நஞ்சை ஒளியாக மாற்றிடும் மார்க்கத்தைத் தான் உங்களுக்குக் காட்டிக் கொண்டு வருகின்றோம் – ஞானகுரு

நஞ்சை ஒளியாக மாற்றிடும் மார்க்கத்தைத் தான் உங்களுக்குக் காட்டிக் கொண்டு வருகின்றோம் – ஞானகுரு

 

1.சூரியன் நஞ்சினைப் பிரிக்கின்றது
2.ஆனால் துருவ நட்சத்திரமோ நஞ்சினை ஒளியாக மாற்றுகின்றது.

சூரியன் தனது நிலைகளில் நஞ்சினைப் பிரித்து மற்றதுடன் மோதும் பொழுது தான் ஒளிக் கதிராக மின்னுகின்றது. நஞ்சின் தாக்குதலால் வெப்பத்தின் தணல் கூடி ஒளியின் தன்மையாக மாறுகின்றது.

ஆனால் மனிதனாகி அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆன பின் நஞ்சின் தன்மை தனக்குள் அருகில் வரும் பொழுது அதை ஒளியின் சிகரமாக மாற்றுகின்றான்.
1.அந்த அகஸ்தியனைப் போன்று நஞ்சினை அடக்கி ஒளியாக இணைத்து
2.ஒளியின் சிகரமாக மாற்றும் தன்மை நாமும் பெற வேண்டும்.

மனிதனாக ஆனவன் தான் இதை உருவாக்க முடியும். அதைத் தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்றும் முழு முதற் கடவுள் என்றும் காட்டுகின்றார்கள்.

ஆக… இந்த மனித உடல் பெற்ற பின் அருள் ஒளியினை உருவாக்கும் முழுமையான கடவுளாக நாம் ஆகின்றோம். அதன் வழியில்
1.மகா சாந்தம் என்ற நிலைகளில்
2.மகா என்று சர்வத்தையும் சாந்தப்படுத்தும் உணவுகளை நமக்குள் பெருக்கிடல் வேண்டும்.

நமக்குள் ஒன்றிணைந்து வாழும் இந்த உணர்வின் தன்மையை வளர்த்துக் கொண்டால் எந்த நஞ்சினையும் வென்றிடும் சக்தியாக… உள் நின்று நஞ்சினை ஒளியின் சிகரமாகக் கூட்டும் ஆற்றல் பெறுகின்றோம்.

உயிர் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக வளர்ந்து வந்ததைத் தான் விநாயகர் தத்துவத்தில் “முழு முதல் கடவுள்…” என்று காரணப் பெயரை வைத்தார்கள் ஞானிகள்.

ஆகவே அந்த அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் வாழ்வோம். நமக்குள் புகும் இருளை புகாது அதைத் தடுத்து நம்மைப் பாதுகாப்போம். அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்வோம்.

அனைவரும் மலரைப் போன்ற மணம் பெற… மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழத் தியானிப்போம்… தவமிருப்போம்.

ஒருநிலைப்படுத்துவது தான் மெய்ஞான விழிப்பு

ஒருநிலைப்படுத்துவது தான் மெய்ஞான விழிப்பு

 

1.கண் கொண்டு பார்த்தல் (காட்சிகளும் காட்சிப் புலனறிவும்)
2.நாசி கொண்டு சுவாசித்தல் (சுவாச ஓட்ட வாசனைகளை அறிந்திடும் அறிவு)
3.வாய் கொண்டு சுவைத்தல் (சுவை குண அறிவு செயல்பாட்டில் உணர்தல்)
4.செவிப்புலனறிவு (ஓசைகளின் தன்மைகள் தெளிதல்)
5.தொடு புலனறிவு (ஸ்பரிசித்தலில் உணர்வு கொண்டு அறிந்து கொள்ளுதல்) என்றிட்ட ஐந்து பஞ்சேந்திரியங்கள் மனித உடலுக்குள் செயல்படுகின்றன.

அவைகள் செயல்படும் நிலையில் புறத்திலிருந்து வரும் மோதல்கள்… அந்த அமில குணத்தன்மைகளை அவயங்கள் தத்தம் செயலுக்கு சரீரத்தின் கட்டளைக் கேந்திரமாகச் “சிரசின் உச்சிப் பகுதியில்…” செயல் கொண்டே உள்ளது.

ஆகவே அகச் செயலாகச் சுவாச ஓட்டங்களின் தொடருக்கு
1.நொடிக்கும் குறைவான கால ஓட்டமாகச் செயல் கொண்டு
2.சரீர இயக்கமே ஆத்ம ஒளியால் பகுத்தறிவு எனும் ஞான தீபமாகச் செயல் கொண்டு
3.அறிதல்… உணர்தல்… தெளிதல்… என்றிட்ட முத்தொடர் செயலில்
4.ஆக்கபூர்வமானவனாக நாம் ஆகுதலே மெய்ஞான விழிப்பு.

அந்த அகச் செயலில் எண்ணத்தின் கூர்மையை ஒரு நிலைப்படுத்தப்படும் பயிற்சி வழித் தொடர்பே தியானம் ஆகும்.

மனம் ஒருநிலைப்பட்டபின் தான் தியானம் என்றால்… எப்பொழுதப்பா உன் மனதை ஒருநிலைப்படுத்தப் போகின்றாய்…?

தியானத்தில் அமர்ந்தவுடன் வந்து வந்து மோதிடும் “வாழ்க்கைச் சாகர எண்ண நிலைவோட்ட அலைகள்” படிப்படியாக விலகி மனதின்கண் அமைதி கொள்ளவே இந்த எளிய தியானத்தைக் கொடுக்கின்றோம்.

நாங்கள் “ஆத்ம பலம் பெற்றிட வேண்டும் ஈஸ்வரா…” என்றே புருவ மத்தியில் எண்ணித் துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளியை ஈர்த்து எண்ணத்தின் வலுவைப் பெற்று விட்டால்
1.உயிராத்மாவின் பேரானந்த நிலையைச் சொல்லால் விளக்கிக் கூற முடியாது
2.“உணர்ந்தறியும் அனுபவ ஞான ஆனந்த நிலையே நித்திய சுபம்…!”

பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்ற அந்த ஒன்றை அடிப்படை ஆதாரமாக வைத்து வாழ்வோம்

பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்ற அந்த ஒன்றை அடிப்படை ஆதாரமாக வைத்து வாழ்வோம்

 

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் அனைவரும் இருளை அகற்றி ஒளியாக மாற்றிடும் அருள் மகரிஷிகளின் ஆற்றல்மிக்க சக்திகளை வளர்த்துப் பழகுதல் வேண்டும்.

கூட்டுத் தியானங்களின் மூலம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி தியானத்தில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று அனைவரும் சேர்ந்து வெளிப்படுத்தும் போது எல்லோருக்குள்ளும் அது ஓங்கி வளர்கின்றது.
1.இப்படி ஒருவருக்கொருவர் நாம் தொடர்பு கொண்டு பதிவான உணர்வுகளின் துணை கொண்டு
2.அடுத்து நாம் எங்கிருந்து தியானித்தாலும் அந்த அருள் உணர்வுகள் நமக்குள் ஒன்றாக இணைகிறது.

இப்படி வலுக் கொண்ட உணர்வின் துணை கொண்டு எல்லோரும் சேர்ந்து தியானித்து இந்த அருள் சக்திகளைப் பெருக்கி அதை நமக்குள் அடிக்கடி வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இது போன்று வளர்ந்து வந்தாலும் கூட… சில சந்தர்ப்பங்களில் குடும்பச் சூழ்நிலையின் காரணமாக வெறுப்பு வேதனை என்று ஏற்பட்டால் அதைக் கவர்ந்தால்… அது நாம் போகும் பாதையைத் தடைப்படுத்தும் நிலையாக வந்து விடுகின்றது.

1.தடைப்படுத்தும் நிலையாக வரும் பொழுதெல்லாம்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பருகி… தடைகளை நீக்கி
2.நம்முடன் இணைந்து வாழும் நிலைகளை வளர்த்து அருள் ஒளியின் உணர்வாக உருவாக்கி
3.அருள் ஒளியின் சுடராக மாற்றி அமைத்தல் வேண்டும்.

எத்தனையோ கோடிச் சரீரங்களில் நரகவேதனைப்படுத்தி ஒன்றுக்கு உணவாகி அதிலிருந்து மீண்டு… நஞ்சினை வென்றிடும்… வேதனையை அகற்றிடும்… சொர்க்க பூமியாகத் தான் இந்த மனித உடல் வளர்ந்து வந்துள்ளது.

நம் உயிரே சொர்க்கவாசலாக உள்ளது. சொர்க்கம் என்ற நிலையாக என்றும் எதனையுமே வென்றிடும் தன்மை பெற்று… அகண்ட அண்டத்தில் வரும் சக்திகளை ஒளியின் சுடராக மாற்றி அமைக்கும் வேகாநிலையை நாம் அடைய முடியும்.

நாம் எல்லோரும் ஒருங்கிணைந்து அந்த அருள் சக்தியைப் பெருகுதல் வேண்டும். ஒருங்கிணைந்து அந்தச் சக்திகளைச் சேர்த்தது தான் துருவ நட்சத்திரம்.

நாம் அனைவரும்… “அனைவரும் நலம் பெற வேண்டும்…” என்று தியானத்தின் மூலம் உயர்ந்த சக்திகளை வளர்க்க வளர்க்க… பகைமைகள் நமக்குள் சேராது நஞ்சினை வென்றிடும் ஆற்றல்களைப் பெறும் தகுதி பெறுகின்றோம்.

இந்த வாழ்க்கையில் பேரின்பத்தை நாம் வளர்த்தல் வேண்டும். பேரின்பப் பெரு வாழ்வு என்ற நிலையை உருவாக்குதல் வேண்டும். உடலை விட்டு அகன்ற பின் பெரு வாழ்வாக அமைகிறது.

ஆகவே… இந்த உடல் வாழ்க்கையில் மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் தெளிவாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.
1.இந்த உடல் நமக்கு சொந்தமல்ல… இந்த உடலை வைத்து அருள் ஒளியை நமக்குள் சொந்தமாக்குதல் வேண்டும்
2.ஒரு விளை நிலம் இருப்பினும் அதிலுள்ள மணலை நாம் உட்கொள்வதில்லை.
3.விதைகளை மண்ணிலே விதைத்து நமக்கு வேண்டியவைகளாக விளைய வைத்து உருவாக்குகின்றோம்
4.அதில் விளைந்ததைத்தான் சமைத்து உணவாக உட்கொள்கின்றோம்… உட்கொண்ட பின் உயிருடன் ஒன்றி வாழுகின்றோம்.

இதைப் போன்று தான் அருள் ஒளியின் உணர்வின் தன்மையை நமக்குள் விளைய வைத்து… அந்த ஒளியுடன் ஒன்றினால் அந்த உணர்வுக்குத் தக்க நாம் ஒளியின் சரீரம் பெறுவது உறுதி…!

ஆகவே…
1.பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்ற அந்த ஒன்றை அடிப்படை ஆதாரமாக வைத்து
2.இந்த வாழ்க்கையில் வரும் துன்பங்களை நமக்குள் அந்த உணர்ச்சிகளை ஊட்டாதபடி
3.அதைத் தடைப்படுத்த அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

இரவு படுக்கும் முன் செய்ய வேண்டிய முக்கியமான தியானப் பயிற்சி

இரவு படுக்கும் முன் செய்ய வேண்டிய முக்கியமான தியானப் பயிற்சி

 

ஒவ்வொரு நொடியிலும் மனிதனுக்குள் ஓடும் பலதரப்பட்ட எண்ணத்தின் சுவாசங்கள் வீரியமாகச் செயல்படும் தன்மைக்கு… “சங்கிலித் தொடர் போல் அந்த எண்ண ஓட்டமே…” ஒவ்வொரு நாளும் கொள்ளப்படும் செயலாக நிகழ்கிறது. (இது எல்லோருக்கும் தெரிந்தது தான் தெரியாதது இல்லை)

1.அவ்வாறு எடுக்கும் சுவாச ஓட்டத்தின் கனத்தினால்
2.மீண்டும் மீண்டும் அந்தச் சுவாச ஓட்டத்தின் வீரியம் கொண்ட எண்ணத்தின் பதிவு நிலையாகச் செயல் கொள்கிறது.
3.அதுவே “விதியாகவும்” மாறுகிறது.

வாழ்க்கையில் அன்றாட அலுவல்களில் பலரைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளில் அவர்களைப் பற்றிய எண்ணங்களை இந்த ஜீவ பிம்பச் சரீரத்தின் காந்த ஈர்ப்பினால் உடலுக்குள் ஈர்த்துக் கொண்டே தான் உள்ளோம்.

அதிலே எந்தெந்தக் குணத் தன்மைகளை ஈர்த்து நமக்குள் பதிவு செய்கின்றோமோ அந்தப் பதிவு நிலைக்கொத்த குணத் தன்மைகளுக்குத் தக்க ஏற்படுத்தும் சந்தர்ப்பங்களில் மீண்டும் மீண்டும் அதை எண்ணியே வலுக்கூட்டி ஆத்மாவும் சரீரமும் பாதிப்பு ஏற்படுத்திக் கொள்ளும் நிலை ஆகிறது.

அன்றாடம் உடலில் உள்ள கழிவுகளை நீக்கிச் சரீரத்தைத் தூய்மைப்படுத்திடும் செயல் போன்று
1.நாம் எடுத்துக் கொண்ட எண்ணத்தின் தன்மைகள்… உணர்வுகள் மாற்றம் கொள்ளும் கால கட்டத்தில் எல்லாம்
2.எண்ணத்தை வானை நோக்கி உயர்வாகச் செலுத்தி
3.ஜீவ காந்தச் சரீரம் கொண்டு உயர் காந்த மின் அணுக்களை ஈர்த்துக் கொண்டு
4.சுவாச கதியில் உணர்வுகள் மாற்றம் கொள்ளும் செயலின் வீரியத்தை
5.தியானத்தில் ஈர்த்துக் கொள்ளும் நற்சுவாச அலையால் சமன்படுத்தி மனதின் திறத்தைக் காத்திடல் வேண்டும்.
6.அதனால் சரீரமும் பாதிப்படையாது… பல நன்மைகளும் ஏற்படுமப்பா…!

புலரும் காலைப் பொழுது முதற் கொண்டு இரவு உறங்கும் காலம் வரை சரீரத்தில் ஈர்த்துக் கொண்ட அணுக்களின் குணத் தன்மைகளில்…
1.ஈர்க்கப்பட்ட அந்த அணுக்கள் அனைத்தும்
2.உறங்கும் காலப் பொழுதில் மீண்டும் சுவாசத்தின் நிலையில் ஜீவன் கொண்டிடும் செயல் சூட்சமமாக நிகழப் பெறும்.

அதிலே நல்லதும் உண்டு… கெட்டதும் உண்டு…! ஆனால் கெட்டது ஜீவன் பெறாதபடி அதனின் வினைச் செயலை மாற்றி… நல்லாக்கம் பெற்றே வலுவாக்கிடும் நிலையை “உறங்கும் முன் எடுக்கும் தியானத்தின் தொடரில் கொண்டு வர வேண்டும்…!”

1.எங்கள் உடலுக்குள் இருக்கும் அத்தனை உயிரணுக்களும்
2.ஒளி அணுக்களாகச் சக்தி பெற்றிட வேண்டும் ஈஸ்வரா…! என்ற எண்ணம் கொண்டு
3.உயர் மின் காந்த அணுக்களை ஈர்த்துப் பல முறை உடலுக்குள் செலுத்திக் கொள்ள வேண்டும். (படுக்கும் முன்)

காலையிலிருந்து இரவு வரை நம் சுவாசத்தில் ஈர்க்கப்பட்ட அந்த மாற்று நிலை கொண்ட உயிரணுக்களும்
1.இந்தச் சரீரத்தினுள் நற்சக்தி பெற்று
2.நல் அணுக்களாக மாற்றம் கொள்ள வேண்டும் என்ற
3.உயர்ந்த எண்ணம் கொண்டு ஆத்ம சுத்தி செய்து உறங்கினால்
4.இரவு முழுவதும் வலுக் கொண்டு ஓடும் இந்தத் தியான நினைவோட்டத்தால்
5.உயர் ஞானம் சித்திக்கும் செயலாக நல் நிலை பெற்றிட முடியும்.

அகஸ்தியனைப் போன்று நாமும் “அனைத்தையும் ஒளியாக மாற்றும் திறன் பெற வேண்டும்…”

அகஸ்தியனைப் போன்று நாமும் “அனைத்தையும் ஒளியாக மாற்றும் திறன் பெற வேண்டும்…”

 

1.அகஸ்தியன் தன் வாழ்க்கையில் கண்டுணர்ந்த பேருண்மைகளைத் தன் மனைவிக்குப் பாய்ச்சி
2.உணர்வை இரண்டறக் கலந்து ஒரு அணுவின் தன்மை உருவாக்கி அந்த உணர்வின் தன்மை மாற்றமடைந்து
3.விண்ணுலகிலிருந்து வரும் நஞ்சினை அடக்கி உணர்வை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றவன்.

எதை உற்று நோக்கி உணர்வின் தன்மை தனக்குள் கவர்ந்து… எதைப் பெற வேண்டும் என்று தன் உடலிலே உருவாக்கினார்களோ அவர்கள் இரு உயிரும் ஒன்றாகி “துருவ நட்சத்திரமாக” இன்றும் உள்ளார்கள்.

சூரியன் தனக்குள் உருவான பாதரசத்தைக் கொண்டு புறத்திலிருந்து வரும் விஷத்தைத் தாக்கி அதைப் பிரித்து விடுகிறது. அதனால் தான் அதைப் பிரிக்கப்படும் போது ஒளிக்கதிர்களாகப் பரவுகிறது.

எந்த விஷத்தின் தன்மை தனக்குள் மோதுகின்றதோ நட்சத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி உணர்வின் தன்மை மின்னலாக வருகிறதோ அதைப் போல் பிரித்தபின் ஒளிக்கதிர்களாகப் பரவுகிறது… ஒளி அலைகளாக நம் பிரபஞ்சத்திற்குள் மாறுகிறது. இது சூரியனின் இயக்க நிலை.

அதைப் போன்று இந்தப் பிரபஞ்சத்திற்குள் வரும் விஷத்தின் தன்மைகளைத் தனக்குள் இணைத்து… விஷத்தின் தன்மையைப் பிரித்து விட்டு ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றான் அகஸ்தியன்… மனிதனாக ஆன பின் அது முழுமையான கடவுளாகின்றது.
1.ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக நிலை கொண்டு
2.என்றும் பதினாறாக பிறவி இல்லா நிலை அடைந்து வாழ்ந்து கொண்டுள்ளான்… வளர்ந்து கொண்டுள்ளான்.

அதே சமயத்தில் அகண்ட அண்டத்தில் வெளிப்படும் எத்தகைய கடும் நஞ்சாக இருந்தாலும்… அதையும் அடக்கி ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றான்… ஏகாந்த நிலை கொண்டு வாழ்கின்றான்.

அவனைப் பின்பற்றிச் சென்ற அனைவரும் அதே வழியில் ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக ஒளியாக மாற்றிச் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்கின்றார்கள்.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தச் சூரியனே அழிந்தாலும்… இதன் எதிர்காலம்…! நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து மற்ற விஷத்தன்மை அதிகமாகக் கவர்ந்து எடுத்து விட்டால் அதன் உணர்வின் தன்மை (பிரபஞ்சம்) மாற்றம் அடைகின்றது.

ஆனால் மற்ற நட்சத்திர மண்டலங்களின் சக்திகளை எடுத்து
1.நம் பூமிக்குள் பல பொருள்களுடன் சேர்த்து இணைத்துப் பல பொருளாக உருவாக்கும் நிலையும்
2.கதிரியக்கப் பொறிகள் கடலில் பட்ட பின் மணலாக மாறுவதும்
3.அதே சமயம் இந்த கதிரியக்கப் பொறிகளை அடக்கச் செய்யும் அந்த மோதலில்
4.நமக்குண்டான வெப்பத்தை… பூமியில் சமப்படுத்தும் உணர்வின் நிலைகளை உருவாக்கும் தன்மை பெற்றது 27 நட்சத்திரங்களின் ஆற்றல்கள்.

ஒவ்வொரு செடியிலும் இந்த 27 நட்சத்திரங்களின் உணர்வுகள் கலவை கலந்துள்ளது.
1.அந்த உணர்வின் பொறிகள் வரப்படும் பொழுதுதான் செடிக்குள் வெப்பமாகி
2.தன் இனம் எதுவோ புவியின் ஈர்ப்பால் தன் இனத்தின் உணர்வை இழுத்துக் கவர்ந்து செடியாக விளைகின்றது.

இது எல்லாம் இயற்கை நியதிகள்…. அன்று அகஸ்தியன் கண்டது.

சாமி (ஞானகுரு) சொல்கின்றார்… எனக்கு ஒன்றும் தெரியவில்லையே…! என்று இதை விட்டு விடாதீர்கள்.

1.எல்லாம் தெரிந்து கொண்டு யாரும் வருவதில்லை… எல்லாம் தெரிந்து கொண்டு நான் இதைச் சொல்ல வரவில்லை
2.குரு காட்டிய உணர்வு கொண்டு தெரிந்து கொண்டேன் அவர் உணர்வைத் தொடர் கொள்கின்றேன்
3.எனக்குள் இருளை அகற்றும் அந்த உணர்வின் ஒலிகளை எழுப்புகின்றேன்
4.உங்கள் செவிகளில் படுகின்றது… அதை நுகர்கின்றீர்கள்… உங்கள் இரத்தங்களிலே கலக்கின்றது
5.மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அகஸ்தியன் கண்டதை நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம்
6.அவன் அடைந்த எல்லையை நீங்களும் அடையலாம்.

மனிதன் தனக்குத் தானே விதித்துக் கொள்ளும் தண்டனை

மனிதன் தனக்குத் தானே விதித்துக் கொள்ளும் தண்டனை

 

வாழ்க்கை நடைமுறையில் மனிதன் கொள்கின்ற எண்ணத்தின் குணங்களாக
1.மோகம் (மயக்கம் – மருள்)
2.கோபம் (அவசரம் – ஆத்திரம் – ஆவேசம்)
3.காமம் (அதி ஆசைகள் – ஏக்கம்)
4.வெறி (மதம் – செருக்கு)
5.பொறாமை (வெறுப்பு – விரக்தி – குறுகிய மனம்)
6.அதி பயம் (கலக்கம்) போன்ற இந்த ஆறு குணங்களும் இடும்பச் சித்தன் காட்டிய தீதெண்ண குணங்கள்.

இந்தக் குண எண்ண ஓட்டங்களால் மனிதனின் நினைவுகள் அதிலே சிக்கப்பட்டு அந்தச் சுவாசமே “கனம் கொண்டதாக…” ஈர்க்கப்படுகின்றது.

அந்தக் கனமான சுவாசத்தின் அலைகள் சரீரத்தினுள் இரத்த ஓட்ட நாளங்களில் செயல் கொள்ளும் சுவாச நாடிகளின் வழியே ஓடி சுவாச நாடிகளின் முக்கிய கேந்திரங்களாக அந்தந்த இடங்களில் அமையப் பெற்ற மூலம்… மூலாதாரம்…. நாபி… இருதயம்… கண்டம்… நெற்றி… தலையின் உச்சிப் பகுதி… முதலிய அமைப்புகளிலும் ஓடுகின்றது.

1.சரீரத்தில் ஈர்க்கப்படும் இத்தகைய உணர்வுகள் இடும்ப குண வசமாக மனிதனுக்குள் வந்து
2.அந்தந்த எண்ணத்தின் தொடருக்கு நாடிகளில் ஓடிடும் மூச்சலைகள் இரத்த நாளங்களில் ஓடிடும் செயலில்
3.சரீர அவயங்களில் தன் தன் இயக்கத்தில் (நாடிகளில்) செயல்படும் நிலையே
4.அதி தீவிரச் செயல் நிகழ்வாக சரீர இயக்கத்தில் செயல்பட்டு
5.அந்தத் தீதெண்ண குணங்களின் கனம் மிக்க சுவாச ஓட்டத்தில் ஏற்படுவதே உடல் நோய்கள்.

(1). இருதய வலி:-
சுவாச ஓட்டம் சரீரத்திற்குள் சென்று வெளி வரும் செயலில் இருதயப் பகுதியில் இருந்து ஓடிடும் தாய் மூச்சு நாடி நாபிப் பகுதியில் நீரமிலச் சக்தியுடன் இணைந்து செயல்படுகின்ற செயலில் கோபத்தின் கனம் மிக்க சுவாச ஓட்டத்தால் என்ன ஆகிறது…?

அந்தத் தாய் மூச்சு தாக்கப்பட்டு அதனுடன் இணைந்த மார்பு நாடியின் செயலுக்கும் தடை ஏற்படுத்தும் பொழுது உண்டாவதே இருதய வலி.

(2). வாயு… பித்தம்… மன நோய்:-
குறுகிய மன நிலை… மருள்… பொறாமை… ஏக்கம்… உள்ளிட்ட கனம் கொண்ட சுவாசத்தின் தன்மையால் நீரமில சக்தி கொண்டிட்ட நாபி நாடியின் செயலுக்குத் தடை ஏற்படுகிறது.

அதே போல் இடுப்பு எலும்பும் கால் எலும்பும் இணையும் இடத்தில் ஓர் சூட்சம வாயு வெளிப்பட்டு மூல அக்கினியில் கலக்கின்றது.

1.மூல அக்கினியில் கலந்த அந்த வாயு
2.மூலத்திலிருந்து கிளம்பி மூல நாடியின் வழி ஓடி நாபி நாடியைத் தாக்கிடும் செயலில்
3.சரீரத்தில் வாயு பித்தம் மற்றும் மன நோய் ஏற்படும் நிலைகளை உண்டாக்கி விடுகிறது.

(3). உடல் உஷ்ணம்… தோல் வியாதி:-
மோகம்… செருக்கு… அதி ஆசைகள்… என்ற எண்ண ஓட்டத்தில் வரும் சுவாசத்தின் மூச்சலைகள் மூலாதாரம் மூலம் இந்த இரு நாடிகளில் தாக்கப்பட்டு அதி உஷ்ணம் தோல் வியாதிகள் மற்றும் உயிர் நிலையை ஜீரணிக்கச் செய்யும் இரத்தம் சிலந்தி நோய்களும் வரக் காரணமாகின்றது.

கண்ட நாடி பாதிக்கப்படும் பொழுது அறிவின் ஆற்றல் செயல்படாதபடி பிரமை பிடித்த நிலையும் ஊமைத் தன்மையும் மற்றும் காதுகேளாச் செயலும் ஏற்படுகிறது.

இந்த நோய்களும் இவைகளின் கிளைகளாகப் பல்கிப் பெருகும் ஏனைய நோய் நொடிகளும்
1.தான் எடுத்துக் கொண்ட குணத்தின் வீரியத் தன்மைகளால்
2.”மனிதன் தனக்குத் தானே விதித்துக் கொள்ளும் தண்டனைகள் தான்…!”

கண்டத்தின் செயலையும் தாண்டிச் சிரசின் பகுதியில் நெற்றியில் ஓடிடும் நாடிகள் பாதிக்கச் செய்யும் அதி தீவிரச் சிந்தனைகளாலும்… திடீரென ஏற்படும் அதிர்ச்சிகளின் செயலினால் உண்டாகும் பயத்தினாலும் மனிதனுடைய சித்தம் கலங்கிப் பித்தனாகவே (பைத்தியம்) மாற்றிவிடும்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல…!
1.நல் எண்ணக் குணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து
2.சுவாச நிலையைச் சீராக்கும் முயற்சியில் மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் எடுத்து
3.உயரிய சுவாசமாக.. அருள் மணங்களாக.. அந்த மூச்சலைகளை நாடிகளின் கேந்திரங்களுக்குள் செலுத்தினால்
4.சரீர சுத்தி கிடைக்கும்… அதே போல் உயிரான்ம சக்தியும் சுயப்பிரகாச நிலை (ஒளி நிலை) அடையும்.

மனதை நாம் நொறுங்கவிடக் கூடாது… மற்றவர் மனதை நொறுக்கவும் கூடாது

மனதை நாம் நொறுங்கவிடக் கூடாது… மற்றவர் மனதை நொறுக்கவும் கூடாது

 

உதாரணமாக… கண்ணாடியில் எழுத்துக்களை எழுதும் பொழுது பக்குவமாகச் செயல்படுத்தவில்லை என்றால் கண்ணாடி உடைந்துவிடும். நமது மனதும் ஒரு கண்ணாடி போன்றது தான்…!

1.நமக்கு அனைத்துமே தெரிந்திருக்கலாம்
2.இருந்தாலும் அடுத்தவரிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி சமமாகப் பதிவாக்கவில்லை என்றால் அவரின் மனம் நொறுங்கிவிடும்.

“நன்மையாகவே இருந்தாலும்” அழுத்தத்தின் தன்மை கொண்டு பக்குவம் தவறி மற்றவர்களுக்குச் சொல்லால் சொல்லப்படும் போது மனது கண்ணாடி போன்று உடைந்து விடுகிறது.

மனம் உடைந்து விட்டால் திரும்பச் சரி செய்வதே கடினம். பக்குவ நிலைகளை இழந்தால் நம் மனம் நொறுங்கி விடுகின்றது ஆகவே அதைப் போன்று சிதறுண்டு போகாதபடி பக்குவ நிலைகள் கொண்டு நாம் வாழ்தல் வேண்டும்.

1.காரியம் வெற்றி பெற வேண்டும் என்று அழுத்தத்தின் தன்மை கொண்டு
2.கோப உணர்வையோ வேக உணர்வையோ எடுத்தால் சாந்த உணர்வுகள் சுக்கு நூறாகத் தெறித்து விடுகின்றது.
3.அன்பு கொண்டு அரவணைக்கும் மற்றவர்களின் நல்ல மனதையும் நமது சொல் சிதறச் செய்து விடுகின்றது.

வாழ்க்கையில் பரிபக்குவம் கொண்டு வாழ வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

அருள் வழியைப் பெறுதல் வேண்டும். இருளை அகற்றிடும் அருள் ஞானம் பெறுதல் வேண்டும்.

நம் குரு காட்டிய வழியினை வெறும் “சொல்லால் மட்டும் சொல்லிவிட்டுப் போகாதபடி…” காலத்தை அறிந்து பக்குவ நிலை கொண்டு நாம் செயல்பட வேண்டும்.

1.அருள் ஒளியின் உணர்வை நாம் நுகர்ந்தால் அந்தப் பக்குவம் தன்னாலே வரும்
2.அருள் சக்திகளை நுகர மறந்தால் பக்குவம் தவறி விடுகின்றது.

பலகாரம் செய்கிறோம் என்றால் அதிலே எண்ணை காயும் பருவத்தை அறிந்து எந்தப் பொருளை இணைக்கின்றோமோ அதற்குத் தக்க அதிலே சுவையின் தன்மை வருகின்றது.

வடையைச் சுடுகிறோம் என்றால் எண்ணை காய்ந்திருக்க வேண்டும் அது காய்ந்திருக்கின்றதா…? என்றும் நாம் முதலில் சரி பார்த்தல் வேண்டும்.

பார்த்தபின் மாவைத் தட்டிப் போட்டால் வடை சுவையாக இருக்கும். என்னை காயாதபடி வடையைச் சுட்டால் எனண்ணையை அதிகமாக ஈர்த்துவிடும்… சுவை கெட்டுவிடும்.

1.ஆகவே அடுத்தவரிடம் நாம் பேசும் பொழுது பக்குவம் பார்த்துச் சொன்னோம் என்றால்
2.இணைந்து வாழும் தன்மையும் அவர்களைத் திருத்தும் நிலையும் தன்னுடன் அரவணைக்கும் தன்மையும் வருகின்றது.

அதைத் தான் இராமன் அம்பை எய்தான் என்றால் அதைத் திரும்ப வாங்கிக் கொள்வான் என்று சொல்வது.

1.நாம் சொல்லும் உணர்வுகள் எதுவோ… அதுவே பதிலாக நமக்குள் வரும்.
2.ஒன்றி வாழ்வதும்… இணைந்து வாழ்வதும்… பிரிந்து வாழ்வதும்… எல்லாமே நாம் வெளிப்படுத்தும் சொல்லின் இணக்கத்திற்குள் தான் உண்டு.
3.நான் உங்களை மகிழச் செய்யும் நிலைகள் கொண்டு வந்தால்… அதே மகிழ்ச்சி என்ற நிலைகளை எனக்குக் கொடுக்கின்றீர்கள்.

ஆகவே அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் பாய்ச்சினோம் என்றால் கல்யாணராமன் ஆகின்றோம்.

நீங்கள் மகிழ வேண்டுமென்ற எண்ணம் கொண்டு நான் சொன்னால் உங்களுடைய உணர்வு எனக்குள் இணைந்து வாழும் தன்மையாக வருகின்றது. என் சொல்லும் உங்களுடன் இணைந்து வாழ்கின்றது. மகிழ்ச்சி பெறும் தன்மை கொண்டு மகிழச் செய்யும் உணர்ச்சியாக இயக்குகிறது.

எண்ணங்களின் இணக்கமும்… எண்ணத்தின் உணர்ச்சியும்… நமக்குள் எவ்வாறு இயக்குகின்றது…? என்று எண்ணத்தால் இயக்கும் நிலைகளை விஷ்ணுவின் மறு அவதாரம் இராமன் என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

வெப்பத்தின் உணர்வு கொண்டு ஒன்றுடன் ஒன்று இணைந்து உணர்வின் உணர்ச்சிகளை ஊட்டும் நிலையாக அது எவ்வாறு இயக்குகிறது…? என்று சூரியனின் இயக்கத் தொடர்களைக் காட்டி உணர்வின் இயக்கங்களை நமக்கு ஞானிகள் காட்டினார்கள்.

உணர்வின் இயக்கம் தனக்குள் வலுவாகப் படும்பொழுது உணர்த்த வேண்டும்… உணர வேண்டும்… பார்க்க வேண்டும்… என்ற நிலையாக “எண்ணத்தால் தான் கண்கள் உருவானது…” என்று தெளிவாகக் காட்டுகின்றனர்.

ஞானிகள் நமக்குக் காட்டிய நிலைகளை எல்லாம் நாம் தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கையாக வாழும் அருள் சக்தி பெற வேண்டும்.

நீரைக் குடித்துத் திகட்டலை அகற்றுவது போல்… “மகரிஷிகள் உணர்வைப் பருகி… மனதை அமைதிப்படுத்த வேண்டும்”

நீரைக் குடித்துத் திகட்டலை அகற்றுவது போல்… “மகரிஷிகள் உணர்வைப் பருகி… மனதை அமைதிப்படுத்த வேண்டும்”

 

அறுசுவை உணவுகள் உண்டிடும் காலத்தே உட்கொள்ளும் பொருள்களின் சுவைகள் அது காரமோ… புளிப்போ… உவர்ப்போ.. இனிப்போ.. துவர்ப்போ.. கையிப்போ..! எந்தச் சுவை ஆகினும் அந்தச் சுவைகளின் குணங்களின் கன பரிமாண அடர்வின் தொகுப்பில் திகட்டல் ஏற்பட்டால் என்ன செய்கிறோம்..?

உடனே நீரைத் தான் தேடிச் சென்று குடிக்கின்றோம். நீரை உட்கொண்டு அந்தச் சுவைகளைச் சமன்படுத்துதல் போல் ஜீவ காந்த சரீரம் கொண்டிடும் உணர்வில் கனமான சுவாச அலைகளை நீக்கிட என்ன செய்ய வேண்டும்…?

1.அந்தச் சுவைகளுக்கெல்லாம் வீரியமான உயர்வெண்ண மின் காந்த அலைகளை
2.மகரிஷிகளை எண்ணி ஈர்த்திடும் செயலில்
3.நம் சுவாச ஓட்டம் அமைதி கொண்டு நம்முடைய உணர்வின் குணங்களும் சமன் கொள்ளும்
4.நம் சுவாசமும் நாடியும் சீராகும்.

சுலபமாகப் பெற்று உயர்ந்திடும் இந்தத் தியானத்தின் வழியில் செயல்படுத்தும் “மனத்தின் திறன்” என்பதெல்லாம் அவரவர்களின் எண்ணத்திற்கொப்பத்தான் கொள்ள முடிந்திடும்.

தான் கைக்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும்… காரியமாற்றும் நிலையிலும்…
1.தன் ஆத்ம உயர்வுக்காக வேண்டி
2.எண்ணிச் சுவாசித்திடும் பக்குவம் தானப்பா ஆத்ம சுத்தி என்பது.

சரீர வாழ்க்கையில் சுவாச ஓட்டத்தின் செயலில் மனிதன் ஒவ்வொரு நிமிடத்திலும் எடுக்கும் உணர்வுகளின் வீரியத்தால் நமக்குள் மாற்றம் கொள்ளச் செய்யும் செயல்களாக பயம்… கோபம்… மோகம்… ஆவேசம்… ஆத்திரம்… பழி…. ஆகிய இந்தக் குணங்களின் மோதல்களால் முதலில் பாதிக்கப்படுவது சரீரம் தானப்பா…!

அது எப்படி என்றால்…
1.சுவாச ஓட்டங்கள் நாடிகளின் வழியாக ஓடிச் செயல்படும் செயலில்
2.சிறுகச் சிறுகக் கூட்டிக் கொள்ளும் அந்த உணர்வுகளின் வலுவினால்
3.இரத்த நாளங்கள் குழைவு கொண்டு
4.நரம்பு ஓட்டங்களில் தளர்வு பெற்று
5.எலும்புகளின் ஊண் ஒளி குறைவுபட்டுத் தளர்வுறும்.

பக்குவமாக அந்தக் குணங்களை விலக்கிக் கொண்டு நல் நிலை பெறுவதற்கே இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதமப்பா…! அதனால் சரீர சுத்தியும் கிடைக்குமப்பா…!

திடுக்… திடுக்… என்று பயமும் பதட்டமும் நமக்கு வரக் காரணம் என்ன…?

திடுக்… திடுக்… என்று பயமும் பதட்டமும் நமக்கு வரக் காரணம் என்ன…?

 

1.கண்ணின் கருவிழிக்குப் பேர் “ருக்மணி (படமாக்குவது)” என்றும்
2.கண்ணின் காந்தப் புலனறிவுக்குப் பேர் “சத்தியபாமா (உண்மையை உணர்த்துவது)” என்றும் ஞானிகள் வைத்துள்ளார்கள்.
3.அந்த இரு சக்திகளையும் சேர்த்துத் தான் “கண்ணன்” என்றும் காரணப் பெயர் வைத்தனர்.

உதாரணமாக நாம் ரோட்டிலே செல்கின்றோம். எதிரிலே ஒரு பஸ் வேகமாக வருகின்றது… நம் கண்களின் கருவிழி அதை நம் உடலில் பதிவாக்குகின்றது.

நம் மீது மோதும் நிலைகள் கொண்டு வருவதை அந்த உணர்வலைகளைக் கவர்ந்து உயிருடன் இயக்குகின்றது. அப்போது “பஸ் நம் மீது மோதி விடுமோ…!” என்ற அச்சத்தை ஏற்படுத்தி விடுகின்றது.
1.அதனின்று விலகிச் செல்ல கண்கள் நமக்குப் பயன்படுகின்றது.
2.விபத்து ஏற்படாமல் அந்த நேரத்தில் காப்பது நமது கண்களே.

ஆகவே கண்ணன்… கண்கள் நம்மை வழி நடத்துகின்றது. தீமையான உணர்வுகளைக் கண்டபின் அந்தத் தீமையிலிருந்து விடுபட விபத்துகள் வரும் என்று கண்ணின் காந்தப் புலனறிவு கவர்ந்து விபத்திலிருந்து நம்மைக் காக்கின்றது.

அப்படி விபத்திலிருந்து காத்தாலும் பஸ்ஸின் வேகத்தைக் கண்டு அந்த அச்ச உணர்வு உயிரிலே பட்டு வேகமாகப் படும் பொழுது “பயத்தை ஊட்டும் அதிர்வுகள்…” ஏற்படுகின்றது.

1.கண்கள் அந்த உண்மையை உணர்த்தினாலும்… நம்மைக் காத்தாலும்
2.நாம் நுகர்ந்த பயமான உணர்வை உயிர் இயக்கி உடலைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றாலும்
3.நுகர்ந்த பயமுறுத்தும் உணர்வை ஓ…ம் நமச்சிவாய… என்று ஜீவ அணுவாக… நம் உடலாக மாற்றி விடுகின்றது.

ஒரு இடத்தில் இருவர் சண்டை இடுகின்றனர்… கடுமையாக மோதுகின்றனர். பயங்கரச் சொல்களையும் விபரீதப் பேச்சுகளையும் பேசுகின்றனர்.

நாம் அதைப் பார்க்க நேர்ந்தால் கண்ணின் கருவிழி அதைப் பதிவாக்குகின்றது. அவர்கள் செயல்களை உற்றுப் பார்த்துச் சண்டையிடும் உணர்வின் தன்மை நுகரச் செய்கின்றது.

அவர்கள் தவறு செய்கின்றனர்… பயங்கரமாக மோதிக் கொள்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம்.
1.நாம் நுகர்ந்ததைக் கண் உயிருடன் இணையச் செய்கின்றது
2.உயிரோ அந்த உணர்வினை ஓ…ம் நமச்சிவாய… என்று ஜீவ அணுவாக உடலாக மாற்றி விடுகின்றது.

இது எல்லாம்… நாம் தவறு செய்யவில்லை என்று இருந்தாலும்
1.தவறு செய்பவருடைய நிலைகளை நம் கண்கள் உணர்த்துகின்றது.
2.ஆனால் பதிவாக்கிய பின் உயிரோ அதை உடலாக மாற்றி விடுகின்றது.

அச்சுறுத்தும் உணர்வு உடலுக்குள் அணுக்களாக மாறிவிட்டால் அந்த பயமுறுத்தும் உணர்வைச் சுவாசிக்கும்போது “உயிரிலே படும்போதெல்லாம்” நாமும் பயந்து அதற்குத் தக்கவாறு வாழ்க்கை அங்கே நடக்க நேர்கின்றது

பயமுறுத்தும் உணர்வுகள் அதிகமாகி அந்த அணுக்கள் பெருகத் தொடங்கினால்…
1.நம்மை அறியாமலே அடிக்கடி பதட்டமடையும் அல்லது நடுக்கம் அடையும் உணர்ச்சிகளைத் தோற்றுவிக்கும்.
2.ஒரு காரியத்தையோ தொழிலையோ செய்ய வேண்டும் என்று வலுவாக எண்ணினாலே பதட்டமும் பயமும் வரும்… மன உறுதி இழக்க நேரும்.

அதனால்… சோர்வும் சஞ்சலமும் அடைந்து “என்னால் முடியவில்லையே…” என்று வேதனைப்படும் பொழுது – வேதனை என்பது விஷம்…! நாம் எண்ணும் உணர்வுகள் அனைத்தையும் உயிர் இந்த உடலில் விஷமான அணுவாக மாற்றி விடுகின்றது.

அதனால் தான் “நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்கப்பிள்ளை” என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

நாம் எதையெல்லாம் எண்ணிச் சுவாசிக்கின்றோமோ அதனின் உணர்வினை உணர்த்தினாலும் அதனதன் அணுவாக உருவாகித் தன் இனத்தைப் பெருக்கும் சக்தி பெறுகின்றது.

நாம் தவறு செய்யாமலேயே பல நிலைகள் இப்படி வருகின்றது.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையில் பல கோடிச் சரீரரங்களில் தன்னைக் காட்டிலும் வலுவான மிருகங்களின் உணர்வுகளை எடுத்து ஒவ்வொன்றில் இருந்தும் பாதுகாப்பான உணர்வுகளை எடுத்துத் தப்பிடும் உணர்வுகளை எடுத்துத் தான் மனிதனாக வந்துள்ளோம்.

அதாவது வலுவான உணர்வை நுகர்ந்து நுகர்ந்து தான் பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து… இன்று வந்துள்ளோம்..

முதலிலே சொன்ன மாதிரி இன்றைய மனித வாழ்க்கையில் பயமான உணர்வுகளையோ… சண்டையிட்டோர் உணர்வுகளையோ… அல்லது நோயாளியின் உணர்வுகளையோ எடுக்க நேரும் போதெல்லாம்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் கண்ணின் நினைவைச் செலுத்தி
2.அதிலிருந்து வரும் உணர்வுகளை உயிர் வழியாக நுகர்ந்து
3.நம் உடல் முழுவதும் பரப்பச் செய்ய வேண்டும்.

காரணம் அந்தத் துருவ நட்சத்திரம் நஞ்சினை வென்றது… உணர்வினை ஒளியாக மாற்றியது. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை உடலுக்குள் செலுத்திப் பழக வேண்டும்.

தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் அதிலே இரண்டறக் கலந்த செம்பு பித்தளையும் ஆவியாக மாறித் தங்கம் பரிசுத்தமாவது போன்று
1.துன்பப்படுத்தும் உணர்வுகளை நம் கண் கவர்ந்தாலும்
2.அந்த உண்மைகளை உணர்த்தினாலும்
3.அதிலிருந்து விலகிச் சென்றாலும்
4.நுகர்ந்த உணர்வு நம் உடலுக்குள் ஜீவ அணுவாக மாறுவதற்கு முன்
5.துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கொண்டு நாம் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

விபத்துக்களோ அல்லது அது போன்ற அதிர்ச்சியான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டாலோ அந்தக் காலங்களில் எல்லாம் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று பல முறை எண்ணி ஏங்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்திரத்தின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும். பயமான உணர்வலைகள் நீங்க வேண்டும்… என்னை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்… நாங்கள் மன பலம் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணினால் நம் எண்ணத்தை வலுவாக்கும். அனுபவத்தில் பார்க்கலாம்…!

நெஞ்சுக் குழியில் இருக்கும் “தாய் மூச்சு நாடி”

நெஞ்சுக் குழியில் இருக்கும் “தாய் மூச்சு நாடி”

 

கோப குணத்தின் உந்துதலால் அந்த நேரத்தில் நாம் ஈர்த்துக் கொள்ளும் சுவாசமே கனம் கொண்டதாக மாறுகின்றது. கோப குணத்தின் வீரியம் எத்தகையதோ அதற்கேற்றாற்போல் சரீர நாடிகளும் இயங்கி அந்தக் கோப குணத்தின் கார அலை நம் சரீரத்தைத் தாக்குகின்றது.

அப்படித் தாக்கும் நிலையில் ஆண் பெண் இருபாலருக்குமே
1.மார்புப் பகுதியின் மையத்தில் வயிற்றுப் பகுதியின் மேற்புறத்தில்
2.”சிறிய குழிவு..” போன்ற பகுதியினுள் ஓர் மூச்சு நாடி ஓடுகின்றது
3.அதுவே மிக முக்கிய நாடியப்பா…! –
4.தாய் மூச்சு நாடி…! என்பது அது தான்.

நாபி நாடியுடன் இணைந்து செயல்படும் அந்தத் தாய் மூச்சு நாடி தாக்கப்படும் காலத்தில்… அருகில் அமைந்துள்ள இரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும் செயலில் அதைத் தூண்டி… இருதயத்தின் தொடர்புடன் இணைந்து கொண்டு
1.அதற்குள் ஓடும் மூச்சுக் காற்றால்
2.எடுத்துக் கொண்ட குணத்தின் வீரிய உணர்வு தாக்கிடும் செயல் நிலையே இருதய நோய் (HEART ATTACK).

ஜீவ காந்தம் கொண்ட மனிதச் சரீரம் உணர்வு கொண்டு இயங்கும் இயக்கத் தொடரில் உடல் தனக்குத் தேவையானதைப் பெறும் (சுகமாக அனுபவிக்கும்) செயலில் எது…எது.. எப்பொழுது செயல்படுகிறது…? என்ற பாங்கில் அந்தந்தக் கால கட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் காரணமே “பசி… மோகம்.. தாகம்…” என்பதாகும்.

இவைகள் எல்லாம் நீங்கி அந்தத் தேவைகள் பூர்த்தி பெற்றாலும் ஈர்த்துக் கொண்டிருக்கும் உணர்வுகளின் குணங்களின் சுவாசத்தினால் நிகழ்வது என்ன…?

ஏனென்றால் அனைத்து குணங்களின் சுவையே நம் ஆத்மாவின் பதிவு நிலை ஆகின்றது. அப்படிப் பதிவானது அதே தொடரின் செயலில் கனம் கொண்ட சுவாசமாக மீண்டும் மீண்டும் ஈர்க்கப்படுகின்றது.
1.அத்தகைய வினைச் செயலின் பதிவாகக் களங்கமுறுவது ஆத்மாவும்… சுவாசமும்… செயல் கொள்ளும் ஜீவ சரீரமும் தான்…!
2.ஆக ஆத்ம சக்தியுடன் இணைந்து தான் சரீர சுத்தியும் செயல் கொள்ளுமப்பா…!

வாழ்க்கையில் பலதரப்பட்ட மோதலில் ஏற்படும் சந்தர்ப்பங்களில் நாம் எடுத்துக் கொள்ளும் குணங்களின் நல்லெண்ண நற்சுவாசச் செயலே ஆத்ம சுத்தி.

அன்றாட வாழ்க்கை நிலையில் எத்தனையோ பல காரியங்களை நாம் செயல்படுத்துகின்றோம். அப்பொழுது பலருடைய எண்ணங்களின் தொடர்புகள் சுவாசத்தின் ஈர்ப்பில் வந்து சேர்கிறது.

நண்பர்கள்.. உறவினர்கள்… மற்றைய அலுவல்களில் சந்திக்க நேரும் பொது ஜனத் தொடர்புகள்… ஆகியவற்றில் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடும் செயல்களில் எல்லாம்
1.பிறரது எண்ணங்களின் குணநலன்கள் நம் சுவாசத்தின் ஈர்ப்பினால் பெற்று
2.அந்தக் குணங்களின் அமில குணச் சுவை அணுக்கள் சரீரத்திலும் கலந்து
3.அதே குணங்களின் உணர்வலைகள் ஆத்மாவிலும் பதிவு நிலை பெறுகின்றது.

புவி ஈர்ப்பின் பிடிப்பில் சுவாச ஓட்டத்தில் ஈர்த்துக் கொள்ளும் சுவாசம் கனம் கொண்ட எண்ணத்தின் வீரியத்திற்கொப்பச் செயல்படும் நிலையில் ஆத்மாவில் பதிவு பெறும் மாற்று நிலைகளின் கழிவை நீக்கவே இந்தத் தியான முறையச் சுட்டிக் காட்டுகின்றோம்.

இந்தத் தியானத்தின் வழியாக
1.வாழ்க்கையில் உணர்வின் மோதல் ஏற்படும் கால கட்டங்களில் எல்லாம்
2.எண்ணத்தின் உணர்வில் உயர்வைக் கூட்டி…
3.ஒளியின் பிரகாசமாக இருக்கும் துருவ நட்சத்திரத்தை எண்ணி
4.அந்தப் பேரருள் பேரொளி உணர்வுகளை விண்ணிலிருந்து புருவ மத்தியில் ஈர்த்துக் கொண்டு
5.நம் ஜீவ காந்தச் சரீரம் கொண்ட அந்த கனமான சுவாச அலைகளைச் சமன்படுத்தி
6.உயர்வைக் கூட்டி நல்லாக்கம் பெறல் வேண்டும்…!

ஆகவே
1.நாம் செயல்படும் செயலில் கொள்ளும் நிதானமே…
2.நம் உயிர் ஆத்ம ஞான வளர்ப்பிற்குப் பிரதானம்…!