நான் தவறு செய்துவிட்டேன் என்று உணர்வதுமில்லை… ஒத்துக் கொள்வதுமில்லை

நான் தவறு செய்துவிட்டேன் என்று உணர்வதுமில்லை… ஒத்துக் கொள்வதுமில்லை

 

ஒரு சமயம் குருநாதரும் நானும் (ஞானகுரு) பழனிக்குப் போவதற்காகப் பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகிலே வந்து கொண்டிருந்தோம். அப்போது குருநாதர் என்ன செய்தார் தெரியுமா…?

ஒரு பஸ் வேகமாக வந்து கொண்டிருக்கின்றது. திருப்பத்திலே (CORNER) அது திரும்பும் பொழுது குறுக்கே புகுந்தால் எப்படி இருக்கும்…? என்ன பண்ண முடியும்…?

நாங்கள் இரண்டு பேருமே பஸ்ஸின் குறுக்கே புகுந்தோம். ஆனால் இவருடைய சக்தியால் பிரேக் போட வைத்து விடுகின்றார்… டிரைவரும் பிரேக் இடுகின்றான்… வண்டி நின்று விடுகின்றது.

அடுத்தாற்போல் அந்த டிரைவர் என்ன சொல்கிறார்…? யோவ் கிழட்டுக்… என்று கெட்ட வார்த்தையாகச் சொல்லி குருநாதரை திட்டுகின்றார்.

நீ வயசுப் பையனாக இருக்கின்றாய்… கிழவனுக்குத் தான் புத்தி இல்லை நீயாவது புத்தி சொல்லலாம் அல்லவா…! என்று டிரைவர் என்னையும் திட்டுகின்றான்.

கொச்சை வார்த்தைகளில் குருநாதரும் டிரைவரும் மாறி மாறிப் பேசுகின்றார்கள்… ஒருவரை ஒருவர் திட்டுகின்றார்கள்.

பாருடா…! டிரைவர் என்னை எப்படித் திட்டுகின்றான் என்று…! குருநாதர் சொல்கின்றார்.

அந்தத் திட்டும் உணர்வுகள் “நாம் செய்தது தப்பு” என்று தெரிகின்றது. ஆனால் டிரைவர் அசிங்கமாகத் திட்டும் பொழுது மட்டும் ரோஷம் வருகின்றது. இதைக் காட்டுகின்றார் குருநாதர்.

நாம் செய்தது தப்பு… இருந்தாலும் கௌரவப் பிரச்சினை…! பஸ்ஸில் இருக்கும் அத்தனை பேர் முன்னாடி கேவலமாகப் பேசுகின்றான் என்ற நிலையில் “என்னய்யா செய்ய வேண்டும் என்று சொல்கின்றாய்…?” என்று நானும் கோபமாக டிரைவரிடம் பேசுகின்றேன்.

டிரைவர் அதற்குப்பின் பஸ்ஸை ஸ்டார்ட் செய்கின்றான். வண்டி நகரவில்லை… நகர மாட்டேன் என்கிறது.

என் புத்தியைப் பார்த்தாய் அல்லவா… அவனை வண்டி எடுக்க விடாமல் நான் நிறுத்தி விட்டேன் அல்லவா. உன் புத்தி என்ன செய்கின்றது…? அவனை உதைக்க வேண்டும் என்று விரும்புகின்றாய்.

என்னிடம் சக்தி இருக்கின்றது என் புத்தியில் அவனை நிறுத்துகின்றேன் நீ உன் புத்தியில் அவனை உதைக்க வேண்டும் என்று திட்டுகின்றாய் ஆனால் நாம் இரண்டு பேரும் குறுக்கே சென்றது தவறா இல்லையா…?

இதையெல்லாம் அனுபவத்தில் கொண்டு வருகின்றார் குருநாதர்.

“தப்புதான் சாமி…” என்று நான் சொல்கின்றேன். ஆனால் நான் என்ன சாமி செய்தேன்…? நான் ஒன்றும் செய்யவில்லை. நீங்கள் தானே என்னைக் குறுக்கே இழுத்தீர்கள் என்று சொல்கின்றேன்.

நான் எப்பொழுதடா உன்னை இழுத்தேன்…? நீ தான்டா என்னை இழுத்தாய்…! என்று மீண்டும் வம்பிழுக்கின்றார்… மடக்கிப் பேசுகின்றார்.

பஸ் நகரவில்லை என்று சொன்னவுடனே அவன் ஸ்டார்ட் செய்து பார்க்கின்றான் முடியவில்லை. குருநாதர் சிரிக்கின்றார்.

என்னைத் திட்டினான்… அதனால் என் சக்தியால் வண்டியை நிறுத்தி விட்டேன். அதே போன்று நீயும் இன்னொரு வண்டியை நிறுத்துகின்றாயா…? என்று என்னிடம் கேட்கின்றார். நீ இன்னொரு பஸ்சுக்கு முன்னாடி போடா…! பஸ் நிற்கின்றதா இல்லையா பார்க்கலாம்…! என்கிறார்.

என்னைக் கட்டாயப்படுத்தி இன்னொரு பஸ்சுக்கு முன் குறுக்கே போகும்படி தள்ளுகின்றார். அடுத்த பஸ்ஸுக்குக் குறுக்கே நான் சென்றதும் அதுவும் நின்று விட்டது. அதுவும் நகர மாட்டேன் என்கிறது.

இப்படிச் செய்துவிட்டார் குருநாதர். நீ எப்படிடா அதைச் செய்தாய்…? என்று என்னிடம் கேட்கின்றார். அவரே செய்துவிட்டு என்னை இப்படிக் கேட்கின்றார்.

வண்டியை எடுக்க முடியாது… ஓட்ட முடியாது…! நீ அவனிடம் சொல் என்று சொல்கின்றார். ஸொன்ன பின் அந்த வண்டியும் ஓடவில்லை.

வண்டி ஓடவில்லை என்ற உடனே… அந்த இரண்டு டிரைவரும் இது என்னடா…? இரண்டு கிரகங்களும் சேர்ந்து கொண்டு ஏதோ மந்திர வேலை செய்கின்றார்கள். வண்டி நகரவில்லை என்று பயப்படுகின்றனர்…!

ஒரு பக்கம் எனக்கு பஸ்ஸை நிறுத்தி விட்டோம் என்று சந்தோஷம் வருகிறது. இன்னொரு பக்கம் அவர்கள் இருவருமே திட்டுகின்றார்கள் ஏதோ மந்திர தந்திரங்கள் செய்து பாவிகள் நம்மை வேதனைப்படுத்துகின்றார்கள் என்று திட்டுகின்றார்கள். காதிலே அதுவெல்லாம் கேட்கின்றது.

சந்தோஷமாக வரும் பொழுது இப்படி வருகின்றது ஆனால் அவர்கள் திட்டும் பொழுது அதைக் காதிலே கேட்ட பின் அவர்கள் கை கால் வராதபடி செய்தால் என்ன…? என்ற வேகம் எனக்கு வருகிறது.

நாம் செய்தது தப்பு…! ஆனாலும் அவர்களைக் கை கால் வராதபடி நாம் செய்தால் என்ன…? என்று எனக்கு இந்த உணர்வு வருகின்றது.

அப்போது தான் என்னிடம் கேட்கின்றார் குருநாதர். ஏண்டா…? தப்பு நீ செய்கின்றாய் ஆனால் உன்னுடைய எண்ணம் எப்படிப் போகின்றது பார்…! இப்படி ஒவ்வொரு மனிதனுடைய உடலிலும் உணர்ச்சிகள் எப்படி ஓடுகின்றது…?

1.தன் உடலைக் காக்க… கௌரவத்தைக் காக்க
2.இந்த உணர்வின் எண்ணங்கள் தவறைத் தயங்காதபடி செய்யச் சொல்கின்றது.

இதே உணர்வின் தன்மை உன் உடலில் ஏற்பட்டால் அவர்கள் இடும் சாப அலைகள் சாதாரணமானதல்ல.

அவன் படும் வேதனை உணர்வுகள் அவனில் விளைந்தது உன் செவிகளில் பட்டு இப்படிப் பேசுகின்றானே என்று வேகமாகத் தாக்குகின்றது உன்னுடைய இரத்தத்தில் கலக்கின்றது… கலந்தது அணுக்களாக விளைகின்றது.

இன்று உனக்குத் தெரியாது… ஆனால் அடுத்து என்ன ஆகும் தெரியுமா…? என்று இந்த உணர்ச்சியின் போர் முறைகள் உள்ளுக்குள் கலக்கங்கள் ஏற்படுவதை அப்படியே உணர்த்துகின்றனர் இன்றைய செயல் நாளை என்ன ஆகும்…?

1.உடலுக்குள் நல்ல அணுக்களுக்கும் நுகர்ந்த அணுக்களுக்கும் போராட்டங்கள் ஆகி
2.உன் உடலில் நல்ல உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அது பலவீனம் அடையப்படும் பொழுது
3.மூச்சு இழுக்கின்றது… திணறலாகின்றது நடக்க முடியவில்லை ஓட முடியவில்லை வேலை செய்ய முடியவில்லை என்று
4.இத்தனை நிலையும் உனக்குள் நாளை வரும் என்று சொல்கின்றார்… அங்கே அப்படியே காட்டுகின்றார்.

இது எதனால் வருகின்றது…?

நீ தவறு செய்தாயா…? அவன் தவறு செய்தானா…? இந்தச் சந்தர்ப்பம் உன்னைத் தவறு செய்யும்படி நான் தூண்டினேன். அதன் உணர்வின் தன்மை இவ்வாறு ஆகிவிட்டது.

இப்படி வரும் பொழுது அவருடைய நிலை என்ன ஆகிறது…? நம்முடைய சந்தர்ப்பங்கள் பின் விளைவு என்னென்ன ஆகிறது…? இதற்கு நான்கு மணி நேரம் உபதேசங்களைக் கொடுக்கின்றார் குருநாதர்.

பதட்டமும் பயமும் எனக்குள் வருகின்றது.
1.தான் பேசியது சரியா இல்லையா என்று
2.உள் மனதில் இப்படி வினாக்கள் தூண்டும்படி உணர்த்திக் காட்டுகின்றார்.

ஏன் இதையெல்லாம் உங்களிடம் சொல்கிறேன் என்றால் நாம் நல்லதைத் தான் செய்து கொண்டிருப்போம். திடீரென்று ஏதாவது ஒன்று வந்துவிடும்.

நாம் தவறு செய்திருப்போம் ஆனால் நாம் தப்பிப்பதற்காக அடுத்தவனைக் குற்றவாளி ஆக்குவதற்கு என்ன வேலையோ அதை எல்லாம் செய்வோம்.
1.அடுத்தவனைக் குற்றவாளி ஆக்கத் தான் பார்ப்போமே தவிர
2.நாம் தவறு செய்தோம் என்பதை உணர முடிவதில்லை.

ஆக சக்தி இருக்கிறது என்றால் அதை வைத்து நீ அடுத்தவர்களுக்குத் தப்பு செய்யத்தான் முடியுமே தவிர நல்லதை உன்னால் உருவாக்க முடியாமல் போகின்றது என்று அங்கே உணர்த்திக் காட்டுகிறார்.

இந்த உடலைக் காக்க உணர்வின் தன்மை ஆனால் தவறை நீக்கி அவன் நல்வழி வரவேண்டும் என்று தான் தவறு செய்து விட்டோம் என்ற இந்த உணர்வை மாற்றி
1.என்னை அறியாத நிலைகள் இருந்து விடுபட வேண்டும்.
2.அந்த அருள் ஞானம் பெற வேண்டும் என்ற உணர்வை எண்ணினால் நமக்குள் வளரும் தீமையை முதலில் தடுக்கலாம்.

சாதாரண மனிதனாக இருந்தால் இது முடியாது.

நல்ல நிலைகளை உருவாக்க வேண்டும் என்றால் தியானத்தின் வழிகளில் வரப்படும் போது இது போன்ற சந்தர்ப்பம் நிகழ்ந்தால் ஒருவனுக்குத் தொல்லை கொடுக்கவோ… பிறரை இம்சிக்கவோ அல்லது இது போன்ற மற்ற உணர்வுகள் தோன்றினால் அதை எதைக் கொண்டு அடக்க வேண்டும்…?

அங்குசபாசவா…! துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அந்த நஞ்சை வென்ற உணர்வுகளை வைத்துத்தான் அடக்க வேண்டும். இப்படித்தான் எனக்கு அனுபவங்களைக் கொடுத்தார் குருநாதர்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் தான் நமக்குள் வரும் தீய விளைவுகளையும் நம்மை அறியாத உடலில் ஆட்டிப்படைக்கும் நோய்களையும் மாற்றிக் கொள்ள முடியும்.
1.பண்பு உள்ளவர்களாகவும் நாம் மாற முடியும்
2.பிறரைக் காத்திடும் சக்தி பெற்றவர்களாகவும் வாழ முடியும்.

சுவாசிப்பது உமிழ் நீராக மாறி உடலுக்குள் சென்று என்ன செய்கிறது…? என்று தெரிந்து கொள்ள வேண்டும்

சுவாசிப்பது உமிழ் நீராக மாறி உடலுக்குள் சென்று என்ன செய்கிறது…? என்று தெரிந்து கொள்ள வேண்டும்

 

குருநாதர் என்னை மலைப் பகுதிகளுக்கு எல்லாம் அழைத்துச் சென்று 27 நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படக்கூடிய மின்னல்கள் ஒளிக்கற்றைகளாகப் பூமிக்குள் பரவுவதை “எது எது எப்படிக் கவருகிறது…?” என்று காட்டினார்.

அதிலே ஜோதிப்புல் என்றும் காட்டினார்… ஒளிக்கற்றைகளை தன் விழுதுகளில் கவர்ந்து கொண்ட பின் மோதும் போது வெளிச்சத்தை எப்படிக் கொடுக்கின்றது…? இயற்கையினுடைய நிலைகள் எப்படி சந்தர்ப்பங்கள் வருகிறது என்று அனுபவத்திலே காட்டினார்.

குருநாதருடன் அலைந்து தான் இதையெல்லாம் தெரிந்து கொண்டேன். காட்டிற்குள் சாப்பாடு வெறும் பேரீச்சம்பழம் தான். இல்லை என்றால் ஒரு பச்சிலையைக் காண்பிப்பார். அதைச் சாப்பிட வேண்டும். தண்ணீரைக் குடித்துக் கொள்ள வேண்டும். இதுதான் உணவு.

அதே சமயத்தில் அரிசியையும் மோரில் ஊற வைத்த கத்திரிக்காய் மிளகாய் மாங்காய் ஒரு டப்பா இதையும் எடுத்துச் செல்லும்படி சொல்வார். டப்பாவில் தண்ணீரை ஊற்றி அதிலே எல்லாவற்றையும் போட்டு வேக வைத்துக் கஞ்சியாகக் குடிக்கும்படி சொல்வார்.

சோறு கிடையாது…! வெறும் தண்ணீராகக் கஞ்சியாகக் குடிக்கும்படி சொல்வார். ஏனென்றால் அரிசி சாதம் சாப்பிட்டுப் பழகியதனால் அந்த உணர்வின் சத்து உடலிலிருக்கும் அணுக்களுக்கு அத்தகைய உணவு கிடைக்கவில்லை என்றால் அது மாறிவிடும்.

ஆகையினால் உன்னை இப்படிச் சாப்பிடும்படி சொன்னேன் என்று அதிலேயும் விளக்கம் கொடுப்பார்.

காரணம்… பச்சிலையைச் சாப்பிடுகின்றாய்…! இதே உணர்வு உடலில் விளைந்தால் அதற்குண்டான வித்தியாசங்களாக வந்துவிடும். அதை மாற்ற வேண்டும் என்பதற்காக இதையும் சொல்லி அதையும் சொல்லி ஒவ்வொரு வகையிலும் அதைச் சீராக்கிக் கொண்டு வருவார்.

சக்தி இருக்கிறது என்று காட்டுக்குள் எடுத்தாலும் உணவுப் பழக்கத்தால் எப்படி மாற்றங்கள் ஏற்படுகின்றது…? என்று காட்டுவார்.

அப்போது அவர் என்ன முறைப்படி கஞ்சியாகக் காய்ச்சிக் குடிக்கப்படும் பொழுது அது தேவாமிர்தமாக இருக்கும். வெயில் காலங்களில் நீர் மோரைச் சாப்பிட்டால் எப்படி இருக்கும்…? ஒரு மாங்காயை உப்பைத் தொட்டுத் தின்றால் எப்படி இருக்கும்…?

இப்பொழுது வாயில் உமிழ் நீர் சுரக்கின்றது அல்லவா… இது எங்கிருந்து வருகின்றது…? ஒன்றுமே உங்களுக்குக் கொடுக்கவில்லை… ஆனால் மாங்காயைப் பற்றிச் சொன்ன உணர்வுகள் செவிகளில் படுகிறது… உங்களுக்கு அதைச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை வருகின்றது.

நுகர்ந்த உடனே அந்தப் புளிப்பு கலந்த உமிழ் நீராகச் சுரக்கின்றது. இது சாப்பாட்டுடன் கலக்கின்றது

இதே போன்றுதான் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் கண்ணுற்றுப் பார்த்து நுகரும் உணர்வுகள்… எதைக் கேட்டறிந்தாலும் உமிழ் நீராக மாறி ஆகாரத்துடன் கலந்துவிடுகிறது.

ஆனால் அது தீமை என்ற நிலையில் இருந்தால் விஷத்தன்மையாக மாறிவிடுகின்றது ஆக வயிறு நிறையச் சாப்பிட்டு விட்டு அடுத்துப் பிறருடைய கஷ்டங்களையும் நஷ்டங்களையும் கேட்டால் இந்த விஷங்கள் உமிழ் நீராக மாறி உடலுக்குள் சேர்ந்து ஆகாரத்துடன் கலந்து வயிற்றிலே “கட…புடா… கட…புடா…! என்று ஆகிறது.

இது ஏன்… எதனால்…? என்று நாம் அறிவதில்லை வயிறு நிறையச் சாப்பிட்டபின் சஞ்சலமாகச் சலிப்பாகப் பேசுவதைக் கொஞ்ச நேரம் கேட்டுப் பாருங்கள்.

அது எல்லாம் உமிழ் நீராக மாறி அடுத்து நெஞ்சு எரிகிறது கப கப என்று எரிகிறது என்பார்கள். பேசிய உணர்வு கவரப்பட்டு இப்படி உமிழ் நீராக மாறி நல்ல ஆகாரத்தையும் கூட நுகர்ந்த உணர்வுகள் மாற்றி விடுகின்றது.

இதை எல்லாம் குருநாதர் அனுபவத்தில் கொடுத்தார். நான் இதைப் புத்தகத்திலோ மற்ற நிலைகளிலோ பார்த்துப் படித்துச் சொல்லவில்லை. நம் உடலுக்குள் என்னவெல்லாம் நடக்கிறது…? என்று காட்டிற்குள் வைத்து இதை எல்லாம் அறியும்படி செய்வார்.

“இந்தப் பக்கம் வா…” என்று அங்கே வேறு ஒரு செடியைக் காண்பிப்பார்… அதனின் மணத்தை நுகரு…! என்பார் நுகர்ந்தவுடன் அந்த உணர்வுகள் சேரும்… உமிழ் நீர்கள் எனக்குள் மாறும்.

நீ சாப்பிட்ட தண்ணீரின் சத்து இப்போது எப்படி வருகிறது பார்…! என்று காட்டுவார். நீ நுகரும் இந்த மணத்திற்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கின்றது என்று நுகரச் சொல்லி… அறியச் செய்து… உணரும்படி செய்வார்.

இதையெல்லாம் முழுமையாக உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்குத் தான் சொல்கிறேன். காரணம் உங்கள் சந்தர்ப்பம் அந்தந்த நேரமோ அப்போது இந்த உண்மைகளை நீங்கள் அறிந்து… ஞானத்தின் வழியிலே சீராகச் செல்வதற்கு இது உதவ வேண்டும் என்பதற்காகத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.

ஆகவே இந்த அருள் உணர்வைப் பெருக்கிக் கொள்ளுங்கள். மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நொடிப் பொழுதும் உங்களுக்குள் வளர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

நல்லதைச் சொல்லி நல்லதை உண்டாக்கும் வழி – குரு எனக்குக் காட்டியது

நல்லதைச் சொல்லி நல்லதை உண்டாக்கும் வழி – குரு எனக்குக் காட்டியது

 

உதாரணமாக நூறு சதவீதம் வேம்பின் சத்தும் பத்து சதவீதம் ரோஜாப்பூவின் சத்தும் மூன்று சதவீதம் விஷச் செடியின் சத்தும் சந்தர்ப்பத்தால் இரண்டறக் கலந்தால் எடை கூடி புவியில் படிந்து விடுகிறது.

அப்படிக் கலந்த சத்தில்
1.விண்ணிலிருந்து வரக்கூடிய மின்னல் தாக்கப்படும் பொழுது துடிப்படைந்து அதில் இருக்கக்கூடிய காந்தப்புலன் இழுக்கத் தொடங்குகிறது.
2.துடிப்பின் நிலை ஆனபின் அந்தந்தச் செடிகளில்… அந்தப் பங்கின் (100/10/3) விகிதாச்சாரப்படி அதைப் பிரித்து எடுக்கின்றது
3.கருவேப்பிலையாக மாறுகிறது

விஞ்ஞான ரீதியாகவும் இதைப் போன்று தான் அணு உலைகளில் கடலில் இருந்து எடுத்த வந்த மணலை வேக வைத்துப் பிரிக்கப்படும் பொழுது யுரேனியமாகவோ அல்லது மற்ற எத்தனையோ விதமான தனிமங்களாகவோ எடுக்கின்றார்கள்.

அதே சமயத்தில் பூமிக்குள் இருந்து எடுக்கக்கூடிய எண்ணெய்… குரூடு ஆயிலை (CRUDE OIL) அதைக் கொதிக்க வைத்துப் பிரிக்கின்றார்கள்.
1.முதலில் எடையற்று வேகமாகப் பிரிந்து செல்வது கேசலின் (GASOLINE) விமானங்களுக்கு அது எரிபொருளாகவும்
2.அடுத்து பெட்ரோல்; கெரசின்; டீசல் என்று இப்படி வரிசையாக எடுத்து
3.கடைசியில் எடை கூடியதாக கல் மண் மற்றவர்களுடன் கலந்து இருப்பதைத் தாராகப் பிரித்து எடுக்கின்றார்கள்.

விஞ்ஞானிகள் இயற்கையில் உருவானதைத் தனித்துத் தனித்துப் பிரிப்பதற்காக வேண்டி இப்படிப் பல வேலைகளைக் கையாளுகிறார்கள்.

இந்த வேலைகள் நடக்கும் இடங்களுக்கெல்லாம் நான் (ஞானகுரு) சென்றதும் இல்லை… அதைப் பார்த்ததும் இல்லை. ஆனால் சினிமா படம் காட்டுவது போன்று இதையெல்லாம் குருநாதர் எனக்குக் காண்பிக்கின்றார்

அதைப் பார்த்துப் பழகுவதற்காக வேண்டி சினிமா தியேட்டருக்கு என்னை அழைத்துச் செல்கிறார் குருநாதர்.

தியேட்டரில் படம் நடந்து கொண்டிருக்கும்… கதவுகள் எல்லாம் மூடி இருக்கும். வெளியில் இருந்து கொண்டே சினிமா எப்படி நடக்கிறது…? பாருடா…! என்பார் குருநாதர்.

எப்படி சாமி அதைப் பார்க்க முடியும்…? என்று கேட்டேன்.

நீ பாருடா…! என்று மீண்டும் சொல்கிறார். அப்போது அங்கே நடக்கின்ற காட்சிகள் தெரிய ஆரம்பிக்கின்றது… நான் பார்க்கிறேன்.

அவரும் கூட வந்து பாருடா பாருடா என்பார். அதையெல்லாம் அப்போது பார்க்கிறேன். இதைப் பார்த்த பின்னாடி என்னுடைய குறும்புத்தனம் சும்மா விட்டதா…?

குழந்தைகளை எல்லாம் அமர வைத்து எந்தெந்தச் சினிமாக் கொட்டகையில் எந்தெந்தப் படம் நடக்கிறது…? என்று கேட்டு “அதைப் பாருங்கள்” என்று அங்கேயே காண்பிக்க ஆரம்பித்தேன்.

அங்கே நடப்பது இங்கே அவர்களுக்குத் தெரிய வருகின்றது… வீட்டில் உட்கார்ந்து கொண்டே சினிமாவைப் பார்க்கின்றார்கள்

1.இயற்கையின் உணர்வுகளைப் பதிவாக்கப்படும் பொழுது
2.அந்தப் பதிவின் அலைகளை… அதை எப்படிக் கவர முடிகின்றது…?
3.இதைத் தெளிவாக்குவதற்காக குருநாதர் பல பயிற்சிகளை எனக்கு இப்படிக் கொடுத்தார்.

இதை எல்லாம் சாதாரணமாக யாரும் தெரிந்து கொள்ள முடியாது. ஆனாலும் தெரிந்ததை உங்களுக்குள் பதிவாக்கப்படும்பொழுது
1.சந்தர்ப்பத்தில் அந்த மகரிஷியின் அருள் சக்தி எடுத்து “நல்லதாக வேண்டும்” என்று சொன்னால் இந்த சக்திகள் உங்கள் உடலில் ஊடுருவும்.
2.உடல் நலமடைந்த பின் “நான் சொன்னேன்… நன்றாக ஆனது…!” என்று ஒரு சந்தோஷம் வரும்

ஏனென்றால்
1.நல்லதைச் சொல்லி நல்லதை உண்டாக்கித் தீமையை நீக்கும் உணர்வின் ஆற்றலைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்
2.தீமைகள் புகாது தடுக்கும் சக்திகளை உங்களுக்குள் பெறச் செய்வதற்குத் தான் இதையெல்லாம் சொல்கின்றேன்.

உதாரணமாக மனித உடலில் ஏற்படும் உணர்வுகள் ஒருவனைச் சாடிப் பேசிப் பதிவாக்கி விட்டால்… “எனக்குத் துரோகம் செய்தான் என்று எண்ணினால் அமெரிக்காவில் இருப்பவனைக் கூட அது இயக்குகின்றது… புரையோடச் செய்கின்றது வாகனம் ஓட்டிச் சென்றால் குறுக்காட்டித் தாக்கி அவனைச் செயலிழக்கும்படியும் செய்கிறது.

இதெல்லாம் சந்தர்ப்பம் தான்..!

அவனைப் பற்றி எண்ணும் போது இவன் நிலையும் அதே ஆகி இவனும் தவறி விழுகின்றான்… மேடு பள்ளம் தெரியாது கீழே விழுவான். அவனும் கெடுவான்… இவனும் கெடுவான். அவன் மேல் மீது இருக்கக்கூடிய உணர்வுகள் அந்தத் தவறு என்ற உணர்வு இங்கே வந்துவிடும்

அந்த உணர்வு இயக்க வருவது போல் தான்
1.ஞானிகள் உணர்வை உங்களுக்குள் இயக்கச் சக்தியாகக் கொண்டு வருகின்றேன்.
2.இது வெறும் சொல் அல்ல…! பயன்படுத்திக் கொள்ளுங்கள்…!

இம்சைகளைக் கொடுத்துத் தான் உயர்ந்த சக்திகளைப் பெறச் செய்தார் குருநாதர்

இம்சைகளைக் கொடுத்துத் தான் உயர்ந்த சக்திகளைப் பெறச் செய்தார் குருநாதர்

 

குருநாதர் சொன்னது:-
1.உனக்கு இடைஞ்சலாகும் பொழுது நான் சொன்ன உயர்ந்த சக்தியை நீ சேர்த்துக் கொண்டால்
2.உன் கெடுதல் நீங்கும்… உன் துன்பங்கள் விலகும்
3.அந்தத் துன்பத்தை நீக்குவதற்குத் தான் உனக்குள் இதைப் பதிவு செய்கிறேன்…!

இதைக் கடைசியில் சொல்வார். ஆனால் அதற்கு முன்னாடி என்னை உதைப்பார்… எனக்கே தெரியாது.

“ஏன் தான் இப்படித் தொல்லை கொடுக்கின்றாரோ…” என்று அவர் மேல் எனக்கு வெறுப்பு வரும். அவரிடமிருந்து “தப்பித்து ஓடிப் போய் விடலாமா…!” என்று நினைப்பேன்.

எங்கேயடா நீ தப்பப் போகின்றாய்…? என்பார் குருநாதர்.. பல இம்சை…!

வழுக்கலான பாறையாக இருக்கும் அங்கே போகச் சொல்வார். போனால் கீழே விழுந்து பல்லெல்லாம் உடைந்து விடும். அதிலே ஒரு பொருளைக் காட்டி “நீ எடுத்துக் கொண்டு வாடா…” என்பார்

அதே போன்று பனிப்பாறையாக இருக்கும் இமயமலை போன்ற இடங்களுக்குச் செல்லும்படி சொல்வார் ஆனால் மேலே துணி ஏதும் போடக்கூடாது… கோவணத் துணியை மட்டும் தான் கட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என்பார்.

பார்த்தால் பாறைகளாக எல்லாம் உருப்படியாகத் தான் தெரியும் ஆனால் மரத்தின் மேலே பனி உறைந்திருக்கும். ஏமாந்து அங்கே கையை வைத்து விட்டால் “டப்…” என்று உள்ளே போய் பாதாளத்திற்கே போய்விடுவோம். ஆனால் அங்கே போடா… என்பார்.

இதையும் காட்டுவார்… எல்லாவற்றையும் சொல்வார்…!
1.ஆனால் இதில் இருந்து எல்லாம் உன்னைக் காப்பாற்றுவதற்குச் சக்தி வேண்டும்… வலு வேண்டும்…
2.அதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் தெரியுமா…? என்பார்
3.நான் சொன்னதை நினைக்கவில்லை என்றால் நீ உள்ளே சென்று விடுவாய்
4.நான் சொன்ன முறைப்படி எண்ணினால் நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

ஏனென்றால் ஆபத்து வரும் நேரங்களில் இதையெல்லாம் சொல்லிக் கொடுப்பார் குருநாதர்.

நான் போய்க் கொண்டே இருப்பேன். ஒரு இடத்தில் மரத்தின் மீது பனிக்கட்டியாக உறைந்து இருக்கின்றது. ஆனால் அந்தப் பக்கம் பார்த்தால் திடு…திடு… திடு…திடு… என்று பனிப்பாறைகள் உடைந்து விழுந்து கொண்டிருக்கின்றது.

இங்கே பனி மலையில் காலை வைக்கின்றேன். பொரு..பொரு.. என்று உள்ளே போகின்றது. என்னுடைய ஒரு கால் “டபக்…” என்று உள்ளே இறங்கி விட்டது. இறங்கியவுடன் என்னுடைய எண்ணம் எப்படி வருகின்றது…?

“செத்து விடுவேன்…!” என்ற எண்ணம் தான் எனக்கு வருகின்றது…!

1.நான் உன்னிடம் என்னடா சொன்னேன்…!
2.நீ இப்போது என்னடா செய்கின்றாய்…? என்கிறார் குருநாதர்

ஆக… என்னுடைய உணர்வு ஏன்ன செய்கின்றது…?

1.குருநாதர் கொடுத்த சக்தியை அந்த இடத்திலே என்னால் பயன்படுத்த முடியவில்லை.
2.புவியின் ஈர்ப்பில் இருக்கப்படும் பொழுது இறந்துவிடுவோம்…! என்ற உணர்வு தான் உடனடியாக வருகின்றது
3.நல்லதை நினைக்கவே முடியவில்லை…!

இந்த உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். அடுத்து ஈஸ்வரா…! என்று எண்ணித் தியானத்தில் அமர்ந்தவுடன்… எனக்கு மனதை ஒரு நிலைப்படுத்த முடியவில்லை (கான்சன்ட்ரேஷன் பண்ண முடியவில்லை) தியானம் வரவில்லை… என்னால் எண்ணத்தை நிலையாக நிறுத்த முடியவில்லை… சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

நிலையாக அதை நிறுத்த முடியாது… அது பல அலைகள் ஓடிக்கொண்டே இருக்கும்.

ஆனால் இப்பொழுது யாம் சொல்லும் போது கேட்டுக் கொண்டிருந்தால் அது நல்ல அலைகளாக இருக்கும். ஆக… எப்பொழுதெல்லாம் குணங்கள் கெடுகின்றதோ அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் நல்ல உணர்வு எனக்குள் வளர வேண்டும் என்று எண்ணி உங்கள் உடலுக்குள் செலுத்தக்கூடிய நிலையில் ஆத்ம சுத்தியில் தான் இருக்கின்றது.

குருநாதர் காட்டிய வழியில் மிக மிக உயர்ந்த அருள் சக்திகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
1.மகரிஷிகளின் அருள் சக்தி காற்றிலே படர்ந்து இருக்கின்றது.
2.அதை எடுக்கக்கூடிய திறன் உங்களுக்கு வேண்டும் அல்லவா…!
3.நான் பேசுகின்றேன்… நீங்கள் கேட்கின்றீர்கள்… அதற்கு வேண்டிய கரண்ட் தேவை…!
4.இல்லை என்றால் உங்களால் எடுக்க முடியாது… வெறுமனே எண்ணி எடுக்க முடியாது.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிருடன் தொடர்பு கொண்டு அதைக் கூட்டிக் கொள்ள வேண்டும். இதைப் பழகிக் கொள்ள வேண்டும்.

தையல் வேலை பழகியவர்கள் துணியை வெட்டி அழகாக நேர்த்தியாகத் தைக்கின்றார்கள். மற்றவரிடம் பேசிக் கொண்டு கூட தைப்பார்கள்.

ஆனால் புதிதாகத் தைக்க வேண்டும் என்று சென்றால் கவனமாகப் பார்த்துத் தைத்தாலும் கூட சரியாக வராது. அந்தப் பழக்கம் வரும் வரை அது சீராக வராது.

அதைப் போன்று தான் அந்தப் பழக்கத்திற்கு வருவதற்குத் தான் உங்களுக்குத் திரும்பத் திரும்ப… பல கோணங்களில் உணர்த்திக் கொண்டு வருவது.

குருநாதர் என்னைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று தான்… “முதலிலே சொன்ன மாதிரி பல இம்சைகளைக் கொடுத்து… ஞானிகள் சக்திகளைப் பெறுவதற்குப் பழக்கிக் கொடுத்தார்…!”

இப்பொழுது உங்களிடம் இதை ஒவ்வொன்றாகச் சொல்லிச் சொல்லித் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம். மரம் செடி கொடிகளுக்கு உரத்தைப் போடுவது போன்று
1.இதைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் அவரவர்கள் மன நிலைக்குத் தகுந்த மாதிரி…
2.எத்தனை பேர் எந்தெந்த வகையில் வந்தாலும் அவர்களுக்கெல்லாம் நல்லது நடக்க வேண்டும் என்ற நிலையில் தான்
3.என்னுடைய இந்த உபதேசமே அமையும்… உங்களுக்குள் அந்தச் சக்தி கூடும்.

ஞானிகள் உணர்வை இப்படி உரமாக உங்களுக்குள் ஏற்றி வைத்த பின் ஈஸ்வரா…! என்று நீங்கள் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் நல்ல குணங்கள் வலுவாகி… அடுத்து நல்லதைச் சிந்திப்பதற்கும் நோய்கள் அகன்று… வேதனைகள் அகன்று உங்கள் சொல்லிலே வலிமையும் செயல்கள் புனிதமும் பெறும்.

என் பையன் சொன்னபடி கேட்கவில்லை; என் வீட்டுக்காரர் என்னை எதிர்த்துக் கொண்டேயிருக்கின்றார்; என் நண்பன் வெறுத்துப் பேசுகின்றான்; என் தொழில் சரியாக நடக்கவில்லை என்று இப்படி எல்லாம் சொல்ல வராது.

என் பையன் தெளிந்த நிலை பெறுவான்… என் வியாபாரம் விருத்தியாகும்… கணவன் மனைவி நாங்கள் ஒன்றி வாழ்வோம்… நோய்கள் அகலும்… என்று தன்னாலே சொல்ல வைக்கும்.

தீமையாக எண்ண விடாதபடி நல்லதாகவே உங்களை எண்ண வைக்கும்… உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்…!

காக்கும் சக்தியைப் பெறச் செய்வதற்குக் குருநாதர் தேர்ந்தெடுத்த இடம்

காக்கும் சக்தியைப் பெறச் செய்வதற்குக் குருநாதர் தேர்ந்தெடுத்த இடம்

 

ஒரு சமயம் பழனியில் இருந்த என்னை (ஞானகுரு) திடீரென்று ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு மலைப்பகுதியில் வெறும் பாதங்கள் மட்டும் வைக்கக்கூடிய ஒரு இடத்திலே குருநாதர் கொண்டு போய் நிறுத்தி வைத்து விட்டார்.

இதற்கு முன் அவர் எத்தனையோ உபதேசங்களை எனக்குக் கொடுத்திருந்தாலும்
1.அந்த இடத்திற்கு வந்த பின் எல்லாவற்றையும் காற்றிலே விட்டுவிட்டேன்.
2.அவர் போதித்ததையெல்லாம் விட்டுவிட்டுச் சிந்தனை இல்லாது இருக்கின்றேன்
3.கீழே பார்த்தால் கிறு கிறு என்று வருகின்றது… இந்தப் பக்கம் காலை வைப்பதற்கு இடமில்லை
4.நிமிர்ந்து பார்த்தால் கீழே சாய்ந்து விழுந்து விடுமோ என்ற எண்ணம் வருகின்றது.
5.குருநாதர் சொன்ன தத்துவங்களை நினைத்துப் பார்க்க நேரமில்லை…
6.குருவை மறந்து என் உடலைப் பற்றிய இச்சைக்கு வந்து விட்டேன்… என் குடும்பத்தை எண்ண ஆரம்பிக்கின்றேன்.

என் குழந்தை என்னுடைய மனைவி அவர்களுடைய சிந்தனை வந்தது. ஏனென்றால் என் மனைவியை நோயிலிருந்து குருநாதர் அப்போது தான் எழுப்பி வைத்தார்.

அது மீண்டும் இறந்து விட்டால் யார் காப்பது…? பிள்ளைகள் அனைத்தும் சிறியவர்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு யார் நல்லதைச் சொல்லிப் பாதுகாப்பது…? என்று இந்தப் புத்தி எனக்குள் வர ஆரம்பித்துவிட்டது

ஏனென்றால் அவர்கள் மீது வளர்த்துக் கொண்ட பாசம் உடலின் இச்சை வரப்படும் பொழுது தன் இனத்தை வளர்க்கும் நிலைக்காக எனக்குள் வந்துவிட்டது.

பதட்டம் ஆகின்றது… உடலில் வேர்வை அதிகமாகின்றது…! மேலே ஒரு குடம் நீரை ஊற்றிக் குளித்தால் எப்படி நீர் ஓடுமோ அப்படி வேர்வை வருகின்றது.

நான் இருந்த இடம் வழுக்குப் பாறை… செங்குத்தாக இருக்கின்றது அதில் தான் இரண்டு பாதம் மட்டும் இருக்கும் இடத்தில் நின்று கொண்டிருக்கின்றேன். கால் வழுக்கும் நிலையும் வருகின்றது.

எதையாவது பிடிக்க வேண்டும் என்றாலும்… வழுக்கி விட்டால் என்ன செய்வது…? நான் தொங்கத்தான் வேண்டும். தப்பித்துக் கீழே இறங்கும் பாதையும் இல்லை… குதித்தால்தான் இறங்க முடியும்…! என்று இப்படி என்னுடைய எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றது.

என் வீட்டை நான் எப்பொழுது பார்ப்பது…? என் மனைவி பிள்ளைகளை எப்படிப் பார்ப்பது…? என்று இந்த சந்தேகம் வந்துவிட்டது. தவித்துக் கொண்டிருக்கிறேன்…!

இனி எத்தனை நாள் இப்படி வேதனைப்படப் போகின்றோமோ…? என்று உயிர் பிரியுமோ…? அது வரை இந்த வேதனையை அனுபவிக்கத் தான் வேண்டும் வெயில் அடிக்கின்றது… தண்ணீர் தாகமாக இருக்கிறது… உணவு இல்லை… இதிலே தான் இருக்கிறேன்…!

1.இப்படிப்பட்ட இம்சையான நிலைகளுக்கு அழைத்துச் சென்று தான்
2.பல உபதேசங்களையும் உண்மைகளையும் அனுபவபூர்வமாகக் காட்டுகின்றார்.

இந்த இடத்தில் இப்படி நிற்பதற்கு முன் மந்திரம் செய்வதைப் பற்றியும் மந்திரவாதிகளைப் பற்றியும் அப்பொழுது நிறைய சொல்லிக் கொண்டிருந்தார் குருநாதர்.

மந்திரவாதி எப்படியெல்லாம் ஆள்களை இன்னொரு பக்கம் மாற்றுவான்… பெரும் கல்களையும் பாறைகளையும் தூக்கி எறிவான்… எத்தனையோ அமானுஷ்யமான வேலைகளைச் செய்வான்…! என்பதை நேரடியாகக் காட்டிக் கொண்டிருந்தார்.

இதை எல்லாம் முதலில் சொல்லி இருந்ததால்
1.எவனோ ஒரு சக்தி வாய்ந்த மந்திரவாதி தான் நம்மை இப்படிச் சிக்க வைத்து விட்டான்
2.மந்திரவாதியிடம் சிக்கி விட்டோம் இது தெரியாமல் போய்விட்டதே.
3.மந்திரவாதிகளிடம் சிக்கினால் எப்படித் தப்புவது…? என்ன செய்ய வேண்டும்…! என்று
4.குருவிடம் கேட்க மறந்து விட்டோமே…! என்று அப்பொழுதுதான் குருவைப் பற்றி எண்ணமே வருகின்றது.

உடலில் கடும் அவஸ்தைகளைக் கண்ட பின் குருவிடம் கேட்காமல் விட்டு விட்டோமே…! என்று அப்பொழுதுதான் அந்த நினைவாற்றல் வருகின்றது

அப்பொழுதுதான் ஒரு பாடலும் வருகின்றது… குருவையும் நான் காண முடிகின்றது…!

மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போல மறைவதை பாராய்
நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ
நிலையில்லாத இந்த உலகம் உனக்குச் சதமா…? என்று இந்தப் பாடலைப் பாடிக் கொண்டு வருகின்றார்.

குருநாதரின் குரலைக் கேட்டு அவரை உற்றுப் பார்க்கும் போது என் முன்னே அலையாக வந்து நிற்கின்றார்… அப்போது சிரிக்கின்றார்…!
1.என்னை நீ நினைக்க மறந்து விட்டாய்…
2.நான் உபதேசித்ததை எல்லாம் தெருவிலே விட்டுவிட்டாய் காற்றிலே விட்டாய்.

இத்தகைய சந்தர்ப்பங்கள் வந்தால் உன்னை நீ காக்க முடியாது…
1.பிறரைக் காக்க வேண்டும் என்று நான் சொன்னேனே…!
2.அதை உன்னால் காக்க முடியுமா…? என்று இப்படி வினாக்களை எழுப்புகின்றார்.

குருநாதரிடம் விளைந்த அந்த உயர்ந்த சக்தியை வேண்டி ஏங்கிப் பெறுவோம் என்றால்
1.பதிந்த உணர்வுகளுக்கு ஊக்கமாகி உணர்வின் அலையாக அதைப் பருகி
2.தன்னைக் காத்திடும் நிலையும் பிறரைக் காத்திடும் உணர்வுகளும் அது வரும்…! என்று அங்கே வைத்துத்தான் உபதேசித்தார்.

குருவிடம் யாம் அனுபவபூர்வமாகப் பெற்ற “உயர்ந்த சக்தி”

குருவிடம் யாம் அனுபவபூர்வமாகப் பெற்ற “உயர்ந்த சக்தி”

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் அனுபவம் பெறுவதற்காக யாம் (ஞானகுரு) கன்னியாகுமரியில் இருந்து வடக்கே சைனா பார்டர் வரை சென்று வந்தது தான்.

என் கால்களிலே எத்தனையோ ஆணிகள் உண்டு. இமயமலையின் மீது செல்ல வேண்டுமென்றால் வெறும் கோவணத் துணியுடன் தான் செல்ல வேண்டும்.
1.குருநாதர் சொன்ன முறைப்படி அவர் எதை எண்ணும்படி சொன்னாரோ
2.அதை எண்ணிக் கொண்டுதான் அங்கே செல்ல வேண்டும்.

நடந்து செல்லும் வழியில் ஒரு சுடு தண்ணீர் குளம் இருந்தது. அங்கே சூடு கதகதப்பாக இருந்ததால் அந்த இடத்திலே அமர்ந்து குருநாதர் சொன்னதைச் செய்யலாம்…! என்று நினைக்கின்றேன்.

அப்பொழுது தான் குருநாதர் சொல்கின்றார். நீ இங்கே குளிர் காய வரவில்லை… குளிர் அடிக்கும் இடத்திலே போய் உட்கார்…! என்றார்.

விண்ணுலக ஆற்றல் அனைத்தையும் நினைவு கொண்டு எடுத்துக் கொண்டிருந்தேன்.
1.ஒரு முக்கியமான ஒன்றைச் சொன்னார்…
2.அதை நீ எண்ணும் போது இன்ன நிலை இருக்கும். உனக்குக் குளிர் வராது உன்னைப் பாதிக்காது
3.அதே சமயத்தில் உன் நினைவுகள் அனைத்தும் விண்ணை நோக்கிச் செல்லும்… துருவ நட்சத்திரத்துடன் உன்னை இணைக்கும்
4.அன்று அகஸ்தியன் எவ்வாறு நஞ்சினை ஒடுக்கினானோ அந்த சக்தி உனக்குள் பெருகும்
5.உன் உணர்வின் தன்மை உயர்த்த இது உதவும் என்று சில முறைகளைச் சொன்னார்.

அவ்வாறு செய்து கொண்டிருந்தேன்..!

ஆனால் முதலில் நடந்து செல்லும்போது அது சைனா பார்டராக இருப்பதால் அங்கு இருப்பவர்கள் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வருகின்றார்கள் என்னென்னமோ சொல்கிறார்கள்…! எனக்கு ஒன்றும் புரியவில்லை… கண்களை இறுக்கி மூடி விட்டேன்.

நடந்து செல்லும் போது காலை வைத்தால் முழங்கால் வரை உள்ளே செல்கின்றது. பனி முழுமையாக உறையாமல் இறுகலாக இல்லாதபடி கால் உள்ளே செல்லும்படியாக பொல பொல என்று இருக்கின்றது. கால் எல்லாம் கடு..கடு.. என்று இருக்கின்றது.

1.அத்தகைய பனிக்குள் கால் அதிக நேரம் இருந்தால் உணர்ச்சியற்றுப் போகும்
2.உன் கால் அழுகிப் போய்விடும் என்று ஏற்கனவே குருநாதர் சொல்லி இருக்கின்றார்.

அங்கே எப்படிச் சென்றாலும் என் உணர்வு குரு கொடுத்த சக்தியை மறந்து செயல்படும் பொழுது கடுகடுப்பு அதிகம் ஆகிவிட்டது. கடுகடுப்பு அதிகமான பின் என் நினைவுகள் எப்படி வருகிறது…?

இப்படி ஆகிவிட்டதே… ஊரை விட்டு இங்கு வந்து விட்டோமே… என் பையன் அவன் என்ன செய்கிறானோ…? என்று நினைவு வந்து விட்டது. உடனே என் இருதயம் குளிரினால் கிர்… என்று இறைய ஆரம்பிக்கின்றது. சரி… இதோடு எல்லாம் முடிந்துவிடும் போலிருக்கின்றது என்ற எண்ணம் தான் வருகின்றது.

உடலின் பற்று வரும் பொழுது அந்த இடத்தில் இத்தனை இம்சைகளும் வருகின்றது.

இதைப் போன்ற நிலையிலிருந்து காக்கப்பட வேண்டும் என்றால்
1.குரு சொன்ன நினைவை எடுக்க வேண்டும்
2.உன்னைக் காக்க வேண்டும் என்றால் நீ அந்த உயர்ந்த சக்தியை எடுத்தே ஆக வேண்டும்.
3.உயர்ந்த சக்தியைப் பெற்றால் தான் உன் குழந்தையைக் காக்க முடியும்
4.உடலில் காக்கும் உணர்வு இருக்கின்றது… அதைச் செயல்படுத்த வேண்டும் என்றால் உயர்ந்த சக்தி எடுக்க
5.இந்த உடல் தேவை…! என்று இப்படி உபதேசிக்கின்றார்.

குருவை எண்ணி அவர் கொடுத்த ஆற்றலைப் பெற வேண்டும் என்று எண்ணுகின்றேன்.

உலக மக்கள் அனைவரும் எத்தனையோ வகையில் சிக்குண்டுள்ளனர்.. வேதனையில் உழன்று கொண்டுள்ளனர். அதிலிருந்து மீட்ட “அந்த அருள் ஞானிகள் உணர்வை எல்லோரும் பெற வேண்டும்…” என்று எண்ணும்படி சொன்னார்.

விண்ணை நோக்கி ஏங்கி அந்தச் சப்தரிஷி மண்டலங்களை ஊற்றுப் பார்த்து… இருளை மாய்த்து உணர்வை ஒளியாக மாற்றிடும் அந்த உணர்வை நுகரும் பொழுது இங்கே இருள் மறைகின்றது.

இந்த இடத்திலே
1.எல்லோருக்கும் சேர்த்து வேதனைப்படுவோர் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று நீ எண்ணு.
2.உன் பிள்ளைக்கு மட்டும் என்று தனித்துக் கேட்காதே…! என்று குருநாதர் சொன்னார்.

பாச உணர்வுகள் என்னை எப்படி இயக்குகிறது என்பதை உணர்த்துகின்றார். பழனியில் அங்கே காட்சி தெரிகின்றது வீட்டில் என் பையன் ரோட்டின் முச்சந்தியில் உட்கார்ந்து நானா… நானா… (நைனா) என்று என்னைச் சொல்லிக் கொண்டிருக்கின்றான்.

அவனுக்கு மூலம்…! இரத்த இரத்தமாகப் போய்க் கொண்டிருக்கின்றது இமயமலையில் இருந்து பார்த்தால் எனக்கு எப்படி இருக்கும்…? குரு அனைத்தையும் குரு காண்பிக்கின்றார்.

ஆக அவன் வேதனைப்படுவதை எண்ணும் பொழுது தான் எனக்குள் இருள் சூழச் செய்கிறது… இருதயம் இறைய ஆரம்பித்தது. அப்போது என் பையனைக் காக்கும் எண்ணமே எனக்கு வரவில்லை.

அவனை எண்ணி வேதனைப்படும் நிலையில் அந்த வேதனை என்ற நஞ்சு உன்னை எப்படிச் செயலற்றதாக மாற்றுகின்றது…? ஆதை மாற்ற நீ என்ன செய்ய வேண்டும்…? இந்த உணர்வின் இயக்கங்களில் இருந்து நீ எவ்வாறு மீள வேண்டும்…? என்ற உண்மையை இமயமலையில் வைத்து அனுபவபூர்வமாகக் காட்டுகின்றார்.

உங்களிடம் இப்போது லேசாகச் சொல்லுகிறேன்… நீங்கள் அமர்ந்த இடத்திலிருந்து தெரிந்து கொள்கின்றீர்கள்.
1.ஆனால் இதைக் கேட்டுவிட்டு அந்தப் பக்கம் சென்ற பின் மறந்து விடுகின்றீர்கள்
2.சாமி என்ன சொன்னார் தெரியவில்லையே…! என்று விட்டு விடுகின்றீர்கள்.

குருநாதர் என்னைக் கடுமையான கஷ்டங்களுக்கு உள்ளாக்கித் தான் இந்தப் பேருண்மைகளை உணர்த்தினார்.
1.என்னால் மறக்காது…
2.குரு காண்பித்த அந்த உயர்ந்த சக்தியை எடுக்க முடிகின்றது.

கஷ்டப்பபட்டுப் பெற்ற அந்த உயர்ந்த சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்ற ஆசையில் தான் இதைச் சொல்கின்றேன். ஆனாலும் சாமி பிரமாதமாகப் பேசுகிறார்… இதை என்ன என்று சொல்வது…! என்று பெருமை பேசி விட்டுச் சென்று விடுகிறார்கள்.

உபதேசத்தைக் கேட்டு விட்டு வீட்டிற்குச் சென்றால் அங்கிருக்கக் கூடிய சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி பக்கத்து வீட்டுக்காரர் இவ்வாறு செய்கின்றார் என் அப்பா இப்படிச் சொல்கிறார்… என் பிள்ளை இப்படிச் செய்கின்றான்… எனக்கு ஒரே கஷ்டமாக இருக்கிறது என்ற உணர்வுகள் தான் உங்களுக்குள் வருகின்றது.

அதை எல்லாம் மாற்றுவதற்கு தான் இந்த உண்மைகளை உங்களுக்கு தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம். நீங்கள் எங்கு சென்றாலும் எந்த சந்தர்ப்பத்திலும் யாம் சொல்லிக் கொடுத்த பக்குவம் கொண்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவேன்
2.பார்க்கும் அனைவரையும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்வேன்
3.எங்களை அறியாத தீமைகள் நீங்க வேண்டும்
4.என்னை பார்க்கும் அனைவரும் குருநாதர் காட்டிய அருள் வழியில் மகிழ்ந்து வாழ வேண்டும்
5.அவர்கள் குடும்பங்கள் உயர்ந்த நிலை பெற வேண்டும்
6.என்னைப் பார்க்கும் பொழுதும் என்னை நினைக்கும் பொழுதும் அவர்களுக்குள் நல்ல எண்ணங்கள் தோன்ற வேண்டும் என்று
7.இப்படித்தான் நீங்கள் செயல்படுத்த வேண்டும்.

பாசத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எவ்வாறு இயக்குகின்றது என்பதை அந்த பனிப்பாறைகளுக்கு மத்தியிலே எனக்கு குருநாதர் அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.

நீங்கள் இங்கிருந்தே அந்த உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டும். குரு அருள் உங்களுக்குள் உறுதுணையாக இருக்க வேண்டும். உங்களை அறியாத இருங்கள் நீங்க வேண்டும். மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும். அனைவருக்கும் இது கிடைக்க வேண்டும் என்று
1.ஏகோபித்து நான் (ஞானகுரு) தியானிக்கின்றேன்.
2.குரு இட்ட ஆணைப்படி இதைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றேன்.

குருநாதர் எம்மை அரவணைத்துச் செய்த நிகழ்ச்சி

குருநாதர் எம்மை அரவணைத்துச் செய்த நிகழ்ச்சி

 

ஒரு சமயம் நான் (ஞானகுரு) பழனியில் இருக்கின்றேன்… கல்கத்தா செல்வதற்கு டிக்கெட் எடுடா…! என்று குருநாதர் சொல்கின்றார்.

எதற்கு சாமி…? என்று கேட்டேன்.

டிக்கெட் எடுடா…! என்றார்.

குருநாதர் பணத்தையும் கொடுக்கின்றார். ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று டிக்கெட்டை எடுத்துக் கொண்டு வந்தேன்.

ஒரு குதிரை வண்டியைப் பிடிடா… என்று சொன்னார். வண்டி வந்தது.

ஆனால் கொடைக்கானல் பக்கம் காட்டுப் பக்கமாக வண்டியைப் போகச் சொல்கிறார்.

சாமி… நாம் இந்தப் பக்கம் செல்ல வேண்டும்…! என்று சொன்னேன்.

கல்கத்தா செல்ல டிக்கெட் எடுத்து விட்டாய் அல்லவா…! குதிரை வண்டியில் ஏறு… வண்டியைப் போகச் சொல்…! என்று சொல்கின்றார்.

வண்டியில் ஏறிய பின்… கல்கத்தாவில் குருநாதர் அங்கே சுற்றி வந்த பல நிகழ்ச்சிகளைச் சொல்கிறார். கல்கத்தா காளி எவ்வாறு இருக்கின்றது…? எப்படி எப்படி உருவானது…? எந்தெந்த நிலை…! என்று சொல்லிக் கொண்டு வருகின்றார்.

அதை எல்லாம் சொன்ன பின்… இப்பொழுது எதற்காக உன்னை அங்கே அழைத்துப் போகின்றேன் தெரியுமா…! என்று கேட்டார்.

அவர் இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து நன்றாகப் பதம் பார்த்துவிட்டு என் கழுத்தைப் பிடிக்கின்றார்.
1.இங்கே குத்தி இந்த இரத்தத்தை அங்கே கொண்டு போய்க் காளிக்குக் கொடுத்துவிட்டு
2.“நான் மந்திரத்தைக் கற்றுக் கொள்ளப் போகின்றேன்…!”
3.அதற்குத்தான் கல்கத்தாவிற்கு உன்னை அழைத்துப் போகின்றேன் என்றார்.

எனக்கு எப்படி இருக்கும்…? காட்டிற்குள் அழைத்துச் சென்ற பின் இப்படிச் சொல்கிறார்.

நான் என்ன சொன்னேன்…?

என் மனைவியை நோயிலிருந்து காப்பாற்றி எழுப்பிக் கொடுத்தீர்கள். நீங்கள் என்ன சொல்கின்றீர்களோ அதன்படி…
1.என்னைக் கொன்றாலும் சரி… அல்லது மற்ற எப்படி வேண்டுமானாலும்
2.எதை வேண்டுமானாலும் நீங்கள் செய்து கொள்ளுங்கள்…! என்று சொன்னேன்.

குருநாதர் “கெக்கெக்க….கெக்க….” என்று பலமாகச் சிரிக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் மறுபடியும் என் கழுத்தைப் பிடித்துக் கத்தியை எடுத்துக் குத்த வருகின்றனர்.

மீண்டும் என்னை மிரட்டுகின்றார்…! பார்க்க வேண்டிய எல்லா பரீட்சைகளையும் செய்து பார்க்கின்றார்.

சிறிது நேரம் கழித்து
1.”என்னை அரவணைத்து…” கல்கத்தாவிற்கு அழைத்துச் செல்கின்றனர்.
2.நானும் இப்படித்தான் அங்கே சென்று வந்தேன் என்று சொல்கின்றார்

உன்னை அங்கே பலி கொடுத்து நான் சக்தி பெற போகின்றேன்… நான் உலகத்திலேயே மிகச் சக்தி வாய்ந்தவனாக மாறப் போகின்றேன் என்று சொல்கின்றார்.

அரசர்கள் காளில் கோவிலை எப்படி உருவாக்கி வைத்திருக்கின்றார்கள்…? பலி பீடங்களை அமைத்து எதிரிகளை வீழ்த்துவதற்கு என்ன செய்கின்றார்கள்…? அதே சமயத்தில் எந்தெந்தக் காலங்களில் எதைச் செய்கின்றார்கள்…?

ஆடு மாடு அனைத்தையும் பலி கொடுத்துவிட்டுக் கடைசியில் மனிதனையும் பலி கொடுக்கின்றார்கள். படிப்படியாக அசுவமேதை யாகம் செய்வது போன்று கடைசியில் மனிதனை நரபலி கொடுக்கின்றார்கள்.

ஒவ்வொரு ஆலயத்திலும் ஒவ்வொரு விதமான சக்திகளை0ப் பெறுவதற்காக மனிதனுக்குள் விளைந்த உணவு உணர்வுகளை எடுத்து இந்த உடலைப் பலி கொடுத்து எப்படிச் சக்தி பெறுகின்றார்…? என்று காட்டுகின்றார்.

முருகன் ஆலயத்தில் பாலாபிஷேகம் தேனாஅபிஷேகம் செய்கின்றார்கள். கருப்பணசாமி மாடசாமி கோவில்களில் கோழியோ ஆட்டையோ அறுத்து இரத்தத்தை அங்கே அபிஷேகம் செய்கின்றார்கள்.

இதே போன்று மனிதனுடைய இரத்தத்தையே காளிக்குக் கொண்டு போய்க் கொடுக்கின்றார்கள். மந்திர ஒலி கொண்டு அங்கே என்ன செய்கின்றனர்…? என்று நேரடியாகக் காண்பிக்கின்றார்.

என்னை அங்கு அழைத்துக் கொண்டு சென்று இந்த உண்மைகளை எல்லாம் காட்டுகின்றார்.

இங்கே வருவதற்கு முதலில்… உடல்களைச் சரியான இடத்திலே கொண்டு போய் மறைத்து வைக்கின்றார்.

ஏனென்றால் நாம் இருவரும் இங்கே வந்து விட்டோம் அங்கே மனிதர்கள் இந்த உடலைப் பார்த்தார்கள் என்றால் “எல்லாம் தீர்ந்து போகும்டா…” என்கிறார்.

நாம் வருவதற்கு நேரமாகி விட்டது என்றால்
1.“செத்து விட்டோம் என்று என்று சொல்லி உடலை எரித்துப் பொசுக்கி விடுவார்கள்…
2.கடைசியில் நாம் இருவரும் ரோட்டிலே தான் அலைய வேண்டியிருக்கும்…! என்று அதையும் சொல்கின்றார்.

கல்கத்தா காளி கோவில் நடக்கக்கூடிய பல உண்மைகளை இப்படித்தான் குருநாதர் எம்மை அறியும்படி செய்தார்.

கடும் விஷம் கொண்ட தாவரங்களின் மத்தியில் அமரச் செய்து தான் அனுபவத்தைக் கொடுத்தார் குருநாதர்

கடும் விஷம் கொண்ட தாவரங்களின் மத்தியில் அமரச் செய்து தான் அனுபவத்தைக் கொடுத்தார் குருநாதர்

 

என்னைக் குருநாதர் காட்டுக்குள்ளும் மேட்டுக்குள்ளும் அழைத்துச் சென்று
1.சில நஞ்சான தீய இடங்களில் கொண்டு போய் அமரச் செய்தார்.
2.அந்த நஞ்சின் தன்மை எண்ணத்தால் எப்படித் தாக்குகின்றது…?
3.நஞ்சற்ற நிலைகளை நீ எப்படிப் பெற வேண்டும்…? என்ற அனுபவத்தைக் கொடுத்தார்

ஏனென்றால்… இன்றைய காற்று மண்டலத்தில் மனிதனால் “செயற்கையில் உருவாக்கப்பட்ட… இயக்கப்பட்ட நஞ்சுகள்” பலவாறு இந்தப் பூமி முழுவதுமே படர்ந்திருக்கின்றது.

இதற்குள் நாம் நல்லதை எண்ணினாலும் இந்த நஞ்சின் தன்மை கவர்ந்து நம் நல்ல குணங்களை இயக்கவிடாது நாம் எப்படித் தவிக்கின்றோம்…?

இந்த நிலையை உணர்த்துவதற்குத்தான்…
1.கடும் விஷச் சக்திகள் கொண்ட தாவர இனங்களின் மத்தியில் என்னை அமரச் செய்தார் குருநாதர்.
2.அதை நான் நுகரப்படும் பொழுது என்னுடைய சிந்தனையே அழிந்திடும் நிலை வருகின்றது
3.இந்த உணர்வினை அங்கே எனக்குள் இணைத்துக் காட்டுகின்றார்.
4.அங்கே சென்றபின் மயக்கம் வந்துவிடும். அத்தகைய செடிகளுக்குப் பக்கத்தில் சென்றாலே மயக்கம் வந்துவிடும்.
5.உனக்குள் அந்த நஞ்சின் தன்மை இயக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்…?

இது தான் அனுபவம்…!

இன்றைய உலகில் பிறர் செய்யும் நிலைகளும் பிறர் செய்யும் தவறுகளும் அதிகமான அளவில் நாம் பார்த்துக் கேட்டு அறிந்துணர நேருகின்றது… நம்மையறியாமலே அவைகள் நமக்குள் வந்து விடுகின்றது.

பிறர் செய்யும் தீமையான உணர்வுகள் நமக்குள் வந்தபின் நல்லதை எண்ணும் பொழுது நாம் நல்லதை வளர்க்க முடியாத நிலைகள் எப்படி இருக்கின்றது…? என்ற நிலைகளைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

நஞ்சான தாவர இனங்கள் மத்தியில் அந்த மணத்தை நுகரப்படும் பொழுது நுகர்ந்தாலே மயக்கம் வருகின்றது.

அப்போது… ஞானிகள் கண்டுணர்ந்த பேருண்மைகளை அந்தத் தத்துவத்தைச் சொல்லப்படும் பொழுது இவருடைய தத்துவத்தை நாம் எப்படி ஏற்றுக் கொள்வது…?

இப்பொழுது மக்கள் மத்தியில் இருக்கும் பொழுது எனக்குத் துரோகம் செய்தான் பாவிப்பயல்…! இவன் உருப்படுவானா..,? என்று ஒருவரைச் சொல்லப்படும் பொழுது நல்ல மனம் கொண்டவர்கள் என்ன செய்கின்றோம்..?

அவன் சும்மா இருக்கின்றான்… நீ ஏன் இப்படிப் பேசுகின்றாய்…? என்று அவன் உணர்வைத்தான் சுவாசிக்க நேருகின்றது…
1.நல்ல குணத்தைச் செயல்படுத்த முடியவில்லை.
2.இப்படித்தான் இருக்கின்றது உலகம்…! என்ற நிலைகளில் தீமைகளில் சிக்கப்பட்டு…
3.தீமையான உணர்வுகளைப் பதிவு செய்தபின்… இது தான் இயக்குகின்றது.

நல்லதை இயக்க முடியவில்லை… நல்லதை வளர்க்க முடியாதபடி தத்தளிக்கின்றான்…! ஞானத்தின் அருள் பெறத் தெரியாதபடி தவிக்கின்றான். ஆகவே இந்த மக்கள் மத்தியில் என்ன செய்யப் போகின்றாய்…?
1.தீமைகளுக்கு (நஞ்சான செடிகளுக்கு) மத்தியில் நீ அமரப்படும் பொழுது
2.உண்மையின் தன்மையை உனக்குள் நீ அறிய முடியவில்லை
3.இதை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…? என்று வினா எழுப்பினார்.

துருவ மகரிஷிகளின் அருள் மணங்கள் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை விண்ணிலே செலுத்தி அந்தச் சக்தி பெற வேண்டும் என்று உயிரான ஈசனிடம் வேண்டி “உயிர் வழியாகச் சுவாசிக்க வேண்டும்…!”

துருவ மகரிஷி… அவர் வாழ்ந்த காலத்தில் இதைப் போன்ற தீமைகளை வென்று… நஞ்சினை ஒளியாக மாற்றி… அகண்ட அண்டத்தின் இயக்கத்தையும் அறிந்து பேரருள் பேரொளியாக இன்று விண்ணிலே வாழ்ந்து கொண்டுள்ளார்.
1.அந்த மணங்களை நுகர்ந்தால் அவர் நஞ்சினை ஒளியாக மாற்றியது போன்று
2.நீ பெற முடியும்… மக்களையும் பெறச் செய்ய முடியும்…! என்று அனுபவபூர்வமாக எனக்கு உணர்த்திக் காட்டினார்.

இதைப் போன்று அனுபவ வாயிலாகப் பெற்ற அரும் பெரும் சக்திகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் “நீங்களும் பெற முடியும்… பெற வேண்டும்…!” என்பதற்குத்தான் இதை உணர்த்துகின்றோம்.

“திருடன்டா…… நீ…!” என்றார் குருநாதர்

“திருடன்டா…… நீ…!” என்றார் குருநாதர்

 

ஒரு சமயம் பழனியில் தாய் தந்தையுடன் ஏழு பேர் சேர்ந்து கிணற்றில் விழுந்து செத்துப் போனார்கள். அதனால் அந்தக் கிணற்றுப் பக்கமாகப் போவதற்குப் பயந்து கொண்டே இருப்பார்கள்.

குருநாதர் என்ன செய்தார்…? என்னை இங்கே வாடா…! என்று கூப்பிட்டார். நான் சொல்வதைக் கேட்கிறேன் என்று சொன்னாய் அல்லவா…! என்று சொல்லிக் குளத்திற்குக் கூட்டிக் கொண்டு போனார்.
அந்தக் குளத்திற்கு அருகில் உள்ள ஓரு கிணற்றுக்கு என்னைப் போகச் சொன்னார். நான் இங்கே இருந்து கொள்கிறேன்டா…! நீ (ஞானகுரு) அந்தக் கிணற்றில் ஒரு கல்லைக் கொண்டு போட்டு விட்டு வாடா…! என்கிறார்.

நான் எப்படி அங்கே போக முடியும்…?

ஏற்கனவே நிறையப் பேர் விழுந்து அதிலே இறந்திருக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். அங்கே போய் எத்தனையோ பேர் பயத்தாலே “நெஞ்சு வலித்தது…” என்று செத்துப் போயிருக்கின்றார்கள்.

இந்த எண்ணம் எல்லாம் எனக்குள் ஏற்கனவே பதிவாகி இருக்கின்றது. என்னை இராத்திரியில் ஒரு மணிக்குக் கல்லைக் கொண்டு போய் அந்தக் கிணற்றில் போடச் சொன்னால் எப்படி இருக்கும்…?

கல்லைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டேன். போடா…..! என்கிறார் குருநாதர்.

சாமி…! என்றேன் நான்.

முன்னே வைத்த காலைப் பின்னே வைக்காதடா… என்கிறார் குருநாதர்.

அங்கே நான் போகப் போக.. போகப் போக.. போகப் போக… அந்த உருவம் முதலில் வெள்ளையாகத் தெரிகின்றது. பிறகு அந்த அம்மா குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு வந்தது… எல்லாமே அப்படியே தெரிகின்றது.

அங்கே கிணற்றில் விழுந்தது எல்லாம் தெரிகின்றது. “ஜல்…ஜல்…!” என்ற நினைப்பு அந்த எண்ணங்கள் அப்படியே குவித்து வருகிறது. அடுக்கடுக்காக அத்தனை உருவங்களும் தெரிகிறது.

இதைப் பார்த்தவுடனே எனக்கு என்னாகிப் போனது…? நான் சாப்பிட்ட ஆகாரம் ஜீரணிக்கவில்லை. பூராம் வயிற்றோட்டமாகப் போய் வேஷ்டியெல்லாம் அசிங்கமாகிவிட்டது. அவ்வளவு தைரியம் எனக்கு…!

இந்த அளவுக்கு ஆனவுடனே தலையிலிருக்கும் கல் தன்னாலே கிடு…கிடு…! என்று நடுங்கிக் கீழே வருகின்றது. விழுந்துவிட்டது.

கல் விழுந்தவுடனே குருநாதர் என்ன செய்து விட்டார்…?

டேய்…டேய்…டேய்…! என்னைக் காப்பாற்றுடா…. என்று சப்தம் போடுகின்றார். அந்த உருவம் இங்கே குருநாதரைச் சுற்றிக் கொண்டு அவர் மண்ணையைப் பிடிக்கின்ற மாதிரி (மூச்சுத் திணறல்) கழுத்தைப் பிடித்ததும் அலறுகின்றார்.

அட… இதென்னடா வம்பாகப் போய்விட்டது…? இவரே இப்படி இருக்கிறார்…! என்று சொன்னால் எப்படி…? நீ என்னைக் காப்பாற்றுடா… என்று குருநாதர் சொன்னதும் எனக்குப் பயம் இன்னும் அதிகமாகி விட்டது.

சரி…. அவ்வளவு தான் போலிருக்கின்றது என்று நான் நினைத்தேன்.

ஏனென்றால் என்னுடைய மனைவி இறக்கும் தருவாயிலிருந்து குருநாதர் காப்பாற்றினார். பின்
1.நான் சொல்வதை நம்புகிறாயா..?
2.நான் சொல்வதைக் காப்பாற்றுவாயா..?
3.இதிலிருந்து மாற மாட்டாய் அல்லவா…! என்று ஏற்கனவே வாக்கை வாங்கிக் கொண்டார்.

மனைவி இப்பொழுது தான் நன்றாக உள்ளது. சிறிய குழந்தைகளாக இருக்கின்றது. சரி இனி நமக்கு அவ்வளவு தான்…! இப்பொழுது வயிற்றோட்டம் போய்விட்டது… நாளைக்கு ஆள் இருக்கின்றனோ… இல்லயோ…? என்று இந்த எண்ணம் தான் எனக்குள் ஓடுகின்றது.

என் எண்ணம் இப்படி ஓடிக்கொண்டு இருக்கும் போது… குருநாதர் நான் சொன்னதைக் காப்பாற்றுகிறேன் என்று சொன்னாய் அல்லவா… என்னைக் காப்பாற்றுடா…! என்கிறார்.

அவரிடம் நெருங்கிப் போகிறேன்…! நடுக்கம் தான் வருகிறதே தவிர வேறு ஒன்றும் இல்லை.

திடீரென்று குருநாதர் என்னிடம் “அதைக் கொன்று விடுவேன்…. என்று சொல்லுடா…! என்றார்

கொன்று விடுவேன்…! என்று சொன்னேன்.

அப்புறம் கொஞ்ச நேரத்தில் என்னாகிப் போகின்றது…? அந்த உருவம் “பட்…!” என்று விலகி விடுகின்றது… மறைந்து விட்டது…!

1.நீ என்னிடமே பெரிய வேலை பார்க்கிறாய்.
2.உன்னிடம் என்னென்னமோ சக்தியை வைத்துக் கொண்டிருக்கின்றாய்.
3.அந்த ஆவியைப் போகச் செய்து விட்டாய்…!
4.வேஷ்டியெல்லாம் கழித்துவிட்டாய் என்று சொன்னால் நான் நம்ப மாட்டேன்.
5.நீ திருடன்டா……!” என்கிறார் குருநாதர்.

சாமி…! நீங்கள் தானே அதைச் சொல்லச் சொன்னீர்கள்…! போகச் சொல்லிச் சொன்னதே நீங்கள் தானே…! என்று சொன்னேன்.

அதோடு விட்டாரா குருநாதர்…!

நீ இந்த வேஷ்டிய எடுத்துக் கொண்டு போய் அந்தக் கிணற்றில் இறங்கிக் கழுவித் துவைத்துச் சுத்தப்படுத்திவிட்டு வாடா என்கிறார்..!

எப்படி இருக்கும்..,?

ஏனென்றால் அந்தக் கிணறு உடை கிணறு. அதாவது காலை வைத்து இறங்கி உள்ளே போகப் படிக்கட்டுகள் இருக்கின்றது. திருடன்டா நீ…! போய் அலசி விட்டு வாடா…! போடா……! என்று சொல்கிறார் குருநாதர்.

இப்படி ஒவ்வொரு உணர்வுகளிலேயும் எனக்கு நேரடி அனுபவமாகத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டினார்.

1.நீ பார்த்த நினைவால் அங்கே காற்றில் மறைந்து இருக்கக்கூடிய உணர்வுகள் அது எப்படிக் குவிகின்றது…?
2.அந்த நினைப்புக்கு அணைவாக அது எப்படி டி.வி.யில் சுவிட்சைப் போட்டவுடனே படம் தெரிவது போல் காற்றிலே பரவி இருக்கின்ற அலைகளைக் குவித்து உனக்குப் படமாக எப்படிக் காண்பிக்கின்றது…?
3.அங்கே கிணற்றுக்குள் விழுந்ததைப் பற்றி நீ கேள்விப்பட்டிருக்கின்றாய். இந்த உணர்வின் எண்ணம் வரப்போகும் போது அந்த அலைகள் படர்ந்திருப்பதை எப்படி குவிக்கின்றது…?
4.அது உன் உடலுக்குள் வந்தவுடனே மற்றவர்கள் சொன்ன உணர்வுகள் அந்த எண்ணங்கள் உனக்குள் அது இயக்கச் சக்தியாக எப்படி மாறுகின்றது…? என்று
5.இப்படி அனுபவத்தைக் கொண்டு வருகின்றார்.

“முதன் முதலில்…” என்னை ஒன்றுமே இல்லாமல் இப்படிப் பயப்படச் சொல்லி அந்த உணர்வுகளை எண்ணச் சொல்லி அது நடந்த நிகழ்ச்சிகளை இதே மாதிரிப் பார்த்து விட்டு வரச் சொல்கின்றார் குருநாதர்.

நாம் புலனறிவால் (கண் காது) நுகரும்போது சுவாசிக்கும் உணர்வுகள் நம்மை எப்படி எல்லாம் இயக்குகிறது…? உடலுக்குள் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது…? என்று காட்டினார்.

“சொல்வது…” உங்களுக்கு அர்த்தம் ஆகிறதல்லவா…!

எல்லோரும் ஒரு நாள் இந்த உடலை விட்டுச் செல்பவர்கள் தான்…! இதிலே யாரும் தப்புவதில்லை

எல்லோரும் ஒரு நாள் இந்த உடலை விட்டுச் செல்பவர்கள் தான்…! இதிலே யாரும் தப்புவதில்லை

 

குருநாதர் சொன்ன முறைப்படி இமயமலையிலே நான் (ஞானகுரு) சென்று கொண்டிருந்தேன். அங்கே பனிப்பாறையைக் கடந்து செல்லும் பொழுது அந்தப் பாதை திடீரென்று இடிந்து விழுந்து விட்டது.

அந்த நேரத்தில் குருநாதர் என்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகச் சொல்லிக் கொடுத்த அத்தனையும் மறந்து விட்டேன். மரணம் அடையும் நிலையே ஏற்பட்டு விட்டது. என் மனைவி மக்களை எல்லாம் எண்னத் தொடங்கிவிட்டேன்.

குருநாதர் காட்சி கொடுக்கின்றார்…
1.பனிப்பாறைகள் நொறுங்கிய பின் திரும்ப எப்படிப் போவது…? என்று பயந்தாய்…
2.உனக்குள் புயலே வந்து விட்டது… தலை சுற்ற ஆரம்பித்து விட்டது
3.உன்னுடன் இணைந்த மனைவி மக்களள் எல்லோரையும் எண்ணத் தொடங்கி விட்டாய்.

அவர்களை எண்ணும்போது இந்தப் பனியின் குளிரிலிருந்து தப்ப முடியவில்லை நீ மரணம் அடையும் நிலைக்கு வந்து விட்டாய்… இப்போது நீ யாரைக் காக்கப் போகின்றாய்…? என்று கேட்டார் குருநாதர்.

ஆகவே மனமே இனியாகிலும் மயங்காதே…! இந்த மனித வாழ்க்கையில் நீ தயங்காதே..
1.இந்த உடல் ஆசையை நீ வைக்காதே
2.எது நடக்க வேண்டுமோ அது நடக்கும்
3.ஆனால் நடக்காது தடுப்பதற்கு உனக்குள் சக்தி கொடுத்துள்ளேன்.

அதை எண்ணி எடுக்காதபடி… இந்த உடல் இச்சையை நீ பட்டு விட்டால்… “என் குழந்தை… என் பிள்ளைகள்… என் மனைவி…!” என்று நீ எண்ணினால் இந்த உணர்வின் இச்சைப்பட்டு… உடலை விட்டு நீ கீழே வந்து விடுகின்றாய்.

உன் குழந்தையின் ஈர்ப்பிற்குள் போகின்றாய்… அல்லது மனைவியின் ஈர்ப்புக்குள் தான் செல்ல முடியும். அந்தக் குழந்தையையும் மனைவியையும் நிம்மதியாக இருக்க வைக்க முடியுமா…?

“நீ இறந்து விடுகின்றாய்…” என்று வைத்துக் கொள்வோம். தன்னைக் காத்தவர் என்று ஆசையுடன் அவர்கள் ஏங்கி இருக்கப்படும் பொழுது அவர் உடலுக்குள் எளிதில் புகுந்து அவர்களையும் திருந்தி வாழ முடியாத நிலைகள் கொண்டு அனாதையாக்கி… நோயாக்கி விடுகின்றாய்.

1.உன்னை நம்பிய அனைவருக்கும் நீ பட்ட வேதனைகளை உருவாக்கி
2.துரித நிலையில் அவர்களும் மடியும் தன்மையை நீ உருவாக்குகின்றாய்.
3.அந்த வேதனையைத்தான் உன்னால் அங்கே உருவாக்க முடியும் அவர்களைக் காக்க முடியாது.

ஆகவே நீ எண்ணிய உணர்வுகள் அவர்கள் உணர்வுடன் நீ மடிந்தாலும் அவர்கள் உடலுக்குள் தான் செல்கின்றாய். அவர்களையும் அழித்து விடுகின்றாய்.

அந்த உடலுக்குப் பின் எந்த வேதனையும் துயரத்தையும் பட்டாயோ இந்த உயிர் அதற்குத்தக்க உடலுக்குள் அழைத்துச் சென்றுவிடும். இன்று நீ மனிதனாக இருக்கின்றாய்… அடுத்து நீ எங்கே போகின்றாய்…? என்று தெரியுமா…!

நீ எந்த வேதனை என்ற உணர்வை எடுத்தாயோ… அந்த விஷத்தையே தனக்குள் ஜீரணித்துத் தன் உடலைப் பாதுகாக்கும் கொள்ளும் அத்தகைய உயிரினங்களுக்குள் அழைத்துச் சென்று உயிர் அதற்குத் தக்க உடலை அங்கே உருவாக்கிவிடும்.

இதனை அனுபவபூர்வமாகக் காட்சியாகவே குருநாதர் காட்டுகின்றார்.

அதற்குப் பின் அங்கிருந்து டெல்லி வந்து… சென்னைக்கு விமானத்தில் திரும்பும் போது… குருநாதர் இன்னொரு அனுபவத்தையும் கொடுக்கின்றார்.

விமானத்தில் வந்து கொண்டிருக்கும் பொழுது திடீரென்று எதிர்மறையான காற்று மண்டலத்திற்குள் செல்லும் போது “விமானம் கவிழும்…” சந்தர்ப்பம் ஏற்பட்டது.

விமானி முதற்கொண்டு மற்றவர்கள் எல்லாருமே பயந்து கதிகலங்கி விட்டார்கள். நான் மட்டும் அசையாமல் உட்கார்ந்து கொண்டு சிரித்துக் கொண்டிருந்தேன்.

குருநாதர் அங்கே சில விளக்கங்களைக் கொடுக்கின்றார்.

மற்றவர்கள் எல்லாம் பயந்தார்கள்… நீ ஏன் பயப்படவில்லை…?
1.உடலின் இச்சையை நீ படவில்லை… நீ உயிரின் இச்சைப்பட்டாய்.
2.உயிர் ஒளியானது.. அறிவின் தன்மை ஆனது.
3.அதே அறிவின் தன்மை நீ அச்சமில்லாது இருப்பதனால் உனது சக்தியும் சேரலாம் என்று சொல்கிறார்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஒரு நொடிக்குள் எடுத்து அங்கே செலுத்துகின்றாய்… அவர்களையும் காக்கின்றாய்… உன்னையும் காத்துக் கொண்டாய்…!

அத்தனை பேரிலும் ஒருவன் நீ எண்ணிச் செயல்பட்டதால் “இது உனக்குள் இருக்கக்கூடிய வலு…” என்று சொல்கின்றார். இப்படிக் காக்கப்பட்ட விமானங்கள் எத்தனையோ…! என்று விமானத்தில் வைத்து குருநாதர் உபதேசம் கொடுக்கின்றார்.

இருந்தாலும்… எல்லோரும் ஒரு நாள் இந்த உடலை விட்டுச் செல்பவர்கள் தான்…! இதிலே யாரும் தப்புவதில்லை.

இன்று நாட்டுக்கே அரசனாக இருந்தாலும் சரி… மகான் என்று மக்கள் மத்தியிலே அவரைப் போற்றிக் கொண்டிருந்தாலும் சரி…
1.இந்த உடலின் விதி முடிந்து விட்டால்..
2.எதனுடைய அழுத்தம் அதிகமாகின்றதோ இந்த உடல் போய்த்தான் ஆகும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் அதிகரித்து விட்டால் இந்த மனித உடல் என்ற இச்சையிலிருந்து விடுபட்டு… உணர்வுகள் உயிருடன் ஒன்றி ஒளியாக மாறுகின்றது.