
இன்னல்களைச் சந்திக்கும் போது நாம் எதை எண்ண வேண்டும்…?
நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ…! இந்த நிலையில்லா உலகத்தில் “எதை நீ சதம் என்று எண்ணுகின்றாய்…?” என்று இமயமலையில் பனிப் பாறைகளுக்கு மத்தியில் வைத்து குருநாதர் எம்மைக் கேட்கின்றார்.
குருநாதர் காட்டிய வழியில் நான் போகும் இடங்களில்… துயரமான நிலைகளைச் சந்திக்கும் போதெல்லாம் இத்தகைய உணர்வை எனக்குள் ஊட்டிக் கொண்டே வந்தார்.
ஆகவே நினைவு கொள்ளுங்கள்…! இந்த வாழ்க்கையில் நாம் தேடும் செல்வம் நமக்கு நிலையானதா…? இந்த உடல் நமக்கு நிலையானதா…? உடலில் இருக்கும் பொழுது எதைப் பற்ற வேண்டும்…?
1.என்றும் ஏகாந்த நிலை பெற்ற அருள் மகரிஷியின் ஒளியை நான் பெற வேண்டும்
2.என் மனைவி அதைப் பெற வேண்டும் அருள் ஒளி பெற வேண்டும்
3.எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும் இரு உயிரும் ஒன்றிட வேண்டும்
4.எங்கள் பார்வை இருளை அகற்றிடும் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
துன்பங்களைச் சந்திக்கும் நேரத்தில் உன் மனைவி மக்களை நீ எண்ணுகின்றாய். ஆகவே மனைவிக்கு எது வேண்டும்…?
1.மனைவிக்கு அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.என்னுடன் இணைந்த நிலையில் அருள் வழியில் வர வேண்டும்
3.மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்… அருள் ஒளி பெறும் தகுதி பெற வேண்டும்
4.மனைவியின் பார்வை குழந்தைகளைக் காக்கும் அருள் சக்தியாக வளர வேண்டும்.
5.அருள் ஞானம் பெற வேண்டும் என்று இந்த அருள் உணர்வைப் பாய்ச்சும் நிலை தான் வர வேண்டும்.
அதற்குப் பதிலாகத் துன்ப்ப்படும் நேரத்தில் வேதனையான உணர்வை நுகர்ந்து மனைவி மக்களை நினைத்தால் வேதனைப்படும் உணர்வே வளருகின்றது
1.உன் சிந்தனை சிதறும் தன்மை வருகின்றது
2.உயிர் வெளி சென்று விட்டால் உடல் இல்லை. அப்போது நீ எதை நினைக்கப் போகின்றாய்…?
உடலுக்குள் விளைய வைத்த வேதனையான உணர்வு கொண்டு பாசத்தால் உன் பையனை நீ எண்ணினால் அவன் உடலிலேதான் புக முடியும். வேதனை என்ற உணர்வை நீ எடுக்கும் பொழுது அங்கே நோயைத்தான் உருவாக்க முடியும்.
எண்ணத்தின் தன்மை கொண்டு அவனுக்குள் வேதனை உருவாக்கப்படும் பொழுது “விஷம் என்ற உணர்வுகள்…” உனக்குள்ளும் அந்த உடலிலிருந்து அவனால் நீ மீண்டும் பெறுகின்றாய்.
உன்னால் அவன் உடல் பெற்றான். உன்னுடைய நினைவுகள் அவனுக்குள் வளரப்படும் பொழுது அவன் நினைவு உனக்குள் வளர்கின்றது. ஆனால் நீ அவனுள் செல்கின்றாய்… இந்த உணர்வின் தன்மை அவனை அழிக்கிறது.
அதாவது… உன் குழந்தைக்குள்ளும் அந்த வேதனை உருவாக்கப்பட்டு அவனையும் காக்க முடியாத நிலையில் நீ எமலோகத்துக்குத்தான் அழைத்துச் செல்ல முடியும். இந்த உடலின் தன்மையை (அவனையும்) அழிக்கின்றது.
அவனை விட்டு வந்தபின் நீ எந்த வேதனைப்பட்டாயோ வேதனைப்படும் உணர்வின் தன்மை கொண்டு உடலை விட்டபின் உன் எண்ணமே எமனாகின்றது… எமலோகம் செல்கின்றாய்.
மனிதன் என்ற சிந்தனை இல்லாதபடி கொன்று குவிக்கும் அசுர உணர்வு கொண்ட பாம்பாகவோ தேளாகவோ புலியாகவோ நீ பிறக்கப் போகின்றாயா…? உனக்கு எது தேவை…? என்ற நிலையில்
1.அங்கே இமயமலையில் வைத்து எனக்கு உணர்த்துகின்றார் நமது குருநாதர்.
2.எதை…?
3.“துன்பத்திலும் இன்பம்” எவ்வாறு காண வேண்டும்…? என்று.
ஆகவே… அருள் ஒளி என்ற உணர்வினை உனக்குள் பெறு, துன்பம் என்ற நிலைகள் மறைந்து பேரின்பம் என்ற நிலை பெற்ற அருள் மகரிஷியின் உணர்வை உனக்குள் கவர்ந்து கொள்.
நீ எண்ணியது எல்லாம் இந்தப் பரலோகத்தில்தான் உண்டு. அதை நீ சிவலோகமாக மாற்று. சிவலோகத்திற்குள் அந்த உணர்வின் தன்மை வரும் பொழுது இந்திரலோகமாக மாறுகின்றது.
1.அப்போது ஏகாந்த நிலை என்ற பேரானந்த நிலை பெறும் “பரமபதம்” அதாவது அழியா ஒளிச் சரீரம் நீ பெறுவாய்.
2.அருள் ஒளி பெறுவாய்… அருள் ஆனந்தம் பெறுவாய்… அனைவரும் அதைப் பெற வேண்டும் என்று நீ ஏங்கு.
அந்த உணர்வுகள் உனக்குள் கலந்திருக்கும் மற்றவர்களின் உணர்வுகளுடன் இணைகின்றது. ஒளியின் தன்மையாக மாறுகின்றது. பகைமையற்ற உணர்வுகளாக மாற்றுகின்றது. அருள் ஒளி என்ற உணர்வைக் கூட்டுகின்றது.
உனக்குள் இருக்கும் அணுக்களில் அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்கும் போது அதுவும் ஒளி பெறுகிறது. பகைமையற்ற நிலை வருகிறது.
இந்திரலோகத்தில் வரும் போது ஏகாந்த நிலை என்ற எதுவுமே வெறுப்பில்லாத நிலையில் சொர்க்கலோகத்தை நீ உருவாக்குகின்றாய். பரலோகத்திலிருந்து இந்த உடலின் சிவலோகத்திற்கு மாற்றி இந்திரலோகமாக இருந்து சொர்க்கலோகமாக மாற்ற வேண்டும்.
ஆனால் வேதனை வெறுப்பு என்ற நிலைகள் வரப்படும் பொழுது நரகலோகத்தைத்தான் உருவாக்குகின்றாய்.
1.மீண்டும் வேதனைப்படும் உடலை உருவாக்குகின்றாயா…?
2.அல்லது அருள் ஒளி என்ற உணர்வை உனக்குள் உருவாக்குகின்றாயா…?
பேரொளி பெற்றுப் பேரானந்தம் பெற்று ஏகாந்தமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகிக் கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றென இணைந்து அருள் ஒளி பெற்று, இரு உயிரும் ஒன்றெனெ இணைந்து ஒளியின் சரீரமாக நிலை கொண்டு வாழ்ந்து வருகின்றானே… “அந்த ஏகாந்த நிலையை நீ பெறுகிறாயா…?” என்று வினாக்களை எழுப்புகின்றார் குருநாதர்.
உனது வாழ்க்கையில், நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய். ஆகவே நீ அந்த துருவ மகரிஷியின் அருள் பெற வேண்டும். உன் குடும்பம் நலம் பெற வேண்டும். உலகம் நலம் பெற வேண்டும் என்ற அந்த உணர்வை நீ எடுத்தால் நீ நுகர்ந்த உணர்வு உனக்குள் நலம் பெறும் சக்தியாக மாறுகின்றது.
1.அந்த அருள் ஒளி பெறுவாய் பேரின்பம் பெறுவாய் பெருவாழ்வு வாழ்வாய்
2.பார்ப்போர் அனைவரும் பேரின்பம் பெறவும் பெரு வாழ்வு வாழச் செய்யும் “அந்த அருளை நீ பெறுவாய்” என்று
3.நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு ஆசி கொடுத்தார்.
நமது குரு அருளை நீங்கள் அனைவரும் பெற்று உங்கள் வாழ்க்கையில் வரும் இருளை அகற்றும் அருள் சக்தி நீங்கள் பெற்றுப் பேரின்ப வாழ்வென்ற நிலைகள் நுகர்ந்து சிவலோகத்திற்குள் இந்திரலோகமாக மாற்றிச் சொர்க்கலோகத்தை உருவாக்க வேண்டும்.
பேரின்பம் என்ற அழியா ஒளி சரீரம் நீங்கள் அனைவரும் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று யாம் பிரார்த்திக்கின்றோம்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.