
உயிராத்மாவைக் காக்கும் வலிமைமிக்க சக்தியே வள்ளி
கேள்வி:-
ஓம் ஈஸ்வரா குருதேவா… 🙏
நமது உயிரணு நம் புவியின் ஈர்ப்புக்குள் வந்து, பல பல தாவர இனங்களை நுகர்ந்து, உடல் பெற்றாலும்…. சந்தர்ப்பத்தால் ஓர் விஷச்செடியின் மணத்தை நுகர்ந்து விட்டால், அந்த மணத்தின் தன்மை அந்த உடலுக்குள்… எதிர் நிலையாகி, தான் நுகர்ந்து கொண்ட விஷத்தின் ஆற்றல், அந்த உடலுக்குள் வங்கிட்டு அதன் வளர்ச்சியின் கதியில் அடுத்த சரீரம்…. மற்ற உயிரினங்களை உட்கொள்ளும் உயிரினங்களாக உருப்பெறுகின்றது.
ஆனால், பரிணாம வளர்ச்சியில் தன்னைக் காட்டிலும் வலுவான உயிரினங்களிடமிருந்து தன்னை அவற்றிடமிருந்து காத்துக் கொள்ளும் நிலை பெற்றாலும்… அதன் உடலிலிருந்து வெளிப்படும் ” வலிமையான உணர்வை ” நுகர்ந்தோ அல்லது அதன் உடலுக்குள் சென்று “அதன் உணர்வைக் கவர்ந்தோ” வலிமையான உடல் பெறுகின்றது.
அதாவது நமது உயிர் ஒவ்வொரு சரீரத்திலும், வலிமையான சக்தியை நோக்கி சென்று, அதை நுகர்ந்து, வலிமையான உடல் கொண்ட உயிரினங்களாக உருவாக்குகின்றது.
இதில், தான் நுகர்ந்து கொண்ட “வலிமையான சக்திதான்” ஒவ்வொரு சரீரத்திலும் தன்னை தற்காத்துக் கொள்ளும் நிலைகள் பெற்றது.
இதில்
1) ராமாயணத்தில் உணர்த்தப்பட்ட வலிமையான சக்தி, கைகேயி… மனிதனான பின் இந்த வலிமையின் சக்தியின் செயலாக்கங்கள் ராமனை அதாவது நல்ல எண்ணங்களை ஒதுக்கிடும் நிலைகளை உருவாக்குகின்றது.
2) கந்த புராணத்தில் வலிமையான சக்தியைக் காட்டி அதை ஆறாவது அறிவான முருகன் காதலிக்கின்றான் என்று உணர்த்தப்பட்டுள்ளது.
அதற்கும் இதற்கும் உண்டான வித்தியாசம் என்ன சாமிகளே…?
நாம் மனிதனான பின் நமது உயிரான ஈசனுக்கு, இந்த பிரபஞ்சத்திலேயே… வலிமையான சக்தியான “துருவ நட்சத்திரத்தின் உணர்வை” நமது உயிருடன் ஒன்றி… நமது உயிர் வழியாகக் கவர்ந்து, நமது உயிரால் உருவாக்கப்பட்ட அணுக்களையும் பெறச் செய்யும் தியானத்தை நமது ஞானகுருவும், சற்குருவும் அருளியுள்ளார்கள்.
நமது ஞானகுரு ஓர் உபதேசத்தில் “நான் துருவ நட்சத்திரத்தை காதலிக்கிறேன்” என்று உரைத்துள்ளார்.
ஆகவே ராமாயணத்தில் காட்டப்பட்டுள்ள வலிமையான சக்திக்கும், கந்த புராணத்தில் காட்டப்பட்டுள்ள வலிமையான சக்திக்கும் உள்ள வேறுபாடு என்ன..?
பதில்:-
நமது குருநாதர் (ஞானகுரு) பரிணாம வளர்ச்சியைப் பற்றிச் சொல்லும் பொழுது மனிதனுக்கு என்று சில வழிமுறைகளை தனியாகக் காட்டியுள்ளார்.
ஏனென்றால் மற்ற உயிரினங்கள் அனைத்துமே மனிதனைக் காட்டிலும் அறிவின் வளர்ச்சி குறைவு. அவைகள் தன்னைக் காட்டிலும் வலிமையான சக்தியை நுகரப்படும் பொழுது பரிணாம வளர்ச்சியாகின்றது.
ஆனால் மனிதனுக்கோ வலிமை எது…? என்று சாஸ்திரங்கள் கூறியிருந்தாலும் அது எல்லாம் அரசர்கள் காலத்தில் மறைக்கப்பட்டு விட்டது.
1.ஆகையினால் வலிமை என்று எண்ணினாலே மனிதன் தன்னுடைய உடல் வலிமை தான் என்றும்
2.அதனுடன் இணைந்த எத்தனையோ மற்ற செயல்களோடு இணைத்து அதைத்தான் வலிமை என்று எடுத்துக் கொள்கின்றான்
3.அதனால் தான் ராமாயணத்திலே அந்த வலிமையைக் காட்டுவதற்கு கைகேயி என்று பெயர் வைக்கின்றார்கள்
4.கை+கேயி – மனிதனுடைய கை மிக மிக சக்தி வாய்ந்தது… அதனால் செய்யக்கூடிய வேலைகளும் எண்ணில் அடங்காது
5.கைகேயி என்று சொல்லும் பொழுது கையால் செய்யக்கூடிய செயல்கள் தான் (மற்ற உயிரின்ங்களுக்குக் கையே இல்லை)
6.குருநாதர் காட்டிய வழியிலே பார்க்கப்படும் பொழுது மற்றொன்றை வீழ்த்திடும் உணர்வாக
7.மூன்று உலகத்தையும் “அடக்கிடும் சக்தியாக” அது வருகின்றது.
இங்கே மூன்று உலகம் என்று சொல்வது உருவாக்குதல் காத்தல் அழித்தல் என்ற நிலையில் அனைத்தையுமே தனக்குக் கீழ் கொண்டு வரும்… அதை அடிமைப்படுத்தும் அத்தகைய செயலைத்தான் “அதாவது கையிலே சாதிக்கக்கூடிய இந்த வல்லமையைத் தான் கைகேயி” என்று பிரித்துக் காட்டுகின்றார்.
ஆனால் கந்த புராணத்தில் காட்டப்பட்ட வள்ளி வலிமை என்பது பரிணாம வளர்ச்சியினுடைய “முக்கிய மூலக்கூறான வலிமை…”
1.அதாவது தன்னைக் காட்டிலும் வலிமை எது என்பதை அது உற்றுப் பார்த்து
2.அதை நுகர நேர்ந்து வலிமைமிக்க அந்த உணர்வைச் சேர்த்துச் சேர்த்து தன்னைக் காத்திடும் உணர்வாக வளர்ச்சிக்கு வருகின்றது.
கைகேயி என்ற வலிமையோ… தன்னைக் காக்க என்று சொல்லிக் கொண்டு மற்றதை வீழ்த்துகின்றது.
ஆனால் வள்ளி என்ற வலிமைமிக்க சக்தி
1.தன்னைக் காத்திடும் நிலையாக வளர்ச்சியின் பாதையிலே
2.வளர்ச்சிக்கு உகந்த உணர்வை நுகர்கின்றது.
மனிதனுடைய அறிவு இன்று தேய்பிறையாகி பரிணாம வளர்ச்சி என்ற வழிகளில் செல்லாதபடி அரசன் காட்டிய வழியில் மற்றதை வீழ்த்திடும் உணர்வாக அது சென்று கொண்டிருக்கின்றது என்பதைத் தான் (முதலில் சொன்ன்படி) குருநாதர் அடிக்கடி பிரித்துக் காட்டுவார்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால்
1.நம்மை காக்கும் சக்தி தான் வள்ளி
2.நம்மை வீழ்த்திடும் சக்திதான் கைகேயி
பரிணாம வளர்ச்சியில் மனிதனுக்கு அடுத்த நிலை என்பது தெய்வ நிலை பெறுவது தான். ஆனால் தெய்வத்தையும் மனிதனையும் பிரித்து அரசர்கள் சரணாகதி தத்துவமாகக் காட்டியதால் “மனிதனுக்கு அடுத்த வளர்ச்சியே எது…?” என்ற அந்த ஞானமே மறைந்து போய்விட்டது.
மறைந்து போனதைத் தான் குருநாதர் காவியங்களில் உள்ள சூட்சுமங்களை நமக்குத் தெளிவாக எடுத்துப் பிரித்துக் காட்டுகின்றனர்
மனிதனாகப் பிறந்து நாம் எதையும் அடக்கி ஆட்சி புரிய வரவில்லை.
1.நமக்குள் ஆட்சி புரியும் உயிருடன் ஒன்றி ஒளியின் சுடராக
2.பிறவியில்லா நிலை பெறுவது தான் பரிணாம வளர்ச்சி.
உயிரைப் பற்றிய அறியாத உயிரினங்கள் வலிமையானதை நுகர்ந்து வளர்ச்சிக்கு வருகிறது. ஆனால் மனிதனோ தான் வலிமையானவன் என்று எண்ணிக் கொண்டு மற்றதை வீழ்த்தினால்தான்… தான் வாழ முடியும் என்று அரசன் வழிகளிலே (சத்ரிய தர்மம் என்ற பெயரில்) சென்று விட்டான். ஞானிகள் காட்டிய நிலைகள் மாறிவிட்டது.
1.தனக்குள் ஆட்சி புரியும் உயிரைப் பற்றிய உண்மையை அறியக்கூடிய தகுதி மனிதனுக்கு மட்டும்தான் உண்டு
2.அப்படி அறிந்தவன் தான் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக அழியாத நிலையில் வாழுகின்றான்.
அதனால் தான் குருநாதர் அந்த துருவ நட்சத்திரத்தின் சக்தியை… அந்த வலிமையான சக்தியை… மனிதனுடைய ஆறாவது அறிவு என்று சொல்லுகின்றோமே… முருகன் அதைக் காதலிப்பதாக “கந்த புராணத்தில் உள்ள உண்மையை” துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் காதலிக்க வேண்டும் என்று நமக்கு வழிகாட்டுகின்றார்கள்.
ஆகவே… கைகேயி என்பது பாதுகாக்கும் சக்தி அல்ல. தன்னைக் காக்க மற்றதை வீழ்த்தும் சக்தி. அது மனித உருபெற்ற எண்ணத்தையே ஆட்சிக்கு வராது செய்கிறது என்று இராமனைக் காட்டிற்கு அனுப்பச் சொல்கிறது.
1.ஆனால் வள்ளி என்பது பாதுகாக்கும் சக்தி… எதை…?
2.மனிதனுடைய நிலையில் உயிரான்மாவைக் காக்கும் சக்தி.
மற்ற உயிரினங்கள் உடலைக் காக்கும் சக்தியில் பரிணாம வளர்ச்சி அடைகின்றது. மனிதன் ஆறாவது அறிவு கொண்டு உடலை உருவாக்கிய உயிரை உணரக்கூடிய சக்தி பெற்றவன்.
இந்தப் பாதையைத்தான் குருநாதர் நமக்குக் காட்டி உயிரான்மாவைக் காக்கும் சக்தியாகக் கார்த்திகேயா என்று காட்டி அந்த வலிமையான சக்தியை “வள்ளியை அவன் காதலித்தான்…” என்று காட்டுகின்றார்கள்.








