
ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்ற ஒலிக்குள் இருக்கும் உட்பொருள்
ஒருவர் திட்டுகின்றார்… அதைக் கூர்மையாகக் கேட்டால் அவர் திட்டக்கூடிய எண்ணம் நமக்குள் பட்ட உடனே வேதனையான உணர்ச்சியைத் தூண்டுகின்றது.
வேதனையைத் தூண்டும் போது அதன் வழி தான் நாம் நடக்கின்றோம். இதைப் போன்ற நிலையில் இருந்து அடுத்து அந்த வேதனைப்படும் உணர்ச்சிகள் நம் உடலில் மற்ற உணர்வுடன் அது பரவும் பொழுது நமது நல்ல எண்ணங்கள் சரியாக இயக்க முடியாதபடி தடைப்படுத்துகின்றது.
1.நல்லதை இயக்கவிடாமல் தடுக்கும் அந்தச் சக்தியைத் தடைப்படுத்த வேண்டுமல்லவா…!
2.அதற்கு என்ன வழி…?
“ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…” என்று நாம் அடிக்கடி சொல்கின்றோம். நாம் அனைவரும் அப்படி ஏகமாகச் சொல்லும் பொழுது சிலருடைய குரல்கள் வித்தியாசப்பட்டாலும் மற்றவர்களுடன் அது இணைந்து… தனித்துப் பிரித்துக் காட்டாது.
ஒருவருக்கு சப்தம் அதிகமாக இருந்தது… ஒருவருடைய குரல் வீச்சாக இருந்தது என்றாலும் தொனியைக் குறைத்து விட்டால் ஒன்று போல் இனிமையாக இருக்கும்.
உதாரணமாக வாத்தியங்கள் வாசிக்கப்படும் பொழுது அதிலே ஒருவர் பாடுகின்றார். அதிலே பல விதமான நாதங்கள் உண்டு. அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து இனிமையாகக் கேட்க வைக்கின்றார்கள்.
அதைப் போல பல விதமான எண்ணங்கள் கொண்டு நாம் வந்திருந்தாலும் ஒருமித்த எண்ணங்கள் கொண்டு ஒன்று போல ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் பொழுது நாம் எழுப்பும் குரல் எல்லோருடைய குரலும் ஒன்றி இருக்க வேண்டும்.
1.ஓ…ம் என்பது நமக்குள் ஜீவனாக இருந்து இயங்கிக் கொண்டிருக்கும் உயிர்.
2.நாம் எண்ணியதை ஜீவனாக்கச் செய்வது உயிர்.
3.ஜீவன் ஆனபின் உடலாக இணையச் செய்வதும் உயிர். அதனால் தான் ஓ…ம் ஈஸ்வரா…!
4.ஈஸ்வரா என்றால் இயக்கச் சக்தி.
5.குருதேவா…! நம் உடலில் உள்ள அனைத்து உணர்வுகளுக்கும் உயிர் குருவாக இருக்கின்றது.
எல்லோரும் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.
ஒவ்வொரு சமயமும் இதைத் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றோம். இதைக் கேட்டாலும் கூட ஓ…ம் என்ற பிரணவத்திற்கு என்ன பொருள்…? என்று திரும்பியும் கேட்பார்கள்.
ஓ…ம் என்றால் எங்கேயோ பிரணவம் இருக்கிறது என்று எண்ணியே பழக்கப்பட்டு விட்டோம். ஆகவே தெளிவாகத் தெரிந்து மனதில் பதிய வைக்கத் தான் திரும்பவும் ஞாபகப்படுத்துகின்றோம்.
உபதேசம் ஆரம்பிப்பதற்கு முன் இந்த மைக்கை எப்படிச் சரி செய்து கொள்கின்றோமோ இதைப் போன்று
1.ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் போது
2.நம் உயிரின் இயக்கம் மற்ற இந்த உலகத் தொடர்பு கொண்ட உணர்வுகள் நம் ஆன்மாவாக இருக்கப்படும் பொழுது
3.அந்த நிலைகள் நமக்குள் இயங்காத வண்ணம் அதைத் தடுத்து நிறுத்தவும்
4.நம்முடைய எண்ண ஏக்க அலைகள் இப்போது உபதேசிப்பதை அது ஊழ்வினையாகப் பதிவு செய்வதற்கும் உதவியாக இருக்கும்.
“எண்ணிலடங்காத உணர்வின் சுழற்சிகள்” நம் ஆன்மாவில் உண்டு. அதையெல்லாம் நம் சுவாசத்திற்குள் வராதபடி தடுத்துவிட்டு மெய் ஞானிகளின் உணர்வை உள் புகுத்துவதற்காகத்தான் நாம் எல்லோரும் சேர்ந்து ஒரே உணர்வாக ஓ..ம் ஈஸ்வரா… குருதேவா…” என்று சொல்கிறோம்.
விண்ணுலகில் உள்ள ஞானிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் உயிரிலே… புருவ மத்தியிலே எண்ணும் போது
1.அவர்கள் ஈர்ப்புக்குள் நாம் செல்கிறோம்… அதைக் கவரும் ஆற்றலும் பெறுகின்றோம்.
2.புருவ மத்தியில் அடிக்கடி எண்ண எண்ண நம் இயக்கம் உயிர் வழி சுவாசமாக அமையும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.