் ஏற்படுத்திக் கொண்டால் கோபமும் அழுகையும் தான் ஏற்படும்.

எந்த ஒரு சூழ்நிலையானாலும்…
1.எண்ணத்தால் ஞானத்தைப் பாய்ச்சி அதிலுள்ள சிக்கலை அகற்றிவிட்டால் சாந்தமான சமநிலை பெற முடியும்
2.மேன்மேலும் நம் எண்ணத்தின் சாந்த நிலை கூடக் கூட… நம் எண்ணமே சாந்தமாகி
3.ஞானத்தால் எடுக்கும் வழித் தொடருக்குச் “சக்தி நிலை கூடுகிறது…”

சாந்தமான நிலை பெற ஞானத்தால் நம் வாழ்க்கையை வழிப்படுத்திக் கொண்டோமானால் தான் நாம் எடுக்கும் வளர்ச்சிக்கு வழி அமைத்துக் கொள்ள முடியும்.

எந்த ஒரு சிக்கலுக்கும் எண்ணத்தைத் தெளிவுபடுத்தும் ஆத்மாவினால்… சாந்த நிலை பெறுவது என்பது கடினமல்ல.
1.பல சிக்கல்கள் வந்தாலும்…
2.தன் எண்ணத்தைக் கொண்டு அவர்கள் தெளிவு ஏற்படுத்திக் கொண்டேயிருப்பார்கள்.

ஆனாலும் அவர்களின் குண அமிலத்தில் அவர்கள் வளர்த்துக் கொண்ட “அவர்களுக்குச் சொந்தமான வளர்ச்சி நிலை தான்…” மேலோங்கி நிற்கும்.

எண்ணத்தைச் சாந்தப்படுத்தி சமநிலை பெறும் ஆத்மாவினால் நிச்சயம் ஞான ஒளி ஈர்ப்பின் வழியில் செல்ல முடியும்.

Leave a Reply