நம் உடலிலுள்ள அமில சக்தியின் சக்தியே “பெரும் சக்தி…!”

நம் உடலிலுள்ள அமில சக்தியின் சக்தியே “பெரும் சக்தி…!”

 

எண்ணத்தில் உயர் ஞானத்தையும் நற்செயலையும் ஆத்மீக நெறி கொண்ட அன்பு வாழ்க்கையையும் வழி நடத்திட்டால் அந்த நிலையில் பெறும் சக்தியின் திறன் தானப்பா நாம் அடைந்திடும் பேரானந்த வாழ்க்கை.

ஆரம்ப வழித்தொடர்…
1.வாழ்க்கையுடனும் பிற எண்ணங்களின் மோதலினாலும் தொடரை வழிப்படுவதற்கு சிரம நிலை கொண்டிடலாம்
2.அச்சிரம நிலையிலிருந்து வழி நடந்து வந்திட்டால் இப்பேரின்ப நிலையை அடைந்திடலாம்.

இன்றைய விஞ்ஞானத்தினால் செயற்கைக்கோளை இப்பூமியிலிருந்து மற்ற மண்டலங்களின் நிலையறிய ஏவுகின்றனர்.

இப்பூமியின் காற்று மண்டலத்தையும் இப்பூமிக்கு மேல் சில தூர விகிதத்திற்கு அந்த ஏவுகணையைச் (இராக்கெட்) செலுத்திட இவ்வமிலங்களின் (அணுகாந்த மின் அலை) உதவியினால் செலுத்தி அதற்கு மேல் உள்ள நிலைகளுக்கு எந்த அமில சக்தியின் நிலையில்லாமலே இயக்கிடும் நிலைக்கு அவ் ஏவுகணை செல்கின்றது.

குறிப்பிட்ட தூர விகிதத்திற்குத்தான் மற்ற அமில சக்தியின் நிலையினால் இயங்குகிறது அந்த ஏவுகணை. பிறகு செல்லும் நிலைக்கெல்லாம் எரிபொருள் செலவு நிலை இல்லாமலே செல்லும் நிலையைத்தான் செய்வித்து அனுப்புகின்றனர்.

அதைப் போலவே நம் எண்ண சக்தியின் வழித் தொடரினை நற்சக்திக்கு வழிப்படுத்திட்டால் ஆத்மீக நெறிக்கு நம்மை வழி நடத்திட நம் உயிராத்மாவின் சக்தியினால் முடிந்திடும்.

1.இவ்வுடல் என்னும் அமிலங்கள் நிறைந்த இப்பிம்பத்தின் காந்த சக்தியின் நிலையை நாம் உணர்ந்திட்டால்
2.இப்பிம்பத்தையே பறக்கும் நிலைக்கும் பதப்படுத்திடலாம்.
3.நம் உடலிலுள்ள அமில சக்தியின் சக்தியே பெரும் சக்தி…!
4.இச்சக்திதனை நாம் உணர்ந்திடாமல் நம்மையே நாம் விரயப்படுத்தித்தான் வாழ்கின்றோம்.

செயற்கையினால் இன்று காணும் அனைத்து நிலைகளையுமே… அனைத்து நிலையென்பது ஒலி… ஒளி… இவற்றின் ஈர்ப்பு சக்தி கொண்ட நிலையை எல்லாம் இவ்வுடல் என்னும் அமில சக்தியின் தொடபினாலேயே கண்டிடலாம்.

“இவ்வெண்ண சக்தியின் வழித்தொடர் பெற்றோரின்…” சொல் செயல் பார்வை இவற்றின் சக்தி நிலையினால் அவர்கள் சொல்லும் சொல்வாக்கு பலிதம் கொள்ளும்.

ஒருவரைக் காணும் பொழுது அவரின் மேல் எவ்வெண்ணத்தின் நினைவுடன் அவரின் சுவாசக் காற்று பட்டுக் காண்கின்றனரோ அவ்வெண்ண நிலைப்படியே அவர்களைக் காண்பவரின் நிலையும் நடக்கும்.

1.ஆத்மீக நெறியறிந்து சக்தி நிலை பெற்றோரின் சொல்வாக்கும்
2.அவர்கள் எண்ணத்தில் பாய்ச்சிடும் விழியின் ஒளி நிலையும் பலிதம் கொள்ளும்.

ஒவ்வோர் ஆத்மாவிற்கும் இப்பேரின்ப சக்தியுண்டு. மகான்களின் நிலையிலெல்லாம் இந்நிலையுண்டு.

1.மகான்கள் சென்ற இடமெல்லாம் சிறப்பு
2.அவர் புண்ணிய பாதம் பட்ட இடமெல்லாம் செழிப்பு
3.அவரின் பார்வை பட்டாலே புண்ணியம்
4.அவரின் ஆசியினால் பேரின்பம் கிட்டும் என்ற வழித் தொடரிலுள்ள நாம் அத்தொடரினையே
5.அம்மகானின் புண்ணிய நிலையை நம் ஆத்மாவுடனும் கலந்து நாமும் அம்மாகனைப் போன்ற மகான்கள் ஆகலாம்.

இந்த உண்மை உணர்ந்து… உயர்ந்த நிலையிலுள்ளோரைத் தாழ்ந்தே வணங்கி… “தாழ்ந்த நிலையிலேயே இருந்திடாமல்…” அவரின் அடிச்சுவட்டைப் பற்றியே உயர்ந்து… அவரின் நிலையுடனே உயர்நிலை பெறும் மகான்களாய் நல் ஆத்மாவாய் நாமும் கலந்திடல் வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து ஒவ்வொருவரும் வாழ்ந்திடல் வேண்டும்.

1.அடிமை கொண்டு வணங்கி வாழ்ந்திடுவதல்ல வாழ்க்கை.
2.அன்பு கொண்டே வணங்கிடல் வேண்டும்.
3.அன்புடனே அன்பாய்க் கலந்து வாழ்ந்திடல் வேண்டும்.

ஆனால் நம் வழி முறையும் செயல் முறையும் அடிமை கொண்ட நிலையில்தான் மகான்களின் நிலையையும் பணிந்து பற்றி வாழ்கின்றனர்.

மகானுடனே மகானாய்க் கலக்கும் மனப்பக்குவ நிலையை வளர்த்து இவ்வுலகின் சக்திச் செல்வமான சக்தி ஆத்மாக்கள் அனைவருமே
1.சக்தி ஜோதியாய்த் திகழ்ந்திடும் உண்மையினை உணர்ந்து
2.உன்னத வழி பெற்றே மகாமகான்கள் ஆகிடுங்கள்.

அஞ்சனை நேயன் – ஆஞ்சநேயன்

அஞ்சனை நேயன் – ஆஞ்சநேயன்

 

ஒரு நோயாளியின் உணர்வை நாம் நுகர்ந்து
1.”அவருக்கு நோய்” என்று அறிந்த அடுத்த கணம் நமக்குள் அது வராதபடி மாற்றுவதற்குத்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நம் புருவ மத்தியில் அடைத்துப் பழக வேண்டும்.
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை வைத்து அங்கே அடைத்த பின் அந்த நோயின் உணர்வு அனாதையாகி விடுகிறது.

கூடக் கொஞ்ச நேரம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகமாகச் சேர்க்க நோயாளியை உற்றுப் பார்த்து நாம் நுகர்ந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து மேலே கொண்டு சென்று விடுகிறது.

அதாவது… செடி கொடிகளில் (வெயில் தாக்கப்படும் பொழுது) அதில் விளையும் சத்தின் மணங்களை ஆவியாக மாற்றிச் சூரியனின் காந்த சக்தி எடுத்துக் கொள்வது போன்று இதையும் எடுத்துக் கொள்கின்றது.

நம் வீட்டிலே சமையல் செய்கின்றோம். எல்லாப் பொருளையும் சேர்த்துக் கலந்து வேக வைத்த பின் ஆவியாகப் போவது எங்கே செல்கின்றது…?
1.நீரை எடுத்தவுடன் கனமான சத்தைச் சூரியன் எடுத்துக் கொள்கின்றது
2.மேலே கொண்டு சென்று மேக மண்டலத்துடன் ஆவியாக நின்று விடுகின்றது.
3.உப்புச் சத்துக்கள் அதிலே கலந்தால் மழையாகப் பெய்கின்றது.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

இது போன்றுதான் நோயாளியைப் பார்த்த பின் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நாம் ஆத்ம சுத்தி செய்யும் போது நம் உடலில் இருந்து வெளிப்படக்கூடிய வேதனையான (நோயாளியின்) அந்த உணர்வின் ஆவியை சூரியன் எடுத்துக் கொள்கிறது… நமது ஆன்மா பரிசுத்தம் ஆகின்றது.

புருவ மத்தியிலே துருவ நட்சத்திரத்தின் சக்தியை எண்ணி நிலை நிறுத்தப்படும் போது உடலுக்குள் போகாது தடைப்படுகின்றது. ஆனால் அதே சமயத்தில்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அந்த நோயாளிக்குக் கிடைக்க வேண்டும்
2.நோய் நீக்கும் சக்தி அவர் பெற வேண்டும்.. அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.
3.இந்த உணர்வை எடுத்து அவருக்குள் இணைக்கப்படும் பொழுது “அஞ்சனை” (பெண்பால்)

சீதா என்ற சுவையை அங்கே உருவாக்குகின்றோம். நோயை எண்ணாதபடி அந்த நோயுற்றவர் நன்றாக வேண்டும்… அவர் நோய் நீங்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் சொல்லும் பொழுது சீதாராமா.

துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும்… என் நோய் நீங்க வேண்டும் என்று அந்த நோயாளியால் எண்ண முடியவில்லை.
1.நாம் எண்ணி இவ்வாறு சொல்லப்படும் பொழுது அது இராமனின் பக்தன் “ஆஞ்சநேயன்” என்று ஆகிறது.
2.அருள் உணர்வுகளை “அவருக்குள் நேயமாக இணைத்து” தீமைகளை நீக்கி நல்லவைகளாக உருவாக்கும் தன்மை.

அது தான் ஆஞ்சநேயன். அவன் வாயு புத்திரன்…! உயிரிலே பட்டபின் வாயுவாக மாறுகின்றது அவர் (நோயுற்றவர்) உடல் முழுவதும் சுழன்று வருகின்றது. உடலில் எந்த இடத்தில் நோய் இருக்கின்றதோ அந்த உணர்ச்சிகள் அங்கே போய்த் தாக்குகிறது.

சுக்ரீவனின் மந்திரி ஆஞ்சநேயன்…! துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைத்து நாம் சொல்லாகச் சொல்லப்படும் பொழுது அவன் உடலில் தீமையை நீக்கும் இந்த உணர்வுகளை ஊட்டுகின்றது; வேதனை என்ற நினைவை மாற்றுகின்றது; தீமையான நிலைகளுக்குள் இந்த வலுவின் தன்மை சென்று நோயை நீக்குகின்றது…!

இது எல்லாம் சூட்சுமத்தில் நடப்பதை உருவம் அமைத்து இராமாயணம் (எண்ணம்) எதன் சுவை சீதாராமனாக எண்ணங்களாக வருகின்றது…? என்று காட்டுகின்றார்கள்.

வேதனைப்படும் உணர்வுகள் அதுவும் சீதா… வேதனைப்படுத்தும் சுவை. அதை நாம் நுகரும் போது எண்ணமாக வருகின்றது அதுவும் சீதாராமன் தான். அந்தச் சுவையின் நிலைகள் நுகரப்படும் போது நாம் வேதனைப்படுகின்றோம்.

ஆனால் வேதனையை நீக்கி சந்தோஷத்தை ஊட்டுவது “துருவ நட்சத்திரத்தின் சக்தி… அந்த சீதா…!” நோயை நீக்க வேண்டும் என்று சொல்லும் பொழுது இராமனின் பக்தன் ஆஞ்சநேயன். அவன் வாயு புத்திரன்… சுக்ரீவனின் மந்திரி.

இராமனுக்கு சுக்ரீவன் துணை செய்கின்றான் என்று காவியம் காட்டுகின்றது. துருவ நட்சத்திரம் தான் இங்கே சுக்ரீவன். அந்த சுக்ரீவன் என்ற உணர்வைச் செயல்படுத்தும் போது எத்தகைய தீமையாக இருந்தாலும் அதை நீக்கும் வல்லமை பெறுகின்றோம்.
1.எல்லா இடங்களுக்கும் ஊடுருவி – இலங்கைக்குள் (நம் உடலுக்குள்) வேதனை என்று சீதா அடைபட்டு இருப்பதை மீட்டு
2.சந்தோஷத்தை ஊட்டும் நிலையாக மாற்றுவதற்காக அவ்வாறு காட்டுகின்றார்கள்.

ஏனென்றால் நோயாளியின் உணர்வை இந்த உடலுக்குள் (இலங்கைக்குள்) நுகர்ந்தால் சந்தோஷம் தீவுக்குள் (சிறு இடத்திலே) அடைபட்டு விடுகிறது. தீமை என்ற உணர்வுகள் சந்தோஷத்தை ஆடைய விடாதபடி இலங்கேஸ்வரன் (அரக்க உணர்வுகள்) அடைத்து வைத்திருக்கின்றான் என்று காட்டுகிறார்கள்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று சொல்லும் போது…
1.இராமன் சுக்ரீவன் துணை கொண்டு படைகளத்துடன் சென்று இந்த உணர்வின் சொல்லாகச் சொல்லப்படும் போது
2.வாயுவாகப் பல நிலைகளுக்குத் தாவிச் சென்று அவன் சுவாசிக்கும் உடலுக்குள் சென்று
2.சீதாவுக்கு ஊக்கம் ஊட்டி… இராமனின் உணர்வுகளை ஊட்டி… அதே உணர்ச்சியின் உணர்வுகளை
3.சுக்ரீவன் (துருவ நட்சத்திரம்) எதைச் செய்தானோ அதன் உணர்வின் தன்மை இங்கு ஊட்டப்படும் பொழுது
4.வாயு புத்திரனாக உள்ளே சென்று வலுவான உணர்வுகளை ஊட்டி மகிழ்ச்சி உருவாக்குவதாகக் காட்டுகின்றார்கள்.

“தானாய் ஒளிரும்” ஜோதி நிலை பெறுங்கள்

“தானாய் ஒளிரும்” ஜோதி நிலை பெறுங்கள்

 

தீப ஜோதியைக் கண்டிடவே தீபங்களை ஏற்றி வைத்துப் புனித நன்னாளாய்க் கார்த்திகைத் திருநாளைத் தீபத்தின் ஜோதியிலே ஜோதியாய் வணங்குகின்றீர்.

தீபம் ஏற்றி வணங்கிடும் நாளில்…
1.தீப ஜோதியையே உம்முள் ஐக்கியப்படுத்திடும்
2.ஜோதி தீபங்களாய் வாழ்ந்திடும் “எண்ண தீபத்தை ஏற்றிடுங்கள்…!”

எண்ணெயும் திரியும் ஏற்றுவதற்குத் தீக்கோளப் பெட்டியும் செயற்கை கொண்டு தீபம் ஏற்றி தீப விழாவாக்கி மகிழ்ந்திடும் நன்னாளை…
1.என்றுமே தீபமாய்ச் சுடர்விடும் ஆத்ம விளக்கை
2.”எண்ண தீபத்தில் இயற்கையின் சக்தியில் கலக்கவிடுங்கள்…!”

நம் பூமியின் ஒலியினால் ஒளியாகி ஒளியுடனே வாழ்ந்துள்ள நாம் நம்மைப் போன்ற ஒவ்வொரு மண்டலமும் ஒலி கொண்டு ஒளி பெற்று வாழ்வதைப் போல்…
1.மற்றச் சாதனங்களினால் எரிந்து ஒளிவிடும் ஒளியாய் இல்லாமல்
2.தானாய் ஒளிரும் ஜோதி ஒளியை ஒவ்வொருவரும் தன்னுள் ஏற்றி ஒளி பெற்றிடுங்கள்.

சூரியனும் மற்ற அனைத்து மண்டலங்களும் தானாகவே தன்னுள்ளேயே ஒளியினால் ஒளி பெற்றுச் சுற்றிடும் ஜோதி மயம் போல் ஒவ்வோர் ஆத்மாவுமே…
1.அவரவர்களின் ஆத்மாவுடன் ஜோதியின் சக்தியைப் பெற்று
2.ஜோதி மயமான ஜோதியுடனே கலந்தும் தனிப்பெரும் சக்தியினைப் பெற்றிடலாம்.

நம் ஆத்மாவிற்கு உள்ள சக்தியினை நாம் உணர்ந்திடல் வேண்டும். நம் ஆத்ம சக்தியை நற் சக்திகளின் சக்தியாய் ஒளிரச் செய்திடல் வேண்டும். ஆனால் நம் சக்தியை நாம் அறிந்திடாமல் பல தீய சக்திகளுக்கு நம்மை அடிமைப்படுத்தி வாழ்கின்றோம்.

1.வாழ்க்கையுடனே தியான வழியின் ஜோதித் தொடரை வளரவிட்டு வாழ்பவருக்கு
2.நம் ஆத்ம ஜோதியின் சக்தியினைப் பூர்ணமாக அறிந்திடும் சக்தி நிலை வந்தடையும்.

வாழும் காலம் குறுகியதுதான்…! “மனித ஆத்மாவாய் வாழ்ந்திடும் காலத்தில்தான்…” நம் ஆத்மாவிற்கு நாம் சேமிக்கும் வளர்ச்சி நிலையெல்லாம் கிட்டுகின்றது.

உடலை விட்டுப் பிரிந்து செல்லும் ஆத்மாக்களுக்கு… ஆத்ம வளர்ச்சி வளர்ச்சி என்பது சக்தி நிலை கூடிடும் நிலையில்லை. உடலுடன் கொண்ட ஆத்மாக்களினால்தான் வாழ்ந்திடும் பக்குவத்தில் ஆத்மாவை ஜோதியாக்கிட முடிந்திடும்.

வாழ்வும் சாவும் என்ற இரண்டு நிலைகளைத்தான் உணர்ந்துள்ளோம்.
1.பிறந்த பின் நம் நிலையை நாம் உணரப் போகின்றோமா…? என்ற பக்குவம் பெறாத நிலையில்
2.நாம் பிறப்பதுவே நம் தாய் தந்தையரின் நிலையினால் வந்தது…
3.நாமாகப் பிறவிக்கு வரவில்லை… ஆகவே வாழும் காலத்தை அனுபவித்து வாழலாம் என்றெல்லாம்
4.நம் ஆத்ம சக்தியைப் புரிந்திடாமல் எண்ணி வாழ்ந்திடும் நாம்
5.இனி வரும் காலத்தை நாம் எடுத்திடும் சுவாச நிலையின் ஒளியினால்
6.நம் ஆத்மாவை ஒளி கொண்ட ஒளியாக்கித் தீப ஒளியாக வாழ்ந்திட வேண்டும்.

எமது அருளாசிகள்…!

பூமியில் படர்ந்து கொண்டிருக்கும் அசுர உணர்வுகளை “உங்கள் மூச்சலைகளால் துரத்தியடிக்க வேண்டும்…”

பூமியில் படர்ந்து கொண்டிருக்கும் அசுர உணர்வுகளை “உங்கள் மூச்சலைகளால் துரத்தியடிக்க வேண்டும்…”

 

யாம் (ஞானகுரு) சொல்லக்கூடிய உபதேசங்களை… புரியவில்லை என்று விட்டு விடாதீர்கள். ஏனென்றால்
1.நான் படித்து வந்ததவன் அல்ல
2.குரு சொன்னதைப் பதித்து வந்தவன்
3.பதிந்த நிலைகளை எடுத்தவன்
4.எடுத்த உண்மைகளை உணர்ந்தறிந்து அதை நீங்களும் பெற வேண்டும் என்பதற்கே உபதேசிக்கின்றேன்.

இது உங்களுக்குள் பதிவானால்… உங்கள் நினைவு மகரிஷிகள் பால் சென்று… இருளை நீக்கி ஒளியான உணர்வைப் பெறும் தகுதியை நீங்கள் பெற முடியும்

உங்கள் பார்வை பிறருடைய தீமைகளை… நோய்களை நீக்கக்கூடிய சக்தியாகத் தான் வர வேண்டும். ஆனால்
1.கோவிலுக்குச் சென்று தெய்வத்தைப் பார்த்து “என்னை இப்படிச் சோதிக்கின்றாயே…” என்று எண்ணுவது போல்
2.என்னையும் நீங்கள் அப்படி எண்ணி… “சாமி என்னைச் சோதிக்கிறார்…” என்று எண்ணுவதற்கு அல்ல
3.அருளைப் பெருக்கி இருளைப் போக்கும் “சக்திமானாக” நீங்கள் மாற வேண்டும்
4.இந்தப் பூமியில் படர்ந்துள்ள நச்சுத் தன்மைகளை உங்கள் மூச்சலைகளால் துரத்த வேண்டும் அல்லது அதை அடக்க வேண்டும்
3.உங்கள் உடலில் மட்டுமல்ல…! (எல்லாம் சேர்த்துத் தான்…!

அதைப் பெறச் செய்வதற்கு தான் எல்லோருக்கும் இந்தச் சக்தியைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

ஏனென்றால் நீங்கள் எல்லாம் தீமைகளை நீக்கும் வல்லுனர்களாக ஆகிவிட்டால்… இந்தப் பூமியில் படர்ந்து கொண்டிருக்கும் தீமைகளையும்… நாட்டுக்கு நாடு போர் என்று பரவி வரும் அசுர உணர்வுகளையும்… நிச்சயம் உங்கள் மூச்சலைகள் அடக்கும்… நல்ல உணர்வுகளை உருவாக்கும்.

அதே சமயத்தில் கருவிலே வளரும் குழந்தைகளுக்கு அருள் உணர்வின் தன்மையைப் பிறப்பிலிருந்தே பெறச் செய்ய வேண்டும்.
1.அகஸ்தியன் பெற்ற பேரருளை எல்லாம் கருவிலே வளரும் சிசுக்கள் பெற வேண்டும்.
2.அகண்ட அண்டத்தையும் அறிந்துணர்ந்த துருவனின் ஆற்றலை குழந்தை பெற வேண்டும்
3.அணுவின் இயக்கத்தை உணர்ந்த அகஸ்தியனின் உணர்வு கருவில் வளரும் சிசுக்கள் பெற வேண்டும் என்று
4.அந்தந்தக் குடும்பத்தைச் சேர்ந்த தாய்மார்கள் ஏங்கிப் பெற்றால் குழந்தையின் கருவிலேயே அந்த சக்தி உருவாகின்றது.

இப்போது உபதேசிக்கும் உணர்வுகள் உங்களுக்குள் அந்தப் பதிவு உண்டு. இந்த நினைவு கொண்டு கர்ப்பமுற்ற தாய் இதை எண்ணி எடுக்க வேண்டும். காற்றிலே அந்தச் சக்திகள் உண்டு… அதை எடுக்கும் போது துருவ நட்சத்திரத்திற்கே உங்களை எட்டும்படிச் செய்யும்.

அகஸ்தியன் எப்படி உயர்ந்த சக்திகளைப் பெற்றானோ அதைப் போன்று கருவில் வளரும் குழந்தைகளை ரிஷிகளாக நாம் உருவாக்க வேண்டும். இனி வரக்கூடிய தீமைகளை ஒடுக்கக்கூடிய சக்தியாக உங்கள் மூச்சு கருவில் வளரும் குழந்தைகளுக்கு இதைப் பெறக்கூடிய தகுதியாக வருகிறது.

விஞ்ஞான அறிவால் காற்று மண்டலமே விஷத்தன்மையாக மாறியதை அந்த ஞானிகள் வளர்ந்த பின் “இதே உணர்வுகள் தாவர இனங்களுக்குப் போய்ச் சேரும்…”

நறுமணம் வீசும் ரோஜாப்பூவின் உணர்வுகள் பட்டபின் நாம் நுகர்ந்தால் நறுமணங்களாக மாறுகின்றது. இதைப் போன்று மனித உணர்வுகள் விளைந்து வெளிப்படும் பொழுது மற்ற தாவர இனங்களுடன் சேர்க்கப்பட்டு பழையது மறைந்து மீண்டும் புது விதமான நல்ல தாவர இனங்களாக உருவாகும்.

அப்படி உருவான பின் பல உணர்வுகள் இன்று காற்றிலே படர்ந்து இருப்பினும் புதிதாக நம்மால் உருவாக்கப்படக்கூடிய இந்த தாவர இனங்கள் அந்தக் கசடுகளைக் கவர்ந்து இந்தப் பூமியைப் பரிசுத்தப்படுத்தும்.

பின் ஞானிகள் என்று நாம் சொல்லும் கருவில் வளரக்கூடிய சிசுக்கள் ஞானக் குழந்தைகளாக உருவானபின் உலகைக் காக்கும் சக்தியாக வருகின்றது.

இந்தப் பிரபஞ்சத்தில் மாசுபட்ட காற்று மண்டலத்தை நல்லதாக மாற்றும் உணர்வுகள் பெற்ற பின்
1.நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றோமோ
2.அதன் உணர்வின் அருள் வழியில் வந்த ஆறாவது அறிவை ஏழாவது நிலைபெற்ற உணர்வுகளுக்கு
3.இங்கிருந்து சென்று ஒளியின் உணர்வாக அங்கே மீண்டும் பெருகும் (சப்தரிஷி மண்டலம்).

இதை எல்லாம் உங்கள் மனதில் ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

வாழ்வது சிறிது காலமே… அதற்குள் நாம் எடுப்பது எத்தனையோ அகண்ட அண்டங்கள் வாழும் அந்தச் சக்திவாய்ந்த உணர்வுகள். அத்தகைய ஆற்றலைத் தான் பதிவு செய்கிறேன்.

இந்தக் குறுகிய காலத்திற்குள் நாம் பெருக்கும் பேரின்ப நிலையை… ஏகாந்த நிலை அடையும் பருவத்தைப் பெற வேண்டும் என்பதற்குத் தான் இதை உபதேசிப்பது.

புத்தர் ஞானம் பெற்றதன் பூர்வாங்கம்

புத்தர் ஞானம் பெற்றதன் பூர்வாங்கம்

 

புத்தரை ஆண்டவனாய் வழிபடுகின்றனர். புத்தரின் நிலையென்ன…?

சித்தார்த்தராய் அரச குடும்பத்தில் அவதரித்து வாழ்ந்தவருக்கு ஒரே நாளில் துறவு நிலை கொண்ட ஞான நிலை போதி மரத்தடியில் பெற்றார். எந்த நிலையில் அவரின் நிலை இப்படி வந்தது…?

பிறவியின் ஆரம்ப நாள் தொட்டு வாழ்ந்த காலத்தில் அவரின் நிலை எல்லோரின் நிலையை ஒத்த வழியில்தான் வந்தது. ஞான நிலைக்கு அவர் வாழ்க்கையுடன் தொடர்பு படுத்திடாமல் போதி மரத்தடியில் வந்ததின் நிலையென்ன…?

அவரின் நிலை சித்தார்த்தராய்ப் பிறவி எடுத்து அவர் அரச காலத்துடன் மட்டும் ஏற்பட்டதல்ல.

இவ்வுலகில் உயிரணுவாய் உதித்து உயிராத்மாவாகி பல ஜென்மங்கள் வாழ்ந்த நாட்கள் தொட்டே…
1.அந்நிலையில் அவரின் தொடர்புடைய ரிஷிகளின் நிலையிலிருந்தெல்லாம் அவர் சேமித்து வைத்து
2.அவருடனே வளர்ந்த ஜீவ சக்தி எந்தப் பிறவியிலும் செயல்படாமல்
3.அவர் கடைசியாக எடுத்த உடலில் ராஜ வம்சத்தில் பிறந்ததின் நிலையினால்
4.வளர்ந்த சூழ்நிலை வளர்ப்பின் நிலை இவற்றினால் அவரின் முன் ஜென்மத்தில் சேமித்த நற்சக்தியுடன் மோதுண்டவுடனே
5.இக்கலவையின் சக்தி கூடி அந்த ஞானி வழிதனை அவரும் வழி நடத்தி ஞானோதயம் பெற்று
6.சூட்சும உலகினில் பலருடன் கலந்து… ஆண்டவனாய் அருள் செய்திடும் அன்பு நிலையில் உள்ளார்.

இவ்வுலகினில் உதித்து… உலகுடனே ரிஷிகளாய் சப்த ரிஷிகளாய்க் கலந்தவர்களின் எண்ணக் கலவைகளின் நற்சக்திகள் அனைத்துமே ஒன்று கூடி இப்பூவுலகிற்கே பூ மழையாய்ப் பல நிலைகளைச் செய்விக்கின்றன.

ஆத்மீக நெறிதனில் ஞானியாய் சித்தனாய் ரிஷியாய் சப்த ரிஷியாய் ஓங்கி நிற்கும் அனைத்து நற்சக்திகள் கொண்ட நல் ஆத்மாக்களின் நிலையில் இன்று நீங்கள் வழிபடும் ஆலயங்களில் இருந்தெல்லாம் அவரவர்களின் எண்ண நிலைக்கேற்ப அவர்களின் சக்தி நிலை ஒன்று கூடிய ஆண்டவனாய்ச் செயல்படுகின்றது.

“ஆலயம் தொழுவது சாலவும் நன்று… கோயிலில்லா ஊரில் குடியிருத்தல் வேண்டாம்…!” என்றெல்லாம் உணர்த்தினர் நம் முன்னோர்.

பக்தி நிலையை வளர்க்கவும் ஆத்மீகத்தை நிலைநிறுத்தவுமே இந்நிலைகளை எல்லாம் நமக்குப் போதித்தனர்.

காட்சி:
ஒரு பெரிய யானை விபூதிப் பட்டையுடன் காட்சியளித்து பக்தர்களுக்கு பக்தரின் சிரசில் தும்பிக்கை வைத்து ஆசிர்வாதம் செய்கின்றது. அந்த யானையே ஒரு மகா ரிஷியாய் உருமாறிக் காட்சியளித்து ஆசிர்வதிக்கின்றார்.

மக்களின் எண்ணத்தில் அந்த யானையையே ஆண்டவனாய் வணங்கிடும் பொழுது யானையின் நிலையிலும் அந்த ரிஷிகளே வந்து வணங்கிடும் ஆத்மாக்களுக்குச் சில நிலைகளில் பக்தி கொண்டவருக்கு ஆசிர்வதிக்கின்றனர்.

காட்சி:
பாடை கட்டி நான்கு பேர் ஒரு பிரேதத்தைச் சுமந்து செல்வது போலவும்… “கோவிந்தா…!” என்ற கோவிந்த ஜெபம் செய்து கொண்டே செல்வது போலவும்… காரியம் முடிந்து வந்து கை கால் அலம்பி ஜோதியைக் காண்பது போலவும் காட்சி தெரிகிறது.

ஆண்டவனின் நிலையை உணர்த்திவிட்டு இந்நிலையின் காட்சியை “ஏன் அளித்தேன்…?” என்று எண்ண வேண்டாம்.

1.புத்தருக்கே இந்த நிலையைக் கண்ட பிறகுதான் ஞான நிலையே வந்தது.
2.எந்த நிலையையும் ஒரு நிலையாய்க் காணும் ஆத்ம ஜெபம் நமக்கு வேண்டும்.

ஆண்டவனின் அருள் ஆலய நிலையில் மட்டும் தான் கிட்டும் என்பதல்ல.

ஆலயங்களுக்குச் சென்று ஆத்ம ஜெபம் பெறும் பொழுது நம் ஆத்மா அமைதி பெறுவதற்குத் தான். வாழ்க்கையுடன் வந்து மோதிடும் பல நிலைகளில் இருந்தெல்லாம் நம் எண்ணப் பயத்தையும் எண்ணச் சோர்வையும் அந்த நிலைக்குச் சென்றிட்டால் அமைதி கொண்டு வந்திடவே நமக்கு வழிப்படுத்தி வைத்தனர் நம்மில் கலந்த ஆண்டவன்கள் எல்லாம்.

காட்சி:
ஜெகஜோதி மயமாய் ஒரு தேர் தானாக ஆடி வருவது போல் காட்சி. அந்தத் தேரே புஷ்பமாய் ஒரு மகா சப்தரிஷியால் அருள் புரிந்து ஆசிர்வதித்திடும் காட்சி தெரிகிறது.

1.காட்சியில் கண்டிடும் இந்த ரிஷியின் அரும் பெரும் சக்திகள் அனைத்துமே
2.இதைக் காண்பவருக்கும் இதை எழுதுபவருக்கும் இவற்றைப் படிக்கும் என் ஆசிகள்.

தேரில் வந்தவர் புத்தர்…!

கடைசிக் கட்டத்தில் தான் நாம் இருக்கின்றோம்

கடைசிக் கட்டத்தில் தான் நாம் இருக்கின்றோம்

 

உலக ரீதியிலே இன்று விஷத்தன்மைகள் அதிகமாகப் பரவி விட்டது. விஞ்ஞான அறிவு கொண்டு விஷக் கதிரியக்கங்களால் உருவாக்கப்பட்ட எத்தனையோ ஆயுதங்களையும் குண்டுகளையும் ஒவ்வொரு நாட்டிலும் சேமித்து வைத்திருக்கின்றார்கள்.

எதிரிகள் போர் தொடுக்க வருகின்றார்கள் என்றால் இதை வெடிக்கச் செய்து அவனை அழித்து விடுகின்றான். என்னை அழித்தான் என்றால் அவனும் அழிந்து விடுவான் என்று ஒவ்வொரு நாட்டிலும் முகப்புகளில் இப்படி வைத்துள்ளார்கள். நம் நாட்டிலும் கூட உண்டு.

காரணம்…
1.விஷமான குண்டுகளை வெடிக்கச் செய்துவிட்டால் இங்கே வந்து அவனும் ஆட்சி புரிய முடியாது என்று (எல்லாம் சூனியமாகும்)
2.இதே மாதிரி ஒவ்வொரு நாட்டிலும் மனிதன் கடைசி முதிர்ந்த நிலைகள் கொண்டு பிரபஞ்சத்தையே அழித்திடும் நிலைக்கு வந்து விட்டனர்.
3.நிச்சயம் இந்த உலகம் அசுர உணர்வுகளுக்குள் சிக்கும்… மனிதன் அசுரனாக மாறுகின்றான்… அரக்கனாக மாறுகின்றான்…!

பாம்பினங்கள் தன் இனத்தையே உணவாக எப்படி உட்கொள்கிறதோ அதே போல் மனிதனுக்கு மனிதன் விஷம் கொண்ட உணர்வுகளாக தன் இனத்தையே உட்கொள்ளும் நிலை வந்துவிட்ட்து.

ஆடு மாடுகளைக் கொன்று தின்றான். இப்பொழுது மனிதனையே கொன்று தின்றால் நல்லது என்று நிலைக்கு வந்து விட்டார்கள். நீக்ரோ நாடுகள் அனைத்திலுமே மனிதப் பிரேதத்தை புதைத்தால் அது நல்ல சரீரமாக இருந்தால் தோண்டி எடுத்து சமைத்து உணவாக உட்கொண்டு கொண்டிருக்கின்றார்கள்.

மண்ணுக்குத் தான் போகின்றது நான் சாப்பிட்டால் என்ன…? என்று இப்படி நியாயத்தை கற்பித்துச் சென்று கொண்டிருக்கின்றனர்.

நம் பூமியின் ஆரம்ப நிலை வளர்ச்சியில் அதனுடைய உருவம் நீள வடிவில் பாறைகளாக கூடி வளரப்படும் பொழுது கவிழ்ந்து விடும் சூழ்நிலை வந்தது…!

ஒரு பக்கம் எடை கூடினால் திசை மாறும். அப்படிப்பட்ட திசை மாற்றங்கள் நம் பூமியில் ஏராளம் நடந்துள்ளது. பண்டைய கால நிலைகளில் கடல்களிலும் திசை மாறிய நிலைகள் உண்டு.

அப்படிக் கடல் மாற்றமடையும் போதுதான்… அங்கே வாழ்ந்த உயிரினங்கள் தரை வாழ் நிலைகளுக்கு வந்தது. பல பல உயிரினங்களாக மிருகங்களாக இங்கே உருப்பெற்றது.

அதே சமயத்தில் கடலுக்குள் மறைந்த நிலைகள் அங்கே பல நிலங்களும் உண்டு. பூமியில் பல காலங்களில் திசை மாறியது உண்டு.
1.இப்போது. இன்னொரு திசை மாறும் நிலை வந்து கொண்டிருக்கின்றது.
2.சர்வத்தையும் கூழாக மாற்றும் தன்மை வந்து கொண்டுள்ளது.
3.இந்தப் பிரபஞ்சம் பூராவுமே சிதைந்து போகும் நிலை வருகின்றது.

இந்தப் பிரபஞ்சத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்களும் பிற மண்டலத்தின் விஷத்தின் தன்மைகளை எடுத்துக் கொடுத்ததால் தான் நம் பிரபஞ்சமே உருவாகும் நிலைக்கு முதலில் வந்தது.

இருந்தாலும் இப்போது அவைகள் அனைத்தும் நம் சூரியனைப் போன்று தனித் தனிப் பிரபஞ்சமாக உருவாக்கும் நிலையாக உருமாறிக் கொண்டுள்ளது.

அப்போது சூரியனுக்கு உணவில்லை என்கிற போது சூரியனும் பூமியும் கூழாகி விட்டால் சிதைந்துவிடும்..!

இதற்கு முன்… ஒரு சமயம் வேறொரு பிரபஞ்சத்தைச் சேர்ந்த ஒரு சிதைந்த கோள் நம் பிரபஞ்சத்தின் பக்கம் வந்து கொண்டிருக்கின்றது என்று சொல்லியிருந்தேன் (ஞானகுரு).

ஆனால் பிரபஞ்சத்திற்குள் சுழன்ற நிலைகளில் இருக்கும் போது முட்டை வடிவில் இருக்கும்… சிதைவதில்லை. ஆனால் இன்னொரு மண்டலத்திற்குள் வரப்படும் பொழுது அமிலமாக வருகின்றது.

நாலைந்து துணுக்குகளாக வருகின்றது. நம் பூமி மீது நேரடியாக வந்து தாக்கி இருந்தால் பூமியே சிதைந்து இருக்கும்.

40 வருடத்திற்கு முன்பு வந்து கொண்டிருக்கின்றது என்று சொன்னோம் பின்னாடி விஞ்ஞானிகளும் அதைத் தெரியப்படுத்தினார்கள்.
1.அந்த உடைந்த பாகங்கள் வியாழன் கோளில் விழுந்து அமிழ்ந்து விட்டது.
2.அது போல் நம் பிரபஞ்சமும் மாறும் நேரம் வந்துவிட்டது.

பூமியோ மற்ற மண்டலங்களாக எதுவாக இருந்தாலும் எல்லாமே ஆவியால் உருவானது தான். ஆனால் கடைசியில் கரைந்து கூழாக மாறும் பொழுது சூரியனின் சுழற்சி வேகம் கூடி… அதை ஆவியாக மாற்றுகின்றது.

தன் ஈர்ப்பில் உள்ள அனைத்தையும் ஆவியாக மாற்றச் செய்த பின்… 27 நட்சத்திரங்கள் தனித் தனி பிரபஞ்சமாக மாறுகிறது அல்லவா… அதற்கு இதை எல்லாம் உணவாகக் கொடுத்துவிடும்.

சூரியனும் பிரபஞ்சத்தின் நிலைகள் அந்தச் சுழலில் சிக்கி ஆவியாக மாறிவிடும். விஞ்ஞானிகள் ஒரு காலம் இதை நிச்சயம் சொல்வார்கள்.

1.இது எல்லாம் இயற்கையின் நிலைகள் எப்படி மாறுகின்றது…? மாறப் போகின்றது…? என்று குருநாதர் தெளிவாக எனக்குக் கூறியிருந்தார்
2.சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் யாம் இதைச் சொல்வதுண்டு… கேட்போர் யாரும் இல்லை…!
3.ஆக கடைசிக் கட்டத்தில் தான் நாம் இருக்கின்றோம்.

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியன் தான் நஞ்சை வென்றான்… உணர்வை ஒளியாக மாற்றினான்…!

கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததி போன்று ஒன்றி வாழ்ந்தார்கள்… இரு உயிரும் ஒன்றாகி ஒளியின் உணர்வாக உருவாக்கினார்கள்.

துருவத்தின் எல்லையை நோக்கி அதன் வழி வரும் உணர்வுகளை ஒளியாக மாற்றினார்கள்… அந்த எல்லையிலேயே துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்கள்.

அந்த அகஸ்தியன் உணர்வை எந்நாட்டவரும் பெறலாம் என்று அக்காலங்களில் இதைச் சொல்லி உள்ளார்கள்.
1.காரணம் திசை மாறிய நம் பூமியை அன்று சமப்படுத்தியவன் அகஸ்தியன் தான்.
2.அவன் வழி சென்றால் வரும் மாற்றத்திலிருந்து நாம் தப்பலாம்…!

உங்கள் அனைவரையும் எங்களுடன் இணைக்கவே போதனை கொடுக்கின்றோம்

உங்கள் அனைவரையும் எங்களுடன் இணைக்கவே போதனை கொடுக்கின்றோம்

 

மாறப் போகும் இக்கலியின் கால நிலைக்காக… இதை உணர்த்துகின்றேன்.

1.இக்கலியுடனும்… இக்கலிக்கு முந்தைய காலங்களிலும்
2.இப்பூமியில் உயிரணுவாய் உதித்து உயிராத்மாவாகி உங்களுடனே வாழ்ந்த
3.இவ்வுலகுடன் ஒன்றிய நிலை கொண்ட ரிஷிகளின் அருளாசியினால்
4.இவ்வுலகத் தன்மை மாறப் போகும் தற்போதைய காலத்தில்
5.உங்களுடன் கலந்து வாழ்ந்த எங்களின் ஆசையினால்
6.இம்மாற்றத்திலிருந்து அணுவாய்… ஆத்மாவாய்… அனைத்து அறிவும் ஆற்றலும் சக்தி கொண்ட மனித உடல் பெற்ற ஆத்மாக்களை
7.இப்பேறு பெறும் பாக்கிய நிலை அடைந்தவரை நம்முடன் அழைத்திடவே (ரிஷிகளுடன்)
8.இந்நிலையில் இப்போதனை வழியினைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றோம்.

பூமியின் பூமத்திய ரேகையின் நிலையைப் பற்றி இங்கே உணர்த்துகின்றோம். இவ்வுலக நிலை கால நிலைகேற்ப உஷ்ண நிலையும் மாறு கொள்கின்றது. காற்றும் மழையும் பனியும் குளிரும் அனைத்துமே மாறி மாறி வருகின்றன.

அது எவ்வாறு என்ற நிலையில்… இப்பூமியின் பூமத்திய ரேகையின் நிலையில் அதன் சுற்றும் தன்மையில் சூரியனின் நிலைக்கு சூரியனின் தூர விகிதப்படி இவ் இயற்கையின் நியதிகள் மாறுபட்டு வருவதாகப் பண்டைய காலம் தொட்டு இன்றளவும் உணர்ந்து வருகிறீர்கள்.

பல நாட்களுக்கு முதலிலேயே வான சாஸ்திரப்படி என்றென்று சந்திர சூரிய கிரகணங்கள் வருகின்றன என்றும் சரியாக உணர்த்துகின்றனர்.

1.இவ்வான மண்டலங்களில் சுழற்சியில் ஏற்படும் நிலைகளையெல்லாம் பல நிலைகளில் அறிந்துள்ளனர்
2.இருந்தாலும் எல்லாவற்றையும் வெளியிடும் அச்ச நிலையில் உள்ளனர்.

இப்பூமி சுழலும் தன்மையில் ஏற்படும் ஒளி (சூரியனின் ஒளிக்கதிர்கள்) சில இடங்களில் படுவதே இல்லை. என்றுமே இருண்ட பூமியாக சில இடங்கள் உள்ளன.

ஆனால் இப்பூமியின் அசைவு காலத்தில் (மாறப் போகும்) அவ்விருண்ட நிலை கொண்ட இடங்களெல்லாம் ஒளிக்குச் சிக்கிடும் இடங்களாக வந்துவிடும்.

சில இடங்களை இப்பூமியின் மாற்றத்தின்போது ஏற்படும் அசைவுக்குக் குறிப்பிடுகின்றேன்.
1.இன்று மக்கள் நிறைந்து வாழ்ந்திடும் சீனாவும் அமெரிக்காவும் இம் மாற்றத்திற்குச் சிக்கிடும் நிலையில் உள்ளன.
2.அதிக மாற்றம் கொள்ளும் நாடுகள் இவை இரண்டும்தான்…!

மற்ற நாடுகளில் மாற்றம் வந்தாலும் சில நிலைகளில் அந்நீரின் மட்டம் ஏறாமல் நிலமாக இருந்திடும்.

இவ்வுலக மாற்றத்தினால் இன்று இருண்ட நிலையில் உள்ள பூமிகள் எல்லாம் ஒளிக்கு வந்துவிடும்.
1.இன்று செயற்கையுடன் ஒன்றிய வளர்ச்சியடைந்த நாடுகள் என்று நாம் செப்பிடும்
2.பூமிகளில் சில இருண்ட நிலைக்குச் சென்றிடும்.

இம் மாறப்போகும் இப்பூமியின் தன்மையுடன் இயற்கை சக்தியும் இன்றுள்ள நிலையிலிருந்து மாறும் தன்மை படுகின்றது. சித்திரையில் உள்ள வெயிலும் மார்கழியின் குளிரும் இம்மாற்றம் கொள்ளும் இப்பூமியின் நிலையினால் மாற்றம் கொண்டு சுழலப் போகின்றது.

அனைத்து நிலைகளையும் நீங்களும் காணப் போகின்றீர்கள்…!

1.இவ்வெண்ண சக்தியின் செயலைக் கொண்டு ஜெப சக்தியை உயர்வாக்கி
2.ஜெபம் கொண்ட வாழ்க்கையை ஜெயித்தே வந்திடுங்கள்.
3.வழியின் தொடர்பினை அறிந்துள்ளீர்… இனி வருவதற்குச் சிரமம் இல்லை.

ஞானத்தின் வழியறிந்து செயல்பட்டு எல்லோரும் ஞானியாகி… அந்த வழித்தொடரினை வழிப்படுத்தியே “சப்த ரிஷிகளுடன் சங்கமித்தே சகல நிலையுடன் கலந்திடுவோம்…” என்ற ஓ…ம் என்ற நிலையினிலே மன நிலையை ஒன்றச் செய்திடுங்கள்.

இவ்வுலகம் மட்டுமல்ல… அனைத்து உலகங்களுமே நமதாக்கி அனைத்து உலங்கங்களுக்கும் சொந்தமான அவ் ஆதி சக்தியுடனே கலந்திடுவோம்… என்ற “ஒரு நிலை கொண்ட தைரியமுடன் கலந்திடுங்கள்…!”

1.எவ்வாண்டவனும் வந்து நம்மை அழைத்துச் செல்வதல்ல அந்நிலைக்கு…
2.நம்முடன் கலந்துள்ள நம் ஆத்மாண்டவனை (உயிரான ஈசனை) நாம் வழி நடத்திட்டால்
3.அனைத்து ரிஷிகளின் அருளைப் பெற்று… அனைத்துடனும் நாமும் கலந்திடலாம்.
4.ஒன்றிடும் பக்குவ நிலையையே அறிந்து… பக்குவப்படுத்தி வளர்ந்து கல்கியின் நிலைக்கே வந்திடுங்கள்.

சந்தர்ப்பம்… சந்தர்ப்பம்… சந்தர்ப்பம்…!

சந்தர்ப்பம்… சந்தர்ப்பம்… சந்தர்ப்பம்…!

 

நாம் காலையிலிருந்து இரவு வரை எத்தனையோ பேரைச் சந்திக்கின்றோம்…! எத்தனையோ வேதனைகள்; எத்தனையோ வெறுப்புகள்; எத்தனையோ சங்கடங்கள்; இதைப் போன்ற உணர்வுகளை அறியாமலே நமக்குள் நாம் பதியச் செய்து விடுகின்றோம்.

இது இரத்தத்தில் கலந்து அணுக்களாக விளைகிறது. விளைந்த அணுக்கள் அதனதன் உணர்வுகளைக் காற்றிலிருந்து பிரித்து உணவாக எடுத்து உடலிலே வளரத் தொடங்குகின்றது.

சூரியன் கவர்ந்து வைத்திருக்கக்கூடிய செடி கொடிகளின் சத்துக்கள் பூமியின் காற்று மண்டலத்தில் படரப்படும் போது அதே இனமான அந்த உணர்வைக் கவரக்கூடிய செடி கொடிகளின் வித்துகள் அதனதன் சத்தைக் கவர்ந்து கொள்வது போன்று
1.எந்த உணர்வின் தன்மை நமக்குள் எடுத்து வினையாக (அணுக்களாக) உருவானதோ
2.அதனதன் உணர்வை எடுத்து நம்மை அதன் வழிக்கு இயக்கி விடுகின்றது.

உதாரணமாக விஞ்ஞான அறிவு கொண்டு ஒலி/ஒளிபரப்பாகும் உணர்வலைகளை நாம் எந்த ஸ்டேஷனைத் திருப்பி வைக்கின்றோமோ அதே அலைவரிசையில் டிவியை இயக்கினால் அதைக் கவர்ந்து காட்சியாகவும் இசையாகவும் காட்டுகின்றது.

அதைப் போன்று தான்
1.திட்டியவனை எண்ணிய உடனே நமக்குள் அந்த வேகமும் துடிப்பும் கொண்டு கோபம் வருகின்றது
2.வீட்டிலே குழந்தைகளாக இருந்தாலும் கோபமாகப் பேசி விடுகின்றோம்.
3.அந்தக் கோபத்தினால் நம் வியாபாரத்தையும் சீராகச் செயல்படுத்த முடியாதபடி போகின்றது.

ஆக… பதிவான உணர்வுகள் நம்மை மீண்டும் இவ்வாறு இயக்குகின்றது… நம்மை அறியாமலே பல தீங்குகளைச் செய்யச் செய்கின்றது.

“சந்தர்ப்பம் தான் இது எல்லாம்…!”

எதன் வலு அதிகமாகின்றதோ நாம் சோர்வடையப்படும் பொழுது நம் சிந்தனைகள் மாறுகின்றது. விஷம் என்ற நிலை வரும் போது நல்லதுக்காக ஏங்கும் பொழுது நமக்கு இன்னும் கோபம் வருகிறது.

அந்தக் கோபத்தால் சிந்தனை இழந்து… தன்னையோ அல்லது மற்றதையோ அழித்திடும் உணர்வே வருகின்றது. ஏனென்றால் அதிக வேதனையாகும் பொழுது முழுமையாக நினைவிழந்து விடுகின்றோம்

நாம் தவறு செய்தோமா…? எல்லாமே சந்தர்ப்பம் தான்… சந்தர்ப்பத்தால் தான் இன்று இயக்கப்பட்டு வருகின்றோம்…!.

ஆனால் நல்ல சந்தர்ப்பத்தை மனிதனால் (நம்மால்) ஏற்படுத்த முடியும்… எப்படி…?

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி நஞ்சினை வென்று ஒளியின் சரீரமாக இருக்கும்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று இந்தச் சந்தர்ப்பத்தை நமக்குள் நாம் உருவாக்க முடியும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று இந்தச் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்க முடியும்

சூரியனின் இயக்கங்கள் அது எதை எதைக் கவர்கின்றதோ சந்தர்ப்பத்தால் மோதும் பொழுது மரம் செடி கொடிகள் (இனங்கள்) மாறுகின்றது.

காட்டிலே ஒரு முயல் நரியைச் சந்திக்க நேர்ந்தால் அதனின் சந்தர்ப்பம் அது அதற்கு இரையாகிறது. ஆனாலும் முயல் தான் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு நரியின் வலுவான உணர்வை எடுக்கின்றது.

இருந்தாலும் நரி முயலை அடித்துக் கொல்கிறது உடலை விட்டுப் பிரிந்த பின் முயலின் ஆன்மா நரியின் ஈர்ப்புக்குள் சென்று நரியின் உருவமாக மாறுகின்றது.

முயலாக இருப்பது அடுத்து நரியாக மாறுவது “இதுவும் சந்தர்ப்பம் தான்…!”

இன்று நாம் ஒரு தீமையைச் சந்திக்க நேரும்போது அதை நுகர்ந்துவிடுகிறோம். நமக்குள் தீய வினையாக அது உருவாகிவிடுகின்றது… ஆக தீய வினைகளாக உருவாவது “இதுவும் சந்தர்ப்பம் தான்…”

சந்தர்ப்பத்தால் நாம் பல நல்லதுகளைச் செய்தாலும் தீமையின் வலுவைச் சுவாசிக்கப்படும் பொழுது நமக்குள் இருக்கும் நல்லவைகள் மறைகின்றது… உடலில் நோய்கள் வருகின்றது.
1.இப்படி மாறக்கூடிய “இந்தச் சந்தர்ப்பத்தை” நாம் மாற்ற வேண்டுமா இல்லையா…?
2.நன்றாக யோசனை செய்து பாருங்கள்…!

காலையில் நம் உடல் அழுக்கைப் போக்கித் துணியில் உள்ள அழுக்கைப் போக்கினாலும் துருவ நட்சத்திரத்தில் இருந்து வரக்கூடிய உணர்வுகளைப் பெறக்கூடிய சந்தர்ப்பத்தை உருவாக்கி… நம் ஆன்மாவில் பட்ட அழுக்கைப் போக்க வேண்டும்..

பல கோடிச் சரீரங்களில் தீமையிலிருந்து விடுபடும் உணர்வுகளைச் சேர்த்துச் சேர்த்து மனிதனாக உருவாக்கியது ஆதிமூலம் என்ற நம் உயிர்தான்…! இந்தப் பிள்ளை யார் நீ சிந்தித்துப் பார் என்று நம்மைச் சிந்திக்கும்படி செய்வதற்குத் தான் ஆற்றங்கரையோரம் எல்லாம் விநாயகரை வைத்துக் காட்டினார்கள் ஞானிகள்.

காரணம்… இயற்கையின் பேருண்மைகளை அறிந்தவன் அன்றைய அகஸ்தியன். அகண்ட அண்டத்தையும் அவன் அறிந்தான்… நம் பூமியின் துருவத்தின் ஆற்றலைப் பெற்றான்.. நஞ்சினை ஒளியாக மாற்றிக் கொண்டான்…
1.தான் பெற்ற சக்தியைத் தன் மனைவிக்குக் கொடுத்தான்.
2.வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்தான்
3.இரு உயிரும் ஒன்றாக ஆனது… இரு உணர்வும் ஒன்றாக ஆனது
4.துருவத்தை எல்லையாக வைத்து அதில் வரக்கூடிய நஞ்சினைக் ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

இப்படி ஆதியிலே தோன்றிய (நம்மைப் போன்ற மனிதனான) அந்த அகஸ்தியன் விண் சென்றபின் அதே (தன்) மனித இனத்திற்கு அவன் பெற்ற வழியைப் பெறுவதற்காக… விநாயகர் தத்துவம் என்ற நிலையில் யானைத் தலையைப் போட்டு மனித உடலைக் காட்டி
1.இந்த வாழ்க்கையில் நாம் எதைப் பெற வேண்டும்… எந்தச் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்க வேண்டும்…? என்று
2.விநாயகரைப் பார்க்கும் போதெல்லாம் அதை எண்ணி எடுக்கும்படி செய்தான்.

சந்தர்ப்பத்தால் தான் அகஸ்தியன் உயர்ந்த சக்திகளை எடுத்தான்.. ஒளி உடலைப் பெற்றான். அதைப் போன்று தான்
1.இப்பொழுது உங்களுடைய சந்தர்ப்பம் உயர்ந்த கருத்துக்களைக் கேட்கின்றீர்கள்.
2.இந்த உபதேசத்தைப் படிப்பது “இதுவும் சந்தர்ப்பம்தான்…!”

இந்த வாழ்க்கையில் அன்றாடம் நாம் சந்திப்பது… குடும்பமாக இருந்தாலும் சரி வியாபாரமாக இருந்தாலும் சரி உறவினர்களாக இருந்தாலும் சரி மத இனங்களாக இருந்தாலும் சரி அரசியல் அமைப்புகளாக இருந்தாலும் சரி… அந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் நம்மை அறியாமலே எத்தனையோ வழிகளில் பகைமை வந்து சேர்கின்றது.

ஆனால் நம்முடைய இந்தச் சந்தர்ப்பம்…
1.மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் அருள் சக்திகளை நுகர்ந்து நம்மை அறியாமல் இயக்கக்கூடிய இருளை அகற்றுவது தான்
2.இது சிறுகச் சிறுக நமக்குள் முழுமையாகப்படும் பொழுது மகரிஷிகள் உணர்வினை நமக்குள் உருவாக்கும் சந்தர்ப்பமாக மாறுகிறது.
3.இப்படி உருவாக்கி விட்டால் தீமையை நீக்கும் சக்தியை நாம் பெறுகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொரு சந்தர்ப்பதிலும் நாம் பெறப்படும் பொழுது… எந்த நேரத்தில் எத்தகைய தீமை வந்தாலும் வலிமை கொண்டு அதை மாற்றி பிறவி இல்லா நிலை அடையும் தகுதி பெறுகின்றோம்.

நாம் உருவாக்கும் நல்ல சந்தர்ப்பங்கள்… அகஸ்தியன் எங்கே சென்றானோ… நிச்சயம் நம்மை அங்கே அழைத்துச் செல்லும்.

ஆனால் எனக்குத் துரோகம் செய்தான்… தொல்லை கொடுத்தான்… அவன் உருப்படுவானா…! என்ற பகைமையான உணர்வை எடுத்தால் அவன் உடலுக்குள் தான் நாம் செல்ல வேண்டி வரும்.

எந்தப் பக்தியால் தெய்வத்தை வணங்கினோமோ உடலை விட்டுச் சென்ற பின் மந்திரங்களைச் சொல்லப்படும் பொழுது அவனுக்கு அடிமையாகி விடுகின்றோம்.

காலத்தால் ஞானிகள் கொடுத்த உண்மை நிலைகள் இப்படித் தான் மாறிவிட்டது. ஆகையினால்
1.நாம் எதைப் பெற வேண்டும்…?
2.இந்த உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலைக்குத் தான் இதை உபதேசிப்பதும் அருள் உணர்வைப் பதிவாக்குவதும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உயிர் வழி சுவாசித்து… எங்கள் இரத்த நாளங்களில் அது கலக்க வேண்டும் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மக்கள் பெற வேண்டும் என்று… கண்ணின் நினைவை புருவ மத்திக்குக் கொண்டு வந்து அதன் வழி ஈர்த்து உடலுக்குள் செலுத்தி இரத்தங்களில் அதை கலக்கச் செய்யப்படும் பொழுது எல்லா அணுக்களிலும் இந்த வலுப்பெறுகின்றது.

காலையிலிருந்து இரவு வரை நாம் பார்த்த எத்தனையோ விதமான தீமையான உணர்வுகளை உடலுக்குள் விளையாதபடி தடுத்து
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் நிலைநிறுத்தி
2.வரும் தீமைகளை அனாதையாக்க முடியும்.

“நான்… செய்வது தான் சரி…!” என்ற எண்ணம் இருந்தால் (ஞானத்தின்) வளர்ச்சி இருக்காது

“நான்… செய்வது தான் சரி…!” என்ற எண்ணம் இருந்தால் (ஞானத்தின்) வளர்ச்சி இருக்காது

 

கேள்வி:
எண்ணத்தில் தூய்மையும் நற்செயலுடனும் இருக்கும் ஒருவருக்குத் தியானம் அவசியமா…?

மற்றவரை நோக வைக்கும் எண்ணமோ செயலோ இல்லை. தான் செய்யும் காரியமும் எண்ணமும் சரியானதாகவும் இருப்பதாக இருக்கின்றது.

தான் செய்வது சரியா…? நியாயமா…? என்பது தெரியவில்லை.
1.எனக்கு நியாயம் என்று தோன்றுகிறது.
2.ஆனால் மற்றவர்கள் அதை ஏற்பது இல்லை…!

என் நினைவிலும் செயலிலும் தவறு இருந்தால் அதைத் திருத்திக் கொள்வதற்கு தயாராக இருக்கின்றேன்.

பதில்:
எண்ணமுடனும் உணர்வுடனும் நல் நிலை பெற்றிருந்தாலும் பக்தி என்ற அன்பு நிலையை வளரவிடாமல் “நான்…” என்ற நிலைப்படுகின்றது இந்த வினாவின் நிலை.

கேள்வி கேட்டவர்:
அது சரியா… தவறா..! என்பது தெரியவில்லை. “நான்…” என்று உணரும் நிலை எனக்கு நன்றாகத் தெரிகின்றது.

பதில்:
உணர்வுடனே… “தன் நிலையை நல் நிலை என்றுணர்ந்து.. நான்…!” என்ற உணர்வையும் கலக்கிவிட்டதினால் வந்த நிலை உன் நிலை.

1.ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் இவ்வியற்கையின் சக்தியில் எவையுமே இல்லை
2.இந்த நிலையில் தன் உணர்வை நல்லொழுக்கப்படுத்தி அவ்வொழுக்க நிலைக்கே அடிமைப்பட்டு
3.அந்த நிலையையே தெய்வமாக்கித் தன் உணர்வுடன் நானாக இருந்து என்னம்மா பயன்…?

அனைத்து நிலைகளை அறிந்த சப்தரிஷிகளுமே தனித்த நிலையில் இயங்குவதில்லை. உணர்வுடன் உணர்வை ஒன்றச் செய்து தான் செயலாக்குகின்றார்கள்.

1.நீ அமைத்துக் கொண்ட இந்நிலையிலிருந்து விடுபட்டால் தான்
2.உன் உணர்வுடன் சேமித்துள்ள நற்சக்திகள் செயல் கொண்டிட முடியும்.

நல் எண்ணமும்… அவ்வெண்ணமுடன் கூடிய உணர்வினால் நம் பார்வையின் சக்தியும்… நாம் செப்பிடும் சொல் அழகும்… அன்பான ஆசை வாழ்க்கை நிலையும் தான் ஜெப வாழ்க்கையம்மா.

“ஜெபம் என்பதுவே வாழ்க்கையுடன் ஒன்றிட்ட நல் உணர்வைப் பெற்றதுவே…”

எண்ண நிலையை ஒரு நிலைகொண்டு உண்மையுடனும் அன்புடனும் அன்பாசையுடனும் உள்ளவர்களுக்குத் தெய்வ நிலை கிட்டும்.

தெய்வம் என்பதுவே இந்த நிலை பெற்றோரைத்தான்.

1.ஆதிசக்தியின் இயற்கை சக்திகள்தான் அனைத்து சக்திகளும்.
2.நம்மையே நாம் இவ்இயற்கையுடன் தெய்வமாகக் கலக்கவிட்டு வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.

இப்பேராசைக்கும் வெறி உணர்வுகளுக்கும் மற்றத் தீய சக்திகளின் உணர்வுகளுக்கும் நாம் அடிமையாகாது வாழ்வதற்கே “நல் ஜெபம் எடுத்திடுங்கள்…” என்று மீண்டும் மீண்டும் சொல்வது.

ஆட்சியும் நிர்வாகமும் அரச வழி தான்… ஞானிகள் வழி அல்ல…!

ஆட்சியும் நிர்வாகமும் அரச வழி தான்… ஞானிகள் வழி அல்ல…!

 

குரு வழியில் வாயை மூடி மௌனம் சாதித்து… வலுக் கொண்ட உணர்வுகளைச் சுவாசித்து வேதத்தின் தன்மை கொண்டு அவர்கள் எடுத்துக் கொண்ட சில முறைகள் “ஜைன மதத்தில்” உண்டு.

ஜைன மதங்களுக்கும் புத்த மதங்களுக்கும்
1.குரு வழியில் சுட்டிக் காட்டப்படுவது மலைப்பகுதியில் பாங்காகும் துருவ நட்சத்திரம்.
2.குளிர் பிரதேசமாக இருந்தாலும் காலையில் அந்தப் பகுதியை உற்று நோக்கும்படி செய்து
3.துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைத் தனக்குள் பெறச் செய்தனர்.
4.அந்த அகஸ்தியன் துருவன் ஆகித் துருவ நட்சத்திரம் ஆன உணர்வின் தன்மைகளை நுகரப்படும் பொழுது அவன் வழியைப் பின்பற்றுகின்றனர்.

அகஸ்தியனைப் பின்பற்றினாலும்… மதத்தின் அடிப்படையில் குருக்களாக வருகின்றனர். அதை எடுத்துக் கொண்டாலும் உடலின் இச்சைக்கு அதைச் செயல்படுத்தி… தலை கீழாக மாற்றி அதர்வண வேதம் என்று கொண்டு சென்று விட்டார்கள்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தனக்குள் எடுத்து உயிருடன் ஒன்றி ஒளியின் உணர்வாக ஆகும் நிலை ஜைன மதத்திலும் புத்த மதத்திலும் கொண்டு வந்தாலும் அதிலே சில கட்டுப்பாடுகள் உண்டு.

அந்த மதத்தின் தன்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் தலையை மொட்டை அடிக்க வேண்டும். மொட்டை அடிக்க வேண்டுமென்றாலும் தலை முடிகளை வேதனைப்படுத்தித் தான் நீக்குவார்கள். கையிலே தான் பிடுங்குவார்கள்… பல இம்சைகள் வரும். அவன் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

புத்த துறவிகள் “உலக பந்தம் எனக்கு வேண்டாம்…” என்று சென்றாலும் தலை முடியைப் பிடுங்குவார்கள்…. ஒன்றல்ல… பத்து இருபதைச் சேர்த்துப் பிடுங்குவார்கள். பிட்சுவாக வருவதற்கு அத்தனை வேதனையையும் பொறுத்துக் கொள்வார்கள்.

சில நேரங்களில் உடலில் ஆயுதப் பரிசோதனையும் உண்டு.

உபதேசத்தைக் கேட்டுக் கொண்ட பின் ஊசியால் நகத்தில் குத்துவார்கள். ஆ…! என்று சப்தமிட்டால் உன்னால் இதைச் செயல்படுத்த முடியாது என்று விலக்கி விடுவார்கள். ஆ…! என்று சப்தமிடாதபடி பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

மதத்தின் அடிப்படையில் சிசுக்களில் இருந்து இவ்வாறு வளர்த்து இந்த உணர்வின் உணர்ச்சிகளை ஊட்டி வளர்க்கின்றனர். வளர்த்து அதன் வழி வந்தாலும் அவர் சொன்ன வேதங்கள் இங்கே இயக்கப்பட்டு இந்த வலு எடுத்துக் கொண்டு வளர்ச்சி அடைந்தாலும் கடைசியில் இறந்த பின் “இறப்பிற்கு ஒரு மந்திரத்தைச் சொல்வார்கள்…”

மந்திரத்தைச் சொல்லப்படும் பொழுது அதன் வழி பிரியும் அந்த ஆன்மாவை இவர்கள் பிரித்து எடுத்துக் கொள்கின்றனர். அதாவது பல வகையிலும் கட்டுப்படுத்தப்பட்டு… மந்திர ஒலிகளைக் கூறி “இறைவனை அடையக்கூடிய நிலை” என்று கொண்டு செல்கிறார்கள்.

அவர்கள் எண்ணிய உணர்வுகள் தான் இங்கே இறைவனாகிறது. எதன் உணர்வின் தன்மை உனக்குள் வலுவோ அதையே நீ அடைகின்றாய் என்று கீதையிலே கூறப்படுகிறது.

காரணம் யாராக இருந்தாலும் எப்படியும் கடைசியில் இறந்து தான் ஆக வேண்டும். உடலில் விளைந்தது எதுவோ அது சாகாக்கலையாகிறது. ஆகவே இறைவனை அடையும் தன்மை இங்கே இல்லை. மீண்டும் உடல் பெறும் நிலை தான் வருகிறது.

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை இவர்கள் எடுத்துக் கொண்டாலும்
2.இறந்த பின் மனித உடல்களுக்குள் பகிரச் செய்து அதன் வழியில் தான் கொண்டு வந்து விட்டார்கள்.

மனிதனுக்கு மதத்தின் தன்மை முக்கியம். அந்த மதத்தின் அடிப்படையில் நாட்டை ஆட்சி புரிவது உண்மை என்று மடாதிபதிகளாக மாற்றப்பட்ட நிலையிலேயே சென்றனர்.

1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தாலும்
2.ஆட்சி நிர்வாகம் என்ற நிலையில் செல்லும் போது விண் செல்லும் நிலை தடையாகின்றது.