அரசன் அன்று கொல்வான்… தெய்வம் நின்று கொல்லும் – ஈஸ்வரபட்டர்

அரசன் அன்று கொல்வான்… தெய்வம் நின்று கொல்லும் – ஈஸ்வரபட்டர்

 

விதியை மதியால் வென்றிடலாம். வினை விதைத்தவன் வினை அறுப்பான்… விதை விதைத்தவன் விதையறுப்பான்…! என்ற பெரியோர்களின் வாக்கிலேயே கலந்துள்ளது… மனிதனின் விதி முறை…!

வினையின் எண்ண\த்திலே விளைவதெல்லாம் வினையேதான். பிறரைக் கவிழ்க்க வினை செய்கின்றான். ஆனால் அந்த வினை அவனைக் கவிழ்ப்பதற்காகச் செய்த வினை இவனைத் தான் வந்து சுற்றும்.

இருந்தாலும்…
1.வினை செய்த காலத்தில் வருவது அல்ல அந்த வினை.
2.இவன் எண்ணத்திலே ஊன்றியுள்ள வினையினால் இவனையே அந்த வினை சுற்றுகிறது பெரும் பயத்தினால்.

அந்த நிலையில் உள்ளவனின் ஆவி பிரியும் பொழுது வினையின் எண்ணத்திலேயே ஆவி உலகத்திலும் தன் வினையை முடித்துக் கொள்ள ஒரு உடலை எடுக்கின்றான்.

வினைப் பயனை முடித்திடுவது தான் அவ்வாவிகளின் எண்ணமெல்லாம். வினையின் எண்ணத்தை மனதினுள் சிறு அளவு ஊன்றச் செய்தாலும் அந்த வினையின் பயன் பல கோடி ஆண்டுகளுக்கு முடிவுறுவதில்லை.

ஒவ்வொரு பிறவியிலும் அவனுடனே தான் சுற்றிக் கொண்டு வருகிறது. அந்த எண்ணம் உடையவனை எந்தச் சொல்லும் சொல்லி மாற்றிட முடியாதப்பா.
1.கர்ம பயன் என்பதெல்லாம் இதுவேதான்.
2.அவன் செய்த கர்மம் அவனை அழிக்கின்றது என்பதும் இதுவே தான்.
3.எந்தப் பிறவி எடுத்தாலும் இக்கர்ம பயன் முடிவதில்லை… புழுவாகப் பூச்சியாக உருவெடுக்கின்றான்.

எந்த நற்சொற்களும் அந்த வினையுள்ள எண்ணத்திலே பதிந்திடாதப்பா. அவன் எடுத்த தீய வினை தான் அவனைச் சுற்றும். பாவ புண்ணியம் எண்ண மாட்டான். ஆகவே நரக லோகம் செல்கின்றான்

நரகலோகம் என்பதுவே கர்ம பயன் செய்தவன்… வினையின் நெஞ்சம் உள்ளவன்…! எல்லாம் செல்லுமிடம் நரகலோகம்தான்.

விதி என்பது எதப்பா…?

விதியையும் மதியினால் வெல்லலாம் என்பது வினையின் எண்ணம் உள்ளவனை நல்லெண்ணம் கொண்டவன் வென்றிட முடியுமப்பா.

வினையில் உள்ளவன் அவனைத் தாக்கும் பொழுது நல்லெண்ணம் கொண்டவன் உயிரான “ஈசனை…” நினைத்திட்டால் அவ்வினையின் எண்ணத்தை ஈசனே பார்த்துக் கொள்வான்.

எந்த வடிவில் ஈசன் பார்த்திடுவான் என்றிடுவாய்…!

வழக்கின் வழியைப் புரியும்படிச் சொல்கின்றேன்.

வினையெண்ணம் உள்ளவனும் நல்லெண்ணம் படைத்தவனும் ஒரு இடத்தில் இருவரும் சேர்ந்து செய்யும் தொழிலில் அந்நிலையில் உள்ள பணத்தை எல்லாம் வினைப்பயன் உள்ளவன் எடுத்துக் கொள்கின்றான். அந்தப் பழியை நல்லவனின் மேல் சுமத்துகின்றான்.

நல்லவனுக்குப் பக்கபலமும் இல்லை. அந்த நிலையில் வழக்காடும் இடத்திற்குச் சென்றால் அந்த நிலையிலும் தன்னுடைய செல்வத்தை வைத்து ஜெயித்து விடுகின்றான் இவ்வினையுள்ளவன்.

பெரும் வழக்கறிஞர்கள் வைத்து வழக்காட நல்லெண்ணம் உள்ளவனுக்கு நாதியில்லை என்பார்கள். ஏனப்பா இல்லை…?

சில காலம் உள்ள இந்த ஜென்மத்தில் நாதி இருந்தாலும் இல்லாவிட்டாலும்
1.அவன் எண்ணத்திலே ஒரு நிலையில்
2.ஒரு உயர்வின் தன்மையிலே சுற்றிக் கொண்டு உள்ளது… “நல்லொழுக்கங்கள் நற்சொற்கள் எல்லாமே…!”

அப்படி இருக்கும் நிலையில்
1.அவன் மனதில் சோர்வை எண்ணிடாமல்
2.உயிரான ஆண்டவனை நினைத்துச் சத்திய நியாயத்தை வேண்டிட்டால்
3.அவன் ஜென்மப் பயன் எல்லாமே… அவன் எண்ணத்தில்… அவன் விடும் சுவாசத்தில்…
4.உயர்ந்த தன்மையிலேயே ஜென்மங்கள் மாறும் பொழுது வந்தடைகிறது.

கடைசியில் ஜெயிப்பது நல்லெண்ணம் கொண்டவன்தான் என்பது இம்மானிடர்களுக்குப் புரிவது இல்லை…!

வினை விதைத்தவன் இவன் காலத்தில் வழக்கில் ஜெயித்தாலும் அவன் எண்ணத்தில் சுற்றிக் கொண்டு இருக்கும் அவன் செய்த வினையின் பயன் அவன் காலம் முடிந்து அவன் எந்த நிலைக்குச் சென்றாலும் அவனைச் சுற்றிக் கொண்டே தான் வருகிறது.

1.வினைப்பயன் செய்தவன் நரகலோகத்திற்கே செல்கின்றான்.
2.இந்த நல்லோரின் இதயம் செல்லும் இடம் தான் சொர்க்க லோகம் என்பது.

தீவினையின் விதியை நல் உணர்வு கொண்ட மதியால் வெல்லலாம்… என்பது இதுவே…!

அகஸ்தியன் பெற்ற பேரின்பத்தை நாமும் பெற வேண்டும்

அகஸ்தியன் பெற்ற பேரின்பத்தை நாமும் பெற வேண்டும்

 

ஆதியிலே பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த… இந்த மனித உடலில் விஷத்தை வென்றிடும் உணர்வின் ஆற்றல் பெற்ற அகஸ்தியன் சிறு குழந்தைப் பருவத்திலேயே வானுலகை உற்று நோக்கினான்.

1.இந்தப் பிரபஞ்சம் எப்படி இயக்குகின்றது…? என்றும்
2.பிற மண்டலங்களில் இருந்து எவ்வாறு பல சக்திகள் வருகிறது…? என்றும்
3.அது பால்வெளி மண்டலங்களாக… தூசிகளாக எப்படி மாறுகிறது…? என்றும் கண்டுணர்ந்தான்
4.அவனால் அதை உணர முடிகின்றது… அவன் அறிவாக இயக்குகின்றது
5.அந்த வயதில் சொல்லாலோ செயலாலோ அவனால் வெளிப்படுத்த முடியவில்லை.

இருந்தாலும் அவன் நுகர்ந்தறிந்த உணர்வுகள் அவனுக்குள் விளைந்து அந்த மூச்சலைகள் வெளிப்படுகின்றது.

நம்முடைய கைக் குழந்தைக்கு அது பேசத் தெரியவில்லை என்றாலும் அது அழுகும் போது அந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதை நாம் பார்க்கின்றோம்.

நுகர்ந்த உணர்வுக்கொப்ப அதனுடைய முகங்கள் மாறுகின்றது. மகிழ்ச்சி என்ற உணர்வுகளை நுகரப்படும் போது அந்தக் குழந்தை சிரிப்பதையும் (வாய் அசைவுகளை) நாம் காண முடிகின்றது.

இதைப்போன்று தான் இந்த இயற்கையின் இயக்கங்களை உணர்ந்த அகஸ்தியன்
1.வானுலக உணர்வின் ஆற்றலை எல்லாம் உணர்ந்தான்
2.அவனுக்குள் அது விளைந்தது… அந்த உணர்வுகள் மூச்சலைகளாக வெளிப்படுத்தப்பட்டது.

அவன் உடலில் விளைந்த அந்த உணர்வு கொண்டு மற்ற தாவர இனங்களை இவன் கண்ணுற்றுப் பார்த்தால் அதனுடைய மணத்தை நுகர்ந்து அது எவ்வாறு விளைந்தது… என்றும் எதனெதன் இயக்கத்தில் இது கலந்து வளர்ந்தது…? என்றும் அவனால் முழுமையாக உணர முடிகின்றது.

தன் இளம் வயதில் தரையில் மல்லாந்து படுத்திருக்கும் பொழுது வானை உற்றுப் பார்த்து 27 நட்சத்திரங்கள் உமிழ்த்தும் எதிர்ப் பொறிகள் (கதிரியக்கங்கள்) மின்னலாக மாறி அது எவை எவை என்னென்ன செய்கிறது…? என்ற நிலையை உணர்ந்தவன் அகஸ்தியன்.

அது ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்து அந்த அதிர்வுகளாக வெளி வருவதை கேது ராகு என்ற கோள்கள் அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து விடுகின்றது…. “விஷத் தன்மை கொண்ட கோள்களாக” மாறுகின்றது.

நுகர்ந்ததை ஜீரணித்து தனக்குள் விஷப் பாறைகளாக மாற்றினாலும் அது வெளிப்படுத்தும் தூசி.. (அந்த மூச்சு) அது வெளி வரும்போது சூரியன் கவர்ந்து கொள்கின்றது.

சூரியன் தன் அருகிலே அதைக் கொண்டு வரும் பொழுது தனக்குள் விளைந்த பாதரசத்தால் அதைத் தாக்கிப் பிரித்து
1.ஒளிக் கதிர்களாக (ELECTRIC) நம் பிரபஞ்சத்தையே ஒளிமயமாக்குகின்றது.
2.வெப்பம் காந்தம் விஷம் என்ற மூன்றும் (ELECTRON) கலந்த நிலையில் காந்தம் தனக்குள் மற்றொன்றைக் கவர்ந்திடும் சக்தியாக
3.எந்த ஆவியின் தன்மை (கோளின் சத்தோ நட்சத்திரத்தின் சத்தோ) இங்கே இருக்கின்றதோ அதைக் கவர்ந்து தன்னுடன் இணைத்துக் கொண்டால் அந்த உணவின் சத்தாக (NEUTRON) இயக்கும் அணுவாக மாறுகின்றது
4.முழுமை அடைந்தால் தன் இனமாக விளையத் தொடங்குகிறது (PROTON).

உதாரணமாக ஒரு விஷத்தின் தன்மை அது அடர்த்தியின் தன்மையாக வரும் பொழுது நாம் நுகர்ந்தால் அந்த விஷத்தின் தன்மை உடலுக்குள் ஊடுருவி நாம் மயங்கி விடுகின்றோம்.

ஆகவே அதைப் போலத் தான் இந்த விஷத்தின் தன்மை (ELECTRON) எதை எதை நுகர்கின்றதோ அதன் அணுக்கதிர்களாக மாறுகின்றது. இப்படித்தான் நம் பிரபஞ்சம் இயக்குகிறது என்ற நிலையை முதன் முதலில் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்.

1.அவன் நுகர்ந்தறிந்த உணர்வுகளையும் அவனுக்குள் விளைந்த உணர்வுகளையும் நாம் நுகர்ந்தால்
2.அவனின் உணர்ச்சியின் இயக்கமாக நமக்குள் வருவதும்
3.நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் அகஸ்தியனைப் போன்றே எண்ணங்களாக வருவதும்
4.அந்த உணர்ச்சிக்கொப்பப இந்த உடலை இயக்கவும் நம்மைப் பாதுகாக்கும் தன்மையும் வருகின்றது.

அகஸ்தியன் கண்டுணர்ந்த பேரின்பத்தை… அவன் எவ்வாறு இந்த உலகில் அந்தப் பேரின்பத்தைப் பெற்றானோ அதைப் போல நாமும் பெற முடியும்.

தாய் சக்தியையும் மனைவியின் சக்தியையும் இணைத்துச் செயல்பட்டவர்கள் தான் மாமகரிஷிகள் – ஈஸ்வரபட்டர்

தாய் சக்தியையும் மனைவியின் சக்தியையும் இணைத்துச் செயல்பட்டவர்கள் தான் மாமகரிஷிகள் – ஈஸ்வரபட்டர்

 

அன்றைய கால கட்டங்களில் ஞானி சித்தனாகி… சித்தன் முனிவனாகி… பின் ரிஷியாகும் தொடர்பில் அனைத்தையும் அனுபவ ஞான வளர்ச்சி என்னும் தொடர்பில் பெற்றவர்கள் தான்.

தனது அறிவின் ஞான வளர்ப்பை மீண்டும் மீண்டும் வளர்ப்பாக வளர்த்திடவும் இந்த உலக மக்கள் உய்வு (பிறவியில்லா நிலை) எய்திடவும் ஏற்படுத்தப்பட்டது தான் “ஜெப நிலையும்… தியான நிலையும்….”

அந்த மகரிஷிகள் வெளிப்படுத்திய… வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் மூச்சலைகளையே ஒவ்வொரு உயிரும் உண்ணும்படியாக தியானத் வழித் தொடரை ஏற்படுத்தினார்கள்.

எந்தெந்த உயிராத்மாக்கள் எண்ணி ஏங்குகின்றதோ…
1.அவர்களுக்கெல்லாம் தாங்களே (மகரிஷிகளே) உணவும் ஆகி
2.உணவாக்கிட விறகாகவும் எரிந்து
3.ஆகாரமாகப் புசிக்கும் பக்குவ கதியில்
4.அதாவது உயிரான்மாக்கள் ஆன்ம சக்தியைக் கூட்டிடும் ஆகார கதிக்கு – தானே ஆகாரமாகி
5.பேரருள் பேரொளி சக்தியையே அளித்திட்ட வள்ளல் பெருமக்களே மகரிஷிகள் ஆவர்.

உலகெங்கிலும் உள்ள அனைத்து உயிராத்மாக்களும் தன் வளர்ப்பில் வளர்ச்சி கொள்வதற்காக வித்திட்டவர்கள் மகரிஷிகளே…!

நம்முடைய வளர்ச்சிக்கு வழி காட்ட உறுதுணையாக இருந்து… நாம் பெறும் சக்திக்கே சக்தி அளித்திட்ட..
1.அந்தச் சக்தியின் செல்வங்கள் (மகரிஷிகள்) பெற்ற நற்சக்திக்கு வலு சேர்க்கும் விதமாக
2.நம்முடைய ஞான சக்தியை வளர்த்திடும் நிலையாக நாம் அனைத்தையும் அறிந்து உணர்ந்திட வேண்டும்.

கோபம் குரோதம் காமம் ஆசை விருப்பு வெறுப்பு என்னும் தொடரிலே அவசரம் ஆத்திரம் பழி பாவம் என்று வரும் நிலையில் அவை அனைத்தையும் நாம் நீக்கிடும் உயர் ஞான சக்திக்கு அந்தக் கொங்கணவர் பெற்ற… பெற்று அளித்துக் கொண்டிருக்கும் அனுபவப் பாடம் நமக்குப் பேருதவியாக இருக்கும்.

ஏனென்றால் கொங்கணவர் தன் தாய் சக்தியின் தொடர்பு மூலமாகவும் தன் மனையாளின் சக்தி (பத்தினி) மூலமாகவும் தான் துர்க்கதியை அகற்றி நற்கதியை அடைந்தார்.

தாய் சக்தி.. மனைவி சக்தி… என்ற ரிஷி பத்தினி சக்தியின் கலப்பு பெற்ற அந்த மாமகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் ஏங்கிப் பெற்றால் அவர்களின் வளர்ச்சியின் அருள் ஒளி வட்டத்தில் நாம் அனைவரும் கலந்திடலாம். அதற்குத்தான் இதைச் சொல்கிறோம்…!

கண்ணனுக்கு மூத்தவன் பலராமன் என்றால் அதனின் விளக்கம் என்ன…?

கண்ணனுக்கு மூத்தவன் பலராமன் என்றால் அதனின் விளக்கம் என்ன…?

 

ஒருவர் வேதனைப்படுவார்.. ஒருவர் சங்கடப்படுவார்… ஒருவர் நோயுடன் அவதிப்படுவார்… ஒருவர் கோபக்காரராக இருப்பார்…! இவர்களின் உணர்வை எல்லாம் அன்றாட வாழ்க்கையில் நாம் உற்றுப் பார்க்க நேர்ந்து அதை நுகர்ந்தறிந்தால் இந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகின்றது.

சீதா என்றால்… சத்து சுவை என்றும்.. ராமா என்றால் எண்ணங்கள் என்றும்… சீதாராமா என்றால்.. மனிதனுக்குள் நுகர்ந்தால் (சுவாச நிலை) சுவைக்கொப்ப எண்ணங்கள் வருகின்றது என்றும்… நமக்குள் பலவிதமான நிலைகளை (மேலே சொன்னதை) நுகர்ந்தால் அந்த உணர்வின் எண்ணங்கள் “பல ராமனாக (பலராமன்) இயக்குகின்றது…” என்றும் சாஸ்திரங்களில் காட்டப்பட்டது.

பலராமனாக வருவதற்குக் காரணம்… நம் கண் ஒன்றை உற்றுப் பார்க்கின்றது. கண்களால் கவரப்பட்ட உணர்வை நுகரச் செய்கின்றது. அதன் உணர்வின் எண்ணங்களாக வருகின்றது.

உயிரோ அந்த உணர்வை ஈசனாக இருந்து இயக்குகின்றது. உடலுக்குள் அது பதிவாகின்றது. இவ்வாறு பதிவாக்கிய உணர்வுகளை
1.கண்களால் அந்தந்த உணர்வை அறிய முடிகின்றது
2.நுகர்ந்த பின் அந்தந்த உணர்ச்சி கொண்டு உயிர் நன்மை தீமை என்று அறிவிக்கின்றது.

நன்மை தீமை என்று அறிவதற்குக் கண்ணே கவர்ந்து அந்த உணர்வைப் பதிவாக்கி அந்த உணர்வை நுகரச் செய்கிறது.
1.உயிர் அந்த உணர்ச்சியை ஊட்டி உடல் முழுவதும் அது சக்கரம் போன்று சுழன்று படரச் செய்கின்றது.
2.உடலுக்குள் சென்ற பின் உடல் அதை அரவணைத்துக் கொள்கின்றது.

நாம் எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக வந்தாலும் மனிதனான பின் இந்த உணர்வுகள் அனைத்தும் நமக்குள் மறைந்துள்ளது. பல விதமான எண்ணங்கள் நமக்குள் உண்டு,

இந்த உயிர் இங்கே பூமிக்குள் முதலில் வந்த பின் தாவர இனத்தில் விழுந்து உடல் பெற்றாலும் “கண்கள் உருவாவதற்கு முன் எண்ணங்களே இருந்தது…!” அனைத்தையும் (தாவரங்களின் மணங்களை) உணர்ந்து நுகர்ந்து உணர்வுகள் அது எண்ணங்களாக வளர்ந்தது.

ஒரு செடியின் சத்தைச் சூரியன் கவர்ந்து கொண்டால் அது சீதாலட்சுமியாக மாறுகின்றது. ஆனால் அதே சமயம் இந்த உயிரணு சூரியன் கவர்ந்த அந்த மணத்தை நுகர்ந்தால் சீதாராமனாக வருகின்றது. உயிரணு நுகர்ந்து உடலாக்கப்படும் பொழுது சிவமாகின்றது.

உயிரோ ஈசனாகின்றது. உயிரின் இயக்கம் விஷ்ணுவாகின்றது. நாராயணன் மறு அவதாரம் விஷ்ணு. உயிரின் துடிப்புகள் வெப்பமாக வரப்படும் பொழுது விஷ்ணு என்றும் காட்டுகின்றார்கள்.

நாராயணன் என்றால் சூரியன். தான் எடுத்துக் கொண்ட உணர்வு சீதாலட்சுமியாக மாறினாலும் இந்த உயிரணு நுகர்ந்தபின் சீதாராமனாக அந்த எண்ண்ங்கள் தோன்றுகிறது. நாராயணன் திரேதா யுகத்தில் சீதாராமனாகத் தோன்றுகின்றான். திரேதா என்றால் உடல்.
1.இதை எல்லாம் ஒவ்வொன்றுக்கும் காரணப் பெயர் வைத்து
2.நாம் அறியும் தன்மைக்குக் கொண்டு வருகின்றனர் ஞானிகள்.

இப்படி வந்த இந்த உயிர் தான்… நுகர்ந்த பின் இந்த சீதா என்ற அந்தச் சுவை உடலாகும் போது சிவம்..

உடலுக்குள் அந்த உணர்ச்சியின் எண்ணங்களைத் தோற்றுவிப்பதும் நாராயணன் அந்த உடலுக்குள் சீதாரமனாக அந்தச் சுவை எதுவோ அந்த எண்ணத்தின் உணர்ச்சியாக அது இயக்குகின்றது என்பதனைத் தெளிவாகக் காட்டுகின்றது நம் சாஸ்திரங்கள்.

கடவுளின் அவதாரத்தில் இது தெளிவாக்கப்படுகின்றது.

இவ்வாறு உருவான அந்த எண்ணங்கள் சீதாராமன் என்று வந்தாலும் அதற்கப்புறம் கண் இல்லை என்கிற போது பார்க்க வேண்டும் என்ற உணர்வு வருகின்றது.

1.பல தீமையான உணர்வுகளை நுகரும் போது அதனால் வேதனைப்படுவதனால்
2.அந்த வேதனையிலிருந்து மீள வேண்டும் என்ற உணர்ச்சிகள் உந்துகின்றது.
3.அதன் அறிவாக மாற்றம் அடைகின்றது… தப்பிக்கும் உணர்வுகள் அங்கே வருகின்றது.

பார்க்க வேண்டும்… பார்க்க வேண்டும்… என்ற உணர்வுகள் பார்த்துத் தெரிந்து உணர வேண்டும் என்ற நிலையில் அதற்குள் அந்த நினைவாற்றல்கள் கூடி அந்த உணர்வின் எண்ணங்களைத் தோற்றுவிக்கின்றது.

1.அவ்வாறு தோற்றுவித்த உணர்வுகள் ஒவ்வொரு உடலிலும் சேர்த்துச் சேர்த்து
2.பல உடல்களில் பார்க்க வேண்டும் என்ற உணர்வுகள் வளர்ச்சி அடைகிறது,
3.அதைத் தான் “துவாரகா…” என்று காட்டுகின்றனர்.

ஒரு சுவையின் சத்தை நுகரப்படும் போது திரேதா யுகத்தில் உணர்வுகள் எண்ணங்களாகிக் கிரேதா உடல் என்று ஆனாலும் அதே சமயத்தில் இங்கே துவாரகா இந்த உடலுக்குள் தான் தன் தேவைக்குகந்ததை (தேவகி) நுகர்ந்த உணர்வுகள் வாசு தேவனாக சுவாசித்த உயிர் அதை உருவாக்குகின்றது.

அதாவது “தேவகி” என்ற உணர்வின் சத்தை
1.தன் தேவைக்கு என்று எண்ணிய அந்த உணர்வுகள் இரண்டும் சேர்ந்து
2.இந்தத் துவாரகா யுகத்தில் வாசுதேவனுக்கும் தேவகிக்கும் இந்த உடலான சிறைச்சாலைக்குள் கண்ணன் பிறந்தான்… கம்சனை வெல்ல..!

கம்சன் என்றால் இருள். இருளை நீக்க அவன் பிறந்தான். இப்படிப் பல ஆயிரம் ஆண்டுகள் பல சரீரங்களீல் பார்க்க வேண்டும் என்ற உணர்ச்சிகள் தோன்றித் தோன்றி அந்த எண்ணங்களால் தான் கண்கள் தோன்றியது என்று நம் சாஸ்திரங்கள் தெளிவாக்குகிறது.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காக மகாபாரதத்தில் பலராமன் கண்ணனுக்கு மூத்தவன் என்று காட்டுவார்கள்.

பல உணர்வின் எண்ணங்கள் (பல ராமன்) அங்கே தோன்றித் தான் பார்க்க வேண்டும் என்ற கண்கள் தோன்றியது.

ஆக…
1.இந்த இயக்கத்தின் நிலைகளை மனிதன் புரிந்து கொள்ளும் நிலைக்கே
2.பல உண்மையின் உணர்வுகளை இயக்கத்தைக் காட்டியிருந்தாலும்
3.காலத்தால் அந்த உண்மைகள் மறைந்து விட்டது.

மனிதனாக உருவாகக் காரணமான… “நாம் நுகர்ந்த உணர்வுகள்…” எவ்வாறு சந்தர்ப்பங்களில் ஒவ்வொன்றயும் நுகரச் செய்தது..? சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உயிர் நம்மை எப்படி மனிதனாக உருவாக்கியது…? என்று இதை எல்லாம் நம் சாஸ்திரங்களில் மிக மிகத் தெளிவாக்கப்பட்டுள்ளது.

அதைச் சொன்னாலும் இன்று தெரிந்து கொள்ளும் நிலை இல்லை…! ஏற்கும் நிலையும் குறைவாகவே உள்ளது…!

இன்றைய காலத்திற்கேற்ப சுலபமாகச் சக்தி பெறும் வழியைத் தான் உணர்த்துகின்றேன் – ஈஸ்வரபட்டர்

இன்றைய காலத்திற்கேற்ப சுலபமாகச் சக்தி பெறும் வழியைத் தான் உணர்த்துகின்றேன் – ஈஸ்வரபட்டர்

 

1.நோயாளிக்கு மூன்று வேளை உணவு
2.சம்சாரிக்கு இரண்டு வேளை உணவு
3.ஞானிக்கு ஒரு வேளை உணவு என்ற உணவின் நியமனக் கட்டுப்பாடு
4.உலக வாழ்க்கையில் எல்லோரும் உடல் நலத்துடன் வாழ்வதற்காக அன்றைய சித்தர்கள் வகுத்த வழி…!

குருவிடம் சிஷ்யன் முதலில் கற்றுக் கொள்ள வேண்டியது… நாவின் சுவையை அடக்கி…!” ஆகாரக் கட்டுப்பாட்டின் வழியில் புலனடக்கம் பெற்று…
1.தனக்குள் இயக்கும் எல்லா உணர்வுகளையும்
2.தன் மனக்கட்டுப்பாட்டில் அடங்கச் செய்வதாகும்.

ஞானிக்கு ஓர் வேளை தான் உணவு என்றால் அதையும் அவன் எப்படி ஏற்கின்றான்…?

ஓர் நாளைக்கு ஓர் முறை தான் என்ற நிலையில் தான் தேர்வு செய்த ஓர் வீட்டிற்குச் சென்று “பிச்சாந்தேஹி…!” என்று கேட்பான். ஆனால் அந்தச் சொல் வழக்கில் இருந்து விடுபட்டு இன்று அதனுடைய புனிதத் தன்மையே திரிந்து போய்விட்டது.

ஞானிகள் வீடு வீடாகச் சென்று பிட்சை கேட்பதில்லை.

ஓர் ஞானியோ… முனிவனோ…
1.இன்று தனது வீட்டிற்குப் போஜனத்திற்காக வரமாட்டாரா…?
2.அவருடைய ஆசியைப் பெற மாட்டோமா…? என்று
3.வாசலில் காத்திருக்கும் இல்லறத்தோர் ஏங்கியது அந்தக் காலம்.
4.அக்கால வழக்கம் எல்லாம் இன்று கேடுற்று விட்டது.

ஏதாவது ஓர் வீட்டைத் தேர்ந்தெடுத்து ஓர் வேளை பகல் பொழுதோ அல்லது அந்திமப் பொழுதோ சென்று சிறிது நேரம் நின்று “பிட்சை” என்ற ஒரு சொல் கேட்டு அன்புடன் வந்து அளித்திட்ட அமுதை அமுதமாக எண்ணி உண்பார்கள்.

ஒரு வேளைப் பொழுதுதான் உண்ணும் வழக்கமாக இருந்தாலும் “பிச்சாந்தேஹி…!” என்று கேட்டுக் குறித்த அவகாச காலத்தில் உணவு வராவிட்டால் என்ன செய்வார்கள்…?

அங்கு நிற்காமல் திரும்பி வந்து வெறும் நீரைக் குடித்து விட்டு மகிழ்ச்சியுடன் அமைதியாக அமர்ந்து “ஈஸ்வர தியானத்தில்” ஈடுபடுவார்கள்.

அக்காலத்தில் மூலிகை ஔஷதங்களைத் குருவின் மூலம் அறிந்து பெற்று அதை உண்டு வந்த அந்த வழக்கம் இன்று நடைமுறையில் சாத்தியப்படவில்லை.

1.இன்று உண்ணும் உணவிலும் ஊட்டச் சத்துக்கள் குறைவு
2.அது போக உடல் சோர்வும் மன நலிவும் உற்றுப் பிணிகளுக்கு ஆளாகுவது தான் இன்றைய நிலை.

ஆனால்…
1.அக்கால ஞானிகள் பெற்ற ஞானம் என்பது மிகவும் எளிதல்ல…!
2.கடுமையின் கடுமையை எதிர் நோக்கி வென்று வந்தார்கள் அவர்கள்.

அன்று மக்கள் தொகை பெருக்கம் இல்லாததால் குறைந்த கால அளவில் தான் பெறவேண்டிய நற்சக்தியை வளர்ச்சிப்படுத்தும் செயல் முறைக்குத் “தியானம் என்பதே… மிகக் கடுமையான பரிசோதனை முறைகளாக இருந்தது…!”

தான் பெற்ற சக்தியையே அது எந்த வழித் தொடர் என்பதை அறிந்து அதைப் பெற்று தனது நிலையை மென்மேலும் உயர்த்திடவே அனுபவப் பாட நிலைகள் கொண்டு வளர்ந்தவர்கள் தான் “அக்கால ஞானிகள்…!”

ஒரு வேளை உணவும் கிடைத்திடா விட்டாலும் வெறும் நீரை அருந்தி சந்தோஷமாகத் துயில் கொள்ளும்
1.தியானத் துயிலில் மனப் பக்குவ நிலை பெறும் சத்திய சோதனையையே
2.சத்திய நிலை நிலைக்கப் பெறும் தொடரில் வென்று
3.தனது நிலையை அன்று வளர்த்துக் கொண்டார்கள்.

அதே போல இந்த உலகில் வாழையடி வாழை என வாழ்ந்து கொண்டிருக்கும் ஞான சக்திச் செல்வங்களும் (மக்கள்) பெறவேண்டும் என்ற ஆசையின் நிலையில் தான்
1.இன்று கடுமையை விடுத்து
2.எளிய முறையாகத் தியானத்தின் மூலம் நற்சக்தி பெறுதல் என்று உணர்த்தி வருகின்றேன் (ஈஸ்வரபட்டர்).

எண்ணத்தால் எண்ணி ஏங்கினாலே கிடைக்கும் வழிக்கு…
1.மிகச் சுலபமான நிலைகளில் இந்தத் தியான முறையை உணர்த்துவது என்பதே
2.வளர்ச்சியின் வளர்ப்பாக்கி “ஆதி சக்தியின் மூலத்தில் எல்லோரையும் கலக்கச் செய்வதற்குத்தான்..!”

நட்சத்திரங்களின் ஒளிக் கற்றைகளைத் தியானத்தில் நுகர வேண்டியதன் முக்கியத்துவம்

நட்சத்திரங்களின் ஒளிக் கற்றைகளைத் தியானத்தில் நுகர வேண்டியதன் முக்கியத்துவம்

 

கார்த்திகை நட்சத்திரமும் ரேவதி நட்சத்திரமும் ஆண்பால் பெண் பால் நிலைகள் கொண்டது. அவைகளிலிருந்து வெளி வரும் தூசிகள் ஒன்றுடன் ஒன்று கவரும் போது பெரிதளவாக மோதும் போது… “மின்னலாகப் பாய்கிறது…” அந்த உணர்வின் “ஒளிக்கற்றைகளாக” விரிந்து செல்கிறது.

ஆனால் அதுவே சிறிதளவு மோதலாக வரும் போது நுண்ணிய அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது
1.இதே கதிரியக்கப் பொறியை உருவாக்கும் வியாழன் கோளிலிருந்து வரக்கூடிய இந்த உணர்வைச் சூரியன் கவர்வதும்
2.நட்சத்திரத்தின் கவர்ந்த அலைகள் இதை எதிர்பாராது சந்திக்கும் சந்தர்ப்பம் வரும் போது
3.இந்தக் கதிரியக்கத்தைக் கண்டு ரேவதி நட்சத்திரம் என்ற நிலைகள் அஞ்சி ஓடுவதும்
4.ஆண்பால் என்ற கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தியுடன் இது மோதி அந்த உணர்வின் தன்மை சுழலும் போது
5.இந்த வியாழன் கோளின் கதிரியக்கப் பொறியும் சேர்ந்து மூன்றும் இரண்டற இணைந்து விடுகின்றது.

அதனால் இது துடிப்பின் நிலை ஆகி எர்த்..! என்று (அந்த நிலை ஆக்கப்படும்போது) ஈர்க்கும் சக்தி சிறிதளவே வரப்படும் போது தன் அருகிலே மற்ற கோள்கள் வெளிப்படுத்தும் தூசிகளைக் கவர்ந்து அது அடைபட்ட பின் “ஓர் உயிர்” என்ற நிலை வருகின்றது.

இந்த உயிரணு எந்தெந்த உணர்வின் சக்தியை எடுக்கின்றதோ… அதே உயிர் எப்படித் துடிக்கின்றதோ… அதன் உணர்வாகத் தன் உடலாக… உடலில் உருவாக்குகின்றது.

இப்படித்தான் பல பல உடல்கள் மாற்றமானது என்ற நிலையை இந்த உண்மையின் உணர்வை அகஸ்தியன் நுகர்ந்தான். மின்னல் அது எப்படி ஒளிக்கற்றைகளாக மாறுகின்றதோ அதே உணர்வின் தன்மை போல் உயிரும் அதே நட்சத்திரங்களிலிருந்து வந்தது தான்…!

அதே உணர்வைச் சிறுகச் சிறுகச் சேர்த்துத்தான் தாவர இனங்கள் வந்தாலும் அதன் உணர்வின் அடர்த்தியாக வரும்போது… உயிரின் துடிப்பால் இந்த உணர்வின் தன்மைகளை (தாவர இனத்தின் மணங்களை) ஜீவ அணுவாக மாற்றி எதனின் மணத்தைக் கவர்ந்து கொண்டதோ அந்த உணர்வுக்கொப்ப உடலில் அணுக்களாக உருவாகின்றது.

1.இதைத் தான் வேதங்கள் “சாம…” மணம் என்றும் அதனின் இசை என்றும் கூறுகிறது
2.அதாவது உயிர் நுகர்ந்த அந்தந்த உணர்வுக்கொப்ப எண்ணங்களும்
3.அந்த உணர்ச்சிக்கொப்ப உடலின் அமைப்பும் அதனுடைய குணங்களும்
4.அதனின் செயலாக்கங்களும்…! என்ற நிலையைத் தெளிவாகக் கூறுகின்றது.

ஏனென்றால் இதற்கு விளக்கம் கூற வேண்டும் என்றால் இரண்டு வருடத்திற்காகவது சொல்ல வேண்டும். ஆனால் உங்களிடத்தில் சுருங்கச் சொல்கிறேன்,

இதனுடைய உணர்வுகள் உங்களுக்குள் விளைந்தால்… அகஸ்தியன் கண்ட வழிகளில் நீங்களும் நுகர்ந்தால் இந்த உண்மையின் உணர்வை உணர்ந்து இந்த மனிதனுக்குப் பின் எங்கே… என்ற நிலையில் பிறவி இல்லா நிலை அடையலாம்.

அந்த அகஸ்தியன் தன்னில் உணர்ந்த உணர்வினை ஒளியாக மாற்றினான். அதே உணர்வின் தன்மையை நாம் எடுத்துக் கொண்டால் அந்த ஒளியின் சரீரமாக நாமும் பெற முடியும்.

வானில் வரும் உணர்வின் தன்மையை விஷத்தை ஒளியாக மாற்றி இன்று அகஸ்தியன் தன் வாழ்க்கையில் பெற்றான். இதற்கெல்லாம் எங்கிருந்து உணவு வருகிறது..? என்று கண்டுணர்ந்தான்.

அவன் உற்றுப் பார்த்த நிலைகள்…
1.அந்த மின் கதிர்கள் வலு கொண்ட நிலைகளில் எவ்வளவு தூரம் எட்டுகின்றதோ
2.அதைப் போல் இவனின் நினைவாற்றலும் அங்கே படர்கிறது

ஏனென்றால் மின்னல் என்ற நிலை வந்தாலும் நம் பிரபஞ்சத்தைத் தாண்டிக் கூட இந்த ஒளிக் கற்றைகள் செல்கிறது.

ஒளிக் கற்றைகள் அப்படி ஊடுருவிச் சென்றாலும்… அதே சமயத்தில் அவைகளைக் கவரும் தன்மை கொண்டு நம் பிரபஞ்சத்திற்குள் வருகிறது… பூமிக்குள்ளும் வருகின்றது…! என்பதனை அகஸ்தியன் உணர்ந்தான் இயற்கையின் உண்மையை உணர்ந்தான்.

அவனில் விளைந்த உணர்வுகள் இங்கே பரவியிருப்பதை நான் (ஞானகுரு) நுகரப்படும் போது அதை அறிந்து.. அவன் கண்டுணர்ந்த உணர்வின் தன்மைகளை நீங்களும் பெற முடியும்…! என்ற உணர்வின் சொல்லாக.. வாக்காக யாம் வெளிப்படுத்துகின்றோம்.

1.இதை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்
2.பதிவாக்கியதை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் அந்த உணர்வின் சத்தை நீங்கள் பெற்று
3.உங்கள் உடலில் அறியாது வரும் தீமைகளை வெல்ல முடியும்.
4.உங்கள் உணர்வை எல்லாம் ஒளியாக மாற்ற முடியும்….!

ஒளியாக மாற்ற முடியும் என்பதற்குத்தான் மின்னலைப் பாருடா…! என்று எம்மிடம் குருநாதர் முதன் முதலில் சொன்னார்.

உண்மையான சீடர்கள் கிடைப்பது அரிதிலும் அரிது…! – ஈஸ்வரபட்டர்

உண்மையான சீடர்கள் கிடைப்பது அரிதிலும் அரிது…! – ஈஸ்வரபட்டர்

 

குரு என்பவர் “தியானம் என்ற நற்பாதைகளைக் காட்டி அதன் வழியில் தெளிவு நிலை பெறுவதற்காகச் “சீடர்களைச் சோதனைக்கும் ஆட்படுத்துவதுண்டு…!”

தன்னிடம் வரும் சீடர்களுக்குப் போதனையுடன் தன் செயலை நிறுத்திக் கொள்வதுமில்லை. “தனக்கு மேல்…!” சிஷ்யன் சக்தி பெறச் செய்யும் செயலுக்கு… மருத்துவம் மனோதத்துவம் மனோவசியம் வீரக்கலைகளுக்கும் போதனைப்படுத்தி அந்த ஒவ்வொரு சீடரின் செயலையும் கண்காணித்து அவரவர் வழித் தொடர்புக்கும் வளர்ச்சிக்கும் செயல்களை நிகழ்த்தி அந்த வழியின் ஊக்கத்தையும் மேன்மைப்படுத்துவார் அந்தக் குரு.

அனைத்திலும் சூட்சமம் கொண்டே அன்றைய சித்தர்கள் புவியியல் உயிரியல் வானியல் என்ற செயலுக்கும் செயற்பட அந்தக் கலைகளையே மூலதனமாகப் புகட்டி ஆரம்ப வழி வகைகளை ஆராயப் புகத் தனது சீடர்களைத் தயார்படுத்தினார்கள்

காரணம்… உண்மையான சீடர்கள் கிடைக்க மாட்டார்கள்…!

குரு எனப்படுபவர் ஆயிரம் ஆயிரம் உருவாகலாம்…! நாற்பத்தி எட்டாயிரம் மகரிஷிகள் என்று கூறும் பொழுதே ஞானிகள் சித்தர்கள் மகரிஷிகள் என எண்ணிலடங்கா தொகையில் தொடர்ந்தாலும் “ஆரம்பச் சித்து நிலை பெற வரும் சீடர்கள்… மிகவும் குறைவே…!”

உண்மையான சீடர்களைக் காண்பது “அரிதிலும் அரிது…!” என்ற உண்மையின் சூட்சமம் அன்று கண்டு கொண்ட அன்றையச் சித்தர்களும்
1.தங்களுக்கு ஏற்பட்ட அனுபவ முறைகளினாலும் அதை உணர்ந்தே
2.தனக்கு உண்மையான சீடரைத் தேர்ந்தெடுக்கப் பல செயல் முறைகளைச் செய்வித்தனர்.

மருத்துவம் படிப்போர் அரைகுறை வைத்திய ஞானம் பெற்று விட்டால் “தன் வாழ்விற்கு வழி ஏற்பட்டு விட்டது…!” என்ற உலக ஆசைக்குத் தங்களை உட்படுத்தி அதன் வழி ஓடி விடும் சீடர்களூம் உண்டு.

மனோதத்துவ சாஸ்திர கலைகளில் நாட்டம் கொண்ட சீடனும் சொல்லாமல் கொள்ளாமல் நழுவிவிடுவார். அடுத்துப் பெறும் யாக நிலைகளில் மாந்திரீக ஏவல் செயலுக்கு நாட்டம் கொள்வோர் அந்த வழியில் சென்றுவிடுவர்.

இதில் எல்லாம் தெளிந்தவர்கள்…
1.நாம் குருவிடம் அறிந்து கொள்ள வந்தது இது அல்ல….!
2.உலக ஆசை நிலைப்படுத்தும் நிலைகள் தான் அவைகள் என்று உணர்ந்து
3.”உண்மைப் பொருளை நாடும் உண்மையான சீடர்கள் தான்…!” நிலையாகத் தங்கிச் செயல் கொள்வர்.

அவர்களே உண்மை ஞானம் உணரும் குருவிற்கு ஏற்ற உண்மையுள்ள சீடர்கள். அவர்களைத் தேர்ந்தெடுக்க குருவிற்கும் ஒரு சூட்சமம் உள்ளது…!

தன் நிலைக்குத் தன் சீடனை உயர்த்திவிடும் குருவிற்கு ஏற்படும் சில குறை நிலைகளை அந்தச் சீடர்களால் ஏற்படும் சில சக்தி குறைவுகளிலிருந்து குரு மீண்டெழ அந்தச் சீடர்களால் குரு பாதுகாக்கப்படுகின்றார்.

1.தனக்குச் சக்தி வேண்டியே…! தன் வழித் தோன்றல்களாகிய சிஷ்யர்களைக் குரு தேர்ந்தெடுக்கின்றார்.
2.தன் நிலையைத் தான் உயர்த்திக் கொள்ளவே “குருவைத் தேடி அலைகிறான் சீடனுமே…!”
2.அப்படிப்பட்ட ஆத்மார்த்த குருவும் உண்மைச் சீடனும் என்றுமே மாசுபடப் போவதில்லை.

அத்தகைய சீடர்களுக்குக் குரு போதிக்கும் போதனைகளைத் தங்களை உணர வேண்டிதற்காகக் குரு அளிக்கும் சந்தர்ப்பங்களில்
1.வெறும் சங்கட அலைகளைச் சிஷ்யர்கள் மனதில் பதிய வைத்துக் கொண்டால்
2.அதுவே மரமாக மீண்டும் வெட்டப்பட வேண்டிய செயலுக்குக் கொண்டு போய்விட்டுவிடும்.

சீடர்களைப் பாதுகாப்பது குருவின் தலையாயக் கடமையாகிவிடுகின்றது.

வாழ்க்கைச் சூழலில் சங்கட அலைகளில் அறியாமல் அகப்பட்டுக் கொள்ளும் குருவையும்… அறிந்தே அகப்பட்டுக் கொள்ளும் குருவையும்… காப்பது “உண்மையான சீடர்களின் பொறுப்பும் ஆகிவிடுகின்றது…!”

உண்மை உணரும் ஞானச் சீடர்களும் குரு காட்டிய வழியில் தன் சக்திகளை வலுக் கூட்டிக் கொள்ளத் தான் எண்ணி எடுக்கும் தியானத்தின் மூலம் ஒளி நிலையைக் கண்டாலும்
1.நாம் தேடிக் கொண்டிருப்பது இது அல்ல…!
2.இதற்கும் அடுத்த உயரிய நிலை எது…? என்று கண்ட காட்சிகளை எல்லாம் அறிந்துணர்ந்து
3.பின் விலக்கி விலக்கி… எந்த உண்மை ஜோதி தத்துவத்தில் மூழ்க நினைத்தானோ
4.தன் நல்லாக்கத்திற்குப் பயன்படும்படியாக ஊக்கம் கொண்டு மேலும் செயல்படச் செயல்பட
5.எந்த ஜோதித் தத்துவத்தை நாடிக் கலக்க மனம் கொண்டனோ அதையே ஈர்த்து ஈர்த்து…
6.தன் ஈர்ப்பினால் தானே ஜோதியாகி அந்த ஜோதி தத்துவத்தில் கலந்து விடுகின்றான்.

ஆகவே குரு சிஷ்ய மனோபாவனை என்பது மிகவும் உயரியது. அதை வெறும் உலக ஆசை நிலைகளுக்கு யாரும் அடகு வைத்துவிடக் கூடாது.
1.குருவும் உணர வேண்டும்…
2.அதே நேரத்தில் சீடர்களும் உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

விரும்பிக் கேட்பது தான் கிடைக்கும்… நாம் எதைக் கேட்க வேண்டும்…?

விரும்பிக் கேட்பது தான் கிடைக்கும்… நாம் எதைக் கேட்க வேண்டும்…?

 

கஷ்டம்… துன்பம்… என்று எதுவுமே சொல்லாதீர்கள் என்று நான் (ஞானகுரு) அடிக்கடி சொன்னாலும் பெரும்பகுதியானோர் கேட்பதில்லை,
1.சீக்கிரம் நன்றாகிவிடும்…! என்று நல்ல வாக்கினை யாம் சொன்னால்
2.இரண்டாவது தரம்… குடும்பத்தில் ஒரே தொல்லையாக இருக்கிறது என்றும்
3.குழந்தைக்கு இப்படி இருக்கிறது என்று திருப்பி இப்படிக் கேட்டு
4.யாம் சொன்னதைத் தூக்கி எறிந்து விடுகின்றார்கள்.

வாக்கின் மூலமாகத் தான் ஞான வித்தை உங்களுக்குக் கொடுக்கின்றேன். அதை வளர்த்துக் கொண்டால் தான் உங்களுக்குள் அருள் ஞானத்தை வளர்க்க முடியும்.

ஆனால் என்று தன்னம்பிக்கை இல்லாமல் தான் மீண்டும் மீண்டும் அப்படிக் கேட்கிறார்கள். ஏனென்றால்
1.உங்களுக்குள் ஏற்கனவே எது பதிவானதோ அந்த உணர்வுதான் அப்படி இயக்குகிறது
2.அதை மாற்றும் வல்லமை இல்லாது இருக்கின்றது.
3.அதன் உணர்வுக்கொப்ப அந்த அணுக்கள் தான் வளர்கிறது.

ஆக… அதை மாற்றும் வல்லமை உங்களுக்கு வேண்டும் என்பதற்குத்தான் மணிக்கணக்கில் பேசுகின்றேன்.

இங்கே உபதேசிக்கும் உணர்வைப் பதிவாக்கிக் கொண்டு அந்த வலுவான நிலைகள் கொண்டு என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்… குடும்பத்தில் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்…. எங்கள் தொழில் நன்றாக வளர வேண்டும்.. எங்கள் வாடிக்கையாளர்கள் பெருக வேண்டும். எங்கள் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும் என்று அதற்குண்டான சக்தி வேண்டும் என்று கேட்டால் அந்தச் சக்தியைப் பெற்று நீங்கள் வளரலாம் அல்லவா…!

நீங்கள் இதைக் கேட்டு… அதன்படி நடக்கும்…! என்று நான் சொன்னால் அந்த அருள் சக்தியைப் பெற்று உங்களுக்குள் தீமை வளராது தடுக்க முடியும். உங்கள் சொல் செயல் மற்றவரையும் நல்லதாக்கும்…!

ஏனென்றால்… விரும்பிக் கேட்பது தான் கிடைக்கும்…!

நல்லதை விரும்பிக் கேட்காது… எனக்குக் கஷ்டமாக இருக்கிறது… தொல்லை என்னை விட்டே போக மாட்டேன் என்கிறது தொழிலே சரியாக நடக்கவில்லை மிகவும் கஷ்டமாக இருக்கின்றது என்று இதைத்தான் கேட்கிறார்கள்.

சாமியார் செய்வார்… சாமி செய்யும்… ஜோதிடம் செய்யும்…! என்று காசைக் கொடுத்துவிட்டு மோட்ச லோகத்திற்குப் போவதும் காசைக் கொடுத்து ஆண்டவனிடம் வரம் வாங்கும் நிலையில் தான் நாம் இருக்கின்றோம்.

ஆனால் நம்மை ஆள்பவன் உயிர் தான்…!
1.ஆண்டவனாக இருப்பதும் நாம் எண்ணியதை உருவாக்குவதும் நம்மை ஆண்டு கொண்டிருப்பதும் உயிர்.
2.அவனிடம் நீங்கள் வேண்டுங்கள்…
3.மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடலில் படர வேண்டும்
4.எங்களுக்குள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்
5.மெய்ப் பொருள் காணும் சக்தி பெற வேண்டும்
6,எங்கள் பார்வை அனைவரையும் புனிதமாக்க வேண்டும்
7.எங்கள் சொல்லைக் கேட்போர் அனைவரும் நலம் பெறவேண்டும்
8.கனியைப் போன்ற இனிமையான நிலை எங்கள் வாழ்க்கையில் பெற வேண்டும்
9.எங்கள் சொல்லைக் கேட்போரும் அந்த நிலை பெற வேண்டும்
10.வைரத்தைப் போன்று எங்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும்
11.நாங்கள் பார்ப்போர் வாழ்க்கையும் ஜொலிக்க வேண்டும்
12.எங்கள் சொல்லைக் கேட்போர் வாழ்க்கையும் ஜொலிக்க வேண்டும் என்று உங்கள் உயிரிடம் கேட்டுப் பாருங்கள்.

கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்பது போல் மேலே சொன்ன உணர்வுகளை அதிகமாகக் கூட்டிப் பழகுங்கள்.

மற்றவர்களுடைய துயரத்தையும் துன்பத்தையும் கேட்டறிந்தாலும் பத்திரிக்கை வாயிலாகவும் டி.வி. வாயிலாகவும் வேதனையான உணர்வுகளை அதிகமாக நுகர்ந்தாலும் அடுத்த கணம் அந்த அருள் ஒளியை நீங்கள் எடுத்துப் பழகுங்கள்.

ஒளியான உணர்வுகள் வரும் போது தீமைகள் வராது தடுக்கும்.. பேரருள் உணர்வுகள் கூடும்… அதன் வழி நாம் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழலாம். வாழ்க்கையில் வரும் துன்பத்தை அகற்றலாம்.

1.அருள் ஒளி பெறுங்கள்… அருள் ஞானம் பெறுங்கள்…! அருள் வழியில் பேரின்பம் பெறுங்கள்.
2.பிறவி இல்லா நிலையை அடையும் பருவம் பெறுங்கள்.

நல்ல (மெய் ஞான) வழியைத் தேடுவோருக்கு குரு காத்துக் கொண்டிருக்கின்றார்…!

நல்ல (மெய் ஞான) வழியைத் தேடுவோருக்கு குரு காத்துக் கொண்டிருக்கின்றார்…!

 

உலக வாழ்க்கையின் சூழலில் சிக்கிக் கரை காணாது மன மயக்கமுறும் “மனித மனம்” கரையத் தொட்டு விட… எட்டி விட நினைக்கின்றது.

ஆனாலும் அதனுடைய செயல் முறைக்கு வழி வகை அறிய முடியாது எல்லை கடந்த நிலையில் மயக்கமாகி
1.பின் கைக்குக் கிடைத்த பொருள் போதும்… கரை சேரலாம்…! என்ற நினைப்பும் வருகின்றது.
2.இந்த வாழ்க்கையின் நிகழ்வில் தன் கைக்குக் கிடைத்த ஒரு மிதவையின் துணையினால் தன் முயற்சி கொண்டு கரை காண்பதும் உண்டு.

அதாவது கரை காணாத வாழ்க்கைச் சாகரத்தில் திமிங்கலங்களும் பல பல விஷ ஜெந்துக்களும் உண்டு என்ற போதும்… தானே கண்ட வழியாக ஓர் படகைச் செய்வித்து… அதில் அமர்ந்து எதிர் திசைக்குத் துடுப்பிட்டு
1.எண்ண கதி ஓட்ட வாழ்வில் செல்லும் பல வழிப் பாதைகளில் இடம் சேரும் மனிதன்
2.வாழையடி வாழையாக வாழ்க்கை தன் நிலையே தனக்கு இத்தகையது தான்
3.தன் வாழ்க்கையில் வரும் துன்பங்களும்… உடல் நலக் குறைபாடுகளும்… மூப்பும் சாக்காடும் (இறப்பு) கண்டு சிந்திக்கத் தொடங்கினால்
4.தன் நிலை உணர்ந்து… பிறவித் துன்பம் நீக்கவும்.. தன் செயலில் தனக்குகந்த எண்ணப் புதிர்களை விடுவிக்கவும்…!
5.தன்னைப் பேரானந்தப்படுத்த ஓர் குருவைத் தேடத் தொடங்கினால்
6.அவனுடைய உண்மையான மனம் அதுவாக இருந்து அத்தகைய தேடுதலும் சிந்தித்தலும் சித்தித்தால்
7.இவன் தேடும் குருவும் இவனைத் தேடித் தானே வந்தடைகின்றார்… அல்லது இவன் வழியில் காத்துக் கொண்டிருக்கின்றார்…!
8.குருவின் அருட் பார்வையில் நனைகின்றான். நனைந்த பின் பிறவித் துன்பம் களையப்படுவதாக உணர்கின்றான்.

உலக வாழ்க்கையிலும் தனக்கு ஒரு பாதை கிடைத்து விட்ட எண்ணமும் அந்த எண்ணத்தின் வலுக் கொண்டு தனக்குப் போதிக்கும் குருவின் வழியைக் கடைப்பிடித்து நடக்கத் தன்னையே அந்தப் போதனைக்கு உட்படுத்தி
1.குறைவிலும் நிறை கண்டு
2.தன் ஞானச் செயலுக்கு வித்திட்டுக் கொள்கின்றான்.

இந்த வழித் தொடரில் குருவை அடையும் சிஷ்யர்கள் “அதிக அளவில் பெருகி…!” குருவை நெருங்கித் தனக்கு வேண்டிய தேவைகளுக்காகவும் தனக்கு ஏற்படும் சிக்கல்ளுக்கு மாற்று வழியைக் கண்டு உண்மையை உணர வேண்டும் என்றும் அந்த ஆர்வத் துடிப்பைக் காட்டுவதும் உண்டு.
1.ஆனால் வருகின்றவன் உலக ஆசைக்கெல்லாம்… குரு சென்றால்
2.குருவின் செயலுக்கே களங்கம் ஆகிவிடும் அல்லவா…!

அந்த மெய் குருவோ அந்தச் செயலைக் கண்டித்துரைத்து இவன் அதி ஆசையை வேரறுக்கத் தனக்குகந்த சீடர்களைத் தேர்ந்தெடுக்க பல கலைகளும் பயிற்றுவித்து அதிலே மயக்குறும் சிஷ்யர்களை விலக்குகின்றார்.

தனக்குகந்த சீடர்களைத் தயார்படுத்த சீடனுக்கும் சக்திகள் அனைத்தையும் ஊட்டி வாழ்க்கையின் வழியில் வரும் மோதல்களிலிருந்து தன் நிலை மாற்ற மனப் பக்குவத்தையும் ஏற்படுத்துகின்றார்.

என்றுமே மாறாத நிலைகள் கொண்டது உயிர் தோன்றிய பின் ஒளியாக மாறுவது தான்…!

என்றுமே மாறாத நிலைகள் கொண்டது உயிர் தோன்றிய பின் ஒளியாக மாறுவது தான்…!

 

காலை துருவ தியானத்தில் எடுக்கும் “துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளே…”
1.நமக்குப் பெரும் சொத்து… அழியாச் சொத்து…
2.என்றும் நிலையான சொத்து…
3.பேரின்பப் பெருவாழ்வு என்று பிறவி இல்லா நிலை அடையச் செய்யும் சக்தி (சொத்து) ஆகும்.

ஏனென்றால் மனிதனாகப் பிறந்த பின் நமது எல்லை பிறவி இல்லா நிலை அடைவது தான்.

பிறவி இல்லா நிலைகள் அடைந்து அகண்ட அண்டத்தில் வருவதையும் தனக்குள் ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்று ஆறாவது அறிவை ஏழாவது நிலையாகdh தனக்குள் சிருஷ்டிக்கும் வளர்ச்சியின் பாதையில் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து வாழ்வதே நம் கடைசி எல்லை.

காரணம்… இந்தச் சூரியக் குடும்பம் செயலிழக்கும் தருணம் வந்து விட்டது. அதனால் இதன் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள கோள்களும் மறைந்துவிடும்.

சூரியனுக்கு உணவாக எடுத்துக் கொடுக்கும் 27 நட்சத்திரங்கள் அது ஒவ்வொன்றும் சூரியனைப் போன்றே தனி ஒரு பிரபஞ்சமாக மாறி விலகிச் செல்லும் நிலை வந்துவிட்டது.

கார்த்திகை நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம் போன்றவைகள் சூரியக் குடும்பங்களாக மாறுவதனால் நம் சூரியக் குடும்பத்திற்கு வரும் சக்திகள் இழக்கப்படுகின்றது.

அதாவது நமக்குக் குழந்தைகள் பிறந்து வளர்ந்து அவர்களுக்குத் திருமணமான பின் தனிக் குடும்பங்களாகப் பிரிந்து செல்வது போன்று தான்.

அவர்கள் பிரிந்து சென்றால் இங்கே இந்தக் குடும்பம் பலவீனம் அடைகிறது. பலவீனம் அடையப்படும் பொழுது குழந்தைகளிடமிருந்து எதுவும் எதிர்பார்க்க முடிவதில்லை.

அதைப் போன்றுதான் இந்தச் சூரியனும் அழியலாம்…!
1.ஆனால் இந்தப் பிரபஞ்சத்தில் உருவான உயிர்
2.அந்த மகரிஷிகள் கண்டுணர்ந்த வழியில் நாம் செல்வோம் என்றால் என்றுமே வேகா நிலை அடையலாம்.

நெருப்பில் விழுந்தால் நம் உயிர் வேகுவதில்லை. உணர்வின் அணுக்கள் வெந்து விடுகின்றது. ஆகவே…
1.அந்த உயிரைப் போன்றே நம் உணர்வுகளை எல்லாம் வேகா நிலை என்று உருவாக்கி
2.அகண்ட அண்டத்திலும் அழியா நிலை என்ற நிலை பெறுதல் வேண்டும்.

அது தான் பிறவி இல்லா நிலை என்பது…!

இப்பொழுது இந்த உடலில் நாம் இதை உருவாக்கத் தவறினால் இனி அடுத்த சந்தர்ப்பம் எப்பொழுது…? என்று நமக்குத் தெரியாது…!

புழுவாகப் பூச்சியாக இருந்து மனிதனாக உருவாக்கிய நம் உயிரைக் கடவுள் என்று அறிந்து கொண்ட பின் அறிந்த உணர்வுகள் கொண்டு ஒளியாக மாறிய அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்து அவர்கள் பாதையில் நாம் சென்றோம் என்றால் அத்ன் எல்லையில் நாம் என்றும் நாம் நிலையாக வாழலாம். பிறவி இல்லா நிலை அடையலாம்.

இந்தப் பிரபஞ்சம் அழிந்தாலும்…
1.எதனின் சேர்க்கையில் இந்தத் துருவ நட்சத்திரம் இருக்கின்றதோ
2.அதன் ஈர்ப்பு வட்டத்தில் நாமும் இணைந்து
3.அகண்ட அண்டத்தில் சுழன்று சென்று வரும் உணர்வுகளை ஒளியாக மாற்றிடும் திறன் பெறுவோம்.

அகண்ட அண்டத்தில் என்றும் பதினாறாகச் சிறிதாகவே நாம் இருப்போம். அந்த நிலையிலேயே வளர்ச்சியின் பருவத்திலே பல கோடி ஆண்டுகள் வாழும் நிலை வரும்.

இந்த அண்டமே முழுமையாக ஒளியின் சரீரமாக அடையும் பருவம் என்பது அது எத்தனையோ கோடி ஆண்டுகள் ஆகலாம்.

எத்தனையோ கோடிச் சூரியன்களும் உண்டு. எத்தனையோ கோடிக் கோள்களும் உண்டு. இப்படி எண்ணிலடங்காத நிலைகள் அகண்ட அண்டத்தில் இருக்கப்படும் பொழுது அதனின் உணர்வை நாம் நுகர்ந்து நம் உயிரின் துணை கொண்டு என்றுமே ஒளியின் சரீரமாக மாறுதல் வேண்டும்.

நமக்குள் உருவாகும் அந்த ஒளியான உணர்வினை வெளிப்படுத்தும் போது மற்ற சூரியன்கள் கவரும் நிலை கவர்கிறது.
1.அந்தச் சூரியக் குடும்பங்களில் மனித இனங்களும் உண்டு.
2.அவர்களுக்கும் இந்த உணர்வுகள் பயன்படும்.
3.அவர்கள் தீமைகளை வென்றிடவும் இது உதவும்.

ஆகவே நாம் உலகைக் காத்திடும் கடவுள்களாக வளர்ச்சி பெற வேண்டும்… “இந்த மனித உடலிலிருந்தே…!”

அதற்குத்தான் மீண்டும் மீண்டும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு).

அந்த அருள் சக்தி நம் உடலுக்குள் சென்ற பின் தீமையை வென்றிடும் அரும் பெரும் சக்தியான கடவுளாக வருகின்றது. நாம் எண்ணியதை அந்த ஒளியின் சரீரமாக உருவாக்கும் ஈசனாக நம் உயிர் அமைகின்றது.

நம் உயிர் அமைந்தது போல் நுகர்ந்த உணர்வின் அணுக்கள் அதன் வழியில் என்றும் ஒளியின் சரீரமாக… உருவாக்கும் கடவுளாக… ஈசனாக நமக்குள் உருப்பெறச் செய்யும்…!

ஒருவனே தேவன் ஒருவனே கடவுள் என்றால் இது அறியாமை தான். ஒன்று என்ற நிலை அகண்ட நிலையில் எங்குமே இல்லை.
1.பலவும் சேர்த்து ஒருமை ஆகின்றது
2.ஒன்று சேர்த்துப் பலவாகின்றது
3.பலவும் சேர்த்து ஒன்றாகினறது.

இப்படித்தான் இயற்கையின் நிலைகள் அது மாறிக் கொண்டே வருகின்றது. இருந்தாலும்… “மாறாத நிலைகள் கொண்டது உயிர் தோன்றிய பின் ஒளியாக மாறுவது தான்…!”

ஒளியின் சரீரம் பெற்றாலும் ஒளி நிலை பெற்றவர்கள் ஒருவருக்கொருவர் விளைந்த நிலையில் ஒன்றுடன் ஒன்று அது ஒன்றி வாழ்ந்தால் தான் அது வாழ முடியும்.

அப்படி வாழ்ந்தவர்கள் தான் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும் அவர்கள் தனித்து வாழவில்லை. அங்கே சென்று ஐக்கியமாவது தான் நம் பிறவியின் பயன்..!