பிரேக் அடித்தது போல் ஒரு பெண்ணின் உதிரப் போக்கை நிறுத்தினார் குருநாதர்

பிரேக் அடித்தது போல் ஒரு பெண்ணின் உதிரப் போக்கை நிறுத்தினார் குருநாதர்

 

ஒரு சமயம் தனது மனைவிக்கு இரத்தப் போக்கு போய்க் கொண்டிருக்கின்றது அதைக் குணப்படுத்த வேண்டும் என்று எம்மைத் தேடி ஒருவர் வந்தார். அது சமயம் எனக்கு மூல நோய் இருந்தது… உட்கார்ந்தோம் என்றால் கடு…கடு… என்று இருக்கும்.

நோய் பெண்மணிக்கு…! ஆனால் அந்தப் பெண்ணின் கணவர்தான் வந்திருந்தார். அவர் தனது மனைவிக்குத் தொடர்ந்து உதிரப் போக்கு போய்க் கொண்டிருக்கின்றது… ஆனால் டாக்டர்கள் இதனைக் குணப்படுத்த முடியாமல் கைவிட்டு விட்டார்கள்.

தனக்குக் கண்ணில்லாத குழந்தை ஒன்றும், மற்றும் ஐந்தாறு குழந்தைகள் இருப்பதாகவும்… இவர்களை எல்லாம் காப்பாற்ற வேண்டி இருக்கின்றது. ஆகவே நீங்கள் தான் எனது மனைவியைக் குணப்படுத்தித் தரவேண்டும்… “உங்கள் குருநாதரிடம் சொல்லி மருந்து தாருங்கள்…” என்றார்.

அப்பொழுது குருநாதர் எமக்குக் காட்சி கொடுத்து எம்மிடம் பேசிக் கொண்டிருந்தார். யாம் இதன் விவரங்களை குருநாதரிடம் கேட்கப்படும் பொழுது
1.முருகன் வருகின்றார்…! “ஆறாவது அறிவின் தன்மை பெற்று நீ இங்கே வா” என்றார்.
2.இந்த ஆறாவது அறிவைச் சரியாகப் பயன்படுத்தாதினால் உருவான நிலை என்ன…?
3.இவர்கள் சொன்ன குறை மேல் ஆசை வருகின்றது.

குழந்தைகள் சிரமப்படுகின்றார்கள் எனச் சொல்லும் பொழுது குருநாதர் காட்சி தருகின்றார். இப்பொழுது முருகனைக் காண்பித்து அதன் பின் பக்கமாகக் குருநாதர் காட்சியில் வந்து “சிரிக்கின்றார்…”

யாம் குருநாதரிடம் அவர்களுடைய வீட்டில் ஐந்தாறு குழந்தைகள் இருக்கின்றன. அவற்றில் குருட்டுக் குழந்தையும் இருக்கின்றது. நாளை அவர்கள் இறந்து போனால் அவர்களுடைய குழந்தைகள் தவிப்பார்களே…! அவர்கள் வருத்தமாகச் சொல்கிறார்கள்… நீங்கள் சிரிக்கின்றீர்கள்…! என்றோம்.

போய் ஓமப்பொடி வாங்கி வா…!” என்று குருநாதர் எம்மிடம் கோபமாகச் சொன்னார்.

எமக்குக் கோபம் வந்து விட்டது. சாமி அவர்கள் வேதனையாக இருக்கிறார்கள்… நீங்கள் ஓமப்பொடி வாங்கிக் கொண்டு வரச் சொல்கிறீர்கள்…!, என்றோம்.

எனக்குத் தெரியாது…! நீ போய் ஐயப்பனைக் கேட்டுக் கொள்…! என்றார். குருநாதர்

காட்சியில் ஐயப்பன் வந்தார். ஐயப்பனிடம் கேட்டால்… அவர் மௌனமாக இருக்கின்றார்.
1.“நீ குருவையே எதிர்த்துப் பேசி விட்டாய்…
2.இனி உன்னிடம் ஒன்றும் பேச மாட்டேன்…!” என்று ஐயப்பன் கூறினார்.

குருநாதரிடம் யாம் கேட்டோம்… ஐயப்பன் ஒன்றும் பேச மாட்டேன் என்கிறாரே…! என்றோம்.

அவர் எப்படிப் பேசுவார்…? என்றார் குருநாதர்.

பின்னே யாரிடம் கேட்பது…? என்றோம். யாம் குருவாகிய உங்களிடம் தானே கேட்க முடியும். யாம் என்ன தவறு செய்தோம்…? தேடி வந்தவர்கள் நலம் பெற வேண்டும் என்று தானே கேட்டோம்…! என உரைத்தோம்.

நீ ஐயப்பனையே கேள்…! என்று குருநாதர் கூறிவிட்டார்.

பாவம்… இந்தப் பெண்மணி இறந்ததென்றால் அவர்களுடைய குழந்தைகளெல்லாம் அனாதைகளாக நிற்கும். கண்ணில்லாத குழந்தையும் இருக்கின்றது, இவர்களை எல்லாம் பாதுகாக்க வேண்டுமல்லவா…? அந்தப் பெண்மணியைக் காப்பாற்றினோம் என்றால் அவர்களுடைய குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்வார்கள். ஆனால் குருநாதரும் ஐயப்பனும் கேட்க மாட்டேன் என்கிறார்கள்.

அதன் பிறகு எமது மகள் மீராவைக் கூப்பிட்டோம். அப்பொழுது மீரா சிறு வயதுப் பெண். மீரா குருநாதரிடம் உரையாடினார்.

மீரா எம்மைப் பார்த்து…
1.நீங்கள் குருநாதரிடம் முறை தவறிக் கேட்டீர்கள்,
2.குருநாதரிடம் கோபமாகப் பேசினால் எப்படி…?
3.நோய் தீரவேண்டும் என்று கேட்டிருக்க வேண்டும்… அதை விட்டு விட்டு, குருநாதரை அதிகாரம் பண்ணிக் கேட்கின்றீர்கள்…! என்றது.

அதிகாரம் செய்து வேண்டுமானால் நீ எடுத்துக் கொண்டு போ…! என்று குருநாதர் மீராவுக்குக் காட்சி கொடுத்துக் கூறினார்.

அப்பொழுது நோயாளியின் கணவர் ஓமப்பொடியை வாங்கிக் கொண்டு வந்துவிட்டார். அந்தப் பெண்மணியை ஓமப் பொடியைச் சாப்பிடச் சொல்…! என்று மீரா மூலம் குருநாதர் கூறினார்.

அது எப்படிக் குணமாகும்…? என்றோம் யாம்.
1.குருநாதர் தான் சொல்கிறார்,
2.ஆனால் யாம் அது எப்படி ஓமப்பொடி சாப்பிட்டுக் குணமடைய முடியும்…? என்று வாதிக்கின்றோம்.
3.(அதாவது மருந்து சாப்பிட்டால் தானே குணமாகும் என்ற நிலையில்)

இப்படி மறுபடியும் விதண்ட வாதம் செய்தவுடனே குருநாதர் மறுபடியும் மௌனமாகவே இருந்து விட்டார்.
1.நீயே போய்க் காப்பாற்றிக்கொள்… நீ குருவுக்கு மிஞ்சிய ஆளாக ஆகின்றாய்…! என்று கூறிவிட்டார்.
2.அதன் பிறகு நாங்கள் இருவருமே மௌனமாகி விட்டோம். இப்படி நான்கு மணி நேரம் ஆகிவிட்டது.

சாமி…! என் மனைவிக்கு உடலிலிருந்து இரத்தம் முழுவதும் போய்விட்டது. டாக்டர்களும் கைவிரித்து விட்டார்கள். இன்றோ… நாளையோ…! என்று என் மணைவியின் நிலை இருக்கின்றது. நீங்கள் காப்பாற்றுவீர்கள் என்று நம்பி வந்தால் குருநாதரிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றீர்களே…! என்றார் எம்மைத் தேடி வந்தவர்.

குருநாதரிடம்… நோய் நீக்கும் வழியைக் கேட்டுக் கொண்டிருக்கின்றோம், அவர் கொஞ்சம் கூடக் கவனிக்க மாட்டேன் என்கிறார்…! என்றோம் யாம்.
1.இது எம்முடைய புத்திசாலித்தனம்.
2.அன்றைக்கு இருக்கக்கூடிய சூழ்நிலையில் என்னுடைய உணர்வுகள் எப்படி இயக்குகின்றது…? என்பதைக் காண்பித்தார் குருநாதர்.

இதனைத் தொடர்ந்து… பக்கத்து வீட்டுக்காரர் ஒரு தேவர் அவர் எம்மை “மாப்பிள்ளை… மாப்பிள்ளை…!” என்று அழைத்துக் கொண்டே வந்தார்.

என்னப்பா இது…? நல்லய்ய நாயக்கர் சம்பாதித்து வைத்திருக்கிறார் என்று நீ ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கின்றாய். என்னென்னவோ மந்திர வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றாய், இதெல்லாம் உனக்கு எதற்கு…? என்று எம்மிடம் கேட்டார்.

நான் என்ன செய்ய வேண்டும்…? என்று அவரிடம் கேட்டோம்.

நீ இது போன்ற மந்திர தந்திர வேலைகளைச் செய்யக் கூடாது. நீ மறுபடியும் வீட்டிற்கு வந்து வெளி வேலைகளுக்குச் சென்று விறகுக் கடையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து அவர்…
1.நீ பைத்தியத்துடன் சேர்ந்து சுற்றி
2.இதையெல்லாம் செய்து கொண்டிருக்கின்றாய்…! என்று சத்தம் போட்டார்.

அப்பொழுது மீரா எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தது. எனது மகள் மீரா அவரைப் பார்த்துக் “கோபிக்காதீர்கள்…! குருநாதர் உங்களுக்கு லட்டு கொடுக்கின்றார்…” என்று சொன்னது.

அதற்கு அவர்… “என்ன பிள்ளை…! எங்கே கொடுக்கிறார்…?” என்று கேட்டார்.

முகர்ந்து பாருங்கள்… வாசனை தெரியும்…! என்றது மீரா.

பக்கத்து வீட்டுக்காரர்… எனக்கு ஒரு வாசனையும் தெரியாது ஒரு கத்திரிக்காயும் தெரியாது, இதுவெல்லாம் யாரை ஏமாற்றுகிற வேலை…? என்று கூறினார்.

இல்லை…! மறுபடியும் முகர்ந்து பாருங்கள்… லட்டு வாசனை தெரியும்” என்றது மீரா.

எனக்கு மூக்கடைத்து விட்டது வாசனை தெரியவில்லை…! என்று கூறினார் அவர்.

தாத்தா…! குருநாதர் இப்பொழுது ஜிலேபி கொடுக்கின்றார்… கொய்யாப் பழம் கொடுக்கிறார்… என்று மீரா சொல்கிறது.

எதுவும் எனக்கு தெரியாது…! யாரை ஏமாற்றுகிறீர்கள்…? கொய்யாப் பழத்தைக் கொண்டு வரச் சொல்… என் கையில் கொடுக்கச் சொல்…! என்றார் தேவர்.

நீங்கள் முதலில் வாசனையைப் பாருங்கள்… பிறகு கொடுக்கிறேன் என்றார் குருநாதர். இப்படி… இருவருக்கும் வாக்குவாதம் தொடர்ந்தது.

ஊரை எமாற்றி எங்களைப் பைத்தியக்காரனாக்க விரும்புகிறார் உனது குருநாதர்…! என்று பேசினார் பக்கத்து வீட்டுக்காரர்.

மூக்கடைத்து விட்டது வாசனை தெரியவில்லை என்றுதானே கூறினீர்கள்… இப்பொழுது நிஜமாகவே வாசனை தெரியும் பாருங்கள் என்று மீரா கூறியது.

அந்தச் சமயத்தில்… நோயாளிப் பெண்மணியின் கணவர் “என்னங்க நீங்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றீர்கள்… எனக்கு ஒரு நல்வழியைக் காண்பியுங்கள்…!” என்று கூறினார்.

அது தான் ஏற்கனவே சொல்லி விட்டேனே “ஓமப்பொடியைக் கொடுங்கள் குணமாகும்…!” என்று கோபமாக மீரா மூலம் கூறினார் குருநாதர்.

ஓமப்பொடியைக் கொடுத்தால் நோய் குணமாகுமா…! அது எப்படி…? என்று நோயாளியின் கணவரும் கேட்டார்.

இது நடந்த நிகழ்ச்சி. குருநாதர் எமக்கு ஒவ்வொரு அனுபவத்தையும் நேரடியாகக் கொடுத்தார்.

பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்து “முகர்ந்து பாருங்கள் வாசனை தெரியும்” என்று கூறினால்… எனக்கு ஒரு வாசனையும் தெரியாது மூக்கடைத்து விட்டது என்று கூறினால்… திரும்பத் திரும்ப, இதையே கூறுகின்றாயே…! என்று கேட்டார்.

குருநாதர் சிரித்துக் கொண்டே… இப்பொழுது “அழுத்தமாக உறிஞ்சிப் பாருங்கள்…” என்றார்.

பக்கத்து வீட்டுக்காரரும் அது போன்று செய்யவே “நச்… நச்…” என்று பெரிய தும்மலாகத் தும்மினார்.

அவர் வெற்றிலையும் புகையிலையும் எப்பொழுதும் வாயில் போட்டு மென்று கொண்டிருப்பவர். இந்தத் தும்மலினால் அவர் வாயில் இருந்த வெற்றிலை அவருடைய வேஷ்டி சட்டையில் எல்லாம் விழுந்து கறை படிந்து விட்டது. எம் மீதும் வெற்றிலைக் கறையாகி விட்டது.

இப்படிச் சிறிது நேரம் தும்மிக் கொண்டே இருந்தார். பக்கத்து வீட்டுக்காரரும் மீராவைப் பார்த்து… ஏய் பிள்ளை…! தும்மலை நிறுத்தச் செய்கின்றாயா இல்லையா…? என்று கேட்டார்.

எனக்கென்ன தெரியும்…? குருநாதரிடம் கேளுங்கள்…! முகர்ந்து பார்க்கச் சொன்னார். வாசனை இல்லை என்று சொன்னீர்கள்… இப்பொழுது வாசனை தெரிந்ததல்லவா…! என்றாள் மீரா.

“இது என்னவோ பெரிய வேலையாக இருக்கின்றது….”
1.உங்கள் குருநாதரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்…
2.தும்மலை நிறுத்தச் செய்…! என்று கேட்டுக் கொண்டார் தேவர்.

அது சமயம் ஓமப்பொடி வாங்கி வந்தவர் இது என்ன…? எல்லோரையும் ஏமாற்றுவது போன்று இருக்கின்றது. உங்களுடைய குருநாதர் பைத்தியக்காரராக இருந்தார். உங்களுடைய வாழ்க்கையும் பைத்தியக்காரர் போன்று இருக்கின்றது. நானும் போயும் போயும் உங்களைத் தேடி வந்தேன்…! என்று கூறினார்.

தேவரும்… என்னால் தும்ம முடியவில்லை…! மாப்பிள்ளை…! உன் குருநாதரிடம் சொல்லி என்னுடைய தும்மலை நிறுத்து…! என்று எம்மிடம் கூறினார்.

யாம் அவரிடம் எமக்கென்ன தெரியும்…? நீங்களே எமது குருநாதரைக் கேட்டுக் கொள்ளுங்கள்…! என்றோம்.

இதற்கு எமது மகள் மீரா… இனிமேல் இது போன்று சொல்ல மாட்டேன் என்று சொல்லுங்கள்…! என்றது.

இனிமேல் அப்படிச் சொல்வேனா…? உன் குருநாதரிடம் சொல்லி என்னுடைய தும்மலை நிறுத்து…! என்றார்.

முக்கால் அல்லது ஒரு மணி நேரம் தும்மிக் கொண்டிருந்தார். எனக்கு வயிற்று வலி ஆகின்றது… உடலெல்லாம் வலிக்கின்றது… என்னை விட்டுவிடு…! என்றார்.

மீரா… சரி… தும்மல் நின்று போகும், குருநாதர் இன்னொரு பொருள் தருகின்றார் வாசனையைப் பாருங்கள் என்றது.

கொடு பிள்ளை… கொடு என்றார் தேவர். உடனே தும்மலும் நின்றது.

தும்மல் நின்றதைப் பார்த்துக் கொண்டிருந்த ஓமப்பொடியை வாங்கி வந்தவர் எம்மிடம்…
1.“நைனா…! ஓமப்பொடி கொடுத்தால் குணமாகும் போலத்தான் தெரிகின்றது…
2.“நான் தான் பைத்தியக்காரன்…!” என்றார்.

யாம் ஓமப்பொடியைக் கொண்டு போய் உனது மனைவிக்கு கொடு” என்றோம். கொண்டு போய்க் கொடுத்தவுடனே இரண்டு மூன்று மாதமாக இருந்து கொண்டிருந்த உதிரப் போக்கு
1.“பிரேக் அடித்த்து போல் நின்று போனது…”
2.குணமானவுடனே ஓடி வந்து எங்களிடம் சொன்னார்.

அதன் பிறகு குருநாதர்… எம்மிடம் சொன்னார். ஐயப்பனிடம் எப்படிக் கேட்பது…? நீ அவரையே மிரட்டுகிறாய்… முருகனை மிரட்டுகிறாய்…! அதன் பிறகு நான் என்ன சொல்ல வேண்டியிருக்கின்றது…? என்றார்.

1.நீ எப்படி இருக்க வேண்டும்…?
2.குருநாதரிடம் எப்படிப் பேச வேண்டும்…?
3.நீ என்னென்ன செய்ய வேண்டும்…? என்று எமது மகள் மீராவிற்கு குருநாதர் காட்சி கொடுத்து… மீரா மூலம் எமக்கு உபதேசம் கொடுத்தார்.

இவ்வாறு அனுபவபூர்வமாகத்தான் எமக்குப் பல நிலைகளை உணர்த்தி
1.நாம் எவ்வாறு மெய் வழியில்
2.குரு வழியில் செல்வது…? என்று உபதேசித்தார்.

இதன் வழியில் குருநாதர் காட்டிய மெய் உணர்வுகளைக் கடைப்பிடித்து வருபவர்கள் அனைவரும் அவர்களது வாழ்க்கையில் இருள் நீங்கி மெய்ப்பொருள் காணும் திறன் பெற்று நோய் நீங்கி நோய் நீக்கிடும் அருள் சக்தி பெற்று குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்திடவும் என்றென்றும் அந்த மகரிஷிகள் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்ந்திடவும் எமது அருளாசிகள்.

சினிமா படம் மூலம் உணர்த்தினார் குருநாதர்

சினிமா படம் மூலம் உணர்த்தினார் குருநாதர்

ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும்
1.சந்தர்ப்பங்கள் அவர்களை எந்தெந்த நேரத்தில் எது எது இயக்குகின்றது…? என்பதையும்
2.அவரவர் வாழ எதைச் செய்கின்றனர்…? என்பதையும் நமது குருநாதர் எமக்குத் தினம் தினம் அனுபவப்பூர்வமாக உணர்த்தினார்.

ஒரு உடலில் ஒரு உணர்வின் தன்மை எப்படிப் பெருகுகின்றது…? பெருகியபின் அவ்வுடல் என்ன நிலையாகின்றது…? என்பதையெல்லாம் எமக்குத் தெளிவாக உபதேசித்து அருளினார்.

குருநாதர் எமக்கு எழுத்து வடிவில் எதையும் கற்றுக் கொடுக்கவில்லை. ஆனால் அருள் வழியில் எமக்குக் கற்றுக் கொடுத்தார்.
1.பார்த்தால் சின்ன விஷயமாகத் தோன்றும்.
2.ஆனால் அதனுள் விஷயம் ஏராளமாக இருக்கும்.

எமது சொந்தக்காரர்கள் எல்லாம் எம்மைப் பார்த்துப் பைத்தியத்துடன் சேர்ந்து அலைந்து கொண்டிருக்கின்றேன் என்று எம்மைத் திட்டுவதற்குதான் வந்தார்களே தவிர “குருநாதருக்கும் எமக்கும் இடையே உள்ள உண்மை நிலை என்ன…?” என்பதை அறிந்து கொள்ள முன் வரவில்லை.

நண்பர்களாக இருந்தவர்களும் எம்மைப் பைத்தியத்துடன் சேர்ந்து பைத்தியமாகி விட்டார் என்றுதான் பேசினார்கள். ஏன்…! எமது வீட்டில் சாமி அம்மாவும் அப்படித்தான் பேசினார்கள். வீட்டில் இருந்த மாமா அத்தை எமது குழந்தைகள் என்று அனைவரும் எம்மை அப்படித்தான் நினைத்தார்கள்.

அருள் உணர்வின் தன்மையை சாமி அம்மாவும் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்து கொண்டார்கள். ஏனென்றால் நாங்கள் வைத்திருக்கும் விறகுக் கடைக்குக் குருநாதர் வந்து ஹாயாகப் படுத்துக் கொள்வார்.

சாமி அம்மாவிடம்… இவர்களைப் பார் அவர்களைப் பார் என்று தனது உள்ளங்கையைக் காண்பிப்பார். இப்படியெல்லாம் பல நிலைகளைச் செய்து உலகம் எப்படி இருக்கிறது…? என்று உணர்த்தினார் குருநாதர்.

பிறகு… சினிமாத் தியேட்டர்களில் என்ன படங்கள் ஓடுகின்றன…? என்று குருநாதர் கேட்பார். சினிமாத் தியேட்டர்களில் ஓடும் படங்களைச் சொன்னால் எந்தச் சினிமாப் படம் பார்க்க விரும்புகின்றாய்…? அதை இங்கேயே பார்க்கலாம்…! என்று கூறுவார்.

அது எப்படித் தியேட்டரில் ஓடும் சினிமாப் படத்தை இங்கிருந்து பார்க்க முடியும்…? என்று யாம் கேட்போம்.

இப்பொழுது பார்…! என்று கூறுவார். சினிமாப் படத்தை அப்படியே நாங்கள் நின்ற இடத்தில் இருந்தே பார்க்க முடிந்தது. எமது மகள் மீராவிடம் தியேட்டரில் என்ன படம் ஓடுகின்றது…? என்று கேட்பார் குருநாதர். மீராவிடம் கேட்டு மீரா விரும்பிய படத்தை அங்கே காண்பிப்பார்.

யாம் குருநாதர் எமக்குக் கொடுத்த உணர்வுகளை வரிசைப்படுத்தி, ஒழுங்குபடுத்தி எந்தத் தியேட்டரில் என்ன படம் ஓடுகின்றது…? என்று குழந்தைகளிடம் கேட்டு அதைப் பாருங்கள் என்று கூறி “யாமும் மற்றவர்களுக்குச் சினிமாப் படம் காண்பிக்க ஆரம்பித்தோம்…”

இதனால் எம்மைப் பார்த்தால் போதும், குழந்தைகள் கூட்டம் கூடிவிடும். நைனா… நைனா…. என்று குழந்தைகள் எம்மைச் சூழ்ந்து கொள்வார்கள். இந்தந்தச் சினிமாப் படங்களைக் காண்பியுங்கள் என்று கேட்பார்கள். அவர்கள் கேட்ட சினிமாவைக் காண்பித்தால் உடனே குழந்தைகளுக்குக் குஷியாகும்.

அதன் பிறகு குருநாதர் எம்மைத் திட்டுவார். உன்னைச் சினிமா பார்க்கச் சொன்னேனா…? என்று கேட்டார்.
1.ஒவ்வொருவரும், சினிமாவில் நடிப்பதைப் போன்று வாழ்க்கையில் எப்படி நடிக்கின்றார்கள்…?
2.இதனின் உணர்வு எப்படி வருகின்றது…?
3.ஒருவருக்கு நடிப்பு எப்படி வருகின்றது…?
4.ஒரு உணர்வை நுகர்ந்தபின் எப்படி நடிக்கின்றார்கள்…?
5.நுகர்ந்த உணர்வின் உணர்ச்சிகள் ஒருவரை எப்படி ஆட்டிப் படைக்கின்றது…? என்று
6.அதைத்தான் உன்னைப் பார்க்கச் சொன்னேன்…! என்றார் குருநாதர்.

ஒருவருடைய உணர்வுக்குத் தக்க அவருடைய வாழ்க்கையில் வீட்டில் ஒருவருடன் சண்டைக்குச் செல்கின்றார். ஒரு பக்கம் அரவணைக்கின்றார் மறு பக்கம் வெறுக்கின்றார்… இத்தகைய உணர்வுகளைச் சுவாசிக்கின்றார்.

அதனின் உணர்வுகள் அவருக்குள் எப்படி அங்கே இயங்குகின்றது…? என்று உபதேசித்தார்.

நீ குழந்தைகளுக்குச் சினிமாப் படம் காண்பிக்கின்றாய். அதனால் குழந்தைகள் சந்தோஷப்படுகின்றன. ஆனால் பெரியவர்களிடம் சொன்னால், அவர்கள் எதற்கு ஆசைப்படுகிறார்கள்…?

ஏதாவது, புதையல் கிடைக்குமா…? புதையல் இருக்கும் இடம் தெரியுமா…? என்று கேட்டு வருகின்றார்கள். புதையல் கிடைத்தால் நான் நன்றாக ஆகிவிடுவேன்… குபேரனாக வாழலாம் என்பது பெரியவர்களுடைய ஆசை.

1.ஆனால் அருள் ஞானத்தைப் பெருக்க வேண்டும் இருளைப் போக்க வேண்டும் என்ற நிலைக்குத்தான் அருள் ஆற்றலை உனக்குக் கொடுத்தேன்.
2.நீ மற்றவர்களுடைய ஆசைகளைப் பெருக்கவா போகின்றாய்…? என்று கேட்டார் குருநாதர்.

ஆகையினால் எந்த ஆசையினைப் பெருக்க வேண்டும்…? அருளை ஆசைபட்டால் இருளைப் போக்கும். உடலின் ஆசையை வளர்த்தால் இருள் சூழும். ஆக
1.உயிர் ஆசை
2.உடல் ஆசை என்பதற்கு விளக்கம் கொடுத்தார் குருநாதர்.

ஏனென்றால்… விஞ்ஞான அறிவில் எலெக்ட்ரிக் எலெக்ட்ரான் என்ற நிலை வரப்படும் பொழுது கம்ப்யூடர் போன்ற சாதனங்களை உருவாக்குகின்றனர்.

கெமிக்கல் கலந்த நிலைகளில் நாம் எப்படி
1.“சிக்கி முக்கி” கல்லைத் தட்டுகின்ற பொழுது அதில் உணர்வின் அதிர்வும் ஒளியும் வருவதைப் போன்று
2.கெமிக்கல் கலந்த பொருள்களில் அதிர்வைக் கொடுத்து உணர்வின் ரூபத்தை விஞ்ஞான அறிவால் காட்டுகின்றனர்.

நாம் கோபம் என்ற நிலையை எடுத்துக் கொண்டபின் கோபத்தின் உணர்வுகள் எலெக்ட்ரானிக் கோப உணர்வின் உணர்ச்சிகள் அழுத்தங்கள் வரப்படும் பொழுது நமது கண் எப்படிச் சிவக்கின்றது…? நரம்புகள் எப்படி முறுக்குகின்றது…? எதன் வழி செயல்படுகின்றது…? என்று குருநாதர் எமக்கு உணர்த்தினார்.

எலெக்ட்ரிக் எலெக்ட்ரான் என்ற நிலையில் ஒரு பொருளுடன் ஒரு பொருள் கலக்கப்படும் பொழுது அதனின் கலவையின் நிலைகள் எப்படிச் செயல்படுகின்றன…? செடி கொடிகள் எப்படி வளர்கின்றன…? எப்படி ரூபம் மாற்றமடைகின்றன…? என்பதையெல்லாம் எமக்கு உணர்த்தினார்.

இப்படி…
1.எங்களுக்குள் நடைபெறும் உணர்வுப் பரிமாற்றங்கள் வேறு யாருக்கும் தெரியாது.
2.அனுபவரீதியாக ஒவ்வொன்றையும் சினிமாப் படம் போன்று காண்பித்தார்.
3.இந்த உண்மையின் இயக்கத்தை நமது அகத்திற்குள் பதிவு செய்ய வேண்டும் என்ற நிலைகளில்
4.குருநாதர் எமக்கு உபதேசித்த அருள் வழி கொண்டுதான் இப்பொழுது யாம் உங்களிடத்தில் பதிவு செய்கின்றோம்.

வித்தையைக் காண்பிக்கின்றேன் என்றார் குருநாதர்

வித்தையைக் காண்பிக்கின்றேன் என்றார் குருநாதர்

 

ஒரு சமயம் என் நண்பர் பாப்பம்பட்டி இராமசாமி நாயுடுவின் கரும்புத் தோட்டத்தில் யாமும் நமது குருநாதர் நாங்கள் இரண்டு பேரும் இருந்து கொண்டிருக்கின்றோம்.

1“நான் வித்தையைக் காண்பிக்கிறேன்டா… வித்தையைக் காண்பிக்கிறேன்டா…!” என்று சொல்லி விட்டுக் குருநாதர் என்ன செய்தார்…?

கரும்புச் சக்கை சுற்றி எல்லாப் பக்கமும் கிடக்கின்றது. கரும்பு ஆலை இயங்கி கொண்டிருக்கின்றது. கரும்பு ஆலையில் பாகு சரியாக வரவில்லை

கரும்பு ஆலைக்குள் போனவுடன் சாறை எடுத்துக் குடிடா…! என்றார். குடித்தேன்… அந்தப் பாகு சரியாக வரவில்லை என்று சொல்லி எம்மை அழைத்துச் சென்றார்கள்.

குருநாதர் நானும் வருகிறேன் என்றார்…! கூட்டிக் கொண்டு சென்றோம்.

உள்ளே சென்றவுடன் அங்கே மிஷினை நிறுத்தி விட்டார்கள். வெல்லம் எதுவுமே சரியாக வரவில்லை என்று சொன்னார்கள்.

குருநாதர்… இரண்டு பேரும் போகலாம் என்றார். போனோம்…!

போனவுடன் மிஷினை ஓட்டுடா என்றார் என்னிடம்.

ஆயிலும் இல்லை ஒன்றும் இல்லை… மிஷினை ஓட்டச் சொன்னால் எப்படி ஓட்ட முடியும்…? என்றேன்.

ஓட்டுடா என்கிறேன்… சக்தியை வைத்துக் கொண்டிருக்கின்றான்… திருட்டுப் பயல் ஓட்டுடா…! என்று மீண்டும் எமது குருநாதர் சொன்னார். எல்லாமே வைத்துக் கொண்டிருக்கிறாய்… சுவிட்சைப் போட்டு வைத்திருக்கிறாய்… உதை என்கிறார்.

எனக்கு ஒன்றும் தெரியாது சாமி…! என்கிறேன்.

1.இவன் என்னென்னமோ சொல்கிறான்… இவன் என்னமோ பண்ணி வைத்து விட்டான்.
2.இவன் தான் செய்து வைத்திருக்கிறான்…! என்று திட்டிவிட்டு “என்னென்னமோ பண்ணினார்…”
3.கரும்புச் சாறும் வந்தது… கரும்புச் சாறு வந்தபின், முதல் தடவை வெல்லம் நன்றாக வந்தது.

அடுத்து என்னை இழுத்துக் கொண்டு போனார் குருநாதர்.

இராமசாமி நாயுடுவுக்கு எல்லாம் தெரியும். இராத்திரி பனிரெண்டு மணிக்கு நான் எடுத்துக் கொண்ட துணிமணிகளையெல்லாம் குருநாதர் ஒரு பையில் எடுத்து வைத்து விட்டார். இராத்திரி கை கால் வராமல் முடங்கிக் கொண்டு அவர் சில வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றார்.

எங்களைச் சுற்றிக் கரும்புக் காடு. சோகைகள் நிறைய இருந்தது. தீயை வைத்துவிட்டார் குருநாதர். இரண்டு பேரும்தான் உள்ளே இருக்கிறோம். எல்லோரும் வெளியிலே இருக்கிறார்கள். தீ சுற்றி எரிந்தால் கரும்புக் காடு எல்லாமே எரிந்துவிடும்.

“ஐய்யயோ…! இவன் தீயை வைத்து விட்டான் தீயை வைத்து விட்டான்” என்று என் பெயரைச் சொல்லி சத்தம் போடுகிறார். என்னைக் காப்பாற்றுங்கள்,. என்னைக் காப்பாற்றுங்கள்… என்னை நெருப்புக்குள் போட்டு வாட்டுகிறான் பாவிப்பயல்…! என்று சத்தம் போடுகிறார். கை கால்களை இழுத்துக் கொண்டே, சத்தம் போடுகிறார்.

மற்றவர்கள் எல்லோரும் சுற்றி நின்று, பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு எங்கும் போக முடியவில்லை. என் வேஷ்டியிலும் தீ பிடித்துவிட்டது. அணைப்பதற்குத் தண்ணீர் கூட அந்த இடத்தில் இல்லை.

சாமி… வேஷ்டி எல்லாம் தீ பிடித்துவிட்டது என்றேன்.

ஏன்டா…? தீயை நீ வைத்துவிட்டு என்னை ஏன்டா சொல்கிறாய்…? என்கிறார் குருநாதர். இப்படியெல்லாம் அவஸ்தைப்படுத்தினார்.

தீ சுற்றி சூழ்ந்துவிட்டது. இன்னும் ஒரு நிமிடம் தான் இருக்கிறது…! அந்த அளவில் இருக்கப்படும்போது,
1.இந்தத் தீ எப்படிப் பரவுகிறது…?
2.இந்தத் “தீயிற்கு” உண்டான ஆற்றல் என்ன…?

அவனுடைய ஆசை எப்படிக் கரும்புச் சாறுக்காக வேண்டி இங்கே ஆலையை வைத்தான்…? என்று இத்தனை உணர்வை அங்கே காட்டுகின்றார்.

அவன் பணத்திற்காக வேண்டி ஆசைப்பட்டு வைத்தான். நீ சக்தி பெற வேண்டும் என்ற நிலைகளில் இங்கே வந்து கொண்டிருக்கின்றாய். நெருப்பு வந்து சூழ்ந்து கொண்டிருக்கின்றது… நீ எங்கே தப்பப் போகின்றாய்…?

1.நீ ஆசையின் நிலைகளில் இருந்து கொண்டிருக்கின்றாய்.
2.அவன் ஆசையில் அங்கே இருக்கிறான்
3.ஆனால் அவன் வெளியே இருக்கிறான்… நீ இங்கே இருக்கின்றாய்.

அந்த இடத்தில் உபதேசம் எப்படிக் கொடுக்கிறார்…? பாருங்கள்.

எல்லாவற்றையும் போட்டு நசுக்கித் தீயை அணைக்க முற்படுகிறார்கள். எல்லாம் நசுக்கினாலும்… சுற்றி அனல் தாங்க முடியவில்லை, சோகை முழுவதும் அனல் பிடித்திருக்கிறது. இவ்வளவு அவஸ்தையில் இருந்து கொண்டிருக்கிறேன்.

அவன் ஆசையில் வந்தான். கரும்புச் சாறு சரியாக இருக்கிறது என்றான்… உன்னைப் போற்றினான்… நீயும் எல்லாம் பண்ணினாய். இப்பொழுது தீ பிடித்துக் கொண்டது.

இப்பொழுது என்னை யாரடா காப்பாற்றப் போகிறார்கள்…? சக்தி என்ன ஆனது…? என்று கேட்கிறார்.

தீ பிடிக்கிறது எல்லாம் பண்ணிவிட்டு என்னமோ மந்திர வேலை பண்ணிவிட்டான். என்னைத் தீயை வைத்துக் கொல்கிறான்… என்னைக் காப்பாற்றுங்கள்…! என்றார் குருநாதர்.

அவர்கள் அங்கே அருகில் நெருங்க முடியவில்லை. “என் கரும்புக் காடெல்லாம் போகிறதே…!” இங்கே தண்ணீர் ஊற்று… அங்கே தண்ணீர் ஊற்று..,! என்கிறார்கள்.

மோட்டர் பம்பைப் போடு என்றாலும் கூட அங்கே சுவிட்ச் தண்ணீராகி விட்டதால் அந்த மோட்டாரே பாயிலாகி போய்விடுவது போல இருக்கிறது. இந்த அளவுக்கு ஆபத்தான நிலைகளில் சிக்க வைத்துவிட்டு நம்மைப் பார்க்கிறார்.

அப்படியெல்லாம் சிக்க வைத்துத் தான் எனக்கு உண்மைகளை உணர்த்தினார்.
1.அவ்வாறு உணர்ந்ததை நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
2.கஷ்டத்தைப் போக்குவதற்குக் கஷ்டம் வரும்போது அதை நிவர்த்தி செய்ய ஆத்ம சுத்தி செய்யச் சொன்னால் “நேரம் இல்லை” என்கிறீர்கள்.

ஆனால் அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தைப் புகுத்தி எனக்கு அப்படியே மரணமடையும் நிலை வந்து விட்டது. அப்படி மரணமடையும் நிலைகளில்தான் விளக்கமும் கொடுக்கிறார்.

அவருடைய ஆசையில் உன்னைக் கூட்டிக் கொண்டு வந்தாலும் அந்த ஆசையிலிருந்து அவரகள் தப்பிப் போக முடிந்தது. அவர்கள் அங்கே இருக்கிறார்கள்.
1.ஆனால் நீ எல்லாச் சக்திகளைப் பெற்றாலும், புகழுக்காக வேண்டி இதைச் செய்தாய்.
2.நீ இதற்குள் மாட்டிக் கொண்டிருக்கும் போது உன் புகழ் எங்கே போகப் போகிறது…?
3.இவ்வளவு பெரிய சக்தியை வைத்துக் கொண்டு நீ என்ன பண்ணப் போகின்றாய்…?
4.என்னையும் இழுத்துக் கொண்டு சிக்க வைத்துவிட்டாய்…! நான் என்னடா பண்ணட்டும்…? என்கிறார் குருநாதர்.

கொஞ்ச நேரம் கழித்து… ஹா.. ஹா. என்று சிரித்துவிட்டு இந்த உணர்வின் நிலைகள் அத்தனையுமே மனிதனாகப் போகும்போது என்னவாகும்…? என்பதை உணர்த்தினார்.

மரணமாகக் கூடிய தருணம்,.. வேஷ்டி தீ பிடித்து எரிகிறது. வேறு வழியே இல்லை…! அப்பொழுது நெருப்புக்குள் இருந்து அந்த உணர்வின் அலையை எடுத்துக் காட்டுகிறார்.
1.நீ மரணமடையப் போகும் பொழுது எந்த நிலை…?
2.உன் உடலுக்குள் இருக்கக்கூடிய உணர்வின் அலைகள் என்னென்ன செய்கிறது…?
3.அணுக்களின் செயலும்… உன் ஆசையின் நிலைகளும்… உன் உடலுக்குள் வளர்ந்த முந்தைய அணுவின் நிலை எப்படி…?
4.அணுவின் ஆற்றலின் தன்மையைக் காட்டுகின்றார்.

ஆனால்… என் உடலில் தீ பிடிக்க வைத்து அந்த மாதிரிச் செய்தார். இதையெல்லாம் முதல் புத்தகத்தில் யாம் கொடுக்கவில்லை. கொடுத்தால்… பயந்து விடுவீர்கள். இப்படியும் இருக்கிறதா…? என்று.

இன்று உலகத்தின் நிலைகளில் விஞ்ஞான அறிவு வளர்ந்து விட்டது. அவனுடைய ஆசையில் தன்னைத் தற்காத்துக் கொள்ளக்கூடிய உணர்வுகளிலேயே… அவன் அதற்குள்ளேயே போய் சிக்கிக் கொண்டான்.

ஏனென்றால் விஞ்ஞானிகள் இயற்கையின் நிலைகளில் இதனுடைய அலைகளை வைத்து ஒரு நொடிக்குள் அனைவரையும் மாய்க்க வந்துவிட்டார்கள்.

மனிதன் சூரியனிலிருந்து தோன்றிய உணர்வின் அணு கொண்டு வளர்ந்தான். இதையெல்லாம் பின்னாட்களில் விஞ்ஞானிகள் அறிவிப்பார்கள். ஒவ்வொரு நிமிடத்திலும் யாம் காலத்தை விரயம் செய்யவில்லை.

உங்கள் ஒவ்வொருவர் உயிரையும் ஈசனாக மதித்து அந்த உடலுக்குள் இருக்கக்கூடிய உயிரை மதித்து
1.அந்த அணுவின் இயக்கங்களுக்குள் உங்களுடன் இரவும் பகலும் தொடர்பு கொண்டு
2.அருள் ஞானிகள் உணர்வைப் பதிவு செய்கின்றோம்.
3.அந்த ஞானிகளின் ஆற்றலை நீங்கள் பெற வேண்டும் என்று
4.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் சதா ஜெபித்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் எவ்வளவு சிரமப்பட்டு விஞ்ஞான அழிவிலிருந்து மீளுவவதற்கு இந்த உணர்வைப் பாய்ச்சச் செய்து உங்களுக்குள் ஆற்றல் மிக்க சக்தியைப் பெருக்கினாலும் “இதைச் சிந்திப்பார் யாரும் இல்லை…”

இவ்வளவு பெரிய ஆற்றல்களையும் நமது குருநாதர் எப்பொழுதும் இயக்கிக் கொண்டிருக்கின்றார்.
1.குருநாதர் இட்ட கட்டளைப்படி ஒவ்வொருவரது உடலிலும் இதைப் பதிவு செய்கின்றோம்.
2.விஞ்ஞான அறிவால் உலகையே கரைக்கும் நிலைகள் வரும்போது அதை மாற்றும் நிலை வேண்டும்.

அதற்கு… துருவ நட்சத்திரத்தின் பேரருளை ஒரு பத்து நிமிடமாவது எடுத்துக் கொள்ளூங்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருளைத் தனக்குள் கூட்டியபின் மகரிஷிகளின் ஒளியை நீங்கள் பெறுங்கள்.

ஆற்றல்மிக்க சக்திகளைப் பெறும் போது இறுமாப்பே வருகிறது…!

ஆற்றல்மிக்க சக்திகளைப் பெறும் போது இறுமாப்பே வருகிறது…!

 

பல சக்திகளையும் பல வித்தைகளையும் குருநாதர் எமக்குக் காட்டினாலும் அந்தச் சக்தியின் துணை கொண்டு எமக்கு “இறுமாப்பு…” அதிகமாகவே விளைகின்றது.

1.காரணம்… எதையும் எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைகளில் பல சக்திகளை உணர்த்துகின்றார்.
2.அது வந்தவுடன் எமக்குள் இறுமாப்பு வருகின்றது.

இறுமாப்பு வரப்படும் பொழுது சில மந்திரவாதிகளைப் போய் அணுகுவது அவர்களைச் செயலற்றதாக ஆக்குவது. அப்பொழுது அவர்கள் வன்மம் கொண்டு சில நிலைகளைச் செய்வார்கள்.

மந்திரவாதிகளுக்குள் இந்த மாதிரிப் பழக்கம் உண்டு. தனக்குள் மந்திரம் இருக்கிறது என்றால் அடுத்தவனை என்னவென்று சுண்டிப் பார்ப்பது….? அதே மாதிரித் தான் எமது புத்தியும் செயல்பட்டது.

மனித வாழ்க்கையில் வந்த யாம்… குருநாதர் சக்தி கொடுத்திருக்கின்றார் என்றால் “இவனை ஒரு கை பார்ப்பது…!” என்ற நிலையில் அகந்தை கொண்டு செயல்படும் உணர்வே எமக்குள் தோற்றுவித்தது.

ஆனால் அருள் ஞானியான மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர்கள் உணர்த்திய உணர்வோ
1.நமக்குள் ஈர்க்கும் அந்த உணர்வின் இயக்கங்களைக் கண்டு அறிவதற்காக
2.எத்தகைய வலு இருந்தாலும்… நாம் எண்ணத்தின் வலு கொண்டு செயல்டும் பொழுது
3.நமது எண்ணம் தீமையின் வழியில் எப்படி அழைத்துச் செல்கின்றது…? என்பதைத் தெளிவாக உணர்த்தினார்.

குருநாதர் உயர்ந்த சக்தியினை எமக்குள் கொடுத்தாலும் எமக்குள் அகந்தை என்ற நிலைகள் ஓங்கி வரப்படும் பொழுது மற்றவர்களை எளிமைப்படுத்திப் பார்ப்பதும் “தான் தான் நான் தான்” என்று நான் என்ற அகந்தை கூடும் நிலையே ஏற்பட்டது.

அப்பொழுது அந்த நல்ல உணர்வைக் காக்காதபடி இந்த ஆறாவது அறிவைச் செம்மையாகப் பயன்படுத்தாதபடி இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு குரு காட்டிய அருள் வழியில் அவர்கள் காட்டிய அறநெறியின் தன்மையை
1.வலுவாகத் தீமையை அகற்றும் நிலைக்கு வருவதற்குப் பதில்
2.தீமையை அது தூண்டச் செய்து “இரு நான் பார்க்கின்றேன்…” என்று அவனின் நிலைகளுக்கு
3.இந்த உணர்வுகள் உனக்குள் எவ்வாறு செயல்படுகின்றது…? என்று பார்…! என்று குருநாதர் உணர்த்துகின்றார்.

இவ்வாறு உணர்த்திக் கொண்டே இருக்கும் பொழுது நான் எங்கோ சென்று கொண்டிருக்கும் பொழுது இப்படிப் பல நிலைகளைச் செய்யும் பொழுது திடீர் என்று எம்மை அறியாதபடி ஒரு மலை மீது “கால் பாதம் வைக்க மட்டும் தான் இடம் உள்ளதில் எம்மை நிறுத்திவிட்டார்…!” உட்கார முடியவில்லை…!

அங்கே எப்படி வந்தோம்…? என்ன செய்வது…? என்று தெரியாதபடி திகைப்பின் நிலையில் இருந்தோம். எந்த மந்திரவாதி இப்படிச் செய்தானோ…? என்ற இந்த எண்ணம்தான் வருகிறது.

யாம் மந்திரவாதிகளைத் தொட்டுப் பரிட்சை செய்ததினாலே யாரோ மிகவும் சக்தி வாய்ந்தவர்கள் எம்மை இப்படி அழைத்து வந்துவிட்டனர் என்று நினைத்தோம்.

எந்தப் பக்கம் பார்த்தாலும் தலை சுற்றியது. அந்த அளவிற்கு மோசமான இடத்தில் இருந்தோம். அந்த மலை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ளது.

அப்பொழுதுதான் யாம் திகைத்து நமக்கு குரு எவ்வளவு சக்தி கொடுத்தாலும் அந்தக் குருவின் துணை நமக்கு இல்லையே,
1.யாம் அகந்தை கொண்டு செயல்பட்டதால் ஏதோ மந்திரவாதி செய்து விட்டான் என்ற எண்ணங்கள்தான் எமக்கு வந்ததே தவிர
2.குருவின் வலுவை யாம் எண்ணவில்லை.

எமக்குள் அகந்தையின் நிலைகள் கொண்டு, யாம் செய்த செயலுக்கு மற்றவர்கள் இவ்வாறு செய்துள்ளார்கள் என்ற உணர்வே தோற்றுவித்தது. இந்த நிலைகளில் இருந்து எப்படி மீள்வது…? என்று தவித்துக் கொண்டிருந்தோம்.

ஒரு மணி நேரம் ஆகிவிட்டது, நேரம் ஆக ஆக எமது உடல் எல்லாம் வேர்க்கின்றது. சறுக்குப் பாறைபோல் இருந்ததால் வேர்வை வியர்க்க வியர்க்க கால்கள் தன்னிச்சையாக நகரும் தன்மை வருகின்றது. எனக்கு எதையும் எட்டிப் பிடிக்கும் நிலையே இல்லை.

முன் பக்கம் போனாலும் மரணம் தான்… பின் பக்கம் போனாலும் மரணம் தான். குருநாதர் கொடுத்த சக்தியை எண்ணிப் பார்க்கக்கூட நேரம் இல்லை.

கொஞ்ச நேரம் போனால் போய்விடுவோமோ…! என்ற பய உணர்வுகள் அதிகமாக அதிகமாக உடலின் தன்மையில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க உடலிலிருந்து வியர்வை கொட்டத் தொடங்கி விடுகின்றது. ஆக வலுவிழந்த நிலையில் யாம் இருந்தோம்.

இந்த நேரத்தில் “மனமே இனியாகிலும் மயங்காதே…” என்ற குரல் வருகின்றது. அது குருவின் குரலாகத் தென்பட்டபின் எமக்குக் கொஞ்சம் ஜீவன் வந்தது.

“நீ கொஞ்ச நேரத்தில் விழுந்து விடுகின்றாய்… நீ உன் எண்ணத்தால் பல மனக் கோட்டையைக் கட்டினாயே… கொஞ்ச நேரத்தில் மறையப் போகின்றது பார்…!” என்றார் குருநாதர்.

அதைத் தொடர்ந்து… ஒவ்வொரு மனிதனும் செல்வங்கள் குவித்து வைத்து, அந்த செல்வத்தைக் காத்திடும் நிலையாக
1.தன் பந்துக்கள்… தன் இனங்களையே இம்சிக்கின்றனர்.
2.கடைசி நிலையில் அந்தப் பொருளைக் காக்க முடியாத நிலையில் அவர்கள் எப்படி வேதனைப்படுகின்றனர்…?
3.சம்பாதித்து வைத்தாலும் அவர்களுக்குள் வேதனையத்தான் வளர்க்க முடிந்தது.

செல்வத்தைக் காத்திடும் நிலை அற்றுத் தனக்குள் வேதனை என்ற நஞ்சின் தன்மை உருப்பெறும் நிலையாக நல்ல குணங்களை அழித்திடும் நிலைகள் பட்டுச் சீர்கெட்டு இருக்கும் நிலைகளைச் “சினிமாப் படங்களைக் காட்டுவது மாதிரி ஒன்று ஒன்றாகக் காண்பித்தார்…” அப்பொழுதுதான்,
மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போல மறைவதைப் பாராய்

நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ
நிலையில்லா இவ்வுலகம் உனக்குச் சதமா
மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே என்ற நிலையை உபதேசித்தார் குருநாதர்.

1.ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையில் எவ்வாறு செல்வத்தைச் சம்பாதித்தனர்…?
2.அந்தச் செல்வத்தைக் காப்பதற்காக எத்தனை வேதனைப்பட்டனர்…?
3.அந்த வேதனை குடும்பத்திற்குள் எப்படித் தொடர்ந்தது…?
4.செல்வத்தைக் காக்க முடியாதபடி சாபங்களும் குடும்பத்தில் நலிந்த உடலாகவும் நிம்மதியற்ற நிலைகளில் எவ்வாறு வாழ்கின்றனர்…? என்று
5.அதையெல்லாம் தெளிவாக எடுத்துக் காட்டிக் குறைந்தது இரண்டு மணி நேரம் இருக்கும்… அதன் பின் கீழே இறக்கி விட்டார்.

“இனி நீ வலம் வரலாம்… உலகை அறியலாம். நான் உனக்குக் கண்டுணர்த்திய அனைவரின் உண்மைகள் நீ செல்லும் பொழுது, செல்லும் பாதையில் உனக்கு உண்மையின் உணர்வுகள் வரும்.
1.நீ அங்கே சென்று பார்,
2.அவர்களின் குடும்பத்தின் நிலைகளைப் பார்,
3.ஊன்றிப் பார்… அவர்களின் செயல்களின் தன்மையைப் பார்,
4.அதிலிருந்து அவர்கள் விடுபட என்னவென்று சிந்தித்துப் பார் என்று பல நிலைகளை உணர்த்தினார் குருதேவர்.

மனிதர்கள் சூதுகளில் சிக்கும் நிலைகளை உணர்த்தினார் குருநாதர்

மனிதர்கள் சூதுகளில் சிக்கும் நிலைகளை உணர்த்தினார் குருநாதர்

 

நமது உயிரணு பல கோடி உடல்களைப் பெற்று அவ்வுடல்களில் உள்ள தீமைகளை நீக்கி நீக்கி இன்று ஆறாவது அறிவு கொண்ட மனிதராக உருவாக்கியுள்ளது.

சூதாடுவது தீமை என்று தெரிகின்றது. ஆனால் சூதாடப் போகின்றோம். சூதாட்ட விளையாட்டில் தோற்கத் தோற்க விளையாட்டில் இழந்த பணத்தைப் பிடித்துவிடலாம் என்று திரும்பத் திரும்ப விளையாடி எல்லாவற்றையும் இழந்து விடுகின்றோம்.

இதற்கு உதாரணமும் ஒன்று, குருநாதர் எமக்கு அனுபவபூர்வமாகக் காண்பித்தார்.

ஒரு பால் வியாபாரி அடிக்கடி எம்மை வந்து சந்திப்பார். யாம் குருநாதருடன் சேர்ந்து சுற்றிக் கொண்டிருக்கும் காலத்தில் அந்தப் பால் வியாபாரி எம்மிடம் வந்து
1.“குருதேவரிடம் ஏதோ சக்தி இருக்கிறது” என்று ஊரில் பெரும்பாலானவர்கள் பேசிக் கொள்கின்றார்கள்.
2,சற்குருதேவர் எனக்கு ஒரு ஆசீர்வாதம் கொடுத்தால் போதும்…! என்று பால் வியாபாரி யாம் தனித்து இருந்த நேரத்தில் வந்து கூறினார்.

“என்ன ஆசீர்வாதம் வேண்டும்…?” என்று பால் வியாபாரியிடம் கேட்டோம்.

அதற்குப் பால் வியாபாரி “நான் சீட்டு விளையாடியதில் என்னிடம் இருந்த எல்லாப் பணமும் போய்விட்டது, வேறு வழி இல்லை…! இந்தச் சைக்கிளை வைத்து விளையாடலாம் என்று பார்க்கின்றேன். இதுவும் போய்விட்டதென்றால் பால் எடுத்து விற்பதற்கு வழி இல்லை.

ஆகவே குருதேவரிடம் சொல்லி… நான் சீட்டு விளையாட்டில் ஜெயிப்பதற்கு ஆசீர்வாதம் வாங்கிக் கொடுங்கள் என்று கூறினார்.

மறுநாள் குருநாதரின் அருகில் யாம் இருக்கும் பொழுது பால் வியாபாரி எம்மிடம் வந்து… “அண்ணே குருநாதரிடம் அந்த விபரம் கூறினார்களா…?” என்று கேட்டார்.

“பால் வியாபாரி கேட்டதை ஏன் என்னிடம் சொல்லவில்லை?” என்று குருநாதர் எம்மைக் கேட்டுவிட்டு…
1.“நீ (பால் வியாபாரி) ஜெயித்து வா என்று ஆசீர்வாதம் கொடு”
2.எம்மை பார்த்து அவனுக்கு ஆசீர்வாதம் கொடு என்று கூறினார் குருநாதர்.

யாம் அவ்வாறே பால் வியாபாரியை ஆசீர்வாதித்த பின் அவர் சீட்டு விளையாடச் சென்றார்.

சீட்டு விளையாட்டில் பால் வியாபாரி ஒரே நாளில் 25,000 ரூபாய் சம்பாதித்தார். சீட்டு விளையாட்டில் 25,000 ரூபாய் சம்பாதித்து வந்தவுடனே பால் வியாபாரி எமக்குப் புது வேஷ்டி புது சட்டை பெட்ஷீட் வாங்கி வந்தார்.

குருநாதர் வெறும் கோவணத்துணிதான் கட்டியிருந்தார். எனவே அவருக்குப் படுத்துக் கொள்ள பெட்ஷீட் இல்லையாம். அதனால் அவருக்கு ஒரு பெட்ஷீட் வாங்கி வந்திருந்தார் பால் வியாபாரி.

குருநாதர், அதை வாங்கி தார்தாறாகக் கிழித்தெறிந்தார்.

சீட்டு விளையாட்டில் ஓரே நாளில் 25,000 ரூபாய் சம்பாதித்ததும் பால் வியாபாரிக்கு மேலும் ஆசை வந்துவிட்டது. இன்னும் பத்து நாளைக்கு விளையாடினால் தான் பெரிய பங்களாவே… காரே வாங்கி விடலாம் என்று திட்டமிட்டார்.

பால் வியாபாரி அன்று ரூபாய் 25,000 தான் சம்பாதிக்க முடிந்தது. அதையும் இங்கே கொண்டு வந்து செலவழிக்கின்றார். எங்களுக்குத் துணிமணியும் பெட்ஷீட்டும் வாங்கிக் கொடுத்துவிட்டு அவருடைய நண்பர்களுக்கெல்லாம் “நீ காபி சாப்பிடு… நீ காபி சாப்பிடு” என்று கூறி அதில் ரூபாய் 5,000 வரை செலவழித்தார், 20,000 ரூபாய் மிச்சம்.

பால் வியாபாரி கொடுத்த பெட்ஷீட்டைக் குருநாதர் கிழித்து எறிந்துவிட்டு, “பால் வியாபாரியினுடைய ஆசை எதிலே போகின்றது…? என்றார்.

ஜெயிக்க வேண்டும் என்று கேட்டான். அதைக் கொடுத்தபின் இவன் ஆசை எங்கே போகின்றது பார்…! ஏதோ ஜெயித்து கொடுத்தால் இனிமேல் சீட்டு விளையாடப் போக மாட்டேன் என்று தானே கூறினான்.

இழந்த பணத்தைச் சம்பாதித்தான்… ஜெயித்த பணத்தை அனாவசியமாகச் செலவழிக்கின்றான்… உனக்கும் எனக்கும் வேறு வாங்கிக் கொடுத்திருக்கின்றான். நாளை எப்படி வருவான் பார்…? என்று கூறினார்.

மறு நாள் பால் வியாபாரி சீட்டு விளையாடித் தன்னிடம் இருந்த சைக்கிளும் போய்விட்டது.

மறுநாள் பால் வியாபாரி எங்களிடம் வந்து “என்ன சாமி…? இப்படி ஆகிவிட்டது…!” என்று கேட்டார். முதலில் ஆசி கொடுத்து ஜெயித்த பின் “அவரின் ஆசை” சீட்டு விளையாட்டின் மீது தான் போகின்றது.

இப்படி…
1.சமுதாயத்தில் மனிதர் சூதுகளில் ஆசையை வளர்த்துக் கொள்ளும் பொழுது… “போதும்…” எனும் மனம் வருவதில்லை.
2.தன்னுடைய தொழிலை முன்னேற்றிப் பொருளைச் சம்பாதிக்கலாம் என்ற நிலையும் இல்லை.
3.சந்தர்ப்பங்கள் எப்படி வருகின்றது…? என்று அந்த இடத்தில் குருநாதர் காண்பித்தார்.

குருநாதர் சாதாரணமாக விடவில்லை. ஒவ்வொரு நொடியிலும் மனிதரது உணர்வுகள் எப்படி இயங்குகின்றது…? அதிலிருந்து நீ எப்படித் தப்புவது…? என்று அங்கு சொன்னார்.

ஒருவர் கடலில் ஒரு தீவைக் குறி வைத்துப் படகைத் துடுப்பின் உதவி கொண்டு செலுத்துகின்றார், கடலில் எதிர் அலைகள் வந்து கொண்டிருந்தாலும் அவர் எதிர் அலைகளைச் சமாளித்துப் படகைச் செலுத்துகின்றார்.

1.இதில் “தீவு என்பது துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டம்” என்று நாம் கருதிக் கொண்டு
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நாம் துடுப்பாகப் பயன்படுத்திக் கொண்டு
3.இந்த உலக வாழ்க்கையில் வரும் தீமைகளை வென்று நமது நல் ஞானப் பயணத்தை நடத்தி வரவேண்டும்.

நாம் உடல் மீது பற்று வைத்தால் மீண்டும் பிறவியை அடைவோம். நாம் உயிர் மீது பற்று வைத்தால் பிறவி இல்லா நிலையை அடைவோம்.

பிறர் படும் கஷ்டத்தை உணர்வதற்காக எனக்குக் குருநாதர் கொடுத்த அனுபவம்

பிறர் படும் கஷ்டத்தை உணர்வதற்காக எனக்குக் குருநாதர் கொடுத்த அனுபவம்

 

மனித வாழ்க்கையில் மகரிஷிகள் தீமைகளை அகற்றி விண்ணுலகில் எவ்வாறு இன்று சுழன்று கொண்டு இருக்கின்றனர்…? அவர்கள் உடலிலிருந்து தீமையை அகற்றிய நிலைகள் அவர்கள் உடலில் விளைய வைத்த உணர்வலைகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு இன்றும் நம் பூமியில் எவ்வாறு சுழன்று கொண்டிருக்கின்றது…?

அதை நீ எவ்வாறு பருக வேண்டும்…? என்ற நிலையை எமக்கு உபதேசித்து அனுபவம் பெறும் வழியில் நமது குருநாதர் எம்மை வழி நடத்தினார்.

எமது கால்களில் பல ஆணிகள் உண்டு. கால்களில் ஆணி இருப்பவரைக் கேட்டால் தெரியும். சிறிய கல் பாதங்களில் குத்தினால்கூட உச்சி மயிர் நட்டமாக நிற்கும்.

கால்களில் ஆணி உள்ளவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றால் சின்னப் பிரம்பை வைத்து 10 அடிகள் அடித்தால் ஜீவனே பிரிந்துவிடும் என்றால் அதன் உணர்வுகள் எப்படி இருக்கும்…? என்று தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு எமது இரண்டு கால்களிலும் 26 ஆணிகள் உண்டு. யாம் ஒரு காலடி எடுத்து வைக்கவேண்டுமென்றால் முள்ளில் கால் வைக்கிற மாதிரி இருக்கும். ஒவ்வொரு நிமிடத்திலும் இந்த வேதனைகள் தோன்றும்.

எம்மைச் செருப்பே போடக்கூடாது என்று குருநாதர் சொல்லி விட்டார்.
1.செருப்புப் போட்டால் உன் கஷ்டத்தை நீ உணர முடியாது.
2.இப்படி எத்தனையோ பேர்கள் கஷ்டப்படுகிறார்கள்.
3.இந்த உணர்வுகள் எப்படி வேலை செய்கிறது…? என்று நீ உணரவில்லை என்றால் பிறருக்கு நீ உதவியும் செய்ய முடியாது.
4.இதை நீக்கவும் முடியாது என்று குரு சொல்கின்றார்.

உனக்குள் வேதனை எப்படி உருவாகின்றது…? நீ சுவாசிக்கும் உணர்வுகள் உன் உடலுக்குள் என்ன செய்கின்றது…? என்பதையும் உணர்த்துகின்றார்

கால் ஆணி வந்தவர்களின் கால் எப்படி முடமாகின்றது…? நன்றாக இருப்பார்கள் ஆனால் வந்துவிட்டால் உடல் அப்படியே குறுகிக் கால்கள் எல்லாம் நலிந்த நிலைகள் ஆகும்.

அவர்கள் மனதும் வேதனைப்படும் உணர்வாக மாறும். இப்படி மனிதர்கள் எந்தெந்த நிலைகளில் தன்னை அறியாது வேதனைப் படுகின்றனரோ அந்த வேதனையின் உருவாக மாறி விடுகின்றனர்.

இதைப் போன்ற நிலைகளை நீ அறிந்தால் தான் அவைகளை மாற்றி அமைக்கும் சக்திகளை நீ பெற்று மற்றவர்களையும் பெறச் செய்ய முடியும் என்றார் குருநாதர்.

ஆகவே
1.அந்த அருள் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி
2.அகத்தியர் காட்டிய அருள் வழிப்படி
3.வியாசகன் காட்டிய அருள் நெறிப்படி
4.வான்மீகி காட்டிய அருள் நெறிப்படி
5.போகர் காட்டிய அருள் நெறிப்படி நாம் எதை எண்ண வேண்டும்…?
6.எதனை நாம் பருக வேண்டும்…?
7.எதனை நமக்குள் வலுவாகச் சேர்க்க வேண்டும்…?
8.எதனை வினையாகச் சேர்க்க வேண்டும்…?
9.அதை “வினைக்கு நாயகனாக” நமக்குள் எவ்வாறு ஆக்க வேண்டும்…? என்ற நிலைகளில் எனக்கு உணர்த்துவதற்காக
10.என் கால்களில் ஆணி இருக்கின்ற வரையிலும் இப்படி நடக்கச் சொல்லிப் பல நிலைகளைச் செயல்படுத்தினார் நமது குருநாதர்.

குருநாதர் கொடுத்த இன்னல்களைத் தாங்க முடியாதபடி பல முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன்

குருநாதர் கொடுத்த இன்னல்களைத் தாங்க முடியாதபடி பல முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன்

 

எனது குருநாதர் அடிக்கடி எம்மைத் துயரத்தில் ஆழ்த்தி துயரப் படும்படியாக வாழச் செய்தார்… அதிலேயே உழலச் செய்தார். பல இன்னல்களைக் கொடுத்தார்.
1.அந்த இன்னல்களைச் சந்தித்த பின் குருநாதரிடமே வெறுப்பு கொண்டேன்.
2.என்னை இப்படி எல்லாம் தொல்லைப்படுத்துகின்றாயே… கஷ்டப்படுத்துகின்றாயே…!
3.இது எதுவும் எனக்கு வேண்டாம்… நான் பேசாமல் போகின்றேன்…! என்றேன்.
4.இன்னல்களைத் தாங்க முடியாது தற்கொலை செய்யவும் கூட முயற்சி எடுத்தேன்… ஒரு முறை அல்ல பல முறை…!

அவர் கொடுக்கும் இம்சைகளிலிருந்து மீள முடியாத நிலைகள் கொண்டு என்ன வாழ்க்கை…? என்று எண்ணினேன்.

மனைவியைக் காப்பாற்றினார்… சில மகிழ்ச்சியான செயல்களும் நடந்தது. ஆனால் அதற்குப்பின் ஒவ்வொரு நொடியிலும் பல பல இன்னல்கள் வருகின்றதே…! என்ன வாழ்க்கை…? என்று எண்ணிய பின் பல முறை தற்கொலை செய்யும் உணர்வுக்கே அது என்னை அழைத்துச் சென்றது.

அப்பொழுது தான் குருநாதர் சுட்டிக் காட்டுகின்றார்.

உன்னுடைய உணர்வு கொண்டு பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று விரும்புகின்றாய். ஆனாலும் அந்தத் தீமையின் உணர்வுகளை உனக்குள் நீ நுகரும் பொழுது
1.உன் நன்மையின் நிலைகளை அது எவ்வாறு செயலற்றதாக மாற்றுகின்றது…?
2.உன் உடலை அழித்திட வேண்டும் என்று இந்த உணர்ச்சிகள் உன்னை எப்படித் தூண்டுகின்றது.

எத்தனையோ உடல்களில் “உன்னைக் காத்திட வேண்டும்…” என்ற உணர்வை நினைவு கொண்டாய் பரிணாம வளர்ச்சியில் இன்று மனிதனாக ஆனாய்.

ஆனால் மனிதரான பின் சிறு குறைகளை உன்னால் தாங்க முடியாது இந்த உணர்வின் தன்மை வளர்க்கப்படும் பொழுது இதே எண்ணம் இந்த உடலை அழிக்கச் செய்கின்றது.

இந்த உடலை அழித்து விட்டால்
1.உடலை அழித்திடும் உணர்வு கொண்டு இன்னொரு உடலை அந்த உடலையும் அழித்துவிடும் நிலைகளுக்குச் சென்று
2.இது போன்று உடலை அழித்துப் புசித்திடும் உணர்வின் தன்மை கொண்ட மிருகமாக நீ பிறப்பாய் போ…! என்று சாபமிடும் நிலையாக உணர்த்தினார்.

அதைச் சிந்தித்துப் பார் என்றார். அந்த உணர்வின் அலைகள் உனக்குள் எவ்வாறு செயல்படுகின்றது…? எதனை நீ அறிய வேண்டும்…? என்ற நிலைகளைத் தெளிவுபடுத்திக் காட்டினார்.

ஆகவே நாம் எதைக் கருத்தில் கொள்ள வேண்டும்…? எதனை நமக்குள் பருக வேண்டும்…? என்ற பேருண்மையை குருநாதர் அருளினார். அந்த உணர்வின் தன்மையை இன்று பாட நூல்களில் காட்டுவது போல அனுபவ ரீதியிலே எனக்குக் கொடுத்தார்.

1.நீங்கள் அனைவரும் அதைப் பெற முடியும்
2.உங்களால் தீமைகளை அகற்றும் சக்தி பெற முடியும்
3.தீமையற்ற உடலாக மாற்ற முடியும்
4.தீமையற்ற நிலைகளை உங்களுக்குள் விளைய வைத்துப் பிறவா நிலை என்ற பெருநிலை அடைய முடியும்.
5.உங்கள் பார்வையால் பேச்சால் பிறருடைய தீமைகளைப் போக்க முடியும்
6.உங்கள் குடும்பத்தில் வரும் சிக்கலை அகற்ற முடியும்
7.உங்கள் வாழ்க்கையில் மன நிம்மதி பெற முடியும் என்று
8.குருநாதர் எனக்கு உணர்த்தியதை உங்களுக்குத் தெளிவாகக் காட்டுகின்றோம்… அதைப் போதிக்கின்றோம்.

ஆகவே எமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த அருள் சக்திகளை அனைவரும் எளிதில் பெற முடியும்… குடும்பத்தில் வரும் சிக்கல்களை நீங்கள் மாற்ற முடியும்.

உங்களை நீங்கள் நம்புங்கள்…!

நம் பக்கம் தவறு இருக்கிறதா…? என்று பார்க்கின்றோமா…!

நம் பக்கம் தவறு இருக்கிறதா…? என்று பார்க்கின்றோமா…!

 

ஒரு முறை ஆனைமலைக் காடுகளுக்கு குருநாதர் எம்மை அழைத்துச் சென்றுவிட்டுப் பொள்ளாச்சி பஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார்.

பொள்ளாச்சி பஸ் நிலையத்திற்கு அருகில் வந்து கொண்டிருக்கும் பொழுது வேகமாக வந்து கொண்டிருக்கும் பஸ்ஸிற்கு முன்னால், ரோட்டைக் கடப்பது போன்று குறுக்கே சென்று எம்மையும் இழுத்தார்.

நாங்கள் குறுக்கே புகுந்தவுடன் பஸ் திடீரென்று நின்றுவிட்டது.

உடனே குருநாதர் டிரைவரைப் பார்த்து “மடத்தனமாக வண்டி ஓட்டுகின்றான் பார்…” என்கிறார்.

பஸ்ஸின் டிரைவரோ… “ஏனய்யா புத்தி இருக்கிறதா…? பைத்தியமா பிடித்திருக்கிறது…?” என்று திட்டினார்.

குருநாதரும்… “இது போலவா வண்டி ஓட்டுவது…? அறிவு கெட்டதனமாக வண்டி ஓட்டுகிறாய்…” என்று டிரைவரைத் திட்டினார்.

பின் குருநாதர் தெளிவுபடுத்தினார்.

அதாவது… சமுதாயத்தில் இது போன்று சந்தர்ப்பங்கள்
1.சில நேரங்களில் உணர்வின் வேகம் கொண்டு நம் உணர்வுகள் செயல்பட்டு
2.தான் செய்த தவறை மறந்து பஸ் டிரைவரைத்தான் குறை சொல்கிறோம்.

தவறு எப்படி நேர்ந்தது…? என்று சிந்திக்கத் தவறும் பொழுது டிரைவர் மீது கோபம் கொள்வது போன்ற நிலைகள் ஏற்படுகின்றன.

டிரைவர் பிரேக் போடாமல் விட்டு விட்டால் அங்கே என்ன நேரும்…? என்று நாம் சிந்திப்பதில்லை.
1.நாம் நசுங்கி இருப்போம் என்று அந்த இடத்தில் சிந்திக்க வேண்டும்.
2.டிரைவர் திட்டியது சரி தான்…! என்று ஏற்றுக் கொள்ளும் நிலை வருமானால் “நாளை இது போன்ற அவசர புத்தி நமக்கு வராது…”
3.நல்ல அறிவினை ஊட்டினார்…! என்று எண்ணினால் டிரைவர் மீது பகைமை வராது.

இப்படி… குருநாதர் உணர்வுகள் ஒவ்வொன்றையும் அனுபவ ரீதியில் எமக்குக் கொடுத்தார்.

மக்கள் தங்கள் வாழ்க்கையில் தாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் கொண்டு செயல்படும் பொழுது சிந்தனை அதன்பால் தான் இருக்கின்றதே தவிர அங்கே தாம் செல்லும் பாதையில் உள்ள இடையூறுகள் தெரிவதில்லை.
1.தம்முடைய ஆசையின் நிலைகளிலே செல்கின்றனர்.
2.ஆனால் பாதையில் இருக்கும் ஆபத்தையும் எதிரியையும் மறந்து விடுகின்றனர்.

இது போன்ற சந்தர்ப்பங்கள் வரும் பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

1.மகரிஷிகளின் அருள் ஒளியினை நமக்குள் சேர்த்துத் தீமைகள் நம்மிடையே வராது விலக்கி
2.அருள் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஆகவே “நான் கொடுத்த சக்தி கொண்டு பிறரை வீழ்த்துவேன்…” என்ற அகந்தை கொண்டால் நல்வழியின் உணர்வுகள் உனக்குள் வராது என்று அந்த இடத்தில் குருநாதர் எம்மைத் தெளிவுபடுத்தினார்.

ஒருவர் தீங்கு செய்கிறார் என்று எண்ணி அதே உணர்வினை நுகர்ந்தால் நமக்குள் தீங்கு விளைவிக்கும் உணர்வுகள் வரும். ஆகவே நாம் தீமைகளைத்தான் செய்ய முடியுமே தவிர நன்மை செய்ய முடியுமா…? என்று நாம் சிந்தித்தல் வேண்டும்.

ஒருவர் வேதனைப்படுகின்றார் என்று நுகரும் பொழுது அந்த வேதனை நமக்குள் வருகின்றது. இதைப் போன்று ஒருவர் தீங்கு செய்கின்றார் என்றால் தீங்கின் நிலையே நமக்குள் விளைகின்றது.

எனவே… தீங்கு செய்கின்றவர்களை எண்ணும் பொழுது அவர்கள் அதிலிருந்து மீள வேண்டும் என்று
1.நான் கொடுத்த அருள் சக்தியின் துணை கொண்டு அவரைத் தீமையிலிருந்து மீட்ட வேண்டும் என்று
2.ஒவ்வொரு நொடியிலும் அனுபவ ஞானத்தை ஊட்டினார் குருநாதர்.

அதைத் தான் உங்களுக்கும் குருநாதர் காண்பித்த அருள் வழியினைத் தெளிவுபடுத்துகின்றோம்.

ஒருவர் நமக்குத் தீமைகள் செய்கிறார் என எண்ணும் பொழுது அவர் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் ஈஸ்வரா…! என்று உங்களுடைய உயிரான ஈஸ்வரனிடம் வேண்டுங்கள்.

உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வைப் பெறுங்கள். இந்த உணர்வின் தன்மை உங்களுடைய உடலை உணர்வைத் தூய்மையாக்கிவிடும்.
1.அதே சமயத்தில் அவர்களைப் பாதுகாக்கும் உணர்வுடன் செயல்படுத்துங்கள்.
2.அப்பொழுது நமக்கும் பாதுகாப்பாகின்றது.

நீங்கள் ஆலயங்களுக்குச் சென்று அபிஷேகமும் ஆராதனையும் செய்வதைப் போன்று உங்கள் உடலுக்குள் மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளை அபிஷேகம் செய்யுங்கள்.

இதனால் உங்கள் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு “நல் அமுது…” கிடைக்கின்றது.

நமது குருநாதர் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவு கொண்டு ஏழாவது அறிவு பெற்ற சப்தரிஷி மண்டலங்களாக வாழ்கின்றார்.

தீமைகளிலிருந்து விடுபடும் நிலையையும் அருள் ஒளியைப் பெறும் நிலையையும் உணர்த்திய உணர்வு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தை எமக்குக் காண்பித்தார்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நீ பெற்றுக் கொள்… இருளை அகற்ற உதவும். மெய்ப்பொருளைக் காண உதவும். உன்னை அறியாது வரும் தீங்கினை அகற்றிட உதவும்…! என்று குருநாதர் எமக்கு உபதேசித்தார்.

1.நமது குருநாதர் தாம் ஒளியின் சரீரமானபின் எம்மை “நீ அதில் ஆயுள் மெம்பராகு…!” என்று உரைத்தார்.
2.அதே போல் யாம் உங்கள் அனைவரையும் அங்கு ஆயுள் மெம்பராக இணைத்து விடுகின்றோம்.

“வாழ வைக்க வேண்டும்…” என்ற எண்ணம் தான் நமக்கு வர வேண்டும் என்றார் குருநாதர்

“வாழ வைக்க வேண்டும்…” என்ற எண்ணம் தான் நமக்கு வர வேண்டும் என்றார் குருநாதர்

 

யாம் ஒரு முறை குருதேவர் ஆணைப்படி இமயமலைக்குச் சென்றோம். அப்பொழுது உடலில் கோவணம் மட்டுமே அணிந்திருந்தோம். வேறு எந்தத் துணியும் எம்மிடம் இல்லை.

அங்கே நிலவும் குளிரில் குருதேவர் அருளிக் கொடுத்த உணர்வுகளை யாம் நுகர்ந்து கொண்டிருந்ததால் எம் உடலில் வெப்பம் உருவாகி… குளிர் எதுவும் தாக்காத வண்ணம் அங்கே நடந்து சென்று கொண்டிருந்தோம்.

அந்த பனிமலைப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது யாம் ஒரு இடத்தைக் கடந்திருப்போம். சற்று நேரத்தில் கால் வைத்து நடந்த பகுதி இடிந்து தகர்ந்து விழுந்தது. தகர்ந்து விழுந்த இடத்தைப் பார்த்தால் பெரிய பாதாளமே அங்கே இருந்தது.

அதைப் பார்த்தவுடன் எமது சிந்தனைகள் எங்கே சென்றது…?
1.எமது குழந்தைகள் எமது குடும்பம் எவ்வாறு இருக்கின்றதோ…?
2.யாம் மீண்டும் அவர்களைச் சந்திக்க முடியுமா…? அல்லது இங்கேயே விழுந்து இறந்துவிடுவோமா…?
3.இந்த பாதாளத்தில் விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்…? என்றுதான் எமது சிந்தனைகள் சென்றன.

உடல் மீது தான் ஆசை தோன்றியது. குரு கொடுத்த உணர்வுகளை அந்த நேரத்தில் மறந்துவிட்டோம்.

இதனால் எமது உடலில் குளிரெடுத்தது. இதயம் “பட…பட…” எனத் துடித்து இரைச்சலாகி… சற்று நேரத்தில் “இறந்தே விடுவோம்”என்ற நிலை எம்மிடத்தில் உருவானது.

அப்பொழுது குருதேவர் எமக்கு முன்னால் உதயமானர்.

மனமே இனியாகிலும் மயங்காதே,
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே.
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ…?
மின்னலைப் போல மறைவதைப் பாராய்.

நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ…?
நிலையில்லா இவ்வுலகம் உனக்குச் சதமா…?
மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே…!
என்ற இந்த பாடலைப் பாடினார்.

சோதனையான சமயத்தில் “இப்படி ஆகின்றதே”என்று வருந்தி “உன் குழந்தைகளையும் மற்றவர்களையும் எண்ணிப் படபடப்பாகி மயங்குகின்றாய்.

ஆனால் சற்று நேரத்திற்கு முன் உனது உயிர் போயிருந்தால் இந்தப் பொன்னடி பொருளை எங்கே காணப் போகின்றாய்…? என்று கேட்கிறார் குருதேவர்.

ஆகவே
1.ஆசையின் உணர்வை விடுத்து அருள் ஒளியின் உணர்வை எடுத்து
2.என் குழந்தைகள் அருள் ஞானம் பெற வேண்டும்… இருளை அகற்றி மெய்ப் பொருள் காண வேண்டும்
3.அவர்கள் வாழ்க்கை நலம் பெற வேண்டும் என்ற உணர்வினை எடுத்தால் அவர்களை வாழ வைக்கலாம்.

நமக்குள் அருள் உணர்வைக் காக்கலாம் என்றார் குருதேவர்.

1.மனிதருக்கு “வாழ வைக்க வேண்டும்” என்ற எண்ணம்தான் வரவேண்டுமே தவிர
2.“இப்படி ஆகி விட்டதே”என்று எண்ணக் கூடாது.

ஏனென்றால் இப்படி ஆகி விட்டதே…! என்று வேதனையை எடுக்கப்படும் பொழுதுதான் விஷத்தின் தன்மையைக் கவர நேருகின்றது. அதனால் மனிதரின் செயலாக்கத்தின் தன்மை குறைகின்றது.

இது போன்று யாம் செல்லும் பாதையில் விபத்துக்கள் நேரிடும் பொழுதெல்லாம் எமக்குக் குடும்பத்தின் ஞாபகம் வரும். அப்பொழுது இதிலிருந்து எப்படி காத்துக் கொள்வது…? என்று நினைவுபடுத்திக் கொண்டே இருப்பார் குருநாதர்.

ஆகவே குரு காண்பித்த அருள் வழியில்
1.நாம் அனைவரும் “நம் உடல் நமக்கு சொந்தமில்லை…!” என்று உணர வேண்டும்.
2.உயிருடன் ஒன்றும் உணர்வை அருள் ஒளியின் உணர்வாக இணைத்துச் சொந்தமாக்குதல் வேண்டும்
3.மகரிஷிகளின் அருளைப் பற்றுடன் பற்றுதல் வேண்டும்.
4.நமது வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றுதல் வேண்டும்.

ஒவ்வொரு சமயத்திலும் மனிதர் தாம் சந்தர்ப்பத்தால் அறியாது வரும் தீமைகளில் சிக்கிக் கொள்வதை உணர்த்தி “மனிதர் தாம் எவ்வாறு தீமைகளிலிருந்து மீள்வது…?” எனும் நிலையை அனுபவரீதியாக எமக்கு உணர்த்தினார் குருநாதர்.

இன்னல்களைச் சந்திக்கும் போது நாம் எதை எண்ண வேண்டும்…?

இன்னல்களைச் சந்திக்கும் போது நாம் எதை எண்ண வேண்டும்…?

 

நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ…! இந்த நிலையில்லா உலகத்தில் “எதை நீ சதம் என்று எண்ணுகின்றாய்…?” என்று இமயமலையில் பனிப் பாறைகளுக்கு மத்தியில் வைத்து குருநாதர் எம்மைக் கேட்கின்றார்.

குருநாதர் காட்டிய வழியில் நான் போகும் இடங்களில்… துயரமான நிலைகளைச் சந்திக்கும் போதெல்லாம் இத்தகைய உணர்வை எனக்குள் ஊட்டிக் கொண்டே வந்தார்.

ஆகவே நினைவு கொள்ளுங்கள்…! இந்த வாழ்க்கையில் நாம் தேடும் செல்வம் நமக்கு நிலையானதா…? இந்த உடல் நமக்கு நிலையானதா…? உடலில் இருக்கும் பொழுது எதைப் பற்ற வேண்டும்…?

1.என்றும் ஏகாந்த நிலை பெற்ற அருள் மகரிஷியின் ஒளியை நான் பெற வேண்டும்
2.என் மனைவி அதைப் பெற வேண்டும் அருள் ஒளி பெற வேண்டும்
3.எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும் இரு உயிரும் ஒன்றிட வேண்டும்
4.எங்கள் பார்வை இருளை அகற்றிடும் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

துன்பங்களைச் சந்திக்கும் நேரத்தில் உன் மனைவி மக்களை நீ எண்ணுகின்றாய். ஆகவே மனைவிக்கு எது வேண்டும்…?

1.மனைவிக்கு அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.என்னுடன் இணைந்த நிலையில் அருள் வழியில் வர வேண்டும்
3.மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்… அருள் ஒளி பெறும் தகுதி பெற வேண்டும்
4.மனைவியின் பார்வை குழந்தைகளைக் காக்கும் அருள் சக்தியாக வளர வேண்டும்.
5.அருள் ஞானம் பெற வேண்டும் என்று இந்த அருள் உணர்வைப் பாய்ச்சும் நிலை தான் வர வேண்டும்.

அதற்குப் பதிலாகத் துன்ப்ப்படும் நேரத்தில் வேதனையான உணர்வை நுகர்ந்து மனைவி மக்களை நினைத்தால் வேதனைப்படும் உணர்வே வளருகின்றது
1.உன் சிந்தனை சிதறும் தன்மை வருகின்றது
2.உயிர் வெளி சென்று விட்டால் உடல் இல்லை. அப்போது நீ எதை நினைக்கப் போகின்றாய்…?

உடலுக்குள் விளைய வைத்த வேதனையான உணர்வு கொண்டு பாசத்தால் உன் பையனை நீ எண்ணினால் அவன் உடலிலேதான் புக முடியும். வேதனை என்ற உணர்வை நீ எடுக்கும் பொழுது அங்கே நோயைத்தான் உருவாக்க முடியும்.

எண்ணத்தின் தன்மை கொண்டு அவனுக்குள் வேதனை உருவாக்கப்படும் பொழுது “விஷம் என்ற உணர்வுகள்…” உனக்குள்ளும் அந்த உடலிலிருந்து அவனால் நீ மீண்டும் பெறுகின்றாய்.

உன்னால் அவன் உடல் பெற்றான். உன்னுடைய நினைவுகள் அவனுக்குள் வளரப்படும் பொழுது அவன் நினைவு உனக்குள் வளர்கின்றது. ஆனால் நீ அவனுள் செல்கின்றாய்… இந்த உணர்வின் தன்மை அவனை அழிக்கிறது.

அதாவது… உன் குழந்தைக்குள்ளும் அந்த வேதனை உருவாக்கப்பட்டு அவனையும் காக்க முடியாத நிலையில் நீ எமலோகத்துக்குத்தான் அழைத்துச் செல்ல முடியும். இந்த உடலின் தன்மையை (அவனையும்) அழிக்கின்றது.

அவனை விட்டு வந்தபின் நீ எந்த வேதனைப்பட்டாயோ வேதனைப்படும் உணர்வின் தன்மை கொண்டு உடலை விட்டபின் உன் எண்ணமே எமனாகின்றது… எமலோகம் செல்கின்றாய்.

மனிதன் என்ற சிந்தனை இல்லாதபடி கொன்று குவிக்கும் அசுர உணர்வு கொண்ட பாம்பாகவோ தேளாகவோ புலியாகவோ நீ பிறக்கப் போகின்றாயா…? உனக்கு எது தேவை…? என்ற நிலையில்
1.அங்கே இமயமலையில் வைத்து எனக்கு உணர்த்துகின்றார் நமது குருநாதர்.
2.எதை…?
3.“துன்பத்திலும் இன்பம்” எவ்வாறு காண வேண்டும்…? என்று.

ஆகவே… அருள் ஒளி என்ற உணர்வினை உனக்குள் பெறு, துன்பம் என்ற நிலைகள் மறைந்து பேரின்பம் என்ற நிலை பெற்ற அருள் மகரிஷியின் உணர்வை உனக்குள் கவர்ந்து கொள்.

நீ எண்ணியது எல்லாம் இந்தப் பரலோகத்தில்தான் உண்டு. அதை நீ சிவலோகமாக மாற்று. சிவலோகத்திற்குள் அந்த உணர்வின் தன்மை வரும் பொழுது இந்திரலோகமாக மாறுகின்றது.

1.அப்போது ஏகாந்த நிலை என்ற பேரானந்த நிலை பெறும் “பரமபதம்” அதாவது அழியா ஒளிச் சரீரம் நீ பெறுவாய்.
2.அருள் ஒளி பெறுவாய்… அருள் ஆனந்தம் பெறுவாய்… அனைவரும் அதைப் பெற வேண்டும் என்று நீ ஏங்கு.

அந்த உணர்வுகள் உனக்குள் கலந்திருக்கும் மற்றவர்களின் உணர்வுகளுடன் இணைகின்றது. ஒளியின் தன்மையாக மாறுகின்றது. பகைமையற்ற உணர்வுகளாக மாற்றுகின்றது. அருள் ஒளி என்ற உணர்வைக் கூட்டுகின்றது.

உனக்குள் இருக்கும் அணுக்களில் அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்கும் போது அதுவும் ஒளி பெறுகிறது. பகைமையற்ற நிலை வருகிறது.

இந்திரலோகத்தில் வரும் போது ஏகாந்த நிலை என்ற எதுவுமே வெறுப்பில்லாத நிலையில் சொர்க்கலோகத்தை நீ உருவாக்குகின்றாய். பரலோகத்திலிருந்து இந்த உடலின் சிவலோகத்திற்கு மாற்றி இந்திரலோகமாக இருந்து சொர்க்கலோகமாக மாற்ற வேண்டும்.

ஆனால் வேதனை வெறுப்பு என்ற நிலைகள் வரப்படும் பொழுது நரகலோகத்தைத்தான் உருவாக்குகின்றாய்.
1.மீண்டும் வேதனைப்படும் உடலை உருவாக்குகின்றாயா…?
2.அல்லது அருள் ஒளி என்ற உணர்வை உனக்குள் உருவாக்குகின்றாயா…?

பேரொளி பெற்றுப் பேரானந்தம் பெற்று ஏகாந்தமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகிக் கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றென இணைந்து அருள் ஒளி பெற்று, இரு உயிரும் ஒன்றெனெ இணைந்து ஒளியின் சரீரமாக நிலை கொண்டு வாழ்ந்து வருகின்றானே… “அந்த ஏகாந்த நிலையை நீ பெறுகிறாயா…?” என்று வினாக்களை எழுப்புகின்றார் குருநாதர்.

உனது வாழ்க்கையில், நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய். ஆகவே நீ அந்த துருவ மகரிஷியின் அருள் பெற வேண்டும். உன் குடும்பம் நலம் பெற வேண்டும். உலகம் நலம் பெற வேண்டும் என்ற அந்த உணர்வை நீ எடுத்தால் நீ நுகர்ந்த உணர்வு உனக்குள் நலம் பெறும் சக்தியாக மாறுகின்றது.

1.அந்த அருள் ஒளி பெறுவாய் பேரின்பம் பெறுவாய் பெருவாழ்வு வாழ்வாய்
2.பார்ப்போர் அனைவரும் பேரின்பம் பெறவும் பெரு வாழ்வு வாழச் செய்யும் “அந்த அருளை நீ பெறுவாய்” என்று
3.நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு ஆசி கொடுத்தார்.

நமது குரு அருளை நீங்கள் அனைவரும் பெற்று உங்கள் வாழ்க்கையில் வரும் இருளை அகற்றும் அருள் சக்தி நீங்கள் பெற்றுப் பேரின்ப வாழ்வென்ற நிலைகள் நுகர்ந்து சிவலோகத்திற்குள் இந்திரலோகமாக மாற்றிச் சொர்க்கலோகத்தை உருவாக்க வேண்டும்.

பேரின்பம் என்ற அழியா ஒளி சரீரம் நீங்கள் அனைவரும் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று யாம் பிரார்த்திக்கின்றோம்.