மாய ரூபத்தைக் காண விரும்ப வேண்டாம்… அதைக் கண்டு ஏமாறவும் வேண்டாம்…!

மாய ரூபத்தைக் காண விரும்ப வேண்டாம்… அதைக் கண்டு ஏமாறவும் வேண்டாம்…!

 

இயேசுவே நம… புத்தா நம… முகமது நபியே நம… ஐயப்பனே நம…! என்னும் போதெல்லாம்…
1.உன் மனதை ஒருநிலைப்படுத்தும் போது
2.நீ சொன்ன நாமத்தில் உள்ள “சித்தர்களை” நீ காண முடியும்.

அவ்வழியில் வந்தவர்கள் தான் போக மாமகரிஷியும் அகஸ்திய மாமகரிஷியும் கொங்கணவ மாமகரிஷியும். அதே சமயத்தில் உன் நினைவில் “உன் அறிவிற்கு எட்டாத பல ரிஷிகளும்” உருவமுடன் வருகின்றார்கள்.

உன் தியானத்தில் தெரியும் விநாயகரும் லட்சுமி சரஸ்வதி இராமர் கிருஷ்ணர் முருகர் எல்லாமே ஈஸ்வர சக்தியில் வரும் “மாய ரூபங்கள் தான்…”
1.முதலில் சொன்ன சித்தர்கள் எல்லாம் தன் உருவில் வந்து… தான் பெற்ற சக்தியினால் ஆசீர்வாதம் செய்வார்கள்.
2.பின் சொன்னவர்கள் எல்லாம் ஈஸ்வர சக்தியில் வரும் மாயாஜால ரூபங்கள் தான்.

ஈஸ்வரனை எண்ணும் பொழுது… ஈஸ்வரா…! முருகா…! விநாயகா…! என்று யாரை அழைத்தாலும் வருவது அச்சக்தியின் மாய ரூபமே…!

1.அவனுக்கு உள்ள பெயர் ஆயிரம்.
2.இந்த உலகமே அவனது…
3.எந்த ரூபமும் எந்தச் செயலும் செய்பவனும் அவனே.
4.உன்னுள் இருப்பவனும் அவனே என்னுள் இருப்பவனும் அவனே.
5.அவன் சக்தியைப் பெற்ற பயனால் வந்தவர்கள் தான் பல கோடிச் சித்தர்களும் ஞானிகளும் ரிஷிகளும்.

அவனின் சக்தியை உணராமல் தன்னிலையை மறந்து வெறும் வெறியாட்டங்களில் வாழ்ந்தவர்கள் எல்லோரின் நிலையும் வெறியுடனே… அத்தகைய அணுவின் தன்மையாக இவ்வுலகைச் சுற்றிக் கொண்டுள்ளது.

இப்பூவுலகில் பிறந்த நீங்கள் அவரவர்களுடைய பூர்வ புண்ணிய பலனை வைத்து… அச்சக்தியின் அருளைப் பெற்று நல்வழிக்குச் சென்றால்… போகனையும் கொங்கணவனையும் அகஸ்தியனையும் மிஞ்சலாம்.

ஆனால் இப்பூமியில் பிறந்து… அவனுடைய சக்தியை உணராமல் தன் வழியில் தன் சுகத்தை நாடி; உடல் சுகத்தை நாடி; பல அற்ப ஆசைகளில் தன் மனதைச் சிதறடித்து; பாவ புண்ணியங்களைப் பார்க்காமல் இருப்பவனை எல்லாம்…
1.இரண்டாம் நிலையில் சொன்ன இவ்வுலகைச் சுற்றியுள்ள தீய அணுக்கள் வெறியுடன் உள்ள அணுக்கள்
2.தன் விரோதத்தை முன் ஜென்ம விரோதத்தை எந்த நிலையிலும் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று இருப்பது.

மறு ஜென்மம் எடுத்தாலும்… பிறந்து வளர்ந்து நினைத்ததை முடிக்க வேண்டும் என்பதனால் மறு ஜென்மம் எடுக்கும் முதலிலேயே… அவ்வணுவான ஆவி “இச்சஞ்சலமான புத்தி உள்ளவனின் உடலில்” அண்டிக் கொள்கின்றது.

அதன் விரோதத்தைத் தன் கோபத்தை எந்நிலையிலும் பழிபாவத்தைத் தீர்த்துக் கொண்டுதான் மறு ஜென்மம் எடுக்கிறது (அந்தக் கெட்ட ஆவி).

அதனால் தான் மனிதர்களை
1.நல் நிலையில் இருங்கள்… தெய்வப் பற்றுடன் இருங்கள் தேவனை நம்புங்கள் என்றெல்லாம்
2.அன்றுள்ள சித்தர்கள் பல கோடிக் கோவில்களையும் பல தெய்வங்களையும் தானாகவே கற்பனை செய்து
3.முருகனையும் விநாயகரையும் லட்சுமி சரஸ்வதி என்று பல நாமங்கள் உள்ள தெய்வத்தின் சிலைகளை எல்லாம் பிரதிஷ்டை செய்து வைத்தார்கள்.
4.ஆகவே மனிதனின் நிலையை ஒருநிலைப்படுத்தத்தான் கோவில்கள் எல்லாம்.

இவர்கள் நினைத்துக் கொண்டார்கள் முருகனும் விநாயகனும் பிறந்தார்கள். முருகனுக்கு மனைவிமார்கள் குடும்பமெல்லாம் மனிதர்களால் சொன்ன கதைதான்… மனிதர்களுக்குச் சொன்ன கதைகள் தான் இவைகள் எல்லாம்.

நல்வழியில் புகட்டிய எல்லாவற்றையும் நாசமாக்கி விட்டார்கள் பெரும் நாசக்காரர்கள்.

கடவுள் என்றாலே வெறுக்கும் தன்மையில் அவரவர்களின் பிழைப்பிற்காகவும் பொழுது போக்கிற்காகவும் “கடவுளை ஒரு கருவியாக்கி… விளையாட்டுப் பொம்மையாக்கி விட்டார்கள்…!”

முருகன் படம் எழுதுபவனுக்குக் காசு… படத்தைத் தீட்டுபவனுக்கும் காசு… பட்த்தை விற்பவனுக்கும் காசு… முருகனைப் பற்றிய பாடலைப் பல கோணத்தில் திரித்துத் திரித்து எழுதுபவனுக்கும் காசு… அதை விற்பவனுக்கும் காசு.

ஆனால் முருகனின் நிலையை ஒருநிலைப்படுத்துபவன் எவனும் இல்லை.

1.முருகனையும் தெய்வத்தையும் அவ்ஈஸ்வர சக்தியையும் பிழைக்கும் வழிக்குத் தான் ஒவ்வொருவனும் அழைக்கின்றான்.
2.கோவிலுக்குச் செல்பவன் எல்லாம் தன் குறையெல்லாம் அத்தெய்வம் போக்கித் தனக்கு அருள வேண்டும் பெரும் செல்வத்தைத் தர வேண்டும்
3.எந்தச் செல்வத்தை…? பொருட்செல்வத்தினை நாடித்தான் செல்கின்றான் தேவனையும் நாடி.

எவனப்பா வருகின்றான் தன்னிலை உணர…?

தன் நிலை உணர வேண்டும் என்றால் என்ன…? என்பதே இந்த மானிடர்களுக்குப் புரியாமல் இருக்கும் பொழுதே இவர்களுக்கு எப்படி வந்திடும் தியான நிலை…!

அத் தெய்வமான ஈஸ்வர சக்தியின் நிலையினைக் கேட்டவர்கள் கேட்டு நல்லாசி பெற்றிடட்டும்.

ஆவி நிலையைப் பற்றிச் சிறு அளவு உங்களுக்குள் புகுத்தி உள்ளேன். நீ வணங்கும் உன் குலதெய்வம் என்பது யாரப்பா…? சௌண்டம்மன் அங்காளம்மன் காளியம்மன் எல்லோரும் யாரப்பா…?

மாரியம்மன் என்பவளும் அம்மன் தான். அந்த அம்மன்கள் எல்லாம் யாரப்பா…? இந்நிலை உனக்கு புரிந்திட்டதா…? இவ் அம்மன்கள் நிலை எல்லாம் பெரும் தெய்வீக நிலையில் உள்ள ஆக்ரோஷமாக உள்ள ஆண்டவனின் சக்தியைப் பெற்ற பெரும் ஆவிகள் தான்.

அவ்வாவியின் நிலையிலிருந்தே சக்தியின் ரூபத்தில் அருளைப் பெற்று நீ நினைக்கும் நேரத்தில் உன் நினைப்பினுள்ளே வந்து ஆசீர்வாதம் தருகின்றார்கள்.

ஆனால் அம்மன்களின் சக்தி எல்லாம் பெரும் ஆக்ரோஷமான நிலையில் உள்ளது தான். அதனால்தான் இவ்வம்மன்களின் ஆவிகள் சிறு வேண்டுதலைக் கூட நாம் அளிக்கா விட்டால்… தன் நிலையில் வந்து ஆவி நிலையில் வந்து எப்படியும் உணர்த்திப் பிடுங்கிக் கொள்ளும்… செய்யாதவர்களைப் பழி தீர்த்துக் கொள்ளும்.

அதனால் தான் பெரும் ஆக்ரோஷ நிலையிலுள்ள சக்திகள் என்று சொன்னேன். ஈஸ்வர சக்தியை பெற்ற இவ்வம்மன்களுக்கே பார்த்தாயா ஆக்ரோஷத்தை.

1.பெரும் சாந்த நிலை எய்திவிட்டால் இன்றுள்ள போகனின் நிலை… அது இவ் உலகை ஆளும் ஈஸ்வரனுக்கே ஆனந்தமூட்டும் நிலை.
2.அந்நிலை பெற்ற போகனை முருகா என்று அழைத்திட்டால் எந்நிலையிலும் அருளுடன் அன்புடன் அருள் புரிகின்றான்.
3.அவனின் நிலையை எண்ணிவிட்டால் பெரும் ஆனந்தமும் பெரும் செல்வமும் கிடைக்குமப்பா…!

(என் நிலையே எனக்குத் தெரிவதில்லை – ஈஸ்வரபட்டர்) இந்நிலையில் உன் நெஞ்சமெல்லாம் பூரிக்கின்ற தன்மையைப் பார்த்தாயா.
1.நீ உணர்ந்திட்டாய் இந்நிலையில் உள்ள உன் நிலையை…
2.இன்று உனக்கு உள்ள நிலை… சுவாச நிலை… பெரும் பொக்கிஷமான நிலை.
3.அவன் அருளைப் பெற்றிட்டால் எந்நிலையும் கைகூடும்.
4.அவன் அளிக்கின்றான் இப்பொழுது உன் நிலையை எண்ணிப் பெரும் சந்தோஷமும் பூரிப்பும் கொண்டு…!

இந்நிலையில் அவனை (போகரை) எண்ணி நீ தியானத்தில் இருந்திடப்பா.

அவன் வருவான்…! உன் நினைவிலும்; உணர்விலும்; உடலிலும்; அணு அணுவாக; ஆனந்தமயமாக உன்னை வந்து அண்டிடுவான்…!

புதிய உலகை நான்(ம்) படைப்பேன்(போம்)

புதிய உலகை நான்(ம்) படைப்பேன்(போம்)

 

“நானேதான் நான்…” என்னும் நிலை எல்லோருக்கும் வேண்டும். நான் என்னும் “அகந்தை” தான் வேண்டாம்.

நான் என்பதை அகற்றிடுங்கள்… நான் என்னும் சொல்லை விட்டுவிடுங்கள்…! என்று சொல்கின்றார்கள். ஆனால்
1.குழந்தையின் பருவத்திலேயே ஊட்டி விடுவதெல்லாம் “நான்” என்னும் சொல்லைத்தான்.
2.வளர்ந்த பிறகு “நான் என்பதை அகற்றிவிடு” என்று சொல்கின்றார்கள்.

ஆக… தன் நிலை உயர்ந்தால் தான் பிறரை உயரச் செய்ய முடியும்.

தன் நிலை என்னும் பொழுது நான் என்னும் நிலை தான் வரும்… நம் நிலை என்று எப்படி வரும்…? ஆகவே நான் என்பதை அகற்றிடுங்கள் என்பதன் பொருளைப் புரிந்து கொள்ளுங்கள்.

“நான்” என்பதையே புரியாமல் செய்வது தான் நான் என்பதெல்லாம்

குயவன் ஒரு மண் பானையைச் செய்துவிட்டு “நாம் செய்தோம்” என்று சொல்ல முடியுமா…? நான் தான் செய்தேன்…! என்று சொல்வான்.

தான் செய்யும் செயலுக்கு… செயல் என்பது தொழிலுக்கோ பிழைப்பிற்கோ உண்ணுவதற்கோ “அந்த நான்” வேண்டும். அந்நிலையில் நான் இருந்தால்தான் தன் நிலையையே பார்த்திட முடியும்.

1.நான்…! என்ற அகந்தை ஆணவம் பொறாமை பழிச்சொல்…
2.என்னைத் தவிர யாருக்கும் ஒன்றும் தெரியாது என்னும் நிலையில் இருந்து கொண்டு பிறரைப் பழிக்கும் நிலை
3.அந்த நிலையில் உள்ள நான் தான் வேண்டாம் என்பது.

நான் என்பதற்கு நான் எதிரி அல்ல…! குழந்தை தன் படிப்பில் ஒரு ஓவியத்தை வரைகிறது. அதை யார் செய்தார்கள்…? என்றால் கேட்டால் “நான் செய்தேன்…” என்று சொல்லக் கேட்டால் அது எவ்வளவு பெருமை…?

அதில் உள்ள அழகு வளர்ந்த பின்னும் இருந்து விட்டால்… அந்த நான் இருந்தால்தான் உலகமே அழகுபடும். அந்த நானில் இருந்திடுங்கள்.
1.நான் செய்திடுவேன் நல்ல காரியத்தை
2.நான் செய்திடுவேன் நல் தியானத்தை
3.நான் தியானம் செய்து நல் அலைகளைப் பரப்பிடுவேன்

இந்த நானை அகற்றாதீர்கள்.

1.மனத்தில் நல் மனமும் உள்ளது தீய மனமும் உள்ளது
2.நானிலும் நல் நானும் உள்ளது தீய நானும் உள்ளது.
3.மனம் எல்லாம் ஒன்றுதான்… நானும் ஒன்று தான்…!

அதைப் பிரிக்கும் வழி தான் நமக்கு வேண்டும்.

ஒரு இயந்திரமோ சமயலோ எதுவாக இருந்தாலும் ஒருவர் செய்வதைப் பார்த்துவிட்டு அவன் செய்து விட்டான்… ஏன் நான் செய்ய முடியாதா…? என்ற நான் வேண்டும்.

மனிதனுக்கு எப்படி ஆசை வேண்டும் என்று சொன்னேனோ அது போலவே “நானும்” வேண்டும். நானுக்கு நான் எதிரி அல்ல…!

ஒரு நல் வழியை நிலைநாட்டிட… “நான் அதைச் சொல்கிறேன்” என்னும் சொல்லில் தவறில்லை.
1.தீய வழிக்குத் தான் நான் என்பதை அகற்றிட வேண்டும்.
2.நான் என்பது நான் என்ற அந்த அகந்தையை அகற்ற வேண்டும்.

ஒரு நிலையில் இருந்திடுங்கள் ஒற்றுமையுடன் இருந்திடுங்கள்.

இன்றைய உலக நிலையில் எல்லாம் ஒரு நிலையும் ஒற்றுமையையும் பறந்திட்டது… கால நிலையைக் கருத்துரைத்தேன்.

குறுகிய காலம் என்றேன் பார்த்தாயா பதட்ட நிலையை…! பரஞ்ஜோதி வடிவானவனே பார்க்கின்றான் இப்பாருலகில் உள்ள நிலை எல்லாம். பகர்வதற்கு என்ன உள்ளது…? இப்பாரின் நிலையை…!

ஆகர்ஷண சக்தி எல்லாம் அழன்று உள்ளது அழிவின் நிலையில்.

கால நிலை மறந்து விடாதே கால நிலையை மறந்து விடாதே காத்திடுவாய் கல்கியுடன் கலந்திடத் தான்…!
1.அழிவு நிலையில் எல்லாம் அழியும் போது நான் இருந்து என்ன பயன்…? என்ற எண்ணம் நமக்கு வேண்டாம்.
2.நம் உயிரின் ஆசைக்காக “நாம் மட்டும் வாழ வேண்டும்” என்ற எண்ணத்திற்காக இருக்கச் சொல்லவில்லை.

உலக நிலையே அழிந்து விட்டால் நாம் வாழ்ந்த நிலைக்கு என்ன பயன்…?

பிறந்த பயனைப் போற்றிடச் செய்யுங்கள் போற்றிடச் செய்யுங்கள் என்பது பிறர் போற்றுவதற்காக அல்ல. புதிய எண்ணம் புதிய செயல் அதைப்போல் புதிய உலகத்தையும் கண்டிடுங்கள்.

சித்திரம் தீட்டிடுவேன் சித்திரம் தீட்டிடுவேன்
சிந்தை உள்ள சிவனின் சித்திரம் தீட்டிடுவேன்
சிவனின் சக்தியெல்லாம் சிந்தையில் வந்திடவே
சித்திரம் தீட்டிடுவேன்
சிவனாரின் ஆசி பெற்றிடவே சித்திரம் தீட்டிடுவேன்
சிவ சிவா என்னும் நாமத்தில் சிந்தை எல்லாம்
கலங்கிடாமல் இருந்திடவே சித்திரம் தீட்டிடுவேன்
சிவ பாக்கியம் பெற்றிடவே சித்திரம் தீட்டிடுவேன்
சிவன் அருளைப் பகர்ந்திடவே சித்திரம் தீட்டிடுவேன்
சிவன் சித்திரம் தீட்டிடுவேன்
(சிவன் சக்தி நடனக்காட்சி)
சிவ நடனம் கண்டிடவே
சீற்றமெல்லாம் குறைந்திடவே
சிவ பாதம் பணிந்து நின்றே சித்திரம் தீட்டிடுவேன்
சிங்கார மழலையிலே
சிரிக்கும் சிரிப்பில் எல்லாமே
சிந்தையுள்ளே மகிழ்ந்திடவே
சித்திரம் தீட்டிடுவேன் சிவனின் சித்திரம் தீட்டிடுவேன்
சிறு சிறு பூவின் மணத்தில் எல்லாம்
சிந்தையில் மனதை ஏற்று
சிவாய நம ஓம் சிவாய நம ஓம்
சிவ சிவாய நம ஓம் சிவ சக்தி நம ஓம்
சிவனின் நாமத்தை ஓதிடவே சித்திரம் தீட்டிடுவேன்…!

தாய்க்குச் செய்ய வேண்டிய சேவை

தாய்க்குச் செய்ய வேண்டிய சேவை

 

பூமிக்குள் வெப்பத்தின் தணல் ஆகும் போது ஆவியின் தன்மை அடைந்து ஆவி எடையற்றதாக மாறி மேலே செல்கின்றது.
1.வெப்பத்தினால் எடையற்ற தன்மை மாறினாலும் அதிலே மின்னல்கள் தாக்கப்படும்போது
2.இலகுவாக இருந்த மேகக் கூட்டத்திற்குள் சக்தி வாய்ந்த நட்சத்திரங்களின் உணர்வலைகள் பரவுகின்றது.

அந்த நட்சத்திரத்தின் உணர்வலைகள் படரப்படும் பொழுது அழுத்தத்தின் தன்மை ஒரு பக்கம் மோதி… மற்றொரு பக்கம் மோதும்போது மழையாகப் பெய்கின்றது.

இப்படி அந்த மேகக் கூட்டத்திற்குள்
1.ஆவியின் தன்மையும் ஒளிக்கற்றைகளும் இணைந்து மழையாகப் பெய்யும் பொழுது நீராக வருகின்றது.
2.அதனால் தான் மழை நீர் பெய்யும் பொழுது தாவர இனங்களுக்கு அது உரமூட்டும் உணரவின் சக்தியாகக் கிடைக்கின்றது.

மழை நீர் பெய்தாலே தாவர இனங்கள் அதிகமாகச் செழித்துக் கொழுத்து வளரத் தொடங்குகிறது. ஏனென்றால் “அந்த மின் கதிர்கள்… அதனுடைய இயக்கம் துடிப்பின் தன்மையைக் கூட்டுகின்றது…!”

பல கோடி உணர்வுகள் பெற்று நாம் மனிதனாக வளர்ச்சி அடைந்த நிலையில் அந்த மேகக் கூட்டத்தை எண்ணி அருள் மகரிஷிகளின் உணர்வின் சக்தி அதிலே படர வேண்டும் என்று அந்த உணர்வுகளைச் செலுத்த வேண்டும்.

இத்தகைய உணர்வுகள் கலந்த மழை நீராக நம் பூமியில் பெய்யும் பொழுது
1.அது தாவர இனங்களில் உள்ள தீமைகளை அகற்றவும்
2.மக்கள் வாழும் பகுதியில் மழையாகப் பெய்யும் பொழுது அருள் உணர்வின் அறிவாக எல்லோரையும் இயக்க இது உதவும்.

எல்லோரும் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் பாய்ச்சும் இந்த அருள் சக்திகள் மழை நீர் வழியாகக் கலக்கப்பட்டு வாழ்க்கையில் நல்ல நிலை பெறச் செய்யும்.

ஒவ்வொரு உயிரும் (கடவுள்) ஈசன் என்றும்… அவனால் உருவாக்கப்பட்ட அந்த உடல்கள் ஆலயம் என்றும்… மனித உடலை உருவாக்கிய உயர்ந்த சக்திகள் அங்கே தெய்வங்களகக் கொலுவீற்றிருக்கிறது என்றும்… நாம் மேலே சொன்ன நிலைகளைச் செயல்படுத்தினால்
1.இது நம்மை அறியாமலே நமக்குள் நன்மை பயக்கும் சக்தியாகிறது…
2.அதே போல் நம்மை அறியாது அனைவருடைய நிலைகளும் நலம் பெறும் சக்தியாக விளைகின்றது.

எந்தப் பூமியில் பிறந்தோமோ அதுவே நமக்குத் தாயாகின்றது. அந்தத் தாயின் மடி மீது தான் நாம் அமர்ந்துள்ளோம். பூமித் தாயின் சக்தியைக் கூட்டி தீமை புகாது தூய்மைப்படுத்தும் உணர்வுகளை நாம் ஒவ்வொருவரும் செயல்படுத்தும் போதுதான் இந்தப் பூமியும் தூய்மையாகிறது.

நம் தாய்க்கு செய்யும் சேவையே இது தான்.
1.ஆகவே ஒவ்வொருவரும் இந்தப் பூமியான தாயைக் காக்கவும்
2.உயிரைக் காக்கவும் முயற்சி எடுங்கள்.

தாயால் உருவாக்கப்பட்ட “இந்த உடல்” நம்மை எத்தனையோ வகையில் பேணிக் காத்தது. ஆகவே தாயின் உணர்வே இந்த உடல். இந்த தாயான உடலைக் காக்க வேண்டும்… தாயின் உடலில் பெற்ற உணர்வுகள் தாயான நிலையில் காக்கப்பட வேண்டும் என்று இந்த உண்மையின் உணர்வைப் பெற்றால் மனிதன் தெளிவாகின்றான்.

மனிதன் தெளிவாகும் போதுதான் தெளிந்த உணர்வு கொண்ட உயிராகின்றது. உயிருடன் ஒன்றும் உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது.

அத்தகைய உயர்ந்த நிலையைப் பெற்று குரு காட்டிய அருள் வழியில் பேரின்பத்தைப் பெறுவோம்… பெரு வாழ்வு வாழ்வோம். பிறவியில்லா நிலை அடையும் நிலையாக… முழுமை பெறும் உணர்வை வளர்ப்போம். உலக மக்கள் அனைவரும் இந்த நிலை பெற தியானிப்போம்… தவமிருப்போம்.

“தர்மயுத்தம்” என்ற பெயரில் ஞானிகள் கொடுத்த உண்மையையே தலைகீழாக மாற்றி விட்டார்கள்

“தர்மயுத்தம்” என்ற பெயரில் ஞானிகள் கொடுத்த உண்மையையே தலைகீழாக மாற்றி விட்டார்கள்

 

ஒவ்வொரு காலத்திற்குள்ளேயும்…
1.ஆதியில் இருந்து இன்று வரையில்
2.காலத்துடன் ஒன்றி கடவுள் என்பவர் பிறக்கின்றார்… அவதாரம் எடுக்கின்றார்

நீ அறிந்த காலம் வரை சொல்கின்றேன்.

சிவனாகப் பிறந்ததும் அவனே; சிவனின் மகனாக வந்ததும் அவனே; இராமனின் காலமும் அவனே; கிருஷ்ணனும் அவனே; நபியும் அவனே; இயேசுவும் அவனே; புத்தனும் அவனே…!

புத்தரின் காலத்திற்குப் பின் கடவுளின் சக்தியைக் கொண்டு அவதாரம் யாரும் எடுக்கவில்லை. இராமாவதாரம் கிருஷ்ணாவதாரம் நபி புத்தர் இயேசு ஆகியோர் ஞான அருள் பெற்ற “ஞான தீபங்கள்” ஆவர்.

சிவனும் சித்தர் தான்…! அன்றும் அவதாரம் எடுத்தார் “இன்றும் அவதாரம் எடுத்திருக்கின்றார்…!” அன்றுள்ள காலத்தில் மக்களால் ஏற்றுக் கொள்ள முடிந்தது. இக்காலத்தில் மக்களின் மனமே மாறிவிட்டது.

கலியின் தன்மையைப் பார்த்தாயா…?

கலியின் தன்மை எல்லாம் மாற்றிடத் தான் மானிடருக்குத் தியானத்தைப் பற்றி சொல்கின்றேன் கல்கியின் தன்மையில் வந்து விட்டால் காவியத்தில் வந்துவிடும்… கருத்துடன் எல்லாம் நடந்து விடும் கர்ம பயனைப் பெற்றுவிடலாம் காவியத்தன்மையில் இடம் பெற்றிடலாம்.

இக்கலியுகத்தின் எண்ணமெல்லாம் காவியத்தில் நிலைத்திடாது காலப்போக்கில் அழிந்துவிடும்.
1.பறக்கும் மனிதனை இனி நீ காண்பாய்
2.பாரினில் உள்ள நிலை எல்லாம் பார்த்திடலாம்

பழிக்கும் எண்ணம் தான் இன்று உள்ளது பழிவாங்கிடும் நிலையே தான் இருக்கின்றது. நல்லதை எண்ணும் நிலை இல்லை… தூற்றிடும் உள்ளங்கள் தான் உண்டு.

கலியில் பிறந்த மனிதன் எல்லாம் காவியத்தில் வந்திடுவானா…? உன் அறிவுக்கு எட்டும் விஷயங்களை எல்லாம் சிறுகச் சிறுகப் பகிர்ந்திடுவேன்.

இராமாவதாரத்தைப் பற்றி விளக்கங்கள் சொன்னேன்… சிறு புள்ளிதான் அது…! கிருஷ்ணாவதாரத்தின் நிலையைப் பார். கிருஷ்ணனின் கதையிலேயே “கிருஷ்ணரின் பிறப்பின் ஜாதகத்தைக் கணித்து விட்டார்கள்…”

கிருஷ்ணனின் அவதாரம் என்ற நாளில் தான் ஜாதக நிலையும் வந்தது
1.பெரும் குறை (குழப்பம்) நிலையும் வந்தது.
2.மனிதனின் நிலையையே மாற்றியது கிருஷ்ணாவதாரக் காலத்தில் தான்.

இராமாவதாரம் முடிந்து கிருஷ்ணாவதாரம் ஆரம்பிப்பதற்குள் மனிதரின் நிலை எல்லாம் சிறிது சிறிதாக மாறிவிட்டது. கிருஷ்ணாவதாரத்தில் தோன்றிய சித்தன் தான் கிருஷ்ணாவதாரம் என்ற நூலையும் எழுதியவன்.

கிருஷ்ணன் என்பவன் பிறந்தானா…? பிறந்து வெண்ணையை அவன் உண்டானா…? வாயைத் திறந்து உலகத்தன்மையே காட்டினானா…? கிருஷ்ணன் என்பவன் யாரப்பா…?

மனிதர்கள் தங்களுடைய நிலைக்காக இராமாவதார நூலில் உள்ள “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற நிலையையே மாற்றி கிருஷ்ணாவதாரம் என்ற நூலில் கிருஷ்ணனுக்குப் பல மனைவிகளை அமைத்தார்கள்.

இராமாவதாரத்தில் உள்ள நிலையிலும் கிருஷ்ணாவதாரத்தில் உள்ள நிலையிலும் உள்ள மாற்றங்களைப் பார்த்தாயா…? இராமாவதாரத்தில் தந்தை சொல் தட்டாத தனயனும் சகோதரப் பற்றுமுள்ள தமயனையும் காணலாம்.

தர்மம் நியாயம் என்பதெல்லாம்
1.கிருஷ்ணாவதாரத்தில் தர்மயுத்தம் என்ற நிலையிலேயே அழிந்து விட்டது.
2.பெரும் சூதும் சூதாட்டமும் கிருஷ்ணாவதாரத்தில் அமைந்ததுவே.
3.தன் நிலை உயர்ந்திட எந்த நிலையிலும் இருக்கலாம் என்னும் பழக்கமே கிருஷ்ணாவதாரத்தில் தான் வந்தது.
4.சொல்லும் செயலும் மாறியதும் கிருஷ்ணாவதாரத்தில் தான்.

சித்தன் எழுதிய கீதையையே மாற்றி விட்டார்கள். கிருஷ்ணாவதாரத்தில் கீதையின் உபதேசங்கள் எல்லாம் படித்தவுடன் புரிகின்றதா…?
1.பாமரனுக்கும் புரிந்திடும் கீதையைப் பழிக்கும் நிலையில் விட்டு விட்டார்கள்.
2.குருவும் சிஷ்யனும் என்ற நிலையைக் குருடாக்கி விட்டார்கள்.
3.தான் கற்றதைப் பிறருக்குச் சொல்லும் நிலையில் இல்லாமல் மாற்றி விட்டார்கள்.

கோவில் குளங்கள் என்பதையே ஜாதி மதம் என்னும் தன்மையில் ஏற்றி விட்டார்கள். ஜாதியும் மதமும் கிருஷ்ணாவதாரத்தில் வந்ததுதான். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதெல்லாம் கிருஷ்ணாவதாரத்தில் வந்தது.

ஏழை பெருத்தவன் சிறுத்தவன் பெரும் செல்வந்தன் என்னும் நிலையில் கிருஷ்ணரைச் செல்வந்தனாகவும் குசேலரைப் பரம ஏழையாகவும் காட்டியது கிருஷ்ணாவதாரத்தில் தான்.

நூலின் தன்மையையே அவரவர் இஷ்டத்துக்கு மாற்றி விட்டார்கள். கிருஷ்ணாவதாரத்திற்குள்ளே கிருஷ்ணன் என்பவன் இல்லை அப்பா. “கிருஷ்ணா…” என்னும் ஜெபம் ஓங்கிடவே கிருஷ்ணனின் கதையும் வந்ததப்பா.

சக்தியின் சக்தியே அக்கிருஷ்ணன் அப்பா. கிருஷ்ணனின் கதை எல்லாம் மனிதர்கள் (அவர்கள்) சொன்ன கதையப்பா. ஆகவே கிருஷ்ணனின் கதையைப் படித்துக் கிருஷ்ணனே இப்படித்தான் இருந்தான்…! என்னும் நிலை வேண்டாம்

கிருஷ்ணாவதாரக் காலத்தில் மனிதர்கள் இருந்த நிலையை வைத்துத்தான் கதையெல்லாம் உள்ளது. “தர்மயுத்தம்” என்பதும் மனிதர்கள் வைத்த கதை தான்

கிருஷ்ணாதாரத்தில் வந்த கிருஷ்ணனைப் பார்த்தவர் யாரப்பா…? இராமனும் வாழ்கின்றான்… கிருஷ்ணனும் வாழ்கின்றான்… கலியும் வாழுகின்றது கல்கியும் வருகிறது… “எல்லாமே ஈஸ்வர சக்தியின் ஆசியால்…!”

இலட்சுமணக் கோடு

இலட்சுமணக் கோடு

 

சூது வாது பொய் புரட்டு ஆசை கோபம் குரோதம் வஞ்சனை இது தான் இன்றைய உலகம். தர்மம் நியாயம் என்பதெல்லாம் ஒரு சிலருக்குப் பேச்சளவில்தான்.

தான் வாழ வேண்டும்… தன் குடும்பத்தார் வாழ வேண்டும்… தன் சுற்றத்தார் வாழ வேண்டும்… நான் பெரியவனா…? நீ பெரியவனா…? “பிறருக்கு மேல்… தான் “உயர்ந்த நிலையில்” இருக்க வேண்டும்…”

உயர்ந்த நிலை என்பது
1.இன்றைய மனிதர்களுக்குச் சோம்பேறித்தனமாக
2.எல்லா வசதிகளுடனும்… தானாகக் குவியும் பணத்துடனும்… வேலை வெட்டி ஒன்றும் செய்யாமல்
3.எல்லோரும் பார்த்து “நீ பெரிய பணக்காரன்… எல்லா வசதியும் உள்ளவன்” என்று சொல்வது தான்
4.இன்றைய மனிதர்கள் நினைக்கும் உயர்ந்த நிலை.

அவனது உடலை விட்டு ஆன்மா பிரிந்து சென்றாலும் பிரிந்து சென்ற பின் அவனுடைய ஆத்மாவின் நிலையும் அதே நிலையில் தான் இருக்கின்றது. மறு பிறவியிலும் அதே ஆசையுடன் தான் வந்து பிறக்கின்றான்.

1.உள்ளதை வைத்துத் தர்மம் நியாயம் என்பதைக் கடைப்பிடிப்பவன்
2.ஆயிரத்தில் ஒருவன் கூட இல்லை.

ஒவ்வொருவனும் ஒவ்வொரு குறிக்கோளுடன் தான் அவன் பாதையில் செல்கிறான். அந்தந்தக் குறிக்கோள் அவனுக்கு முடிவு பெறுவது இல்லை. அதனால் தான் அவன் மறு ஜென்மம் எடுக்கின்றான்.

சொல்லிய பாடத்தையே திரும்பவும் ஏன் சொல்கிறேன்…? என்று நினைக்கலாம். உங்கள் பாடத்திற்கு முதல் பாகம் இது தான்.

இராமாவதாரத்தில் வால்மீகி எழுதிய கதையில் – (கதை என்று சொல்லாதே…!) எழுதிய நூலில் ஒவ்வொரு சொல்லும் அர்த்தமுடனும் பிற்கால மனிதர்கள் தெரிந்து கொள்ளும் விதத்தில் விளக்கமாக எழுதி உள்ளார்.

அதைப் படிப்பவர்களும் அந்த நூலின் தத்துவத்தைக் கேட்பவர்களும் அதைக் கதையாகத்தான் எடுத்துக் கொள்கிறார்களே தவிர… புரிந்து ஏற்பது இல்லை…!

காட்சி:-
சீதை உட்கார்ந்து இருத்தல்… லட்சுமணன் கோடு போட்டுக் கோட்டைத் தாண்ட வேண்டாம்…! என்று சொல்லிச் செல்தல். இரட்டை மாட்டு வண்டியில் மாடு கோட்டைப் பார்த்துவிட்டுத் திரும்பி செல்கிறது.

இதனுடைய அர்த்தம் புரிகின்றதா…?

1.ஒன்று வேண்டாம் என்று சொல்லும் பொழுது
2.சொல்லியும் அதைத் தாண்டிச் செல்லும் பொழுது “படும் இன்னல்” அந்த நூலில் இருக்கின்றது.

ஆறறிவு படைத்த மனிதனுக்குச் சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடிவதில்லை. ஐந்தறிவு படைத்த மாடு கோட்டைத் தாண்டாமல் திரும்பிச் செல்கிறது.

ஆறு அறிவு படைத்தவன் புரிந்து கொள்ளாததை எல்லாம்… அதாவது…
1.தனக்கு எல்லாம் தெரிந்து விட்டது
2.எல்லா வசதிகளும் கண்டுபிடித்து விட்டோம்
3.இந்த மண்டலத்தில் இருந்து பிற மண்டலத்திற்குக் கூட “செல்லும் வழியைக் கண்டுபிடித்து விட்டோம்…”
4.மனிதனால் முடியாதது ஒன்றுமில்லை…! என்று ஒவ்வொருவரும் எண்ணுகின்றனர்.

ஆனால் ஐந்து அறிவுடைய மிருக வர்க்கங்கள் பறவைகள் புழு பூச்சி இவைகளுக்கு இருக்கும் மனச்சாந்தி கூட எந்த மனிதனுக்கும் இல்லை. எனக்கும் தான்…! (குருநாதர்).

எனக்கும் மனிதர்களை நல்ல வழியில் திருப்ப வேண்டும் என்ற ஆசை ஒன்று இருக்கிறது அல்லவா… அதைத்தான் சொல்கின்றேன்.

இந்தக் கால சூழ்நிலையில் தனி ஒரு மனிதனால் எதுவும் செய்ய முடியாது. காலத்துடன் ஒத்துத் தான் செல்ல வேண்டும்.

1.ஆசையை அடக்க ஈஸ்வர தியானத்தில் இருந்து
2.இந்த யுகம் மாறி அடுத்த யுகத்திலாவது மனிதன் தன்னைத்தானே அழித்துக் கொள்ளாமல்
3.நல்ல நிலையில் இருக்கத்தான் இந்தப் பாடங்கள் எல்லாம்.

பேய் பிசாசு என்பதெல்லாம் உண்மை. பேய் பிடித்து ஆட்டுகிறது என்று சொல்கின்றார்கள். அதுவும் உண்மைதான்…! அவனுடைய மனதே அவனுக்குப் பேய்தான்.

பேயாக இருக்கும் மனதை அடக்கி மனிதனாகி தெய்வமாகலாம். ஒவ்வொரு மனிதரிலும் பேயாகவும் மனிதனாகவும் தெய்வமாகவும் இருக்கின்றார்.

பேயான மனதை அடக்கி மனிதனாகித் தெய்வீக அருள் பெறலாம்.
1.அதற்கு வயது வரம்பு வேண்டாம்.
2.வயதான பிறகு தான் இந்த நிலை என்று எண்ண வேண்டாம்
3.தன்னைத்தானே உணரும் வயது முதற் கொண்டே இந்த நிலைக்கு வரலாம்.

பால்வெளி மண்டலம் எனும் பொக்கிஷம் – MILKY WAY

பால்வெளி மண்டலம் எனும் பொக்கிஷம் – MILKY WAY

 

பூமி எப்படித் தன்னுள் இப்பால்வெளி மண்டலத்திலிருந்து அச்சூரியனின் ஒளிக்கதிரினால் வந்துள்ள அணுக்கதிர்களைத் தனதாக ஈர்த்துப் பல கனி வளங்களை வளர்க்கின்றதோ… அந்நிலை போல் இந்தப் பூமி எனும் மண்டலத்தில் “நம் ஆத்ம மண்டலம் எச்சக்தியையும் கண்டுணர முடியும்…”

இந்தப் பூமியில் சூரியனின் ஒளிக்கதிர் பட்டு இந்தப் பூமியும் நாமும் மட்டும் பயன் பெறவில்லை. இந்தப் பூமிக்கும் மற்ற எல்லா மண்டலங்களுக்கும் பொதுவான இந்தப் பால்வெளி மண்டலத்தில் உள்ள சக்தி நிலையை யார் அறிவார்…?

இந்தப் பால்வெளி மண்டலத்திலும் பல கோடி உயிரணுக்கள் உயிர் பெற்று வாழ்ந்து அந்த நிலையிலேயே மாற்று உடல் பெற்றுப் பல நிலைகள் நடக்கின்றன.

இந்தப் பால்வெளி மண்டலத்தில் பல அமில சக்திகள் நிறைந்தே திரவ நிலையில் படர்ந்துள்ளன. இன்றைய நம் விஞ்ஞானிகள் அதை உணர்ந்தாலும் அந்தத் திரவங்களையும் நம் பூமிக்கு ஈர்த்து எடுத்திடும் நிலைப்படுத்தி அந்த இயற்கையின் சக்தியையே தன் செயற்கையின் அழிவுக்குச் செயல்படுத்தி விடுவார்கள்.

இன்னும் இந்த வான் மண்டலத்தில் எண்ணிலடங்காத சக்தி நிலைகள் படர்ந்துள்ளன.
1.நாம் காணும் நிலைக்கு மேகங்களும் பால் வெளி மண்டலமாகவும் காட்சி அளித்திடும் இந்த பால்வெளி மண்டலத்தினால் தான்
2.அனைத்துக் கோளங்களுமே ஜீவன் கொண்டு சுழன்று கொண்டிருக்கின்றன.

பூமியும் சூரியனும் சந்திரனும் மற்ற எல்லா மண்டலமுமே
1.தன் நிலையில் ஒரே இடத்தில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டுள்ளது என்பது அல்ல.
2.சுழன்று கொண்டே ஒன்றின் ஈர்ப்பில் ஒன்று சிக்காத வண்ணம் சுற்றிக் கொண்டே ஓடுகின்றன.

புதிய புதிய நட்சத்திர மண்டலங்களைக் காணுகின்றோம். ஆனால் தொடர்பு கொண்டு என்றும் காணும் நட்சத்திர மண்டலங்கள் இந்தப் பூமியின் ஈர்ப்பு சக்தி நிலை கொண்டும் இப்பூமியின் அமில சக்தியின் தொடர்பு கொண்ட நட்சத்திர மண்டலங்களாக வாழ்ந்திடும் மண்டலங்களும்
1.இந்தப் பூமியின் ஓட்டத்துடன் தன் ஈர்ப்பு சக்தியையும் ஒன்றுபடுத்தி உள்ளதால்
2.இந்தப் பூமியுடனே அவற்றின் நிலையும் சுழன்று அதன் ஈர்ப்புடனே வருகின்றன.

இப் புதிய நட்சத்திர மண்டலங்கள் தான் இப் பூமியின் ஓட்டத்தினால் அங்கங்குள்ள இந்தப் பால்வெளி மண்டலத்திலிருந்து “ஒன்றுபட்ட அமிலத்தினால்” சிறு சிறு நட்சத்திர மண்டலங்களாக ஆங்காங்கே சுழலும் நட்சத்திர மண்டலங்கள்.

இச்சுழலும் வேகத்தில் ஒன்றின் ஈர்ப்பில் ஒன்று சிக்குகின்றன. சில நட்சத்திர மண்டலங்கள் மாறு கொண்ட அமில சக்தி கலந்துள்ளதாக இருந்தால்… இந்த ஈர்ப்பில் வந்தடையாமல் அதன் நிலையே உருகும் நிலையாகப் பரந்த நிலைப்படுத்தி பிரிந்து விடுகின்றது.

இன்று காணும் நட்சத்திர மண்டலங்கள் யாவையுமே… இப் பூமியைப் போலவும் இவ் பூமியின் நிலைக்கொப்ப வளர்ந்த நிலை கொண்ட பெரிய மண்டலங்களின் நிலை போலவும் இல்லாமல் ஆவியான அமிலங்கள் ஒன்றுபட்டுக் கரையும் நிலை கொண்ட வடிவத்தில் தான் சுழன்று கொண்டுள்ளது பனிக்கட்டியைப் போல்.

பனிக்கட்டி என்பது குளிர்ந்து நீராகும் தன்மையில் உறைந்து உள்ளது. ஆனால் நட்சத்திர மண்டலங்களின் நிலை அதுவல்ல.

அமிலமாக அமிலத்தையே ஈர்த்து அமிலக் கோளங்களாக உயிரணுக்களை வளர்த்திடாமல் சுழன்று கொண்டுள்ளவை.

இந்த பூமியில் உள்ள எல்லா கனிவர்க்கங்களுமே கரைபவை தான்… ஆவி நிலை கொண்டவை தான் என்று ஏற்கனவே உணர்த்தி உள்ளேன்.

சூரியனிலிருந்து வரும் எல்லா நிலை கொண்ட அமிலத்தையும் ஈர்க்கும் நம் பூமியில் மண்ணும் கல்லும் ஈயம் பித்தளை செம்பு தங்கம் வைரம் இதற்கு மேல் சக்தி கொண்ட பல படிவங்களும் கலந்துள்ளன.

நட்சத்திர மண்டலத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலை கொண்ட அமிலத்தை ஈர்ப்பதினால்
1.நம் பூமியில் உள்ள பல நிலை கொண்ட கனி வர்க்கத்தின் நிலை போல் ஒவ்வொரு நிலை கொண்ட நட்சத்திர மண்டலங்கள் பல கோடி உள்ளன.
2.இன்றைய இந்தக் கலியில் தங்கத்திற்குப் பொருளாதாரச் செல்வமாக மதிப்புத் தந்திடும் நிலையில்
3.தங்கத்தையே ஒரு நிலை கொண்ட அமிலமாக ஈர்த்து… நட்சத்திர மண்டலமாக “பல கோடி சுற்றிக் கொண்டுள்ளது…”

இந்தப் பூமியின் கனிவளங்களின் சக்தி நிலை கொண்ட அமிலங்கள் எல்லாமே தனித்துப் பல நிலைகள் கொண்ட நட்சத்திர மண்டலங்களாகச் சுழன்று கொண்டுள்ளன.

இன்றைய மனிதன் விஞ்ஞானத்தினால் பெரிய கோளங்களின் நிலை அறிந்திடச் செல்கின்றான். இந்த சிறிய கோளமான நட்சத்திர மண்டலங்களின் சக்தி நிலையை அறியாததினால்…!

இவை என்ன உலக இயற்கை…?

இவை என்ன உலக இயற்கை…?

 

(16.12.1979 அன்று தினமணிச் சுடரில் வெளி வந்த கட்டுரை)

அயல் நாட்டுக் கார் ஒன்று நீண்ட படகு போல் வீதியில் வேகமாகச் செல்கின்றது. இதை பார்க்கும் ஒருவர் அருகில் நிற்பவரிடம் சொல்கிறார்.

அந்தப் பெரிய காரில் போவது யார் தெரிகிறதா…? கள்ளக் கடத்தல் செய்து பொருள்களைப் பதுக்கி வைத்து அந்தக் குற்றத்திற்காகத் தண்டனை பெற்றாரே… அவர் தான்…!

ஆமாம்…! அவர்கள் தான் இப்படி ஆடம்பரமாக வாழ முடியும்…! என்று பெருமூச்சுடன் கூறுகின்றார் மற்றொருவர்.

அந்த வியாபாரிக்குத் தண்டனை விதித்த “மேஜிஸ்டிரேட்” அந்த வீதியில் உள்ள பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸுக்காக வெயிலில் நிற்கின்றார். 2… 3… பஸ்களில் ஏகக் கூட்டம் அவரால் ஏற முடியவில்லை. “கோர்ட்டுக்கு நேரமாகிவிட்டதே” என்ற துடிப்போடு அடுத்த பஸ்ஸை எதிர்பார்த்து நிற்கின்றார்.

அந்த வீதியிலேயே பெரிய வீடு… ஆடம்பரமான பங்களா…! தொடர்ந்து லஞ்சம் பெற்றதற்காக வேலையில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட அரசாங்க அதிகாரி ஒருவருடைய வீடு அது…! என்பது எல்லோருக்கும் தெரியும்.

அதே வீதியில் கொஞ்சம் தள்ளி… சிறு வீடு ஒன்றில் அந்த வேலை நீக்கம் பெற்றவருக்கு மேலதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவரின் வீடு இருக்கிறது.

அவர் நேர்மையான அதிகாரியாகப் பணியாற்றியவர்… எல்லோராலும் பாராட்டுப் பெற்றவர்… வேலையில் திறமையானவர்…! ஆனால் லஞ்சம் வாங்கும் திறமை அவரிடம் இல்லை.

நான்கு பெண்களைப் பெற்ற அவர் ஓய்வூதியத்தை வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்.

ஆக கலப்படம் செய்பவர்களும் கள்ளச் சந்தையில் வியாபாரம் செய்யும் வணிகர்களும்… லஞ்சம் பெற்றுக் கணக்கில்லாமல் சேர்த்து வரும் செல்வத்துடன் சீரோடும் சிறப்போடும் வாழுகின்றனர்.

அது மட்டுமல்ல…! ஊராரும் அவர்களைத் தான் போற்றுகின்றார்கள்… புகழ்கின்றார்கள். கள்ளச் சந்தையில் ஈடுபடாத வணிகர்களைக் “கையாலாகாதவர்கள்” என்று இழிவாகக் கருகின்றனர்.

கலப்படம் செய்வதற்குப் பயப்படும் வியாபாரிகளைத் “துணிச்சல் இல்லாதவர்கள்” என்று கேலி செய்கின்றார்கள். கயவர்களைப் போற்றும் உலகம் கண்ணியமானவர்களைத் தூற்றுகின்றது.

இதன் பயனாகத் தீயோர்கள் பிறர் மதிக்க வாழுகின்றனர்… நல்லோர்கள் இதயம் நலிந்து ஏங்கி இருக்கிறார்கள். இந்த விசித்திரமான நிலை இன்று போல் அன்றும் இருந்திருக்கின்றது. மனித குலத்தின் இயல்பும் மாறவில்லை அல்லவா…!

பணத்தைப் புகழ்வதும் பண்பாட்டைப் புறக்கணிப்பதும் மனிதனின் மாறாத தன்மை போலும்…! இந்த இழிநிலையினை காணும் நல்லோர்கள் மனம் நொந்து வருந்துவது இயல்பு தானே…!

ஒழுக்கமான வாழ்வே உயர் ஞானத்தின் பயன் என்று உரைத்த மெய்யடியார்கள் இதைக் கண்டு இதயம் இடிந்து போகின்றனர்.

“தீது அவம் கெடுக்கும் அமுதம்” என்று இறைவனை ஏத்தும் ஞானிகளால் தீமை ஓங்குவதையும் நன்மை நலிவடைவதையும் கண்டு எப்படிச் சகிக்க முடியும்…?

பண்புகளுக்கெல்லாம் பகைவர்களாக உள்ளவர்கள் புன்முறுவலோடு பொலிவுடன் வாழுகின்றனர். அன்பு நிறைந்த நல்லோர்கள் நலிந்து ஏங்குகின்றனர்.

எண்ணிலா இத்தகைய துயர் விளைவிக்கும் இது என்ன உலகத்து இயற்கை…! கண்ணனே…! கடல் கடைந்த வண்ணனே…! தாளாது அடியேனை உன் கழலிணைச் சேருமாறு அருள் புரிவாய்…! இந்த வாழ்வு வேண்டாம்…! என்று இதயம் கரைந்து பாடுகின்றார் நம்மாழ்வார்.

நல்லவர்கள் நலிவதும் நல்லோர் அல்லாதவர்கள் நன்கு வாழ்வதும் எதனால்…? மனிதன் தனக்கு வரித்துக் கொண்ட சமுதாய அமைப்பு முறையின் விளைவு தானே…?

அறத்திற்கு மாறான இந்த அவல நிலை அடியார்களின் உள்ளத்தை உலுக்குகின்றது இதைக் கண்டு சகித்துக் கொண்டு இருப்பதை விட உலக வாழ்வை விட்டு மறைவதே உகந்ததாகப் படுகின்றது.

இது மட்டுமா…? தான் உண்ணுவதற்கு என்று பிற உயிர்களைக் கொல்லுகின்றானே மனிதன்…! ஏமாற்றிப் பிடித்தும் வலையில் சிக்க வைத்தும் உயிரினங்களைப் பிடித்து அவற்றைக் கொன்று உண்ணுகின்றான்.

அறம் என்பது என்ன…? என்று அறியாத நிலையில் இவ்வாறு மனிதன் பிற உயிர்களைக் கொன்று உண்ணுகின்றான். கொல்லாமையை விட அறம் ஏது…? இதனை அறியாதவர்கள் உயிர்களைக் கொன்று பசியாறுகின்றனர்.

இதைக் கண்டு சகிக்க முடியவில்லை ஆராவமுதனே…! என்னை உன் திருவடியின் கீழ் அழைத்துக் கொள்… என்னைக் கூவி அழைத்துக் கொள்…! என்று இறைஞ்சுகின்றார் ஆழ்வார். புலால் உண்பதன் புன்மையினை அறப்போருளை அறியாதவர்களின் செயல் என்கிறார்.

“அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்” என்பது குறள்.

பிற உயிர்களைக் கொல்லாமல்தானே அறத்திற்கு அடிப்படை. தன் உடம்பு பெருக்க வேண்டும் என்பதற்காக… தான் மற்றொரு உயிரின் உடம்பைத் தின்பவன் எவ்வாறு அருள் உடையவனாக இருக்க முடியும்…? என்று கேட்கின்றார் திருவள்ளுவர்.

பிற உயிர்களைக் கொன்று உண்ணும் பழக்கம் அறத்திற்கும் அறத்தின் பயனாக அருளுக்கும் மாறுபட்டது என்பதால் அது விலக்கப்படுகின்றது.

உலக வாழ்விலே அருளும் அறமும் நலிகின்ற போதெல்லாம் நல்லவர்கள் மனம் நலிகின்றது. அறம் போற்றி வாழ்பவர்கள் அல்லல்படுவதும் அல்லாதவர்கள் ஆடம்பரமாக வாழ்வதும் உயிர்களைக் கொன்று உண்டு தம் ஊனை வளர்ப்பதும் உலகத்து இயற்கையாகி விட்டது…! உலக வாழ்வோடு ஒன்றிய இயல்பாகி விட்டது.

இப்படிப்பட்ட உலகில் வாழ்வதை விட்டு இறைவன் திருவடியில் விரைவில் சேர்வதே வித்தகர்களின் விசாரமாகி விடுகிறது என்று இதயம் இடிந்து இவ்வாறு பாடுகின்றார்கள்.

ஈஸ்வரபட்டரின் பதில்:-
நம்மாழ்வார் இயற்றி வெளியிட்ட அருட்பாக்களை ஆராய்ந்து இந்நிலையின் பொருளை விளக்குகின்றனர்.

நீதியைப் புகட்டும் நீதிபதியின் வாழ்க்கைத் தரத்தையும்… அந்த நீதிபதியினால் தண்டனைக்குட்பட்ட குடிமகனின் வாழ்க்கை நிலையையும்… இரண்டு வெவ்வேறு நிலை கொண்ட பொருளாதார அடிப்படையில் “இந்த ஞானவழிக்கும்… ஆத்மீக வழியின் தொடர் நிலைக்கும்” ஒப்பிட்டுப் பதம் காண்கிறனர்.

1.அவன் சென்ற வியாபார நோக்கின் வழி எண்ணத் தொடரின் செயலுக்கும்
2.நீதிபதியின் நற்போதனை நிலைக்கும்
3.வாழ்க்கை நிலையை இப்பொருளாதார ஏற்றத் தாழ்வை ஒப்பிட்டுச் செயல் காண்பது எந்த வழியில்… எந்த ஞானியாக இருந்தாலும் உத்தமம்…!

ஆத்ம நிலையை அறிய… இறை பக்தியை ஏற்றம் கொண்டு வழி நடந்திடும் இவ்வுணர்வுடையோர் இந்நிலையை ஒப்பிட்டு… இந்நிலையினால் தன் எண்ணத்தை விரக்திப்படுத்தி… இறைவனடி ஒன்று தான் உத்தம நிலை என்று “விலகிச் சென்று… ஆத்ம ஜெபம் என்ற இறை பக்தியை வளர்க்கின்றார்களாம்…!”

நீதிபதி தான் வந்த வழியில் நீதிக்காகச் செயல் கொண்டு செயலாற்றுவதற்கும் அவர் வாழ்க்கையின் பொருளாதார நிலைக்கும் ஒப்பிடலாகாது.

வியாபாரியின் நோக்கில் பல தவறுகள் நீதிக்கு புறம்பட்டதாக இருந்தும் பொருளாதார ரீதியில் உயர்ந்துள்ளதை வைத்து
1.இறைவனைப் பாகுபடுத்திட்ட நிலை தான்
2.இன்றைய மனிதர்களின் எண்ண நிலை எல்லாம்.

சத்தியத்திற்கும் தர்மத்திற்கும் அடிபணிந்தே வாழ்ந்தும் பல இன்னல்களை ஏற்க வேண்டியது உள்ளதே… “ஆண்டவனின் சோதனை நிலை” என்ற எண்ண நிலையிலேயே அப்பாகுபாடு என்னும் எண்ணமே…
1.தர்மவான் சத்தியவான் என்று வாழ்ந்தாலும்
2.தன்னையே குறுக்கிக் கொள்ளும் இந்த எண்ணத்தினால் தான்
3.இன்றைய இந்த உலகில் உள்ள சத்திய நியாயமும் மறைந்து வரும் நிலை.

சத்தியத்திற்குச் சோதனை வரும் என்ற எண்ண நிலையிலேயே அச்சோதனை நம்மைப் பற்றிக் கொள்கின்றது.
1.இந்நிலையில் சத்தியம் என்பது எப்படி ஜெயம் கொள்ளும்…?
2.எண்ணத்தில் உள்ள சத்தியத்தையும் தர்மத்தையும் இன்றைய மனிதன் சோதனையாக எண்ணி “நழுவ விட்ட காலம் இது…”

வாழ்க்கையில் பல தவறுகளைத் தவறென்று உணர்ந்தே செய்பவனும்… தன் எண்ண நிலையைச் சோர்வுக்கும் தோல்விக்கும் அடிபணிந்திடச் செய்திடாமல்… நன்மை தீமை கொண்ட எவ்வழிக்கும்… ஒரே எண்ணமுடன் சோர்வை அண்ட விடாமல் செல்பவனின் பொருளாதார வாழ்க்கை நிலையும் குடும்பத்தின் செயல் நிலையும் வளமுடன் தான் வாழ்கின்றன.

1.பல தவறுகள் செய்கின்றான்… அவனை ஆண்டவன் பார்ப்பதில்லை.
2.நல் உணர்வு கொண்ட நமக்கேன் சோதனை…? என்ற எண்ணத்திலேயே நம்மைத் தாழ்த்தி
3.அதனால் வரும் நம் ஆத்ம நிலையின் சோர்வினால்
4.நல் உணர்வுகளை நாம் பெற்றிருந்தாலும் நம் நிலையும் குன்றி நம் பொருளாதார நிலையும் கீழ்ப்பட்டு
5.நம்மையே நாம் குன்றச் செய்து கொள்கின்றோம்.

இவ்வண்ண நிலையில்தான் ஆண்டவனின் ஜெபமும் ஞான நிலையும் இறை பக்தியும் இவ்வுலகமும் இவ்வுலகைச் சார்ந்த அனைத்து உலகங்களுமே அடக்கம் பெற்று வாழ்ந்திடும்… “இவ்வாத்மாண்டவனின் (தனக்குள் இருக்கும் ஆண்டவன்) எண்ணத்தை உணர்ந்திடாமல்” வாழ்ந்திடும் மக்களின் எண்ணத்தையும்… நம் முன்னோர் சூட்சுமத்தில் வெளிப்படுத்திய நூல்களில் உள்ள உண்மை நிலையை உணர்ந்திடாமல்… மக்களின் எண்ணத்தையே கேள்விக்குறியாக ஆக்கிவிட்டார்கள் என்று சில நிலைகளினால்.

1.பக்தி… ஞானம்… பரம்பொருள்… பரமாத்மா… என்றே பல நிலைகளைப் போதனைப்படுத்தி
2.இறை பக்தியாக ஆத்ம ஜெபம் எடுக்கும் நிலையை இன்று உணர்த்துவாருமில்லை… செயல் கொள்வாரும் இல்லை.
3.இறைவனை எண்ணுவதே இப்பொருளாதார ஆசையின் அடிப்படையில் தான் (இன்றைய நிலை).

இவ்வண்ண நிலை கொண்ட நாம் எடுக்கும் சுவாசத்தினால் மட்டும்தான்… ஒவ்வொரு ஆத்மாவின் வழித்தொடர் நிலையுண்டு.

ஒரு குடும்பத்தில் உள்ள மூத்த தலைவனின் நிலைக்கொப்பதான் அவன் சேமித்துச் செயல் கொள்ளும் வழித் தொடரின் நிலையில்… எண்ணத்தினால் அவனைச் சார்ந்துள்ளோரின் நிலையின் எண்ணக் கலப்பும் வழித்தொடரின் செயல் நிலைகொள்கின்றது.

நம்மாழ்வார் இயற்றிய பாடல்களில் உள்ள நிலையின் அர்த்தத்தையே கால நிலைக்கு ஏற்ப இன்று உணர்த்துகின்றார்கள்.
1.உண்மைத் தத்துவ நிலை எது…?
2.உணர்ந்து செயல்பட வேண்டும்.

பறக்கும் தட்டு

பறக்கும் தட்டு

 

05.12.1979 அன்று தினமணி பத்திரிக்கையில் வெளி வந்த செய்தி:-

பாரிஸில் (பிரான்ஸ்) சென்ற மாதம் 26ஆம் தேதி பறக்கும் தட்டு தூக்கிச் சென்றதாகக் கூறப்பட்ட வாலிபர்… நேற்று மீண்டும் அதே இடத்தில் தோன்றினார்.

பாரிஸுக்கு மேற்கு செயிண்ட் சூன் பகுதியைச் சேர்ந்த பாண்டைன் என்ற 19 வயது வாலிபரும் அவரது இரு நண்பர்களும் தங்கள் வீட்டு வாசலில் காரில் துணிப் பெட்டிகளை ஏற்றிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது காருக்குச் சிறிது தூரத்தில் “ஒளியுடன் கூடிய பந்து போன்ற ஒரு பொருள்” தெரிந்தது. அது வர வர மிக பெரிதாகிக் கொண்டே வந்தது. அதன் ஒளியும் கண்ணை எரிக்கும் அளவுக்குப் பிரகாசமானது.

கார் அருகே அந்தப் பொருள் வந்த பொழுது… பெரிய பந்து போல் இருந்தது. பாண்டைன் மட்டும் நின்று கொண்டிருந்தார். மற்ற இருவரும் அதைப் படம் எடுக்க வீட்டிற்குள் ஓடினர்.

கேமிராவுடன் திரும்பி வந்த பொழுது பாண்டைனைக் காணோம்… காரைச் சுற்றி ஒரு பிரகாசமான ஒளி இருந்தது. பின் அதுவும் மறைந்தது.

தகவல் அறிந்த பிரெஞ்சு போலீசார் உடனடியாக பாண்டைனைத் தேடுவதில் முனைந்தனர். பறக்கும் தட்டு இறங்கிய இடத்தில் கதிரியக்கச் சோதனையை போலீசார் நடத்தினர்.

அங்கு கதிரியக்கம் இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது பாண்டைனுடைய இரு நண்பர்களையும் போலீசார் தீர விசாரித்தனர்.

இதற்கு இடையே எந்த இடத்தில் பறக்கும் தட்டு பாண்டைனை எடுத்துச் சென்றதாக கூறப்பட்டதோ அதே இடத்தில் நேற்று அவர் தோன்றினார்.

பறக்கும் தட்டு எடுத்துச் சென்ற அன்று என்ன உடை அணிந்து இருந்தாரோ… அது சிறிது கூடக் கலையாமல் இருந்தது. அவர் பையில் வைத்திருந்த பணம் அப்படியே இருந்தது.

தான் பறக்கும் தட்டால் எடுத்துச் செல்லப்பட்டதைக் கூறும் பாண்டைன்… அதற்குப்பின் ஒரு வாரத்தில் என்ன நடந்தது…? என்று தெரியவில்லை. திடீரென்று தான் பழைய இடத்தில் இருப்பதாகத் தெரிய வந்தது என்று கூறினார்.

இது பற்றி இனம் புரியாத… “பறக்கும் பொருட்கள் பற்றி ஆராயும் பிரெஞ்ச் விண்வெளி விஞ்ஞானிகளிடம்” தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்வரபட்டரின் பதில்:-

பந்து போன்ற அந்த ஒளி பிறரால் ஏவப்பட்ட பறக்கும் தட்டு என்ற சாதனம் அல்ல. “பறக்கும் தட்டு” என்ற பீதி கொண்ட நிலையில் எண்ணம் கொண்ட இச்செயல்… எந்த நிலையில் ஏற்படுகின்றது…? என்பதனை உணர்ந்திட வேண்டும்.

இந்த மனித ஆத்மாவிற்குப் பல அமில சக்திகளைத் தன்னில் ஈர்த்து மனித பிம்பமாக வாழ்ந்திடும் சக்தி நிலை உண்டு.

அணுவிலிருந்து பல நிலை மாறி மனித ஆன்மாக்களாக வாழ்ந்திடும் இப்பிம்பச் சக்திகளுக்கு
1.தாவர வர்க்கங்களைப் போன்றும்
2.மற்றைய கனி வளம் திரவங்கள் இப்படித் தனித்த ஒரு நிலை கொண்ட ஈர்ப்பு சக்தியிலிருந்து மாறு கொண்ட அனைத்து அமிலங்களையுமே
3.தன் எண்ணத்திற்குகந்த எந்த அமிலத்தையும் ஈர்க்கும் சக்தி நிலை (மனித ஆன்ம பிம்ப உடலுக்கு) உண்டு.

நம்மைச் சுற்றியுள்ள நம் பூமியும்… நம் பூமியுடன் தொடர்பு கொண்ட மண்டலங்களின் சக்தியும்… நம் சூரியனின் சக்தியிலிருந்து வந்திடும் அணு பிம்பங்களின் தொடர்பினால்… இந்த மனித ஆத்மாவை எந்நிலைக்குகந்த ஒரு நிலை கொண்ட அணு சக்தியையே… இவ் எண்ணத்தின் தொடர்பினால் ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாசத்தின் சக்தியினால்… “இன்று ஒரு நிலை கொண்ட ரிஷிகளின் நிலையைப் போல உடலையே ஒளியாக்கி… ஆவி பிம்பமாக ஜோதியாகச் செயல்படுத்திட முடிந்திடும்.

ஒவ்வொரு உடலையுமே இப் பிம்ப நிலை தெரியாமல் ஒளியுடன் ஒளியாகப் பறந்த நிலைப்படுத்திட முடிந்திடும்.

இன்று அங்கு நடந்திட்ட இந்நிலை “விஞ்ஞானத்தில் வழி வந்த” சித்து நிலை பெற்றோரின் சக்தி நிலை செயல் கொள்கின்றது
1.சித்து நிலை பெற்ற விஞ்ஞானி
2.தன் உடலையே ஒரு நிலை கொண்ட அமிலத்தை ஈர்த்துth தன் பிம்பத்தையே ஒளிப்படுத்தி…
3.அந்த ஒளியுடனே மற்ற ஆத்ம பிம்பத்தையும் ஒளிப்படுத்தித் தன்னுள் ஈர்த்து
4.தான் அடைந்த ஒளி பெறும் சக்தியின் நிலையினால் தன்னுள் சேர்த்த மற்ற ஆத்ம உடலையும்
5.அந்நிலையிலேயே ஈர்த்திடும் ஆராய்ச்சி நிலையில் நடந்த நிலை தான் அங்கு நடந்த நிலை.

ஆவியின் தொடர்பு கொண்டு “மனோவசியம் செய்வதைப் போல” ஆத்ம பிம்பத்தையே ஒளிப்படுத்தி மற்ற ஆத்ம பிம்பத்தையும் தன்னுள் ஈர்க்கும் நிலை தான் அங்கு நடந்ததன் நிலை.

விஞ்ஞானத்தின் செயல் எல்லாம் இயற்கையுடனும் மற்ற அணுக்களின் தொடர்புடனும் செயற்கையாகச் செயல்பட்டு விளையாடியது.

இந்தப் பூமியில்… இந்தக் கலியில்… விஞ்ஞான வழியில் வந்த சித்து நிலையினால் “ஆத்மாவுடன் ஆத்மாவை இணைக்கும்… ஒளி நிலை விளையாட்டு நிலைக்கு வந்துள்ளது…”

பிம்பத்தையே ஒளியாக்கிடும் சக்தி பெற்றவன் அந்நிலையின் சக்தித் தொடரைச் செயல்படுத்திட… மற்ற ஆத்மாவை ஈர்த்து ஏன் செயல் கொண்டிட வேண்டும்..?

மனித ஆன்மாக்களின் எண்ணத்தையே கலக்கம் கொண்டிடும் நிலைக்குத் தான் பெற்ற சக்தியை ஏன் இப்படி விரயம் ஆக்க வேண்டும்…?

இப்பூமியில் இந்தியாவில் கோயில்களை நம் சித்தர்களினால் செயல்படுத்திடும் புண்ணிய ஸ்தலப்படுத்தி… அங்கு பக்தி நெறியில் வந்திடும் ஆன்மாக்களுக்கு ஒளியுடனே ஒளியாக… தான் பெற்ற சக்தியை ஒளியின் வழியில் நல்லருளைப் பாய்ச்சிடும் (நம் சித்தர்களின்) வழியையே தான் மாற்று வழியில் அவர்கள் (விஞ்ஞான) செயல்படுத்துகின்றனர்.

அவ்வெண்ணத்துடன் தொடர்புடனே… அந்த வழியில் வந்த விஞ்ஞானச் சித்தனும் இங்குள்ளதைப் போல் பக்தி நெறி கொண்ட கோயில் நிலை அங்கு இல்லாததின் நிலையால்… வந்த விளையாட்டு நிலை தான் இது.

ஞானிகள் கருப்பணசாமியை வைத்ததன் நோக்கம்

ஞானிகள் கருப்பணசாமியை வைத்ததன் நோக்கம்

 

நம்மைத் திட்டுபவர்கள்… சாபம் இடுபவர்கள்… இவர்களை எல்லாம் ஓட்டுக் கேட்டுக் கொண்டே இருப்போம். அதற்காக வேண்டித் தான் கருப்பணசாமியை வைத்து மோப்ப நாயையும் பக்கத்தில் காட்டி இருப்பார்கள்.

ஏனென்றால்
1.ஒட்டுக் கேட்டவுடன் நம் நல்ல புத்தியெல்லாம் இருண்டு விடுகிறது.
2.இருண்டு போன பின் நாம் எப்படித் தவறு செய்கின்றோமோ அதே போன்று
3.அந்த உணர்வுகள் நமக்குள் இருக்கும் நல்ல உணர்வுகளைக் கொன்று புசிக்கத் தொடங்கி விடுகிறது.
4.நீ நுகர்ந்து பார்த்த உணர்வுகள்… உன் நல்ல குணங்களை இப்படிக் கொன்று விடுகின்றது…! என்பதைத் தான்
5.சிலையை வைத்து மோப்ப நாயையும் அருகே வைத்து ஞானிகள் காண்பிக்கின்றார்கள்.

ஆனால் இன்று வழக்கத்தில் நாம் என்ன செய்கிறோம்…?

கருப்பண்ணசாமிக்கு ஆட்டை வெட்டி அவனுக்குப் படையல் செய்தால் தன்னைக் காப்பான்… அது காவல் தெய்வம்… என்று சொல்லி அதற்குப் பலியிட்டு அதை வணங்கிக் கொண்டிருக்கின்றோம்.

அந்த ஆவேச உணர்வு கொண்டு என்ன செய்கின்றோம்…? அங்கே ஆட்டைப் பலி கொடுத்தேன் என்ற நிலையில் நாம் செய்த அந்த உணர்வுகள் இங்கே வந்து பிறரை இரக்கம் இல்லாதபடி துன்பப்படுத்தச் செய்யும்.

உதாரணமாக… கொலை செய்பவனைப் பார்த்தோம் என்றால் அவன் அரக்கத்தனமாகத் தான் போவான். அவனுக்கு எந்த நோயும் வராது. ஆனால் பல கொலைகளைச் செய்வான்… தெம்பாக இருப்பான்.

யாரையும் பற்றி அவன் அஞ்சுவதில்லை… அவனுக்குக் கொலை செய்வது தான் வேலை.

இதைப் போன்ற உணர்வின் தன்மை வரும் பொழுது அவன் எப்படி அந்த வலுப்பெற்றானோ இதைப் போல நமக்குள் இந்த அரக்க உணர்வுகள்… பலியிட்ட உணர்வுகள்… அதிகமாகி விடுகின்றது.

இறந்த பிற்பாடு என்ன செய்வேன்…?
1.நாம் பலியிட்டுக் கும்பிட்டது போன்று அடுத்தவர்கள் கருப்பணசாமிக்குப் பலியிட்டுக் கும்பிடுகிறார்கள் என்றால்
2.அந்த உடலுக்குள் புகுந்து… ஆவியாகப் போய்ச் சேர்ந்து விடுவேன்.

ஆனால் அவர்கள் ஆட்டைப் பலி கொடுக்கவில்லை என்றால் “எங்கடா ஆட்டைக் காணோம்…? ஏண்டா பலி கொடுக்கவில்லை…? பார்… உன் குடும்பத்தையே தொலைத்து விடுகின்றேன்…! எனக்கு ஆடு இப்பொழுதே வேண்டும்…! என்று சொல்லி இந்த உடலுக்குள் வந்த ஆவி அவனையும் ஆடச் சொல்லி ஆடைக் கேட்கும்.

இப்படித்தான் மனித உடலில் விளைய வைத்த உணர்வுகள் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இருளை போக்க நாம் பிறரின் வேதனைகளை கேட்டறிந்தோம். ஆனால் அது நம் நல்ல குணங்களை இருளச் செய்து நம்மை அறியாமலே தவறு செய்ய வைக்கின்றது. அசுர செயல்களைச் செய்ய வைக்கின்றது.

அதே உணர்வு நம் நல்ல குணத்தை எப்படித் தாக்குகிறது என்பதைத் தான் இவ்வாறு சித்தரித்துக் காட்டினார்கள் ஞானிகள்.

அதற்கு மாறாக நாம் செய்யும் பொழுது மனித உடலில் எதை விளைய வைத்தோமோ அதனின் செயலாகத்தான் அடுத்து இருண்ட நிலையாக அந்தத் தெய்வமாக உருவாக்கி விடும்… அதே பலியைத் தான் இது கேட்கும்.

கருப்பணசாமி என்ற நிலைகளில் “அருளாடி” சொல்லும் பொழுது பேயை அங்கே ஓட்டலாம் என்று சொல்வார்கள். பேய் பிடித்தவர்களின் குடுமியைப் பிடித்து ஆட்டி… இரண்டு உதையைக் கொடுக்கும்.

ஒரு மாதத்திலிருந்து மூன்று மாதத்திற்கு அந்த ஆட்டம் குறைந்திருக்கும்.

அடுத்து பார்த்தோம் என்றால் அங்கே சென்று என்னை நீ அடக்கினாயா…? உன்னை நான் என்ன செய்கிறேன்…? என்று மீண்டும் ஆடத் தொடங்கும்.

1.இது தான் நாம் கண்ட பலனே தவிர
2.ஞானிகள் காட்டிய தீமைகள் இந்த விடுபடும் அருள் வழிகளை நாம் கடைப்பிடிக்கவில்லை

இதை எல்லாம் அறிந்து கொள்வதே மிகவும் நல்லது.

பூமியின் இயற்கையையே பாழ்படுத்திவிட்டான் இன்றையக் கலி மனிதன்

பூமியின் இயற்கையையே பாழ்படுத்திவிட்டான் இன்றையக் கலி மனிதன்

 

நம் பூமியின் ஈர்ப்பிற்கு சக்தி தரும் காந்த மின் அலையின் வளர்ச்சிக்கு ஊற்றாக அமையப் பெற்றது தான்
1.உலகின் மூன்று இடங்களில் உள்ள “காந்த மின் கிணறுகள்…!”
2.கடலுக்கடியில் ஒன்று.. பாலைவனத்தில் ஒன்று… மலைப் பகுதியில் ஒன்று…!
3.இக்காந்த மின் கிணறுகளின் ஈர்ப்பு அதிகப்பட்டுப் பட்டு வளர்ச்சிப்படுமேயானால்
4.நம் பூமிக்கு… பூமியின் ஈர்ப்பு சக்தி அதிகப்படும்.
5.அதனால் அதிகப்படியான ஜீவ இன வளர்ச்சிக்குகந்த சத்து அமில நிலையைத் தர வல்ல தாவரங்களின் இயற்கை வளம் பெருகியிருக்கும்.

நம் பூமியைக் காட்டிலும் வியாழனும் சூரியனும் வளர்ந்துள்ளது. அவைகள் நம் பூமியை விட அதிக ஈர்ப்புக் குணமுடையதாக வளர்ந்து மற்ற எல்லா மண்டலங்களுக்கும் அதன் சக்திக் குணத்தைத் தருகின்றது.

1.அந்த வியாழனைப் போன்று வளர்ந்து பெருக்கும் நிலை நம் பூமிக்கு இப்பொழுது குறைவுபட்டுள்ளது.
2.நம் பூமியும் கன விகிதத்தில் வளர்ந்து தான் வருகிறதேயன்றி
3.தன் ஈர்ப்பின் சக்தியை வளர்க்க முடியாத நிலை ஆகிவிட்டது.

காரணம் இன்றைய கலி மனிதன் தன் விஞ்ஞான செயற்கை மின் அலையைக் காண சூரியனின் சக்தி அலையை
1.நம் பூமி ஈர்க்கும்… பூமியின் இயற்கை வளர்ச்சியைத் தடைப்படுத்தி
2.அதைச் செயற்கை மின்சாரமாகக் கண்டு எடுத்து விட்டான்,

பூமியின் ஈர்ப்புக் காந்த சக்திக்குக் கிடைக்க வேண்டிய ஆகார நிலையை… அது எடுத்து… உண்டு… வளர்ந்து… பலன் காணும் முன்… இன்றைய கலி அறிவு மனிதனால் துரித நிலையில் மின்சாரம் கண்டு பூமியின் வளர்ச்சிக்கும் வருங்கால உயிரினங்களின் வளர்ச்சி நிலைக்கு மாற்றம் தரவல்லவனாகி விட்டான் “இன்றையக் கலி மனிதன்…!”

இக்கலி மனிதனால்… “அவன் அறிவாற்றல்” என்ற மேம்பாட்டில் கண்ட “செயற்கையினால்…!” பல கோடி உயிரணுக்களின் சக்திக் கலவையாகக் கலந்து வாழ்ந்து… தான் வாழ்வதோடு மட்டுமல்லாமல்
1.வளர்ந்து கொண்டே சுழன்றோடும் இந்தப் பூமியின் நிலையைத் தன் செயலுக்காக
2.மின் அலையைப் பாழ்படுத்தியதனால் பூமியின் இயற்கையையே பாழ்படுத்திவிட்டான்.

இதனின் நிலையை மாற்றி நம் பூமி வளரத்தான்… இக்கலி மாறி கல்கியாக வருவதற்குத்தான் பல கோடிச் சித்தர்களும் சப்தரிஷிகளும் செயல் கொள்கின்றனர்.

இக்கலி மாறும் தருணத்திற்குள் இந்தப் பூமியின் அமிலக் குணத்துடன் ஒன்றி வாழ்ந்த மனித இனக் குண சக்தி இருந்தால் தான் மீண்டும் மீண்டும் மண்டல சக்திகளும்… எந்த ஒரு புதிய படைப்பு நிலையும் வளர்க்க முடியும்.

எண்ண சக்தியின் வளர்ச்சி நிலை கொண்ட அமில… குண ஜீவன்.. மனிதனிலிருந்து தான் இந்நிலை வளர முடியும் என்ற உண்மையில் தான் சப்தரிஷிகளும் அவர்களின் ஆசி பெற்ற சித்தர்களும் செயல்படுகின்றனரப்பா…!

கூரை அமைக்கத் தூணோ சுவரோ தேவை, அது போல் இம்மனித ஆத்மாக்களின் எண்ண வளர்ச்சியின் மேம்பாட்டில் தான் மண்டல வளர்ச்சி உண்டு… மற்றெல்லா வளர்ச்சியும் உண்டு.

இதன் நிலையை உணர்ந்து ஒவ்வொரு மனித ஆத்மாவும் இஜ்ஜீவ உடல் பிம்ப நிலையிலிருந்து தன் உயிரணுவான காந்த உயிர் சக்தியை நல்ல நிலையில் எடுக்கும் எண்ணம் கொண்டு இந்த உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களையும் வீரிய சக்தி பெறும் வழித் தொடர்படுத்திடல் வேண்டும்.

தான் எடுக்கும் ஜெப நிலையால் தன் உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களும் ஒளி பெற்று தானாக ஓர் உயிரணு ஆத்மாவுடன் பல கோடி அணுக்களும் ஒன்றுபட்டுச் செயல்படுமானால்
1.அதன் சக்தி ஜெபத்தினால் எடுக்கும் நுண் அலையின் தொடர்பைக் கொண்டு
2.பலவாகப் படர்ந்துள்ள சப்தரிஷிகளின் ஒளி அலையைப் பெற்று
3.அவர்களின் தொடர்பின் மூலம் பல செயல்களை இந்த உயிராத்மாவினால் வளர்க்க முடியும்.

ஏனென்றால் வாழ்க்கையின் பொருள் என்பது வாழும் காலங்களில் பிறர் போற்றித் துதித்து… “மடிந்த பிறகு…. புகழாஞ்சலி பெறுவதல்ல…!”

இம்மனிதப் பிம்ப வாழ்க்கையில் எடுக்கும் ஒளி அலையின் நிலையின் வளர்ச்சி தான் எல்லாவித இயற்கைக் குண வளர்ச்சி மண்டலங்களின் சக்தியும் என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

இப்பொழுது வாழும் குறுகிய கால வாழ்க்கையில்
1.இந்தச் சந்தர்ப்பத்தைக் குறுகிய நிலைப் புகழுடன் மங்க விடாமல்
2.பேரண்டப் பெரு நிலை என்ற உயர்ந்த அண்டமாகும் சக்தி நிலையைப் பெறும் தகுதிக்குத் தான்
3.யாம் இங்கே தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கும் பாட நிலையின் உண்மை நிலை.