உலகை அழிவிலிருந்து காக்கும் பித்தராகிய குருநாதர் என்னிடம் சொன்னது

உலகை அழிவிலிருந்து காக்கும் பித்தராகிய குருநாதர் என்னிடம் சொன்னது

 

“உலகை அழிவிலிருந்து காக்கும்” அன்று பித்தனைப் போன்று இருந்த எமது குருநாதர் பல நிலைகளை எமக்குத் தெளிவாக எடுத்துரைத்தார்.
1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதி
2.அந்த உணர்வின் ஆற்றல் மிக்க நிலைகள் கொண்டு மனிதனாக உருவாக்கிய நற்குணத்தினை நீ தெய்வமாக மதி.
2.உயர்ந்த உணர்வுகள் அங்கே விளைய வேண்டும் என்று நீ பிரார்த்தனை செய்தால்… உனக்குள் அது விளையும்.
3.அந்த உணர்வின் சொல்லாக அந்தக் கடவுளுக்கு மகிழ்ச்சியான உணர்வு கொண்டு ஆராதனை செய் என்றார்.

ஆகவே… உங்கள் உயிரைக் கடவுளாகக் காட்டினார்… உடலைக் கடவுள் அமைத்த கோட்டை என்று காட்டினார். மனிதனாக உருவாக்கிய அந்த உயர்ந்த உணர்வின் ஆக்கச் செயல்களை தெய்வமாக மதிக்கச் சொன்னார். அதைத்தான் உங்களில் நான் பார்க்கின்றேன்.

இந்த உபதேசத்தைக் கேட்டுணர்ந்தோர் உங்களை அறியாது சேர்ந்த இன்னல்களில் இருந்து மீண்டு “மகிழ்ச்சி…” என்று வாயில் எப்பொழுது சொல்கின்றீர்களோ அது தான் எனக்குப் பேரானந்தப் பெருநிலையான அந்த சொத்தின் தன்மையாக அந்த மகிழ்ச்சி எனக்குள் விளையும்.

தீமைகள் சுழன்று கொண்டிருக்கும் இந்த வேளையில் அதிலிருந்து விடுபட நான் (குருநாதர்) காட்டிய அருள் சக்தியை
1.ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஊடுருவச் செய்து
2.அங்கே உட்புகுந்த தீமைகளை நீக்கச் செய்து
3.மகிழ்ந்திடும் உணர்வின் எண்ன அலைகள் அங்கே விளையச் செய்து
4.அவர்கள் சொல்லால் மூச்சால் பேச்சால் ஒலிபரப்பும் நிலைகளைக் கண்டு நீ ஆனந்தப்பட வேண்டும்.

அதைத்தான் குரு எமக்குச் சொன்னார்.

ஒருவர் நமக்கு எதிரியாகி விட்டால் அவன் வேதனைப்பட வேண்டும் அவனுக்கு அப்படித்தான் வேண்டும்… நமக்கு எவ்வளவு தொல்லைகள் கொடுத்தான்… அவன் கஷ்டப்பட்டுத் தான் ஆக வேண்டும் என்று ரசிப்பார்கள்.

இப்படி ரசிப்பவருடைய நிலைகள்… தன் உடலுக்குள் இருக்கும் நல்ல குணத்தை எல்லாம் நஞ்சின் தன்மையாக அது அடையச் செய்துவிடும்.

பின் இந்த உணர்வின் தன்மை வரும் பொழுது எந்த நஞ்சு இங்கே விளைந்ததோ மனிதன் சிந்தனை இழக்கப்பட்டு இறந்த பின் பாம்பின் ரூபமாகத்தான் நஞ்சினைப் பாய்ச்சி மற்றதை ரசித்துச் சாப்பிடும் நிலையாகச் செல்ல வேண்டி வரும். நஞ்சுகள் கூடி பாம்பினமாகத் தான் பிறக்க வேண்டும்…
1.அதிலே நீ சென்று விடாதே
2.நஞ்சினை நீக்கி அருள் ஞானிகள் உணர்வுகள் அங்கே பெற வேண்டும் என்று நீ தியானி.
3.அதனின் உணர்வின் தன்மை ஒளியான உணர்வுகளைப் பரப்பு தீமைகளைப் போக்கு அதைக் கண்டு நீ மகிழ்ச்சி பெறு.

குருநாதர் சொன்னது இது தான்.

பித்தனைப் போன்று தான் அவர் இருந்தார். உலகம் அனைத்தும் “அவரைப் பித்தன்” என்று எண்ணினார்கள். ஆனால் “உலக மக்கள் பித்தராக இருக்கிறார்கள்” என்று தான் அவர் சொன்னார்.

உலகம் பித்தின் நிலையில் இருந்து தன்னை அறியாது பல சித்தின் நிலைகள் கொண்டு… அவரவர்கள் உற்பத்தியாகும் நிலை தான் இவ்வாறு உருவாக்கிக் கொண்டுள்ளார்கள்… அதிலிருந்து நீ மீள வேண்டும்.

என்னைப் பித்தன் என்று சொல்பவர்கள் அவர்கள் தன்னைப் பித்தன் என்பதை மறந்து விட்டார்கள்.
1.அந்தப் பித்து கொண்ட உணர்வின் தன்மை எனக்குள் எட்டிடாது
2.அந்த மகரிஷிகள் உணர்வை ஒன்றே எனக்குப் போதும் என்று
3.இந்தச் சாக்கடைக்கு மொழி பூச வேண்டாம்… உடல் சாக்கடை என்று உணர்த்திவிட்டு
4.சாக்கடை அருகில் இருந்து தான் இந்த உபதேசங்களை உணர்த்தினார்.

இந்தச் சாக்கடைக்கு முக்கியத்துவம் கொடுக்காதே…! எதை எடுத்தாலும் சாக்கடை கழிவுகள் சேரும். ஆகவே… உயிராக இயக்கப்பட்ட உணர்வின் ஒளியின் தன்மை கொண்டு ஒளியின் சுடராக ஆக வேண்டும்.

வராகன் எப்படி நாற்றத்தைப் பிளந்து சாக்கடைக்குள்ளிருந்து நல்ல உணர்வை எடுத்து மனிதனாக உருவாகக் காரணமானதோ அதைப் போல் அந்த மெய் ஞானிகள் உணர்வை நீ நுகர்ந்து (உனக்குள்) சாக்கடைக்குள் மறைந்து இருக்கும் உயிரின் நிலைகள் கொண்டு அவனுடன் நீ ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு என்றும் நீ வாழ வேண்டும்.

அதை நீ பெற வேண்டும் என்றால் நீ சந்திக்கும் கோடானு கோடி மக்களும் அதாவது முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று சொல்வார்கள்… ஏனென்றால் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு உடலைச் சிருஷ்டித்தது ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு குணத்தின் அடிப்படையில் இயக்குகின்றது
1.யாராக இருந்தாலும் அந்த உணர்வுகள் அனைத்தும் ஒருக்கச் சேர்ந்து ஒளியின் சரீரமாகப் பெற வேண்டும்.
2.அந்த உயிருடன் ஒன்றிய நிலைகள் பெற வேண்டும்… ஈசன் வீற்றிருக்கும் ஆலயம் பரிசுத்தமாக இருக்க வேண்டும்
3.அங்கே மகிழ்ந்திடும் நிலைகள் பெற வேண்டும் என்று ஏங்கி நான் உனக்குக் காட்டிய நிலைகள் கொண்டு நீ தியானி.

அதை நீ செய்தால் நீ அதுவாகின்றாய்… ஒளியின் சரீரமாகின்றாய். உன்னைப் பார்ப்பவர்களும் உன்னுடன் அவரும் ஒளியாக ஆகின்றார்கள் என்று இப்படித்தான் எனக்கு வழி காட்டினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

ஈஸ்வரபட்டர் கண்டுணர்ந்த உணர்வுகளை நாம் பருக வேண்டும்

ஈஸ்வரபட்டர் கண்டுணர்ந்த உணர்வுகளை நாம் பருக வேண்டும்

 

எனது குருநாதர் உடலுடன் இருக்கப்படும் போது அவருக்குள் கற்றுணர்ந்த அந்த உயர்ந்த உணர்வை எனக்குள் பதிவு செய்தார். அதை நினைவு கொண்டு எடுக்கும்படி சொன்னார்… எடுத்து அதிலே வளர்ச்சி பெற்றேன் (ஞானகுரு).

உடலை விட்டு நான் பிரிந்து சென்ற பின் “எனக்கு நீ செய்ய வேண்டிய கடமைகள் இன்னதுதான்” என்று அவர் சொன்னார்.
1.அருள் ஞானத்தின் உணர்வை எனக்குள் வளர்த்துக் கொண்டதற்கு உயிரான்மா புவியின் ஈர்ப்புக்குள் வராதபடி விண் செல்ல உந்து விசை தேவை.
2.என்னை விண்ணிலே வீசு…!
3.இங்கிருந்து அகன்று சென்றால் தான் உடல் பெறும் உணர்வுகளைக் கருக்க முடியும்… ஒளியின் சுடருடன் நான் சுழல முடியும்.

ஞானத்தின் தன்மையை எனக்குள் வளர்த்தாலும் அந்த உணர்வின் தன்மை கொண்டு இங்கே விரிவடைந்து பேசலாம். “தன்னிச்சையாக விண் செல்லும் நிலை எவருக்கும் இல்லை..” வலு கொண்ட பல நிலைகள் உறுதுணை கொண்ட உணர்வின் துணை கொண்டு தான் செல்ல முடியும்.

எடை கூடிய பொருளை ஒரு நூலால் தூக்க வேண்டும் என்றால் கடினம். ஆனால் பல நூல்களை ஒன்றாக்கிக் கயிறாகத் திரிக்கப்படும்பொழுது அதைத் தூக்கும் சக்தி வருகின்றது.

இதைப் போன்று தான்
1.“ஒன்றிய நிலைகள் எங்கே வருகின்றதோ” அந்த வலுவான உணர்வு கொண்டு உந்து விசையால் என்னை உந்தித் தள்ள வேண்டும்.
2.உடல் பெறும் உணர்வுகள் கருகும் எல்லை அதுதான்
3.கருகிய உணர்வு கொண்டு அங்கே நுகர்ந்த உணர்வுகளை ஒளியாக மாற்றும்.
4.அந்த ஒளியின் சுடரே தான் என்றும் நிலைத்து அழியாது கொண்டு இருக்கும்.
5.இங்கே புவியில் வந்தால் உணர்வின் தன்மை மாய்க்கும்.

நஞ்சினை வென்றிடும் உணர்வின் அலைகளுக்குள் செல்லப்படும் பொழுது நஞ்சை வென்றிடும் உணர்வையே நான் பெற முடியும்.

நஞ்சை இந்த வாழ்க்கையில் வென்றாலும் வென்றிடும் உணர்வுகள் பெற்றாலும் இதைக் கடந்து செல்லும் ஈர்ப்பு எனக்கு இல்லை.
1.கடந்து செல்லும் இந்த ஒத்த நிலைகள்
2.இங்கே கீழிருந்து இயக்கப்படும் பொழுதுதான் விண செல்ல முடியும்.

அவர் ஆன்மா வெளியே செல்லும் பொழுது அவர் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை அதற்கென்று என்னென்ன பக்குவத்தைச் செய்தாரோ… அதைப் பக்குவப்படுத்தி “அவர் வழியில் விண் செலுத்திய பின்பு தான் விண்ணுலக ஆற்றலை நான் பருக முடிந்தது…”

விண்ணின் ஆற்றலை எனக்குள் பதிவு செய்திருந்தாலும் நினைவு கொண்டு எடுக்கும் சக்தி அந்தத் திறன் அவரை விண் செலுத்திய பின் தான் எனக்குக் கிடைத்தது.

என் குருவின் இயல்பான நிலைகள் கொண்டு அவர் உணர்த்திய உணர்வின் ஒளி அலைகள் நிலை கொண்டிருக்க அவர் காட்டிய வழிகளில் அவரை விண் செலுத்தினேன்.
1.அதனின் தொடர் கொண்டு தான் அவருடைய தொடர்பும் வருகின்றது
2.இந்த புவியியல் வரக் கூடிய தீமைகளை என்னால் அகற்ற முடிகின்றது.
3.உங்களுக்கும் அந்த ஆற்றலைப் பதிவு செய்ய முடிகின்றது.
4.உங்களுக்குள் விளைந்த தீமைகள் என்னை நாடாத வண்ணம் தப்பித்துக் கொள்ள முடிகின்றது.

இல்லை என்றால் அது முடியாது…! சரியான மார்க்கம் இல்லாதபடி எதையும் செய்ய முடியாது.

சில நேரங்களில் குருநாதர் போஸ்ட் கம்பியில் கல்லைக் கொண்டு தட்டுவார் ஹலோ…! என்பார் நான் போன் செய்கிறேன் என்பார்.

போஸ்ட் கம்பியில் ஏன் கல்லைக் கொண்டு தட்டுகிறீர்கள் சாமி…? என்று நான் கேட்பேன்.

கடவுளுக்கு போன் செய்கிறேன் என்பார். கல்லிலே தட்டுவதை நீதான் ஏன் என்று கேட்டாய்… மற்ற யாரும் கேட்கவில்லை. காரணம் அதிலே வரக்கூடிய நாதங்களைச் சுட்டிக் காட்டி விண்ணிலே நாதங்கள் எப்படி வருகிறது…? என்று பார்…!

விண்ணுலகில் எடுத்துக் கொண்டால் ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று மோதுகின்றது. மோதியவுடன் சுருதிகள் மாறுகின்றது. அகண்டு சென்ற பின் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப “எத்தனையோ உருவங்களாகத் தோற்றம் தருகிறது…” விண்வெளியில் இப்படி உருவாகின்றது.

அத்னுடைய வேகங்கள் வரும் பொழுது நாதங்கள் எப்படி வருகிறது பார் என்றார். அதற்குத் தான் கல்லைக் கொண்டு நான் தட்டிக் காண்பித்தேன்…! என்றார் நாதத்தை நீ பார் என்றார்.

1.இது எல்லாம் அனுபவபூர்வமாக… அவருடைய சக்தி கொண்டு உலகம் எப்படி இருக்கிறது…? என்று
2.அவர் கண்டறிந்த உணர்வு அவருக்குள் இருந்து வருகின்றது.
3.அதை எல்லாம் நாம் பருக வேண்டும் என்பதற்குத் தான் இதை ஞாபகப்படுத்துவது.

ஈஸ்வரப்பட்டரின் வாழ்க்கை நிலை

ஈஸ்வரப்பட்டரின் வாழ்க்கை நிலை

 

ஒவ்வொரு மதத்தவரும் ஆண்டவனை அவரவர்கள் உணர்ந்த நிலையில் உலகிற்கு உணர்த்தி வந்தார்கள். அனைத்து ஆத்மாக்களுக்குமே நல்லுணர்வு பெற வேண்டும் என்று அவர்களை அறியாமலே அவர்களுக்குள்ளும் ஓர் எண்ண நிலை ஓடிக்கொண்டுதான் உள்ளது. ஆனால் அவரவர்கள் வளர்ந்த நிலையினால் செயல்படுத்த முடியவில்லை நல்லுணர்வுகளை.

பல காலமாய் நல்லுணர்வு கொண்ட சப்தரிஷிகளும் பல மகான்களும் இவ்வாத்மாக்களை நல்லுணர்வு படுத்திடப் பல உடல்களை ஏற்றும் பல எண்ணங்களில் பக்தியைச் செலுத்தியும் இன்றளவும் செயல் கொண்டுள்ளார்கள்.

ஆனால் இம் மகான்கள் எல்லாம் ஏன் பிறப்பில் வந்து செயலாக்குவதில்லை…?

1.சப்தரிஷியாய்… சகலத்துடன் கலந்திட்ட ஒளி பிம்ப சக்தி பூண்ட ஆண்டவன்களெல்லாம் பிறப்பில் வருவதில்லை.
2.பிறப்பில் வரும்பொழுதே இவ் ஆண் பெண் என்ற இச்சையில், ஆசையில் உட்பட்டால் அவர்கள் பெற்ற சக்தி தடைபடுகிறது.
3.ஒவ்வோர் ஆத்மாவும் பிறப்பிற்கு வரும்பொழுது முன் பிறப்பு நிலை மறைக்கப்படுவது இவ் இச்சை நிலையினால் தான்.

பிறப்பிற்கு வந்துவிட்டால் முன் ஜென்மத்தில் முந்தைய நாட்களில் எத்தனை சக்தி பெற்றிருந்தாலும்
1.இப்பிறப்பு என்று ஆசைப்பட்டவுடனே பெற்ற பலன் சிதறுண்டு இவ்வுலக ஆசையில் சிக்குண்டு விடுகிறது.
2.அதனால் தான் எம் மகான்களும் பிறப்பில் வந்து பிறப்பதில்லை.

ஈஸ்வரப்பட்டரின் வாழ்க்கை நிலையை உணர்த்தி வந்தேன். பதினாறாவது வயதில் ஈஸ்வரப்பட்டர் என்ற நாமம் கொண்ட உடலில் ஒரு மகான் செயல் கொண்டார்.

அந்நிலையில் அவர் பழனி ஸ்தலத்தில் சில நிலைகளை வெளிப்படுத்தினார், பைத்திய கோலம் பூண்டு. பல அன்பர்களின் இல்லத்தில் வைத்திய முறையை உணர்த்தியும் சில வாழ்க்கைக்குகந்த செயல்களைச் செய்வித்தும் அவ்வாத்மாக்களை ஞானம் பெற்றிட ஈர்க்கப் பார்த்தார்.

அந்நிலையில் அவர்களுக்கும் பல ஆசை நிலைகளையூட்டி இவ் உலக மக்களின் பேராசையான தங்கம் என்ற உலோகத்தைச் செய்விக்கும் முறையெல்லாம் இரசமணியின் மூலமாய் உணர்த்தி அவர்களின் ஆத்மா இவ்வாசையின் பிடியில் சிக்குண்டு அல்லல்படுவதையும் உணர்த்திட்டேன்.

1.எம்மை ஒரு கருவியாக்கி எம் சக்தியில் உள்ள பொருள் சக்தியைத்தான் அவ்வாத்மாக்கள் விரும்பினவே அன்றே
2.அழியாப் பொருளான ஆத்மச் செல்வத்தை யாரும் அங்கு விரும்பவில்லை.

பல இல்லங்களில் ஈஸ்வரப்பட்டரின் உடல் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்தி ஞானத்தைப் போதிக்க முயன்றோம்.
1.எம்மிடம் உள்ள வித்தை என்ன…?
2.அதனால் பெறப்போகும் பயன் என்ன…?
3.பயன் என்பதையே அழுகிப் போகும் பொருளுக்காக எண்ணிவிட்டார்களப்பா…!

அந்நிலையில்தான் வேணுகோபால நாயகனையும் பிடித்தேன்.

முன் ஜென்மத்தில், அவனது முன் ஜென்மத்தில் பல சக்தியைப் பெற்றிருந்தான். எம்மிடமும் தொடர்பு கொண்டிருந்தான். அஜ்ஜென்ம ஆசையில் இருந்து விடுபடாமல் வேணுகோபால பிம்ப உடலைக் கொண்ட ஜென்மத்திற்கும் வந்தான்.
1.அவனின் ஆத்மாவை அதே பழனி ஸ்தலத்திலேயே பல இன்னல்களுக்கு உட்படுத்தினேன்.
2.மற்ற ஆத்மாக்களாய் இருந்தால் இன்றைய இக்கலியில் மீளுவது கடினம்.
3.பல இன்னல்களைத் தந்துதான் அவனை ஞானத்தின் வழித்தொடர் அறிய வைத்தேன்.
4.பல காலமாய் இவ் இன்னலில் இருந்த பிறகுதான்… அவனை அதிலிருந்து ஜெயிக்க வைத்தேன்.

பல ஆசை நிலைகளையும் ஊட்டிவிட்டேன். இவ்வாத்மாவையே முடித்துக் கொள்ளலாம் என்னும் சங்கட நிலையையும் ஊட்டிவிட்டேன்.

பல ஊர்களுக்கு அலையவிட்டு ஒவ்வோர் ஆத்மாக்களின் எண்ண நிலை ஆசை நிலை அனைத்தையும் அறியச் செய்து… அவ் வேணுகோபால சாமியை ஒரு கருவியாக்கிப் பல சக்திகளை வெளிப்படுத்திப் பல ஆத்மாக்களுக்கு ஞான வழித்தொடர் பெறும் நிலையை எல்லாம் செயலாக்கினேன்.

அந்நிலையில்தான் எமக்குச் சிஷ்யனாக்கி “அவனையே எம் எண்ணத்தின் செயலாக்கிடலாம்” என்பதனை உணர்ந்து ஈஸ்வரப்பட்டரின் உடலைப் பழனியிலேயே விட்டுப் பிரிந்தேன்.

அவ்வுடல் இன்றும் சமாதியில் உள்ளது. ஈஸ்வரப்பட்டரின் உடலில் இருந்து பிரிந்து வேணுகோபாலின் மூலமாய் இவ்வுலகத்தின் ஒரு பாகத்தில் சில நிலைகளை உணர்த்தி வருகின்றேன்.
1.எம்மைப் போலுள்ளவர்களின் நிலையெல்லாம் இவ்வாத்மாக்கள் எங்கெங்கு உள்ளனவோ
2.அங்கெல்லாம் ஒவ்வொரு ரூபத்தில் மனித ஆத்மாக்களை ஞான வழியில் ஈர்க்க பல செய்திகளைச் செய்விக்கின்றோம்.

வேணுகோபாலனைக் கருவியாக்கித்தான் ஞானத்தின் வழித்தொடரைச் செயலாக்கும் ஆத்மாவாய் உணர்ந்தே அவரால் இவ்வுலகிற்குச் செயல்படுத்துகின்றேன்.

பல ஆத்மாக்களை இவ்வுலகில் உள்ள பொழுது அவரை ஏன் செயல்படுத்தினீர்…? என்ற வினாவும் எழலாம்.

அவரது எண்ணமே எம் எண்ணத்தின் தொடர்பு கொண்டதாயும் அவர் செயலாற்றும் வழியும் சத்திய நெறியும்தான் அவ்வாத்மாவை யான் ஏற்று அவ்வாத்மாவின் சக்தியினால் இவ்வுலகத்தை சக்தி நெறியில் ஈர்க்கச் செயல் கொள்கின்றேன்.

அனைத்து ஆத்மாக்களுமே எமக்கு ஒன்றுதான். எம் செயலை வெளிப்படுத்திட உடல் ஆத்மா ஒன்று தேவை.
1.எம் செயலை ஈர்க்கும் ஞானத்தின் சக்தியைத்தான் எம் செயலுக்குகந்த சக்தியாய் ஏற்க முடிந்தது
2.அவ்வாத்மா வேறல்ல யான் வேறல்ல…! என்ற நிலையில் ஐக்கியப்பட்டே “எம் செயல் நிலை இனி இவ்வுலகினில் நடந்திடும்…”

ஈஸ்வரமங்கலம்

ஈஸ்வரமங்கலம்

 

ஈஸ்வரபட்டர் என்ற நாமமுடைய உங்களினால் குருவின் குருவாய் சூட்சும நிலை கொண்டு காணும் எம் நிலையை அறிய…
1.எம் நிலை என்பது “ஈஸ்வரப்பட்டர்” என்ற நாமகரணம் கொண்ட அவ்வுடல் ஆத்மாவில் யாம் செயல் கொண்டதையும்
2.எம் சக்தி நிலையை எந்நிலையில் உணர்த்தி வந்தோம்…? என்பதனை அறியவும் அனைத்து ஆத்மாக்களுக்குமே ஆசை உண்டு.

இன்று கர்நாடக மாநிலம் ஆகியுள்ள அம் மாநிலத்தில் மங்களூருக்கு அருகில் கன்னட பிராமண குடும்பத்தில் பல நாள் புத்திர பாக்கியம் இல்லாமல் தவித்து வந்த குடும்பத்தில் முதல் மகனாய் ஜெனனம் பெற்றேன்.

ஈஸ்வரமங்கலம் என்ற ஊரிலிருந்து சில கல் தொலைவில் உள்ள கிராமத்தில்… பாக்குத் தோட்டங்கள் விவசாயத்தில் முக்கியத்துவம் உள்ள கிராமத்தில் அவ்வூரின் நாமம்… அவ் ஊரில் உள்ள கோவிலின் நாமம்… அங்குள்ள குடும்பங்களின் நாமம்… எல்லாமே “ஈஸ்வர நாமத்தை” முதன்மை பெற்ற உள்ள சிற்றூர் அது.

பல காலம் புத்திர பாக்கியம் இல்லாமல் பிறந்த ஈஸ்வரப்பட்டன் யான். யான் பிறந்து சில மாதங்களிலேயே தந்தை இறந்துவிட்டார். தாயினால் வளர்க்கப் பெற்று தாயின் ஜீவிதம் கொண்டு சிறு கல்வியறிவும் பெற்று வளரும் பக்குவத்தில் தாயும் இறந்தார். சகோதர சகோதரிகளின் பாக்கியமும் பெறாமல் தனித்து விடப்பட்டேன் கோவிலில்…!

ஈஸ்வரர் கோவிலில் “அவ்வாண்டவனே அனைத்தும்…” என்ற நிலையில் எண்ணம் குன்றி… ஜீவிதத்திற்கு வழி அறியாமல் அவ்வாண்டவனை பூஜிப்பதிலேயே எம் ஜீவன் பிரிந்தது.

எம் ஜீவன் பிரிந்த நிலையில்
1.என் உடலை… ஒரு மகான் ஏற்றுக் கொண்டே
2.என்னையும்… என்னையும் என்பது பிரிந்த என் உயிராத்மாவை அம்மகான் அவ்வுடலைச் செயல்படுத்த ஏற்றுக் கொண்ட நிலையில்
3.அவ்வுடலில் நான் விட்டுப் பிரிந்த உடலில் அம் மகானினால் அவ்வுடலுக்கு ஈர்க்கப் பெற்று
4.அம்மகானே எம் உயிரையும் எம் உடலையும் வழி நடத்தி எம்மை… எம்மை என்பது ஈஸ்வரப்பட்டர் என்ற உடலைச் செயலாக்கினார்.

பதினாறாவது வயதில் பழனிக்கு வந்தோம்…! “வந்தோம்” என்பதின் பொருள் புரிந்ததா…? எம் உடலை ஏற்ற அம்மகானின் செயல்நிலை வெளிப்படும் நிலையிலிருந்து
1.நான் வேறல்ல அம்மகான் வேறல்ல என்ற நிலையில்
2.அம்மகானே தான் எல்லாமில் எல்லாமாய் செயல் கொண்டார்.

மகான் என்பது ஒளியுடனே ஒளியாய் அனைத்திலும் கலந்துள்ள அவ்வாதவனான சூரிய மகான்தான்… இவ் உடலை ஏற்றுச் செயல் கொண்டார்.

இனி யான் என்று ஈஸ்வரப்பட்டரின் எம் நாமத்தை எனதாக்கிச் செப்பிட யாதுள்ளது…?
1.அவ்வாதவனுக்கே அர்ப்பணித்த உடல்
2.அவ்வாதவனிடம் ஐக்கியப்பட்டுவிட்டது எம் உயிராத்மாவும்.

மகான்களின் நிலை எல்லாம் பிற உடலை ஏற்றுத்தான் சில நிலைகளை அவர்களின் ஒளி வட்டத்திற்குள் மற்ற உயிரணுக்களையும் சேர்த்திடச் செயல் கொள்ளும்.

இப்பூமியில்… இப்பூமி உயிராத்மாக்களை வளரவிட்ட காலம் தொட்டே மகான்களாய் சக்தி பெற்ற பல ஆத்மாக்கள் உள்ளன.

அவ்வாத்மாக்களின் நிலை பெற்ற மகான்கள் எல்லாம்
1.அவர்கள் பெற்ற சக்தியை இவ்வுலகினில் “ஒவ்வொரு ரூபத்தில்” இன்றளவும் வெளிப்படுத்திக் கொண்டேதான் உள்ளனர்
2.மற்ற ஜீவ ஆத்மாக்களின் மூலமாய்த்தான் அவர்களின் செயல் நிலையெல்லாம் கலந்திருக்கும்.

போகர் எப்படி முருகா என்ற பிரணவ நாமத்தையும் இன்னும் இவ்வுலகினில் அங்கங்கு இப்பக்தி நிலைக்கு தனக்குகந்த நாம சக்தியைச் சுழலவிட்டே எண்ணங்களுக்கு பக்தி நிலையூட்டி… அப்பக்தி நிலையில் ஈர்ப்பு நிலை கொண்ட நல்ல ஆத்மாக்களையெல்லாம் அவ்வாத்மாக்கள் ஜீவன் கொண்டு வாழ்ந்த வாழ்க்கை நிலையிலேயே… இவரின் ஒளி வட்டத்தைப் பாய்ச்சி இவரின் ஈர்ப்புக்குள் பல ஆத்மாக்களை ஒளியாக்கிக் கலக்கச் செய்து கொள்கின்றார்.

“ஓம் முருகா…” என்ற அந் நாமத்திலேயே அவரின் ஒளியைப் பாய்ச்சி ஒளியை ஈர்த்து ஒன்றைப் பலவாக்கி பலவற்றை நிறைவாக்கிக் காண்கின்றார்.

ஒவ்வொரு மகானும் இந்நிலையில்தான் அவர்களின் நல் உணர்வை நலமாகப் பரப்பிட ஒவ்வொரு நாமத்தை ஆண்டவனாய் வெளிப்படுத்தி இம் மனித ஆத்மாக்களை நல்லுணர்வாக்கினார்களேயன்றி… இன்று நாஸ்திக வாதத்தில் கேட்கப்படும் இந்து மதத்திற்கு ஏன் இவ்வளவு ஆண்டவன்கள்…? என்ற வினா எழுப்பப்படும் நிலைக்காக அல்ல.

இந்து மதத்தின் உண்மை நிலை இதுதான்.

1.ஒவ்வோர் உயிராத்மாவும் நல் நிலை பெற்று
2,அந் நல்லதையே அனைவருக்கும் உணர்த்திடத் தன்னையே ஒளியாக்கி
3.அவ்வொளியையே அனைத்திலும் காணப் பல ரூபங்களைக் கல்லிலும் மண்ணிலும் வடித்து
4.இம் மனித ஆத்மாக்களின் எண்ணத்தை அவ்வொளி வட்டமுடன் நல்லுணர்வு பெற வேண்டும் என்ற நிலைப்படுத்தி வந்த நிலைதான்
5.இந்து மதத்திலுள்ள “இப் பல ஆண்டவங்களின் நிலை…”

இன்னல்கள் பல மோதினாலும் “தெளிவு பெறும் ஞான வளர்ச்சியை” நீங்கள் பெறுவீர்கள்

இன்னல்கள் பல மோதினாலும் “தெளிவு பெறும் ஞான வளர்ச்சியை” நீங்கள் பெறுவீர்கள்

 

நம் உடலை விட்டு நம் ஆத்மா பிரிந்து செல்வதைச் சிவபதவி அடைந்து விட்டார் தெய்வீக பதவிக்குச் சென்றிட்டார் என்றெல்லாம் நம் ஆத்மா பிரிந்த பிறகு… நம்முடன் வாழ்ந்தவர்கள் நமக்களிக்கும் பதவிதானே தவிர… எப்பதவியும் அச்சிவனால் நமக்கு அளிக்கப்படுவதில்லை.

வாழ்ந்த காலத்தில் நாம் இருக்கும் நிலையைக் காட்டிலும் ஆவி உலகில் அல்லல்படும் நிலை “மிக மிகக் கொடிய நிலை…”

நல் ஆத்மாவாய் நற்செயலைச் செய்வித்து நல்லுணர்வு கொண்டு அமைதி கொண்டு இவ்வுலக வாழ்க்கையில் உள்ள பற்று, பாசம், ஆசை அனைத்து நிலைகளையுமே வாழ்ந்த நிலை கொண்டு பூரிப்பில் சஞ்சலத்தில் விட்டுச் செல்வதைப் போல் எண்ணாமல்
1.அமைதியுடனே இவ்வுலகப் பற்றற்றுப் பிரிந்து செல்லும் ஆத்மாக்களினால் தான்
2.ஆண்டவனாயும் அக்குடும்பத்தின் தெய்வமாயும் தான் வாழ்ந்த குடும்பத்தைச் செழிக்கச் செய்திடல் முடிந்திடும்.

குடும்பத்தில் உள்ளோரும் அக்குடும்பத்தில் வாழ்ந்திடும் பெரியோர்களை அன்புடன் வணங்கியே அவர் வாழ்ந்த காலத்தில் நாம் செய்யும் சேவைதான், அவர் ஆத்மா பிரிந்த பிறகு நம் குடும்பத் தெய்வமாய் நம்மைக் காப்பார்.
1.அவ்வழியின் தொடர் தான் குடும்பத் தொடராக…
2.பெரியோரை தாய் தந்தையரை பக்தி கொண்டு வணங்கிடும் பக்குவ நிலை என்பதனை உணர்ந்து
3.ஒவ்வொரு குடும்பத்தையும் அக்குடும்பங்களே கோயில்களாய்த் திகழும் வண்ணம் வாழ்ந்து வழி நடந்திடல் வேண்டும்.

பல கோயில்களுக்குச் சென்று அபிஷேக ஆராதனை செய்வித்துப் பக்தியை வளர்த்து வேண்டும் முறையைக் காட்டிலும்… நம் இல்லக் கோயிலை அன்பு கொண்டதாய் இனிமையை வளர்க்கும் இன்ப இல்லமாய்… இல்லத்தில் உள்ளோர் அனைவரின் எண்ணக் கலப்பும் ஒன்றுபட்டதாய் வாழ்ந்திடும் வழி பெறுங்கள்.
1.வாழ்க்கையுடன் மோதிடும் பல இன்னல்களுக்கும்
2.தெளிவு பெறும் பக்குவத்தில் நம் ஞான வளர்ச்சியின் தொடர்பினை வளர விடுங்கள்.

செல்வமும், செழிப்பும் தானாய் வளரும். பக்தி என்னும் அன்பு கொண்ட வாழ்க்கையின் நெறியறிந்து ஞான வழியின் தொடரைப் பின்பற்றி வழி நடந்து வாழ்ந்திட்டாலும் நம் எண்ணத்தில் நம் வாழ்வின் நிறைவில்
1.”நான்” என்ற எண்ண நிலையை என்றென்றும் மோத விடாமல்,
2.செழிப்பின் வழியிலே தான் நம் எண்ணத் தொடர் சென்றிடல் வேண்டும்.

நல்லோருடனே பழகியும் நற்பயன் கொண்ட காரியத்தைச் செய்தும் பக்திமானாய் அன்பு கொண்ட வாழ்க்கை வாழ்ந்தும் இவ்வாழ்ந்திடும் வழித்தொடரில் நம்மைக் காட்டிலும் நம் வழித் தொடர் பெறாமல்
1.பிறரின் வாழ்க்கை நிலை, நெறிமுறை இவற்றின் தன்மை நம்முடன் ஒட்டாமல் சத்துரு மித்திரு கொண்டவரின்
2.தீய சக்தியின் பிடியில் சிக்கி அப்பழக்கத்திற்கு அடிமை கொண்டவரின் நிலையையும் நம் நிலையையும் ஒப்பிட்டு
3.நம் நிலையின் பெருமையை நாம் எண்ணினால் நான் என்ற நிலையினால் நாம் வளர்ந்த இந் நற் சக்தியிலேயே கரைபடுகின்றது.

பல தீய வழிகளில் அடிமை கொண்டு அந்நிலையிலிருந்து மீள வழியில்லாமல்… நல்லுணர்வு கொண்டோரை தீய நிலையில் உள்ளவரின் எண்ணம் அன்புப்படுத்தி பக்திப்படுத்தி
1.நமக்கு அப்பாக்கிய வழி சென்றிடும் வழித்தொடர் இல்லாமல் இந்நிலையில் உள்ளோம் என்ற எண்ணத்திலேயே
2.அவர்களின் ஆத்மாவில் நற்சக்தி பெற்றோரை எண்ணத்தில் ஈர்த்த சக்தி கூடி வலுப் பெறுகின்றது அவ்வாத்மாக்களுக்குமே.

நாம் வாழ்ந்திடும் நம் நினைவுடன் கலந்திடும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் அவற்றுக்குண்டான சக்தி நிலை நம்முள் சேமிக்கப்படுகின்றது.

இவற்றை உணர்ந்திடாமல் வாழ்ந்தோம் என்ற நிலை கொண்ட சாதாரண நிலையில் வாழ்ந்து… நாம் இம்மனித ஆத்மா கொண்ட உடலைப் பெற்று வாழ்ந்திடும் இப்பாக்கியத்தைச் சிதற விடாதீர்கள்.

இன்றளவும் நம்மில் தோன்றி சப்தரிஷி நிலைகொண்ட ஜோதிகளும் இன்னும் பக்தியென்ற தொடர் நிலை கொண்ட தனக்கு மேல் உள்ள உயர்ந்த சக்தியான இயற்கையின் ஆதி சக்தியையே ஒவ்வொரு சப்தரிஷிகளும் ஜெபப்படுத்தி பூஜைப்படுத்தி “நான் என்ற நிலைப்படாமல்” மென்மேலும் அவ் இயற்கை ஜெபத்துடன்தான் செயலாற்றுகின்றார்கள்.

அனைவருக்கும் முருகனாய் ஜெபப்படுத்தி வணங்கிடும் அப்போகநாதரே அச்சிவசக்தியின் ரூப ஜெபத்தை இன்றளவும் அம்முருகரின் விக்கிரகத்தை ஜெபப்படுத்திக் கொண்டே உள்ளார்.

முருக ஸ்தலமே… அம் முருகரின் அச்சிலையே அவர் ஜெபிக்கும் ஜெபத்தை ஈர்த்து சக்தியை வளர்த்துக் கொண்டே அருள் புரிகின்றது.

நம் பாட நிலையில் இவ்வுலகில் வளர்ந்த கனி வளங்களை இப்பூமியிலிருந்து பிரித்த பிறகு ஜீவனற்றுப் போகின்றது என்று உணர்த்தியுள்ளோம்.

ஆனால் போகர் ஸ்தாபிதம் செய்த முருகரின் சிலைக்கு அப்போகர் ஜெபித்த ஜெபத்தினால் அம்முருகரின் சிலையே ஜீவன் கொண்ட நிலையில், அம்மலையில் ஐக்கியப்பட்டுவிட்டது.

1.ரிஷிகளும் சப்தரிஷிகளும் அவர்களின் நிலையினால் நட்ட கல்லையும் ஜீவன் கொண்டிட முடிந்திடும்.
2.சப்தரிஷியின் நிலை எவ்வண்டத்தையும் எப்பிண்டத்தையும் சுழலிலிருந்து நிறுத்திடவும் முடியும்
3.பிண்டத்தையே அண்டமாக்கிச் செயல்படுத்திடவும் முடியும்.

சப்தரிஷியின் சக்தியில் அனைத்து உலக சக்தியையுமே செயலாக்கிடும் நிலை கொண்டு தான் செயல் புரிகின்றனர்.

உயிரணுவாய் உயிராத்மாவாய் வளர்ச்சி கொண்டவர்களே சப்தரிஷியாய் சகலத்தையும் அறிந்திடும் சக்தி கொண்ட நிலையிலும் இயற்கையின் சக்தியை பூஜித்தே “அவ் ஆதிசக்தியின் சக்திக்கு அடிபணிந்தே செயல் ஆக்குகின்றனர்…”

நாம் வாழ்ந்திடும் இக்குறுகிய கால வாழ்க்கையை நம் சக்தியின் ஞானத்தொடர் வழியைச் செயல்படுத்தி வழி வந்து
1.நம் சக்திக்கும் அனைத்துச் சக்தியையும் ஈர்க்கும் சக்தி உண்டு என்ற
2.ஒரு நிலை கொண்ட எண்ண நிலை கொண்ட வழித்தொடர் பெற்றிடுங்கள்.

மற்ற சூரியக் குடும்பத்தின் வளர்ச்சியைக் காட்டிலும் மேலான வளர்ச்சியாக நாம் வளர்ந்து காட்டிடல் வேண்டும்

மற்ற சூரியக் குடும்பத்தின் வளர்ச்சியைக் காட்டிலும் மேலான வளர்ச்சியாக நாம் வளர்ந்து காட்டிடல் வேண்டும்

 

சூரியனின் சக்தியை மட்டும் நாம் பெறவில்லை நமக்கு சூரியன் பல மண்டலங்களின் சக்தியை ஈர்த்து எடுத்து அளிக்கின்றது. நம் பூமியின் நிலையின் சக்தியும் நம் பூமியைப் போல் உள்ள மற்ற பூமி ஈர்த்து எடுத்துச் சுழல்கின்றது.

அச்சூரியனிலிருந்து ஒளிக்கதிர்களை நாம் பெறும் பொழுதே பல உயிரணுக்களை… பல சக்தி நிலையை நாம் பெற்றுக் கொண்டே உள்ளோம். சூரியனைக் காணும் நாம் அச்சூரியனின் உள் நிலையை உணர்ந்து வாழும் தன்மையை பெற்றிடலாம் நாம் எடுக்கும் ஜெப அருளைக் கொண்டு.

சூரியனைச் சுற்றி உள்ள ஒளிக்கதிர்களைப் பெரும் உஷ்ணமாகக் கக்கும் நிலையில் உள்ளது என்று எண்ணுகின்றோம். மற்ற மண்டலங்களில் இருந்து வரும் ஒளியின் தன்மையும் சூரியனின் ஒளிக்கதிர்களும் இச்சூரியன் சுற்றும் வேகத்தைக் கொண்டு இச்சூரியன் மேல் ஒளிக்கதிர்கள் பட்டு அச்சக்தியைத் தன்னுள் ஈர்த்து அச்சூரியன் நமக்கு ஒளி தருகின்றது.

ஒளிக்கதிர்கள் வந்து இப்பூமியில் படர்கிறது.
1.அவ்வொளிக் கதிர்களிலே பல வித நிலை கொண்ட கதிர்கள் உள்ளன.
2.ஒவ்வொரு மண்டலங்களைப் பொறுத்தும் ஒவ்வொரு வித ஒளிக் கதிர்கள் அச்சூரியனில் பட்டு இப்பூமியை வந்து தாக்குகின்றன.
3.ஒரே நிலையான காற்றும் ஒளியும் படர்வதாக நாம் எண்ணுகின்றோம்.
4.அவ்வொளிதனிலே பல விதத் தாதுப் பொருட்களை அளிக்கும் தன்மை உள்ள ஒளிக்கதிர்கள் உள்ளன.

இப்பூமியில் வளரும் தாதுப் பொருள்கள் எல்லாம் அவ்வொளியிலிருந்து எந்த நிலை கொண்ட தாதுப் பொருளை உடைய ஒளிக் கதிர்கள் இப்பூமியின் மேல் படர்கின்றனவோ… அந்த நிலையில் உள்ள நீர்ச்சத்தைக் கொண்டு அந்நிலையில் அது வளரும்… ஜீவன் பெற்று வளரும் தன்மை கொண்டே தான்… இன்று நாம் தோண்டி எடுக்கும் பல வகை உலோகங்களும்… வளரும் நிலைக்கு அவ்வுலோகம் வந்ததும்… அந்நிலையில் உள்ள பூமியின் மேல் சூரிய ஒளியின் ஒளிக்கதிர்களில் இருந்து தத்தம் நிலைக்கு உகந்த ஒளிக்கதிர்களை ஈர்த்து… தன்னைத்தானே வளர்க்கும் தன்மைக்கு உலோகங்களின் நிலை எல்லாம் உள்ளது.

இம்மண்டலங்களிலே ஜீவன் இல்லாத மண்டலங்களும் உயிர் சக்தி இல்லாத மண்டலங்களும் எதுவுமே இல்லை. ஜீவன் பெற்றே ஜீவனுடனே ஆண்டவன் என்ற ஆண்டவன்கள் தாம் எல்லாமே.

ஒவ்வொரு மண்டலமும் தத்தம் ஈர்ப்பு நிலைக்கு ஏற்பத் தமக்குள் பல வகை நிலை கொண்ட உலோகத்தன்மையை ஈர்த்து வளர்த்து வாழுகின்றது.

1.இம்மண்டலத்தில் உள்ள நிலை கொண்ட உலோகங்கள் பிற மண்டலத்தில் மாறுபட்ட தன்மையில் உள்ளன.
2.இம்மண்டலத்தில் நாம் காணும் வண்ணங்கள் பிற மண்டலத்தில் மாறுபடும் தன்மையில் உள்ளன.
3.அம்மண்டலத்திற்குச் சென்று பார்த்தால் தான் அம்மண்டலத்தின் அழகைக் கண்டிடலாம்.
4.அழகுடனே மணத்துடனே சுழல்கின்றன எல்லா மண்டலங்களுமே.

வாழும் வாழ்க்கையை அன்புடனும் அழகுடனும் அறிவுடனும் மகரிஷிகளின் சக்தி பெற்று வாழ்ந்திடும் நாம் கால நிலையை வீண் விரயம் செய்திடாமல்
1.நமக்கு மேல் உள்ள “பல மண்டலங்களில் வாழ்ந்திடும் உயிரணுக்களுக்கு மேல் சக்தி பெற்று வாழும் தன்மைக்கு” நம்மை நாம் பக்குவப்படுத்தி
2.இக்காற்றுடன் கலந்துள்ள அச்சூரியனின் ஒளி கதிர்களிலிருந்து நாம் நம் சுவாச நிலைக்கு உகந்த சக்தி கொண்ட ஒளிக்கதிர்களை ஈர்த்தெடுத்து
3.இவ் உடலைப் பெரும் பொக்கிஷமாக வைரமாக்கி வாழ்ந்திடும் தன்மை கொண்டே
4.நம் உயிராத்மாவை நமக்குகந்த எல்லா சக்தி நிலைகளும் பெறும் தன்மைக்கு
5.நம் எண்ணமும் சுவாசமும் எடுக்கும் தன்மையை நாம் பெற்று வாழ்ந்திட வேண்டும்.

“ஜெகஜ்ஜோதியான” வாழ்க்கை வாழ்ந்திடுங்கள் என்றே நல்வாழ்த்து அருளுகின்றேன் – ஈஸ்வரபட்டர்

“ஜெகஜ்ஜோதியான” வாழ்க்கை வாழ்ந்திடுங்கள் என்றே நல்வாழ்த்து அருளுகின்றேன் – ஈஸ்வரபட்டர்

 

அன்புருவம் கொண்ட அன்னை தந்தையின் அருளில் அருள் பெற்ற சக்தியின் “சத்தியச் செல்வங்களே…!”
1.இப்பாடத்தைப் படித்திடும் நீங்கள் எல்லோருமே
2.அன்பே தெய்வமான அந்த இராம நாமத்தை ஒத்த அன்புடன் கூடிய குணவானாகவும்
3.ஸ்ரீமுருகனின் அழகென்னும் அருள் செல்வச் சொல்லாற்றல் உடைய சிங்கார வடிவனின் வடிவழகுக் குமாரர்களைப் போலவும்
4.கலைமகளின் கல்வி அருள் பெற்று மகாலட்சுமியின் செல்வத்திறன் பெற்று வீர குணமுடைய ஆஞ்சநேயரைப் போலவும்
5.விளையாட்டின் வடிவத்திலே மன நிலையைக் களிப்புடன் களித்தாட்டும் கிருஷ்ணனின் குணநிலையைப் போலவும்
6.இப்படி ஒவ்வொரு சித்தர்களுக்கும் தகுந்த நிலையில் நமக்குக் குண நிலைகளைப் போதித்த “நம்மை ஆண்டவனாக எண்ணி வணங்குவதற்கு”
7.நாம் எந்தெந்த குணநிலைகளைப் பெற்று நல்வாழ்க்கை வாழ்ந்திடலாம் என்பதற்குகந்த குண நிலைகளைப் போதித்து
8.நமக்கு வழிகாட்டிய சகல ரிஷிகளுக்கும் பல நிலை பெற்ற அன்பே தெய்வமான பல பெரியோர்களுக்கும் ஞானிகளுக்கும்
9.நம்முடனே கலந்துள்ள நமக்காக வாழ்ந்திடும் பல சித்தர்களுக்கும்
10.நாம் இன்று இந்நூலின் வடிவத்தில் சொல்லி வரும் பல உண்மைகளுக்கு நம்முடைய அன்பைக் காட்டி
11.”நமக்கு நல்ல ஆசி வழங்கிட வேண்டிக் கொண்டே” இந்த நூலைப் படிப்போமாக.

சக்தியின் நிலை இவ்வுலகில் உதித்த இவ்வுலகில் பிறந்த எல்லா உயிரணுக்களுக்கும் “ஒவ்வொரு திறமையில் திறமை பெற்றுத் தான்” இப்பூவுலகில் வந்து பிறக்கின்றன.

மனிதன் மிருகங்கள் பட்சிகள் செடி, கொடி, புழு பூச்சி எல்லாவற்றிற்குமே இச்சக்தியின் அருளில் “ஒவ்வொரு திறன் கொண்டு தான்” சக்தி பெற்றே இப்பூமண்டலத்தில் வந்து பிறக்கின்றன.

இந்நிலையில் பிறக்கும் பாக்கியத்தைப் பெற்ற நாம் நம் சக்தியை நம் திறனை நம் எண்ணத்தைப் பல வழிகளில் சிதற விட்டு நாம் பெற்ற பாக்கியத்தை இழந்து வாழும் நிலையில் தான் இன்று இவ்வுலகினிலே வாழ்கின்றோம்.

இச்சக்தியின் அருளில் ஒவ்வொருவருக்கும் செயலாற்றும் தன்மையிலே ஒவ்வொரு திறனும் உண்டு. மனிதனாகப் பிறவி எடுத்த நமக்கு அச்சக்தியின் அருளில் மற்ற மிருக ஜந்துகளுக்கு இல்லாத நிலையான செயலாற்றும் தன்மையில்…
1.நமக்கு இரண்டு கைகளையும் சொல்லாற்றல் உடைய சொற்களைப் பேசும் திறன் உள்ள நாம்
2.நமக்கு அளித்த அத்திறனை ஒரே நிலை கொண்டு நம் எண்ணங்களைச் சிதறவிடாமல்
3.அவ்வெண்ணத்தை ஒரே நிலைப்படுத்தி செயலாற்றல் உடையவனாக இருந்திடல் வேண்டும்.

பெரும் உன்னத நிலை அடையும் பொக்கிஷத்தை மறந்து வாழும் வாழ்க்கையை “நாம் இனி மாற்றி வாழ வேண்டும் என்ற ஆவலினால்…” நமக்குள் இருக்கும் ஈசனின் சக்தியைக் கண்டு வாழ்வதற்காக ஒவ்வொருவரும் ஜெபம் பெற்று… இப்புண்ணிய பூமியையே புனிதமாக்கும் தன்மையில் அன்பு கொண்டே நல்வாழ்க்கை வாழ்ந்திடுங்கள்… ஜெப நிலையில் இருந்திடுங்கள்.

1.இப்பாடங்கள் படித்து வரும் ஒவ்வொருவரும் அச்சக்தியின் அருள் பெற்று
2.சகல சித்தர்களும் நமக்குள் வந்து அருள் புரியும் தன்மையில் அருள் பெற்றே அன்பு கொண்டே வாழ்ந்திடுங்கள்.
3.நல்வாழ்த்து அருளுகின்றேன்… அஜ்ஜெகஜ்ஜோதி வாழ்க்கை வாழ்ந்திடுங்கள் என்றே…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எத்தனையோ கொடிய நிலைகளிலிருந்து மீண்டு “எல்லாவற்றிலிருந்தும் மீள வேண்டும் என்ற சக்தி பெற்றவன் தான் மனிதன்…!”

மற்ற உயிரினங்கள்… உதாரணமாக தவளையோ பாம்போ பதுங்கியிருந்து தான் தனக்கு வேண்டிய உணவைப் பிடிக்கிறது. தவளை தப்பித்துக் கொள்ள எண்ணுகிறது. பாம்போ அதைக் குறி வைத்து அப்படியே பார்க்கிறது… பாய்ந்து அதைப் பிடிக்கிறது.
1.தவளையின் தசைகள் பாம்பிற்கு இரையாகிறது
2.ஆனால் தவளையின் உயிரோ பாம்பின் உணர்வைக் கவர்ந்து
3.பாம்பின் கருவிற்குள் சென்று பாம்பாக அடுத்து உருவம் பெறுகிறது.

இதைப் போன்று தான் பரிணாம வளர்ச்சியில் ஒன்றை ஒன்று தாக்கித் தன்னை வளர்ச்சி பெறச் செய்கிறது.

இப்படி ஒவ்வொரு உடலிலேயும் தன்னைப் பாதுகாக்கும் உணர்வுகளை வளர்த்து… வளர்த்து… வளர்த்து… எல்லாவற்றையும் நாம் பாதுகாக்கும் நிலையாக மனிதனாக வளர்ந்து வந்திருக்கின்றோம்.

ஆனால் மனிதனாக ஆன பின் நாம் என்ன செய்கிறோம்…? எதிரியை வீழ்த்தி விட்டு நாம் நன்றாக வாழ வேண்டும் என்று தான் எண்ணி வாழ்கிறோம்.

கடையை வைத்து வியாபாரம் செய்கிறோம். அது நன்றாக இருக்க வேண்டும் என்றால் அடுத்த கடையை அதை எப்படி எப்படி எல்லாம் “சரியில்லை…” என்று சொல்ல வேண்டுமோ அதை எல்லாம் செய்வோம்.

1.நம்மை அறியாமலே அவர்கள் சரக்கை மோசம் என்று சொல்வோம். ஆனால் சரக்கு நன்றாக இருக்கும்.
2.அவர் மீது நமக்கு வெறுப்பு இருக்கும்… அதனால் சரக்கை மோசம் என்று தான் சொல்வோம்.

இங்கே இவ்வளவு உயர்ந்ததாகப் பேசினாலும்…
1.மனம் ஒத்திருந்தால் அவர் சரக்கு மட்டமாக இருந்தாலும் கூட…
2.பரவாயில்லை… அவர் சரக்கு நன்றாக இருக்கிறது…! என்று தான் சொல்வோம்.

இந்த உண்மையை எல்லாம் தெரிந்து கொண்ட பிற்பாடும் கூட இந்த உணர்வு வரும்.

காரணம்…
1.அவர் மீது பற்று இருக்கும் போது அவர் கொண்டு வந்த சரக்கையும் நல்லதாகக் காட்டிவிடும்.
2.ஆனால் அவர் மீது பற்று இல்லை என்றால் அவர் எடுத்துக் கொண்டு வந்த சரக்கையும் மட்டமாகக் காண்பிக்கும்.

இதே உணர்வை அங்கே அடுத்தவரிடமும் பதிவு செய்து விட்டோம் என்றால் அதே நோக்கத்தில் பார்த்தால் “நீங்கள் சொன்னது சரியாகப் போய்விட்டது…!” இந்த உணர்வுகள் தான் அங்கே வந்து பாயும்.

எதிரிக்கு இந்த உணர்வின் அலைகளை மாற்றப்படும் போது இந்த உணர்ச்சிகளை அது மாற்றும். இதன் மேல் பற்று கொண்ட உணர்வு கொண்டு “நம் வார்த்தையைக் கேட்டார்கள்” என்றால் அவர்களுக்கும் அது தான்.

உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற உணர்வை நீங்கள் பாய்ச்சும் போது அதை மற்றவர்கள் பதிவு செய்து கொண்டார்கள் என்றால் அந்த உயர்ந்த நிலைக்கு அவர்களும் வருகிறார்கள்.

ஆனால் நாம் சொல்வதை…
1.சரியான நிலைகளில் இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா… ஏற்றுக் கொள்ள மாட்டார்களா…? என்று இதைக் கலந்து விட்டு
2.அடுத்து நீங்கள் சொன்னீர்கள் என்றால் அங்கே அதை ஏற்றுக் கொள்ளாத உணர்வே வரும்.

எந்நிலையிலும் வந்திடுவேன்… “உன்னுடனே”

எந்நிலையிலும் வந்திடுவேன்… “உன்னுடனே”

 

விநாயகரை “ஞான முதல்வனே” என்று சொல்கிறோம். ஞான முதல்வனே என்பதன் பொருள்
1.ஞானத்திற்கும் ஞானோதயத்திற்கும்
2.நம்முள்ளே வரும் எண்ணத்திற்கும் முதல்வன் விநாயகனே.

விநாயகனின் குணம் எல்லாம் அச்சக்தியின் முதல் குணமாக மனிதன் எண்ணத்தில் உதிப்பதற்கே பகர்ந்தப்பா…! விநாயகனின் குணங்களில் மிக நிதானத்தன்மையும்… எண்ணி ஆற்றல் படும் சித்தமும் உள்ள குணம் தான் விநாயகனின் குணம்.

விநாயகரை முதல் தெய்வமாக வணங்குவதும் உன் சித்தத்தை நிதானப்படுத்திப் பணிவுடன் பணியவே விநாயகனை முதலில் பணிவது.

ஈஸ்வர சக்தியின் முதல் அருளே விநாயகனை நினைத்து வணங்கவே தான் விநாயகனின் தன்மையில் உன் மனதை அமைதிப்படுத்திடவே அருள் செய்கின்றார் சிவ சக்தியின் முதல் சக்தி.

முதல் சக்திதானப்பா விநாயகர்…! ஆண்டவனைப் பணிவதற்கு முதலில் அடக்கமும் அமைதியும் வேண்டுமப்பா. அவ்வருளைப் பெற்றிடவே “முதலில் விநாயகனை வணங்குவதெல்லாம்…”

இப்பொருள் தெரியாதவர்களுக்குத் தான் “எல்லாமே கல்… இக்கல்லைக் கும்பிட்டால் என்ன…? அக்கல்லைக் கும்பிட்டால் என்ன…?” என்ற எண்ணம் வருகிறது.

முதலில் விநாயகரை வணங்குவதற்குப் பொருள் புரிந்த்தா…?

விநாயகரை நினக்கும் போது உன் நினைவில் பெரும் அமைதி குடி கொள்ளுமப்பா. சக்தியின் சொரூபத்தில். “துதிப்போர்க்கு வல்வினை போம்,,, துன்பம் போம்,,,” என்னும் பொருள் விளங்கிடுமப்பா.

பகர்ந்திட்டேன் சக்தியின் முதல் சொரூபத்தை…!

1.சூட்சுமத்தில் உள்ள நான்… “வந்திடுவேன் உன்னுடனே…”
2.இனி ஒரு போதும் மாற்றிடாதே உன் வழியை.
உன் வழியில் முன் இரவில் வந்த எண்ணமெல்லாம் ஊன்றிவிடுமப்பா.

உன் நினைவில் ஜெயித்து விடுவாய்…!
1.வந்திடுவேன் உன்னுடனே… வந்திடுவேன் உன்னுடனே
2.எந்நிலையிலும் வந்திடுவேன் உன்னுடனே.

உன் இசையில் இசைத்திடப்பா… வந்துள்ள அனைத்து சிஷ்யர்களுக்கும் காட்சி அருளுகின்றேன்.

உன் எண்ணத்திற்குள்ளே நான் இருப்பேன்… சொல்லாக வருவேன்… உன் செயல் பூர்ணமடையும்

உன் எண்ணத்திற்குள்ளே நான் இருப்பேன்… சொல்லாக வருவேன்… உன் செயல் பூர்ணமடையும்

 

பாட்டின் தொடரைத் தந்தேன் உன் எண்ணத்தில் உதித்ததா…? உதித்தவுடன் காவியத்தில் கொண்டு வரவில்லையே…! பாட்டைத் தொடர்ந்துவிடு பகர்ந்திடுவேன் உனக்குள்ளே.

ஞானாம்பிகையின் அருள் பெறவே
ஞானம் எல்லாம் தந்திடுவேன்…!

 

தன் மனதை அடக்கிடவே
தாங்கும் நிலை எனக்கு அருள்வாய்…!

 

ஞானோதயத்துக்கு விட்டுள்ளேன்
அவ்வழியே எடுத்துப் பகிர்ந்திடுவாய்…!

 

மாற்றமில்லாச் சொல்லைத் தந்திடுவாய்
மனம் எனும் கோவிலிலே…!

எல்லாவற்றையும் (பாடலில்) நானே பகர்ந்து விட்டால் உனக்கு அருளியதன் பயன் என்னப்பா…? சிலவற்றை உன்னிடமே விட்டுவிட்டேன்… சிந்தையுடன் சொல்லைத் தந்திடுவாய்.
1/உன்னுள்ளே நான் வந்திடுவேன் வந்து “எல்லாம் தந்து விடுவேன்…” என்று எண்ண வேண்டாம்
2.உன் நிலைக்கே விட்டுவிட்டேன்.
3.பாட்டெல்லாம் நான் பகர்ந்து விட்ட பிறகு “ஈஸ்வரனை” மட்டும் அழைக்கத் தெரிகிறதா…?

உன் சக்தியின் தன்மை கொண்டு இந்தப் பூவுலகையே ஆட்டி விடலாம். அந்தப் புன்னகையை வைத்துப் பூத்திட்டால்… பூவுலக வரிசையிலே பூத்திடுவாய் அடுத்த கவிதையை…!

ஓங்கார இசையினிலே
ஓங்கி நிற்பாள் ஓம் சக்தி…!

 

பூ மழையாகப் பொழிந்திடுவாய்
சக்தியே ஓம் சக்தியே…!

 

நீ பொழிந்த பூவையே
பூஜை செய்வேன் சக்தியே…!
பூவில் பூஜை செய்வேன்
சக்தி பூஜை செய்வேன்…!

 

பூர்ண சந்திரனின் வடிவினிலே
பூர்ண கும்பமாய் என் மனதில்
பூவின் மணத்தை யெல்லாமே
தந்திடுவாய் சக்தியே…!

 

பூவின் மணத்துடனே என் மனதில்
பூர்ணமாய்க் கலந்திடுவாய் சக்தியே
பரிபூர்ணமாய் நீ வந்து
கலந்திடுவாய் சக்தியே…!

 

மணம் எல்லாம் மணக்கச் செய்வாய்
சக்தியே ஓம் சக்தியே…!

பூக்கின்ற பூவிலெல்லாம் புகட்டி விட்டேன்… சொன்னது புரிந்ததா…? அடுத்த பாடல் ஒலியில் உள்ள ஒலியெல்லாம் உனதாக்கி உன் ஒளியை ஒளிரச் செய்.

ஓ… என்ற வரிசையிலே உன் கவிதையை ஓங்கச் செய். சொன்ன சொல் புரிந்ததா…? ஒவ்வொன்றும் புகன்றிடுவேன். எல்லாப் பாடலுமே சொந்த பாடலாக இருந்திடல் வேண்டும்.

1.நான் என்ற நிலை என்றும் உனக்கு வர வேண்டாம்
2.நான் தான் என்பதற்குப் பதில் நாம் என்ற சொல்லைச் சொல்.

உன்னைப் பாடல் எழுதச் சொல்லிவிட்டு உனக்கு ஒவ்வொன்றும் பகர்ந்திடுவதும் இதற்காகவே.
1.இப்பாடல் எல்லாம் நானும் தரவில்லை
2.நமது ஈஸ்வரனின் சொல்லப்பா இதுவெல்லாம்.

மனம் தளர வேண்டாம். உனக்கருளும் பாடல் எல்லாம் “உன்” மூலமாக வரும் என்று எண்ண வேண்டாம். அதற்காகத்தான் உனக்கு இந்தத் தயக்க௷ல்லாம் தந்து விட்டேன். எண்ணியதையெல்லாம் எழுதினாயா…? எதற்காக அந்த நிலை…? என்று பார்த்தாயா…!

நம் செயலை ஆழம் பார்க்கிறார் என்று எண்ண வேண்டாம் உன் ஆழத்தைப் பார்த்துத் தான் மக்களுக்கு பகர்ந்தது. இன்னும் இருக்கின்றது உனக்குப் பாடல்கள்.

முதலில் இருந்து பாடலை நீ பாடு. உன் ஓங்கார இனிமை…
1.என்றும் இல்லாத இனிமையை நான் அருள்கின்றேன்
3.நான் என்றால் நான் இல்லை… “அவனப்பா…”

பாடத்தை மறந்து கவிதை ரசிக்கின்றாயா…?

மனம் சொல் செயல் எல்லாம் ஒன்றாக இருக்க வேண்டும்.
1.எண்ணும் எண்ணம்
2.சொல்லும் சொல்
3.செய்யும் செயல் எல்லாமே ஒன்றுடன் ஒன்று சுற்றும் நிலையில் தான் இருக்க வேண்டும் (காட்சி:- வட்டம் ஆறு)

ஏனென்றால் சொல்லும் சொல்லைக் காப்பவனே “பெரும் நாணயஸ்தன்…!”

மனித நிலையில் சொல்லும் சொல்லைக் காப்பாற்றி விட்டால்…! அவன் நிலை என்றுமே உயர்ந்து நிற்கும்.

நீ வேறல்ல… உன் எண்ணம் வேறல்ல… உன் சொல் வேறல்ல… உன் செயல் வேறல்ல… எல்லாம் கலந்துதான் மனிதன் என்பவன்…!
1.வெறும் ஆத்மாவும் உடலும் மட்டுமல்ல மனிதன்
2.உயிரும் உடலும் மட்டும் தான் மனிதனல்ல
3.”எண்ணமும் சொல்லும் செயலும் தான் மனிதன்,..”

உடலும் அழிகின்றது ஆத்மாவும் பிரிகின்றது. எண்ணிய எண்ணமும் சொல்லிய சொல்லும் செய்த செயலும் நிலைக்கின்றது. ஆகவே
1.எண்ணும் எண்ணத்தை நல் எண்ணமாக எண்ண வேண்டும்.
2.நல்ல சொல்லும் நல்ல செயலும் தானாக வரும்.

எண்ணம் என்பது எங்கிருந்து வருகின்றது…? உன் உடலில் எந்த உறுப்பப்பா எண்ணம்…? எண்ணும் எண்ணம் எல்லாம் உன் நிலையைச் சுற்றித்தான் உள்ளது… சுற்றி வரும்.

காற்றிலே நல்ல பூவின் மணமும் கொடிய நஞ்சுத் தன்மையும் உண்டு. நீ எடுக்கும் தன்மையிலே தான் அது உன்னுள்ளே வந்து சேரும்.

எண்ணங்களைக் காவியத்தில் வடித்திடலாம். காலங்கள் மாறினாலும் காவியங்கள் அழிவதில்லை. பெரும் ஞானிகளின் நிலையும் அது தான்.

பெரும் பட்சிகள் வானிலே பறந்தாலும் அதன் எண்ணமெல்லாம் ஒன்றிலேயே நிலைத்திருக்கும். நிலைத்த எண்ணத்திலேயே தன் உணவை எடுத்துச் சென்றுவிடும். பறவையின் பார்வையின் தன்மையில் தான் சொல் உள்ளது.

நான் முதலில் சொல்லிய கருத்தின்படி எண்ணத்தையும் செயலையும் காட்டியது… பறவையின் நிலை எல்லாம் இதுவே தான்.

எண்ணம் சொல் செயல் எல்லாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதன் பொருள் இது தான். எண்ணம் சொல் செயல் என்பது புரிந்ததா…?

1.உன் எண்ணத்திற்குள்ளே நான் (ஈஸ்வரபட்டர்) இருப்பேன்.
2.சொல்லும் சொல்லாக நான் வந்திடுவேன்
3.செய்யும் செயல் தானாகவே வந்துவிடும்.
4.எண்ணத்தை உயர்த்திவிட்டால் சொல்லும் உயர்ந்துவிடும்… செயலும் ஓங்கிவிடும்.

எண்ணம் என்பது தியானத்திற்கு மட்டுமல்ல. நீ எடுக்கும் எந்த எண்ணத்திற்கும் எந்த நிலைக்கும் இதுவே தான்.

நாளெல்லாம் நல்ல நாள் தான்
நாளெல்லாம் நடத்திடலாம்
நாளைக் கடத்திட வேண்டாம்
நாளை நாளை என்று…!

அபிராமி (ஈஸ்வர) பட்டரும்… அந்தாதியும்

அபிராமி (ஈஸ்வர) பட்டரும்… அந்தாதியும்

 

அபிராமி அந்தாதி பாட்டு பாட வேண்டும் பாடலின் கருத்து புரிந்து இசையோடு பாடிடுவாய் கருத்துடனே பாட்டிசைப்பாய்.

“இடைச்சக்கரத்தினுள்ளே நான் இருப்பேன்…!” என்ற பாட்டைக் கேட்டிருப்பாய். பாட்டைப் பாடு… பிறகு சொல்கின்றேன். ஜெப நிலையில் ஜெபித்ததெல்லாம் உன் சக்கரத்தில் உள்ளது.

பெரும் கோயில்களில் எல்லாம் பார்…
1.எல்லாக் கோவில்களிலும் உலோகத்தினாலான சக்கரம் உண்டு.
2.அச்சக்கரம் கடவுளின் சிலைக்குப் பின் புறமாவது முன்புறமாவது இருக்கும்… அல்லது கடவுளின் பாதத்தில் இருக்கும்.

தெய்வம் என்பது நீங்கள் நினைக்கும் கல் சிலையைத் தான். சிலையின் கல் உருவத்தைப் பற்றி முதலிலேயே சொல்லிவிட்டேன்.

சிலையின் பாதத்தின் கீழே உள்ள சக்கரத்தில் சித்தனால் ஜெபித்த ஜெபமெல்லாம் அந்த உலோகத் தகடான சக்கரத்தில் பதிந்துள்ளது. அந்நிலையில் அதைப் பாதத்தில் வைத்து விட்டுப் பிறகு தான் சிலையை வைப்பார்கள்.

தெய்வத்தின் எதிரில் நின்று
1.நீ ஜெபிக்கும் ஒவ்வொரு நிலையும் அந்த உலோகத்தில் பதிகின்றது (கல்லான சிலையில் ஒன்றும் இல்லை).
2.நீ ஒலிக்கும் ஒலியெல்லாம் சக்கரத்தில் பதிகின்றது.
3.ஒலிக்கும் குரல் சக்கரத்திலே பதியும் பொழுது அந்தச் சித்தனால் ஒலித்த ஒலியும் உன் ஒலியும் கலக்கின்றது
4.அப்படிக் கலக்கின்ற போது அந்தச் சித்தனே வெளிவந்து உன்னுள்ளே புகுகின்றான்.

பழனியில் உள்ள முருகர் சிலையே உலோகம் தான். சிறு தகட்டில் ஜெபித்த ஜெபமே அவன்…! அவ்வுருவம் முழுவதும் போகனால் ஜெபித்த நிலை.

அந்த முருகனுக்கு மட்டும் எப்படி இவ்வளவு சக்தி வந்தது…? என்கின்றாய். அந்த முருகனின் உள் அர்த்தம் புரிந்ததா…?

நீங்கள் சக்கரம் வைத்து பூஜை செய்வதன் பொருள்… நீ இந்த இடத்தில் அமர்ந்து கொண்டு எந்தச் சொல் சொல்கிறாயோ எந்த நிலையில் மூச்சை இழுக்கின்றாயோ “அச்சொல் எல்லாம்… மூச்செல்லாம் என்னுள் வந்து ஐக்கியம் ஆகிறது…”

அதற்காகத்தான் அந்தாதியைப் படிக்கச் சொன்னது. படித்துச் சொன்னால் அதை நான் ஏற்பேன்.
1.நான் இயற்றிய அந்தாதியை நீ படித்தால் என் மனம் குளிர்ந்திடும்.
2.என் மனம் குளிர்ந்த நிலையில் உனக்கு அருள்வேன் எல்லாமே…!

சக்கரம் வைத்தால் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் எந்தச் சுத்தத்தை நான் கேட்டேன்…? “மனச் சுத்தம் இருந்தால்” என்னுள்ளே வந்திடலாம்.

போகன் நிலையைப் பார்த்தாயா…? சக்கரத்தின் தன்மையே முருகராக வடிவெடுத்துள்ளார். வடிவெடுத்த நிலையிலேயே காலமெல்லாம் அருள்கின்றார்.

நீ “முருகா…” என்று ஒலிக்கும் உணர்வுகள் அவருக்குள் பதிவாகின்றது. உன் மனதிலிருந்து செல்லும் ஒவ்வொரு சொல்லையும் அவர் பதிவு செய்து… உனக்கு அவர் அருளும் சொல் பலவாக வருகின்றது.

1.அந்த முருகன் சிலை இந்த உலகையே ஆட்டுவிக்கும் சிலை.
2.இவ்வுலகில் எந்த இடத்திலும் அச்சத்தின் சொரூபம் இல்லை.
3.அச்சக்தியின் ரூபம் எல்லாவற்றையும் உணர்ந்து அங்கு செல்பவனும் யாரும் இல்லை.

இவ்வளவு காலமும் நீங்கள் பழனிக்கு சென்றீர்கள்…! இந்த நிலை புரிந்ததா…?
1.குறைகளுடன் கோவிலுக்குச் செல்லாதீர்கள்
2.மன நிறைவுடன் சென்று உன் மனதை அவனிடம் தா… அவன் அருள்வான் எல்லாமே…!

அந்த முருகனின் சிலையின் தத்துவத்தைப் புரிந்து சிலர் தன் தொழிலுக்காகப் பயன்படுத்திக் கொள்ளுகின்றார்கள்… தொழிலுக்கு மட்டும் தான் பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.

ஆனால் அதை பெற்ற மனிதனுக்கும் அந்தத் தத்துவம் தெரியாது. நல் உணர்வாக அவன் பயன்படுத்தி இருந்தால் அவன் நிலையும் உயர்ந்திருக்கும்.

முதலில் அவன் நிலை நன்றாகத் தான் தெரிந்திருக்கும்… பிறகு அவன் நிலை என்ன என்று யாருக்காவது தெரியுமா…? முருகர் சிலையில் உள்ள தத்துவமே சாமி (ஞானகுரு) எழுதியுள்ள சக்கரத்தில் உள்ளது… அச்சிலையில்.

ஐவர் மலையில் உள்ள நிலைக்கும்… உன் ஜெப நிலைக்கும்… “உன் வீட்டில் உள்ள சக்கரத்திற்கும்” உள்ள தொடர்பு தெரிந்ததா…?
1.சக்கரத்திற்கு எதிரில் நீ அமர்ந்து என்ன ஜெபம் ஜெபிக்கின்றாயோ
2.அந்த ஜெபத்தின் அருளை நீ பெறுவாய்…! என்ற பொருளும் இதுவே.

ஐவர் மலையில் உள்ள நல்ல நிலையைப் பெற்றிட உன் ஜெப நிலையைக் கூட்டிக் கொள். சக்கரத்தின் முன் உணவு படைக்கச் சொன்னதன் நிலையில் நீ ஜெபிக்கும் பொழுது சக்கரத்திலிருந்து சித்தர் வெளிப்படுகின்றார்.

அதற்காகத்தான் ஆகாரம்…! ஆகாரம் எடுத்து அவர் புசித்துச் செல்வதில்லை ஆகாரத்தின் சுவையை அவர் எடுத்து மறு சுவையை உனக்கருள்வார்.

கடவுள் என்ன கேட்டாரா…? என்று சொல்ளும் வீண் வாக்குவாதம் எல்லாம் நமக்கு வேண்டாம். நீ வைக்கும் ஒரு துளி பாலையும் அவர் ஏற்கின்றார்.

ஏன் சக்கரத்தில் தான் கடவுள் வருவாரா…? படத்திலும் வேறு இடத்திலும் வரமாட்டாரா…! என்று நினைக்கலாம்.

முதலிலேயே உங்களுக்கு எல்லா நிலையும் புரிந்து இருக்கும்
1.கடவுள் என்பவர் எங்கே எப்படி இருக்கின்றார்…? எந்த நிலையில் உள்ளார்…? என்னும் நிலை எல்லாம் பல தடவை சொல்லிவிட்டேன்.
2.எல்லா இடத்திலும் இருக்கும் கடவுளை ஒருநிலைப்படுத்தவே இச்சக்கரம்.
3.கடவுளுக்கு அல்ல அந்த நிலை.
4.உன் மனதை ஒருநிலைப்படுத்தத்தான் சக்கரம்.

பாட்டை பாடச் சொன்ன உண்மையும் இப்போது புரிந்ததா…?

அபிராமி அந்தாதி பாடும் பொழுது அவருடைய சந்தோஷம் நிலைகொள்ளாமல் இருக்கின்றது சந்தோஷ நிலை பெற்றிடவே உங்களை எல்லாம் பாடச் சொல்வது… புரிந்து பாடுவாயாக…!

ஒலியை ஒளியாக்கு…! இன்றல்ல நாளை அல்ல என்றாவது ஒருநாள் பழனிக்குச் சென்றால் காலை உதய பூஜைக்குச் சென்று அமர்ந்து நீ ஜெபித்தால்… அந்த நிலையில் உனக்கு ஐவர் மலையின் விளக்கங்களை உன் உதயத்திற்குத் தருகின்றேன்.

அதிலிருந்து எல்லாம் உனக்கு தெரியும்… அவசரம் வேண்டாம் பெரும் பதட்டம் வேண்டாம்…! உன் ஜெப நிலையைக் கூட்டிக் கொள் என்பதின் ரகசியம் எல்லாம் இதுதான்.

சக்கரத்தின் தன்மையைச் சொல்வதும் இதற்காகத் தான்… முருகரைப் பற்றி விளக்கங்கள் சொன்னதும் இதற்காகத் தான்… விளக்கம் மட்டுமல்ல ரகசியமும் தான்.

முருகன் சிலையில் உள்ள தன்மை…. உண்மை தன்மை எல்லாம் புரிந்து விட்டதா…?

காட்சி:- முருகா முருகா சத்தம் கேட்கிறது… இங்கும் உள்ளேன் அங்கும் உள்ளேன் எங்கும் உள்ளேன் பாட்டு கைதட்டியபடி…! உட்கார்ந்து அந்த நோட்டை (குருநாதர் சொல்வதை எழுதிக் கொண்டிருக்கும்) எடுத்து படித்துக் கொண்டிருத்தல்.

உன் எழுத்தே உனக்குப் புரியவில்லை… உன் தலையெழுத்தை எழுதியவனைக் கேட்கின்றாயோ…? உன் நிலையை மாற்றிடவே இந்தப் பாடங்கள்.

1.நாளை முதல் இன்னும் துரிதமாகச் சொல்வேன்… என்னுடன் ஓடி வர நீயும் முயற்சி செய்.
2.முடியாது என்ற நிலை உனக்கு வேண்டாம் “முடித்திடுவேன்” என்று சொல்லைப் பகர்ந்திடப்பா.

என் தலையிலும் குட்டி விட்டார் என்று எண்ணாதே “உன்னுள்ளே நான் இருக்க உனக்கு ஏன் பயம்…?”

எழுதுவதற்கு மட்டு-ம் இந்தப் பாடம் அல்ல உன் நிலையைப் புரிந்து கொள்ளத்தான் இந்தப் பாடம்.