முருகேஸ்வர போகநாதர்

முருகேஸ்வர போகநாதர்

 

நம் வழக்கத்திலுள்ள சொல் நாமங்கள் நம்மால் வழக்கத்திற்குப் பேசுவதற்காக நம் முன்னோர்களின் ஒவ்வோர் இன வழிப்படி பல நாமச் சொற்களை இவ்வுலகினிலே பல பாகங்களில் பல நிலைகளில் அவரவர்கள் வந்த வழிப்படி பேசி வருகின்றோம்.

ஆண்டவனின் நாமத்தையே பல நாமங்கள் சூட்டி… அவரவர் வழக்கப்படி வேண்டுகின்றோம்.

“முருகா…” என்ற ஜெபம்
1.போகரினால் இவ் ஆறு வகைக் குணங்களை நாம் போற்றி வணங்கிட
2.இக்குணங்களையே முருகனாக்கி… அம் முருகா என்ற நாமகரணம் சூட்டியவர் போகர் தான்.
3.முருகா என்னும் நாமகரணம் சூட்டிக் கொண்ட தனித்த ஆண்டவன் ஒன்றில்லை.

அழியா ஒளி உடல் கொண்ட ஆத்மா நிலை பெற்ற அப்போகர் தன் சக்தியுடன்… இம் முருகா என்ற ஜெபம் கொண்ட நிலைக்கு… அவர் சக்தியில் அவர் உடலிலேயே… அவர் ஆத்மாவுடன்… அவர் உடலிலுள்ள அவர் ஈர்த்துச் சேமித்த முருகா என்ற சக்தியின் நிலையினை ஒளியாகத் தன்னுள் ஈர்த்துக் கொண்டே இன்றும் உள்ளார்.

அந்த நிலையில்…
1.முருகா…! என்ற சொல் எவ்வுள்ளங்களில் இருந்தெல்லாம் எழுகின்றதோ
2.அந்தச் சக்தி போகரின் சக்தியுடன் நினைத்த மாத்திரத்தில் வந்து மோதி ஒளியாக…
3.ஜெபிப்பவரின் உள்ளத்திற்கெல்லாம் போகரின் நிலையிலிருந்து அச்சக்திதனை வழங்கி வருகின்றார்.

அழியா உடல் பெற்ற ஆத்ம சக்தியுடன் தனக்குகந்த நாமத்தையே ஜெபமாக்கி அஜ்ஜெப நாமத்தை எண்ணுபவரின் சக்தியுடன் இன்றும் இந்நிலையில் கலக்கவிட்டு… எண்ணுபவரின் ஆத்மாவிற்குகந்த அவர்களின் நிலைக்கெல்லாம் “தான் பெற்ற சக்தியைப் பகிர்ந்து அளித்து வருகின்றார்…” அம் முருக நாமம் கொண்ட “முருகேஸ்வர போகநாதர்…!”

போகரின் சக்தி அழியா சக்தி. இன்றும் அச்சக்தியினை பலவாக ஈர்த்து அருளிக் கொண்டே உள்ளார். அவர் எடுத்த சக்திப்படி இன்றும் மனிதருள் மனிதராகச் சில நிலைகளில் வந்து செல்கின்றார்.

எந்நிலையில் என்று உணர்ந்தீரா…?

அப்போகநாதரின் உடல் கூடு எந்நிலைக்கும் அவர் ஜெபம் கொண்டு இன்றுள்ள அப்பழனிக் குகை வாசஸ்தலத்தை விட்டு வெளிப்படுவதில்லை.

ஆனால் முருகராகவும் மற்றும் பல நிலைகளிலும் மக்களுடன் மக்களாக அவர்களின் இன்னலைத் தீர்க்க வந்து செல்கின்றார்.

போகரின் ஆத்மாவுடன் அவர் சேமித்த சக்தி சுற்றிக் கொண்டுள்ள நிலையில் ஆத்மாவுடன் கூடிய அவரின் சக்தி நிலையை… உடல் கூட்டிலிருந்து பிரித்துக் காண்பவருக்கு… அவ்வாவி சக்தியை… இக்காற்றிலிருந்தே பல சக்திகளை ஈர்த்து ஆத்மாவுடன் கூடிய அவரின் சக்தியைப் பிம்பமாக்கி வந்து செல்கின்றார்.

அதாவது ஆவியான அமில சக்தியை எந்நிலையிலும் விரிந்து கூடும் நிலைப்படுத்தும் நிலையைப் பெற்றுள்ளார் முருக நாமம் கொண்ட நம் போகர்.

ஒரே நாளில் பல இடங்களில் அவரின் பிம்பத்தை அவரால் காணச் செய்திடவும் முடிந்திடும். அம் முருக நாமத்துடன் பல செயல்களைச் செயலாக்குகின்றார் நம் போகர்…!

ஆவியான அமில சக்திகள்தான் அனைத்து சக்திகளுமே. இவ்வுடலும் ஆவியான பிம்பம்தான். இப்பிம்பத்திலிருந்து நம் ஆத்மா பிரிந்து சென்றாலும்… நம் ஆத்மாவுடன்… நம் உடலுடன் கூடிய ஆவியான நமக்குகந்த அமில சத்துக்கள் நம்முடனே… நம் ஆத்மாவுடன் ஈர்த்துத்தான் ஆவி உலகில் நாமும் இருந்திட முடியும்.

1.இவ்வுலக சக்தியையே நம் சக்தியாக்கி நாமும் நிலைத்து வாழ்ந்திட முடியும்
2.இன்று நாம் வாழும் வாழ்க்கை நம் வாழ்க்கையல்ல
3.நம் வாழ்க்கை என்பது இவ்வுடலுடன் கூடி வாழ்ந்திடும் வாழ் நாட்கள் மட்டுமல்ல
4.இவ்வுடலுடன் வாழ்ந்திடும் வாழ்க்கை நமது அரும்பெரும் பாக்கியத்தை நாடுவதற்கு நமக்குக் கிடைத்த சந்தர்ப்பம்தான்.

ஒவ்வொருவரும் இவற்றை உணர்ந்து வாழ்ந்திடும் நாளில் பல நிலைகளுக்கு எண்ணத்தைச் செலுத்தி…
1.வாழ் நாளைத் தன்னிச்சைக்கு (தன் இஷ்டம் போல்) வாழாமல்
2.இவ்வுலக இன்பத்தைத் துறந்து வாழ்ந்திடல் வேண்டும் என்ற எண்ணத்தை வளரவிடாமல்
3.இவ்வுடலுடன் நாம் இன்று பெறும் நிலைக்குகந்த சக்தியே அழியா சக்தியாக நம்முடன் வரும் சக்தி என்பதனை உணர்ந்து
4.நம் போகநாதரின் சக்தியின் அருளை நாம் ஈர்த்து நல் வழியில் வாழ்ந்திடலாம்.

ரிஷித் தன்மை பெற்றவர்கள் தான் சூரியக் குடும்பங்களை உருவாக்குகின்றனர்

ரிஷித் தன்மை பெற்றவர்கள் தான் சூரியக் குடும்பங்களை உருவாக்குகின்றனர்

 

இயற்கை சக்தியில்…
1.ஆவியாக இருப்பது அணுவாக உயிர் பெற்று
2.அவ் ஆவியிலே உள்ள சக்தியினை உயிரணுவிற்கு ஊட்டமாக்கி
3.அவ்வாவியின் பிம்பமாய் ஜீவ ஆத்மாவிற்கு வந்து
4.ஜீவனாய் மனித பிம்பம் பெற்று பிம்பமாய் வாழ்ந்திட்டு
5.ஆத்மா பிரிந்து பிறகும் அவ்வாத்மாவுடன் ஆவியான சக்தியை ஈர்த்தே
6.இப்படி மாறி மாறி ஆவி உலகம்… பிம்ப ஜீவன் கொண்ட… ஜீவ ஆத்மா வாழ்க்கை வாழ்ந்திடும் உயிரணுக்கள் யாவற்றுக்குமே
7.அனைத்து சக்திகளும் அடைந்திடும் சக்தி (தகுதி) உண்டு.

எவ்வுயிரணு எவ்வழியில் தன் சக்தியினை வளர்த்துக் கொள்கின்றதுவோ அவ்வழியில் சென்றிடலாம்.

ஆனால் தன் சக்தியைத் தான் உணர்ந்திடாமல் இருந்திடும் மனித ஆத்மாக்களாகத்தான் இன்று வாழ்ந்திடும் வாழ்க்கை நிலைகள். சக்தியினைச் சிதறவிட்டு இப்பேராசை நிலையையே வளர்த்துக் கொண்டு வாழ்வதின் வினையினால் வந்ததது தான் இன்றைய வாழ்க்கையின் நெறி முறைகளாக உள்ளன.

பல மகான்கள் இப்பூமியில் அவதரித்து ஆண்டவனாய் இன்றும் அருள் புரிகின்றனர். ஆனால்
1.இன்றைய மனிதர்களோ தன் சக்தியினை வீண் விரயம் செய்து
2.இந்த உடலுடன் கூடிய ஆத்மார்த்த ஆத்மீக நெறி உடைய அன்பு கொண்ட வாழ்க்கைதனை
3.இம்சையிலும் பேராசையிலும்… பல நெறி கெட்ட காமச் சூழ்நிலையிலும்… தன்னடக்கம் இல்லா வாழ்க்கையிலும்
4.குரோதம் விஷமம் இப்படி நமக்குள் பல தீய சக்தியினை வளர விட்டு
5.நல்லொழுக்கம் எற்றிடும் நற்பயன் கொண்ட வாழ்க்கைதனைச் சிதற விட்டு
6.இவ்வாத்மீக நெறி கொண்ட இல்வாழ்க்கைதனை இன்பமுடன் வாழ்ந்திடாமல் வாழ்ந்து என்ன பயன்…?

நம்மைப் போன்ற உயிரணுவாய் உதித்திட்டு உயிர் ஆத்மா கொண்டு ஜீவ ஆத்மாவாகி இஜ்ஜீவ வாழ்க்கைக்கும் வந்து இவ் உலகில் உதித்ததின் உண்மை சக்தியினை உணர்ந்து தன் ஆத்மாவின் சக்தியினால் இவ்வுலக சக்தி அனைத்தையும் எந்நிலையில் பெற்றனர் பல மகான்கள் என்பதனை இப்பாட நிலையில் வெளியிடுகின்றேன்.

பல ரிஷிகள் நம்மைப் போல் வாழ்ந்த வாழ்க்கையில் பல இன்னல்களில் வாழ்ந்துள்ளார்கள். வாழ்க்கைச் சுற்றலில் குடும்பப் பற்றுடன்தான் வாழ்ந்தார்கள்.

அந்நிலையில் இருந்து கொண்டே அவர்கள் எடுத்த ஜெப நிலையால்
1.ஜெப நிலை என்பது… எவ்வெண்ணத்திற்கும் அடிமை ஆகாமல்
2.எவ்வெண்ணத்திற்கு என்பது வாழ்க்கைக்குகந்த நெறிமுறையில் மாற்றம் காணாமல்
3.வரும் இன்னலுக்குச் சோர்வு நிலைப்பட்டோ சந்தோஷ நிலைக்கு அடிமைப்பட்டோ
4.பாசத்திற்குத் தன்னைக் கட்டுபடுத்தியோ வாழ்ந்திடாமல்
5.இவ்வெண்ண சக்தியினை வாழும் காலத்திலேயே அனைத்து சக்திகளையும் தன்னுள் ஈர்க்கும் பக்குவ நிலை பெற்று
6.ஆத்மீக நெறிக்குகந்த ஞான வழிக்கு வித்திட்ட வழியில் வந்தவர்கள் தான் அனைத்து மகான்களும்.

வாழ்க்கை நிலையில் ஞான நிலை பெற்ற முதல் நிலைக்கு வந்தவர்கள்… அந்நிலையின் தொடர் நிலையை வளர்த்தே சித்து நிலை பெற்றிடலாம்.

சித்து நிலை பெற்றவர்கள் மகரிஷியாய் சப்தரிஷியாய் வந்திடலாம்.

இவ்வழியில் வந்தே தன் உயிரணுவாய் உதித்து ஆத்ம நிலைக்கு வந்தவர்கள் பெற்ற சக்தியினால் எவ் உலகில் உதித்தனரோ அவ் உலகில் இருந்து எவ் உலகிற்கும் (மற்ற சூரியக் குடும்பங்களுக்கு) சென்றிடும் நிலை பெற்றுள்ளனர்.

மேலும் மற்ற சூரியக் குடும்ப மண்டலங்களின் நிலையிலிருந்து பல சக்தியினைத் தன் உயிராத்மாவுடன் சேமித்து… தனக்குகந்த பல சக்தியினை ஈர்த்துத் தன்னுள்ளே சுழலச் செய்து… தனி ஒரு மண்டலமாக உருப்பெறச் செய்தும்… அந்நிலையிலிருந்து தனி ஓர் உலகமாகத் தன் மண்டலத்தினுள்ள பல ஜீவன்களின் வளர்ச்சியைத் தானே வளரச் செய்தும் மண்டலங்களாக உருப் பெறுகின்றனர்.

1.இவ்வியற்கையின் சக்தியில் எண்ணில் அடங்காப் பல உண்மைகள் உள்ளன.
2.உயிரணுவாய் நம்மைப் போல் உதித்திட்டவைதான் இன்றுள்ள பல மண்டலங்கள்.

இந்நிலைக்கு வருவதற்கு உயிரணுவாய் இருந்து… உயிர் ஆத்மா கொண்ட செயலாற்றும் நிலைபெற்ற இம் மனித உடலினால் மட்டும்தான் முடிந்திடும்.

இந்நிலையில் இருந்து வந்தவர்கள் தான் நாம் சொல்லும் பல பல ரிஷிகளும்…!

மனித உணர்விற்கு எட்டாத பல கோடி நிலைகள்

மனித உணர்விற்கு எட்டாத பல கோடி நிலைகள்

 

எறும்பிற்கும் உணர்வுண்டு… சிறு மண் புழுவிற்கும் உணர்வுண்டு…! இஜ் ஜீவத் துடிப்பு நிலையுள்ள அனைத்து ஜீவராசிகளுக்குமே இவ்வுணர்வு நிலையுண்டு.

ஆனால் தாவர வர்க்கங்களுக்கு இஜ் ஜீவத் துடிப்பு நிலை இல்லாததினால் தாவரங்களுக்கு உணரும் தன்மை இல்லை.

சில வகைத் தாவரங்கள் மனிதனின் உடல் உறுப்புகள் பட்டவுடனே சுருங்கும் தன்மை பெறுகின்றன. உணர்வில்லாமல் அவை எப்படிச் சுருங்குகின்றன என்று எண்ணுவீர்…?

இவ்வுணரும் சக்தி பெற்ற ஜீவஜெந்துக்கள் அதற்குகந்த அவை ஈர்த்து வளர்ந்த அமிலத் தன்மைக்குகந்த காந்த சக்தி நிலையுண்டு.

இச்சக்தியினால் அத்தாவரங்களின் மேல் இச்ஜீவஜெந்துவின் சக்தி நிலை பட்டவுடன்… அந்தத் தாவரம் எந்த நிலைகொண்ட சக்தி பெற்று எந்த அமிலத்தை ஈர்த்து வளர்ந்ததோ… அந்நிலைக்கும் இந்நிலைக்கும் எதிருண்ட நிலை அடைவதினால்… “மற்ற ஜீவ ஜெந்துவின் உறுப்புகள் பட்டவுடன் அது சுருங்கும் நிலைக்கு வருகின்றது…”

அஜ் ஜீவ ஜெந்துவின் வெப்ப நிலையும் அத்தாவரத்தின் வெப்ப நிலையும் மாறுபட்ட நிலையில் உள்ளதினாலும் இந்நிலை பெறுகிறது.

சில வகைத் தாவரங்கள் சில நிலை கொண்ட மனிதரின் தீய எண்ணத்தையே ஈர்த்து நச்சு நிலையில் வாழ்பவரின் உஷ்ண நிலை அவர் அந்நிலையில் எடுக்கும் சுவாச நிலை அந்தத் தாவரங்களின் மேல் பட்டாலே அத்தாவரம் கருகும் நிலை பெறுகிறது.

இன்னும் சிலரின் நிலையில் அவர்கள் விதை விதைத்தால் அவ்விதை வளர்ந்திடாது. அவ்விதையே இவர் கையில் ஏந்தி வைத்துள்ள நிலையிலேயே அவர் எடுக்கும் சுவாச நிலை கொண்டு அவர்களின் அங்க சக்தியைக் கொண்டு அவ்விதைக்கு வளரும் சக்தியற்றுப் போகிறது. அந்நிலையில் அவர் விதைக்கும் விதையும் வளர்வதில்லை.

1.சிலரின் சுவாசத்தினால் இவ்வுலக சக்தியையே சக்தியாகக் காணும் நல் நிலை உள்ளது
2.சிலரின் சுவாசத்தினால் அவர்களின் எண்ணத்தின் நிலையினாலேயே
3.எந்த நிலைக்குச் சென்றிட்டாலும் சோர்ந்த நிலை பெறுகின்றனர்.

சக்தி நிலை பொதுவானதே…! இவ்வெண்ண நிலையினால்தான் மாறுபட்ட நிலைகளெல்லாம்…!

தாவரங்களின் நிலைக்கு இவ்வுணரும் நிலையும் எண்ண நிலையுமில்லை. உயிரணுவாய் ஒரே நிலையில் சக்தியை ஈர்த்து எந்நிலை கொண்ட அமில சக்தியை ஈர்த்து வளர்த்தனவோ அந்நிலைக்கொப்பத்தான் அவற்றில் விளையும் பூவும் காயும் கனியும் தானிய வகைகளும் இருக்கும்.

தாவர வர்க்கங்களை நாம் அதில் வளரும் பூவையும் காய்கனியையும் சில கீரைகளின் மேல் நிலையில் உள்ள கொழுந்துகளையும் நாம் பறித்து எடுக்கும் பொழுது அதன் நிலை மென்மேலும் வளரத்தான் செய்கிறது.

அவற்றுக்கு ஜீவத் துடிப்பும் உணரும் தன்மையும் இல்லாமல் ஒரு நிலை கொண்ட சக்தியை ஈர்த்து வளரப் பெற்றதினால் ஒவ்வொன்றும் அதனதன் குறிப்பிட்ட கால நிலைப்படி அதன் பயன் நிலை கொண்டு சக்தியளித்து நமக்குப் பயன் தருகின்றது.

1.இந்த இயற்கையின் சக்தியில் பல நிலை கொண்ட ஒவ்வொன்றிற்கும் மாறுபட்ட நிலையில்
2.நம் எண்ணத்திற்கும் நம் உணர்விற்கும் எட்டாத பல கோடி நிலைகள் உள்ளன.

சில தாவரங்கள் பல நாட்கள் வளர்ந்தாலும் பலன் தராததை வைத்தும் இன்னும் சில வகைத் தாவரங்களுக்கு ஒன்றுக்கெதிரில் அதே நிலைகொண்ட (ஜாதி) அதன் நிலை பெற்ற தாவரம் இருந்திட்டால்தான் இவை இரண்டுமே பலனளிக்கும்.

தாவரங்களில் சில பலன் தராத நிலை பெற்றதை ஆண் தாவரம் என்கின்றனர். தாவரங்களுக்கு இவ் ஆண் பெண் என்ற நிலையில்லை. உயிரணுவாய் இப்பூமியில் தோன்றிடும் எவ்வுயிரணுக்களுக்குமே இவ் ஆண் பெண் நிலையில்லை.

உயிரணுவாய் இருந்து ஜீவ ஆத்மாவிற்கு வந்த பிறகுதான் இவ் ஆண் பெண் நிலையெல்லாம். ஆவி உலகத்திலும் இவ் ஆண் பெண் நிலையில்லை.

இவ்வாவி உலகிலிருந்து ஜெனனத்திற்கு வருபவர்களின் ஆவி ஆத்மாவின் எண்ணப்படிதான் இஜ்ஜீவ ஆத்மாவிற்கு ஆணாகவும் பெண்ணாகவும் வந்து பிறப்பது எல்லாம்.

1.அவரவர்கள் எண்ண நிலைக்கும் உணர்வு நிலைக்கும் தக்கப்படிதான்
2.அவ்வாவி உலக ஆத்மா இஜ் ஜீவ உடலுக்கு வருகின்றது.

முதல் பாதம் இரண்டாம் பாதம்

முதல் பாதம் இரண்டாம் பாதம்

 

கால நிலை எப்பொழுதும் ஒன்று போல் இருப்பதில்லை. காலை பகல் இரவு ஒவ்வொரு தன்மைக்கு உகந்த உஷ்ண நிலையும் காற்று மழை இடி இவற்றைப் போன்ற சில நிலைகளும் மாறி மாறித்தான் இப்பூமிக்கும் அதன் சக்தி நிலை கிடைக்கின்றது.

இப்பூமியில் வாழும் நாமும் மற்ற ஜீவராசிகளும் இக்கால நிலையின் மாற்றத்திலிருந்து நம்மைக் காப்பதற்கு அவரவர்களின் நிலைக்குகந்த காப்பிடம் அமைத்துக் கொள்கின்றோம்.

ஜீவ உடல் பெற்ற ஜீவ பிம்பம் கொண்ட ஆத்மாக்கள் வெயில் மழை காற்று பனி குளிர் இவற்றில் இருந்து ஜீவ உடலைக் காப்பதற்காக இருப்பிடம் அமைத்துக் கொள்கின்றோம்.

ஆனால் ஜீவனுடன் வாழ்ந்து ஜீவன் விட்டுப் பிரிந்த ஆவி நிலையில் வாழ்ந்திடும் ஆத்மாக்களின் நிலைக்கு… அவ்வாவியுடன் ஆவியாகத் தன் சக்தியைத் தனியாக தன் ஆத்மாவுடனே கலந்து படர்ந்து வான மண்டலத்தில் சுற்றிக் கொண்டுள்ள இவ்வாத்மாக்களுக்கு அவற்றின் சக்தியுடன் கலந்து விட்டதினால் இந்நிலை தாக்கப்படுவதில்லை.

இவற்றில் சில ஆவி உலக ஆத்மாக்கள் வான மண்டலத்தில் சுற்றிக் கொண்டுள்ள நிலையில்…
1.அவ்வாத்மாவுடன் கூடிய ஆவி சக்தியுடன்..
2.இக்காற்றில் கலந்துள்ள அவற்றின் சக்திக்கு ஒத்த சக்தி அவற்றுடன் சேரும் பொழுது அதன் கனம் அதிகரிப்பதனால்
3.அதி மழை வரும் பொழுது இம்மழையின் தன்மையினால் கனமான ஆவி நிலை கொண்ட சக்தியை ஈர்த்த ஆத்மா
4.இப்பூமியின் மேல் மழை வரும் காலங்களில் வந்து படர்கின்றது.
5.அந்த நிலையில் அச்சக்தி நிலை கொண்ட ஆத்மாவே சில புதிய தாவரவர்க்கமாக
6.நச்சுத் தன்மை வாய்ந்த தாவர இனமாக வளர்கின்றன.

இவ்வுடலை விட்டு எந்த எந்த எண்ணம் கொண்ட நிலையில் ஆவி பிரிந்ததோ… அந்த அந்த நிலை கொண்ட எண்ணமுடன்தான் அனைத்து ஆவிகளுமே சுற்றிக் கொண்டுள்ளன.

தன் எண்ண நிலை கொண்டே சுற்றிக் கொண்டுள்ள ஆவிகளின் நிலை… அவரவர்கள் உடலில் வாழ்ந்த நாட்களில் ஈர்த்து வெளியிட்ட சுவாச நிலைப்படி ஆவி உலகிற்குச் சென்றிட்டாலும்… வாழ்ந்த நாட்களில் அவர்களின் குண நிலைப்படி உள்ள எண்ணத்தைக் கொண்டே ஆவி உலகினிலும் அவர்களின் எண்ணம் செயல்படுவதினால்… இந்நிலையை வைத்தே
1.அவர் முதல் பாதத்தில் உள்ளார் இரண்டாம் பாதத்தில் உள்ளார் என்று
2.இப்படிப் பல பாத நிலைகளை வரிசைப்படுத்தி… ஒவ்வொரு பாதமாக மேல் நிலைக்கு சென்று
3.அச்சிவனிடம் ஐக்கியப்படுவதாகச் சொல்கின்றனர்.

இப்பாதம் என்னும் நிலையென்ன…?

வெறியுணர்வுடன் செல்லும் ஆத்மாக்கள் அவ்வெறி உணர்வுடனேதான் ஆவி உலகில் இருந்தும் மற்ற உடல்களில் ஏறியோ மற்ற எண்ணங்களுடன் கலந்தோ இன்று நாம் பேய் பிசாசு என்று செப்பிடும் நிலையில் மிகவும் கீழ் நிலையான எண்ணத்துடனே தான் பெற்ற சக்தியைச் செயலாக்கியும் சுற்றிக் கொண்டுள்ளன.

சலிப்புடன் செல்லும் ஆத்மாக்கள்… அச்சலிப்பு நிலை கொண்டே பெரும் சோர்வுடனே ஆவி உலகிலும் சஞ்சரித்துக் கொண்டுள்ளன சில ஆத்மாக்கள்.

குடும்பப் பற்றுக் கொண்ட குடும்ப ஆசையுடன் செல்லும் ஆத்மாக்கள்… அக்குடும்பத்துடனே அக்குடும்பத்தைக் காக்கும் நிலையிலேயே சுற்றிக் கொண்டுள்ளன.

தெய்வ பக்தியுடன் தன் எண்ணம் அனைத்தையும் பக்தி கொண்ட நிலையிலேயே செல்லும் ஆத்மாக்கள்… கோவில்கள் உள்ள இடத்திற்குச் செல்வோரின் எண்ணத்திற்கெல்லாம் ஆவி நிலையில் இருந்து கொண்டு… அப்பூஜை நிலைக்கே செல்பவரின் எண்ணத்தையும் செயலாக்கித் தானும் பூஜித்தே தன் எண்ணத்தை கலக்கவிட்டு வாழ்கின்றன சில ஆத்மாக்கள்.

இந்நிலையைத்தான்
1.எந்தெந்த எண்ணம் கொண்டு ஆவி பிரிந்து ஆத்மா செல்கின்றதோ அந்தந்த நிலையை
2.முதல் பாதம் இரண்டாம் பாதம் என்று சூட்சுமமாக நம் முன்னோர் வெளியிட்டதை… இன்று பல நிலைப்படுத்திக் காண்கின்றோம்.

ஆனால் இவ்வெண்ணமுடன் எல்லாம் செல்லும் ஆத்மாக்கள் எவ்வளவு காலங்கள் ஆவி உலகில் சுற்றிக் கொண்டிருந்தாலும்… இப்பூமிக்கு எதாவது ஒரு பிறப்பிற்கு மீண்டும் மீண்டும் வரத்தான் செய்கின்றது.

“ஏழு ஜென்மம் எடுக்கின்றன…” என்று உணர்த்தினேன் முன் பாடங்களில். இவ் ஏழு ஜென்மத்தை மட்டிலும் எவ்வாண்டவன் செயல்படுத்தி அனுப்பினான் என்றுரைப்பீர்.

எவ்வாண்டவனும் செயல்படுத்திடவில்லை…!

இப்பூமியில் உயிர் அணுக்களாய் வந்து மோதும் அனைத்து உயிரணுக்களுமே மனிதப் பிறவியாய் வருவதில்லை.

அப்படியும் இம்மனிதப் பிறவியாய் முதல் பிறவிக்கு வருவதற்கு முன்னே பல நிலைகள் பெற்றுப் பல உயிராத்மாக்கள் மாறி மாறி… உயிரணுவாய் இப்பூமியில் தோன்றிய நாள் தொட்டு அவ்வுயிரணு ஈர்த்துச் சேமித்து கொண்ட சக்தியின் நிலை பெற்றுதான்… பல நிலைகள் மாறி மனிதக் கர்ப்பத்திற்கு இம்மனிதன் வருகின்றான்.

மனிதனாய் உருவம் பெற்று வரும் நிலையிலேயே இவ் ஏழு நிலைகளுக்குகந்த சக்திகளை ஈர்த்துதான் மனித நிலைக்கு வருகின்றான்.

தான் ஈர்த்த சக்தியினை என்றும் அழியாச் சக்தியாக்கி “ஒரே பிறவியிலேயே…” ஆண்டவன் நிலைக்குச் சென்ற அரும்பெரும் ஜோதிகள் பல உள்ளனர்.

தான் பெற்ற சக்தியே “இவ் ஏழு ஜென்மத்திலும் தவறவிட்டு” பல ஈன நிலைகளுக்குச் செல்லும் எண்ணத்தையும் பல ஆத்மாக்கள் ஏற்படுத்திக் கொள்கின்றன.

இன்று வாழும் வாழ்க்கை மட்டும் “எண்ணம் போல் வாழ்வு…” என்பதல்ல.

உயிரணுவாய் இவ்வுலகில் தோன்றிய நாள் தொட்டே இவ்வெண்ண சக்தியின் நிலை கொண்ட ஒவ்வொரு உயிரணுவின் சக்தி நிலையும் ஒவ்வொன்றுக்கும் கிட்டுகின்றது.

1.உயிரணுவாக நிலை பெற்ற நாள் கொண்டே… அதன் தொடராக
2.நாம் நம் நிலையதனைச் செயல் கொண்ட வாழ்க்கையாக வாழ்வதுவே
3.இன்றைய நம் வாழ்க்கை நிலையும்…!

தாவரம் போல் “ஒரே நிலை கொண்ட சுவாசத்தை” நாம் பெற வேண்டும்

தாவரம் போல் “ஒரே நிலை கொண்ட சுவாசத்தை” நாம் பெற வேண்டும்

 

நாம் எடுக்கும் சுவாசம் ஒரே நிலை கொண்டதாக இருந்திடல் வேண்டும். பல எண்ணங்களின் நிலையுடன் எடுக்கும் சுவாசத்தில் நம் நிலைக்கு நாம் பெறும் சக்தி நிலை தடைப்படுகின்றது.

1.வாழ்க்கையில் பல நிலைகள் மோதுண்டாலும்…
2.நம் எண்ண சக்தி அவ்வீசனின் ஜெபம் கொண்டதாக
3.நம்முள்ளே உள்ள ஈசனை வணங்கிய நல் சக்திக்கு வர வேண்டும்.

காட்சி:
இல்லத்தில் தூசி அண்டிக் கொண்டே இருந்திட்டாலும் அதனை நாம் பெருக்கி தூய்மைப்படுத்திக் கொண்டே உள்ளோம்.

அதே போல் ஒரு தீபத்தை ஏற்றும் பொழுது அத்தீபத்தில் உள்ள எண்ணெய் குறையக் குறைய மீண்டும் அவ்வெண்ணையை ஊற்றித் தீபத்தின் திரியைத் தூண்டுகின்றோம்.

அப்படித் தூண்டினால்தான் அத்தீபம் “ஒளி” அளித்துக் கொண்டே இருக்கும்.

1.அதே போல்… நம் எண்ணத்தை எண்ணெயாக்கி
2.நம் ஆத்மாவின் ஜோதி என்னும் ஒளிரும் சக்தியில்
3.இவ் எண்ணமான எண்ணெயை குறையக் குறைய ஊற்றினால்
4.தீபம் சுடர் விட்டுப் பிரகாசிப்பது போல் நம் சக்தியை நாம் உணர்ந்து உணர்வுகள் ஒளியாகும் நல் சக்தி பெற வேண்டும்.

தாவர வர்க்கங்கள் ஒரே நிலை கொண்ட சக்தியை மட்டும் ஈர்த்து எப்படி அச்சக்தியின் நிலை கொண்ட செயலில் வளர்கின்றனவோ அந்த நிலை போல் நம் நிலையும் இருந்திடல் வேண்டும்.

தாவரங்கள் அதன் இயற்கையின் சக்தியில் ஒரே நிலை கொண்டு அவ்வணு வளர்வதினால் ஒரே சக்தியில் ஈர்த்து வளர்கின்றன.

ஆனால் ஜீவ ஆத்மாக்கள் (நாம்) பல நிலைகளை எண்ணும் நிலையில் உள்ளதினால் எந்தெந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ அந்ந்தந்த நிலைக்குகந்த சக்தி நிலையும் நம் உடலுக்குள் செல்கின்றது.

அதிகோப நிலையும் சலிப்பு நிலையும் பயந்த நிலையும் இப்படி ஒவ்வொரு நிலை கொண்ட எண்ணமுடன் நாம் உள்ள நிலையில்
1.நாம் எடுக்கும் சுவாசத்தினால் இக்காற்றில் உள்ள அமிலத்தில் இருந்து அவைகள் நம் உடலில் வந்து குவிந்து
3.நம் உடலின் நிலையை மாறுபடச் செய்கின்றது.

ஆக… நாமாக ஏற்பதுதான் நம் வாழ்க்கை நிலையும் ஆயுள் நிலையும்.

எண்ண சக்தி கொண்டு உயிராத்மாவாய்ப் பிறந்து இவ்வெண்ணமுடனே வளர்ந்து இவ்வெண்ணத்துடனே உடலை விட்டு ஆத்மா பிரிந்தும் இவ்வெண்ணத்துடனே ஆவி உலகில் சஞ்சரித்தும் பிறகு இவ்வெண்ண நிலைகொண்டு தான் இப்பூமிக்கு மறு பிறப்பிற்கும் வருகின்றோம்.

உயிரணுவாய்த் தோன்றிய நாள் தொட்டே அந்த நிலைகொண்டு வளர்ச்சியுற்று எல்லா நிலைகளுமே இந்த எண்ணத்துடன் தான் செயல்படுகின்றன.

எண்ண சக்தியை நாம் பெற்ற மானிடனாக இப்பூமியில் வாழ்ந்திடும் காலத்திலேயே
1.நாம் பிறந்ததின் பயனை உணர்ந்து
2.நம் ஆத்மாதான் நமது தெய்வம்
3.அவ்வாத்மாவிற்கு நாம் ஈர்க்கும் சுவாசம் கொண்டும்… நாம் சேமிக்கும் சக்தி நிலையைக் கொண்டும்…
4.நம் நிலையை நல் நிலை ஆக்கிடும் நிலைக்கு நம்மை நாம் பக்குவப்படுத்தி வாழ்ந்திடும் எண்ணத்தை வழிப்படுத்துதல் வேண்டும்.

உயிரணுவாய் உள்ள தாவரங்களின் நிலையுடன் இயற்கை அன்னை அளித்துள்ள நல்ல கனிகளையும் உண்டிட்டே நம் நிலையில் அவற்றின் சக்தியைக் கொண்டே வளர்த்திடல் வேண்டும்.

உயிரணுவாய் உள்ள இத்தாவரங்களுக்கு மட்டும் ஜீவனில்லையா..? இவ் இயற்கையுடன் பூமியில் உள்ள அனைத்துமே ஜீவனுடன் உள்ள பொழுது மிருகங்கள் பறவைகள் இவற்றின் மாமிசத்தைப் புசித்திடலாகாது. இத்தாவரங்களை நசித்து உண்ணலாமா…? என்றுரைப்பீர்.

தாவரங்கள் இப்பூமியைப் போன்ற நிலை பெற்றவை. உயிர் அணுவாய் ஒரே நிலை கொண்ட சக்தியை ஈர்த்து அச்சக்தியின் நிலையின் தொடர்பு கொண்டு நம்மை வளரச் செய்பவை.
1.இத்தாவரங்கள் உயிரணுவாய் வளரப் பெற்றவைதான்
2.ஆனால் இச்சரீர நிலை கொண்ட ஆத்மாவுடன் கூடிய ஜீவத்துடிப்பு இல்லாதவை.

இஜ்ஜீவனுடன் ஜீவன் பெற்ற அனைத்து ஆத்மாக்களுக்குமே அது ஈர்க்கும் சக்தி கொண்ட உஷ்ண அலைகளின் வெக்கை நிலையும் அதன் உடல் ஆரோக்கிய நிலையைப் பொறுத்துக் கூடிக் குறையும் நிலை அஜ் ஜீவனுடனே அஜ் ஜீவனே ஏற்படுத்திக் கொள்கிறது.

தாவரங்களின் நிலையில் நம் பூமி வெளியிடும் உஷ்ண சக்தியின் நிலைதான் அந்நிலையில் வளர்ந்திடும் தாவரங்களுக்கும் இருந்திடும்.
1.ஜீவத் துடிப்பும் ஜீவ எண்ணமும் தாவரங்களுக்கில்லை
2.தாவரங்களின் சக்தியெல்லாம் ஒரே நிலை கொண்ட சக்தியை ஈர்த்து வளர்ந்திடும் நிலைதான்…!

குரு காணிக்கை

குரு காணிக்கை

 

புள்ளிகளோ கோடோ மையமாக வைத்துத்தான் கோலம் போடுகின்றோம். அவற்றை அழகு பெறவும் செய்கின்றோம்.

அதே போல் நம் ஆத்மாவை நாம் உணர்ந்து… மையமாக அதை வைத்து நம் எண்ணச் சிதறல்களுக்கு அடிமையாக்கிடாமல் வாழ்ந்திட வேண்டும்.

இவ்வுலகிற்கு எந்தெந்த நிலைகளெல்லாம் உள்ளனவோ அதைப் போலவே நம் உயிர் ஆத்மாவிற்கும் அனைத்து சக்திகளும் உள்ளன என்ற உண்மைகளை உணர்ந்திட வேண்டும்.

1.இப்பூமிக்கு ஒரு ஈர்ப்பு சக்தி உண்டு…
2.பூமிக்கு மேலே எந்த ஒரு பொருளைத் தூக்கிப் போட்டாலும் அதை எந்தக் கால அளவில் பூமி தன்னுள் ஈர்த்துக் கொள்கின்றதோ
3.அந்த நிலை போலவே நம் உயிராத்மாவும் ஈர்க்கும் காந்த சக்தி கொண்டதாகத்தான் உள்ளது.

இன்று நாம் நம் செயற்கையில் ஓடவிடும் அனைத்து இயந்திர நிலை கொண்ட சாதனங்களுக்கும்… அதற்குகந்த சக்தி நிலையை வைத்து மற்ற சக்தியை அதனுடன் மோதலிடும் பொழுதுதான்… நாம் அமைக்கும் இயந்திர நிலைகள் செயல்படுகின்றன. அச்சக்தியே செயல்படுகின்றது.

இந்த நிலை போலவே நம்முள் உள்ள இக்காந்த சக்தி கொண்ட அனைத்து சக்தி நிலையையும் ஈர்க்கும் இவ்வாத்மாவைப் பெற்ற நாமும் பிறந்தோம்… வளர்ந்தோம்… வாழ்ந்தோம்… என்று தானாக இயங்கும் இயந்திரமாக இவ்வுடலை எண்ணிடலாகாது.

இவ்வுலகம் எந்தெந்த அமிலங்களை எல்லாம் ஈர்த்து வளர்ந்து வாழ்கின்றதோ அவற்றின் நிலைப்படுத்திய சக்தியனைத்தும் இவ்வுடலுக்கும் உண்டென்பதை உணர்ந்து
1.நம் ஆத்மாவின் உன்னத சக்தியை விரயம் செய்திடாமல்
2.நம் அறிவாற்றலை மென்மேலும் வளர்த்து
3.நம் உடலில் அண்டவிடும் பிணிகளில் இருந்து விடுபட்டு ஆரோக்கிய நிலையில் வாழ்ந்திடவும்
5.கோபம் குரோதம் சலிப்பு இவற்றிலிருந்து விடுபட்டு சாந்தம் அன்பு ஆசை என்ற ஆத்மிக நெறியை அனைவரும் ஈர்த்து
6.நமக்கு வழி காட்டும் ஆண்டவன் நிலைபெற்ற சப்தரிஷிகளின் அருளாசியைப் பெற்றிடல் வேண்டும்.

இந்த வளர்ச்சியில் இவ்வுலக உண்மைகளை மட்டுமல்ல… இவ்வுலகைப் போலுள்ள எல்லா மண்டலங்களின் நிலையையும் அதனதன் ஈர்ப்பு சக்தியையும் அறிந்திடலாம்.

ஒவ்வொரு மண்டலங்களுக்கும் அதற்குகந்த தனித்தன்மை உண்டு ஒன்றை ஒத்த நிலையில் ஒன்றில்லை.

இன்றைய நம் வாழ்க்கை வழி முறைகள் அனைத்துமே பிறர் எழுதிய… பிறர் சொல்லும் நிலையைக் கேட்டு… வாழ்ந்திடும் நிலையில் தான் பெரும்பாலும் உள்ளன.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் ஆத்மீக நெறிக்கே பிற ஏடுகளையும் பழங்காலக் கல்வெட்டுகளையும் ஆராய்ந்து கொண்டுள்ளனர். வாழ்க்கையின் கால நிலையை அதிலே விரயமாக்கி பிறர் நிலை அறிந்து வாழும் எண்ண வேட்கை கொண்டதாகவே உள்ளது.

1.சக்தியின் சக்தி ஆத்மா தான் நாமும் என்றுணர்ந்து
2.நம்முள்ளேயே நம் சக்தியை வளர்த்து
3.அனைத்து நிலையையும் நாமே அறிந்திடும் ஆற்றலையும்… உணரும் சக்தி நிலையையும் நாம் பெற வேண்டும்.

வழி அறிந்திட குரு வேண்டும்… அக்குருவின் சக்திக்கு மேல் சக்தி பெறும் சக்திவானாகச் செல்வதுதான் குருவாக நாம் ஏற்பவருக்கு நாம் அளிக்கும் காணிக்கை…!

ஒவ்வொருவரும் தனக்குகந்த ஈர்ப்பு சக்தியை உணர்ந்து ஒரு நிலை பெற்று… “உயிரோட்டம் கொண்ட சக்தி ஜெபம் பெற்றிடுங்கள்…!”

உயிரணுவாய் மனிதனாகத் தாயின் கர்ப்பத்தில் பிறந்த சிசுக்கள்தான் நாம் ஆண்டவராக வணங்கிடும் பல பல தத்துவ ஞானிகளும்…!

உயிரணுவாய் மனிதனாகத் தாயின் கர்ப்பத்தில் பிறந்த சிசுக்கள்தான் நாம் ஆண்டவராக வணங்கிடும் பல பல தத்துவ ஞானிகளும்…!

 

ஞான மார்க்கத்துக்குச் சென்ற அவ்வாத்மீக வழியின் ஞானத் தொடருக்கு வந்தவர்களும் சித்தர்களும் முனிவர்களும் அவர்கள் தியானம் பெறுவதற்கு மலைக் குகையையும் சோலைகள் அடர்ந்த காட்டுப் பகுதிகளையும் இப்பூமியின் மட்டத்திற்கு மேல் உயர்ந்த இடமான மலைச் சிகரங்களுக்கும் சென்று அமர்ந்து தியானம் புரிவதின் உண்மை நிலையென்ன…?

இன்று நாம் வாழ்ந்திடும் ஊர்களிலும் நகரங்களிலும்… இம்மனித ஜீவாத்மாக்கள் நிறைந்து வாழ்ந்திடும் இடத்திலும்… மற்ற ஆலைகள் உள்ள இடங்களிலும்… அங்குள்ள காற்று…
1.அங்கு வாழும் மக்களின் அவர்கள் ஈர்த்து வெளியிட்ட எண்ண நிலை கொண்ட சுவாசமாகவும்
2.ஆலைகளில் இருந்து வெளிப்படும் கழிவுப் புகைகளாகவும்
3.காற்றுடனே அந்நிலை கொண்ட அவ்விடத்திலேயே சுற்றிக் கொண்டுள்ளன.

அந்நிலையில் அமர்ந்து தியானம் பெறும் பொழுது அவர்களின் எண்ணமுடன் இவ்வெண்ணத்தின் அலைகள் மோதும் பொழுது அவர்கள் ஈர்க்கும் சக்தி நிலையில் சில தடங்கல்கள் ஏற்படுகிறது.

ஆகையினால் இக்காற்று மண்டலத்தைச் சுத்தப்படுத்தும் தாவர வர்க்கங்கள் அடர்ந்த காட்டுப் பிரதேசத்தில் அமர்ந்து தியானம் செய்கின்றனர். அப்பொழுது அத்தியானத்திற்குப் பல நல்லுணர்வுகளும் அவர்களின் ஆத்மாவிற்கு நற்பயனும் கிட்டுகின்றன.

இதைப் போன்றே இப்பூமி மட்டத்திற்கு மேல் ஓர் அளவு கொண்ட உயரத்திற்கு மேல் மலைகளில் அமர்ந்து தியானம் செய்யும் பொழுது அசுத்தமான காற்று அவர்கள் செய்யும் தியானத்திற்கு வந்து அண்டுவதில்லை.

மலைக் குகைகளில் அமர்ந்து தியானம் செய்யும் பொழுதும் இப்பூமிக்கு அடியில் இவ்வசுத்தக் காற்று வந்து தாக்குவதில்லை. இதன் உண்மை நிலை இதுவே. “வாழ்க்கையிலிருந்து மீண்டு துறவறம் கொண்டவர்களினால்” இந்நிலைக்குச் சென்று இத்தியானம் பெறுவது எளிது.

1.ஆனால் வாழ்க்கையுடன் ஒன்றிய நம் நிலைக்கு
2.நம் வாழ்க்கையையே… நாம் வாழும் நிலையையே தியானமாக்கி
3.வாழும் பக்குவ நிலைதான் நமக்குகந்த உன்னத நிலை.

உடல் உபாதை உறும் பொழுது எந்நிலை கொண்ட உபாதை பெற்றோமோ அந்நிலையை அடக்கும் அதற்கு மேல் சக்தி கொண்ட வீரியமுற்ற மருந்தை உண்டால்தான் அந்த உபாதை மறைகிறது.

அதைப் போல்
1.இவ்வாத்மீக வழியில் நல்லுணர்வு கொண்ட ஜெப நிலைக்கு வரும் பொழுது
2.இக்காற்றுடன் கலந்துள்ள நல் சக்திக்கு மேல் தீய சக்திகளின் தாக்குதலில் இருந்து நாம் விடுபட்டுப் பழகுதல் வேண்டும்.

நாம் செல்லும் பாதையில் பல மேடு பள்ளங்கள் வரத்தான் செய்யும்…!

பள்ளம் உள்ள இடத்தையும் கல் தடுக்கும் இடத்தையும் அவற்றில் விழுந்தோ தடுக்கியோ செல்லும் அபாயத்திலிருந்து “எப்பாதை சரியான பாதை…?” என்று நாம் உணர்ந்து செல்கின்றோமோ அதைப் போன்றே
1.வாழ்க்கையில் வரும் இன்னல்களிலிருந்து நாம் மீண்டு சென்று
2.ஆத்மீகப் பாதையை அடையும் ஞான மார்க்கம் தான் உயர்ந்த ஞான மார்க்கம்.

இம்மார்க்கத்தை வெறுப்புடனோ… சலிப்புடனோ… சஞ்சல நிலை கொண்ட நிலையிலோ… நம்மைத் தாக்கிடும் இன்னல்களிலிருந்து பயந்தோ… செல்வது முறையல்ல…!

1.வரும் தடங்கலுக்கு வருந்திடாமல்…
2.அவற்றிலிருந்து அமைதியுடன் மீண்டு ஆத்மீக வழிக்குச் செல்வதுதான்
3.நாம் செல்லும் ஞான மார்க்கத்திற்கு உயர்ந்த நிலை.

இந்த ஞான மார்க்கத்தை நம் முன்னோர் பல நிலைகளில் சூட்சுமம் கொண்டு இவ்வுலகம் முழுவதுமே வெளிப்படுத்தியுள்ளனர். ஏற்று வழி நடந்து வந்திடுபவர் “கோடியில் ஒருவராகத்தான்…!” இன்று இவ்வுலகில் உள்ளனர்.

ஞான வழியையும் இத்தெய்வீக வழியையுமே இம் மனித ஜென்மங்கள் அடைய முடியாத நிலை…! என்று உணர்ந்து அந்த வழிக்குச் செல்வதற்கே பயந்த நிலை கொண்டு வாழ்கின்றனர்.

உயிரணுவாய் மனிதனாகத் தாயின் கர்ப்பத்தில் பிறந்த சிசுக்கள்தான் நாம் ஆண்டவராக வணங்கிடும் பல பல தத்துவ ஞானிகளும்…!

அவர்களைப் போன்றே… நாமும் நம் வாழ்க்கையின் இருளைப் போக்கி அச்சக்தியின் சுடரின் தொடர்பினை நம்முள்ளும் ஏற்றி நற்சக்திகளாய் ஆத்மீக நெறி கொண்ட ஞான வாழ்க்கையின் நெறியை நம் வழியாக ஏற்று வழிப்படுத்தியே சென்றிடுவோம்.

“சத்ரு மித்ரு…”

“சத்ரு மித்ரு…”

 

பால்வெளி மண்டலம் சூனிய மண்டலம் என்கின்றனர். பால்வெளி மண்டலமும் பல மண்டலங்களில் இருந்து வெளிப்படும் சக்தியினைத் தன்னுள் வைத்துக் கொண்டேதான் சுற்றிக் கொண்டுள்ளது.

இப்பால்வெளி மண்டலத்தில் இருந்து மழை வரும்போது இடியும் மின்னலும் எந்நிலையில் வருகின்றன…?

பால்வெளி மண்டலத்தில் பல சக்திகள் சுற்றிக் கொண்டுள்ள நிலையில் மேகம் அடர்ந்து மழை பெய்யும் பொழுது பல அமில சக்திகள் சுற்றிக் கொண்டுள்ள நிலையில் மழைத் துளிகள் அதன் மேல் பட்டவுடன் இரண்டு வெவ்வேறு நிலை அமிலங்கள் ஒன்றின் மேல் ஒன்று மோதும் பொழுது ஏற்படும் நிலைதான் இடியும் மின்னலும்… மழை வரும் காலங்களில் ஏற்படுவதெல்லாம்.

இரண்டு தன்மை கொண்ட சக்திகள் மோதுண்ட நிலையில் ஒன்றை ஒன்று ஏற்காத நிலையில் பூமி எப்படிப் பூகம்பத்தை நிலநடுக்கத்தை வெளிப்படுத்துகின்றதோ அந்நிலை போலத்தான் இப்பால்வெளி மண்டலத்தில் இந்தச் “சத்ரு… மித்ரு” நிலை மோதுண்ட நிலையில் இடியும் மின்னலும் வருவதெல்லாம்.

இடியும் மின்னலும் வரும்போது பூமியில் உள்ள எவ்வமிலத்தன்மை கொண்ட சக்தி இப்பூமியில் அது தாக்கும் இடத்தில் உள்ளதுவோ அதனுடன்தான் இம்மின்னலுடன் வெளிவரும் அமில சக்தி வந்து கலக்கின்றது.

சில வகை மரங்கள் இவ்வமிலத்தன்மை கொண்டதாக உள்ளன. அவற்றின் மேல் இந்த மின்னல் தாக்கும் பொழுது அம்மரம் இதனைத் தன்னுள் ஈர்த்துக் கொள்கின்றது. தன் சக்திக்குகந்த அணு சக்தியைத் தான் அச்சக்தியின் நிலை கொண்ட மரங்கள் ஈர்க்கும்.

எப்படிப் பூமியில் பல நிலை கொண்ட தாவரங்களும் கனி வர்க்கங்களும் திரவங்களும் இக்காற்றினில் உள்ள அணுக்களைத் தனக்கு வேண்டியதைத் தன் நிலைக்கு ஒத்த அணுவை… தான் ஈர்த்து வளர்ந்து கொண்டே உள்ளனவோ அவை போல் தான் இப்பால்வெளி மண்டலத்திலும் சுற்றிக் கொண்டுள்ள அமில சக்திகளும் அதனதன் இனத்துடன் சுற்றிக் கொண்டே உள்ளன.

அதன் மேல் நீர்நிலை படும்போது ஒன்றுடன் ஒன்று மோதுண்ட நிலையில் வெளிப்படுகின்றது இடியுடன் கூடிய மின்னல்.

இம்மின்னல் வரும் பொழுது…
1.ஓர் இடத்தில் அப்படரும் ஒளி ஆரம்பித்தவுடன்
2.ஒரே நேர் கோடுபோல் நீண்டு அப்பட படக்கும் ஒலி ஒலித்துக் கொண்டே
3.அச்சக்திகள் உள்ள தூரம் வரை அப்படப்படக்கும் ஒலியுடன் கூடிய ஒளியின் மின் காற்றும் ஒலித்து வருகின்றது.

அம்மாறுண்ட சக்திகள் மோதுண்டு வரும் வரைதான் இடியின் ஒலியும் மின்னலின் ஒளியும். இடி இடிக்கும் பொழுது அதிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் இப்பூமிக்குள் வந்து… “அதன் சக்திகுகந்த தாவரங்களின் நிலையுடன் வந்து கலந்து விடுகின்றது…”

அதிகமான மேகங்கள் கூடி மழை பெய்யும் காலங்களில் நம் முன்னோர்கள் மரங்களின் கீழ் நிற்கக் கூடாது என்று சொல்லி வந்ததன் உண்மை இது.

இன்றைய விஞ்ஞானத்தில் மின்னலைத் தாங்கும் கருவிகளைக் கண்டுணர்ந்து மின்னலில் இருந்து மனிதரைக் காக்கும் நிலையில் அச்சக்தியை ஈர்க்கும் கருவிகளைப் பதித்து வைத்துள்ளார்கள்.

சில வகைத் தாவரங்களுக்கு இம்மின்னலை ஈர்க்கும் சக்தி நிலையுண்டு. மனிதரின் மேலும் மற்ற ஜீவராசிகளின் மேலும் மாடு மனை இவற்றின் மேலும் விழுந்தால் அந்நிலையில் தாங்கும் சக்தி இருப்பதில்லை.

ஆனால் இந்நிலையில் சக்தி கொண்ட தாவரத்தின் மேல் அம்மின்னலின் ஒளிக்கதிர்கள் தாக்கினாலும் அவை ஈர்த்தே வளர்கின்றன. சில தாவரங்கள் மரங்கள் இந்த இடி மின்னல் பட்டவுடன் கருகும் நிலையும் பெற்றுள்ளன.

இடியும் மின்னலும் எந்த நிலை பெற்று வருகின்றதோ அந்த நிலை போலத்தான் இவ்வான மண்டலங்களில் பல பல சக்தி நிலைகள் மாறு கொண்டு சுற்றிக் கொண்டுள்ளன.

இன்றைய உலகில் நம்மை நாம் காத்துக் கொள்வதற்கு “ஆத்மீகம் ஒன்றுதான் வழி”

இன்றைய உலகில் நம்மை நாம் காத்துக் கொள்வதற்கு “ஆத்மீகம் ஒன்றுதான் வழி”

இன்று நாம் வாழும் வாழ்க்கையில் நாம் உண்ணும் உணவும் நாம் எடுக்கும் சுவாசமும் விஷம் கலந்ததாக உள்ளது. அதனால் பல புதிய வியாதிகளை நாம் ஏற்க வேண்டிய நிலையும்… அது நம்மைத் தாக்கும் நிலையும் உள்ளது.

இவை தவிர இன்றைய இக்கலியில் வாழ்ந்த நம்மில் வாழ்ந்த உடலில்லா ஆத்மாக்களின் எண்ணத்தில் செயலில் இருந்து நம்முடன் வாழும் மனிதர்களின் எண்ணத்தில் செயலில் இருந்தும் தப்ப வேண்டியுள்ளது.

இவைகளின் தாக்குதலில் இருந்தெல்லாம்…
1.நம்மையும் நம் மனோநிலையையும் நம் உடலையும் காத்திட வேண்டும் என்று ஒவ்வொருவரும் உணர்ந்து
2.ஆத்மீக வழியைப் பின்பற்றி வாழும் நிலைக்குப் பக்குவம் பெற்று வந்திடல் வேண்டும்.
3.நம்மை நாம் காத்து வாழ்வதற்கே இவ்வாத்மீகம் ஒன்றுதான் வழி.

ஓங்கி நிற்கும் “தனியான தெய்வம் ஒன்றில்லை…” என்பதனை உணர்ந்து… நாமும் நம்மைப் போல்தான் இவ்வுலகமும் மற்ற அனைத்து உலகங்களுமே என்றுணர்ந்திடல் வேண்டும்.

ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் அதனதன் உடல் தன்மை எந்தெந்த நிலை கொண்டெல்லாம் ஒவ்வொரு நாளும் செயல்படுகின்றதோ அந்நிலை கொண்டே இப்பூமித்தாயும் உயிருடன் உணர்வுடன் வாழ்கின்றாள்.

இப்பூமியில் வளர்ந்து வாழும் நாம் ஜீவன் கொண்டு எப்படி வாழ்கின்றோமோ அப்படியே தான் இவ்வுலகத் தாயும் வாழ்கின்றாள்… வளர்க்கின்றாள்… காக்கின்றாள்… அனைத்துச் சக்தியையும் வளர விடுகின்றாள்…!

உயிரணுக்கள் ஒவ்வொன்றுக்கும் எந்நிலை கொண்ட உணர்வுத் தன்மை உள்ளதோ அந்நிலையின் உணர்வுடனே இவ்வுலகத் தாயும் வாழ்கின்றாள்.

இவ்வுலகத் தாயின் உணவாக இவ்வுலகத் தாய்க்குச் சூரியனிலிருந்தும் மற்ற மண்டலங்களிலிருந்தும் கிடைக்கப் பெறும் அமுது தான் பல சக்திகள் கொண்ட இக்காற்றினில் வந்து சேரும் இப்பூமித்தாய் ஈர்க்கும் பல அணுக்களும் நீருமே.

இப்பூமித்தாய் உண்ணும் நீரும் அணுவும்தான் அவள் உண்டு அந்த அமுதை நமக்கும் அளிக்கின்றாள். அவள் பெற்ற செல்வங்களுக்கு இந்நீர் இல்லாவிட்டால் இவ்வுலகுக்கே ஜீவனில்லை.

இவ்வுலகிலுள்ள உலோகங்கள் தங்கம், தாமிரம், வைரம், நிலக்கரி இன்னும் பல நிலை கொண்ட உலோகங்களும் கல்லும் மண்ணும் மரமும் செடியும் எவையுமே
1.இப்பூமியிலிருந்து வளரும் எவையுமே நீர் இல்லாவிட்டால் வளர்ந்திடாது.
2.இப்பூமியும் நீர் இல்லாவிட்டால் வாழ்ந்திட முடியாது
3.நீரையே ஜீவனாகப் பெறும் இவ்வுலகிற்கு உணரும் தன்மை அனைத்தும் உண்டு.

இவ்வுலகில் பல இடங்களில் எரிமலையும் வெளிப்படுகின்றது பனி மலையும் வளர்கிறது பாலைவனங்களும் உள்ளன. “பாலைவனங்களுக்குச் சக்தி இல்லை…” என்று எண்ண வேண்டாம்.

பாலைவனங்கள் தான் மற்ற நிலையில் உள்ள சோலைகளுக்கு உயிர் நாடி. சோலைவனங்களும் மலைகளும் கடலும் சில பள்ளத்தாக்குகளும் இப்படி இவ்வுலகிலேயே ஒன்றுபோல் இல்லாமல் ஒவ்வொர் இடத்திற்கும் ஒவ்வொரு மாறுபட்ட தன்மைகளை இப்பூமித்தாய் தான் ஈர்த்து வெளிக்காட்டிடும் நிலையில் வளரச் செய்கின்றாள்.

பல சக்திகள் இக்காற்றில் சுற்றிக் கொண்டே உள்ளன.

அனைத்துச் சக்திகளுமே மனிதனுக்கெப்படி துடிப்பு நிலை சுவாச நிலை ஈர்த்து வெளிப்படுத்திக் கொண்டே உள்ளனவோ அந்நிலை போல்தான் இப்பூமியும் ஈர்த்துத் துடிப்புடனே வெளிப்படுத்திக் கொண்டே உள்ளது.

இவ்வுடலுக்கு நாம் உண்ணும் ஆகாரங்கள் அமிலமாகி அவை ஜீரணித்து நமக்கு வேண்டிய சக்தியைப் பெற்று நமக்கு வேண்டாத நிலையை வெளிப்படுத்துகின்றது.

நாம் எடுத்துக் உண்ட உணவையே இவ்வுடல் ஏற்று உதிரமாகவும் சிறுநீராகவும் மலமாகவும் காற்றாகவும் வியர்வையாகவும் ஆக்குகின்றது. இவற்றில் உதிர சக்தியை மட்டும் உடல் ஏற்று மற்றவைகளை வெளிப்படுத்துகின்றது.

அந்நிலை கொண்டுதான் இப்பூமித்தாய் ஈர்க்கும் நீரையும் அணுவையும் எந்தெந்த நிலைகளில் எச்சக்தி கொண்ட அணுவான அமிலத்தை ஈர்த்தனளோ அவ் ஈர்த்த சக்தியின் நிலை கொண்டே அச்சக்தியின் நிலை பெற்று அந்நிலையில் வளர்ச்சி பெறுகிறது.

அப்படி வளரும் நிலைகேற்ப சக்தியை அளிக்கும் (கொடுக்கும்) நிலையில் இப்பூமியின் உள் நிலையில் பல நிலை கொண்ட அமிலச் சக்திகள் தங்கி ஈர்க்குங்கால் அந்நிலையில் அவை சுற்றிக் கொண்டுள்ள தன்மையில் ஒரு சக்தியுடன் ஒரு சக்தி என்பது ஒரு நிலை கொண்ட அமிலத்துடன் மற்றொரு சக்தி நிலை கொண்ட அமிலம் மோதும் பொழுது (சத்ரு மித்ரு நிலை) ஒன்றுக்கொன்று ஏற்காத நிலையில் அவை வெடிக்கும் தன்மையில் தான் பூமி அதிர்வு ஏற்படுவதெல்லாம்.

நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கு முதலிலேயே இன்றைய விஞ்ஞானத்தில் கண்டுபிடிக்கும் நிலையை உணர்ந்துள்ளார்கள்.

ஆனால் இந்நிலை அதிர்வு பூகம்பம் இவை எல்லாம் எந்நிலையில் ஏற்படுகின்றன…? என்பதனை உணர்த்தி விட்டால் இனி விஞ்ஞானத்திற்கு இன்னும் பல வழிகள் புலப்பட்டிடும்.

1.பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் அனைத்து சக்திகளையும்
2.இக்காற்றிலிருந்து இழுத்துத் தன் சுவாசத்திற்கு ஈர்த்திடும் ஆற்றல்
3.இந்த உலக ஜீவராசிகள் அனைத்திற்கும் உண்டு.

ஆனால் அவையவை எடுத்த சக்தியின் நிலை கொண்டு குறைந்தும் அதிகரித்தும் மாறுபட்ட தன்மையுண்டு. உலோகங்களில் மாறுபட்ட தன்மை உள்ளது போல் ஜீவராசிகள் ஈர்த்து வெளிபடுத்திடும் சக்தியிலும் மாறுபட்ட சக்தி நிலையுள்ளது.

ஒன்று போல் ஒன்றில் சக்தி நிலை ஒன்றுபட்டு எவற்றுக்குமே இருந்திடாது. கனி வர்க்கங்களிலும் ஒரே மரத்தில் காய்க்கும் கனிக்கும் மாறுபட்ட சுவையும் மாறுபட்ட சக்தியும் மாறுபட்ட அளவு நிலையும் இருந்திடும் சிறிதளவேனும்.

ஒரே செடியில் பூக்கும் புஷ்பங்களின் நிலையும் இவை போன்றே. இவ்வுலக நிலையும் இவை போன்றே.

சுற்றிக் கொண்டே உள்ள உலகில் அவை ஈர்த்து வெளிப்படுத்திய சக்தியில்தான் எத்தனை மாற்றங்கள்…? எத்தனை நிலை கொண்ட தன்மைகள்…?

இவை போல்தான் ஒவ்வொரு மண்டலத்தின் நிலையுமே.

இவ்வான மண்டலத்தின் நிலையும் ஜீவன் கொண்டேதான் சுற்றிக் கொண்டு உள்ளது. பால்வெளி மண்டலம் சூனிய மண்டலம் என்றெல்லாம் செப்புகின்றோம். எவை சூனிய மண்டலம்…?

1.சூனிய மண்டலம் என்ற தனித்த மண்டலம் ஒன்றில்லை.
2.இப்பால்வெளி மண்டலம் என்ற மண்டலத்திற்கே ஜீவன் உண்டு.

உணவைப் போலவே “மருந்தை உட்கொண்டு வாழ்கிறார்கள்” இன்று வாழும் மனிதர்கள்…!

உணவைப் போலவே “மருந்தை உட்கொண்டு வாழ்கிறார்கள்” இன்று வாழும் மனிதர்கள்…!

 

நல் உணர்வுடைய நற்செல்வங்களை (குழந்தைகளை) நாம் பெற்றே சமமான நிலையில் வாழ்ந்திட்டாலும்… வாழும் நிலையில் சூழ்ந்துள்ள அசுத்தத் தன்மை வாய்ந்த மூச்சுக் காற்றுகளும் நல் நிலையில் வாழ்பவரையும் வந்து தாக்குகின்றது. ஆரோக்கிய நிலையும் மாறுபடுகின்றது.

1.இக்காற்றில் கலந்துள்ள சக்தியில் நச்சுத்தன்மையின் வீரியம் தான் இப்பொழுதுள்ள நிலையில் ஓங்கி நிற்கின்றது
2.இதிலிருந்து மீண்டு ஜெப நிலை பெற்றே வாழ்ந்திட வேண்டும்.

சில உபாதைகள் இக்காற்றிலிருந்து நாம் ஈர்க்கும் சுவாசத்துடன் நம்மை வந்து அணுகத்தான் செய்கின்றன. அந்நிலையிலிருந்து நாம் மீள… சில வைத்திய முறைகளை ஏற்க வேண்டியுள்ளது.

இக்காலநிலை மாறும் தன்மையிலும் இவ்வுடல் நிலை மாறும் தன்மையிலும் சில நிலை கொண்ட மாற்றங்கள் உடல் நிலைக்கும் வரத்தான் செய்கின்றன.

இந்நிலையில் இருந்தெல்லாம் நம் உடல் ஆரோக்கியம் பெறச் சாதாரண வாழ்க்கை நிலையிலுள்ள நாம் சில மருந்துகளை உட்கொள்ள வேண்டியுள்ளது.

சித்தர்களும் முனிவர்களும்… ஞானிகளும் ரிஷிகளும் போல் இக்காற்றிலிருந்தே உடலில் ஏற்படும் பிணிகளை மாற்றும் சக்தி கொண்ட காற்றினை ஈர்த்து வாழும் பக்குவ நிலை பெற்றவர்கள். அத்தகைய நிலையை நாமும் பெறப் பழகிக் கொள்ள வேண்டும்.

சிறு குழந்தைகளுக்கும் சரி… பிறந்த சிசுவுக்கும் சரி.. தாயின் கர்ப்பத்திலிருந்து இவ்வுலகில் வாழ வந்த நாட்களில் அதைப் பேணிப் பாதுகாக்க…
1.பிறந்த நாளிலிருந்தே சில மருந்துகளை நம் முன்னோர்கள் அதற்கு ஊட்டித்தான்
2.வளரும் பக்குவத்தை நமக்கும் வழிகாட்டித் தந்தார்கள்.

ஆனால் இன்று வாழும் மனிதர்களோ… “உணவைப் போலவே மருந்தையும்” உட்கொண்டே வாழும் நிலையில் உள்ளார்கள்.

ஏனென்றால் இக்காற்றின் அசுத்தத் தன்மையினால் வளரும் பயிரின் செழிப்பும் குறைந்து விட்டது. மக்கள் தொகையும் பெருகி விட்டது.

நாம் உண்ணும் உணவுத் தானியங்களைப் பெருக்கிட வேண்டும் என்றால்… இன்றைய விஞ்ஞான உலகத்தில் பல இரசாயன நிலை கொண்ட உரங்களைச் செலுத்தியே உணவுத் தானியங்களின் உற்பத்தியை வளரச் செய்து நாம் அதை உண்ண முடிகின்றது.

1.இயற்கையின் உரங்கள் செலுத்தி வளரச் செய்த காலங்கள் மாறி
2.செயற்கையான உரங்கள் செலுத்தித்தான் இன்றைய உணவு உற்பத்தி நிலையை நாம் பெற முடிகின்றது.

இந்த இரசாயன உரங்களை ஈர்த்து வளர்ந்த பயிர்களில் இருந்து நாம் பெற்று உண்ணும் தானியங்களின் மூலம் நம்மையும் அந்நிலை கொண்ட சத்து நிலை (இரசாயணங்கள்) வந்து தாக்குகின்றது.

இயற்கையில் வளரும் தன்மை இன்றுள்ள இக்கால நிலையில் முடியாததினால் இச்செயற்கையின் வளர்ச்சியில் வந்த செயற்கையான தானியத்தையே உட்கொள்ள வேண்டியுள்ளது.

ஆகவே செயற்கையுடன் ஒன்றி நாம் வாழ்வதால் இவ்வுடல் மாற்றத்திற்கு இன்று புதிய புதிய மருத்துவத்தைச் செயல்படுத்தி நமக்கு ஏற்கத்தான் வேண்டியுள்ளது.

1.நம் முன்னோர்கள் நமக்கு வழிகாட்டிய பல மூலிகைகளை இன்று இக்கால நிலையில் தவற விட்டுவிட்டோம்
2.மூலிகையில் உள்ள மகத்துவத்தை நாம் எடுக்கும் நிலையில் இல்லை
3.அதை ஏற்கும் மனோ நிலையும் நம்மிடம் இல்லை.

சித்தர்கள் நமக்கு உணர்த்திய பல மூலிகைகளை நாம் பெறுவதற்கும்… இன்றைய மனிதனின் மன வளர்ச்சியில் எதையும் துரித நிலை கொண்டு செயலாக்கும் மன வளர்ச்சியில்… “இன்றைய மனிதனுக்குப் பொறுமை நிலையும் இல்லை…!”

இதில் வந்த வினைச் செயலால் தான் இன்று இத்தேசத்தில் அன்று உணர்த்திய பல உன்னத மூலிகைகளின் பொக்கிஷமெல்லாம் மறைந்து சிதைந்து விட்டதின் நிலை.

ஞானத்தையும் தியானத்தையும் தெய்வீகத்தையுமே மிஞ்சும் “விஞ்ஞானம்…” என்னும் துரித நிலையில் சென்று கொண்டுள்ளான் இன்றைய மனிதன்.

அன்றன்று தேவையை மட்டும் உணர்ந்து வாழும் மனிதன் தன் ஆத்மா என்ற ஆண்டவனை எண்ணி வாழ்வதில்லை.

துரிதமுடன் செயற்கைக்கு அடிமைப்பட்ட இன்றைய மனிதனால்
1.இவ்வாத்மீக வழியும் ஜெப வழியும் அறிந்து வாழ்ந்திட்டால்
2.தன் வாழ்க்கையின் முழுமை எங்குள்ளது…? என்பதனையே அறிந்திடலாம்
3.காற்று மண்டல நஞ்சிலிருந்து விடுபடவும் செய்யலாம்…!