தவயோகிகள் தான் வாழ… தன் புகழ் ஓங்க… தன் சுற்றத்தாரை வாழ வைப்பதற்காகத் தவமிருக்கவில்லை

தவயோகிகள் தான் வாழ… தன் புகழ் ஓங்க… தன் சுற்றத்தாரை வாழ வைப்பதற்காகத் தவமிருக்கவில்லை

 

சக்தியின் குணங்கள் மூன்று வகைப்பட்டது.
1.ஆக்குபவளும் அவளே… காப்பவளும் அவளே… அழிப்பவளும் அவளே…!
2.காற்றாகவும் நீராகவும் ஒளியாகவும் உள்ளவளும் அவளே.
3.மூன்று குணங்கள் உள்ள சக்தி தான் இவ்வுலகையே ஆக்கிக் காத்து அழிக்கிறது.
4.”அச்சக்தியின் சொரூபம்.. சக்தியின் வடிவம்… சக்தியின் சுயநிலை… அறிந்தவர்கள் எல்லாம் “பெரும் பாக்கியம் படைத்தவர்கள்…!”

அந்நாளில் வாழ்ந்த தவயோகிகள் இவ்வுலகைக் காப்பதற்காக அச்சக்தியின் சொரூபத்தைத் தன் நிலையில் ஈர்த்துக் கொள்ளவே பெரும் தவமிருந்தார்கள்.

அவ்வழியின் அருளைப் பெறப் பல நாள் தவமிருந்து பல ஜெபங்கள் இருந்து அச்சக்தியின் சொரூப நிலையை அதாவது ஆக்கி… காத்து.. அழிக்கும்… நிலையைத் தன் நிலையில் ஈர்த்துக் கொண்டார்கள்.

சக்தியின் நிலை என்னப்பா…?

1.எதற்காக அவர்கள் கடும் தவமிருந்து அந்த நிலையைப் பெற்றார்கள்…?
2.தான் வாழ… தன் புகழ் ஓங்க… தன் சுற்றத்தாரை வாழ வைக்கவா… அந்த நிலையைப் பெற்றார்கள்…?

இல்லையப்பா…!

அவர்கள் பெற்ற அருள் எல்லாம் தன் நிலையைக் காத்து… தன் ஆசையை அழித்து.. தன்னுள் சக்தியின் ஜீவனை வளர்த்துக் கொண்டார்கள். அந்த நிலை பெறுவதற்காக மிகவும் கடும் தவம் ஜெபம் எல்லாம் இருந்தார்கள்.

ஆனால் இந்தக் கலியில் வந்த சாமியார்கள் – சாமியார்கள் என்ற பெயரில் வந்தவர்கள் தன் பெயர் நிலைக்கத் தன் வழியில் உபதேசம் செய்ததைப் பலர் அறியப் பணம் காசுகள் சேர்த்துத் தன் வழியில் வந்தவர்களுக்கு வாழ வழி செய்து விட்டுத் தன் பெயரை நிலைநாட்டி விட்டுச் சென்றார்கள்.
1.இக்கலியில் வந்த சாமியார்களுக்கே இந்த நிலை என்றால்
2.இக்கலியில் தோன்றிய மனிதர்கள் நிலை எப்படியப்பா இருக்கும்…?

இக்கலியில் மாமனிதனாகலாம் என்பதெல்லாம் பல கோடிப் பணம் சேர்த்துப் பலர் அறியப் புகழ் எய்தி வாழ்வது தான் மாமனிதன் என்ற எண்ணம்.

அந்த நிலையில் அவனைப் பார்ப்பவனுக்கு என்னப்பா தோன்றும்…?
1.அவன் மேல் பொறாமை எண்ணம் தான் ஏற்படும்.
2.அந்த நிலையில் மாமனிதனாகி என்னப்பா பயன்…?

ஆதியில் வந்த சித்தர்கள் பெற்ற சக்தியின் அருள் எப்படியப்பா…? தன் உயிர் அணுவின் தொடர்பில் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவையும் தன் நிலைக்கு இயங்கும்படி அச்சக்தியின் அருளைப் பெற்றார்கள்.

கோபம் வருவதும் மகிழ்ச்சி வருவதும் சம நிலை எய்துவதும் என்ற பாகுபாடு தன் உடலில் இல்லாமல் மன எண்ணத்தில் எந்த நிலையைப் பார்த்தாலும் தன் நிலையை ஒரே நிலையில் வைத்துக் கொள்ள தன் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களையும் ஒரு நிலைப்படுத்தி விட்டார்கள்.

அந்த நிலையில் அவர்கள் ஜெபித்த ஜெபமெல்லாம் அவர்கள் பெற்ற அருள் எல்லாம் ஒரு சிறு அணுவளவு எந்த எண்ணத்தில் ஒருவர் மேல் பாய்ச்சுகின்றார்களோ அவர்களும் அந்த ஆற்றலைப் பெறுகிறார்கள்.

இத்தகைய ஆற்றல் பெற்றவர்கள் பெரும் மழைக்கும் சுழல் காற்றுக்கும் தன்னைச் சுற்றி எந்த நிலை வந்து தாக்கினாலும் அவர்களின் நிலைக்கு எந்த நிலையும் தெரிந்திடாது.

அவர்கள் எண்ண நிலை ஜெப நிலை எல்லாம் ஒரே நிலையில் இருக்கும் பொழுது அவர்கள் உடலுக்கு உணவும் உணர்வும் சுவாசமும் எந்த நிலையும் வேண்டுவதில்லை.

அவர்கள் நிலை எல்லாம் “அச்சக்தியின் நினைவே தான்…!” அச்சக்தியின் நிலையை உணர்ந்து அச்சக்தியின் அருளில் உள்ள பல கோடானு கோடி அணுக்களில் தன் உணர்வுக்கு வேண்டிய அணுவை மட்டும் ஈர்க்கிறார் இச்சித்தாதி சித்தன்.

அந்த நிலையில் உள்ள சித்தன் இவ்வுலக உயர்வுக்காக இவ்வுலகில் உள்ள மனிதர்களுக்கு எந்த வழியில் கற்பித்தால் புரிந்து விடும் என்ற நிலையில் தான் பெற்ற அருளினால் தன் உடல் அழிந்திடாமல் ஒரு நிலையில் அமர்ந்து
1.இவ்வுலக மக்களுக்குப் புரியும் வண்ணம்
2.அச்சக்தியின் உருவ அமைப்பைக் கல்லினாலோ பல உலோகத்தினாலோ செய்து
3.அந்த நிலையில் அச்சித்தன் உடலுடன் அமர்ந்து பல காலம் ஜெபம் செய்கின்றான்.
4.அந்த ஜெபத்தின் பலனைத்தான் நீ அக்கோயிலுக்குச் செல்லும் பொழுது அச்சித்தனின் அருளினால் பெற்று வருகிறாய்.

அக்கால ஆதிகாலச் சித்தாதி சித்தர்களும் பல கோடி ஞானிகளும் ரிஷிகளும் அமர்ந்து அச்சக்தியின் அருளைப் பெற்று எய்திய கோயில்கள் தான் இப்பொழுது நீ சென்று பூஜிக்கும் பல கோயில்களும்.

இந்த உடலுக்குப் பின்னால் நாம் மீண்டும் பிறவிக்கு வரக்கூடாது

இந்த உடலுக்குப் பின்னால் நாம் மீண்டும் பிறவிக்கு வரக்கூடாது

 

ஒவ்வொரு நிலைகளிலும்
1.”தீமைகளை அகற்றி விட்டேன்…” என்று நீங்கள் சொன்னால் அதை நான் (ஞானகுரு) கேட்கும் போதெல்லாம் எனக்குச் சந்தோஷம்
2.”சக்தி எடுத்தும் விரயமாகி விட்டது…” என்று நீங்கள் எண்ணினால் எனக்கும் அது கஷ்டம் தான்.

நான் (ஞானகுரு) காடு மேடு எல்லாம் அலைந்து எத்தனையோ சிரமப்பட்டு அருள் ஞானிகள் பெற்ற சக்திகளை உங்களுக்குள் பதிவாக்கியுள்ளேன்.

அதை நீங்கள் எடுத்து வளர்த்துச் சந்தோஷப்பட முடியாதபடி வேதனையாக இருக்கிறது என்று அதை வளர்த்தால் எனக்குள்ளும் அதே உணர்வு வளர்கின்றது. உங்களுக்கு வேதனை நீங்கவில்லையா…? என்ற உணர்வு தான் எனக்கும் வரும்.

ஆனால் நான் அதைத் திருத்திக் கொள்கின்றேன். உங்களுக்குள் அதைத் திருத்த முடிவதில்லை. அதைத்தான் வளர்த்துக் கொள்கின்றீர்கள் அதிலிருந்து மீள முடியாத நிலை ஆகி விடுகிறது.

அப்படி இல்லாதபடி…
1.எப்படியும் அந்த அருள் ஒளியைப் பெறுவேன்
2.என் வாழ்க்கையில் வந்த இருளை அகற்றுவேன்
3.மெய் ஒளியை எனக்குள் பெறுவேன்
4.பேரானந்தம் பெறுவேன்… பெரு வீடு என்ற நிலையை அடைவேன்
5.பிறவி இல்லா நிலை அடைவேன்… என்று உறுதிப்படுத்தி இந்தப் பாதையில் நீங்கள் செல்லுங்கள்.

உயிர் என்றுமே அழிவதில்லை…. உணர்வுகள் மாறுகின்றது எதன் உணர்வைப் பெறுகின்றோமோ இந்த உடலுக்குள்… இருண்ட நிலைக்குள் உயிர் ஒளியாக உள்ளே இருக்கின்றது. அருள் ஞானிகள் உணர்வின் தன்மையை எடுத்து ஒளியாக மாற்றுதல் வேண்டும்.

நீங்கள் சீராகத் தியானிக்கும் பொழுது பார்த்தால் உள் ஒளி பெருகும். அப்பொழுது உடலில் இருந்து வெளிச்சம் வரும்.

இதை எல்லாம் பழனியில் ஒருவரிடம் சொல்லும் பொழுது ஆர்வமாகக் கேட்டார்.

கணவன் மனைவி சேர்ந்து இந்தத் தியானத்தைச் செய்தவுடன் அவர் உடலிலிருந்து திடீரென்று பளீர்….ர்ர்… என்று வெளிச்சம் வருகின்றது. வீடே வெளிச்சமாகிறது.

இரண்டு பேரும் அதைப். பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஐய்யய்யோ… ஒளி தெரிகின்றதே… என்னுடைய சந்தோஷம் எல்லாம் போய்விடும் போலத் தெரிகிறதே…! என்று அவர் உடனே மனைவியைக் கட்டிப்பிடித்து அழுது கொண்டிருக்கிறார்.

உடலில் இருந்து ஒளி வருகின்றது… நான் இப்படியே போய் விடுவேனா…? என்ற இந்தப் பயம் அவருக்கு வந்து விட்டது.

“பயப்பட வேண்டியதில்லை…” என்று சாமி (ஞானகுரு) சொல்லி இருக்கின்றாரே என்று மனைவி அவரிடம் சொல்கின்றது. உடலில் இருந்து வெளிச்சம் வருகிறது… எனக்கும் தெரிகிறது…! என்று சொல்கிறது.

இல்லை…! எனக்கு எப்படியோ நடுக்கம் வருகின்றது என்று அதை மாற்றி விட்டு இதை எடுக்கின்றார். பெரும் ஆனந்தம் வந்தாலும் அதை அவரால் எண்ண முடியவில்லை.

வட்டிக்கடை வைத்து அவர் நடத்திக் கொண்டிருந்தார். அந்தப் பாவம் எல்லாம் எனக்கு வருமே. இதை எல்லாம் எப்படி மாற்றுவது…? என்று சொல்லி என்னிடம் கேட்டார்.

நான் விவரத்தை எல்லாம் அவருக்குச் சொன்னேன். அவருக்குச் சில தத்துவங்களும் தெரிகின்றது… கவிகளையும் பாடுகின்றார்.
1.ஆனால் இந்த ஒளி தெரிந்த பின்
2.உடல் ஆசையைக் கூட்டும் நிலை தான் வருகின்றது.

அடுத்து என்ன செய்கிறார்…?

மந்திரவாதிகளிடம் சென்று இந்தத் தீய நிலைகள் எனக்குள் வராது தடுக்க வேண்டும் என்று கேட்கின்றார் கோழிக்கறியும் சாராயமும் வைத்து நீ சாப்பிடு. தாயத்தை ஒன்றைக் கொடுத்து அதைக் கட்டிக் கொள் என்று மந்திரவாதி சொல்கின்றார்.

கடைசியில் இதற்கு அதற்கும் போராட்டமாகி அவருடைய நிலைகள் மாறிவிட்டது. உடலுக்குள் எதிர்நிலையான பின் நோயாக மாறிவிட்டது

அவருடைய வீட்டிலே தாயும் மற்ற எல்லோரும் சொல்கின்றார்கள். சாமி இவ்வளவு பெரிய சக்தி கொடுத்திருக்கின்றார்…! அட நீ என்னப்பா…? என்று.

ஆனால் அவரோ
1.நான் இத்தனையும் அனுபவிக்க வேண்டுமே
2.அதற்கு முன்னாடி நான் ஒளியாகி விட்டால் என் சுகம் எல்லாம் போய்விடுமே
3.இது என்ன பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது…? என்று சொல்கிறார்.

இது நடந்த நிகழ்ச்சி.

இப்படியும் சிலர் சக்தி கிடைத்தும் நழுவி விடுகின்றார்கள். இந்த உடலில் ஆசை வரப்படும் பொழுது இந்த வழியில் சென்று விடுகிறார்கள்
1.இதைப் போன்று இல்லாதபடி பேரானந்த நிலை என்ற நிலையை நீங்கள் அடையக் கற்றுக் கொள்ளுங்கள்.
2.இந்த உடலுக்குப் பின்னால் மீண்டும் பிறவிக்கு வரக்கூடாது.

ஒரு உடலை விட்டு ஆன்மா பிரிந்தால் எங்கே செல்கின்றது…? எப்படி அல்லல்படுகிறது…? என்று ஏற்கனவே பல உபதேசங்களைக் கொடுத்திருக்கின்றோம். இது தான் சாகாக்கலை என்பது.

சாகாக்கலை நீக்கி வேகாநிலை பெற வேண்டும். ஒவ்வொருவரும் அருள் ஞான சக்தியை வளர்த்து இருளை அகற்றும் அருள் ஞானத்தைப் பெறுங்கள். என்றும் பேரின்பப் பெரு வாழ்வு என்ற நிலையை அடையுங்கள்… பிறவி இல்லா நிலை அடைய இந்த உணர்வுகள் உங்களுக்கு உதவும்.

நீல நிற சமைப்பின் ஜோதி நிலையை நம் உயிராத்மா அடைய வேண்டும்

நீல நிற சமைப்பின் ஜோதி நிலையை நம் உயிராத்மா அடைய வேண்டும்

 

உன் நிலைக்குப் பகர்கின்றேன். எடுத்த பிறவியில் எல்லாம் விட்ட குறையினால் தான் இப்பிறவியில் வந்துள்ளாய்.

இப்பிறவியின் தன்மையில் தியான நிலையில் வந்திடும் ஜோதி நிலை என்னப்பா…? பல கோடிச் சித்தர்களும் ஞானிகளும் ரிஷிகளும் பெற்றிட்ட ஜோதி நிலை என்னப்பா…?

ஜோதி நிலை என்றதன் பொருள் என்னப்பா…? ஜோதி நிலை பெறுவது எப்படியப்பா…? (தியானத்தில் காட்சியாகத் தெரிவது ஜோதி நிலை அல்ல)

குடும்ப நிலையில் உள்ள ஒவ்வொருவரும் அவர் விடும் சுவாச நிலையினாலேயே ஜோதி நிலையைப் பெற்றிடலாம். இவ்வுலக வாழ்க்கையில் உள்ள பொழுதிலேயே பெற்றிடலாம் “ஜோதி நிலை…!”

ஜோதி நிலையின் பொருள் உனக்கு பகர்வதற்குப் புதிதல்ல. உன் நிலையிலேயே அஜ்ஜோதி நிலையை ஒளிரச் செய்யலாம். சித்தர்களும் ஞானிகளும் பெற்றிட்ட ஜோதி நிலையை உன் நிலையில் பெற்றிடலாம்.

அதற்காக உன் வழியில் சிறிது மாற்றம் வேண்டும்.

மன நிலையில் உள்ள சோர்வை உன் நினைவில் மறக்கச் செய்து உன் சுவாச நிலையில் நல் சுவாசத்தை எடுத்திடப் பழக வேண்டும். மன அமைதியும் சுவாச நிலையும் ஒன்றுபட்டு ஒரு நிலை எய்திட வேண்டும். (ஏனென்றால் சுவாச நிலையில் சிறு மாற்றம் வந்தாலும் அந்த நிலை மாறுபடுகிறது)

1.மனதில் சோர்வும் கோபமும் வந்திடாமல் நீ எடுக்கும் சுவாச நிலையில்
2.தியான முறையில் உள்ள பொழுது நீ ஈர்ப்பதே உன் கண்ணில் தெரிந்திடும் ஒளிகள் எல்லாம்…!

அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை உயிர் வழியாக நுகர்ந்து உயிரிலே ஜோதிச் சுடராக ஏற்ற வேண்டும். இதை ஒவ்வொரு நிமிடமும் ஏற்ற வேண்டும்.
1.மேல் நோக்கிப் (விண்ணிலே) பார்க்கும் உணர்வின் தன்மையை
2.அந்த ஜோதிச் சுடர் போல் நம் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்ற வேண்டும்.

இருள் அகற்றும் நிலைகளை ஒற்றுமையாக இருந்து தியானித்து அனைவரும் நலம் பெற வேண்டும். வளம் பெற வேண்டும் அவர்கள் உடலில் அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று எண்ணத்தினை எல்லோரும் சேர்ந்து எடுத்துப் பேரொளியாக ஜோதியாக உருவாக்கும் நிலைகளுக்குச் செய்தார்கள் அன்றைய ஞானிகள்.

மகரிஷிகளின் அருள் ஒளி கொண்டு அனைவருடைய உணர்வுகளும் ஒளி பெற வேண்டும் என்று நாம் எண்ணும் போது
1.நமக்குள் ஒளி பெருகி ஜோதியாகின்றது.
2.ஒளியின் உணர்வின் அணுக்களாக மாற்றுகின்றது.
3.இருளை அகற்றிப் பொருளைக் காட்டுகின்றது.
4.வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீமைகளை மாற்றியமைக்கும் திறனும் பெறுகின்றோம்.

மகரிஷிகளின் உணர்வுகளை ஒவ்வொரு நிமிடமும் ஜோதியாக உயிரிலே ஏற்றிக் கொண்டால்
1.“நம் ஆன்மா மெய் ஞான விழிப்பு நிலை பெறும்…!”
2.நீல நிற சமைப்பின் ஜோதி நிலையை நம் உயிராத்மா அடையும்.

அதன் மூலம் நாம் மற்றவர்களிடம் பேசும் பொழுதும் மற்றவர்கள் நம்மிடம் பேசும் பொழுதும் அந்த அருள் உணர்வுகளைப் பாய்ச்சி வாழ்க்கையில் நாம் பொருளறிந்து செயல்படும் ஞானத்தின் சக்தியாக நம்முடைய செயல்களை எல்லாமே மெய் வழியில் அமைத்துக் கொள்ள முடியும்.

சுவாசிக்கும் உணர்வுகளில் அதிர்வுகள் அதிகமானால் டிரான்சாக்ஷன் செய்யும் இடத்தில் ஏற்படும் தீமைகள்

சுவாசிக்கும் உணர்வுகளில் அதிர்வுகள் அதிகமானால் டிரான்சாக்ஷன் செய்யும் இடத்தில் ஏற்படும் தீமைகள்

 

ஒரு சிலருக்கு இந்தப் பேய்… பிசாசு…! என்ற பயந்த உணர்வாகி அதிர்ச்சியாகி விட்டால் அதனால் அடிபட்டுச் செத்தான் என்று சொல்வார்கள்.

ஒரு இலையோ ஏதோ தானாக ஆடி விட்டால் அந்த எண்ணத்திற்குத் தகுந்த மாதிரி அங்கு ரூபங்கள் தெரியும் ஐயோ…! பேய் வந்து விட்டது… பேய் வந்து விட்டது… பேய் வந்துவிட்டது…! என்பார்கள். இவன் எண்ணத்திற்குத் தகுந்த மாதிரியே அங்கே தெரியும்.

இந்த உணர்வின் தன்மை வந்து திடீரென்று ஒரு ஓலை காற்றடித்துக் கீழே விழுந்தது என்றால் ஆ… பேய் வந்து விட்டது என்று எண்ணினால் தீர்ந்தது.

இந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுத்த பின்
1.சிந்திக்கும் நரம்புகளில் இது சென்றால் அது கட்டாகி விடும் (அறுந்து).
2.மூக்கிலே வாயிலே எல்லாம் இரத்தம் வரும். ஆக இரத்த நாளங்கள் வெடித்து விடுகின்றது.

ஆனால் “பேய் அடித்து” இரத்த இரத்தமாகக் கக்கினான் என்று சொல்வார்கள். பேய் வந்து அடிப்பதில்லை.
1.அதிர்ச்சியான பின் அந்த உணர்வுகள் ட்ரான்சாக்ஷன் செய்யக்கூடிய இடத்தில்
2.அதிர்வுகள் அதிகமாகி விரிவடைந்து (பலூன் மாதிரி) அந்த இரத்த நாளங்கள் வெடித்து விடுகின்றது.

நம்முடைய எண்ணங்கள் நம்மை எப்படி எல்லாம் கொண்டு செல்கிறது என்ற நிலையை எல்லாம் அறிந்து கொண்டால் போதும். அந்த அதிர்வின் தன்மை எண்ணும்போது பயத்தில் துடுக்கு… துடுக்கு… துடுக்கு… என்று வந்து கொண்டே இருக்கும்.

உதாரணமாக… ரோட்டிலே சென்று கொண்டிருக்கின்றோம். காக்காய் வலிப்பு வந்து ஒருவன் கீழே விழுந்து விடுகின்றான். இரக்கப்பட்டுப் பார்த்தோம் என்றால்
1.ஓரு சிலருக்குப் பலவீனமான உணர்வுகள் ஆனால்
2.சிறு மூளைப் பாகத்திலே தாக்கி விட்டால் வெடுக்கு… வெடுக்கு… என்று சுண்டும்

இதற்கு முன் காக்காய் வலிப்பு இல்லை. ஆனால் இந்த மாதிரி அதிர்ச்சியான பின் அத்தகைய அணு இங்கே தேங்கி விட்டால் அதற்குப் பின் காக்காய் வலிப்பு வரும்.

சிறிய குழந்தையாக இருக்கும் பொழுது இல்லை என்று எண்ணுவார்கள். ஆக இந்த உணர்வின் அறிவு இப்படி வருகின்றது.

சாந்தம் குணம் கொண்டு பரிவான குணம் கொண்ட ஒரு மனிதன் எதிர்பாராத நிலைகள் ஆ… என்று இதைக் கேட்டு விட்டால் ட்ரான்சாக்ஷன் செய்யக்கூடிய உணர்வுகள் ஒலிபெருக்கியாகும் பொழுது விரிவடைந்து விடுகின்றது.

அதனால் மயக்கம் வருகின்றது… அதிர்ச்சியினால் உறுப்புகள் கை கால் அங்கங்கள் வராது கூடப் போய் விடுகின்றது. இது எல்லாம் நம்மை அறியாமலே நாம் நுகரும் உணர்வுகளால் நடக்கக்கூடிய செயல்கள்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் காக்கப்பட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

நம் ஆறாவது அறிவைச் சீராக பயன்படுத்த வேண்டும்.
1.ஈஸ்வரா…! என்று உயிருடன் ஒன்ற வேண்டும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று
3.இங்கே புருவ மத்தியில் நிலை நிறுத்தி அதன் வழி உள்ளே புகச் செய்து
4.அதிர்ச்சியால் ஏற்படும் செயலாக்கங்களைத் தடுத்துப் பழக வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவன்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

எந்த மனிதனுக்கு அந்த நோய் இருந்ததோ… துருவ நட்சத்திரத்தின் பேரருளை அவன் பெற வேண்டும். அவன் காக்கப்பட வேண்டும். அவன் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் அவன் உடலில் இருக்கக்கூடிய பிணிகள் நீங்க வேண்டும். அவன் தெளிந்த மனம் பெற வேண்டும்… தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற உணர்வுகளை இப்படி நாம் எடுத்து நமக்குள் படைத்து விட்டால் நமக்குள் அந்த உயர்ந்த குணங்களை உருவாக்குகிறது…. பிறருடைய தீமைகளோ துன்பங்களோ நமக்குள் வருவதில்லை.

சந்தர்ப்பவசத்தல் வேதனை என்று நாம் நுகரப்படும் பொழுது… அது நமக்குள் பிரம்மம் ஆகின்றது… உடலில் அணுக்களாக உருவாகின்றது.

அதே சமயத்தில் ஆறாவது அறிவு கார்த்திகேயா… சேனாதிபதி..! இதையெல்லாம் பாதுகாக்கும் சக்தி பெற்றது… எல்லாம் அறிந்து கொள்ளக்கூடிய சக்தி பெற்றது.

தீமை என்ற உணர்வு வந்த பின்
1.அருள் ஒளி என்ற உணர்வைப் பெருக்கி… இதை இணைத்து… அதைச் சுவை மிக்க உணர்வாகப் படைத்துப் பழகுதல் வேண்டும்
2.அந்த அணுக்களை மாற்றிப் பழகுதல் வேண்டும்.

இது தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்று சொல்வது.

சுவாசத்தில் வருவது தான் பிறப்பும்.. இறப்பும்…

சுவாசத்தில் வருவது தான் பிறப்பும்.. இறப்பும்…

 

இவ்வுலகின் தன்மையிலே மனிதனின் எண்ணத்திற்கும் ஆவி உலகின் எண்ணத்திற்கும் பல கோடிப் பாடங்களைப் பகர்ந்திடலாம்.
1.விதி வந்து விட்டது… அதனால் மடிந்து விட்டான்…! என்கிறோம்.
2.விதி வந்து அந்த உடல்களை மடியச் செய்வதில்லை
3.ஆயுளை ஆண்டவன் அளிப்பதல்ல…!

பிறப்பும் இறப்பும் இறைவன் இட்ட பிச்சை என்கிறார்கள். பிறப்பும் இறப்பும் இறைவன் இட்ட பிச்சை அல்ல. காலம் தோன்றியவுடன் வந்த அணுக்கள் தான் காலமுடன் கலந்து வந்துள்ளது பல பிறப்புகளில்.

எந்த அணுவும் எக்காலத்திலும் மடிவதில்லை.

கலி முடிந்து கல்கி வருகிறது…! என்று சொன்னேன். கலியில் முடியும் இவ்வுயிர் அணுக்கள் எல்லாமே கல்கியில் அவ்வொளியின் கதிர்கள் பட்டவுடன் பல நிலை கொண்ட பிறப்பாக உயிர் பெறுகின்றது. அந்த நிலையில் சுழல்கிறது அந்த உலகத்திலேயே.

உலகத்தன்மை தான் மாறுபடுகிறது. உயிரணுவின் தன்மையும் மாறுபடுகிறது. எல்லாமே என்றென்றும் அழிவதில்லை… மாறுபட்டு மாறுபட்டுத் தான் உலகில் சுற்றிக் கொண்டே வருகிறது.

மனிதன் மனிதனாகவும் பிறப்பதில்லை. மற்ற ஜீவராசிகள் அந்தந்த உடலிலேயும் பிறப்பதில்லை. அவ்வுலக ஆரம்பத்தில் உலக நிலையில் இக்காற்றுடன் கலந்துள்ள அணுக்கள் எல்லாம் அதனதன் மன நிலையில் விடும் சுவாசத்தின் தன்மையிலே ஆரம்ப நிலையில் வந்து உதிக்கின்றது புழுவாக பூச்சியாக மீனாக நண்டாக…!

ஆதியில் மனிதன் கல்கியின் ஆரம்பத்தில் முதல் அவதாரத்தில் தோன்றிய உயிரணுக்கள் எல்லாம் ஒன்று போல் தான் இருந்தன. அந்நிலையில் விட்ட சுவாசத் தன்மையிலே உருவங்கள் மாறுபட்டு மாறுபட்டுப் புழுவாகி அடுத்த நிலையில் கொசுவாகிக் கொசுவின் நிலை மீனாகி அந்நிலையில் இருந்து மனித உடல் பெறுகின்றன.

மனித உடலின் எண்ணத்திலே மாறுபட்டு மாறுபட்டு ஏழு ஜென்மங்கள் எடுத்து…
1.ஏழு ஜென்மங்கள் எடுப்பவனும் மனித உடலில் சில காலங்கள் தான் சஞ்சரிக்கின்றான்.
2.மனித உடலில் மாறுபட்டுத் தான் மிருகமாகின்றான். மனிதனில் இருந்து தான் மிருகம்.
3.மிருகத்தில் இருந்து பறவையாகி நீரில் வாழும் ஜீவராசிகளாகி கொசுவாகிப் புழுவாகி
4.உலக ஆரம்பத்தில் உள்ள நிலைக்கே கலியின் கடைசிக்கும் வருகின்றான்.
5.கல்கியின் முதலுக்கும் அந்நிலையில் தான் வருகின்றான். அந்த நிலையில் தான் பிறகும் ஜென்மம் எடுக்கின்றான்.

இந்த ஜென்மச் சுற்றிலிருந்து விடுபடுவதற்குத் தான் இத்தியான நிலை. தியானத்தின் மூலம் உங்கள் சுவாச நிலையை ஒரு நிலைப்படுத்திடுங்கள்.

இப்பொழுது இந்த உடலில் உள்ள ஜென்மம் மட்டுமல்ல உங்கள் ஜென்மம். இந்த உலக ஆரம்பத்திலேயே வந்து விட்டது உங்கள் ஜென்மம்.

ஜென்மப் பயனை எடுத்திடுங்கள்… ஈசன் அருளைப் பெற்றிடலாம்…! என்பதெல்லாம் இதுவே தான். இறைவன் என்பவன் யாருமில்லை. “அவனவன் உள்ளத்தில் தான் இறைவன் உள்ளான்…!” என்று பல முறை உணர்த்தினேன்.

இறப்பும் பிறப்பும் இறைவன் செய்ததல்ல. வந்தது எல்லாம் அவரவர் (உங்கள்) வழியில் தான். “வினை விதைத்தவன் வினை அறுப்பான் விதை விதைத்தவன் விதை அறுப்பான்…” என்ற பொருளும் இதுவேதான்.

உன்னுள் இருக்கும் ஈசனின் சக்தியில்
1.பிறப்பு எடுத்ததும் நீயே தான்
2.பிறவியை இழப்பதும் நீயே தான்.

இறைவனின் படைப்பல்ல பிறப்பும் இறப்பும். உன்னுள்ளே தான் எல்லாமே உள்ளதப்பா… எண்ணத்தின் சுற்றலிலே…! சுவாசத்தில் வருவது தான் பிறப்பும் இறப்புமே.

பாட நிலை புரிந்ததா…?

பரவிக் கொண்டே… வளர்ந்து கொண்டே வரும்… நோய்க் கிருமிகள் பற்றிய உண்மைகள்

பரவிக் கொண்டே… வளர்ந்து கொண்டே வரும்… நோய்க் கிருமிகள் பற்றிய உண்மைகள்

 

விஞ்ஞான அறிவால் வந்த விஷத்தன்மைகள் பலவாறு பரவி… மக்களை இன்று மடியச் செய்யும் நிலையாக வருகின்றது.

மின்சாரத்தை உற்பத்தி செய்ய “அணு உலைகளை” உருவாக்குகின்றோம்.
1.அதிலிருந்து வரும் கசிவுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கின்றது.
2.இந்த உணர்வுகள் நம் பூமி முழுவதும் படர்கின்றது.
3.அதன் எல்லையில் நுகர்வோர் அனைவருக்குள்ளும் விஷத்தன்மையான கதிர்களைப் பாய்ச்சுகின்றது.
4.அந்தக் கதிர்கள் படரப்பட்ட மனிதர்கள் இறந்த பின் அந்த உடலிலிருந்து அதே அணுக்களின் தன்மை மீண்டும் பெருகத் தொடங்குகிறது.

மனிதனை ஒத்த நிலைகள் வரப்படும் பொழுது “மிகக் கடுமையான நோய்களாகவும்…” மாறுகின்றது.

முதலில் மனித உடலுக்குள் சென்று தீய அணுக்களின் தன்மையாக உருவாகின்றது. இறந்த பின் மனிதனை ஒத்த நிலையில் கொண்டு பரவிப் புது விதமான நோய்களாக வருகின்றது.
1.இதைத் தான் வைரஸ் என்ற நிலையில்
2.”புதிது புதிதாக உருவாகிறது…” என்று கண்டுபிடிக்கின்றார்கள்.

ஒவ்வொன்றையும் என்னென்ன நிலைகள் என்று பரீட்சித்து பார்க்கும் போது சில வைரஸ்களை மாற்ற முடியவில்லை என்று கூடச் சொல்கின்றார்கள்.

ஏனென்றால் இந்த அணு தன்மைகள் உடலிலே நுகர்ந்து விட்டால் அது விளைந்த பின்
1.கேன்சர் எப்படி விஷத்தன்மையான நோயாக ஆன பின் வேறு எந்தக் கடுமையான மருந்தைக் கொண்டும் அதை நீக்க முடிவதில்லையோ
2.இதைப் போன்று வைரஸ் சென்ற அந்தக் கிருமிகள் அதிகமாகி விட்டால் அதை மற்ற மருந்துகள் கொண்டு மாற்றி அமைக்க முடிவதில்லை

எதிர் நிலையான நிலைகள் வரும் பொழுது காய்ச்சல் அதிகமாகவே இருந்து கொண்டிருக்கும். காய்ச்சல் அதிகமாக இருக்கப்படும் பொழுது இதை மாற்றுவதற்காக இரத்தத்தைப் பரிசோதித்து. இதனுடைய மலங்கள் எவ்வாறு இருக்கின்றது…? என்ற நிலையில் அதைக் கண்டுபிடிப்பதற்குக் குறைந்தது ஒரு வாரத்தில் இருந்து பத்து நாட்கள் ஆகி விடுகிறது.

இந்த உணர்வின் தன்மை சேர்த்துச் சேர்த்து இதற்கு இது ஒத்துக் கொள்கிறதா… இல்லையா…? இந்த உணர்வின் தன்மை எது…? என்ற நிலையும் இது புதுவிதமான வைரஸ் ஆக இருப்பதால் இதற்கு என்ன கொடுப்பது…? என்று பல மருந்துகளைக் கொடுத்துப் பரிசீலித்துப் பார்க்கின்றார்கள்.

அதற்கு அப்புறம் அது பலவீனமான பின் செயல்படுத்துகிறார்கள். ஆனால் அந்த வைரஸின் வீரியத் தன்மை அதிகமாகிவிட்டால் அந்தக் காய்ச்சலையே போக்க முடியாது… எத்தனையோ பேர் அவதிப்படும் நிலைகளும் இருக்கின்றது.

ஏனென்றால் அணுக்கதிரியக்கங்களால் தாக்கப்பட்டு இந்த உணர்வின் தன்மை மனிதனுக்குள் வருகிறது…!

அது எப்படி…? என்றால் இன்று சென்னை அருகிலே அணு மின் நிலையத்தில் அணு உலைகளை அமைத்திருக்கிறார்கள் என்றால் அங்கே அருகிலே வீட்டிலே குடியிருக்கின்றார்கள்.

அங்கே இருப்பவர்கள் மற்ற இடங்களுக்கு மாற்றலாகி வந்தார்கள் என்றால்
1.அவர் உடலில் விளைந்த அந்தக் கதிரியக்கங்கள் அவர்கள் இறந்தால்
2.அந்த உடலிலிருந்த அந்த அணுக்கள் மற்றவர்களுக்குப் பரவத் தொடங்குகிறது.
3.அவர்கள் பழகிய நண்பர்கள் உடலில் எல்லாம் பரவுகின்றது.

இப்படி வரப்படும் பொழுது தான் இந்த அணுக்களின் தன்மை (வைரஸ்) வளர்ந்து விடுகின்றது.

ஒருவருக்கொருவர் எப்படித் தொடர்பு கொண்டு வருகின்றது…? என்ற நிலையையும் குருநாதர் இந்த உலகம் முழுவதும் சுற்றி உணர்வின் இயக்கங்கள் எப்படி இருக்கிறது…? என்ற நிலையைத் தெளிவாக்கிக் கொண்டு வந்தார்.

இதிலிருந்து மீட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரம் சர்வ நஞ்சுகளையும் வென்றது. அந்த உணர்வுகளை எல்லோரையும் பருகச் செய்…! என்றார் குருநாதர். அதைத்தான் உங்களுக்குத் திரும்பத் திரும்பச் சொல்லிப் பதிவு செய்து கொண்டே வருகின்றேன்.

திட்டியவர்களைப் பதிவு செய்த பின் அவர்களை நினைத்தால் கோபம் வருகின்றது. அன்றைக்கு ஒரு கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அந்தத் திட்டியவரை எண்ணினால் கணக்குத் தப்புத் தப்பாகத்தான் வரும்.

துரோகம் செய்தான் பாவி என்று எண்ணினால் அங்கேயும் தவறாகும். ஆக ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொண்டு தான் இருக்கின்றோம். நம்மை அறியாமல் இத்தகைய நிலைகள் நடக்கின்றது.

இதைப் போன்று தான் உங்களுக்குள் அந்த்த் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பாய்ச்சி விட்டால் தீமை என்ற உணர்வை அறிந்தால் அடுத்த கணமே துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் நுகர்ந்தால் அதை அடக்கும்.

ஆகவே…
1.ஒவ்வொரு நிமிடத்திலும் தீமையை அடக்கக்கூடிய சக்தி உங்களுக்குள் வர வேண்டும்
2.அந்த நிலை நீங்கள் பெற வேண்டும் என்பதற்கு தான் திரும்பத் திரும்பச் சொல்வது.

ஒரு சில பேர் சாமி திரும்பத் திரும்பச் சொல்கிறார் ஒரே தலைவலியாக இருக்கிறது என்று கூடச் சொல்லி விடுகின்றார்கள் ஆனால் சாமி என்ன சொன்னார்…? என்று திருப்பிக் கேட்டால் சொல்லத் தெரியாது.

கர்ம பயன் என்பது சாதாரணமானதல்ல…! நல்லதுக்கும் அது தான்… கெட்டதுக்கும் அது தான்…!

கர்ம பயன் என்பது சாதாரணமானதல்ல…! நல்லதுக்கும் அது தான்… கெட்டதுக்கும் அது தான்…!

 

விதியை மதியால் வென்றிடலாம். வினை விதைத்தவன் வினை அறுப்பான்… விதை விதைத்தவன் விதையறுப்பான்…! என்ற பெரியோர்களின் வாக்கிலேயே கலந்துள்ளது
மனிதனின் விதி முறை…!”

வினையின் எண்ண\த்திலே விளைவதெல்லாம் வினையேதான்.
1.பிறரைக் கவிழ்க்க வினை செய்கின்றான்.
2.அந்த வினை அவனைக் கவிழ்ப்பதற்காகச் செய்த வினை
3.இவனைத் தான் வந்து சுற்றும்.
4.வினை செய்த காலத்தில் வருவது அல்ல அந்த வினை.
5.இவன் எண்ணத்திலே ஊன்றியுள்ள வினையினால் இவனையே அந்த வினை சுற்றுகிறது பெரும் பயத்தினால்.

அந்த நிலையில் உள்ளவனின் ஆவி பிரியும் பொழுது வினையின் எண்ணத்திலேயே ஆவி உலகத்திலும் தன் வினையை முடித்துக் கொள்ள ஒரு உடலை எடுக்கின்றான்.

வினைப் பயனை முடித்திடுவது தான் அவ்வாவிகளின் எண்ணமெல்லாம். வினையின் எண்ணத்தை மனதினுள் சிறு அளவு ஊன்றச் செய்தாலும் அந்த வினையின் பயன் பல கோடி ஆண்டுகளுக்கு முடிவுறுவதில்லை.

ஜென்மப் பிறவியில் எல்லாம் அவனுடனே தான் சுற்றிக் கொண்டு வருகிறது. காலப் போக்கில். அந்த எண்ணம் உடையவனை எந்தச் சொல்லும் சொல்லி மாற்றிட முடியாதப்பா.
1.கர்ம பயன் என்பதெல்லாம் இதுவேதான்.
2.அவன் செய்த கர்மம் அவனை அழிக்கின்றது என்பதெல்லாம் இதுவே தான்.
3.எந்தப் பிறவி எடுத்தாலும் இக்கர்ம பயன் முடிவதில்லை. (புழுவாகப் பூச்சியாக உருவெடுக்கின்றான்)

வினை விதைத்தவனுக்கு என்றுமே சுற்றிக் கொண்டே தானிருக்கும். எந்த நற்சொற்களும் அந்த வினையுள்ள எண்ணத்திலே பதிந்திடாதப்பா. பாவ புண்ணியம் எண்ண மாட்டான். ஆகவே நரக லோகம் செல்கின்றான்

நரகலோகம் என்பதுவே கர்மபயன் செய்தவன்… வினையின் நெஞ்சம் உள்ளவன்…! எல்லாம் செல்லுமிடம் நரகலோகம்தான்.

விதி என்பது எதப்பா…?

விதியையும் மதியினால் வெல்லலாம் என்பது வினையின் எண்ணம் உள்ளவனை நல்லெண்ணம் கொண்டவன் வென்றிட முடியுமப்பா.

வினையில் உள்ளவன் அவனைத் தாக்கும் பொழுது நல்லெண்ணம் கொண்டவன் அந்த “ஈசனை…” நினைத்திட்டால் அவ்வினையின் எண்ணத்தை ஈசனே பார்த்துக் கொள்வான்.

எந்த வடிவில் ஈசன் பார்த்திடுவான் என்றிடுவாய்…!

வழக்கின் வழியைப் புரியும்படிச் சொல்கின்றேன்.

வினையெண்ணம் உள்ளவனும் நல்லெண்ணம் படைத்தவனும் ஒரு இடத்தில் இருவரும் சேர்ந்து செய்யும் தொழிலில் அந்நிலையில் உள்ள பணத்தை எல்லாம் வினைப்பயன் உள்ளவன் எடுத்துக் கொள்கின்றான். அந்தப் பழியை நல்லவனின் மேல் சுமத்துகின்றான்.

நல்லவனுக்குப் பக்கபலமும் இல்லை. அந்த நிலையில் வழக்காடும் இடத்திற்குச் சென்றால் அந்த நிலையிலும் தன்னுடைய செல்வத்தை வைத்து ஜெயித்து விடுகின்றான் இவ்வினையுள்ளவன்.

பெரும் வழக்கறிஞர்கள் வைத்து வழக்காட நல்லெண்ணம் உள்ளவனுக்கு நாதியில்லை என்பார்கள். ஏனப்பா இல்லை…?

சில காலம் உள்ள இந்த ஜென்மத்தில் நாதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவன் எண்ணத்திலே ஒரு நிலையில்
1.ஒரு உயர்வின் தன்மையிலே சுற்றிக் கொண்டு உள்ளது…
2.“நல்லொழுக்கங்கள் நற்சொற்கள் எல்லாமே…!”

அப்படி இருக்கும் நிலையில்
1.அவன் மனதில் சோர்வை எண்ணிடாமல்
2.அவ்வாண்டவனை நினைத்துச் சத்திய நியாயத்தை வேண்டிட்டால்
3.அவன் ஜென்மப் பயன் எல்லாமே… அவன் எண்ணத்தில்… அவன் விடும் சுவாசத்தில்…
4.உயர்ந்த தன்மையிலேயே ஜென்மங்கள் மாறும் பொழுதும் வந்தடைகிறது.
5.கடைசியில் ஜெயிப்பது நல்லெண்ணம் கொண்டவன்தான் என்பது இம்மானிடர்களுக்குப் புரிவது இல்லை.

வினை விதைத்தவன் இவன் காலத்தில் வழக்கில் ஜெயித்தாலும் அவன் எண்ணத்தில் சுற்றிக் கொண்டு இருக்கும் அவன் செய்த வினையின் பயன் அவன் காலம் முடிந்து அவன் எந்த நிலைக்குச் சென்றாலும் அவனைச் சுற்றிக் கொண்டே தான் வருகிறது.
1.வினைப்பயன் செய்தவன் நரகலோகத்திற்கே செல்கின்றான்.
2.இந்த நல்லோரின் இதயம் செல்லும் இடம் தான் சொர்க்க லோகம் என்பது.

அவன் செல்லும் நரக லோகத்திற்கும் இவன் செல்லும் சொர்க்க லோகத்திற்கும் தான் “விதியை மதியால் வெல்லலாம்…!” என்பது.

சாம வேதத்தின் மூலங்களை குருநாதர் எனக்குக் கற்றுக் கொடுத்தவிதம்

சாம வேதத்தின் மூலங்களை குருநாதர் எனக்குக் கற்றுக் கொடுத்தவிதம்

 

காட்டுக்குள் புலி செத்துக் கிடக்கிறது. அந்த உடலிலிருந்து வெளிப்படும் “அழுகிய உணர்வுகள்…” மணங்களாக வருவதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கிறது.

அப்படிக் கவர்ந்து கொண்ட பின் அதனுடைய சக்தி வலிமையாக இருக்கின்றது. அதே சமயத்தில் இயற்கையிலேயே விஷத்தின் தன்மை கொண்ட ஒரு செடியின் சத்தைச் சூரியனின் காந்த சக்தி நுகர்ந்து
1.அது அலைகளாக வரப்படும் பொழுது
2.இந்தப் புலியின் உணர்வின் தன்மையை நகர்த்திச் (துரத்தி) செல்கின்றது.

நகர்த்தி வேகமாகச் செல்லப்படும் பொழுது அடுத்துப் பல செடிகளின் உணர்வுகளுடன் மோதி இது கலவையாகி ஒரு சுழற்சி என்ற நிலையை அடைகின்றது.

இப்படி மூன்றும் ஒன்றாகிக் கருத்தன்மை அடைகின்றது. எடை கூடி பூமியின் ஈர்ப்பில் சிக்கி மண்ணிலே பதிகின்றது.

உதாரணமாக… வேப்பமரத்தினுடைய சத்தும் ரோஜாப்பூவினுடைய சத்தும் விஷச் செடியினுடைய சத்தும் சேர்ந்து புது விதச் செடியாகக் கருவேப்பிலையாக மாறியது போன்று…
1.இரத்தத்தை உறிஞ்சி வாழும் புலி (இறந்தது) உடலிலிருந்து வந்த உணர்வுகள்
2.மற்ற விஷச் செடியின் மணத்துடனும்… விஷமற்ற செடியின் மணத்துடனும் இணைந்து
3.புது விதத் தாவர இனமாக மாறுகின்றது

அந்த வித்து முளைத்துக் கொடியாகவோ செடியாகவோ வளர்ந்த பின் இரத்தம் கொண்ட மனிதனோ யானையோ புலியோ குருவியோ அந்த இடத்திலே சென்றால் அதை அப்படியே இழுத்துக் கவர்ந்து இரத்தத்தை உறிஞ்சிவிடும்… மடிய வேண்டியது தான்.

அஸ்ஸாம் காடுகளில் இது நிறைய உண்டு. இது எல்லாம் எப்படி இருக்கிறது…? என்ற நிலையைக் குருநாதர் காட்டினார்.

இங்கே நாம் வாழும் பகுதியில் அனேகமாக இல்லை. வைத்தியத்திற்காகப் பறித்து விடுவார்கள்.
1.கேன்சர் நோய் வந்த இடத்தில் இந்தச் செடியின் சத்தை மேலே தடவினால்
2.விஷத்தின் தன்மையை இது உறிஞ்சிடும் சக்தி பெற்றது.

இதைப் போன்ற செடிகள் விளைவது மிகவும் கடினம்.

அக்காலத்தில் இதை “ராஜ வைத்தியம்…” என்று சொல்வார்கள். அரசர்களுக்கு இதைப் பயன்படுத்திப் பயன்படுத்தி இந்த வித்தை மீண்டும் வளர்க்காது மறைந்தே போய்விட்டது.

குருநாதர் இத்தகைய செடிகள் எல்லாம் எப்படி உருவாகின்றது…? உருவானது…? என்பதைத் தெரிந்து கொள்வதற்காக காடுகளிலும் மேடுகளிலும் எம்மை (ஞானகுரு) அலையச் செய்தார்.

எனக்கு அங்கே சாப்பாடு இரண்டு பேரிச்சம்பழம்… இரண்டு பச்சிலை அவ்வளவுதான்…! அதைச் சாப்பிட்டு விட்டுத் தண்ணீரைக் குடித்துவிட்டு… குருநாதர் சொன்ன வழியில் போய்க் கொண்டே இருக்க வேண்டும்.

இப்படித்தான் இயற்கையின் நிலைகளைப் பார்க்கும்படி செய்தார்.
1.ஒவ்வொரு நொடிக்கு நொடியும் இந்த காற்று மண்டலம் எப்படி மாறுகின்றது…?
2.எதன் வழி அது இயங்குகின்றது…?
3.செடி கொடிகளின் உணர்வுகள் எப்படி மாறுகின்றது…? என்று அந்த நிலையைப் பார்த்துக் கொண்டே நான் செல்ல வேண்டும்.

ஒரு இடத்தில் சுழிக்க்காற்று வருகிறது என்றால் அங்கு ஓடிச் சென்று நான் பார்க்க வேண்டும். எங்கே நிலை பெறுகிறதோ அங்கே பூமியிலே படரும் இடத்திற்குச் சென்று மணத்தால் அதை நுகரும்படி செய்வார்.
1.மணத்தால் நுகர்ந்து என்னென்ன செடிகள் வந்தது…? எல்லாம் கலந்து எப்படி ஆகிறது…?
2.புதுவிதமான செடிகளாக எப்படி உருவாகிறது…? என்று காடுகளிலும் மலைப் பகுதிகளிலும் பார்க்கும்படி செய்தார்.

இதைத்தான் ஆயுர்வேதம் என்று சொல்வார்கள். தாவர இனங்களின் உணர்வுகள் உணர்ச்சியாக இயக்குவதைச் “சாம வேதம்…” என்றும் சொல்வார்கள் .

இயற்கையின் உண்மை… அந்த உணர்ச்சியின் தன்மை எப்படி உருவானது…? ஒரு செடியின் வாசனை அது எப்படி இயக்குகின்றது…? இந்த உணர்ச்சியின் தன்மை எப்படி இயக்குகின்றது…?

ஒரு உணர்வுக்குள் ஒரு உணர்வைச் சேர்த்து ஒரு உணர்வுக்குள் மருந்தாகக் கொடுக்கப்படும் பொழுது இசைக்கொப்ப இந்த உணர்வுகள் இசையை மாற்றி எவ்வாறு செய்கிறது…? என்று வேதங்களின் மூலங்களில் இது கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த உண்மைகளை நீங்களும் உணர வேண்டும்… உங்களுக்குள் இயக்கும் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் அறிய வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறேன்.

அனைத்து உயிராத்மாக்களும் தன் வளர்ப்பில் வளர்ச்சி கொள்வதற்காக வித்திட்டவர்கள் மகரிஷிகளே…!

அனைத்து உயிராத்மாக்களும் தன் வளர்ப்பில் வளர்ச்சி கொள்வதற்காக வித்திட்டவர்கள் மகரிஷிகளே…!

 

கொங்கணர் ஞானம் பெற்ற நிலைகளை விவரிக்கத் தொடங்கினால் அது எந்த வகை என்றுரைக்க நினைப்பதற்கு அடங்கிடுமோ..?

“மாடி வீட்டு அரசன்… கோடி வீட்டுப் புருஷன்…!” என்ற வகை உண்மை நிலையில் இவர் வேறு… அவர் வேறு…! என்று பிரித்துச் சொல்லும் வகையில் “கோடி வீட்டுப் புருஷார்த்த புருஷனே கொங்கணர்…!” என்றாலும் அவர் எடுத்த அவதார நிலைகளே பாலாஜி… வெங்கடேஸ்வரன்… ஸ்ரீனிவாசன்…!

இருந்தாலும் பின் அவரே மாடி வீட்டு அரசன் ஆக ஆன செயலில் இரு வகைச் சூட்சமங்கள் பெற்ற அவதாரமே ஸ்ரீனிவாசன் என்னும் வெங்கடேசக் கொங்கண மாமகரிஷி.

ரிஷி மூலம் பார்க்காதே… நதி மூலம் பார்க்காதே…! என்று அக்காலங்களில் சொல்வார்கள். அதனின் வகையில்
1.மெய்ப் பொருளைக் கண்டறிந்த அந்த மாமகரிஷிகள் பெற்ற ஞானத்தை மட்டும் நாம் அறிந்து
2.அதைப் பெறுகின்ற ஞானத்தின் வளர்ச்சிக்கு முயல்வோம்.

அறிவின் வளர்ச்சிக்கு வளச்சியூட்டும் செயலாக அந்தக் கொங்கணர் பெற்ற சூட்சமத்தின் தொடர் நிலைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அன்றைய கால கட்டங்களில் ஞானி சித்தனாகி… சித்தன் முனிவனாகி… பின் ரிஷியாகும் தொடர்பில் அனைத்தையும் அனுபவ ஞான வளர்ச்சி என்னும் தொடர்பில் பெற்றவர்கள் தான்.

தனது அறிவின் ஞான வளர்ப்பை மீண்டும் மீண்டும் வளர்ப்பாக வளர்த்திடவும் இந்த உலக மக்கள் உய்வு (பிறவியில்லா நிலை) எய்திடவும் ஏற்படுத்தப்பட்டது தான் ஜெப நிலையும் தியான நிலையும்.

அந்த மகரிஷிகள் வெளிப்படுத்திய… வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் மூச்சலைகளையே ஒவ்வொரு உயிரும் உண்ணும்படியாக தியானத் வழித் தொடரை ஏற்படுத்தினார்கள்.

எந்தெந்த உயிராத்மாக்கள் எண்ணி ஏங்குகின்றதோ அவர்களுக்கெல்லாம்
1.தாங்களே (மகரிஷிகளே) உணவும் ஆகி
2.உணவாக்கிட விறகாகவும் எரிந்து
3.ஆகாரமாகப் புசிக்கும் பக்குவ கதியில் அதாவது நமது உயிரான்மாக்கள் ஆன்ம சக்தியைக் கூட்டிடும் ஆகார கதிக்குத் தானே ஆகாரமாகி
4.பேரருள் பேரொளி சக்தியையே அளித்திட்ட வள்ளல் பெருமக்களே மகரிஷிகள் ஆவர்.

உலகெங்கிலும் உள்ள அனைத்து உயிராத்மாக்களும் தன் வளர்ப்பில் வளர்ச்சி கொள்வதற்காக வித்திட்டவர்கள் மகரிஷிகளே.

நம்முடைய வளர்ச்சிக்கு வழி காட்ட உறுதுணையாக இருந்து… நாம் பெறும் சக்திக்கே சக்தி அளித்திட்ட..
1.அந்தச் சக்தியின் செல்வங்கள் (மகரிஷிகள்) பெற்ற நற்சக்திக்கு வலு சேர்க்கும் விதமாக
2.நம்முடைய ஞான சக்தியை வளர்த்திடும் நிலையாக நாம் அனைத்தையும் அறிந்து உணர்ந்திட வேண்டும்.

கோபம் குரோதம் காமம் ஆசை விருப்பு வெறுப்பு என்னும் தொடரிலே அவசரம் ஆத்திரம் பழி பாவம் என்று வரும் நிலையில் அவை அனைத்தையும் நாம் நீக்கிடும் உயர் ஞான சக்திக்கு அந்தக் கொங்கணவர் பெற்ற… பெற்று அளித்துக் கொண்டிருக்கும் அனுபவப் பாடம் நமக்குப் பேருதவியாக இருக்கும்.

ஏனென்றால் கொங்கணவர் தன் தாய் சக்தியின் தொடர்பு மூலமாகவும் தன் மனையாளின் சக்தி (பத்தினி) மூலமாகவும் தான் துர்க்கதியை அகற்றி நற்கதியை அடைந்தார்.

தாய் சக்தி… மனைவி சக்தி… என்ற ரிஷி பத்தினி சக்தியின் கலப்பு பெற்ற அந்த மாமகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் ஏங்கிப் பெற்றால் அவர்களின் வளர்ச்சியின் அருள் ஒளி வட்டத்தில் நாம் அனைவரும் கலந்திடலாம். அதற்குத்தான் இதைச் சொல்கிறோம்…!

சாகாக்கலையைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்

சாகாக்கலையைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்

 

மனிதனுடைய வாழ்க்கையில் வரும் ஆசை எல்லாம் சாகாக் கலை…!
1.என்னை அவன் இப்படிப் பேசினான்… இருக்கட்டும் நான் பார்த்துக் கொள்கிறேன்…! என்றால் இது சாகாக் கலைதான்
2.காரணம் உடலை விட்டுச் சென்றால் அவனுடைய உடலுக்குள் சென்று இதே வேலையைச் செய்யும் (அழியாதபடி).

எந்த ஆசையின் தன்மையை இந்த உடலில் பெற்றானோ சாகாக்கலையாக அடுத்த உடலில் வந்த பின் அந்த வேலையைச் செய்யும்

ஆனால் நம் குருநாதர் நமக்குக் காட்டியது வேகா நிலை.

இராமலிங்க அடிகள் கூட இதைப்பற்றிப் பாடி இருக்கின்றார் சாகாக்கலை… வேகாநிலை… போகாப்புனல்…! வேகா நிலை பெற்று விட்டால் நாம் இன்னொரு உடலுக்குள் போக மாட்டோம்.

வேகா நிலையைப் பற்றிச் சொன்னால் இல்லை சாகாக் கலைதான் பெரிது…! என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்

நாடி சாஸ்திரங்களிலோ வைத்தியரீதியிலே பார்த்தோம் என்றால்
1.காயகல்பம் செய்து இந்த உடலை நாங்கள் அழியாது வைத்திருக்கிறோம்
2.போகர் 12000 எல்லாம் படித்துவிட்டு இப்படி வாதம் செய்வர் பலர் உண்டு.

ஆனால் அதை அவர் எழுதினாரா…?

பின்னாடி வந்தவர்கள் அதனுடைய தத்துவத்தை எடுத்து இந்த உணர்வின் தன்மையை நாடிகளாக எழுதி வைத்திருக்கின்றார்கள்.

இயற்கையில் ஒன்றுடன் ஒன்று சேர்க்கும் போது தங்கம் எப்படி உருவாகின்றது…? அதைப் போல் உன் மனதை நீ எப்படித் தங்கமாக்க வேண்டும்…? என்று போகன் அன்று சொல்லி இருந்தால்
1.புறத்தில் தங்கம் செய்வதிலேயே ஆசைகளைக் கொண்டு செல்கின்றார்கள்
2.இருக்கிற சொத்தை எல்லாம் இழந்து ஆண்டியாகச் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
3.தங்கம் செய்ய முடியும் என்ற இந்த ஆசை பேய் மனமாக மாறிச் சுற்றுபவர்கள் இன்று நிறைய உண்டு.

செய்து செய்து பார்த்த பின்… என்னிடமே (ஞானகுரு) அதைக் காண்பித்து தங்கமாக வந்து விட்டதா…? பார்த்துச் சொல்லுங்கள்…! என்று என்னைச் சுற்றியவர்களும் உண்டு.

ஏனென்றால் குருநாதர் ஒரு சமயம் ஒரு இரும்புக் கரண்டியும் ஈயக் கட்டியையும் எடுத்து வா என்று சொன்னார். காட்டிற்குள் அழைத்துச் சென்றார். பல குப்பைகளை எடுத்து வரச் சொல்லி அதை எல்லாம் போட்டு வேக வைடா… தீயை வைத்து ஏரிடா…! என்றார்

அவர் சொன்ன இடங்களிலே தேடித் தேடித் தேடி… இந்த இடத்தில் இந்தக் குப்பையை எடு… இன்ன இடத்தில் இந்தக் குப்பையை எடு…! என்று எனக்கும் தெரியாமலே இதைச் செய்தார்.

அவர் சொன்ன இடத்திலிருந்து குப்பைகளை எடுத்துக் கொண்டு வந்தேன். போட்டு எல்லாவற்றையும் எரித்த உடனே இந்த உணர்வுகள் பட்டவுடனே ஈயம் தங்கமாக மாறிவிட்டது

ஆசாரியிடம் கொடுத்து உறைத்து பார்த்த பின் அடேயப்பா… இது உயர்ந்த தங்கமாக இருக்கின்றது இதிலே இன்னும் செம்பைச் சேர்க்கலாம்… உயர்ந்த தங்கமாக இருக்கிறது..! என்று சொல்லுகின்றார்.

அட… நீ இந்தச் சாமியாரிடம் (குருநாதரிடம்) சுற்றிக் கொண்டிருப்பது எதற்கு…? என்று இப்பொழுது தான் எனக்குத் தெரிந்தது நீ எவ்வளவு வேண்டுமானாலும் கொண்டு வா என்று அந்த ஆசாரி சொல்கின்றார்.

அதற்குப் பின் நான் என்ன செய்தேன்…?

குருநாதர் எந்தெந்த இடத்தில் குப்பைகளை எடுத்து வந்து அதைச் செயல்படுத்தச் சொன்னாரோ அதே மாதிரி நானாகவே செய்து பார்த்தேன் தங்கமாகிவிட்டது.

தங்கமான பின் கொண்டு போய் விற்று விட்டு வந்தேன் வந்த பின் குருநாதர் என்ன சொன்னார்…?

இங்கே வாடா…! என்றார்.

என்னிடம் இருந்து காசை எல்லாம் வாங்கிக் கொண்டார். இங்கே எத்தனையோ பேர் வாடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் இந்தக் காசைக் கொடு என்றார். எனக்கு ஒரே ஒரு ரூபாய் மட்டும் கொடுத்தார்
1.இனிமேல் இந்த மாதிரியான வேலையைச் செய்யாதே.
2.இதைத் தெரிந்து கொண்ட பின் உன் எண்ணம் எங்கே செல்கின்றது…? உன் ஆசை எங்கே செல்கின்றது…?
3.உன் மனதைத் தான் நான் தங்கமாக்கச் சொன்னேன்
4.தங்கத்தைச் செய்ய வேண்டும் என்று நீ ஆசைப்பட்டால் உன் மனம் பித்தளை ஆகிவிடும்… இரும்பாகப் போகும்… துருப்பிடித்து விடுமடா…!
5.இந்த வேலையை இனிமேல் செய்யாதடா…! என்று காசை எல்லாம் பிடுங்கிக் கொண்டார்.

ஆசை யாரை விட்டது…! குருநாதர் தங்கத்தைச் செய்தார். நான் பார்த்தேன்… எனக்கும் அந்த ஆசை வருகிறது.

ஏனென்றால் இரண்டாம் தடவை நான் தங்கம் செய்து விற்கும் போது “தங்க நகை செய்பவர்கள்… நீங்கள் எதை எதைச் செய்ய வேண்டுமோ செய்து கொடுங்கள். நாங்கள் விற்றுத் தருகின்றோம்… உங்களுக்கு வேண்டிய கட்டடம் எல்லாம் கட்டித் தருகிறோம்…!” என்று சொல்கின்றார்கள்.

இப்படியும் ஆள்கள் வருகின்றார்கள்… உடலின் இச்சைக்கு நிறையப் பேர் வருகின்றார்கள். காரணம்
1.இந்த ஆசை எப்படித் தூண்டுகின்றது…?
2.மனிதன் எப்படி வாழ்கின்றான்…? என்ற நிலைகளை எல்லாம் அனுபவபூர்வமாகக் காட்டினார் குருநாதர்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறேன்…?

உங்கள் வாழ்க்கையில் வரும் இருளை அகற்றிப் பேரருள் என்ற உணர்வுகளை வளர்த்துப் பிறவில்லா நிலைகள் அடையும் நல்ல சந்தர்ப்பத்தை உருவாக்குவதற்குத் தான் இந்த உபதேசம்.

அதன் வழி நீங்கள் செயல்பட்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கணவனும் மனைவியும் பெற்று வசிஷ்டர் அருந்ததி போன்று வாழ்ந்து… நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து… சாவித்திரியைப் போன்று இரு உயிரும் ஒன்றி இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றி… நஞ்சினை வென்று பேரருள் பேரொளி பெற்று… பெருவீடு பெருநிலை என்ற நிலையை அடைதல் வேண்டும்.

உங்கள் பார்வையில் உங்கள் குடும்பத்தில் தீமைகள் அகற்றப்பட வேண்டும். உங்கள் பார்வையில் உங்கள் குழந்தைகள் அருள் ஞானக் குழந்தைகளாக வளர வேண்டும்.

கல்வியில் சிறந்த ஞானமும் கருத்தறிந்து செயல்படும் திறனும் உலக ஞானம் பெற்றிடும் அருள் சக்தி பெற்ற குழந்தைகளாக வளர்ந்திட வேண்டும். அதன் வழி நீங்கள் எல்லோரும் வாழ வேண்டும் என்று நான் (ஞானகுரு) வேண்டிக் கொள்கிறேன்.