எண்ணத்தை “ஒரு நிலைப்படுத்துங்கள்…!” என்பதன் பொருள்

எண்ணத்தை “ஒரு நிலைப்படுத்துங்கள்…!” என்பதன் பொருள்

 

அமில குணமான பிம்ப சிவனுக்கு… அதன் வளர்ச்சிக்கு… ஜீவ குணமான காந்த ஒளி சக்தி ஈர்ப்பிற்கு வந்த பிறகு தான் அவ்வமில குணத்திற்கே ஜீவனும் அதன் வளர்ச்சி நிலையும் ஏற்படுகின்றது.

அமில பிம்பத் திடப்பொருள் இல்லாவிட்டால் காந்த ஒளி சக்திக்குச் சக்தியில்லை. அச்சக்தி நிலை படர்ந்து பிம்ப அமிலம் ஜீவன் பெறாவிட்டால் இதன் ஜீவ வளர்ச்சியும் இல்லை.

இதன் குண அடிப்படை தான் நாமும்… எல்லாமில் எல்லாமுமே…!

இதன் வழித் தொடர் கொண்டு வளர்ந்து வாழும் நாம்…
1.நமக்கு இந்த மனித உடல் பெறக்கூடிய ஆற்றல் பெற எத்தனை கோடி ஆண்டுகள் ஆகின்றன…? என்ற உண்மையை உணராமலும்
2.உயர்வின் வழிக்குச் செல்லாமலும் நம்மை நாமே அழித்து வாழ்கின்றோம்.

மாங்கனி அதன் முற்றிய நிலை பெற்றவுடன் அதன் வண்ணமும்… வண்ணத்திற்கேற்ப மணமும் உள்ள கனியின் சுவை இனிமை எப்படி உள்ளது..?

குறுகிய கால வளர்ச்சி முற்றலிலே
1.முற்றிய நன்கு பழுத்த மாங்கனியின் வண்ணத்தையும் மணத்தையும் கண்டவுடன்
2.”சுவை நிறைந்த கனி…!” என்று எண்ணி உண்ணத் துடிக்கின்றோம்.

இதன் நிலை போல் மனிதனின் வளர்ச்சி நிலை இருந்து விட்டால் மனிதனின் உடல் பிம்ப அழகும்.. எண்ண மணமும்… இனிமையும் குண தேவனின் சக்தியாக சுடர்விடுமப்பா…!

பிஞ்சில் மாங்கனி துவர்ப்பாகவும் புளிப்பாகவும் தான் உள்ளது. அதைப் போன்று ஆரம்ப வளர்ச்சியில் அறியா மனிதனாக இருந்தாலும் தன் அறிவாற்றலை ஞானத்தின் மேம்பாட்டில் முற்றிப் பழுத்து இனிமை கொள்ள வேண்டும்.

அமில ஈர்ப்பின் வழித் தொடரினால் நம் பூமியின் எண்ணற்ற சக்திகள் நிறைந்துள்ளன. பல வண்ணங்களையும் மணங்களையும் சுவைகளையும் ஆரம்ப காலத்திலேயே பூமி வளர்ச்சி கொண்டு வழி வரவில்லை.

ஒவ்வொன்றின் வழித் தொடர் அமில குணத்தின் ஈர்ப்பு சக்தியின் “சிவ சக்தி என்ற சிங்காரக் கலவை ஈர்ப்பில் தான்..” இன்று பூமியில் நிறைந்துள்ள இயற்கை வண்ணமும் சுவையும் மணமும் உள்ளன.

பல வண்ணங்கள் புஷ்பங்களுக்கு எப்படி வந்தது..? கனிகளுக்கு சுவை எப்படி வந்தது…?

படர்ந்த அமில பிம்பம் அதன் ஈர்ப்பில் காந்த ஒளி சக்தி பெற்றவுடன் “வண்ணத்துப் பூச்சி” என்ற பல வண்ணங்கள் நிறைந்த அப்பூச்சி ஜீவன் பெறுகிறது.

இப்பொழுது உணர்த்துவது பூமி தாவர வளர்ச்சி ஏற்பட்ட நாட்களில் ஆரம்பத்தில் வந்ததன் நிலை.

இந்த வண்ணத்துப் பூச்சி சில தாவரங்களின் மேல் தன் அமிலத்தை… அமிலம் என்பது தன் கழிவின் முட்டையை இட்டதினால்.. அதிலிருந்து அதன் அமில சுவாசம் படர்ந்த பிறகு வண்ணப் புஷ்பங்கள் கிடைத்தன.

1.அந்த வண்ணத்தின் பூவிலிருந்துதான் தேனீக்கள் ஜீவன் கொண்டன.
2.தன் ஜீவனுக்குகந்த ஆகாரமாக அந்தப் பூவிலிருந்தே தன் ஆகாரத்தை உறிஞ்சி எடுத்துத் தேனீக்கள் வளர்ந்தன.

தேனீக்கள் இல்லாவிட்டால் “சுவை நிறைந்த கனி…” எதுவுமே இல்லை…!

இப்படி உலக இயற்கையே ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டு… ஒன்றெடுத்த அமிலம் ஜீவன் கொண்டு… அதன் ஜீவன் மாற்றம் கொண்டு பிறிதொரு ஜீவனும் வளர்ந்து நம் பூமி ஓடிக் கொண்டுள்ளது. இந்த அமிலத்தின் நிலையிலிருந்து தான் எல்லா சக்திகளும் ஜீவன் பெறுகின்றன.

ஆயிரம் காலங்கள் ஒரு நிலை கொண்ட நுண்ணிய ஈர்ப்பு அலையின் சக்தியினால் நாகம் மாணிக்கக்கல்லைத் தன்னுள் வளர்த்துக் கொள்கின்றது.

மாணிக்கக் கல்லை வளர்த்துக் கொள்ள நாகம் எப்படி வழி பெற்றது…? மற்ற ஜீவன்களைக் காட்டிலும்
1.நாகத்தின் கண் ஒளி ஈர்ப்பு
2.நுண்ணிய மின் அலையை ஈர்க்கவல்ல செயல் கொண்டது.
3.நாகம் ஒரு பொருளைப் பார்த்தால் அப்பொருளின் பிம்பம் அதன் கண்ணிலே
4.பல மணி நேரத்திற்குப் புகைப்படத்தில் பதிந்துள்ளதைப் போல் பதிந்திருக்கும்.

சிங்கத்தின் நிலையும் ஏறக்குறைய நாகத்தின் ஈர்ப்பலைக்கு ஒத்தது தான். ஆனாலும் அதன் வளர்ச்சி நிலையில் நாகத்தைப் போன்று நுண்ணிய ஈர்ப்பின் பதிப்பு இல்லாமல் சிங்கத்தின் துடிப்பு ஆக்ரோஷத்தின் நிலையால் வளர்ச்சி பெறவில்லை. காந்த ஈர்ப்பின் ரசமணியின் அபரிதமான ஒளி ஈர்க்கும் கண்கள் சிங்கத்தின் கண்கள்.

இதனை எல்லாம் உணர்த்தும் முறை எதற்கு..?

நுண்ணிய ஈர்ப்பலையின் சக்தி அமிலங்கள் நிறைந்துள்ள பல பிராணிகள் மிருகங்கள் இருந்தாலும்… மனிதனை ஒத்த அறிவாற்றலும் அங்க அவயங்களும் பெறாததினால் அவற்றின் நிலை புரியாமல் சென்று விட்டது.

மனிதனுக்குச் செயலாற்றும் திறமை கொண்ட அங்க அவயங்களும் அறிவின் வளர்ச்சியும் உள்ள பொழுது இந்நுண்ணிய ஈர்ப்பலையை
1.சூரியனின் ஒளி அலையிலிருந்து – பலவாக நிறைந்துள்ள இந்தப் பூமியின் அமில குணத்தின் உதவியினால்
2.மனிதன் பல எண்ணத்தில் தன் ஜெபத்தைச் சிதறவிடாமல்
3.நுண்ணிய ஈர்ப்பலையை தன் எண்ண ஈர்ப்பில் செலுத்தும் பொழுது அவ்வெண்ண ஈர்ப்பே சுவாசமாக
4.காற்றில் உள்ள தன் எண்ணத்திற்குகந்த ஈர்ப்பு குண நுண்ணிய அமில சக்தியைத் தன் உடல் முழுமைக்கும் பரப்பச் செய்கின்றது.

இவ்வெண்ணத்தை “ஒரு நிலைப்படுத்துங்கள்…!” என்பதன் பொருள் இது தான்.

“ஒரு நிலை…” என்பது ஒன்றின் பால் உயர் ஞான எண்ணத்தைச் செலுத்தி
1.அந்த ஒளி அமில குணத்தை நுண்ணிய ஈர்ப்பாக
2.நம் சுவாசம் எடுக்கும் வழி நிலை ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

ஞானிகள் கருப்பணசாமியை வைத்ததன் நோக்கம்

ஞானிகள் கருப்பணசாமியை வைத்ததன் நோக்கம்

 

நம்மைத் திட்டுபவர்கள்… சாபம் இடுபவர்கள்… இவர்களை எல்லாம் ஓட்டுக் கேட்டுக் கொண்டே இருப்போம். அதற்காக வேண்டித் தான் கருப்பணசாமியை வைத்து மோப்ப நாயையும் பக்கத்தில் காட்டி இருப்பார்கள்.

ஏனென்றால்
1.ஒட்டுக் கேட்டவுடன் நம் நல்ல புத்தியெல்லாம் இருண்டு விடுகிறது.
2.இருண்டு போன பின் நாம் எப்படித் தவறு செய்கின்றோமோ அதே போன்று
3.அந்த உணர்வுகள் நமக்குள் இருக்கும் நல்ல உணர்வுகளைக் கொன்று புசிக்கத் தொடங்கி விடுகிறது.
4.நீ நுகர்ந்து பார்த்த உணர்வுகள்… உன் நல்ல குணங்களை இப்படிக் கொன்று விடுகின்றது…! என்பதைத் தான்
5.சிலையை வைத்து மோப்ப நாயையும் அருகே வைத்து ஞானிகள் காண்பிக்கின்றார்கள்.

ஆனால் இன்று வழக்கத்தில் நாம் என்ன செய்கிறோம்…?

கருப்பண்ணசாமிக்கு ஆட்டை வெட்டி அவனுக்குப் படையல் செய்தால் தன்னைக் காப்பான்… அது காவல் தெய்வம்… என்று சொல்லி அதற்குப் பலியிட்டு அதை வணங்கிக் கொண்டிருக்கின்றோம்.

அந்த ஆவேச உணர்வு கொண்டு என்ன செய்கின்றோம்…? அங்கே ஆட்டைப் பலி கொடுத்தேன் என்ற நிலையில் நாம் செய்த அந்த உணர்வுகள் இங்கே வந்து பிறரை இரக்கம் இல்லாதபடி துன்பப்படுத்தச் செய்யும்.

உதாரணமாக… கொலை செய்பவனைப் பார்த்தோம் என்றால் அவன் அரக்கத்தனமாகத் தான் போவான். அவனுக்கு எந்த நோயும் வராது. ஆனால் பல கொலைகளைச் செய்வான்… தெம்பாக இருப்பான்.

யாரையும் பற்றி அவன் அஞ்சுவதில்லை… அவனுக்குக் கொலை செய்வது தான் வேலை.

இதைப் போன்ற உணர்வின் தன்மை வரும் பொழுது அவன் எப்படி அந்த வலுப்பெற்றானோ இதைப் போல நமக்குள் இந்த அரக்க உணர்வுகள்… பலியிட்ட உணர்வுகள்… அதிகமாகி விடுகின்றது.

இறந்த பிற்பாடு என்ன செய்வேன்…?
1.நாம் பலியிட்டுக் கும்பிட்டது போன்று அடுத்தவர்கள் கருப்பணசாமிக்குப் பலியிட்டுக் கும்பிடுகிறார்கள் என்றால்
2.அந்த உடலுக்குள் புகுந்து… ஆவியாகப் போய்ச் சேர்ந்து விடுவேன்.

ஆனால் அவர்கள் ஆட்டைப் பலி கொடுக்கவில்லை என்றால் “எங்கடா ஆட்டைக் காணோம்…? ஏண்டா பலி கொடுக்கவில்லை…? பார்… உன் குடும்பத்தையே தொலைத்து விடுகின்றேன்…! எனக்கு ஆடு இப்பொழுதே வேண்டும்…! என்று சொல்லி இந்த உடலுக்குள் வந்த ஆவி அவனையும் ஆடச் சொல்லி ஆடைக் கேட்கும்.

இப்படித்தான் மனித உடலில் விளைய வைத்த உணர்வுகள் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இருளை போக்க நாம் பிறரின் வேதனைகளை கேட்டறிந்தோம். ஆனால் அது நம் நல்ல குணங்களை இருளச் செய்து நம்மை அறியாமலே தவறு செய்ய வைக்கின்றது. அசுர செயல்களைச் செய்ய வைக்கின்றது.

அதே உணர்வு நம் நல்ல குணத்தை எப்படித் தாக்குகிறது என்பதைத் தான் இவ்வாறு சித்தரித்துக் காட்டினார்கள் ஞானிகள்.

அதற்கு மாறாக நாம் செய்யும் பொழுது மனித உடலில் எதை விளைய வைத்தோமோ அதனின் செயலாகத்தான் அடுத்து இருண்ட நிலையாக அந்தத் தெய்வமாக உருவாக்கி விடும்… அதே பலியைத் தான் இது கேட்கும்.

கருப்பணசாமி என்ற நிலைகளில் “அருளாடி” சொல்லும் பொழுது பேயை அங்கே ஓட்டலாம் என்று சொல்வார்கள். பேய் பிடித்தவர்களின் குடுமியைப் பிடித்து ஆட்டி… இரண்டு உதையைக் கொடுக்கும்.

ஒரு மாதத்திலிருந்து மூன்று மாதத்திற்கு அந்த ஆட்டம் குறைந்திருக்கும்.

அடுத்து பார்த்தோம் என்றால் அங்கே சென்று என்னை நீ அடக்கினாயா…? உன்னை நான் என்ன செய்கிறேன்…? என்று மீண்டும் ஆடத் தொடங்கும்.

1.இது தான் நாம் கண்ட பலனே தவிர
2.ஞானிகள் காட்டிய தீமைகள் இந்த விடுபடும் அருள் வழிகளை நாம் கடைப்பிடிக்கவில்லை

இதை எல்லாம் அறிந்து கொள்வதே மிகவும் நல்லது.

தன்னை மறந்து செய்யும் தியானம் சரிதானா…! அது சமாதி நிலையா…?

தன்னை மறந்து செய்யும் தியானம் சரிதானா…! அது சமாதி நிலையா…?

 

கேள்வி:-
பல வருடங்களுக்கு முன் தியானம் செய்வதைப் பற்றிச் சில புத்தகங்களைப் படித்தேன். ஆனால் அதிலே கொடுக்கப்பட்ட தியான முறை எனக்குச் சரியாக விளங்கவில்லை.

ஒரு குருவைச் சந்தித்துப் பயிற்சி பெறக்கூடிய வாய்ப்பும் எனக்குக் கிடைக்கவில்லை. வேறு ஒரு மார்க்கத்தின் வழி என்று ஒருவர் தியானம் செய்யும் முறையைக் கற்றுக் கொடுத்தார்.

அதன்படி சில காலம் தியானம் செய்து வந்தேன். 20 30 நிமிடங்கள் உட்கார்ந்து இருந்தால் அப்படியே என்னை மறந்து இருப்பேன். கடிகாரம் ஓடுவது எனக்குத் தெரியாது.

பிறகு திடீரென்று கவனமும் குறைந்து மூச்சு விடுவதை நிறுத்தி விட்டேனே…! என்று தோன்றும். “இதுதான் சமாதி நிலை” என்று எண்ணி இருக்கின்றேன்.

ஆனால் இது எனக்குத் திருப்தியாக இல்லை. நான் செல்லும் பாதை சரியானதுதானா…? இல்லாவிட்டால் குருநாதர் என்னைச் சரியான பாதையில் நடத்திச் செல்ல வேண்டுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

அதே போன்று பலர் எழுதியுள்ள ஆன்மீக சம்பந்தமான புத்தகங்களைப் படிக்கலாமா…? கூடாதா…? என்பதையும் விளக்கவும். எதைப் படிக்கலாம்…? எதைப் படிக்கக் கூடாது…?

ஈஸ்வரபட்டர் பதில்:-
உன் நிலை பதப்படுத்திய… பயிர் செய்வதற்குகந்த ஒரு நிலத்தை போன்றது. அந்தப் பலனைப் பெறும் வழியைத் தான் இனி அறிந்து கொள்ள வேண்டும்.

சத்தியத்தின் சக்தி தான் நாம் அனைவருமே. அச்சக்தியின் ஸ்வரூப நிலை பெற்றது தான் எல்லாமே. அவரவர்கள் எண்ணத்தில் இருந்து தான் அவரவர்களின் வழியும் செல்கின்றது.

1.ஏனெனில் உயிரணுக்களாக என்று நாம் தோன்றினோமோ அந்த நாளிலிருந்து
2.நாம் எடுக்கும் சுவாச நிலை கொண்டுதான் நம் எண்ணம் சுற்றுகின்றது.

ஒவ்வொரு உயிரணுவிற்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. ஒன்றைப் போன்ற இன வர்க்கங்களுக்கும் அதற்கென்று சில குண நிலைகள் உண்டு.

அதைப்போல ஒவ்வொரு உயிருக்கும் அதன் ஜீவ சக்தி உண்டு.
1.ஒன்றைப்போல் ஒத்த நிலையில் எதுவும் இருந்திடாது.
2.ஒவ்வொரு ஜீவ உயிரும் ஒவ்வொரு உடல் பிம்பம் எடுத்து மாறுபடும் நிலையில்
3.அந்த உயிரணு என்னும் ஆத்மாவுடன் ஜீவசக்தியும் வளர்ந்து கொண்டேதான் உள்ளது.

எப்படி சப்த அலைகளும் சுற்றிக்கொண்டே உள்ளனவோ அதைப் போன்ற ஜீவ சக்திகளும் சுற்றிக்கொண்டே உள்ளன.

இந்தப் 15 வருடத்தில் வந்ததல்ல உன் தியான நிலை. உன்னுடைய உயிரணு உதித்த நாள் கொண்டே உன்னுடனே வருவது தான் உன் நிலையும் இன்று.

வந்த நிலையை வழிநடத்தி
1.சமாதி நிலையிலிருந்து மீண்டு
2.இனி தியானத்தில் அமரும்போது நீங்கள் இந்த உலகில் அமர்ந்துள்ளது போல் எண்ணி
3.உங்களுடைய எண்ணத்தை மகரிஷிகள் ஞானிகள் பால் செலுத்தி அவர்கள் சக்தியை ஈர்த்து
3.உங்களுடைய உயிராத்மா உள்ள இடத்தில் அமர்ந்துள்ள நிலையைப் போல் எண்ணி
4.உங்கள் எண்ணம் அனைத்தையும் ஈஸ்வரா என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அதே நிலையில் தியானித்து
5.மகரிஷிகள் ஞானிகள் வெளிப்படுத்தும் சக்தியை உங்கள் உயிராத்மாவிற்கு ஊட்டமாக ஏற்று
6.அந்நிலையில் பல உண்மைகளை உங்கள் தியானத்திலேயே அறிந்து கொள்ள முடியும்.

நீங்கள் அறிந்த உண்மைகளை இந்த உலக மக்களுக்கு உணர்த்தும் வகையில் வெளிப்படுத்தலாம்.

நாம் எடுத்த பிறவிப் பயனை இந்த உலக மக்களுக்கு நல்வழியில் உணர்த்தும் வகையில் ஒவ்வொருவரும் அவர்கள் வழியை நல்வழியாக்கி அவர்களை சார்ந்தோரையும் அந்த நிலைப்படுத்தி இன்று கறையுடனே வாழ்ந்திடும் இந்த கலியின் மக்களைக் கரையேற்றுங்கள்.

அந்த நிலைக்காகத் தான் யான் பல நிலையில் பலரின் வழியினில் உணர்த்துகின்றேன்.

பல நூல்களைப் படிக்கலாமா…? என்ற வினாவிற்கு ஏன் மனதைச் சஞ்சல படுத்துகிறீர்கள்…!
1.அனைத்து நூலையுமே படித்திடலாம்
2.அந்த நிலையின் உண்மையை நாம் சொல்லும் தியானத்தில் அறிந்து கொள்ளலாம்.
3.அவரவர்கள் எண்ணத்தை வெளியிட்டுள்ளார்கள்… “அதை அறிந்து நாம் ஏற்பதுவே உத்தமம் ஆகும்…”

சக்தி இல்லாவிட்டால் சிவன் இல்லை… சிவன் இல்லாவிட்டால் சக்தியும் இல்லை…!

சக்தி இல்லாவிட்டால் சிவன் இல்லை… சிவன் இல்லாவிட்டால் சக்தியும் இல்லை…!

 

இன்னும் மனிதன்…
1.விதை முதலா…? செடி முதலா…?
2.கோழியிலிருந்து முட்டை வந்ததா…? முட்டையிலிருந்து கோழி வந்ததா…? என்ற தர்க்க வாதத்திலும்
3.புராணங்களில் படைத்த காவியங்களை அதன் மையக் கருவைப் பிரித்து உணரும் ஆற்றல் இல்லாதும் வாழ்கின்றனர்.

அறிவாற்றலும் செயல் அவயங்களும் வளர்த்துக் கொண்ட மனிதன் தன் வளர்ச்சியை உணராமலும்… வளர வேண்டும் என்ற நிலையற்றும்… இயற்கையின் உண்மை வளரும் வளர்ச்சியை அறியாமலும்… வாழ்கின்றான்.

குணத்திலும் பல நிலைகள் உண்டு. மனத்திலும் பல நிலைகள் உண்டு. ஒலியிலும் பல உண்டு. இதன் அடிப்படை வளர்ச்சி பல கோடிக் கோடி உண்டு.

நம் பூமியின் ஜீவ சக்தியே காற்றும்.. ஒலியும்… நீரும்… தான். இஜ்ஜீவ சக்தி இப்பூமியைச் சுற்றி இருக்கும் காற்று மண்டலத்திற்கு அப்பால் இல்லை.

இந்தப் பூமிக்கு ஜீவன் பூமியேதான் எடுத்துக் கொள்கின்றது. பால்வெளி மண்டலத்தில் அந்தந்த இடங்களில் உள்ள அமில குணங்களின் சுழற்சி கொண்ட சீதோஷ்ண நிலை படர்ந்துள்ளது.

நம் பூமியின் காற்று மண்டலத்திற்கப்பால் உள்ள பால்வெளி மண்டலத்திற்குச் சென்று விட்டால் நம் பூமியில் உள்ளதைப் போன்ற ஜீவ சக்தி மாறு கொள்கின்றது.

“ஜீவ சக்தி…” என்பது பூமியின் சுழற்சியில் பூமி ஈர்த்து வெளிக் கக்கும் ஆவியினால் – அந்தக் காற்று மண்டலத்தின் சுழற்சியில் பூமியின் சுழன்று ஓடும் ஓட்டத்தினால் இந்த ஜீவ சக்தி அமில குணம் கொண்டு ஓடுகின்றது.

பூமிக்குச் சொந்தமானது தான் பூமியைச் சுற்றிக் கொண்டுள்ள இந்தப் பத்துப் பதினைந்து மைல் நிலையில் உள்ள காற்று மண்டலம்.

முந்தைய வினா போன்று சக்தி பெரிதா… சிவன் பெரிதா…? என்ற வினாவும் மனிதரிடன் உண்டு. மனித ஆத்மாக்கள் உணராத முறையில்…
1.சில சித்தர்கள் தான் அறிந்ததை… உணர்ந்ததை… மறைமுகமாக்கி
2.சரி பாதி சிவனும்… சரி பாதி சக்தியுமாக…!
3.ஆண்டவனின் ரூபத்திற்கு மனித பிம்ப உருவைக் கல்லில் வடித்துக் காட்டினார்கள்.

எந்த ஒரு அமில பிம்பமும்… அமிலம் திடமாகி அந்தத் திடத்தில் எடுக்கும் ஒளி என்ற சக்தியினால் ஜீவன் கொண்டு…
1.அதன் சுழற்சியில் அமிலமும் கூடுகின்றது.
2.அமிலத்தின் வளர்ச்சியைக் கூட்டினால் அதன் ஈர்க்கும் சக்தி ஒளி அதிகப்படியாக வளர்ச்சிக்கு வருகின்றது.

நம் பூமியும் மற்ற எல்லா மண்டலங்களின் ஆரம்ப ஜீவன்… “சிவ சக்தி…” என் பிம்ப வளர்ச்சி கொண்டது தான்.
1.அமிலமான திடப் பொருள் தான் சிவனாகவும்
2.அமிலமுடன் ஈர்க்கப்பட்ட காந்த ஒளி நிலை தான் சக்தியாகவும் ஆனதப்பா…!

அமில பிம்ப சிவன் ஈர்க்கா விட்டால் சக்தியின் காந்த அலை பாய்ந்து அக்காந்த அலைக்கும் சக்தி இருக்காது. அதே போன்று அமில குண திட பிம்ப சிவத்தில் அச்சக்தி ஒளி பாயாவிட்டால் ஜீவன் பெற முடியாது.

இதன் வளர்ச்சி நிலை தான் எல்லாமில் எல்லாமாக வளர்ந்து… “வளர்ச்சி கொண்ட அண்ட சராசரங்களும் அனைத்து ஜீவ சக்திகளும்…” உருவாகி இயங்கிக் கொண்டுள்ளதப்பா…! இதில் சக்தி பெரிதா…! சிவன் பெரிதா…? என்ற கேள்விக்கு இடமில்லையப்பா…!

1.சக்தி இல்லாவிட்டால் சிவன் இல்லை.. சிவன் இல்லாவிட்டால் சக்தியும் இல்லை.
2.பிம்பம் தான் “சிவம்..” பிம்பத்தின் ஜீவன் தான் “சக்தி…”
3.சக்திக்கும் ஜீவனுக்கும் அப்பாற்பட்ட ஆதி சக்தியின் நிலையை உணர்ந்து வளர வேண்டுமப்பா..! (அனைத்திலுமே)

சிவன் ஆணுமல்ல… சக்தி பெண்ணுமல்ல…! ஒவ்வொரு ஜீவனிலும் சக்தியும் சிவனும் இருந்தால் தான் அஜ்ஜீவன் வாழ முடியும். சித்தர்களினால் மறைமுகமாக மறைத்து வெளிப்படுத்திய நிலை தான் இந்த ஜீவ சக்தி உருவ நிலை…!

விதை முதலில் வந்ததா..? செடி முதலில் வந்ததா…? என்ற வினாவிற்கு அறிவாற்றலின் மனிதன் தன் எண்ணத்தைச் செயல்படுத்தினால் ஆரம்ப வளர்ச்சியான செடியிலிருந்து விதை…! என்ற உண்மையை உணரலாம்.

காற்று மண்டலத்தில் பரவிக் கொண்டிருக்கும் நஞ்சு நம்மைப் பாதிக்காது தடைப்படுத்த வேண்டும்

காற்று மண்டலத்தில் பரவிக் கொண்டிருக்கும் நஞ்சு நம்மைப் பாதிக்காது தடைப்படுத்த வேண்டும்

 

விவசாயங்களில்… பூச்சிகளைக் கொல்ல என்று விஞ்ஞான அறிவால் உபயோகப்படுத்தப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் தாவர இனங்களில் கலந்து விடுகின்றது… அதே சமயத்தில் இந்தக் காற்றிலும் கலந்து விடுகின்றது.

நாம் உணவாக உட்கொள்ளும் நெல்… கத்திரிக்காயிலிருந்து மற்ற எல்லாக் காய்களிலும் பூச்சி மருந்து அடிக்கப்பட்டுள்ளது. அதைப்போன்று நாம் உணவாக உட்கொள்ளும் திராட்சைப்பழம் மாம்பழங்களிலும் இந்த விஷத்தன்மைகள் படர்ந்துள்ளது.

அதை உணவாக உட்கொள்ளும் பொழுது நம் உயிர் உடலில் ஜீவ அணுவாக மாற்றுகின்றது.
1.அந்த ஜீவ அணு எந்த விஷத்தினைத் தனக்குள் வளர்த்துக் கொண்டதோ அது நம்முள் நின்று
2.இந்த விஷங்கள் (பூச்சி மருந்து) எங்கிருந்தாலும் அது தன் உணவுக்காகச் சுவாசித்து இழுக்கும்.
3.தன்னை வளர்த்துக் கொள்ள அவ்வாறு சுவாசிக்கும் பொழுது தன் இனக் குஞ்சுகளை நம் உடலுக்குள் அதிகமாகப் பெருக்கும்.

நம் உடலில் தசைகள் எல்லாம் நன்றாக இருக்கும் ஆனால் அது இருந்த இடத்திலிருந்து விஷத்தைப் பரப்பி அதை உணவாக உட்கொண்டுவிடும். அப்போது நம் உடலுக்குள் வலி… வேதனை தெரியும். இது கேன்சர் என்ற நோயாக வரும் காரணம் இந்த விஷத்தின் தன்மையால் வருவது தான்.

ஒரு மனிதன் மிகவும் வேதனைப்பட்டுச் சாபமிட்டாலும் அதை வேடிக்கையாகப் பார்த்து உற்றுக் கேட்டுணர்ந்தோர் உணர்வுகளில் அந்தச் சாபத்தின் வித்து வேதனையாகப் பதிவாகி விடுகின்றது.

“இப்படித்தான் அவன் ஆக வேண்டும்…” என்று சாபமிடும் பொழுது அந்த உணர்வுகள் ஜீவ அணுவாக மாறி அவன் எதை எல்லாம் பேசினானோ இந்த உணர்வை எடுத்து… நமக்குள் உருப்பெற்ற ஜீவ அணு அவன் சாபமிட்ட அந்த வாக்கை நிறைவேற்றிக் கொண்டே இருக்கும்.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை… வேடிக்கைதான் பார்த்தோம்… சாபமிட்ட உணர்வுகள் இவ்வாறு வந்து விடுகின்றது.

எனக்கு மோசம் செய்தானே பாவி… அவன் கண்கள் குருடாகிவிடும்…! என்று சொன்னால் போதும்.
1.மற்றதை எடுத்து உணர்த்தும் “ஜங்ஷன்” கரு விழிக்குள் ஒரு இணைப்பு இருக்கின்றது
2.அதிலே பட்டுவிட்டால் சிறுகச் சிறுக அது படம் தெளிவாகத் தெரியாதபடி கண்களைக் குருடாக்கிக் கொண்டே இருக்கும்.

கண் பார்வை சரியாகத் தெரியாதவர்கள் இன்று நிறைய இருக்கின்றார்கள். காரணம் இந்த வேதனை உணர்வு கண்ணிலே திரை மறைவாகும்… பார்வை குறைந்து கொண்டே வரும்.

இப்படி இல்லாதவர்கள் யாரும் இல்லை.

பண்டைய காலங்களில் எல்லாம் 90 100 வயது வரையிலும் வாழ்ந்து இருக்கின்றார்கள். அவர்களுக்குக் கண்கள் சீராகத் தெரிந்துள்ளது. இன்றும் கண்ணாடி போடாமல் அவர்களால் வாழ முடிகிறது.
1.ஆக… நஞ்சினை எதிர்க்கும் சக்தி பெற்றவர்கள் அவர்கள்.
2/அந்த நஞ்சினை வென்றிடும் சக்தி இருப்பதால் அது ஒன்றும் பாதிக்காத நிலையாகி விடுகின்றது.

இன்று வாழும் நாம் தவறு செய்யவில்லை. இருந்தாலும் தாவர இனங்களில் தூவப்பட்ட நஞ்சுகள் செடியுடன் கலந்து விஷமான உணர்வாக உட்கொண்ட பின் அது நமக்குள் கலந்து விடுகின்றது.

விஷத்தைக் குடித்தால் எப்படி நம்மை மயக்கமடையச் செய்கின்றதோ அதைப் போன்று நம் தெளிந்த மனதை இழக்கச் செய்து விடுகின்றது. உணவு வழியாக வரும் இந்த நஞ்சின் தன்மை உடலில் ஜீவ அணுவாக மாறிய பின் அந்த விஷத்தையே உட்கொள்கின்றது.

முதலில் தாவர இனங்களில் பூச்சிகள் விழுந்து அது முட்டை இடுகின்றது. பூச்சிகள் விழாமல் இருக்கப் பூச்சிக்கொல்லி மருந்தை அதன் மீது தெளித்த பின் பூச்சிகள் இறந்து விடுகின்றது.
1.ஆனால் அது இட்ட முட்டைக்குள் மேல் தோடு அந்த மருந்தைக் கவருகின்றது.
2.விஷங்கள் அதற்குள் ஊடுருவுகிறது
3.மருந்திலிருந்து வரும் ஆவியின் தன்மையை அதற்குள் (கருவுக்குள்) இணைத்து
4.அதைச் சமமாக ஏற்றுக்கொள்ளும் நிலையாக வருகின்றது… முட்டைக்குள் இருக்கும் பூச்சியை உருவாக்கும் உயிரினங்களுக்கு…!

நாம் தூவும் பூச்சிக்கொல்லி மருந்துகள் இப்படி எல்லா வகைகளிலும் கலந்து உணவுடன் உட்கொள்ளும் பொழுது விஷம் கொண்ட அணுவாக மாறி விடுகின்றது.

உடலுக்குள் ஜீவ அணுவாக மாறி அது அதனுடைய மலத்தை வெளிவிடும் பொழுது கை கால் எல்லாம் கடு..கடு… என்று இருக்கிறது… கண் வலிக்கின்றது தலை வலிக்கின்றது நெஞ்சு வலிக்கின்றது பிடரி வலிக்கின்றது என்று நாம் சொல்லத் தொடங்கி விடுவோம்.

தவறு செய்யாமலேயே…
1.நம் உணவு வழியாக இப்படிப்பட்ட தீமைகள் கலந்து மனிதனுடைய சிந்தனையைக் குறைக்கச் செய்து
2.அடிக்கடி வேதனையைச் சுவாசித்து உடலுக்குள் வேதனையை அனுபவிக்கும் நிலையாக வருகின்றது.

இன்றைய காலகட்டத்தில் இந்த நஞ்சு விளைந்து அது உடலுக்குள் அதிகமாகி விட்டால் சிறுகச் சிறுகக் கேன்சராக முளைக்கத் தொடங்கி விடுகிறது.

நம் உடலில் இருக்கும் ஜீவ அணுக்கள் அதிகமான விஷத்தை நுகர்ந்து விட்டால் அந்த விஷத்தையே வளர்த்திடும் நிலையாக வந்து அருகில் இருக்கக்கூடிய தசைகளில் இருக்கும் நல்ல அணுக்களையும் மடியச் செய்து விடுகின்றது.

இதையெல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொண்டு அதை மாற்றி அமைக்கும் சக்தியாக வர வேண்டும்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்…
1.நஞ்சினை வென்று ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை
2.ஒவ்வொரு நொடிப்பொழுதும் உங்கள் இரத்தங்களில் கலக்கச் செய்ய வேண்டும்.
3.அதிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணுதல் வேண்டும்.

பூமியின் இயற்கையையே பாழ்படுத்திவிட்டான் இன்றையக் கலி மனிதன்

பூமியின் இயற்கையையே பாழ்படுத்திவிட்டான் இன்றையக் கலி மனிதன்

 

நம் பூமியின் ஈர்ப்பிற்கு சக்தி தரும் காந்த மின் அலையின் வளர்ச்சிக்கு ஊற்றாக அமையப் பெற்றது தான்
1.உலகின் மூன்று இடங்களில் உள்ள “காந்த மின் கிணறுகள்…!”
2.கடலுக்கடியில் ஒன்று.. பாலைவனத்தில் ஒன்று… மலைப் பகுதியில் ஒன்று…!
3.இக்காந்த மின் கிணறுகளின் ஈர்ப்பு அதிகப்பட்டுப் பட்டு வளர்ச்சிப்படுமேயானால்
4.நம் பூமிக்கு… பூமியின் ஈர்ப்பு சக்தி அதிகப்படும்.
5.அதனால் அதிகப்படியான ஜீவ இன வளர்ச்சிக்குகந்த சத்து அமில நிலையைத் தர வல்ல தாவரங்களின் இயற்கை வளம் பெருகியிருக்கும்.

நம் பூமியைக் காட்டிலும் வியாழனும் சூரியனும் வளர்ந்துள்ளது. அவைகள் நம் பூமியை விட அதிக ஈர்ப்புக் குணமுடையதாக வளர்ந்து மற்ற எல்லா மண்டலங்களுக்கும் அதன் சக்திக் குணத்தைத் தருகின்றது.

1.அந்த வியாழனைப் போன்று வளர்ந்து பெருக்கும் நிலை நம் பூமிக்கு இப்பொழுது குறைவுபட்டுள்ளது.
2.நம் பூமியும் கன விகிதத்தில் வளர்ந்து தான் வருகிறதேயன்றி
3.தன் ஈர்ப்பின் சக்தியை வளர்க்க முடியாத நிலை ஆகிவிட்டது.

காரணம் இன்றைய கலி மனிதன் தன் விஞ்ஞான செயற்கை மின் அலையைக் காண சூரியனின் சக்தி அலையை
1.நம் பூமி ஈர்க்கும்… பூமியின் இயற்கை வளர்ச்சியைத் தடைப்படுத்தி
2.அதைச் செயற்கை மின்சாரமாகக் கண்டு எடுத்து விட்டான்,

பூமியின் ஈர்ப்புக் காந்த சக்திக்குக் கிடைக்க வேண்டிய ஆகார நிலையை… அது எடுத்து… உண்டு… வளர்ந்து… பலன் காணும் முன்… இன்றைய கலி அறிவு மனிதனால் துரித நிலையில் மின்சாரம் கண்டு பூமியின் வளர்ச்சிக்கும் வருங்கால உயிரினங்களின் வளர்ச்சி நிலைக்கு மாற்றம் தரவல்லவனாகி விட்டான் “இன்றையக் கலி மனிதன்…!”

இக்கலி மனிதனால்… “அவன் அறிவாற்றல்” என்ற மேம்பாட்டில் கண்ட “செயற்கையினால்…!” பல கோடி உயிரணுக்களின் சக்திக் கலவையாகக் கலந்து வாழ்ந்து… தான் வாழ்வதோடு மட்டுமல்லாமல்
1.வளர்ந்து கொண்டே சுழன்றோடும் இந்தப் பூமியின் நிலையைத் தன் செயலுக்காக
2.மின் அலையைப் பாழ்படுத்தியதனால் பூமியின் இயற்கையையே பாழ்படுத்திவிட்டான்.

இதனின் நிலையை மாற்றி நம் பூமி வளரத்தான்… இக்கலி மாறி கல்கியாக வருவதற்குத்தான் பல கோடிச் சித்தர்களும் சப்தரிஷிகளும் செயல் கொள்கின்றனர்.

இக்கலி மாறும் தருணத்திற்குள் இந்தப் பூமியின் அமிலக் குணத்துடன் ஒன்றி வாழ்ந்த மனித இனக் குண சக்தி இருந்தால் தான் மீண்டும் மீண்டும் மண்டல சக்திகளும்… எந்த ஒரு புதிய படைப்பு நிலையும் வளர்க்க முடியும்.

எண்ண சக்தியின் வளர்ச்சி நிலை கொண்ட அமில… குண ஜீவன்.. மனிதனிலிருந்து தான் இந்நிலை வளர முடியும் என்ற உண்மையில் தான் சப்தரிஷிகளும் அவர்களின் ஆசி பெற்ற சித்தர்களும் செயல்படுகின்றனரப்பா…!

கூரை அமைக்கத் தூணோ சுவரோ தேவை, அது போல் இம்மனித ஆத்மாக்களின் எண்ண வளர்ச்சியின் மேம்பாட்டில் தான் மண்டல வளர்ச்சி உண்டு… மற்றெல்லா வளர்ச்சியும் உண்டு.

இதன் நிலையை உணர்ந்து ஒவ்வொரு மனித ஆத்மாவும் இஜ்ஜீவ உடல் பிம்ப நிலையிலிருந்து தன் உயிரணுவான காந்த உயிர் சக்தியை நல்ல நிலையில் எடுக்கும் எண்ணம் கொண்டு இந்த உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களையும் வீரிய சக்தி பெறும் வழித் தொடர்படுத்திடல் வேண்டும்.

தான் எடுக்கும் ஜெப நிலையால் தன் உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களும் ஒளி பெற்று தானாக ஓர் உயிரணு ஆத்மாவுடன் பல கோடி அணுக்களும் ஒன்றுபட்டுச் செயல்படுமானால்
1.அதன் சக்தி ஜெபத்தினால் எடுக்கும் நுண் அலையின் தொடர்பைக் கொண்டு
2.பலவாகப் படர்ந்துள்ள சப்தரிஷிகளின் ஒளி அலையைப் பெற்று
3.அவர்களின் தொடர்பின் மூலம் பல செயல்களை இந்த உயிராத்மாவினால் வளர்க்க முடியும்.

ஏனென்றால் வாழ்க்கையின் பொருள் என்பது வாழும் காலங்களில் பிறர் போற்றித் துதித்து… “மடிந்த பிறகு…. புகழாஞ்சலி பெறுவதல்ல…!”

இம்மனிதப் பிம்ப வாழ்க்கையில் எடுக்கும் ஒளி அலையின் நிலையின் வளர்ச்சி தான் எல்லாவித இயற்கைக் குண வளர்ச்சி மண்டலங்களின் சக்தியும் என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

இப்பொழுது வாழும் குறுகிய கால வாழ்க்கையில்
1.இந்தச் சந்தர்ப்பத்தைக் குறுகிய நிலைப் புகழுடன் மங்க விடாமல்
2.பேரண்டப் பெரு நிலை என்ற உயர்ந்த அண்டமாகும் சக்தி நிலையைப் பெறும் தகுதிக்குத் தான்
3.யாம் இங்கே தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கும் பாட நிலையின் உண்மை நிலை.

தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோவில்

தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோவில்

 

ஆவியின் தொடர்புடன் தான் பல அணுக்களின் உந்தலினால் நாம் வாழ்க்கை வாழ்ந்து கொண்டுள்ளோம் என்றேன். தாஜ்மஹாலின் நிலையை விளக்கினேன்.

இங்கு பல கோயில்களின் நிலையும் அது போல் தான். தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோவில் நிலையென்ன…?

அங்கு ஆண்ட இராஜராஜ சோழனின் எண்ணமேதான் அக்கோயில். எவ்வெண்ணம் வைத்து அவ்வரசன் அக்கோயிலை ஸ்தாபிதம் செய்தாரோ… அதே எண்ணம் கொண்டே அவ்வரசர் உடலை விட்டு அவ்வாத்மா பிரிந்த பிறகும் அந்த நிலையிலேயே அவ்வாத்மா அங்குள்ளது.

இன்றும் மறு ஜென்மம் எடுத்திடாமல் சூட்சும நிலைக்கும் சென்றிடாமல் ஆசையின் நிலையிலேயே அவ்வாத்மா அங்கே சுற்றிக் கொண்டுள்ளது. இதைப் போல் தான் பல கோயில்களின் நிலையும்.

அன்று வாழ்ந்தவர்களின் மன நிலையைப் பொறுத்தே கோயில்களை எழுப்பினார்கள். இங்கு வாழும் மக்களின் எண்ணமும் இங்கு வாழ்ந்தவர்களின் எண்ணத்தின் தொடர்புடன்தான் உள்ளன.

ஒவ்வோர் இடத்திலும் வாழ்ந்தவர்களின் எண்ணம் எந்தெந்த நிலையில் உடலை விட்டுப் பிரிந்து சென்றனவோ அதே நிலையில் தான் அவர்கள் வாழ்ந்த பூமியில் வாழ்பவரின் எண்ணமும் தன் எண்ணத்திற்கு உகந்ததைச் செயல்படுத்த அவ்வெண்ணத்திற்கு உகந்தவர்களின் உடலில் அவ்வாத்மா சென்று தன் எண்ணத்தைச் செயல்படுத்துகிறது.

1.ஒவ்வொரு மனிதனின் நிலையும் இந்த நிலையா…?
2.பிற ஆவிகளின் தொடர்பில்லாமல் யாருமில்லையா…?
3.இங்கு மட்டும்தான் இந்நிலையா…?
4.இவ்வுலகின் மற்ற பாகங்களில் உள்ளவர்களின் நிலையெல்லாம் எந்நிலை…?

இப்படிப் பல வினாக்கள் எழுந்திடலாம் இதைப் படிப்பவர்கள் ஒவ்வொருவருக்குமே.

மன நிலையில் நமக்குள்ள அதி பேராசையும் அதி கோபம் துவேஷம் இந்நிலையை நாம் வளரவிடும் பொழுது பல ஆவிகள் நம்மைத் தாக்கும் நிலைக்கு ஆளாகித்தான் ஒவ்வொருவருமே வாழ்கின்றோம்.

முன் ஜென்மத்தில் நமக்கிருந்த எண்ணத்திற்கும் இஜ்ஜென்மத்தில் வாழும் முறைக்கும் தொடர்புள்ளதினால் ஒரே குடும்பத்தில் வாழ்ந்திடுபவர்களுக்கும் எண்ண நிலை மாறுபடுகிறது. நம் எண்ணத்திற்கு உகந்த அணுக்களின் தன்மையும் நமக்குள் குடிபுகுகின்றது.

1.விதையொன்று போட்டுச் செடி ஒன்று முளைவதல்ல.
2.எண்ணத்திற்கு உகந்த ஆவிகளின் தொடர்பு ஒவ்வோர் உடம்பிலும் உள்ளன.

இந்நிலையிலிருந்து நாம் விடுபட நம் நிலையில் அத்தெய்வ பக்தி என்ற ரூபப்படுத்தி நம் முன்னோர்களென்பது சூட்சும நிலையில் வாழ்ந்திடும் ஆண்டவன் ரூபத்திலுள்ள அரும்பெரும் ஜோதிகள் வழிகாட்டியபடி அஹிம்சையையும் அன்பையும் ஏற்றே பேராசையையும் பெரும் கோபத்தையும் நம்மை அண்டவிடாமல் வாழ்வதுவே நல் வாழ்க்கை.

அவ்வழியினைப் பிடித்து நம்மைச் சுற்றியுள்ள பல ஆவிகளின் ஏவலுக்கு நாம் ஆளாகாமல் இந்நிலையை அறிந்து வாழ்வதுதான் உத்தமம்.

1.ஜோதிடம் கண்டு வாழ்வதுவும் ஆவியின் தொடர்புடன்தான்
2.மை போட்டுக் கேட்பதுவும் ஆவியின் தொடர்புடன்தான்
3.பூ கட்டிக் கேட்பதுவும் கோயில்களில் அருள் வந்து ஆடுபவர்களைக் கேட்பதுவும் ஆவியின் தொடர்புடன்தான்.

வழிவழியாய் வந்தவர்கள் எண்ணத்தில் இருந்து வந்ததுவே ஆண்டவனின் ரூபத்தில் நாமத்தைச் சொல்லித் தன் எண்ணத்தைச் செயல்படுத்த இவ்வாவிகளெல்லாம் வந்து ஆடுவது தான் இன்று நாம் காணும் நிலையெல்லாம்.

இன்று நாம் வாழும் இந்நாட்டில் ஆண்டவனின் ரூபத்தில் ஆவியின் தொடர்பாட்டத்தைக் காண்கின்றோம். இவ்வுலகில் ஒவ்வொரு பாகத்திலும் ஆங்காங்கு வாழ்ந்த மக்களின் எண்ணம் ஒவ்வொரு ரூபத்தில் அவர்கள் ஆவி உலகிற்குச் சென்ற பிறகும் இப்பொழுது வாழ்ந்திடும் மக்களின் ரூபத்தில் வந்தே தான் செயல்படுத்துகிறார்கள்.

ஆவியின் தொடர்பில்லாமல் எத்தேசத்திலும் எந்நிலையும் நடக்கவில்லை…!

விஞ்ஞானியாய் விஞ்ஞானம் பல கண்டு வாழ்பவனுக்கும் அவன் வழியில் இருந்த ஆவியின் தொடர்பினால் தான் இவன் விஞ்ஞானமும் வளர்கிறது. ஒவ்வொரு பாகத்திலும் இவ்வாவியின் தொடர்பு கொண்டுதான் வாழ்கின்றார்கள் மக்கள் எல்லோருமே.

1.தன் நிலை உணர்ந்து வாழ்பவர்கள்தான் சூட்சும உலகிற்குச் செல்கிறார்களே தவிர
2.ஆவியின் தொடர் கொண்டு வாழும் ஒவ்வொருவரும் அடுத்தடுத்தே பல பிறவியை எடுக்கின்றார்கள்.

பல பிறவியில் மனிதராகவே பிறவி எடுத்தாலும் நன்றே…! ஆனால் மனிதப் பிறவி மாறுபட்டு மிருகமாகி மிருகத்திற்கும் கீழ்நிலைக்குச் சென்று புழுவாகி விமோசனமே இல்லாமல் இத்தெய்வமான மனித வாழ்க்கையை ஏன் சிதற விட்டு அழுகும் அணுக்களாக அல்லல்பட்டுச் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும்…?

மனித ஜென்மத்திலிருந்து மாறுபட்டு மிருக ஜென்மத்திற்கு வந்தாலே மனித ஜென்மத்தில் நடந்தவை எல்லாமே மிருக ஜென்மத்தில் தெரிந்திடும்.

நடந்தவைகள நினைத்தே மிருகமாகி ஒவ்வொரு ஜென்மத்திலும் விட்ட குறையெல்லாம் தெரிந்தே ஏன் அல்லல்பட்டு வாழ வேண்டும்…?

1.இவ்வுடல் என்னும் மாய ரூபம் தான் மாறுபடுகிறது
2.நம் எண்ணம் என்றுமே அழிவதில்லை
3.நம் ஆத்மாவுடனேதான் நம் எண்ணமும் சுற்றிக் கொண்டுள்ளது.

இந்நிலையில் நாம் இருப்பதனை உணர்ந்து ஒவ்வொருவரும் தெளிந்து தெரிந்து வாழ்ந்திட வேண்டும்.

தியானத்தின் மூலம் “நாம் வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கின்றோம்” என்பதை எப்படித் தெரிந்து கொள்வது…?

தியானத்தின் மூலம் “நாம் வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கின்றோம்” என்பதை எப்படித் தெரிந்து கொள்வது…?

 

உதாரணமாக… பகலில் நாம் ஒரு அதிர்ச்சியான நிகழ்ச்சியைப் பார்த்த பின் இரவிலே புலனடங்கித் தூங்கும் பொழுது நமக்கு அதே அதிர்ச்சி வருகின்றது… தூக்கம் முழிப்பு… பயம் எல்லாமே வருகின்றது.

அதே போன்று… துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியும் சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்திகளையும் நீங்கள் கவர்ந்து கொண்டால்…
1.இரவிலே புலனடங்கித் தூங்கும் பொழுது உங்களை வான மண்டலத்துடன் இணைக்கும்
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கும்… அந்த உணர்வுகள் உங்களுக்குள் இணையும்.
3.சிலருக்கு மிதப்பது போன்று காட்சிகளும் உணர முடியும்…!
4.உடலுக்குள் இருந்து பளீர்…ர் பளீர்…ர் என்று ஒளியாக மின்னவும் செய்யும்.

தீமைகளை அகற்றிடும் சக்தியாக இந்தத் தியானத்தைச் சீராக கடைப்பிடிப்பவர்களுக்கு இந்த உணர்வுகள் தெளிவாகத் தெரிய வரும்.

இரவிலே வான மண்டலத்தில் செல்வது போன்று தெரியும். முழித்துப் பார்த்தால் உடலிலிருந்து ஒளிப் பிழம்புகள் வெளி வருவதையும் காணலாம்.

ஆகவே நாம் தியானத்தில் எடுத்துக் கொண்ட சக்தி வளர்ந்திருப்பதை நாம் இப்படி அறியலாம்…!
1.வான மண்டலத்திலே உங்கள் உணர்வலைகள் சஞ்சரிக்கும்
2.உங்கள் நினைவாற்றலை அங்கே விண்ணுக்கு அழைத்துச் செல்லும்.

ஏற்கனவே சொன்னது போன்று பயமான உணர்வுகளைப் பதிவாக்கினால் அது அஞ்சி வாழும் உணர்வுகளாக… இரவிலே தூங்குவதற்குப் பதில் நம்மை எழுப்பி… கலக்கமான நிலைகள் கொண்டு தூக்கம் இல்லாத நிலை ஏற்படும்.

அது போன்ற நிலையிலிருந்து நீங்கள் மீள வேண்டும் என்பதற்குத் இதையெல்லாம் தெளிவாக்குகின்றேன்.

மனித வாழ்க்கையில் அருள் ஞானத்தைப் பெருக்கி இருளை அகற்றிடும் சக்தியாக நீங்கள் வரவேண்டும். இதற்கு முன் அறியாது சேர்ந்த தீய வினைகளை நீக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

நீங்கள் எண்ணியதைத் தான் உயிர் உருவாக்குகின்றது. ஆகவே அந்த அரும் பெரும் சக்திகளை… மகரிஷியின் சக்திகளை நீங்கள் எண்ணி ஏங்கி எடுக்கப்படும் பொழுது அந்த ஒளியான அணுக்களாக உங்களுக்குள் மாற்றும் தன்மை வரும்.

அதைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் இவ்வளவு விளக்கமாகச் சொல்கின்றேன்.
1.குருநாதர் எனக்குக் காட்டிய நிலைகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.
2.அதை நீங்கள் மீண்டும் நினைவாக்கினால் அந்த நினைவு உங்களைக் காக்கும் சக்தியாக வரும்.

“நன்மை… தீமை… எல்லாமே…” தெய்வப் படைப்பு தான்…! பிரித்துக் காண முடியாது

“நன்மை… தீமை… எல்லாமே…” தெய்வப் படைப்பு தான்…! பிரித்துக் காண முடியாது

 

1.கடவுள் எல்லாவற்றிலும் உள்ளார்… எல்லாமாகவும் உள்ளார்..!
2.நல்ல சக்தி மட்டும் கடவுள் அல்ல… தீயவையும் கடவுளின் படைப்புதான்.
2.கடவுளின் பிம்பம் நன்மையிலும் தீமையிலும் கலந்தே உள்ளது.

நற்குணம் கொண்ட மனிதனும் கடவுளுக்குச் சொந்தம். தீய குணத்தில் உள்ளவனும் கடவுளின் படைப்பு தான்.
1.இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்தால்
2.தெய்வத்தின் சக்தியை மனித ஆன்மாக்கள் உணர்ந்து நடக்க ஏதுவாகும்.

எல்லாப் படைப்பும் தெய்வத்தின் படைப்பே…!

படைக்கப்பட்டவன்…
1.படைப்பின் பொருள் கண்டு மகிழ்ந்து
2.தன் பொருளான தான் படைத்ததன் பலன் தான்
3.தெய்வ சக்தியின் அருள் வளர்ச்சியும்.. நற்குண வளர்ச்சியும்…!
4.சப்தரிஷிகளின் நிலை பெற்றோரின் வளர்ச்சியினால் தன் படைப்பின் பலனைப் பெற்றான் – “படைத்தவன்”

மனிதன் உருவாக்கும் செயல்களில் இருந்து எப்படித் தன் எண்ணத்திற்குகந்த நிலை பெற்றவுடன் மகிழ்ச்சி கொள்கின்றானோ அதைப் போன்ற மகிழ்ச்சிதான் தெய்வ சக்தியின் வளரும் நற்குண வளர்ச்சியும்…!

நன்மை தீமை கொண்டு தெய்வப் படைப்பு இல்லை. எல்லாமே தெய்வப் படைப்புத் தான். பல சுவையும் இயற்கையில் கலந்து தான் வளர்கின்றது. கசப்பின் சுவை இல்லாவிட்டால் இனிப்பை அறிய முடியாது.

மனித வாழ்க்கையில் ஏற்படும் சோதனை நாட்களை கசப்பாக எண்ணி… அக்கசப்பின் நிலையில் விரக்தி பூணும் மனிதனின் சுவாச அலையின் தொடரினால்… அதே சுழற்சியில் இருந்து சலிப்பின் உந்தலினால்.. பல மனித ஆத்மாக்கள் தன் நிலை உணராமல்… இக்கசப்பான நிலையிலிருந்து மீள முடியாத சிக்கலில் சிக்கி…
1.அதன் உணர்வு அலையின் உந்தலில் ஏற்படும் ஆவேச எண்ண நிலையிலிருந்து மீளாத மனிதன்தான்…
2.தீய வழிகளுக்கும் தீய செயலில் நிலைக்கும் தன் நிலை உணராமல் சென்று விடுகின்றான்.

தனக்கு ஏற்படும் இன்னலில் இருந்து கசப்பான வாழ்க்கையை இனிய செயலாக்குவது இம்மனிதனின் எண்ணம் தான்…! என்று உணர்ந்து
1.கசப்பைத் துவர்ப்பாக்கி
2.துவர்ப்பை இனிமையாக்கும் வாழ்க்கைச் செயலுக்குக் கொண்டு வரலாம்.

அதே சுழற்சி ஓட்டத்தில் செல்லும் மனிதன்… மீண்டும் சோதனையான கசப்பான நிலை தன் வாழ்க்கையில் ஏற்பட்டாலும் அதனை இனிமைப்படுத்திடும் வழித் தொடர் அறியத் தன் எண்ணத்தை அவ்வீர்ப்பின் நிலையுடன் தன் உணர்வு பெறுகின்றான்.

1.இனிமையிலிருந்து வருவதல்ல நல் உணர்வு எதுவுமே…! (இது மிகவும் முக்கியமானது)
2.சுவையான மாங்கனி பிஞ்சில் கசப்பாகவும்.. பிறகு வளர வளர
3.துவர்ப்பு புளிப்புமாகி பிறகு தான் முற்றிப் பழுத்து இனிப்பாகின்றது அல்லவா…!

உள்ளிருக்கும் துவர்ப்பான அக்கொட்டையுடன் ஆரம்ப ஈர்ப்புக் குணத்திலுள்ள அமிலப் படிவம் கொட்டையுடன் உள்ள பொழுதும் அத்துவர்ப்பான கொட்டையின் மேல் சுவையான மாங்கனி வளர்கின்றது அல்லவா…!

1.அதைப் போன்று கசப்பான வாழ் நாட்களை இனிமையாக்கப் பழகிடுங்கள்.
2.கசப்பிலிருந்து தான் இனிமை காண முடியும்.

பல சித்தர்களும் சப்தரிஷிகளும் மற்றும் இன்றைய காலங்களில் உள்ள நீங்கள் அறிந்த வளர்ச்சி கொண்ட எந்த மேதைகளையும் அவர்களின் வாழ்க்கையின் ஆரம்பக் காலங்களில் நடந்த உண்மை நிகழ்ச்சியின் உண்மையை ஆராய்ந்தோமானால் “இதன் நிலை புரியும்…!”

அரசனாக இருந்தாலும் மாமேதையாக இருந்தாலும் எந்த ஆண்டவனும் அவர்களுக்கு அந்தச் சக்தி தரவில்லை. அவரவர்கள் எடுக்கும் எண்ணச் சுவாசத்தினால் அவர்கள் அடையும் பெரு நிலை எல்லாம் இறைவனின் படைப்பு ஒன்றே…! இயற்கையின் சக்தியும் அதுவே…!

வளர்ந்த செயலில்தான் அதனதன் அடிப்படைக் குணமெல்லாம் உள்ளன. இக்குணத்தின் வழி பெற்றது தான் ஆண்டவன் கண்ட பொருள் மகசூலான சந்திரனும்.. சூரியனும்… நம் பூமியும்… நாமும்… எல்லாமே…!

1.நன்மை தீமை கொண்டு படைக்காத ஆண்டவன்
2.தன் படைப்பின் பலனான நல்லதுவும் தீயதுவும் சுழன்றுள்ள நிலையில்
3.தன் வளர்ச்சிக்குத் துணையாக நல்லவற்றைக் காண்கின்றான்.

இப்படி இருக்க ஆண்டவன் படைப்பை எப்படிப் பிரித்துக் காண்பது…?

தாஜ்மகால்

தாஜ்மகால்

 

மக்களின் வாழ்க்கையில்… ஆவியின் தொடர்பு கொண்ட நிலையில் தான் பலரின் நிலை உள்ளது.

1.மனிதர்களின் எண்ணம் நல்வழியில் சென்று… தெய்வ பக்தி கொண்டு அவர்கள் செல்லும் வழிக்கெல்லாம் தெய்வமாக அருள் புரிகின்றார்கள்…
2.நாம் இப்பொழுது போற்றி வணங்கிடும் சப்தரிஷிகளும் ஞானிகளும் சித்தர்களும்.

நல்வழியை மாற்றி நாம் நம் மனதை அடிமைப்படுத்தி வாழும் வாழ்க்கைக்குச் சென்றால்.. அதைப் போன்றே ஆசை கொண்டு சென்ற பல ஆவிகளின் தொடர்புகளை நம்முள்ளேயே நமக்குத் தெரியாமலேயே ஈர்த்துவிடுகிறோம்.

அப்போது… “அந்த ஆவிகளின் ஏவலுக்குகந்தவனாக நம்மை நாம் அடிமைப்படுத்தி வாழ்கின்றோம்…” என்பதனை உணர்ந்து வாழ்வதற்காகத்தான் இதை உணர்த்தி வருகின்றேன்.

காலம் காலமாக இவ்வாவிகளின் நிலை செயல்பட்டுக் கொண்டேயுள்ளது.

நல்ல நிலையில் உடலை விட்டுப் பிரிந்த ஆவிகள் சூட்சும நிலையிலிருந்து கொண்டே
1.தான் வாழ்ந்த குடும்பத்திற்குத் தன் அங்கத்தின் அங்கமாகத் தான் பெற்று வளர்த்த மக்களின் நன்மைக்காக
2.தெய்வமாக இருந்து பல நல் சக்திகளைத் தான் வாழ்ந்த குடும்பத்திற்குப் பாய்ச்சி
3.தன் இரத்த தொடர்புடைய பிள்ளைகள் வாழும் காலம் வரை அந்தக் குடும்பத்திற்குத் தான் விட்டுச் சென்ற சில குறைகளைப் பூர்த்தி செய்திட
4.பல உதவிகளை அக்குடும்பத்தில் உள்ளோர் அறியாமலேயே அது செயல்படுத்தி வருகின்றது.

அந்தக் குடும்பத்திலேயே தன் எண்ணத்தைச் சுழல விட்டு அந்த ஆவியின் நிலை இருக்கின்றது. அந்நிலையின் தன்மை பூர்த்தி பெற்ற பிறகு தான் தன் நிலைக்கு உகந்த உடல் கிடைத்த பிறகு மறு ஜென்மம் பெற்று அடுத்த வாழ்க்கைக்கே வருகின்றது.

ஆனால்… குரோதத்திலும் பேராசையிலும் தான் வாழ்ந்த நாளில் பல தீய பழக்கங்களுக்குத் தன்னை அடிமைப்படுத்தி வாழ்ந்த ஆவிகள் எல்லாம் ஆவி நிலைக்குச் சென்ற பிறகும் எந்த நிலையில் அந்த ஆவி பிரிந்ததோ அதே குரோத நிலையில் தான் சுழல்கிறது.

அந்த ஆவி குரோதத்தை எந்த நிலையில் விட்டுச் சென்றதோ… அதைக் குரோதம் கொண்டவர்கள் மூலமாகச் செயல்படுத்துகின்றது. அதாவது… வும் நல்ல நிலையில் இருந்த ஆவி எப்படியெல்லாம் தன் நிலையைச் செயல்படுத்துகிறதோ அதே போல்தான் இந்தத் துர் ஆவிகளும் வந்து செயல்படுத்துகின்றன.

இத்துர் ஆவிகளின் அத்தகைய சுவாச நிலையினால் தான் மனிதன் மிருகமாகும்… அதாவது மிருக இனத்திற்குச் சென்று வாழும் நிலைக்கு ஆளாகின்றான்.

ஆகவே… வாழ்ந்த நாளில் நாம் எடுக்கும் வாழ்க்கை முறை கொண்டு தான் மறு ஜென்மம் நமக்கு அமைவதே…!

இன்று மனிதர்களுக்கு உள்ள எண்ணமும் செயல் திறமை அறிவு அனைத்துமே மிருக ஜெந்துக்களுக்கும் பறவைகளுக்கும் உண்டு.
1.மனிதனைக் காட்டிலும் பறவைகள் மிருகங்கள் இவைகளுக்குத் தன் போன சரீரத்தின் நிலை எல்லாம் தெரிந்திடும்
2.நாய்க்கு அனைத்து நிலைகளையும் தெரிந்துவிடும்,

ஆனால் அவைகளுக்குச் சொல்லாற்றலும் நம்மை ஒத்து செயல்படுத்த அங்கங்களும் இல்லாததினால்… “தான் விட்டுச் சென்ற குறையை எண்ணியே மிருகமாக வாழ்கின்றன…”

ஆனால் அந்த மிருகத்தைத் தன் நிலைக்கு அரும்பெரும் சுவையாக்கிச் சமைத்து உண்ணுகின்றான் ஈன்றைய மனிதன். இவன் உண்ணும் நிலையும் ஆவியாகி அந்த மிருகத்துக்கும் தெரிகின்றது.

மிருக உணவையும் பறவைகளின் உணவையும் நாம் புசிப்பதினால்
1.அவற்றின் உடல்களில் எந்தெந்த அணுக்களின் தாக்குதல்கள் இருந்தனவோ
2.அவற்றையெல்லாம் நம்முள்ளும் நாம் ஏற்றிக் கொள்கின்றோம்.

இப்படியெல்லாம் பல நிலை கொண்ட ஆவித் தன்மைகள் இந்த உலகில் உள்ள பொழுது
1.அந்த ஆவி அணுக்களுக்கு நம்மை நாம் அடிமைப்படுத்திடாமல்
2.வரும் தடங்கல்களை எல்லாம் நாம் போக்கிக் கொண்டு
3.நம்முள் உள்ள சிறு சிறு மனச் சஞ்சலங்களையும் நம்மையே சுற்றிக் கொண்டில்லாமல் அதைப் புனிதப்படுத்தி வாழ்ந்திட வேண்டும்.

இன்று தாஜ்மஹால் என்ற நிலையில் உள்ள மும்தாஜ் எனும் ஆவியின் நிலை என்ன…?

அந்த ஆவி இன்னும் அந்த தாஜ்மஹாலிலேயே அந்த நிலையிலேயே சுற்றிக் கொண்டுள்ளது.

எந்த எண்ணத்தைப் பூர்த்தி பெறாமல் விட்டுச் சென்றதோ அதே நிலையில் தான் இன்னும் உள்ளது அந்த இரண்டு ஆவிகளுமே…! ஷாஜஹான் என்னும் ஆவியும் மும்தாஜின் ஆவியும்.
1.அவ்வாவிகளுக்கு அதற்கு மேல் நிலைக்குச் செல்லும் நிலைக்கும் ஆசைப்படவில்லை
2.மறு ஜென்மத்திற்கும் வரவில்லை… சூட்சும நிலைக்குச் செல்வதற்கும் முடியவில்லை.

ஆனால் அந்த இரண்டு ஆவிகளுமே ஆனந்த நிலையில் தான் இன்றும் அந்நிலையில் உள்ளன. அவையின் நிலை என்றுமே அந்நிலையில் தான் இருந்திடும்… ஆனந்த நிலையில் அன்புடனே வாழ்ந்து வருகின்றன. அந்த மாளிகையில்…!

வாழ்ந்த நாளில் இரண்டும் இணைந்து வாழாத நிலையில் ஆவி நிலையில் இணைந்த காவியக் காதலராக இன்றும் வாழ்கின்றார்கள் அந்த இரண்டு ஆவிகளுமே.

இந்நிலை போல் ஆவி உலகில் பல நிலைகள் உள்ளன.