பரம்பரை நோயும் பரம்பரைக் குணமும் நமக்கு வரக்கூடாது

பரம்பரை நோயும் பரம்பரைக் குணமும் நமக்கு வரக்கூடாது

 

நாம் ஒவ்வொருவருமே கூட்டுத் தியானத்தின் மூலம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்று அதை வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

அதற்குப் பின் தான் நம் மூதாதையர்களின் ஆன்மாக்களை விண் செலுத்த வேண்டும். அந்தந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இந்தத் தியானத்தில் கலந்து கொண்டு..
1.எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற
2.முன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் இணைய வேண்டும் என்று ஏககாலத்தில் இதைச் சொல்லும் பொழுது
3.உடனடியாக அவர்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் விண் செலுத்த முடிகின்றது.

காரணம்…
1.அவர்கள் (முன்னோர்கள்) துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நுகர்ந்து அறியவில்லை என்றாலும்
2.அவர்கள் சார்புடையோர் அந்தக் குடும்பத்தில் உள்ளோர்கள் நுகர்ந்து அறிந்துள்ளார்கள்.
3.அந்த உணர்வின் வலிமை கொண்டு வரும்பொழுது
4.மேலே சொன்னது போல் எல்லோரும் சேர்த்துச் சொல்லும் போது
5.அந்த உணர்வுகள் அவரவர் செவிகளில் பட்டு… கண் வழி கவர்ந்து… மூக்கு வழி நுகர்ந்து… உணர்வின் தன்மை உடலில் பெருகி…
6.அதனின் வலு கொண்டு நாம் விண்ணில் செலுத்தும் பொழுது எளிதில் அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலம் சென்றடைகிறது.

முன்னோர்களின் உடலில் கடுமையான நோய் இருந்திருந்தாலும்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் படரப்படும் பொழுது அந்த நோயின் உணர்வுகளைக் கரைத்து விடுகிறது. உயிருடன் ஒன்றிய உணர்வுகள் அங்கே ஒளியாக நிலைக்கின்றது.

ஆக… குடும்பத்தை சார்ந்தவர் அனைவரும் காலை துருவ தியானத்தில் அந்தச் சக்தி எடுக்கும்பொழுது அடிக்கடி முன்னோர் மூதாதையரின் உயிரான்மாக்கள் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும்… பிறவியில்லா நிலை அடைய வேண்டும்… பேரின்பப் பெரு வாழ்வு பெற வேண்டும்… என்று இந்த உணர்வுகளை எடுத்துக் கொண்டே வர வேண்டும்.

ஏனென்றால் அவர்களுடன் பழகி உணர்வுகள் என்றும் நமக்குள் உண்டு. காலை துருவ தியானத்தில் அடிக்கடி எண்ணி அவர்களை விண் செலுத்தும் பொழுது
1.நம் உடலில் பரம்பரை நோய் வராது மாற்றப்படுகின்றது
2.பரம்பரை குணம் என்ற நிலைகள் மாற்றப்படுகின்றது.

முன்னோர்கள் அவர்கள் ஒருவருக்கொருவர் வெறுப்பு கொண்டு சாபமிட்டு தீய உணர்வுகளை எடுத்திருந்தாலும் அந்தச் சாப வினைகள் நமக்குள் மறையத் தொடங்குகின்றது.

இதைப் போன்றுதான் நாம் ஒவ்வொருவரும் காலை துருவ தியானத்தில் இதைப் போன்று எடுத்து அந்த ஆன்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் அடையச் செய்தால் நம் மூதாதையர்கள்

இதற்கு முன் இதை நாம் செய்யத் தவறி இருந்தாலும் கூட நம் மூதாதையர்களின் உயிர் ஆன்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பிறவியில்லா நிலை அடைய வேண்டுமென்று நாம் அவசியம் தியானிக்க வேண்டும்.

1.அவர்கள் ஆன்மாக்களை நாம் விண்ணுக்குச் செலுத்தச் செலுத்த
2.நம்முடைய உணர்வுகள் வலுப்பெற இந்த உணர்வின் ஒளிக்கற்றைகள் பரவப் பரவ
3.முன்னோரின் ஆன்மாக்கள் இன்னொரு உடலுக்குள் புகுந்திருந்தாலும்
4.அந்த உடலிலும் தீய சக்திகளை வளர்த்திருந்தாலும்… அந்த உடல் மடிந்து வெளி வந்தபின்
5.நாம் பாய்ச்சும் இந்த அருள் உணர்வுகள் பட்டபின் அங்கே உந்தித் தள்ளினால் இந்த உணர்வு வலுப்பெறுகின்றது
6.ஒவ்வொரு நாளும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று
7,காலை துருவ தியானத்தில் செய்தால் அவர்கள் எளிதில் சப்தரிஷி மண்டலம் அடைகின்றனர்.

அங்கே உடல் பெரும் உணர்வுகளைக் கரைத்து விட்டால் பரம்பரை நோய்கள் நமக்குள் மறைகின்றது. அதே சமயத்தில் அவர்களை நாம் பிறவியில்லா நிலை அடையச் செய்கிறோம்.

ஞானிகள் காட்டிய அருள் வழியில்… மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றும் வாழ்ந்து பிறவியில்லா நிலை அடைதலே நம்முடைய தியானத்தின் நோக்கம்.

ஆக.. இந்த பேரருளைப் பெருக்க… அருள் ஞானத்தைப் பெருக்க… இந்த உடல் வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி நாம் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

கடவுள் எங்குள்ளான்…? கடவுள் என்பது யார்…? – ஈஸ்வரபட்டர்

கடவுள் எங்குள்ளான்…? கடவுள் என்பது யார்…?

1.கோயில் கட்டுபவன் பிழைத்திருப்பதில்லை…
2.கோயில் வேலைக்குச் சென்றிட்டால் பலி வாங்கிவிடும் என்று
3.கதை கட்டியவர்கள் எல்லாம் இக்கலியில் வந்தவர்கள் தான்.

இக்கலியில் வந்த சாமியார்களெல்லாம் மடாலயம், மடம் என்றதன் நிலையை உயர்த்தத் தன் புகழை உயர்த்தத் தான் பெற்ற சிறு அருளையும் சிதறடித்து விட்டார்கள்.

ஆதியில் திருப்பதி மலையில் கோயில் கட்டிய கொங்கணவர் உயிருடன் ஒன்றிய ஒளிச் சரீரமாகி ஏழுமலையான் என்ற நாமத்தில் வரும் பக்தர்களின் எண்ணத்திற்கு அச்சக்தியின் அருளினால் பெற்ற அருள் செல்வத்தை அள்ளி அள்ளி அளிக்கின்றான்.

அவன் நிலைக்கும் பல கோடிச் செல்வங்கள் வந்து குவிகின்றன. அவ் ஏழுமலையானை நினைத்திட்டால் ஏழை என்ற எண்ணமே எந்த மனிதனுக்கும் வந்திடாத வண்ணம் எழுந்தருளச் செய்துள்ளான் அந்தக் கொங்கணவ மாமகரிஷி.

ஏழு ஜென்மங்கள் பெற்றவனும் அவ் ஏழுமலையானை எண்ணி வேண்டிட்டால் தான் பெற்ற சக்தியின் அருளினால் பல ஆற்றல்களை அளிக்கின்றான் அந்தக் கொங்கணவ மகாதேவன்.

இக்கலியில் வந்த மனிதர்கள் அவ் ஏழுமலையானின் கதையையே பல உருவில் பல வழியில் மனிதர்களுக்குப் புரியாத வண்ணத்தில் மாற்றி விட்டார்களப்பா.

நீ எந்த ஊரில் எந்த நிலையில் இருந்து அவ் ஏழுமலையானை எண்ணி ஒரு நிலையில் வேண்டிக் கொண்டாலும்
1.அவனுக்கு தெரிந்துவிடும் எல்லாமே.
2.அவன் பெற்ற சக்தியின் அருளினால் வந்து குவிகின்றது உன் வேண்டுதலுக்கு உகந்த தன்மை.

இந்நிலையில் வந்தது தான் நம் பழனி மலையும் பர்வத மலையும் வள்ளி மலையும் பெரும் அண்ணாமலையும் திருச்செங்கோடு மலையும் இன்னும் பல சித்தர்கள் ஏற்படுத்திய சில மலைகளும்.

அந்தந்த இடத்தில் அவர்கள் கட்டிய கோவிலில் இன்றும் ஜெப நிலையில் உள்ளார்கள் பல கோடிச் சித்தர்கள். கோவில் கட்டித் தான் அக்காலத்தில் அவர்களால் அந்த நிலையில் இருந்திட முடிந்தது.

1.கோவில் கொண்டு அந்த நிலையில் அடக்கமானவர்களும்
2.வேறு பல நிலையில் அடக்கமான ரிஷிகளும் யோகிகளும்
3.இவ்வுலக ஆரம்ப நிலையில் இருந்து மனித உடல் எய்தி இத்தன்மை பெற்ற பல கோடி ரிஷிகளும்
4.இன்னும் இக்கலியின் காலம் வரை காற்றுடனும் மழையுடனும் ஒளியுடனும் தான் பெற்ற சக்தியின் நிலையைக் கொண்டு
5.இவ்வுலக மக்களின் நன்மைக்காகப் பல முறையில் பல வழியில் உணர்த்துகிறார்கள்.

அதை உணர்ந்தார்களா இக்கலியில் உள்ள மனிதர்கள்…? பெரும் பேராசை பிடித்தவர்களப்பா இக்கலியில் உள்ள மனிதர்கள்…!

ஒவ்வொரு மனிதனின் எண்ணம் எந்த நிலையில் உள்ளதோ அந்நிலையிலே தான் அக்கடவுளும் உள்ளான்.
1.கல்லென்று திட்டுகிறான்… கண்ணில்லையா…? என்கின்றான். கல்லும் கண்ணுமல்ல கடவுள்.
2.உன்னுள் இருக்கும் அக்கடவுளையே உன் வாயால் நீ திட்டுகிறாய்.

கடவுள் எங்குள்ளான் என்று இப்பொழுது புரிந்ததா…? கால தேவனே தான் கடவுள். காற்றே தான் கடவுள். ஒளியே தான் கடவுள். மழையே தான் கடவுள். உன் மனமே தான் கடவுள். நீ விடும் சுவாசமே தான் கடவுள். நீயே தான் உனக்குக் கடவுள்.

கடவுள் என்பது யார் என்று புரிந்ததா…?

மனிதன் வாழக்கூடிய பூமியாக மாற்றி மெய் ஞானத்தையும் மனிதனுக்குள் விளையச் செய்தவர்கள் “பண்டைய கால மகரிஷிகள்…!”

மனிதன் வாழக்கூடிய பூமியாக மாற்றி மெய் ஞானத்தையும் மனிதனுக்குள் விளையச் செய்தவர்கள் “பண்டைய கால மகரிஷிகள்…!”

 

பண்டைய கால மாமகரிஷிகள் தங்களுடைய புலனறிவு கொண்டு விண்ணை நோக்கி ஏகி பல சக்தி வாய்ந்த ஆற்றல்களைக் கவர்ந்து தன் உடலிலே விளைய வைத்துக் கொண்டார்கள்.

அப்படி விளைய வைத்துக் கொண்ட சக்தியின் துணை கொண்டு தனக்குகந்த நிலையில் பூமிக்குள் கால சூழ்நிலைகளை மாற்றி மனிதனை இங்கே வாழ வைத்தார்கள். இந்தப் பூமிக்குள் மெய் ஞானத்தையும் பெருக்கினார்கள்.

அன்றைய மகரிஷிகள் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தனக்குகந்ததாக இந்தப் பூமியின் நிலைகளை மாற்றி அமைத்தார்கள்.
1.ஒவ்வொரு கால நிலைகளில் அது மாறினாலும் அதைத் திசை திருப்பி
2.மனிதனுக்குகந்த நிலைகளில் பூமியின் சுழற்சி நிலைகளைச் சீராக்கி அமைத்தார்கள்.

அதாவது சூரியனின் காந்த சக்தி இதைக் கவர்ந்திடாத நிலையில் ஒரு பகுதி அதை மறைக்கப்பட்டு மறு பகுதியில் பூமியைத் திருப்பினான் தனிப்பட்ட மனிதன் – “மகரிஷி…!”

அப்படி அமைக்கப்பட்ட இந்தப் பூமியிலே உருவான மனிதருக்குள் ஞானத்தின் உணர்வுகள் விளைந்தது. அதிலே மெய் ஞானியாக ஆன முதல் மனிதன் தான் அகஸ்தியன். அவன் இன்றும் துருவ நட்சத்திரமாக உள்ளான்.

அவனைப் பின்பற்றிச் சென்ற மகா ஞானிகள் அனைத்தும் சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் ஒளி சரீரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களை முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று சொல்வார்கள்.

அத்தகைய மகரிஷிகள் வெளிப்படுத்திய வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் அந்த உயர்ந்த சக்திகள் அனைத்தும் நாம் சூரியனால் கவரப்பட்டு அந்த உணர்வலைகள் இன்றும் நமக்கு முன் காற்றிலே இருக்கின்றது.

சாதாரணமாக வாழும் மனிதர்கள் நாம் வெளிப்படுத்தும் விருப்பு வெறுப்பு உணர்வுகள் அதிகமானாலும் அதைக் காட்டிலும் வீரிய நிலைகளில் வந்தால் அது எல்லாம் அழிந்துவிடும்.

ஆனால் அந்த மகரிஷிகள் உடலிலிருந்து பெருக்கிய அந்த உணர்வுகள் அனைத்தும் அழியாத் தன்மைகள் பெற்றது.

உதாரணமாக விஞ்ஞான அறிவு கொண்டு நாடாக்களில் பதிவு செய்த படங்களை இயந்திரத்தின் மூலமாகவும் செயற்கைக் கோள் மூலமாகவும் ஒலி/ஒளி பரப்பு செய்கின்றார்கள்.

எந்த டி.வி. ஸ்டேஷனிலிருந்து ஒலி/ஒளிபரப்பு செய்யப்படுகின்றதோ அதே ஸ்டேஷனை வீட்டிலுள்ள டி.வி. யில் பட்டனை அழுத்தித் திருப்பி வைக்கப்படும் போது காற்றிலே மறைந்துள்ள அந்த அலைகளைக் கவர்ந்து நாம் அறியும் வண்ணம் செய்கின்றது.

அதே போல பிறவா நிலைகள் பெற்ற அந்த மகரிஷிகளின் உணர்வலைகளை நாம் கவர வேண்டும் என்றால்
1.அவர்களை ஒத்த சம நிலைகள் கொண்டு
2.அதாவது அவர்களின் உணர்வின் எண்ணங்கள் கொண்டு எடுத்தால் தான் கவர முடியும்.

அப்படி இல்லையென்றால் நம்முடைய எண்ணம் அதன் அருகிலே செல்லாது. மகரிஷிகளின் ஆக்கமான சக்தி நம் எண்ண அலைகளைத் ஒதுக்கித் தள்ளி அதனுடைய ஆற்றலாகப் பெருக்கும். நம்முடைய நினைவலைகளால் மகரிஷிகளின் உணர்வுகளை ஈர்க்கும் நிலை இல்லாது போய்விடும்.

அந்த மகரிஷிகளின் பேராற்றல்களை ஈர்க்கும் நிலை பெறச் செய்வதற்கே உங்களுக்கு உபதேச வாயிலாக ஞானிகளின் உணர்வுகளைப் பதியச் செய்கின்றோம்.

ஞானிகளைப் பற்றிய பதிவுகள் உங்களுக்குள் அதிகமாக அதிகமாக அவர்களை ஒத்த உணர்வின் எண்ணங்கள் உடலுக்குள் வளர்ச்சியாகி அதை எளிதில் கவர முடியும்.

ஆக்கல் காத்தல் அழித்தல் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ஆக்கல் காத்தல் அழித்தல் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சக்தியின் குணங்கள் மூன்று வகைப்பட்டது.
1.ஆக்குபவளும் அவளே… காப்பவளும் அவளே… அழிப்பவளும் அவளே…!
2.காற்றாகவும் நீராகவும் ஒளியாகவும் உள்ளவளும் அவளே.
3.மூன்று குணங்கள் உள்ள சக்தி தான் இவ்வுலகையே ஆக்கி காத்து அழிக்கிறது.
4.”அச்சக்தியின் சொரூபம்.. சக்தியின் வடிவம்… சக்தியின் சுயநிலை… அறிந்தவர்கள் எல்லாம் “பெரும் பாக்கியம் படைத்தவர்கள்…!”

அந்நாளில் வாழ்ந்த தவயோகிகள் இவ்வுலகைக் காப்பதற்காக அச்சக்தியின் சொரூபத்தைத் தன் நிலையில் ஈர்த்துக் கொள்ளவே பெரும் தவமிருந்தார்கள்.

அவ்வழியின் அருளைப் பெற பல நாள் தவமிருந்து பல ஜெபங்கள் இருந்து அச்சக்தியின் சொரூப நிலையை அதாவது ஆக்கி… காத்து.. அழிக்கும்… நிலையைத் தன் நிலையில் ஈர்த்துக் கொண்டார்கள்.

சக்தியின் நிலை என்னப்பா…?

1.எதற்காக அவர்கள் கடும் தவமிருந்து அந்த நிலையைப் பெற்றார்கள்…?
2.தான் வாழ தன் புகழ் ஓங்க தன் சுற்றத்தாரை வாழ வைக்கவா அந்த நிலையைப் பெற்றார்கள்…?

இல்லையப்பா…!

அவர்கள் பெற்ற அருள் எல்லாம் தன் நிலையைக் காத்து… தன் ஆசையை அழித்து.. தன்னுள் சக்தியின் ஜீவனை வளர்த்துக் கொண்டார்கள். அந்த நிலை பெறுவதற்காக மிகவும் கடும் தவம் ஜெபம் எல்லாம் இருந்தார்கள்.

ஆனால் இந்தக் கலியில் வந்த சாமியார்கள் – சாமியார்கள் என்ற பெயரில் வந்தவர்கள் தன் பெயர் நிலைக்கத் தன் வழியில் உபதேசம் செய்ததைப் பலர் அறியப் பணம் காசுகள் சேர்த்துத் தன் வழியில் வந்தவர்களுக்கு வாழ வழி செய்து விட்டுத் தன் பெயரை நிலைநாட்டி விட்டுச் சென்றார்கள்.
1.இக்கலியில் வந்த சாமியார்களுக்கே இந்த நிலை என்றால்
2.இக்கலியில் தோன்றிய மனிதர்கள் நிலை எப்படியப்பா இருக்கும்…?

இக்கலியில் மாமனிதனாகலாம் என்பதெல்லாம் பல கோடிப் பணம் சேர்த்துப் பலர் அறியப் புகழ் எய்தி வாழ்வது தான் மாமனிதன் என்ற எண்ணம்.

அந்த நிலையில் அவனைப் பார்ப்பவனுக்கு என்னப்பா தோன்றும்…?
1.அவன் மேல் பொறாமை எண்ணம் தான் ஏற்படும்.
2.அந்த நிலையில் மாமனிதனாகி என்னப்பா பயன்…?

ஆதியில் வந்த சித்தர்கள் பெற்ற சக்தியின் அருள் எப்படியப்பா…? தன் உயிர் அணுவின் தொடர்பில் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவையும் தன் நிலைக்கு இயங்கும்படி அச்சக்தியின் அருளைப் பெற்றார்கள்.

கோபம் வருவதும் மகிழ்ச்சி வருவதும் சம நிலை எய்துவதும் என்ற பாகுபாடு தன் உடலில் இல்லாமல் மன எண்ணத்தில் எந்த நிலையைப் பார்த்தாலும் தன் நிலையை ஒரே நிலையில் வைத்துக் கொள்ள தன் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களையும் ஒரு நிலைப்படுத்தி விட்டார்கள்.

அந்த நிலையில், அவர்கள் ஜெபித்த ஜெபமெல்லாம் அவர்கள் பெற்ற அருள் எல்லாம் ஒரு சிறு அணுவளவு எந்த எண்ணத்தில் ஒருவர் மேல் பாய்ச்சுகின்றார்களோ அவர்களும் அந்த ஆற்றலைப் பெறுகிறார்கள்.

இத்தகையை ஆற்றல் பெற்றவர்கள் பெரும் மழைக்கும் சுழல் காற்றுக்கும் தன்னைச் சுற்றி எந்த நிலை வந்து தாக்கினாலும் அவர்களின் நிலைக்கு எந்த நிலையும் தெரிந்திடாது.

அவர்கள் எண்ண நிலை ஜெப நிலை எல்லாம் ஒரே நிலையில் இருக்கும் பொழுது அவர்கள் உடலுக்கு உணவும் உணர்வும் சுவாசமும் எந்த நிலையும் வேண்டுவதில்லை.

அவர்கள் நிலை எல்லாம் “அச்சக்தியின் நினைவே தான்…!” அச்சக்தியின் நிலையை உணர்ந்து அச்சக்தியின் அருளில் உள்ள பல கோடானு கோடி அணுக்களில் தன் உணர்வுக்கு வேண்டிய அணுவை மட்டும் ஈர்க்கிறார் இச்சித்தாதி சித்தன்.

அந்த நிலையில் உள்ள சித்தன் இவ்வுலக உயர்வுக்காக இவ்வுலகில் உள்ள மனிதர்களுக்கு எந்த வழியில் கற்பித்தால் புரிந்து விடும் என்ற நிலையில் தான் பெற்ற அருளினால் தன் உடல் அழிந்திடாமல் ஒரு நிலையில் அமர்ந்து
1.இவ்வுலக மக்களுக்குப் புரியும் வண்ணம்
2.அச்சக்தியின் உருவ அமைப்பைக் கல்லினாலோ பல உலோகத்தினாலோ செய்து
3.அந்த நிலையில் அச்சித்தன் உடலுடன் அமர்ந்து பல காலம் ஜெபம் செய்கின்றான்.
4.அந்த ஜெபத்தின் பலனைத்தான் நீ அக்கோயிலுக்குச் செல்லும் பொழுது அச்சித்தனின் அருளினால் பெற்று வருகிறாய்.

அக்கால ஆதிகாலச் சித்தாதி சித்தர்களும் பல கோடி ஞானிகளும் ரிஷிகளும் அமர்ந்து அச்சக்தியின் அருளைப் பெற்று எய்திய கோயில்கள் தான் இப்பொழுது நீ சென்று பூஜிக்கும் பல கோயில்களும்.

கஷ்டத்தைச் சொன்னால் தான் கஷ்டம் நீங்குமா…?

கஷ்டத்தைச் சொன்னால் தான் கஷ்டம் நீங்குமா…?

 

நாம் சொல்லும் போது சில நேரங்களில் சிலருக்கு என்ன ஆகின்றது…? சாமி (ஞானகுரு) என்னமோ சொல்கின்றார் என்று இலேசாக நினைத்துக் கொள்கின்றார்கள்.

“இந்த மாதிரிச் செய்யுங்கள்…!” என்று வாக்கைக் கொடுத்து நல்லதாகிப் போய்விடும்… என்று சொல்கிறோம். அதை விட்டு விடுகின்றார்கள்.

அதை விட்டு விட்டு மற்றவர்களுக்கெல்லாம் நல்லது செய்கின்றார். எனக்குச் சாமி செய்ய மாட்டேன் என்கிறார் என்று இப்படி எண்ணுகின்றார்கள்.

ஏனெனில் உங்களுக்குள் கடினமான நிலைகள் இருக்கின்றது. அதை நீக்குவதற்காக வேண்டிக் கடினமான வாக்குகளைக் கொடுக்கின்றோம். அது தான் “ஆயுதம்…”

ஒருவர் திட்டுவதை மட்டும் வேகமாக நீங்கள் எடுத்துக் கொள்கின்றீர்கள். குறையாகச் சொன்னாலும் உடனே எடுத்துக் கொள்கின்றீர்கள்.

அந்தக் குறைகளை நீக்குவதற்குண்டான கடுமையான வாக்குகளைத்தான் யாம் கொடுக்கின்றோம்.
1.போங்கள்…, போங்கள்…” எல்லாமே சரியாகப் போகும்…!
2.அந்த மகரிஷிகளின் அருளால் உங்கள் தீமைகள் அகலும்
3.ஆத்ம சுத்தி செய்யுங்கள்…, போங்கள்…! என்று சொல்கிறோம்.

இப்படிச் சொன்னாலும் கூட எங்கெங்க…! என்று ஏற்றுக் கொள்ளாமல் விடுகின்றார்கள்.

நோயுடன் வருவார்கள்…! என்னிடம் வந்து மிகவும் கஷ்டமாகச் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள்.

அப்பொழுது அவர்கள் உணர்வுகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை… என்ன செய்கின்றோம்…?

அவர்கள் உடலிலிருந்து நோய்களை நீக்குவதற்காக வேண்டிக் கோபமாக…, “போங்கள்..! கஷ்டங்கள் எல்லாம் நீங்க வேண்டும் நோய் நீங்க வேண்டும் என்று கேளுங்கள் போங்கள்…!” என்று சொல்வோம்.

ஏனென்றால் தன் கஷ்டத்தை விடாப்பிடியாகக் பிடித்துக் கொண்டிருப்பவர்களை
1.அதன் மேல் பற்று வராமல் இருப்பதற்காகவும்
2.கஷ்டத்தை நீக்கிய அருள் ஞானிகளின் உணர்வைப் பற்றுடன் பற்றுவதற்காகவும் அவ்வாறு யாம் சொல்கிறோம்.

கஷ்டத்தைப் போகச் சொன்னாலும் கூட “என் கஷ்டம் என்னை விட்டு எங்கெங்க போகிறது…!” என்று சொல்லி அதை இறுக்கிப் பிடித்துக் கொள்கின்றார்கள்.

“போங்கள்…” என்று சொன்னால் “நம்மைத் தான் சாமி போகச் சொல்கின்றார்…!” என்று கோபித்துக் கொண்டு போய் விடுகின்றார்கள்.

ஏனென்றால் அவர்கள் உடலில் இருக்கும் அந்தச் சக்தி அவர்களைத் தீமையான நிலைகளுக்கு அழைத்துச் செல்கின்றது.

திருப்பி நீங்கள் நலம் பெறுவீர்கள்…, நல்லதாகிப் போய்விடும் என்று சொன்னால் அதைக் கேட்க மாட்டேன் என்கிறார்கள்.

காலையில் இருந்து இரவு வரை ஒரே கஷ்டமாக இருக்கின்றது… இராத்திரி எல்லாம் தூக்கம் வரமாட்டேன் என்கிறது… என் பையன் இப்படிப் பேசுகின்றான்… வியாபாரத்தில் நஷ்டம்… என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள்.

ஐயோ என் குடும்பத்தில் என் பையன் சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான். என் பெண்ணுக்கு மாப்பிள்ளை வந்து விட்டு வந்து விட்டு போகின்றது. என்ன செய்வது என்றே புரியவில்லை…? இப்படித்தான் கேட்கின்றார்கள்…!

இதையெல்லாம் நீக்க வேண்டும் என்று கேளுங்கள்…! என்று யாம் சொன்னால் அதற்குத் தான் வந்தேன் என்று சொல்கிறார்கள்.

1.கஷ்டத்தை எல்லாம் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டு வருகின்றார்கள்
2.கஷ்டத்தை நீக்க வேண்டும் என்ற எண்ணம் வருவது இல்லை.
3.கஷ்டத்தைச் சொன்னால் தான் கஷ்டம் நீங்கும் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஏனென்றால் வளர்த்துக் கொண்ட அந்த உணர்வு அவ்வாறு பேசச்
செய்கின்றது. வினைக்கு நாயகனாக அது இயங்குகின்றது. இதை நிறுத்திப் பழக வேண்டும்.

இந்த உணர்வு மற்றவர்கள் சொல்வதை இந்த விஷமான சொல்லைச் சொல்லும் பொழுது
1.அது எனக்குள் வரக்கூடாது என்று அதை நான் நிறுத்தி என்னைச் சுத்தப்படுத்திக் கொள்கின்றேன்
2.மகரிஷிகளின் அருள் உணர்வை நான் எடுத்து…
3.“அட போங்கள்… உங்களுக்கு ஒன்றுமில்லை…!” என்று சொல்கிறோம்.

என் கஷ்டத்தைச் சொன்னால் “சாமி கேட்கக் கூட மாட்டேன் என்கிறார்… என்னைக் கோபிக்கின்றார்…!” என்று இந்த மாதிரி எண்ண ஆரம்பித்து விடுகின்றார்கள்.

நான் ஏற்கனவே சொல்லியிருக்கின்றேன். என்னிடம் வந்தவுடனே
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.உடலில் உள்ள நோய்கள் நீங்க வேண்டும்.
3.என் உடல் நன்றாக இருக்க வேண்டும்
4.வாழ்க்கையில் வந்த கஷ்டம் எல்லாம் நீங்க வேண்டும்
5.எங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று
6.இப்படி நீங்கள் எண்ணி வந்தால் என்னிடம் கேட்கும் பொழுது அதையே கேட்கும் எண்ணம் வரும்.
7.அப்பொழுது .நான் கொடுக்கும் ஞான வித்துகள் விளைந்து உங்கள் தீமைகள் அகலும் என்று சொல்கிறோம்.

நான் சொன்னதை மறந்து விடுகிறார்கள். நோயைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பதால் அந்த உணர்வுதான் வரும். அதே வார்த்தை தான் வரும்.

சாமியிடம் உபதேசம் கேட்கும் பொழுதும் படிக்கும் பொழுதும் உடல் நோயோ வலியோ இருந்ததா…? வலி விட்டுவிட்டதா…! என்று கேட்டால் “இப்பொழுது இல்லை…!” என்பார்கள்.
1.நேற்று வலித்தது… இப்போது இல்லைங்க…! என்பார்கள்.
2.ஆனால் இங்கிருந்து வெளியில் போய் விட்டால் மீண்டும் வந்துவிடும் என்பார்கள்.

தீமைகளை நீக்கிடும் ஞானிகளின் சக்தி வாய்ந்த அருள் வாக்குகளை ஞான வித்துக்களாகக் கொடுத்தாலும் இப்படித்தான் சொல்கின்றார்கள்.

அவர்களிடமிருந்து திரும்பத் திரும்ப வரும் தீய சொல்களைத் திட்டி யாம் விரட்டினோம் என்றால் “தீமைகள் அகலட்டும்…” என்று யாரும் அதை நினைக்க மாட்டேன் என்கின்றார்கள்.

காரணம் தன்னால் மீள முடியவில்லை என்ற நிலையில் நுகர்ந்த அந்த உணர்வு தான் அங்கே வேலை செய்கின்றது. இதையெல்லாம் மாற்றிப் பழக வேண்டும்.

ஏனென்றால் எதை நீங்கள் ஆழமாகவும் அழுத்தமாகவும் எண்ணுகின்றீர்களோ உங்கள் உயிர் அதைத்தான் படைக்கும்.. அதைத்தான் இயக்கும்…! என்று மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்.

உங்களைக் காத்துக் கொள்ளும் சக்தியை நீங்கள் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்…!

இந்தத் தியானத்தின் மூலம் முன் கூட்டியே அறிய முடியும்

இந்தத் தியானத்தின் மூலம் முன் கூட்டியே அறிய முடியும்

 

ஒரு கம்ப்யூட்டரில் மணிக்கணக்குகளைக் காட்டுகின்றார்கள். உணர்வின் தன்மை எலெக்ட்ரானிக்காக அது இயங்கி… அதிலே குறித்த நிலைகள் வரும் பொழுது மணிகளை மாற்றி மாற்றிக் காட்டுகின்றது.

ஆனால்…
1.அதிலே சிறிது தண்ணீர் பட்டு விட்டால் முழுவதும் மறைந்துவிடும்.
2.எதிர்மறையான உணர்வுகளைப் பதியச் செய்யும் போது அது தாறுமாறாக வேலை செய்துவிடும்.
3.அந்தக் கரண்டின் இயக்கம் அதில் உள்ள பேட்டரியின் சார்ஜ் குறைந்தாலும் தப்பான கணக்கைத் தான் காட்டும்.

அதைப் போன்று தான் நம் உயிரின் இயக்கம் சீராக இருக்கப்படும் பொழுது நம் எண்ணம் சொல் செயல் எல்லாம் நன்றாக இருக்கும்.

1.சோர்வு வேதனை போன்ற மற்ற நஞ்சான உணர்வுகள் வந்தால்
2.அத்தகைய எண்ண அலைகளை நமக்குள் அதிகமாகச் சேர்த்த பின்
3.நம் உயிர் அந்த உணர்வின் தன்மையை இயக்கப்படும் பொழுது இயக்கத்தின் துடிப்பு குறைந்து விடும்.

அப்படிக் குறையும் பொழுது நம் உடலின் இயல்பான இயக்கங்களும் குறையத் தொடங்குகின்றது. நம் எண்ணும் நிலைகள் சீராக வராது ஒரு கணக்குப் பார்த்தாலும் சரியாக வராது. நம் சொல்லும் சரியாக இருக்காது.

ஏனென்றால் நம் உயிர் எலெக்ட்ரானிக்காக (உணர்ச்சிகள்) அதை உற்பத்தி செய்து கொண்டே இருக்கும்.
1.அதிலே எந்த உணர்வின் தன்மை அதிகரிக்கின்றதோ அந்தந்த உணர்வுகளை மாற்றி மாற்றிக் கொண்டே இருக்கும்.
2.அந்த மாற்றம் எதுவோ கண்களில் அந்த நிறங்கள் மாறும்.
3,சொல்லுக்குள்ளும் உணர்ச்சிகள் மாறும். அந்த உணர்ச்சிக்கொப்ப உடலின் நிறமும் மாறும்.

இந்த மாதிரி ஒருவரைப் பார்த்தவுடனே அவருடைய நிலைகளைச் சொல்லிவிடலாம். யாம் சொல்லும் தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்போருக்கு இது தெளிவாகத் தெரிய வரும். தெரிந்தாலும் இதை ஜோதிடம் போன்று சொல்லி விடக்கூடாது.

சில நேரங்களில் உங்களிடம் சில கேள்விகள் கேட்பேன் (ஞானகுரு). அப்பொழுது அந்தச் சமயத்தில் உங்களிடமிருந்து என்னென்ன வருகிறது என்று பார்ப்பேன். பார்த்த பின் அதிலே என்ன நல்ல மாற்றம் கொடுப்பது என்று நான் இணைத்துக் கொடுப்பேன்.

நான் வேறு விதமாக மாற்றிச் சொல்லும் பொழுது உங்களிடமிருந்து எல்லாம் வெளியே வந்துவிடும். அப்பொழுது இந்த அலைகளைத் தொடர்ந்தவுடன் “எந்த உயர்ந்த உணர்வை உங்களிடம் கலக்க வேண்டும்…?” என்று சொல்லி உங்களிடம் கலக்கச் செய்வேன்.

1.அந்தச் சமயத்தில் நான் சொல்வதில் விஷயம் அதிகமாக இருக்கும்.
2.ஏனென்றால் குரு வழியில் அதை எதை இணைக்க வேண்டும் என்று இணைத்துத்தான்
3.உங்களுக்கு எந்த அறிவைக் கொடுக்க வேண்டும் என்று அந்த நல்ல மாற்றத்தைக் கொண்டு வருவது.

உதாரணமாக பள்ளியில் ஆசிரியருக்கு ஒரு மாணவன் மீது வெறுப்பாகி விட்டால் பாடத்தைக் கொஞ்சம் அழுத்தமாகத் தான் சொல்லிக் கொண்டு வருவார். மாணவனுக்குள் பயம் வந்து விட்டால் ஆசிரியர் என்ன சொன்னாலும் இவனுக்குள் இது பதிவாகாது. இது எல்லாம் அந்த உணர்வின் நிலை.

பார்வை அங்கே இருட்டாகும். எதிரில் எது இருந்தாலும் அதைச் சரியாகக் காண முடியாது. அந்த உணர்வுக்குள் நஞ்சாகும்.

ஆக… விஷத்தில் எந்த நல்ல பொருளைப் போட்டாலும் சிந்தனை வராது. விஷத்தின் தன்மையின் உணர்வாகவே மாறிவிடும். அந்த நேரத்தில் என்ன பதிவு செய்தாலும் அது பதிவாகாது.

அது போல் ஆகாது… குருநாதர் கொடுத்த கோடி கோடி என்ற நிலைகள் கொண்டு அந்த உண்மையின் தன்மை வளர்ந்தாலும்… கோடி கோடி என்ற ஒளியான உணர்வின் தன்மையாக உங்களுக்குள் இணைத்தே கொண்டு வருகின்றேன்.
1.இணைத்துக் கொண்ட பின்
2.அது தெளிந்த அறிவை உங்களுக்கு ஊட்டும்.

ஆக… அடுத்தவர்களை நீங்கள் பார்த்த பின் கேட்டறிந்து அதைச் சொல்வதல்ல. கேட்டறிந்து நீங்கள் சொல்ல வேண்டும் என்றால் நானே அப்படிச் சொல்ல முடியாது.

ஆனால் திருப்பிச் சொல்லும் நிலை வந்தால் அது வெறும் பாட நிலையாகத் தான் ஆகும். ஆகவே நாம் ஒருவரைப் பார்க்கப்படும் பொழுது அந்த உண்மைகளை நமக்குள் உணர்த்தும். அங்கிருக்கும் தீமையும் தெரியும்.

அப்பொழுதெல்லாம்…
1.அந்தத் தீமையை நீக்குவதற்குண்டான வழி எது… என்று நாம் எடுக்க வேண்டும்.
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வை எடுத்தால் நமக்குள் தீமை சேராது.
3.அவர்களின் தீமைகளை நீக்கும் சொல்லாக நம்மிடமிருந்து வரும்.

அந்தச் சொல்லினை அவர்கள் பதிவு செய்து விட்டால்… அவர்கள் கேட்டுணர்ந்தால்… திருப்பி அதை அவர்கள் எண்ணினார்கள் என்றால் அவர்கள் தீமையை அவர்களே போக்க முடியும்….!

ஒருவர் வாய் திறந்து சொன்னால் போதும்… இப்படித்தான் என்று நமக்கு அது தெரிய வரும். நமக்குத் தெரிய வந்தாலும் உடனே நாம் ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

தெரிந்து கொண்டேன் என்று உடனே அவர்களிடம் சொல்லக்கூடாது.

1.அவர்களுக்கு நல்ல உணர்வை எப்படிக் கொடுக்க வேண்டும் என்ற நிலையில்
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெறவேண்டும் என்ற இந்த உணர்வுடன்
3.அவர்கள் கண்களை உற்றுப் பார்க்க வேண்டும்… நாம் எதையும் சொல்ல வேண்டியதில்லை.

ஆனால் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் பிறிதொன்றை அவர் சொல்லும் போது நமக்குக் கோபம் வரும். ஆனால் இங்கே சொன்ன உபாயத்தின்படி எண்ணிப் பாருங்கள்.

சரி… அப்படியா…! என்று அந்த அருள் உணர்வுகளைக் கண்ணிலே பாய்ச்சிப் பாருங்கள். யாராவது குற்றமாகச் சொல்ல வரும் பொழுது இந்த முறையைக் கையாண்டு பாருங்கள்.
1.அவர்களுக்குள் ப்ரேக் ஆகும்… நாம் பாய்ச்சும் அருள் உணர்வுகள் அவர்களை இடைமறிக்கும்.
2.குறைகளையே சிந்தித்துக் கொண்டிருந்தால் இது போய் அங்கே தடையாகும்.
3.ஆனால் அவர்கள் உணர்வுகள் நமக்குள் வராது… நாம் பாய்ச்சும் அருள் உணர்வுகள் அவர்கள் தீமைகளை அடக்கச் செய்யும்.

ஏனென்றால் யாரும் தவறு செய்யவில்லை. நுகர்ந்த உணர்வு அவர்களை இயக்குகிறது. அந்தக் குறை வளரக்கூடாது என்ற நிலையில் மகரிஷிகளின் அருள் ஒளி அங்கே படர வேண்டும்… மெய்ப் பொருள் காணும் திறன் பெறவேண்டும் என்று இதை மட்டும் நீங்கள் எண்ணிப் பாருங்கள்.

இப்படிச் செய்வதற்கு மாறாக நாம் அவர் உணர்வை அப்படியே எடுத்துக் கொண்டால் இரண்டு பங்கு நமக்குக் கோபம் வரும். நீ பெரியவனா… நான் பெரியவனா…! என்று சண்டை வரும்.

இந்தத் தியான வழியில் உள்ளவர்கள் இதை எல்லாம் கொஞ்சம் பழகிக் கொள்ள வேண்டும்.

அரவணைத்து வாழும்… இணைந்து வாழும்… அருள் சக்திகளை நமக்குள் வளர்த்திட வேண்டும்

அரவணைத்து வாழும்… இணைந்து வாழும்… அருள் சக்திகளை நமக்குள் வளர்த்திட வேண்டும்

 

பல கோடிச் சரீரங்களின் வளர்ச்சியில் மனிதனாக உருவாக்கிய நிலைகள் வரப்படும் பொழுது நாம் எண்ணியது எதுவோ அது “பிரம்மகுருவாக” மாற்றுகின்றது.

அகஸ்தியன் தன் உணர்வின் தன்மை கொண்டு விண்ணுலக ஆற்றலை நுகர்ந்து நஞ்சினை வென்றிடும் உணர்வினைத் தனக்குள் கவர்ந்து கொண்டதனால்… அவன் எந்த உண்மையின் உணர்வைக் கவர்ந்து கொண்டானோ அது பிரம்மகுருவாக இருந்து ஒளியின் சரீரமாக அவனை உருவாக்கியது.

அவன் தனக்குள் எடுத்துக் கொண்ட தீமைகளை அகற்றிடும் அருள் சக்திகளைத் தன் மனைவிக்கும் பெறச் செய்து தனக்குள் இணைத்துக் கொண்டான்.

1.அவர்கள் இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போல் வாழ்ந்து…
2.நளாயினி போன்று கணவன் மனைவியை மதிப்பதும் மனைவி கணவனை மதிப்பதும்
3.சாவித்திரி தன் கணவனை எமனிடமிருந்து மீட்டினாள் என்ற நிலையாக இரு உணர்வும் ஒன்றி வாழ்ந்த பின்
4.இரு உயிரும் ஒன்றி வாழும் தன்மை வருகின்றது…
5.துருவ மகரிஷியாகி… துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளனர்.

கணவனும் மனைவியும் இப்படி இரண்டறக் கலந்து… இன்னொரு பிறவிக்குப் போகாது… தன்னுடன் இணைத்துக் கொண்டு… உயிர் எப்படியோ அதைப் போல் உணர்வின் அணுக்களை உருவாக்கிப் “பிறவி இல்லா நிலைகள் அடைவது தான் கடைசி நிலை…!” என்று இராமாயணக் காவியங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

நுகரும் உணர்வுகள் எவ்வாறு எண்ணமாகின்றது…? என்றும் உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு உருவாக்குகிறது… உருவாகிறது…? என்றும் உருவத்தை அமைத்து
1.நாம் கவரும் நிலைகளும் நாம் நுகர்ந்த உணர்வுகளும் உடலுக்குள் சென்ற பின்
2.அதனால் உடலுக்குள் மாற்றங்களும் போர் முறைகளும் அது எவ்வாறு வருகிறது என்றும்
3.நம் உடலுக்குள் எவ்வாறு போர் முறைகள் நடக்கிறது என்றும்
4.அந்த உணர்வுகளால் நமக்குள் எப்படித் தீமைகள் விளைவிக்கிறது…? என்றும்
5.இதிலிருந்து நாம் எவ்வாறு விடுபட வேண்டும்…? என்ற நிலையையும் இராமாயணத்தில் சித்தரித்துக் காட்டினார்கள்.

சீதா… துருவ நட்சத்திரத்திலிருந்து மகிழ்ச்சி பெறும் உணர்வை (அந்தச் சத்தினை) நாம் நுகர்ந்தால் நமக்குள் பகைமை உணர்வை மாற்றிக் கல்யாணராமனாக மகிழ்ந்து வாழும் நிலைகளையும் நமக்குள் ஒன்று சேர்த்து வாழும் தன்மைகளும் வருகிறது.

1.அந்த மகிழ்ச்சி பெறும் உணர்வினைத் தனக்குள் கவர்ந்து (வசிஷ்டர்) கொண்டால்
2.அதனின் சுவை சீதா (சத்து) தனக்குள் அருந்ததியாக இருந்து
3.நம்மை என்றுமே பிறவி இல்லா நிலை என்ற நிலையை அடையச் செய்யும் அந்த அருள் சக்திகளை நாம் பெற முடியும்.

அத்தகைய தகுதியை உங்களுக்குள் ஏற்படுத்தும் நிலையாகத் தான் அன்று அகஸ்தியன் கண்ட உணர்வின் உண்மைகளையும் அவனில் இருந்து வெளிப்பட்ட நஞ்சை வென்றிடும் உணர்வுகளையும் நீங்கள் பெற இந்த உபதேசம் கொடுக்கின்றோம் (ஞானகுரு).

அதன் மூலம் இந்த உலகையும் உலக இயக்கத்தையும் உங்கள் உயிரின் இயக்கத்தையும் உடலுக்குள் அது எப்படி இயக்குகிறது என்ற நிலையும் நீங்கள் அறிய முடியும்.

அகண்ட அண்டத்தையும் பேரண்டத்தையும் உணர்ந்த அகஸ்தியன் அவனில் கண்டுணர்ந்த உண்மையின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது
1.அகண்ட அண்டத்தில் விளையும் உணர்வை உங்களுக்குள் விளையச் செய்ய முடியும்
2.அகண்ட அண்டத்தில் வரும் நஞ்சான நிலைகளை வென்றிடும் உணர்வுகளையும் பெற முடியும்.

இந்நேரம் வரை உங்களுக்குள் பதிவாக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து
1.அந்த உணர்வை எடுத்தால்… அது சீதாராமனாக உங்களுக்குள் மகிழ்ச்சி பெறும் நிலையாக
2.இணைந்து வாழும் சக்தியாக (அரவணைக்கும் சக்தி)
3.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாகப் பெற முடியும்.

அதை நீங்கள் ஒவ்வொருவரும் பெறவேண்டும்… உங்களுக்குள் அந்த அரும் பெரும் சக்திகள் விளைந்திட வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன் (ஞானகுரு).

“ஜோதி நிலை…” அடைய வேண்டும் – ஈஸ்வரபட்டர்

“ஜோதி நிலை…” அடைய வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

ஏற்கனவே எடுத்த பிறவியில் எல்லாம் விட்ட குறையினால் தான் இப்பிறவியில் வந்துள்ளோம்.

இப்பிறவியின் தன்மையில் தியான நிலையில் வந்திடும் (பெற்றிடும்) ஜோதி நிலை என்னப்பா…? பல கோடிச் சித்தர்களும் ஞானிகளும் ரிஷிகளும் பெற்றிட்ட ஜோதி நிலை என்னப்பா…?

ஜோதி நிலை என்றதன் பொருள் என்னப்பா…? ஜோதி நிலை பெறுவது எப்படியப்பா…? (தியானத்தில் வெறுமனே காட்சியாகத் தெரிந்து மறைவது ஜோதி நிலை அல்ல)

குடும்ப நிலையில் உள்ள ஒவ்வொருவரும் அவர் விடும் சுவாச நிலையினாலேயே ஜோதி நிலையைப் பெற்றிடலாம். இவ்வுலக வாழ்க்கையில் உள்ள பொழுதிலேயே பெற்றிடலாம் அந்த “ஜோதி நிலை…!”

சித்தர்களும் ஞானிகளும் பெற்றிட்ட ஜோதி நிலையை எல்லோரும் பெற்றிடலாம். அதற்காக நம் வழியில் சிறிது மாற்றம் வேண்டும்.

மன நிலையில் உள்ள சோர்வை நம் நினைவில் மறக்கச் செய்து நம் சுவாச நிலையில் நல் சுவாசத்தை எடுத்திடப் பழக வேண்டும். மன அமைதியும் சுவாச நிலையும் ஒன்றுபட்டு ஒரு நிலை எய்திட வேண்டும். (ஏனென்றால் சுவாச நிலையில் சிறு மாற்றம் வந்தாலும் அந்த நிலை மாறுபடுகிறது)

1.மனதில் சோர்வும் கோபமும் வந்திடாமல் எடுக்கும் சுவாச நிலையில்
2.தியான முறையில் உள்ள பொழுது ஈர்ப்பதே நம் கண்ணில் தெரிந்திடும் ஒளிகள் எல்லாம்…!

அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை உயிர் வழியாக நுகர்ந்து உயிரிலே ஜோதிச் சுடராக ஏற்ற வேண்டும். இதை ஒவ்வொரு நிமிடமும் ஏற்ற வேண்டும்.
1.மேல் நோக்கிப் (விண்ணிலே) பார்க்கும் உணர்வின் தன்மையை
2.அந்த ஜோதிச் சுடர் போல் நம் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்ற வேண்டும்.

இருள் அகற்றும் நிலைகளை ஒற்றுமையாக இருந்து தியானித்து அனைவரும் நலம் பெற வேண்டும். வளம் பெறவேண்டும் அவர்கள் உடலில் அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று எண்ணத்தினை எல்லோரும் சேர்ந்து எடுத்துப் பேரொளியாக ஜோதியாக உருவாக்கும் நிலைகளுக்குச் செய்தார்கள் அன்றைய ஞானிகள்.

மகரிஷிகளின் அருள் ஒளி கொண்டு அனைவருடைய உணர்வுகளும் ஒளி பெறவேண்டும் என்று நாம் எண்ணும் போது
1.நமக்குள் ஒளி பெருகி ஜோதியாகின்றது.
2.ஒளியின் உணர்வின் அணுக்களாக மாற்றுகின்றது.
3.இருளை அகற்றிப் பொருளைக் காட்டுகின்றது.
4.வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீமைகளை மாற்றியமைக்கும் திறனும் பெறுகின்றோம்.

மகரிஷிகளின் உணர்வுகளை ஒவ்வொரு நிமிடமும் ஜோதியாக உயிரிலே ஏற்றிக் கொண்டால்
1.“நம் ஆன்மா மெய் ஞான விழிப்பு நிலை பெறும்…!”
2.நீல நிற சமைப்பின் ஜோதி நிலையை நம் உயிராத்மா அடையும்.

அதன் மூலம் நாம் மற்றவர்களிடம் பேசும் பொழுதும் மற்றவர்கள் நம்மிடம் பேசும் பொழுதும் அந்த அருள் உணர்வுகளைப் பாய்ச்சி வாழ்க்கையில்… நாம் பொருளறிந்து செயல்படும் ஞானத்தின் சக்தியாக நம்முடைய செயல்களை எல்லாமே மெய் வழியில் அமைத்துக் கொள்ள முடியும்.

கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்

கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்

 

குடும்பத்தில் கஷ்டமோ நஷ்டமோ இதைப் போன்ற தொல்லைகள் இருந்தால்… “கஷ்டம்…” என்ற அந்த வார்த்தைகளை விடுத்து விடுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் குடும்பம் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல்கள் முழுவதும் படர்ந்து அங்களை அறியாது சேர்ந்த சாப வினைகள் நீங்கி நாங்கள் உடல் நலத்துடன் வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று தியானியுங்கள்.

சாப அலைகள் என்றால்…
1.நம் குடும்பத்தில் உள்ளோர் யாரும் நேரடியாக சாபம் இட வேண்டியதில்லை
2.ரோட்டிலோ அல்லது அக்கம் பக்கம் உள்ள வீடுகளில் வேறு யாரோ அவர்களுக்குள் பகைமையாகி சாபமிட்டுக் கொண்டிருந்தால்
3.இப்படிச் செய்கின்றார்களே என்று அதனை உற்றுப் பார்த்தால் அந்த உணர்வுகளை நாம் நுகர்ந்து விடுகின்றோம்.

அவர்கள் இட்ட அந்தச் சாப அலைகள் நமக்குள் பதிந்து இரத்தத்திலே அணுக்களாக விளையத் தொடங்கும்.
1.விளைந்த பின் நமக்குள் பகைமை உணர்வை ஊட்டி
2.நம் வாழ்க்கையே சீர்கெடச் செய்யும் நிலையாக நம் நல்ல எண்ணங்களை இடைமறித்து
3.நம் சொல்லைப் பலவீனப்படுத்தித் துன்பங்களை ஊட்டும் நிலையாக வரும்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்தெல்லாம் விடுபட இந்த அதிகாலை துருவ தியானத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து வலுப்படுத்திக் கொண்ட பின் என் மனைவிக்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என் கணவருக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் எங்கள் பார்வை அனைவரையும் நலமாக்கும் சக்தியாக வளர வேண்டும் என்று கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் எண்ணி அந்த வலுவான நிலைகள் கொண்டு அந்த நினைவினை உங்கள் குடும்பத்திலும் தொழிலும் செலுத்திப் பழகுங்கள்.

இவ்வாறு இரு மனமும் ஒன்றாகி விட்டால் உங்கள் உடலில் உள்ள பகைமை உணர்வுகளால் விளைந்த அணுக்களின் வீரியம் தணியத் தொடங்கும்.

அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் உருவாக்கும் உணர்வும் அதிகரிக்கும். அடுத்துப் பிறவி இல்லா நிலைகள் அடையவும் இது உதவும். ஆகவே இதை மறவாதீர்கள்…!

1.தியானம் என்பது “ஒரே நினைவில் இருக்க வேண்டும்” என்ற நிலை இல்லாது…
அந்த அருள் சக்திகளை எடுத்து அதை மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று கணவனும்…
3.தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவியும்
4.இருவரும் இப்படி எண்ண வேண்டியது மிகவும் அவசியமாகும்.

ஏனென்றால் ஆண் பெண் என்ற நிலைகள் கொண்டு தான் அந்த உணர்வு தன் இனத்தை உருவாக்குகின்றது.

ஆக… உயிருடன் ஒன்றும் உணர்வின் தன்மையை ஒளியாக (ஒளியான இனமாக) உருவாக்க வேண்டும் என்றால் மனிதனான நிலையில் மனைவியின் உயிருக்குள்ளும் கணவனின் உயிருக்குள்ளும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி இணைந்திட வேண்டும் அந்த உடல் முழுவதும் படர வேண்டும் என்று இரு உயிரும் ஒன்றாகக் கலக்கப்படும் பொழுது தான் இரு உயிரும் ஒன்றி வாழும் தன்மை வருகின்றது.

1.இப்படி ஒன்றிணைந்த நிலைகள் கொண்டு
2.27 நட்சத்திரத்தின் ஒளிக் கற்றைகளைத் தனக்குள் பெருக்கி
3.அண்டத்தில் வரும் அனைத்து நஞ்சினையும் வென்றது தான் துருவ நட்சத்திரம்… துருவ மகரிஷி…!

அந்தத் துருவ மகரிஷியைப் போல் நீங்கள் கணவன் மனைவி இருவரும் இந்த உணர்வின் தன்மையைப் பெற்றால் அகண்ட அண்டத்தில் வரும் நஞ்சினை அது எவ்வளவு கடுமையாக இருந்தாலும்
1.அதை வென்றிடும் சக்தி வருகின்றது.
2.ஒளியாக மாற்றிடும் திறன் வருகின்றது
3.அந்த ஒளியின் உணர்வாகக் கருவாக உருவாக்கும் தன்மை வருகின்றது.

இந்த மனித வாழ்க்கையில் இதைச் சீராகச் செய்து வருவோர் அனைவரும் நிச்சயம் பிறவி இல்லா நிலை அடைய முடியும்.

பிறப்பு… இறப்பு… மீண்டும் பிறப்பு…! என்ற சுழலிலிருந்து தப்ப வேண்டும் – ஈஸ்வரபட்டர்

பிறப்பு… இறப்பு… மீண்டும் பிறப்பு…! என்ற சுழலிலிருந்து தப்ப வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

இவ்வுலகின் தன்மையிலே மனிதனின் எண்ணத்திற்கும் ஆவி உலகின் எண்ணத்திற்கும் பல கோடிப் பாடங்களைப் பகர்ந்திடலாம். விதி வந்து விட்டது… அதனால் மடிந்து விட்டான்…! என்கிறோம்.
1.விதி வந்து அந்த உடல்களை மடியச் செய்வதில்லை
2.ஆயுளை ஆண்டவன் அளிப்பதல்ல…!

பிறப்பும் இறப்பும் இறைவன் இட்ட பிச்சை என்கிறார்கள். பிறப்பும் இறப்பும் இறைவன் இட்ட பிச்சை அல்ல. காலம் தோன்றியவுடன் வந்த அணுக்கள் தான் காலமுடன் கலந்து வந்துள்ளது பல பிறப்புகளில்.

எந்த அணுவும் எக்காலத்திலும் மடிவதில்லை.

கலி முடிந்து கல்கி வருகிறது…! என்று சொன்னேன். கலியில் முடியும் இவ்வுயிர் அணுக்கள் எல்லாமே கல்கியில் அவ்வொளியின் கதிர்கள் பட்டவுடன் பல நிலை கொண்ட பிறப்பாக உயிர் பெறுகின்றது. அந்த நிலையில் சுழல்கிறது அந்த உலகத்திலேயே.

உலகத்தன்மை தான் மாறுபடுகிறது. உயிரணுவின் தன்மையும் மாறுபடுகிறது. எல்லாமே என்றென்றும் அழிவதில்லை… மாறுபட்டு மாறுபட்டுத் தான் உலகில் சுற்றிக் கொண்டே வருகிறது.

மனிதன் மனிதனாகவும் பிறப்பதில்லை. மற்ற ஜீவராசிகள் அந்தந்த உடலிலேயும் பிறப்பதில்லை. அவ்வுலக ஆரம்பத்தில் உலக நிலையில் இக்காற்றுடன் கலந்துள்ள அணுக்கள் எல்லாம் அதனதன் மன நிலையில் விடும் சுவாசத்தின் தன்மையிலே ஆரம்ப நிலையில் வந்து உதிக்கின்றது புழுவாக… பூச்சியாக… மீனாக… நண்டாக…!

ஆதியில் மனிதன் கல்கியின் ஆரம்பத்தில் முதல் அவதாரத்தில் தோன்றிய உயிரணுக்கள் எல்லாம் ஒன்று போல் தான் இருந்தன. அந்நிலையில் விட்ட சுவாசத் தன்மையிலே உருவங்கள் மாறுபட்டு மாறுபட்டுப் புழுவாகி அடுத்த நிலையில் கொசுவாகிக் கொசுவின் நிலை மீனாகி அந்நிலையில் இருந்து மனித உடல் பெறுகின்றன.

மனித உடலின் எண்ணத்திலே மாறுபட்டு மாறுபட்டு ஏழு ஜென்மங்கள் எடுத்து…
1.ஏழு ஜென்மங்கள் எடுப்பவனும் மனித உடலில் சில காலங்கள் தான் சஞ்சரிக்கின்றான்.
2.மனித உடலில் மாறுபட்டுத் தான் மிருகமாகின்றான்.
3.மனிதனில் இருந்து மிருகமாகி… மிருகத்தில் இருந்து பறவையாகி நீரில் வாழும் ஜீவராசிகளாகி கொசுவாகிப் புழுவாகி
4.உலக ஆரம்பத்தில் உள்ள நிலைக்கே கலியின் கடைசியில் வருகின்றான்.
5.கல்கியின் முதலுக்கும் அந்நிலையில் தான் வருகின்றான். அந்த நிலையில் தான் பிறகும் ஜென்மம் எடுக்கின்றான்.

இந்த ஜென்மச் சுற்றிலிருந்து விடுபடுவதற்குத் தான் இத்தியான நிலை. தியானத்தின் மூலம் உங்கள் சுவாச நிலையை ஒரு நிலைப்படுத்திடுங்கள் என்று சொல்கிறேன்.

இப்பொழுது இந்த உடலில் உள்ள ஜென்மம் மட்டுமல்ல உங்கள் ஜென்மம். இந்த உலக ஆரம்பத்திலேயே வந்து விட்டது உங்கள் ஜென்மம்.

ஜென்மப் பயனை எடுத்திடுங்கள்… ஈசன் அருளைப் பெற்றிடலாம்…! என்பதெல்லாம் இதுவே தான். இறைவன் என்பவன் யாருமில்லை. “அவனவன் உள்ளத்தில் தான் இறைவன் உள்ளான்…!” என்று பல முறை உணர்த்தினேன்.

இறப்பும் பிறப்பும் இறைவன் செய்ததல்ல. வந்தது எல்லாம் அவரவர் (உங்கள்) வழியில் தான். “வினை விதைத்தவன் வினை அறுப்பான் விதை விதைத்தவன் விதை அறுப்பான்…” என்ற பொருளும் இதுவேதான்.

உன்னுள் இருக்கும் ஈசனின் சக்தியில்
1.பிறப்பு எடுத்ததும் நீயே தான்
2.பிறவியை இழப்பதும் நீயே தான்.

இறைவனின் படைப்பல்ல பிறப்பும் இறப்பும். உன்னுள்ளே தான் எல்லாமே உள்ளதப்பா… எண்ணத்தின் கற்றலிலே…! சுவாசத்தில் வருவது தான் பிறப்பும் இறப்புமே…

புரிந்ததா…?