வசிஷ்டர் – கவர்ந்து கொண்ட சக்தி

வசிஷ்டர் – கவர்ந்து கொண்ட சக்தி

 

மனித வாழ்க்கையில் அதிகமாக சண்டையிடுவரையோ கலவரம் நடக்கும் சில செயல்களையோ நாம் உற்றுப் பார்க்கப்படும் பொழுது அதே உணர்வுகள் நமக்குள் பதிவாகி நம் ஆன்மாவில் பால்வெளி மண்டலமாக ஆகிவிடுகிறது.

நாம் நுகர்ந்த உணர்வுகள் பதிவானாலும்
1.பதிவான உணர்வுகளை அப்போதே நாம் சுவாசித்து உயிரிலே பட்ட பின்
2.ஓ…! என்று ஜீவ அணுவாக மாற்றும் கருத்தன்மையாக ஒரு இயக்கச் சக்தியின் அணுவாக மாற்றும் தன்மை பெறுகின்றது.
3.அப்படிப் பெற்ற அந்த உணர்வுகள் நம் ரத்தத்தில் கலந்தவுடனே அது கருத்தன்மை அடையும் தன்மை வருகின்றது

செடியில் இருந்து வரும் சத்தினைச் சூரியன் கவர்ந்து பரமாத்மாவிலே பரவச் செய்தால் அது மற்ற தாவர இனத்தை ஜீவன் ஊட்டும் சக்தியாக மாறுகின்றது.

இதே போலத் தான் நம் உடலில் பதிவான உணர்வுகள் பதிவான நிலைகளில் அதைக் கவர்ந்து கொண்ட பின் நம் ஆன்மாவாக மாற்றி… எதன் பசி அதிகமோ அதன் வலு அதிகமாக இயக்கப்படும் பொழுது… அதன் குணத்தின் தன்மை கொண்டு தான் நாம் இயக்குகின்றோம்.

நாம் நினைக்கின்றோம்…! இவன் கோபக்காரன்… அவர்கள் இப்படி… இவர்கள் இப்படி என்று…! ஆனால் சந்தர்ப்பத்தில் பதிவான இந்த உணர்வு தான்… அது எதன் வலுவோ அதைக் கொண்டு இயக்குகின்றது.

எதன் உணர்வு நம் உடலுக்குள் அதிகமாகின்றதோ உள் நின்று இயக்குவது அதன் தன்மை. அதனால் தான் இராமாயணத்திலே தசரதச் சக்கரவர்த்திக்கு “வசிஷ்டர் பிரம்மகுரு…” என்று காட்டுகின்றார்கள்.

ஒருவன் சண்டை இடுகிறான் என்றால் “என்ன…?” என்று வேடிக்கை பார்க்க மனதினைச் செலுத்தினால் அதைக் கவர்கிறோம் என்று பொருள். அது தான் வசிஷ்டர் என்பது.
1.நாம் எதை உற்றுப் பார்த்து உணர்வின் தன்மை கவர்கின்றோமோ
2.அப்படிக் கவர்ந்த உணர்வுகள் நம் உயிரிலே பட்டு உணர்ச்சிகள் இயக்கப்பட்டாலும்
3.அந்த உணர்வுகள் நமக்குள் பிரம்மம் ஆகி விடுகிறது… அதனால் தான் வசிஷ்டர்.

நாம் கவர்ந்து கொண்ட உணர்வுகள் ரத்தத்தில் கலந்து அது பிரம்மமாக்கும் தன்மை பெறுகின்றது என்பதைத்தான் பத்தாவது நிலை அடையக்கூடிய தசரதச் சக்கரவர்த்திக்கு வசிஷ்டர் பிரம்மகுரு என்று காட்டுகின்றார்கள்.

நாம் தீமைகளைச் சந்தர்ப்பத்தில் பார்க்க நேர்ந்தால்…
1.என்ன செய்கின்றான்…? ஏது செய்கின்றான்…? தவறு செய்கின்ரானா…?
2.குற்றங்கள் செய்கின்றானா…? ரொம்பவும் பிழை செய்கின்றானா…?
3.வேதனைப்படுத்துகின்றானா…? என்ற எண்ணங்கள் கொண்டு அந்த மனிதனை உற்று நோக்கினால்
4.அந்த உணர்வின் சக்தி நமக்குள் பதிவாகி உயிரிலே பட்டு இயங்கத் தொடங்குகிறது
5.ஆகவே கவர்ந்து கொண்ட அந்த சக்தி வசிஷ்டர்…!

சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷம்… காந்தம் விஷத்தைக் கவர்ந்து கொண்ட பின் வசிஷ்டர். கவர்ந்து கொண்ட அதே காந்தம் ஒரு சத்தினைக் கவர்ந்து கொண்டால் வசிஷ்டர். ஆண்பாலாக மாறுகின்றது ஆண்பாலுக்குப் பிரம்மம் என்று பெயர்.

பிரம்மாவின் மனைவி அங்கே சரஸ்வதி. எந்தச் சத்தின் தன்மை கொண்டு இயக்குகின்றதோ அந்த ஞானத்தின் வழி அந்த அணுக்கள் இயக்கும்…! என்று பொருள்.

இன்று உலகம் எப்படி இருக்கிறது…? என்பதை நாம் தெரிந்து கொண்டோம். ஆனால்
1.இயற்கை நம்மை எப்படி இயக்குகின்றது…? எதன் வழி நாம் செல்கின்றோம்…?
2.நாம் குற்றவாளியா… அல்லது குற்றமற்றவர்களா…?
3.குற்றமற்றவராக இருப்பது குற்றமான செயல்களைச் செய்வது எப்படி…?
4.குற்றத்தை முன்னிலைப்படுத்தி இயக்குவது எது…? என்று
5.நம்மை நாம் அறிந்து கொள்வதற்குத் தான் இதை எல்லாம் உங்களுக்குத் தெளிவாக்குகின்றேன்.

கார்த்திகை மாதத்தின் சிறப்பு

கார்த்திகை மாதத்தின் சிறப்பு

 

ஞானிகள் காண்பித்த கார்த்திகைத் தீபத் திருநாளில் நாம் நமது வீட்டு வாசல்படியில் தீபங்களை வைக்கின்றோம். வீட்டிற்குள் இருந்தாலும் புற நிலைகளில் தீபங்களை வைக்கும் பொழுது அங்கே இருள் விலகிப் “பொருள் தெரிகின்றது…”

1.வாழ்க்கையில் நாம் எப்பொழுதுமே பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்ற உண்மையை உணர்த்துவதற்குத்தான்
2.“கார்த்திகை தீபங்களை” வீட்டு வாசல்படியில் ஏற்றச் செய்தனர், ஞானிகள்.

கார்த்திகைத் தீபம் என்கிறோம். ஏனென்றால் நமது பிரபஞ்சத்தில் கார்த்திகை நட்சத்திரத்திலிருந்து வெளிப்படக்கூடிய உணர்வுகள் அது எந்தப் பொருளில் எல்லாம் கலக்கின்றதோ அந்தப் பொருளின் தன்மையைப் “பிரகாசிக்கச் செய்யும்” தன்மை கொண்டது.

உதாரணமாக கசப்பான பொருள் ஒன்று இருக்கிறதென்றால் கசப்பின் தன்மையை “உணர்ச்சியின் மூலம் வெளிப்படுத்தும் அறிவாக” அங்கு இருக்கும்.

ஆகவே கார்த்திகை நட்சத்திரம், நமது பிரபஞ்சத்திற்கு ஒரு முக்கியமான நட்சத்திரம்.

நாம் வெளிச்சத்தை வைத்துப் பொருளைக் காண்பதைப் போன்று
1.கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வுகள் அதிகமாக எந்தெந்தக் குணங்களில் கலந்துள்ளதோ
2.அந்தக் குணத்தின் சிறப்பு மிக்க நிலையை வெளிப்படுத்தும்,
3.அறியச் செய்யும் ஆற்றல் மிக்கவராக அந்த எண்ணங்களைப் பிரதிபலிக்கச் செய்யும்.

கார்த்திகை மாதத்தில் நமது வீட்டு வாசல்படிகளில் விளக்குகளை ஏற்றி வைக்கிறோமென்றால்… அறிவின் ஒளியின் சுடராக நாம் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்பதை நமக்கு நினைவுபடுத்துவதற்காக ஞானிகளால் உருவாக்கப்பட்ட நிலைதான் அது.

அவசரப்பட்டு ஒரு தொழில் செய்ய வேண்டும் பொருள் சேர்க்க வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம். அந்த ஆசை நமக்குள் வளர்ந்து விட்டால் “அதையே முழுமூச்சாகச் செயல்படுத்தத் தொடங்குகின்றோம்…”

ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில்…
1.நாம் அறிவின் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் ஆற்றலை இழந்து விடுகின்றோம்.
2.ஏனெனில், அவசரம் எனும் உணர்வால் நாம் சீராகச் சிந்திக்காது எடுத்த முடிவால் விளைந்த நிலையிது.

உதாரணமாக நாம் ஒருவரைச் சந்தித்து வியாபாரத்தைப் பற்றிப் பேசப் போகிறோம் அல்லது அவர் மூலம் வியாபாரம் சம்பந்தமான விஷயங்களைத் தெரிந்து கொள்ளப் போகிறோம் என்று செல்லும் பொழுது “அவருடைய சூழ்நிலை எவ்வாறு…?” என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அவரிடம் பேசும் பொழுது அவருடைய முகத்தை உற்றுப் பார்த்தால், அவருடைய நிலை தெரியும். அப்பொழுது நமக்குள் இருக்கும் அறிவு என்பது அவரின் உணர்வின் தன்மைகளை நமக்குள் தெளிவாக்கும்.

தீபத்தைப் பொருத்தியபின் அதனின் வெளிச்சத்தில் நாம் எப்படிப் பொருள்களைக் காண்கின்றோமோ அதைப் போன்று
1.நாம் சிந்திக்கும் அறிவினைப் பயன்படுத்தி சிறிது நேரம் சிந்தித்து அவருடைய செயலாக்கங்களை அறிந்து கொண்டபின்
2.நாம் சொற்களைச் சொல்ல வேண்டும்… அப்பொழுது, அது நமக்கு துணையாக இருக்கும்.

ஆனால் நாம் நம்முடைய காரியத்திற்காக அவரைப் பார்க்கப் போய் அவருடைய சூழ்நிலை தெரியாது அவசரத்தில் அவரிடம் போய்ப் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தால்… அவர் தன் சலிப்பால் சஞ்சலத்தால் நமக்குச் சீரான பதிலைக் கொடுக்க மாட்டார்.

நாம் விரும்பிப் போய் சந்திக்கும் பொழுது அவர் சரியான பதிலைக் கொடுக்கவில்லை என்றால் அவரைக் குற்றவாளியாகக் கருதுவோம்.
1.அவர் கர்வம் உள்ளவராக இருக்கிறார்
2.நாம் கேட்டால் பதில் சொல்லமாட்டேன் என்கிறார் என்ற உணர்வுகள் வந்து
3.நம்முடைய அவசரத்திற்கு அவரைக் குற்றவாளியாக்கும் நினைவினை ஊட்டுகின்றது.

இதற்கு மாறாக அவர் சந்தோஷமாக இருக்கும் பொழுது அவரைச் சந்தித்தோம் என்றால் அவர் நம்மை வரவேற்று அதற்குண்டான சொல்களைச் சொல்லுவார்.

எப்படி நாம் தீபத்தை ஏற்றி அதனின் வெளிச்சத்தைக் கொண்டு மற்ற பொருள்களைத் தெரிந்து கொள்கின்றோமோ அதைப் போன்றுதான்
1.கார்த்திகை நட்சத்திரத்தின் ஒளியலைகள் ஒன்றோடொன்று மோதும் பொழுது
2.அதன் அறிவின் தன்மை அறிவிக்கும் சக்தி பெற்றது.

ஆகவே நாம் ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்று எண்ணினால் சூழ்நிலைகளுக்கொப்பச் சொற்களைச் சொல்ல வேண்டும். அது நமக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.

நாம் எப்படியும் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடித்து விடவேண்டும் என்ற அவசர உணர்வுடன் ஒருவரிடம் தொடர்பு கொள்ளப்படும் பொழுது அவருடைய சூழ்நிலைக்கொப்பதான் நமக்கு பதில் வரும். நமது காரியமும் சித்தியாகாது.

அதே சமயம் நாம் அவரைச் சந்தித்ததால் அவர் மேல் வெறுப்படையும் தன்மையும், அதற்குண்டான சூழ்நிலையும் உருவாகும். அவரைக் குறை கூறும் உணர்வுக்கே நமது உணர்வு வலு பெறும்.

1.குறையான உணர்வுகளை நாம் நம்முள் பதிவாக்கி விட்டால்
2.அதன்பின் அவரைச் சந்திக்கும் பொழுது சூழ்நிலை சமமாக இருந்தாலும்
3.அவரை உற்றுப் பார்த்தாலே பழைய நினைவுகள் தோன்றி வெறுப்பின் உணர்வைத் தோற்றுவிக்கும்.
4.அப்படிப்பட்ட நிலையில் நம்முடைய சொல் அவரிடம் சீராகப் பேசும் தன்மையை இழந்து விடுகின்றது.

ஒருவர் மேல் உங்களுக்கு வெறுப்போ அல்லது பயமோ ஏற்பட்டு விட்டால் நீங்கள் அவரிடம் ஏதாவது ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால் கூட உங்களிடத்தில் ஒருவிதமான பதட்ட நிலைகள் ஏற்படும்.

இதைப் போன்று நமது வாழ்க்கையில் நம்மையறியாமலே சில சந்தர்ப்பங்கள் நமது நல்ல குணங்களைப் பாழ்படுத்தும்.

ஆகவே தீபத்தின் வெளிச்சத்தில் நாம் எப்படிப் பொருள்களைக் காண்கின்றோமோ இதைப் போன்று
1.நாம் எந்த ஒரு காரியத்திற்குச் சென்றாலும் முதலில் நமக்குள் “அறிவின் ஒளியைப்” பொருத்திக் கொள்ள வேண்டும்.
2.அந்தச் சுடரின் உணர்வின் அலைகளைப் பரப்ப வேண்டும்.

அவ்வாறு நாம் பரப்பினோம் என்றால் நாம் செல்லக்கூடிய காரியமும் பயன் பெறும். நம்முடைய சொற்களும் கேட்போரின் உணர்வுகளில் தெளிவை ஏற்படுத்தும்.

இவைகளெல்லாம் நாம் அறிந்து கொள்வதற்குத்தான் “கார்த்திகை தீபத்தை” ஏற்றி வைப்பது.

நமது உணர்வுகள் எப்படி மாறுபடுகிறதென்றால்… நாம் ஒருவரைச் சந்தித்துவிட்டுத் திரும்பி வரப்படும் பொழுது நம்முடைய உணர்வுக்குத் தக்க அவருடைய செயலாக்கங்கள் இல்லையென்றால் “அவரைக் குறை கூறும் தன்மைக்கு…” வந்துவிடுகின்றோம்.

நாம் ஒருவருடன் பிரியமாக பேசிக் கொண்டிருப்போம். இருந்தாலும், நமக்குள் நம் உணர்வின் துணை கொண்டே அவரிடம் பேசப்படும் பொழுது அவருக்குள் பதில் இருக்கலாம். ஆனால் நாம் நம் மனதிற்குள் “ஒரு குற்றவாளி…” என்ற உணர்வைக் கலந்தே நாம் சுவாசிப்போம்.
1.ஆனால் இந்த எண்ணத்தை அவரிடம் வெளிப்படையாக தெரிவிக்காத நிலைகள் இருப்பினும்
2.இந்த உணர்வுகளை நமது முகமும் கண்களும் காட்டிக் கொடுத்துவிடும்.

ஒருவரை நாம் சந்திக்கும் பொழுது இத்தகைய உணர்வுகள் இரண்டையும் சுவாசிக்கும் பொழுது அந்த உணர்வுகள் கண்களின் ஒளி அலைகளாக… “பார்க்கும் பார்வையும் அந்தப் பார்வைக்கொப்ப உணர்வும் இணைந்து சொற்களாக வெளிவரும்…”

ஆகவே நம்மையறியாமலேயே நம்முடைய நினைவாற்றலை வெளிப்படுத்தும். அவர் அன்புடன் பேசினாலும் அதை நாம் நமக்குள் நம்முடைய எண்ணங்களுக்கொப்ப மாற்றி நாம் அவரைக் குறை கூற வேண்டிவரும்.

1.இதைப் போன்று குறை கூறும் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகத்தையும் சொல்லையும் பார்த்தபின்
2.அவரிடத்திலும் குறையான உணர்வுகள் ஏற்பட்டு அவர் சொல்லும் சீராக இல்லாமல் தடுமாற்றமான நிலைகளில் பதில் வரும்.

இது தான், கீதையில் “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…!” என்ற நிலைகளில் உணர்த்தப்படுகின்றது.

நாம் என்ணும் உணர்வுகள் நமது கண் வழி பாய்வதும் உடலிலிருந்து வெளிப்படும் மணமும் இவை இரண்டும் கலந்து, நாம் சொல்லும் உணர்வின் தொனிகளும் ஒலிகளும் “வித்தியாசமான நிலைகளில் வெளி வரும்…”

இதுவெல்லாம் நம் அன்றாட வாழ்க்கையில் நடக்கக்கூடிய சம்பவங்கள்.

எனவே நமக்குள் வரும் தீமைகளில் இருந்து விடுபடும் நிலையாக வெளிச்சத்தில் பொருள் எப்படித் தெரிகின்றதோ அதைப் போன்று, நமது வாழ்க்கையில் தெரிந்து தெளிந்து தெளிவான வாழ்க்கை வாழ்ந்திடுவோம்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் ஆறாவது அறிவைச் சீராக்கும் நிலையாக…
1.ஒளியின் சுடராக இருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் அனைவரும் நமக்குள் பெருக்கி
2.நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றுவோம்.

மகரிஷிகள் உபதேசித்து உணர்த்திய அருள் நெறிகளை வாழ்க்கையில் கடைப்பிடிப்போம். மகரிஷிகளின் அருள் சக்தியை, நாம் நமக்குள் ஒளியின் சுடராக ஏற்றி, மகிழ்ந்து வாழ்வோம்.
1.பொருளறிந்து செயல்படுவோம்
2.சிந்தித்துச் செயல்படுவோம்
3.பேரருளைப் பெறுவோம் பேரொளியாக மாற்றுவோம்.
4.நாம் அனைவரும், மகரிஷிகள் சென்ற பாதையில் செல்வோம்.
5.இந்த உலகை “மகரிஷிகளின் உலகமாக” மாற்றுவோம்.

வராகன்

வராகன்

 

வராகன்… தான் எவ்வாறு கெட்டதை நீக்கி நீக்கி… நாற்றத்தை நீக்கி, நல்ல உணர்வினைத் தனக்குள் எடுத்தது…? என்று ஞானியர்கள் சொன்னார்களோ அதைப் போல
1.இப்பொழுது உங்கள் எண்ணங்கள் மகரிஷிகள் காட்டிய மெய் உணர்வுகளைக் கூர்மையாகக் கவர
2.உங்களின் நினைவின் ஆற்றலை விண்ணை நோக்கிச் செலுத்துவதற்கே இந்த உபதேசம்.

வராக அவதாரம் என்றால் என்ன…?

நாற்றத்தைப் பிளந்துவிட்டுச் சாக்கடைக்குள் இருக்கும் நல்ல பொருளைப் பன்றி நுகர்ந்து எடுக்கின்றது. மண்ணைப் பிளந்துவிட்டுத் தன் உணவின் தன்மையைத் தன் நுகரும் ஆற்றலால் அது எடுத்து உணவாக உட்கொள்கின்றது.

தீமையை (நாற்றத்தை) நீக்கி நல்லதை உட்கொண்ட உணர்வின் சத்து அதே ஞானமாக அதை எண்ணிய நிலைகள் கொண்டு எதை எண்ணியதோ காந்தம் லட்சுமி இதைக் கவருகின்றது.

அதாவது… தன் உடலிலிருந்து கெட்டதை நீக்கிவிட்டு நல்லதைப் பெற வேண்டுமென்ற ஞானத்தின் எண்ணங்களை அங்கே அது கவருகின்றது.

எடுத்துக் கொண்ட இவையனைத்தையும் வெப்ப காந்தங்கள் படைக்கின்றது என்ற இந்த உண்மையின் நிலைகளைத் தெரிந்து கொள்வதற்குத்தான்
1.மூன்று உணர்வின் நிலைகள் ஆயுதங்களாக ஒவ்வொரு உடலிலும் இயங்கியதை (வெப்பம் காந்தம் விஷம்)
2.அதை உணர்த்த ஆயுத பூஜை என்று வைத்தது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மைச் சாக்கடையில் உட்கார வைத்துத் தான் உபதேசித்தார். இப்பொழுது, நீங்கள் சாக்கடையில் உட்காரவில்லை. நல்ல இடத்தில் மகிழ்ச்சியான இடத்தில் உட்கார்ந்து இருக்கின்றீர்கள்.

அன்று… பைத்தியத்துடன் சேர்ந்து நான் சாக்கடையில் உட்கார்ந்து இருக்கின்றேன் என்று எம்மைக் கிண்டல் கேலி செய்தார்கள்

ஏனென்றால் அங்கே உட்கார்ந்திருந்த நிலையில்… எம்மை டீ காபி வாங்கி வரச் சொல்லி, சாக்கடையில் இருந்த கழிவைப் போட்டு “நீ குடி…!” என்கிறார் குருநாதர்.

“அய்யய்ய…” என்று யாம் மறுக்கின்றோம்.

கூர்மை அவதாரம் வராக அவதாரம் எவ்வாறு இருக்கும்…?

கூர்மையாக அந்த நாற்றத்தை எண்ணுகின்றாய். அந்த உணர்வின் சத்து, உனக்குள் நாற்றமாகின்றது. இதைப் பார்க்கும் அடுத்தவர்கள் என்ன செய்வார்கள்…? என்று எண்ணுகின்றாய், அந்த உணர்வின் சத்து உனக்குள் வருகின்றது.

ஆனால் இந்தப் பன்றி என்ன செய்கின்றது…? நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வை எடுத்தது.
1.அது நாற்றத்தை எண்ணவில்லை… நீ நாற்றத்தை எண்ணுகின்றாய்.
2.அடுத்தவன் என்ன சொல்கின்றான்…? என்று எண்ணுகின்றாய்.

இப்போது இதைச் சேர்த்துக் கொள்கிறாயா…? அல்லது அதைச் சேர்த்துக் கொள்கிறாயா…?
1.நீ உயர்ந்த நிலையைச் சேர்த்துக் கொள்கின்றாயா…? அல்லது
2.நாற்றத்தை நீக்க வேண்டும் என்று எண்ணுகின்றாயா…?

நாற்றத்தை எண்ணியவுடனே… நீ எதை எண்ணுகின்றாயோ அதை உன் உயிர் படைக்கின்றது… அதுவாகின்றாய். கீதையிலே… “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…” என்று உணர்த்தப்பட்டுள்ளது.

“அய்யய்ய…” என்று கண்ணில் பார்க்கின்றேன். நாற்றம் என்று எண்ணுகின்றேன். அப்பொழுது இந்த எண்ணம் வரப்படும் பொழுது, கண்ணன் (கண்கள்) என்ன சொல்கிறான்…?

நாற்றம் என்கிற பொழுது நாற்றத்தை ஈர்த்துப் பார்க்கச் செய்கின்றது. அதை (என் கண்கள்) இழுத்தவுடனே… நாற்றம் என்றவுடனே அதிகமாகி விடுகின்றது. அந்த நாற்றம் உடலினுள்ளே சென்றவுடன் விளைந்து விடுகின்றது.

“நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…!” நாற்றத்தை நீக்கி நல்ல பொருளை எடுக்க வேண்டும் என்று எண்ணினால் நீ அதுவாகிறாய். இதைத்தான் கண்ணன் கீதையிலே சொன்னது.

அதைப் போல, என்னைக் கேவலமாகப் பேசுவார்களோ…? என்று மற்றவர்களைப் பார்க்கின்றேன், நாற்றத்தில் எவ்வாறு இருக்கும்…? என்று எம்மைச் சாக்கடையில் வைத்துத்தான் நமது குருநாதர் உபதேசம் கொடுக்கின்றார்.

சாக்கடை அருகில் உட்கார்ந்தால் நீங்கள் என்ன சொல்வீர்கள்…? “பாரு… எல்லாம் காசு ஆசை பிடித்துப் போய், சாமியாரிடம் வித்தையைக் கற்றுக் கொள்வதற்காக வேண்டி உட்கார்ந்துள்ளார் என்பீர்கள்.

ஏனென்றால் அந்தச் சித்து இந்தச் சித்து தங்கம் செய்வது… வெள்ளி செய்வது, என்று தான் சாமியார் பின்னால் போகின்றார்கள்.

இப்பொழுது என் கூர்மை என்ன செய்கின்றது…? அவர்கள் என்ன நினைப்பார்கள்…? இவர்கள் என்ன நினைப்பார்கள்…? என்று அதை வலுவாக எடுக்கும் பொழுது… இந்த நாற்றத்தை எனக்குள் சேர்த்து விடுகின்றது.

வராகன் என்ன செய்கின்றது…? என்று காட்ட இவ்வாறு, பல நிலைகளில் என்னைச் சாக்கடைக்கு அருகில் அல்லல்பட வைத்தார் குருநாதர்.

1.எண்ணங்கள் உருவாகி உன் உடலுக்குள் உணர்வுகள் எதைக் காட்டுகின்றது…?
2.அந்த உணர்வை எடுத்தவுடன் உனது ஆன்மாவாக எவ்வாறு மாறுகின்றது…?
3.ஆன்மாவிலிருந்து சுவாசித்தவுடன் உயிரில் (புருவ மத்தியில்) எவ்வாறு படுகின்றது…?
4.அப்பொழுது உயிர் நீ சுவாசித்ததை இயக்கி “அய்யய்ய நாற்றம்” என்று இந்த உடலை அழைத்துச் செல்கின்றது.

இது கூர்ம அவதாரம்.

கூர்மையாக நாற்றத்தைப் பார்க்கின்றாய்.. அதனின் உணர்வு வலுவாகச் சுவாசித்தால் வராக அவதாரம். அதனுடைய வலிமை கொண்டு “நாற்றம்… நாற்றம்…” என்று நீ போகின்றாய்.

அவ்வாறு சென்று கூர்மை அவதாரத்திற்கும் வராக அவதாரத்திற்கும் இரண்டுக்கும் இணை சேர்த்து அதிலே நீ எதைக் கூர்மையாக எண்ணுகின்றாயோ அதனின் உணர்வு உனக்குள் சென்றவுடன்
1.உன் ஈசனான உயிர் அதை வலுவாக்கி அதனின் நிலைகள் கொண்டு
2.அதே எண்ணத்தை எண்ணும் பொழுது இந்தக் கண் என்ன செய்கின்றது…?
3.இதையே எடுத்து நுகர்ந்து “அய்யய்ய” என்று சொல்லி உன்னை விலகச் செல்லும்.

நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய். இந்தச் சாக்கடையை விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்று எண்ணுகின்றாய். ஆனால் எடுத்துக் கொண்ட உணர்வே சாக்கடையாக சுவாசத்தின் வழி உள்ளே வருகின்றது.

இந்த நிலையை உணர்த்தி என்னை அங்கே பக்குவப்படுத்துவதற்காக… சாக்கடைப் பக்கம் இவ்வளவு உபதேசம் கொடுக்கின்றார் குருதேவர்.

எனக்குக் காபி அவருக்கு டீ இரண்டையும் சாக்கடைக்குப் பக்கத்தில் வைத்து அதிலே சாக்கடையிலிருந்து அள்ளிப் போட்ட குப்பை இரண்டைப் போட்டு என்னைக் “குடி” என்கின்றார் குருதேவர்.

அப்பொழுது என்னுடைய பார்வை என்ன செய்கின்றது…? இந்தச் சாக்கடையையும் பார்க்கின்றேன்… ஆள்களையும் நினைக்கின்றேன். இவரிடம் வசமாகச் சிக்கிக் கொண்டேன் என்று நினைக்கின்றேன். இந்தக் காபியை எவ்வாறு குடிப்பது…?? என்றும் என்ணுகின்றேன்.

கீதையிலே, நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்லப்பட்டது. அவர் சாக்கடையைக் குடி என்கிறார். அதை எண்ணியவுடனே எவ்வாறு குடிப்பது…? என்று விலக்கிச் செல்கின்றது.

இந்த எண்ணத்தால் அவ்வாறே திகைத்துக் கொண்டு இருக்கின்றேன். காபியில் இதை அள்ளிப் போட்டார். குடிக்க முடியவில்லை. எல்லோரும் நைனாவிற்குப் (சாமிகளுக்கு) பைத்தியம் பிடித்து விட்டது என்று சொல்கின்றார்கள். ரோட்டில் போகின்றவர்கள் பேசிக் கொண்டு இருக்கின்றார்கள். இதையும் கேட்கின்றேன்.

அப்பொழுது நான் நகர்ந்து செல்கின்றேன். போகப் போக, இந்தப் பக்கம் போகலாமா…? அந்தப் பக்கம் போகலாமா…? என்று இந்த மனம் அல்லல்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

நாம் எதை எண்ணுகின்றோமோ அதை உயிர் இயக்கி உடல் முழுவதும் பரவச் செய்து… அதே இயக்கமாக எவ்வாறு இயங்குகின்றது…? என்ற நிலையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார் குருதேவர்.

“சரி… நீ போய் டபாரா செட்டைக் கொடுத்துவிட்டு வா…” என்றார் குருதேவர்.

கடையில் கொண்டு போய்க் கொடுத்தால்… வாங்கவா செய்வார்கள்…? நீ உன் வீட்டிலேயே வைத்துக் கொள் என்றார்கள். டபரா செட்டிற்குக் காசு கொடுத்தேன். வாங்க மாட்டேன் என்றார்கள். இவ்வாறாகி விட்டது.

நீ வரும் பொழுது, கொஞ்சம் முறுக்கு, கடலைப் பருப்பு, பொட்டுக் கடலை வாங்கிவா என்றார் குருநாதர். மூன்றையும் வாங்கிக் கொண்டு வந்தேன்.

சாக்கடை அருகில் ஏழெட்டுக் கோடு போடச் சொன்னார். முதலில் பொட்டுக் கடலையைச் சாக்கடையில் போடச் சொன்னார். இரண்டாவதாக முறுக்கைச் சாக்கடையில் போடச் சொன்னார். மூன்றாவதாக, நிலக்கடலையைச் சாக்கடையில் போடச் சொன்னார்.

அங்கிருந்து பன்றி வருகின்றது வந்தவுடனே ஒவ்வொன்றாக மோந்து பார்க்கின்றது. பொட்டுக் கடலை முன்னால் இருக்கின்றது. அதை விட்டுவிடுகின்றது.

அடுத்து… முருக்கு வேகமாக எணணெய் வாசனை வருகின்றது. நாற்றத்திற்குள் இதைக் கண்டுபிடித்து அந்த முறுக்கை எடுக்கின்றது.

அடுத்து, எண்ணெய் வாசனை உள்ள கடலைப் பருப்பைச் சாப்பிடுகின்றது. அடுத்துப் பொட்டுக்கடலை இருக்கின்றது. அதை விட்டுவிட்டது. மாற்றி அந்த வாசனையைத்தான் நுகர்ந்து எடுக்கின்றது.

சாக்கடைக்குள் பார்த்தாயா…? என்றார் குருநாதர். அது நாற்றத்தை எடுக்கவில்லை… நீ எதை எடுக்கின்றாய்…! என்றார்.

காபி இருக்கின்றது… நீ பிரித்துப் பார்க்க முடியவில்லை. நீ ஆகாரம் சாப்பிட்டவுடனே சாப்பிடும் ஆகாரத்தில் உள்ள நாற்றத்தை உன் உடல் பிரித்து மலமாக மாற்றி விடுகின்றது.

உன் உடலிலிருந்து, வரக்கூடிய ஆறாவது அறிவு, இதைப் பிரிக்கக் கூடிய சக்தியாக இருக்கின்றது நீ ஏன் இதைப் பிரிக்க முடியவில்லை…? என்று கேட்கின்றார் குருநாதர்.

நான் என்ன பதில் சொல்வது…?

சாக்கடைக்குள் இருக்கும் நல்ல பொருள்களைப் பன்றி எப்படி நுகர்ந்து எடுத்து நல்ல உணர்வைத் தனக்குள் எடுத்து
1.நாற்றமான உடலில் கலந்து, நாற்றத்தை நீக்கிடும் உணர்வுகளை வளர்த்ததோ
2.அதே போல பல சரீரங்களைத் தனக்குள் எடுத்து இதே உயிர்தான், நம்மை மனிதனாக ஆக்கியிருக்கின்றது.

மனிதனாக ஆனபின்… சந்தர்ப்பத்தால் ஏற்படும் நஞ்சு கொண்ட நிலைகளும்… உணர்வின் எண்ணத்தால் ஈர்க்கும் தீமைகளையும் நீ எவ்வாறு மாற்றுவது…? என்றும் அதை எப்படி மாற்றிக் கொள்ள முடியும்…? என்ற நிலைகளையும் அங்கே தெளிவாக எடுத்துக் கூறினார், குருநாதர்.

பன்றி சாக்கடையில் உள்ள நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வை நுகர்ந்த மாதிரி…
1.நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சாக்கடையான காற்று மண்டலத்திலிருந்து,
2.நல்லவற்றை எடுக்கக் கற்றுக் கொடுத்தார் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

இன்று கழிவுப் பொருள்களை எடுப்பவர்கள் (தூய்மைப் பணியாளர்கள்) அந்தக் கழிவுப் பொருளை எண்ணத்தால் நுகர்வது இல்லை.
1.அதை நீக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் பொழுது
2.கழிவுப் பொருளின் மணம் அவர்களுக்கு வருவதில்லை.

ஆனால் நாம் என்ன எண்ணுகிறோம்…? கழிவுப் பொருள் எடுப்பதைப் பார்த்தவுடன், “ஐய்யய்யோ நாற்றமாகின்றது…” என்று சொல்லி நாற்றத்தை உடலுக்குள் கலக்கவிட்டு கழிவுப் பொருளின் சத்தையெல்லாம் நமக்குள் சேர்த்துக் கொள்கிறோம்.

1.இப்படி… எதனின் உணர்வை நாம் சேர்க்கின்றோமோ அந்த உணர்வின் தன்மை நமக்குள் சென்று நமக்குள் நாற்றமாகும் நிலையும்,
2.நாற்றத்தைக் கண்டு வெறுப்பின் நிலையில் எண்ணங்கள் உருவாகும் பொழுது யாரைப் பார்த்தாலும், அசிங்கமாகத் தெரியும்.

“இது சுத்தம் இல்லை… அது சுத்தம் இல்லை…” என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் உடலில் பாருங்கள். நாற்றம் வந்து கொண்டே இருக்கும். சட்டைத் துணியினை நுகர்ந்து பாருங்கள், நாற்றம் இருக்கும்.
1.நாற்றத்தைப் பிடிக்கவில்லை என்று நாற்றத்தைத்தான் நுகருகின்றார்கள்.
2.இதுவெல்லாம் நாம் எடுத்துக்கொண்ட உணர்வின் இயக்கங்கள்,

ஆகவே… எதைக் கூர்மையாக எண்ணுகின்றோமோ அதனின் வலுக் கொண்டு அதனின் வலிமையாக அடுத்த உருவை நம் உயிர் உருவாக்குகின்றது என்ற நிலையை அங்கே காட்டுகின்றார் குருதேவர்.

குளவி புழுவைத் தன் இனமாக மாற்றுவது போல் தான் இயற்கையின் செயலாக்கங்களும்

குளவி புழுவைத் தன் இனமாக மாற்றுவது போல் தான் இயற்கையின் செயலாக்கங்களும்

 

ஒரு குளவி ஒரு புழுவைத் தூக்கிக் கொண்டு வந்து அதைத் தன் இனமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுகின்றது.

இன விருத்திக்கான உமிழ் நீரைச் சுரக்கும் பொழுது அதை மண்ணிலே போட்டுப் பிசைகின்றது. மண்ணிலே போட்டுப் பிசையும் பொழுது ஒரு நிறம் இருக்கிறதென்றால் தனக்குகந்த மண்ணை எடுத்துச் சுண்ணாம்பினால் அதைக் கலந்து எடுத்துக் கொண்டு வருகின்றது.

அதிலே இருக்கக்கூடிய காந்தப் புலனறிவிலே தன் உமிழ் நீரைப் பாய்ச்சுகின்றது. பாய்ச்சி உருண்டையை எடுத்து வந்து கூடாகக் கட்டுகின்றது. அதற்குள் புழுவைக் கொண்டு வந்து அடைக்கிறது.

1.தன் இனவிருத்தியின் உணர்வின் நோக்கம் கொண்டு புழுவைத் தாக்குகின்றது.
2.தாக்கியவுடன் புழுவின் உணர்வின் செல்கள் வெளியிலே போகாதபடி அது மறைத்து விடுகின்றது.
3.முதலில் கவசமாகக் கட்டி விடுகின்றது…. அதிலிலுள்ள விஷத்தின் தன்மை புழுவின் தோலைச் சருகாக மாற்றி விடுகின்றது.

அதற்கு அந்தச் சக்தி இருக்கின்றது.

அப்பொழுது புழுவின் உடலை உருவாக்கிய உயிரும்… உயிரால் உணர்வால் ஆக்கப்பட்ட, உடலுக்குண்டான அணுக்களிலும்… இந்த விஷத்தின் தன்மை பாய்ந்து விஷமாக ஆகின்றது.
1.விஷத்தன்மை பாய்ந்த நிலையில்
2.புழுவிற்கு அந்தக் குளவியின் நினைவாற்றல் தான் அதிகமாக வருகின்றது.
3.அந்த நினைவாற்றல் அதிகரிக்கப்படும் பொழுது உடல் சருகாகுகிறது.

மீண்டும் அந்தக் கூட்டின் மேலிருந்து குளவி “ரீங்கார ஒலிகளை” எழுப்புகின்றது.

அந்த உணர்வின் இயக்கமானபின்…
1.இதே நினைவலையில் அந்த உணர்வின் செல்கள் மாறி விடுகின்றது.
2.இந்தக் கூட்டின் வழியாக அந்த உமிழ் நீரைச் சேர்த்தபின்… அந்த ஒலி அலைகளைப் புழு எடுக்கின்றது.

உதாரணமாக… நட்சத்திரங்களில் இருந்து வரக்கூடிய கதிரியக்கங்கள் பூமிக்குள் ஊடுருவி… அந்தக் காந்தப் புலனறிவு இயக்கும் காந்தம் அதிகமாகும் பொழுது… பூமியின் நடுவிட்டம் வரை ஊடுருவிச் செல்லும்.

ஊடுருவிச் செல்லும் பொழுது மரங்கள் மேல் தாக்கப்பட்டால் மரங்கள் கருகி விடுகின்றது. அப்படி ஊடுருவிப் பூமிக்குள் சென்றவுடனே, வெல்டிங் (welding) வைத்தால் எப்படி ஓட்டை ஆகின்றதோ அதே போல பாறைகளில் ஊடுருவி “அதற்குள் சில நுண்ணிய அலைகளைப் பாய்ச்சுகின்றது…”

அது தனக்குள் சேர்த்து…
1.மொத்தத்தில் வடித்துக் கொண்ட உணர்வுகளை ஆவியாக மாற்றும் பொழுது
2.அதன் வழி பூமிக்குள் பல மாற்றங்களைக் கொடுக்கின்றது.

பிற மண்டலங்களிலிருந்து வரும் விஷத் தன்மையை நட்சத்திரங்கள் அது தனக்குள் உருவாக்கி… அது உமிழ்த்தும் அலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொண்டபின் அந்த அலைகளின் வீரியம் வருவதும்
1.நம் பூமியின் ஈர்ப்புக்குள் நுழைந்து கொண்டபின்
2.அது ஈர்த்து நடுமையத்தில் கொண்டு சேமித்துக் கொள்கின்றது.

அதைப் போல் நாம் சுவாசிக்கும் நிலைகள்… எந்தந்த உணர்வுகளை உடலுக்குள் பாய்ச்சினாலும்
1.உடலில் விளைந்த அந்த உணர்வுகள் எல்லாவற்றையும்
2.உயிரிடமே கொண்டு வந்து உயிராத்மாவாகச் சேர்த்து வைத்துக் கொள்கின்றது.

உயிரின் இயக்கங்களில் ஊடுருவி…
1.உணர்வின் அணுக்களைப் பெருக்கித் தன் நினைவுடன் இயக்கச் செய்து
2.தன்னுடன் ஒன்றச் செய்து ஒரே இயக்கமாகக் கொண்டு வருகின்றது.

இதற்கும் அதற்கும் (பூமிக்கும் உயிருக்கும்) உண்டான வித்தியாசத்தைக் காட்டுகின்றார் குருநாதர்.
எனக்குப் படிப்பறிவு இல்லாததால் “நேர்முகமாகவே…” இதையெல்லாம் காட்டுகின்றார். இந்த உணர்வின் இயக்கங்கள் பூமியின் நடுமையும் அடைவதை காட்டுகின்றார்.

ஆனால் நட்சத்திரங்களின் கதிரியக்கங்கள் ஊடுருவும் பொழுது ஒவ்வொன்றையும் எப்படி இடைமறித்துக் கருக்கச் செய்கின்றது…? வெல்டிங் அடிக்கும் போது ஓட்டை விழுவது போன்று எப்படி ஆகின்றது…? என்று காட்டுகின்றார்.

மின்னல் தாக்கிய பின் மரங்கள் கருகின்றது. மின்னல் ஊடுருவி பூமிக்குள் செல்கின்றது. இப்படி… 27 நட்சத்திரங்கள் நிலைகள் அங்கே பூமிக்கடியில் ஒன்று சேர்த்துக் கொதிக்கலனாக மாறுகின்றது. அதிலிருந்து… கலவைகள் ஆவியாக மாறி தனது நிலைக்குப் பூமி மாற்றுகின்றது.

இதைப் போல் தான்
1.குளவியின் விஷத்தன்மை கூட்டிற்குள் அடைபட்ட புழுவின் உடலுக்குள் பாய்ந்து
2.அது தன்னுடைய வேகங்களை எடுத்து அணுக்களில் பட்ட பின்
3.புழுவின் உயிர் குளவியை எண்ணியே அதனின் உணர்வலைகளை எடுத்து
4.உடலின் செல்களை மாற்றிப் “புழு குளவியின் ரூபமாகின்றது…”

இது பரிணாம வளர்ச்சி.

அகண்ட அண்டத்தின் ஒளிர் ஞான தத்துவ அடக்கமே… “பேரருள் பேரொளி”

அகண்ட அண்டத்தின் ஒளிர் ஞான தத்துவ அடக்கமே… “பேரருள் பேரொளி”

 

(1) முடிவே இல்லாதது…!
1.ஒன்றுடன் ஒன்று மோதி 2.ஒன்றுடன் ஒன்று கலவையாகி உருவாகி
உருமாற்றமாகிக் கடைசியில் ஆவியாகி 3.மீண்டும் திடமாகி
மீண்டும் அதே சுழற்சி 1,2,3.. 1,2,3

(2) என்றுமே அழிவில்லாதது
1.விண்ணிலே தோன்றும் உயிர்
2.உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றிய மகரிஷிகள்

(3) நிலையானது…! (4) சத்தியமானது…!
ஆதிசக்தியின் இயக்கம்…! வெப்பம் காந்தம் விஷம் இந்த மூன்றும் சேர்ந்து எதைக் கவர்கிறதோ அதனின் இயக்கம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே உள்ளது.

5) ஒளிர் ஞான தத்துவ அடக்கமே…! பேரருள் என்பது.
ஆதிசக்தியின் இயக்கத்தின் நோக்கமே அனைத்தையும் ஒளியாக ஒளிரச் செய்வது… ஒளியின் வளர்ப்பாக முதிர்வடையச் செய்வது தான். அது தான் பேரருள்.
அப்படிப் பேரருளாக முதிர்ந்து ஒளியாக ஒளிரச் செய்து ஒளியின் வளர்ப்பை வளர்க்கும் போது பேரொளியாகிறது. அவர்கள் தான் மகரிஷிகள். துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் போன்றவைகள்.

மேலே சொன்ன ஐந்தையும் உள்ளடக்கிய தத்துவம்

ஆதிசக்தியின் படைப்பின் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக ஆன பின் ஞானத்தின் வழித்தொடரைத் தனக்குள் விளைய வைத்து உடலை விட்டு அகன்றால்
1.பேரண்டத்தில் எத்தனை தீமையின் நிலைகள் நஞ்சாக இருப்பினும் தன்னை அணுகாது
2.அதை அடக்கிடும் நிலைகள் கொண்டு ஒளியின் சரீரமாக மாற்றிடும் நிலைகள் வருகின்றது.

அப்படி ஆனவர்கள்தான், இன்று எதனையும் பிளந்திடும் நிலைகள் பெற்றவர்கள், சப்தரிஷிகள்.
1.ஆக ஒவ்வொரு பூமியின் தொடர் கொண்டும் வாழுகின்றார்கள்
2.அந்தந்த பிரபஞ்சம் இறந்தாலும், இவர்கள் தனி மண்டலமாக இயக்கப்பட்டு
3.தீமையற்ற உலகை அவர்களுக்குள் சிருஷ்டித்துக் கொண்டிருப்பார்கள்.

ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் ஏற்பட்ட இந்த மண்டலங்கள் வேறு வேறு விதமாக இருப்பினும்
1.உடல் பெற்ற உணர்வின் நிலைகளிலிருந்து
2.தீமைகளைப் பிளந்த உணர்வுகள் ஒருக்கிணைந்து
3.பெரும் மண்டலமாகத் திகழ்கின்றார்கள்.

இந்த அகண்ட பேரண்டத்தில், இப்பேர்ப்பட்ட மகரிஷிகளும் உண்டு. ஆக, மனிதனில் தெளிந்த நிலைகள் கொண்டு அது பெரும் வட்டமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்.
1.மனிதர்களாகிய நாம் அனைவரும்
2.அதிலே இணைந்தால்தான் நல்லது.

முழுமையான விரிவாக்கம்

பேரண்டம், முதலிலே இருண்ட நிலைகளில் இருந்தது,
1.ஒன்றுடன் ஒன்று மோதி சுழற்சி வேகம் கொண்டு சூரியன்களாக விளைந்து நட்சத்திரங்களாக விளைந்து
2.அதிலே தோன்றிய கோள்களாக விளைந்து, உயிரணுக்களாக விளைந்தது.

உயிரணுக்கள் அதனின் நிலைகள் நுகர்ந்து நுகர்ந்து
1.உணர்வின் தன்மை உடல் பெற்று
2.எண்ணத்தின் நிலைகள் கொண்டு இயங்கத் தொடங்கும் நிலைகள் கொண்டு
3.தன்னைக் காத்திடும் காத்திடும் நிலைகள் கொண்டு வந்தது.

இப்படி இந்த உயிரின் நிலைகள் உடல்களைக் காத்திடும் நிலையாக வந்தாலும்,
1.இந்த உயிருடன் ஒன்றி
2.ஒளியின் சரீரமாகத் தன்னைக் காத்திடும் நிலைகளில் விளைந்தவர்கள் தான் மகரிஷிகள்.

ஆகவே அது அனைத்தும் நாம் பெற முடியும்.

அதைப் பெறச் செய்வதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி விண்ணின் ஆற்றலைக் காண அதைப் பெறும் பாக்கியத்தை இன்று நாம் அனைவரும் பெற்றுள்ளோம்.

ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும் மெய் உலகைப் படைக்கும் சக்தியாக ஒருங்கிணைந்து செயல்படுவோம்.

“ஐயோ… பாவம்…!” என்று இரக்கப்படுவதில் உள்ள பின் விளைவுகள்

“ஐயோ… பாவம்…!” என்று இரக்கப்படுவதில் உள்ள பின் விளைவுகள்

 

உதாரணமாக இரயிலிலே நாம் பிரயாணம் செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். நாம் இரக்கம் ஈகை பண்பு கொண்டவர்கள். அங்கே பயணம் செய்பவர்களில் ஒருவர் கடுமையாக வேதனைப்படுகிறார் என்று பார்க்கிறோம்.

அவரை நமக்குத் தெரியாது… அவர்களிடம் நாம் வேறு உணர்வு கொண்டும் பழகவில்லை. பிரயாணம் செய்யும் பொழுது தான் பழக்கம். அவர் சிரமப்படுவதை… இரக்க மனம் கொண்டு என்ன… ஏது…? என்று பார்க்கின்றோம்.

ஆனால் அவருடன் வந்தவர்களோ சலிப்பாகச் சஞ்சலமாகவே அவரிடம் பேசுவார்கள். ஏனென்றால் அடிக்கடி அவரிடம் கவலைப்பட்டுப் பழகியவர்கள் அல்லவா. இருக்கிற இடத்தில் சும்மா இரு…! ஏன் இவ்வாறு செய்து கொண்டிருக்கிறாய்…? என்று அடிக்கடி பேசுவார்கள்.

ஆனால் நாமோ…
1.ஏன் இப்படி…? என்று இரக்கத்தோடு இந்த செயலைக் கவனிக்கின்றோம் ஏனென்றால் அன்று ஒரு நாள் தானே பழகுகிறோம்.
2.ஆகையினால் ஏன் இந்த மாதிரிச் செய்கிறீர்கள்…! உங்களுக்கு என்னம்மா வேண்டும்…? ஏதம்மா வேண்டும்…? என்று இப்படிப் பதிவு செய்கிறோம்.

இப்படிப் பண்போடு சொல்லப்படும் பொழுது அவர்களுக்கு வேதனை கொஞ்சம் தணிகிறது. “இந்த உணர்வு…” அந்த வேதனைப்படுவர் உடலிலே ஆழமாகப் பதிவாகி வலுப் பெற்று விடுகின்றது.

நாம் என்ன நினைக்கின்றோம்…! இந்தப் பெண்மணி இவ்வளவு கஷ்டப்படுகின்றது… ஆனால் இரக்கமில்லாதபடி சமுதாயம் பேசுகிறது பார்…! என்று “அவர்கள் உணர்வை…” நமக்குள் பதிவு செய்கின்றோம்.

அடுத்து அவர் ஊருக்குப் போய்ச் சேருகின்றார். அவரைச் சார்ந்தவர்கள் உணர்வு வரும் பொழுது இந்த எண்ணங்கள் அதிகமாகிறது…
1.பார்… எத்தனை நல்லது செய்தோம்…? எத்தனை வசதி கொடுத்தோம்…? நம்மை இப்படித் தான் பேசுகிறார்கள்.
2.ஆனால் இரயிலில் பயணம் செய்யும் பொழுது “அந்த மகராசி… என்ன உபச்சாரம்…!” என்ற இந்த உணர்வு அங்கே வலுப்பெறுகின்றது.

ஆனால் நாமோ அவர்கள் வேதனையைப் பதிவு செய்கின்றோம். அதாவது
1.அவர்கள் உடலில் விளைந்தது நமக்குள்ளே…!
2.நம்முடைய உடலிலே பதிவான உணர்வுகள் அங்கே…!
3.அதே சமயத்தில் அங்கே வேதனைப்படுவருடைய வீட்டிலோ அவருக்கு வெறுப்பு.

உடலை விட்டுப்பிரியும் போது அவரின் உணர்வுகள் “இரயிலில் தனக்கு ஆதரவாகப் பேசியவர் மேல் நினைவு வருகின்றது…!” விதிப்படி அவர்கள் எண்ணுகின்றார்கள்.

உயிர் பிரியும் பொழுது அந்த ஆன்மா எந்த உணர்வைக் (எண்ணங்களை) கடைசியிலே வலுவாக எடுத்துக் கொண்டதோ…
1.நாம் இங்கே இருந்தாலும் நம் மீது அந்த நினைவுகள் வந்து உடலுக்குள் புகுந்துவிடுகிறது.
2.நம் உடலில் அந்த ஆன்மா புகுந்தது நமக்கே தெரியாது.

ஆனால் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்களை எண்ணும் போது… பாவிகள் என்று பதிவு செய்து அந்த எண்ண அலைகளை அங்கே பரப்புகின்றது. இவ்வாறு பதிந்த எண்ணங்கள் கொண்டு இதிலே மடிந்து விடுகின்றது.

சாப அலைகள் அந்தக் குடும்பத்தைச் சாடுகிறது. இறந்த உடலில் விளைந்தது அனைத்துமே அந்தக் குடும்பத்திற்குப் பாய்கின்றது.

ஆனால் இங்கே பற்று கொண்ட நிலையில் மகராசி எனக்கு ஆதரவாகப் பேசியது என்ற அந்த எண்ணத்துடன் அந்த ஆன்மா இங்கே வந்து விடுகின்றது.

விஷத்தில் பாதாமைப் போட்டால் எப்படி இருக்கும்…? அந்த மாதிரி
1.அவர் வேதனைப்பட்ட உணர்வுக்குள் இந்த உணர்வின் தன்மை கலந்து இங்கே இயக்கச் சக்தியாக மாறுகிறது.
2.அந்த உடல் எவ்வாறெல்லாம் வேதனைப்பட்டதோ… தன் குடும்பத்தாரை வெறுப்புடன் எப்படிப் பேசியதோ…
3.இங்கே வந்தபின்… தன் குடும்பத்தில் உள்ளவர்களிடம் வெறுப்பாகப் பேச வைக்கும்.

பார்க்கலாம்… சில குடும்பங்களில் நேற்று வரை அவருடைய பேச்சு பழக்க வழக்கம் எல்லாமே… நல்லதாக உதவி செய்வதாக இருக்கும். ஆனால் இந்த ஆன்மா புகுந்த பின் பார்த்தால் எல்லோரையும் வெறுத்துப் பேசும்.

நேற்று வரை எல்லோருக்கும் நல்லதைத்தான் செய்தார் ஆனால் இப்பொழுது இப்படிப் பேசுகின்றாரே…! என்னமோ தெரியவில்லை…! என்பார்கள்.
1.அந்த உடலிலே விளைந்த உணர்வின் செல்கள் நோயாக மாற்றிவிடும்.
2.பெரும்பகுதி இப்படித்தான் மனிதன் வாழ்க்கையில் தேய்பிறையாகச் சென்று கொண்டிருக்கின்றான்.

ஆனால் இது எல்லாம் சாஸ்திரங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதைத்தான் உங்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

ஞானிகள் உணர்வுகள் நமக்குள் வளர்ச்சியாகும் போது சில உண்மைகளைப் பிரித்துக் காட்டும்

ஞானிகள் உணர்வுகள் நமக்குள் வளர்ச்சியாகும் போது சில உண்மைகளைப் பிரித்துக் காட்டும்

 

நாம் சும்மா இருக்கின்றோம்… அப்போது ஒருவரைப் பார்க்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். பார்த்தவுடனே…
1.அவர் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு நமக்குள் நினைவோட்டங்கள் திடீரென்று ஓட ஆரம்பிக்கும்.
2.ஒரு வெளிச்சத்தைப் போட்டவுடன் அங்கிருக்கும் பொருள்கள் எப்படித் தெரிய வருகின்றதோ இது போன்று
3.இந்த உணர்வின் ஓட்டங்கள் வரும்… இன்னது தான் என்று…!
4.காரணம் ஞானிகள் உணர்வு நமக்குள் வரப்படும் பொழுது அந்த உண்மைகளை உணர முடியும்.

நாம் இங்கே தொழிலில் இருப்போம்… ஆனால் இது இரண்டையும் பிரித்துக் காட்டும் பொழுது நாம் அதைத் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு கம்ப்யூட்டரில் இரண்டு அலைகள் போட்ட உடனே எழுத்து வடிவிற்கு வேண்டிய நிலையில் நமக்கு வேண்டிய அந்த பாஷை இந்தியோ… தமிழோ… ஆங்கிலமோ… பிரித்துக் கொடுக்கின்றார்கள்.

அந்த அழுத்த உணர்வுக்குச் (COMMAND) சென்றவுடன் அதனதன் நிலைகளில் கம்ப்யூட்டர் இயக்குகின்றது.

இதைப் போன்று தான்… நமது உயிர் சூரியன் காந்த சக்தி கவர்ந்த உணர்வுகளை நுகரப்படும் பொழுது எலக்ட்ரானிக்காக (உணர்ச்சிகளாக) மாற்றுகின்றது.
1.மாற்றியவுடன் அதனுடைய பிரிவு… அளவுகோல் எதுவோ
2.அதற்குத் தகுந்த மாதிரி அந்த உணர்வின் இயக்கமாக நம் உடலை இயக்கும்.

நம்முடைய உயிரின் வேலை காந்தத்தை இழுக்கின்றது. அதிலே வந்த அந்த உணர்வு நம் அழுத்தம் எதுவாக இருக்கின்றதோ அதற்குத் தகுந்தாற் போல் எலக்ட்ரானிக்காக மாற்றும்.

மாற்றிய அந்த உணர்வுகளைப் பரப்பப்படும் பொழுது
1.அதனுடைய இன இயக்கங்கள் அந்த அதிர்வுகளைக் கொடுத்து உடலை இயக்கிக் காட்டும்.
2.அதற்குத் தகுந்த சிந்தனையும் அதற்குண்டான செயல்களையும் நமக்குள் இயக்கும்.

கம்ப்யூட்டரில் மின்சாரத்தை மையமாக வைத்து உணர்வின் செல்களுக்கு எலக்ட்ரானிக்காக… இந்த மாற்ற உணர்வுகளைக் கொடுக்கின்றார்கள். கடிகாரத்தில் பார்க்கலாம் அந்தந்தக் கால பருவம் வந்தபின் அதை நமக்கு (அலாரம்) அறிவுறுத்துகின்றது.

அதில் இருக்கக்கூடிய பேட்டரி செல்கள் இந்த வேலையைச் செய்கின்றது அதில் எதை ஆணையிட்டு வைத்திருக்கின்றோமோ அதன் உணர்வின் கருக்களை மாற்றி மாற்றி அளவுகோல் பிரகாரம் இயக்கும்.

ஆனால் சிறிதளவு அதிலே நீர் பட்டு விட்டால் அளவுகள் மாறிவிடும்… அதனின் இயக்கமே மாற்றமாகிவிடும். நீரில் உள்ள காந்தப்புலன் அதை அழிக்கும் திறன் கொண்டது.

நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ நம் உயிர் எலக்ட்ரானிக்காக மாற்றி அந்த உணர்வின் வலு செல்கள் எப்படி இருக்கின்றதோ அதன் இயக்கமாக உடலை இயக்குகின்றது.

விஞ்ஞான அறிவுப்படி எலக்ட்ரானிக் இயந்திரத்தை இயக்குகின்றது. இயக்கிய நிலையோடு விஞ்ஞானம் சரி. அதில் வளர்ச்சி பெற முடியாது தேய்வு தான் உண்டு. ஆனால்… மெய்ஞான அறிவுப்படி
1.உயிர் எலக்ட்ரானிக்காக மாற்றி அந்த உணர்வின் இயக்கப்படி நம்மை இயக்கும்.
2.இயற்கையின் நிலைகள் கொண்டு இந்த உணர்வின் அணுக்களை வளர்ச்சி பெறும் தன்மை பெற்றது
3.இதில் எந்தெந்தத் தன்மையோ அதனதன் அளவுகோல் கூடக் கூட அணுக்களின் உணர்வுக்கொப்ப வளர்ச்சி பெருகிக் கொண்டே வரும்.

அதனுடைய முடிவு எதை எடுத்து உருவாக்கியதோ அந்த உணர்வுக்கொப்ப செல்களை மாற்றி உருவத்தையே உயிர் மாற்றிவிடும். சொல்வது அர்த்தமாகிறது அல்லவா…!

மனித ரூபம் உருப்பெறும் தகுதியும்… அது இழக்கப்படும் சந்தர்ப்பமும்

மனித ரூபம் உருப்பெறும் தகுதியும்… அது இழக்கப்படும் சந்தர்ப்பமும்

 

கொசு நம்மைக் கடிக்கின்றது… நம் இரத்தத்தை உணவாக உட்கொள்கிறது. மனிதனின் உணர்வுகள் கொசுவின் உடலில் பரவுகின்றது. ஆனால் அது மனிதனைப் போன்ற ரூபம் ஆவதில்லை.

இரத்தம் அதற்கு உணவாகின்றது. மனித இரத்தத்தில் உள்ள உணர்வுகள்
1.மனிதனுக்குண்டான சிந்தனைகள் எதுவோ அது அனைத்தும் அந்தக் கொசுவுக்கு வருகிறது.
2.அதாவது… மனிதனின் நினைவே அதற்குள் வருகின்றது.

அந்த இரத்தத்தின் உணர்வுகள் கொண்டு அது சிறிது காலமே வாழ்ந்தாலும் உடலை விட்டுப் பிரியும் அதனுடைய உயிரான்மா மனிதன் ஈர்ப்பிற்குள்ளே வருகின்றது.

பரிணாம வளர்ச்சியில் ஒரு மான் புலியை உற்றுப் பார்த்து அதனுடைய கொடூர உணர்வினை நுகரப்படும் பொழுது புலியின் உணர்வுகள் மானுக்குள் அதிகமாகின்றது… மான் இறந்தால் புலியின் ஈர்ப்புக்குள் சென்று மான் புலியாக மாறுகிறது.

கொசு மனிதனின் இரத்தத்தைக் குடிக்கின்றது. மனிதனின் உணர்வு அதிகமாகிறது. ஆனால் நினைவு மனிதன் மேல் வரும் பொழுது
1.அந்தக் கொசு மனிதனுடைய ஈர்ப்பு வட்டத்திற்குள் சிக்கப்பட்டு நம் சுவாசத்தின் வழி உள்ளே சென்று
2.மனித உணர்வை மீண்டும் தனக்குள் எடுத்துக் கருவாகி முட்டை மாதிரி ஆகி விடுகிறது.

அதே போல் ஒரு எறும்பை நசுக்குகிறோம் என்றால் நம்முடைய நினைவு கொண்டு அந்த உயிர் நமக்குள் வந்துவிடும். ஒரு ஆட்டை இம்சித்துக் கொல்கிறோம் என்றால் அது வேதனைப்படும் நினைவுகள் கொண்டு மனிதனுடைய ஈர்ப்பிற்குள் அந்த உயிரான்மா வந்து விடுகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை. பரிணாம வளர்ச்சிக்கு அது வருகின்றது. மனிதன் உணர்வுகள் அதிகமாக இருப்பதால் அந்த உயிரணுக்கள் மனிதனில் உருப்பெறும் “அணு திசுக்களாக..” விளையத் தொடங்கி விடுகின்றது.

எந்த மனிதருக்குள் அந்த உயிரான்மா வந்தாலும் அந்த கால நிலைகளுக்கொப்ப உடலை விட்டு உயிர் வெளியேறி விட்டால் அந்த உயிரான்மா அதாவது எறும்பு ஆடோ அதனுடைய உயிரணுக்கள்
1.வாழ்ந்தவர்… யாருடன் நட்பாக அல்லது உறவு கொண்டு அதிகமாகப் பழகினாரோ
2.அந்த எண்ணம் கொண்டு இந்த ஆன்மாக்கள் அந்த உடலுக்குள்ளே திரும்பச் சென்றுவிடும்.
3.இப்படி ஏழு மனித உடல்களிலே இது மாறி மாறி வந்து மனிதனின் நிலைகளில் முழுமை பெறும் அணுக்களாக விளையப்பட்டு
4.ஏழாவது மனிதனுக்குள் வரும் பொழுது மனிதனாக முழுமை பெறும் வளர்ச்சிக்கு வருகின்றது.

அப்படிப்பட்ட நிலைக்கு வந்தாலும் அதில் பெண்பால் ஆண்பால் என்ற கரு முட்டைகளும் யார் யாருக்குள் இது கலக்கின்றதோ அவைகளுக்கு ஒப்ப மனிதனாக உருப்பெறுகின்றது.

பெண்பாலுக்கும் அந்த முட்டை உருவாகின்றது… ஆண்பாலுக்கும் அந்த முட்டை உருவாகின்றது. ஆனால் இரண்டும் சேர்த்து இணைந்த நிலைகள் மோதும் பொழுது தான்… கரைந்து… ஒன்றை விழுங்குகின்றது அதற்குள் இணைகின்றது. கரு வளர்ச்சிக்கு வரும் தன்மை அடைகின்றது.

எத்தனையோ கோடி உயிரணுக்கள் உடலுக்குள் இருந்தாலும் அங்கே கருவுக்குள் சென்று மனிதனாகப் பிறக்கும் தன்மை உயிரணுக்களுக்குத் தோன்றுகின்றது.

இருந்தாலும் ஒரு உடலிலே மனிதனாகப் பிறந்து மனிதன் இறந்த பின் “அவன் வளர்ச்சி இல்லாத நிலைகளில்…” இன்னொரு உடலுக்குள் இந்த ஆன்மா சென்று விட்டால் இது…
1.பல மனிதச் சரீரங்களில் புகுந்த உயிரான்மாக்கள் இந்த உடலுக்குள் புகுந்தால்
2.அங்கே மனித உருப் பெறாதபடி தடைப்படுத்திக் கொண்டே இருக்கும்.

ஏனென்றால்… மனிதனான பின் அதில் வளர்ச்சியற்று விபத்திலேயோ… அல்லது வெறுப்பான நிலைகள் கொண்டு தற்கொலையோ… வளர்ச்சி பெறும் தன்மையைத் தன் எண்ணத்தால் குறைத்து விட்டால்
1.அந்த ஆன்மா எந்த மனித உடலுக்குள் சென்றாலும் அங்கே கருக்களை வளர விடாதபடி தடுக்கும்.
2.உயிரணுக்கள் மனிதனாகப் பிறக்கும் தகுதி அங்கே இழக்கப்படுகிறது.
3.அதாவது “குழந்தை உருவாகும்… குழந்தையை உருவாக்கும் ஆற்றல்” அங்கே தடுக்கப்படுகிறது.

நாரதன் கொடுக்கும் ஞானக்கனியின் விளக்கம்

நாரதன் கொடுக்கும் ஞானக்கனியின் விளக்கம்

 

ஒரு மாங்கனி அது இனிப்பாக இருக்கும்பொழுது, அந்தச் சுவையின் மணத்தையே வெளிப்படுத்தும். காயாக இருக்கும் பொழுது புளிப்பின் உணர்ச்சியைத் தூண்டும்.

இதைப் போல மனிதனாக இருக்கும் நாம் காயின் பருவத்தில் இருக்கும் பொழுது கனியாகும் உணர்வின் தன்மையை நாம் கவர்ந்தால் கனியும் தன்மையை அடைகின்றோம்.

ஆனால் கனியாவதற்கு முன் வெப்பத்தின் தணல் அதிகமாக இருந்தால் வெம்பி மரத்திலிருந்து விழுந்து விடும். வெம்பிய நிலைகள் கொண்டு வித்து உருவாகாது… அதனுடைய சத்தும் நமக்குள் நல்லது ஆகாது.

ஆகவே “வெம்பாத நிலைகள் கொண்டு…”
1.கனியின் தன்மையை அடைந்த கனியைப் போல
2.உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு மெய்ஞானியின் உணர்வைத் தனக்குள் வளர்த்து
3.உணர்வுகள் அனைத்தும் கனியாகி உயிருடன் ஒன்றிய கனியின் தத்துவமாக
4.ஏழாவது நிலையாக ஒளிச் சரீரம் பெற வேண்டும்..

இதைத்தான் கந்த புராணத்தில் தெளிவாகக் காட்டப்பட்டது.

நாரதன் கனியைக் கொண்டு வந்து, சிவனிடம் கொடுக்கின்றான். சிவன் யார்…? நமது சரீரமே.

நாரதன் கனியைச் சிவன் கையில் கொடுத்து உலகை எவர் ஒருவர் முதலில் வலம் வந்து விடுகின்றாரோ அவருக்கு இந்தக் கனியைக் கொடுத்துவிடு என்று சொல்கின்றான்.

அப்பொழுது… ஆறாவது அறிவின் தன்மை உலகை அறிந்து கொள்ளும் நிலைகள் கொண்டு…
1.எண்ணத்தில் விரிவடைந்து புற உலகத்தை எண்ணுவோமேயானால்
2.”உலகைச் சுற்றத்தான்…” அந்த உணர்வு செல்லும்.

இந்த ஆறாவது அறிவு “தெரிந்து கொண்டேன்…” என்ற நிலை வரப்பபடும் பொழுது “எனக்கு வசதி இருக்கிறது…” என்று எண்ணத்தால் எண்ணினாலும் ஒன்றை மறந்து விடுகின்றான்.

எவ்வாறு மறந்து விடுகின்றான்…? ஞானம் இருந்தும், தான் உணர முடியாத நிலைகள் எவ்வாறு ஆகுகின்றது…? என்று காட்டுகிறார்கள்.
1.‘நான் ஒரு நொடியில் உலகை வலம் வந்து விடுகின்றேன்’ என்று
2.எண்ணத்தால் வேகமாகச் சென்று விடுகின்றான் முருகன் (ஆறாவது அறிவு).

அதே சமயம்… சிவன் அருகில் விநாயகன் இருக்கும் பொழுது
1.பேரண்டமும் பெரு உலகமும் உன் அன்னை தந்தைதான்.
2.பேரண்டம் சுழல்வதற்கும்… அந்தப் பேரண்டத்தின் ஆற்றல் உன் அன்னை தந்தைக்குள் இருக்கின்றது.
3.இது தான் உனக்கு உலகம்.
4.அவர்களைச் சுற்றி… நீ இந்த வினையாகச் சுற்றி… நிலைக்கு வந்து சேர்.
5.அந்தக் கனியின் தன்மையை நீ பருகலாம்…! என்று நமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

கனி – நாரதன் என்று உணர்த்தப்படுவது என்ன…?

ரிஷியின் மகன் நாரதன். மனிதனின் உயர்வின் தன்மை கனியாக்கியவன் அந்த மகரிஷி. அந்தக் கனியின் தன்மை அங்கிருந்து வரப்படும் பொழுதுதான்… “நாரதனைக் கனியாக்கி”
1.கனியினைச் சிவனிடம் கொடுக்கப்படும் பொழுது பேரண்டமும் பேருலகமும் அன்னை தந்தை
2.அந்த உணர்வுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு நீ அந்தக் கனியைப் பெறு.
3.அதனைக் கொண்டு நீ கனியாகு.

உன் ஆறாவது அறிவு கொண்டு… “எங்கே இருக்கும்…?” என்றும் “எங்கோ இருக்கும்…!” என்றும் கடவுளைத் தேடாதே…!

உனக்குள், உயிரான நிலைகள் அன்னையாகவும் தந்தையாகவும்… அதனின் உணர்வின் சத்து உனக்குள் தாயாகவும் சிவசக்தியாகவும் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உடலை மறவாதே…!

சிவனையும் நமக்குள் இருக்கும் சக்தியையும் நமக்கு எவ்வளவு தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள் ஞானிகள்…? எதை வினையாகச் சேர்க்க வேண்டும்…? விநாயகன் யார்…?
1.அந்த ஞானியின் உணர்வை உனக்குள் வினையாக்கி அதை நீ கனியாக்கு
2.கனியானவன் அவன்…! என்று தெளிவாக எடுத்துரைத்தான் அந்த மகாஞானி.

நாம் இங்கே என்ன செய்கின்றோம்…? அந்த உட்பொருளைக் காணாதவாறு, கதையைக் கதையாகத்தான் காணுகின்றோமே தவிர… மெய்ப்பொருளைக் கண்டுணரும் ஆறாவது அறிவைத் தனக்குள் செலுத்தி… உட்பொருளைக் கண்டுணரும் நிலைகள் இல்லை.

மெய்ப்பொருளைக் கண்டுணர வேண்டும் என்று கவிப்புலமை கொண்டு, உணர்வின் வேட்கை கொண்டு நாதங்களின் சுருதியாக அதற்குள் பிரித்தாலும்… கவிப்புலமைகள் பல வந்தாலும்… புலமை பெற்றவருக்கே தெரியும்.

அருணகிரிநாதர்… “நாத விந்துகள் ஆதி நமோ நமோ…” என்று பாடினார்.
1.உடலுக்குள் எந்த உணர்வின் தன்மையை எடுத்தோமோ நமது உயிருக்குள் சேர்க்கப்படும் பொழுது அது ஆவியாகின்றது.
2.அந்த உணர்வின் தன்மை நமது உடலாகும் பொழுது “நாத விந்துகள் ஆதி நமோ நமோ…!”

நாம் எதையெல்லாம் எடுக்கின்றோமோ எந்த குணத்தை எடுக்கின்றோமோ
1.அந்த உணர்வின் சத்து உடலுக்குள் சேர்க்கும் பொழுது, “ஆதி…”
2.உடலாகச் சேர்க்கும் பொழுது “நமோ நமோ…”

பாடலின் உட்பொருள் தெரியாமல் பாடிக் கொண்டு போய் விடுகின்றோம். இவையெல்லாம் நமது ஞானிகள் கண்ட பேருண்மைகள். நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் நலம்.

இயற்கையின் உண்மைகளை “குருநாதர் எனக்குக் காட்டிய விதம்…”

இயற்கையின் உண்மைகளை “குருநாதர் எனக்குக் காட்டிய விதம்…”

 

நம் இந்திய நாட்டிலே அரசர்கள் ஆட்சி செய்யும் பொழுது எத்தனையோ போர் முறைகள் ஏற்பட்டது. அதிலே மதப் போர்களும் இனப் போர்களும் நடந்தது.
1.அதனால் எண்ணிலடங்காத கொலைகளும் தகாத செயல்களும் நடந்தது.
2.இது எல்லாமே அந்தந்த இடங்களிலே பதிவாகியுள்ளது
3.எத்தனையோ உடல்கள் எரிக்கப்பட்டது… எரிந்த உணர்வின் அலைகளும் ஆங்காங்கு பதிவாகி உள்ளது.

மெய் ஞானத்தால் அந்த அணுக்களைப் பற்றி அறிய முடியும். ஆனால் உயிரினங்களில் ஜீவணுக்களாக வளர்ந்து விடுகின்றது.

அதே சமயத்தில் விஞ்ஞான அறிவு கொண்டு எலக்ட்ரானிக் என்ற முறைப்படி (ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்) அந்த அலைகளைக் கவர முடியும்.
1.விஞ்ஞான அறிவால் அதை எல்லாம் அறிய முடிந்தாலும் அதனால் அவர்களுக்குப் பயனில்லை.
2.காரணம் அத்தகைய நிலை வருவதற்கு முன்னாடி… கண்டுபிடிக்கக் கூடியவர்கள் அழிந்து விடுவார்கள்.

விஞ்ஞான அறிவுகள் (எலக்ட்ரானிக்) அந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்து விட்டது.

இதைப் போன்று தான்
1.நமது உயிரும் எலக்ட்ரானிக்காக இருந்து ஒவ்வொரு நிலைகளையும் காட்டிக் கொண்டிருக்கின்றது.
2.கரண்டை உற்பத்தி செய்கிறது… எடுத்துக் கொண்ட உணர்வுகளை அலைகளாக இயக்குகின்றது.

இதைக் காட்டுவதற்குத் தான் குருநாதர் காடு மேடேல்லாம் எம்மை அலைய வைத்தார்.

அக்காலங்களில் தவம் இருக்கச் சென்றவர்களும்
1.அகஸ்தியன் எவ்வாறு எல்லாம் தாவர இன மூலிகைகளைத் தனக்குள் நுகர்ந்தறிந்தான்…? என்ற நிலையும்
2.அதே வழியில் போகர் எவ்வாறு எடுத்தார்…? என்ற நிலைகளையும்
3.அவர்களைப் பின்பற்றிக் காட்டுப் பகுதியில் அரசர்கள் சென்ற நிலைகளையும்
4.அது எல்லாம் எப்படி ரெக்கார்டு (பதிவு) ஆகி இருக்கின்றது…? என்பதைக் காட்டுகின்றார்.
5.அந்த அலைகளை எடுத்துத்தான் எனக்கு அதையெல்லாம் குருநாதர் உணர்த்துகின்றார்.
5.அதை எல்லாம் தெரிந்து தான் உங்களிடம் இப்பொழுது சொல்கின்றேன்.

நான் தெரிந்த மாதிரி நீங்களும் தெரிய வேண்டும் என்றால் சிறிது நாளாகும். ஆனால் தெரிய முடியும்…!
1.தெரிந்தாலும் நமது வாழ்க்கைக்கு இதை விலக்கி விட்டு
2.மெய் ஞானிகள் உணர்வைப் பெறுவதாகவும் அதை வளர்ப்பதாகவும் வர வேண்டும்.

தெரிந்து கொண்டேன் என்ற நிலையில் “ஆசை…” உடலின் இச்சைக்கு அதிகமாகி இதிலே சிக்கிவிட்டால் “நான் பெரிய மகான்…!” என்ற நிலையில் உடல் பற்றுக்கே அழைத்து விடும்.

சொல்வது அர்த்தமாகிறது அல்லவா…!

அந்த மெய் ஞானிகள் உணர்வைப் பெற வேண்டும் என்று எண்ணி அதை நீங்கள் பெற்று வளர்த்துக் கொண்டால் அங்கே செல்லலாம். காரணம் இதையெல்லாம் கண்டுபிடிக்கலாம் என்று வந்து விட்டால் இந்த உலக ஆசைகள் வளர்ந்து விடும்.

அன்றைக்கு காந்திஜி அவர் இங்கிலாந்தில் வட்டமேசை மாநாட்டிற்குப் போகும் போது “முதலில் அவரை உள்ளே விடமாட்டேன்…” என்கின்றார்கள்

இந்தியாவைப் பற்றிப் பேசப் போகும்போது “அரை வேஷ்டியைக் கட்டிக் கொண்டிருக்கின்றார்…” என்று உள்ளே விடமாட்டேன் என்கிறார்கள் அவர்களைப் போல கோட் சூட் அணிந்து வந்தால்தான் அரசனைப் பார்க்க முடியும்

ஆனால்… காந்திஜி அவர் எப்படியோ சாதித்து உள்ளே போய்விட்டார் அப்பொழுது அங்கே அவர் பேசும் பொழுது அவருக்கு மரியாதை கொடுக்கின்றார்கள்.

இருந்தாலும் அவர்கள் ராஜதந்திரத்தில் என்ன செய்கின்றார்கள்…? ஒரு டெலஸ்கோப்பைக் கையில் கொடுத்தார்கள்

இது எனக்குத் தெரியாது. ஆனால்… குருநாதர் இதை எனக்கு ஞாபகப்படுத்துகின்றார்.

மாநாட்டிற்குப் போய்விட்டுத் திரும்பிக் கப்பலில் வரும்போது நிறைய நாட்களுக்குப் பிறகு அந்த டெலஸ்கோப்பை எடுத்துக் கடலுக்குள் பார்க்கிறார் காந்திஜி.

அப்பொழுது ஆழ் கடலில் உள்ளுக்குள் மீன்கள் போவதெல்லாம் அதிசயமாகத் தெரிகிறது. “ஆ…! அந்த மீன் போகிறது பார். ஆகா… இங்கே இந்த மீன் போகிறது பார்..,” என்று ஆச்சரியப்படுகிறார்.

இப்படிச் சொன்னவுடனே காந்திஜி கூட வந்த தேசாய் காந்தி… அபுல்கலாம் ஆசாத்… இந்த இரண்டு பேரும் இதைப் பார்த்தவுடனே “எனக்குக் கொடு… உனக்குக் கொடு…” என்று வாங்கிப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்

கடலுக்குள் இருக்கும் அந்த அதிசயங்களைப் பார்க்கும் ஆசையில் ஒருவருக்கொருவர் “வெடுக்…” என்று அதை வாங்குவது – தான் பார்ப்பது என்று… கப்பலில் வரும் பொழுது இத்தனை நிலைகளும் அந்த மூன்று பேருக்குள்ளும் நடக்கின்றது

காந்திஜி ஒரு மகான்…! எல்லோருக்கும் உபதேசித்து வந்தாலும்… அப்பொழுது அந்த இடத்தில் அந்த அதிசயத்தைப் பார்க்கும்போது இவருக்கு ஆசைகள் உருவாகின்றது.

அப்பொழுது அவர் என்ன செய்தார்…?

இப்படிப்பட்ட ஆசைகள் உருவான பின்பு இனி நம் கையில் இந்த டெலெஸ்கோப் இருந்தால்
1.நாம் மூன்று பேரும் நிச்சயமாக நண்பர்களாக இருக்க மாட்டோம்.
2.”பகைமையாகி விலகி விடுவோம்…” என்று டெலெஸ்கோப்பை வாங்கி அதை வேகமாகத் தூக்கி கடலில் போட்டுவிட்டார் காந்திஜி.
3.இது நமக்கு வேண்டாம்…! என்று இப்படிச் செய்கிறார்.

இது நடந்த நிகழ்ச்சி.

காங்கிரஸில் நான் ஆர்வமாக ஈடுபட்டிருந்தாலும் எனக்கு இது தெரியாது. ஆனால் குருநாதர் இதைக் காண்பிக்கின்றார். அவர் காண்பித்த பிற்பாடுதான் எனக்கு இது தெரிகின்றது.

குருநாதர் இதைத் தெளிவுபடுத்துகின்றார். ஏனென்றால்
1.இயற்கையின் பேருண்மை நிலைகளை நான் உனக்குக் காண்பிக்கின்றேன்.
2.நான் உனக்குக் காண்பித்த நிலைகளை “மற்றவர்களுக்கும் நீ சொல்வாய்…”
3.எல்லோரும் “பார்க்க வேண்டும்…” என்று ஆசைப்படுவார்கள் என்று இதை எச்சரிக்கை செய்கிறார்

பார்க்க வேண்டும் என்ற அந்த ஆசையில் “எல்லாம் தெரிய ஆரம்பித்தவுடன்…”
1.அவர்கள் அதிலேயே ஆசைப்பட்டு “இந்தப் பூமியின் நிலையில்தான் இருக்க வேண்டும்…” என்று எண்ணுவார்கள்.
2.வந்தவர்கள் அனைவரும் இந்தப் புவியின் பற்றின் உணர்வைப் பெருக்கி விட்டார்கள் என்றால்
3.அப்புறம் – நீ போக வேண்டும் என்ற காட்டிய பாதைக்கு அவர்கள் போக மாட்டார்கள்.

நான் அதைப் பார்த்தேன்…! இதைப் பார்த்தேன்…! என்ற இந்த உணர்வு ஒன்றியவுடனே ஆசையின் உணர்வுகள் வளர்ந்துவிடும் என்று குருநாதர் உணர்த்துகிறார்.

ஆகவே அதை விடுத்து விட்டு…
அந்த மெய் ஞானிகள் உணர்வைப் பெற வேண்டும் என்ற உணர்வினை நீங்கள் வளர்த்து, அதை உங்கள் உடல்களிலே பெருக்கி எல்லா அணுக்களிலும் சேர்த்தால்… உயிருடன் ஒன்றிடும் நிலையாக ஒளியின் சரீரமாக அங்கே போகலாம். ஏனென்றால்
1.இந்த உடல் பற்றை அகற்றி உயிர் பற்றை வளர்த்தவர்கள் ஞானிகள்.
2.உடலுக்காக வாழாமல் நம் உயிருக்காக வாழ வேண்டும்
3.அப்பொழுது அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணைய முடியும்.

குருநாதர் இப்படித்தான் அனுபவபூர்வமாக அனைத்தையும் எமக்கு உணர்த்தினார்.