வேண்டியதைப் பற்றிக் கொள்ள வேண்டும்… வேண்டாததைப் பிடுங்கி ஏறிய வேண்டும்

வேண்டியதைப் பற்றிக் கொள்ள வேண்டும்… வேண்டாததைப் பிடுங்கி ஏறிய வேண்டும்

 

காட்சி:
பெரிய குரங்கு ஒன்று மரத்தில் அமர்ந்து எதையோ ஒரு பொருளை விடாப்பிடியாகப் பிடித்து ஆட்டுவது தெரிகின்றது.

மற்றொரு காட்சியில் ஒருவருக்குக் காலில் முள் குத்துவதைப் போன்றும்… முள்ளைக் காலிலிருந்து எடுத்துத் தூர எறிவதைப் போன்றும் தெரிகின்றது.

விளக்கம்:
குரங்கு ஒன்றைப் பிடித்ததென்றால் ”குரங்குப்பிடி…” என்பதைப் போன்று
1.மதியைக் கொண்டு மெய்யுணரும் பக்குவமற்ற ஜீவனால்
2.எத்தொடரில் எதைப் பிடித்ததோ… அதன் தொடரில் தான் அதனுடைய எண்ணமிருக்கும்.

ஆனால் மெய் என்ற மதியைக் கொண்டு பகுத்தறியக் கூடிய மனிதன் “தான்…” என்ற அகந்தையின் பிடியில் வலுப்படுத்தினால் தன் வளர்ச்சியின் வலுவை இழக்கும் நிலைதான் மனித உணர்வின் ஒளிக்குச் செயல்படும்.

இச்சரீரத்தில் உணர்வுகளினால் வளரும் உயிரணுக்கள் யாவையுமே ஜீவகாந்த மின் அலைச் சக்தியை வளர்க்கவல்லவை.

அவ்வளர்ப்பின் தொடருக்குத் தன்னில் உயர்ந்த ஒளி சக்தி பெற்றிருந்தாலும்…
1.மனித உணர்வின் தொடர்பில் பாசப் பிணைப்புடன்
2.அன்பு பரிவு என்ற அறுகுணத்தின் நற்குணத்தைச் செலுத்தி மெய் உணர்வின் அறத்தை
3.இச்சரீரத்தையே மெய்யுணர்வின் தொடர்பில் செலுத்தும் பொழுது
4.இச்சரீரம் ஆண் பெண் என்ற நிலை மாறி… தாயான ஜீவ சரீரமாக
5.பலவற்றையும் வளர்க்கும் ஆதிசக்தியின் ஜீவ சக்தியின் வித்துக்களாய்
6.ஒவ்வொரு ஒளித் தன்மை கொண்ட ஜீவாத்ம உயிரும் வளர்ச்சி பெறும்.

இன்றெப்படி சூரியன் பல கோள்களின் ஜீவனை வளர்க்கின்றது…? பூமி எப்படி பல ஜீவன்களை வளர்க்கின்றது…?

அதைப் போன்று ஒளி சக்தி பெற்ற ஒவ்வொன்றும் ஒளியின் உருவப் படைப்பாய்… உருவில் பலவற்றையும் படைத்துப் படைக்கவல்ல தன்மைக்கு… இச்சரீர உணர்வில் எடுக்கும் மெய் உணர்வின் ஒளித் தன்மையைக் கொண்டுதான் அந்த “ஆதிசக்தியின் சூட்சுமமே அடங்கி உள்ளது…”

மனித உணர்வில் வேண்டாத எண்ணங்கள் நம்மைத் தாக்குபவையாக சந்தர்ப்பத்தில் வந்து மோதினாலும்
1.காலிலே முள் ஏறியவுடன் அதைப் பிடுங்கி எறிவதைப் போன்று
2.எண்ணத்திலிருந்து அதை எல்லாம் அப்புறப்படுத்திடும் செயலுக்கு வரவேண்டும்.

முள்ளின் வேதனையை… எடுக்க முடியாமல் காலில் தைத்து விட்டால் அந்த முள் புரையேறி… காலையே எடுக்கவும் ஏன்… சரீர ஜீவனுக்கே கூட ஆபத்து ஏற்பட்டு விடுகிறது…!

அதைப் போன்று… நம் உணர்வில் மோதும் எதிர் நிலை எண்ணத்தை ஒளி கொண்ட தெய்வ குணங்களில் எண்ணத்தைச் செலுத்தி… வேண்டாத எண்ணங்களை வளர்க்காமல்..
1.மெய் உணர்வின் மெய் ஞானியாகக் கூடிய வழியறியும் பக்குவத்தால்
2.வான மண்டலத்தில் எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் கோள்கள் வளர்ந்து ஓடுவது போன்று
3.மனித உணர்வின் எண்ணம் கொண்ட ஒவ்வொருவருமே
4.ஒளி சக்தி கொண்ட உயர் தன்மை பெற முடியும்.

எல்லாமே வினைப் பயன்தான் – விதி…! என்ற முத்திரையை… “தானே குத்திக் கொள்ளக் கூடாது”

எல்லாமே வினைப் பயன்தான் – விதி…! என்ற முத்திரையை… “தானே குத்திக் கொள்ளக் கூடாது”

 

பருத்தி என்றால் அதிலிருந்து பஞ்சை எடுத்து ஆடைகளை நெய்வதும் பருப்பைப் பதப்படுத்தி உண்ணவும் அதனதன் வளர்ச்சிக்கொப்ப… “இன்னதை இன்னதிற்குப் பயன்படுத்தலாம்…” என்பது மனித ஞானம் அறிந்த உண்மை.

மேலும்… இன்று மனிதன் இயற்கையில் வளரும் தாவரங்களுக்குச் செயற்கையில் உரமிட்டு இயற்கைத் தன்மையின் வளர்ச்சியை மாறுபடச் செய்து அதை வளரச் செய்யக்கூடிய பக்குவத்தை வளர்ப்பவனும் இதே மனிதன் தான்.

ஆனால் அதே மனிதன் தான்…
1.தன் உயிராத்மாவின் ஜீவித வாழ்க்கையை
2.தன் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு
3.தன்னைத் தானே தான் உணர்ந்து உயர் நிலை பெறுவோம் என்ற வழியறியாது
4.தன் வாழ்க்கையில் நடப்பவை யாவும் ஊழ்வினை – “விதி” என்ற
5.வினைப் பயனை விதைத்துக் கொள்கின்றான் தன் எண்ணத்தில்.

இயற்கையையும் செயற்கையாக்கி விஞ்ஞானத்தில் பல உண்மைகளை மனிதச் செயல்தான் வளர்த்தது. அதே மனிதன் ஜீவாத்மாவின் உண்மையின் உண்மையை உணர்ந்து தன்னைத்தான் ஆள வேண்டும்.

அறம்… பொருள்… இன்பம்…
1.அறம் – நல்லொழுக்கத்தைச் சத்தியம் என்ற நேர் கோட்டில் உணரவும்
2.பொருள் – அறத்தைச் செயலாக்கி சத்தியத்தை வளர்த்து
3.இன்பம் – என்ற பிறவா ஒளி நிலை ஆனந்த உணர்வை இவ்வாத்மா அடைவதற்காக
4.முந்தைய பல ஆண்டுகளாக ஞானிகள் மகரிஷிகள் உயர் தத்துவத்தை உணர்த்தியுள்ளனர்.

இக்கலியிலும் புறநானூறு அகநானூறு திருக்குறள் நல்லொழுக்கம் ஆத்திச்சூடி போன்ற பல நூல்களில் வந்துள்ள தத்துவங்கள் யாவும்… மனித உணர்வின் எண்ணம் நல்லொழுக்கம் பெற்று… அகத்தின் பொருளறிந்து… “அகிலத்தின் பொருளாகும் உண்மையைத் தான் வழிகாட்டின…”

ஆகவே நம் உயிராத்மாவின் உயர் நிலை பெற ஊழ் வினை என்ற வினைப்பயனை எண்ணத்தில் எண்ணாமல்… எண்ணத்தில் நற்குணத்தை ஒவ்வொருவரும் பெற்று… விதியை மதி கொண்டு… ஞானம் கொண்டு செயல்பட வேண்டும்.

1.முதலில்… தன் சரீர உணர்வில் வெளிப்படக்கூடிய இச்சைகளை
2.தன் எண்ணத்தின் சிந்தனை கொண்டு
3.இச்சரீர ஏக்கத்தின் இச்சைகளை அடக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

சரீர ஏக்கத்தின் இச்சை என்பது விருப்பு வெறுப்பு பசி தூக்கம் கோபம் ஆசை இன்பம் துன்பம் காமம் இவை யாவையுமே தன்னில்தான் தன் உணர்வில் தோன்றக்கூடிய உந்தல்கள் தான்.

அதன் இச்சையின் செயலுக்கு நம் உணர்வின் எண்ணம் செல்லும் பொழுது உ
1.உடல் உபாதையினால் உணர்வின் எண்ணம் பாதிக்கப்பட்டுத் தன்னைத் தானே வலுவிழக்கச் செய்து
2.வினைப் பயன் என்ற முத்திரையை… “தானே குத்திக் கொள்ளும் நிலைதான்…”

உடல் உபாதையையும்… உடல் உணர்வுகளினால் எண்ணத்தின் வலுவைக் கொண்டு… இச்சரீரத்தின் எச்செயலையும் தன்னுள் உள்ள “இறை உயிரைக் கொண்டு” நல்லதாக மாற்றிட முடியும்.

இச்சரீரம் எத்தனை கோடி ஆண்டுத் தொடரில் புழுவாய் பூச்சியாய் மனிதனாய் பல உணர்வுகளில் பல உருவில் உருப்பெற்று உயிர் ஜீவனில் இன்றுள்ள நிலைக்கு வினைப்பயனின் வித்தாய் வளர்ந்து வந்துள்ளது.

எவ்விதை ஊன்றப் பெற்றதோ… அச்செடியாக அது வளர்ந்தாலும்…
1.அதை மாற்றி அமைக்கக்கூடிய மெய் ஞானம் என்ற மதி கொண்டு
2.மனித எண்ணத்தின் உயர் ஞானத்தால்
3.அறம் பொருள் இன்பம் என்ற இனிய நிலையை ஒவ்வொருவரும் பெற முடியும்.

அதைப் பெறக்கூடிய பக்குவத்தைத்தான் இங்கே தொடர்ந்து போதனையாக வழங்குகின்றோம்.

இச்சரீரம் உறங்கும் பொழுது “உறக்கம்” என்றும்… செயல்படும் பொழுது “விழிப்பு” என்றும் சொல்கின்றோம். ஆனால்..
1.ஆத்மாவின் செயலில் இச்சரீரத்தை இயக்கக்கூடிய தன்மை பெற்றல்
2.உண்மைத் தன்மை விழிப்பு நிலை பெறுகின்றது.

வாழ்க்கை நடைமுறையில் இச்சரீர உணர்வுக்கொப்ப எண்ணுபவை யாவும் ஆத்மாவில் பதிவு பெறுகின்றது. அதே தொடரின் வாசனைதான் உணர்வு பெற்று இஜ்ஜீவித இயக்கத்தில் காந்த மின் அலையான இச்சரீர இயக்க ஓட்ட ஆத்மாவில் பதிவாகி விடுகின்றது.

எப்பதிவை எண்ணத்தின் உணர்வு கொண்டு நாம் பேசி மகிழ்ந்து வாழ்கின்றோமோ அவ்வலையைத்தான் ஆத்மா பெறுகின்றது.

அவ்வலையைத்தான் நம் உணர்வின் எண்ணமும் பெற்று நம்மையறியாமல் பேசவும் செயல்படுத்தவும் செய்கின்றது. நம்மைச் செயலாக்கும் நிலையும் அதுவேதான். ஆக.. அந்நிலை இச்சரீர ஆத்மாவை இப்பூமியின் பிடிப்பில் உறங்க வைத்த நிலை.

இப்பூமியின் பிடிப்பிலிருந்து விழிக்கும் நிலை என்பது…
1.தன்னைத்தானே தான் உணர்ந்து…
2.இச்சரீர உணர்வின் வாசனையை… இவ்வாத்மாவில் பதிய வைத்து வளர்த்துக் கொண்ட நிலையை…
3.உயர் ஞானத்தைக் கொண்டு தன்னை இயக்கும் ஆத்மாவின் உண்மையை உணர்ந்து
4.ஆத்மாவிற்கு நல் ஒலிகளை… நற்குணமுடன் கொண்ட உயர் தன்மையை…
5.அறம் பொருள் இன்பம் என்று பெரியவர்கள் நமக்குக் காட்டிய உயர் குணத்தின் சத்தியத்தை வளர்க்க
6.மாறிப் போகக் கூடிய இச்சரீரத்தில் உயர் குண சத்தியத்தைக் கொண்டு
7.இஜ்ஜீவ உயிராத்மா – உயர் காந்த மின் சக்தியினால்
8.இச்சரீரத்தில் வாழக்கூடிய வாழ்நாளில் – விழிப்பு நிலை நாம் முதலில் பெற வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே உணர்ந்திடல் வேண்டும்

ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே உணர்ந்திடல் வேண்டும்

 

விஞ்ஞானத்தால் இன்றைய மனிதன் தன் ஞானத்தால் வெகு வேகமாகச் செயல்படுத்தும் இத்தருணத்தில்…
1.மந்திர ஒலியின் யாகத்தால் தன் ஆத்மாவை
2.இப்பூமியின் பிடிப்பலையிலுள்ள ஆவி ஆத்மாக்களின் ஈர்ப்பு சுழற்சியில் சிக்க விட்டுவிடக் கூடாது.
3.ஆலயத்தில் ஆண்டவனை வணங்கும் வழிமுறையறிந்து வணங்க வேண்டும்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தெய்வமுண்டு…!

யாகத்தின் தொடர்பில் மந்திர ஒலியை ஒலிக்கக் கூடிய ஆலய வழிபாட்டின் உண்மை நிலை என்ன…? தெய்வத்திற்கு ஓதப்படும் மந்திர ஒலியினால் மனிதன் வணங்கும் தெய்வத்திற்கு என்ன பலன்…? மந்திர ஒலியை ஒலிக்கக் கூடிய ஆத்மாக்கள் அதனுடைய உண்மைத் தொடர்பை அறிந்து ஒலிக்கின்றார்களா…?

ஒலியின் நாதம் கொண்டு தான் தன்னுடைய இயக்கத்தின் தொடர்புக்கு ஜீவன் பெற வருகின்றது.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முதலில்..
1.மனிதன் தான் வணங்கும் தெய்வ நிலைக்கு ஜீவன் ஏற்படுத்தக்கூடிய தருணத்தில்
2.மனிதனின் முதல் நிலையான “புகழ்…” என்ற
3.பேராசைக் குணம் ஏற்பட்ட காலத்தில் வளர்ந்ததுதான் மந்திரமும் யாசமும்.

இயற்கையின் தொடர்பில் ஜீவ சரீரத்திற்கு வலு ஏற்படுத்திக் கொள்ள இம்மனிதனின் உடலிலுள்ள மின் காந்த ஒலி அலைக்கு மீண்டும் வலுத் தன்மை கூட்டிக் கொள்ளக் கூடிய வளர்ச்சிக்காக மந்திர தந்திரங்களை வடித்துக் கொண்டார்கள் அரசர்கள்.

மாய உருக்களைக் கொண்டு… தன் ஈர்ப்பு வட்டத்திற்கு இவ் ஒலியையும் ஒளியையும்… ஜீவனற்ற ஆத்ம உயிர் அலைகளைத் தன் சரீர ஆத்ம அலையுடன் ஈர்ப்புப்படுத்தி… மந்திரத்தால் அரசர்கள் மாய வித்தைகள் நடத்தினர்.

அத்தகைய சூட்சுமத்தின் முதல் வித்து தான்… யாகங்களை நடத்தி யாகங்களில் பலியிடும் நிலைகள்…!

யாகத் தீயிலே பலியிடக் கூடிய உயிர் ஜீவனின் ஆத்ம ஒலியைத் தன் சரீரத்தின் ஈர்ப்பு வட்டத்துடன் வளர்த்துக் கொண்ட வழித் தொடரில்தான் யாகங்களும் மந்திர ஜெபங்களும் அரசர்கள் ஆண்ட காலம் தொட்டு வளர்ந்து வந்தது.

அரசன் அதற்கென்று குருமார்களை நியமித்த பின்…
1.குருவிற்கு அரசன் அடிமையா…?
2.அரசனுக்குக் குரு அடிமையா..! என்ற தொடரில்
3.இயற்கையின் உண்மைத் தத்துவத்தை ஆரம்பத்தில் சித்தர்கள் காட்டிய இயற்கைத் தொடரில் வளர்க்காமல்
4.இறைவன் என்ற உருவத்தைக் காட்டி…!
5.மனிதன் தன்னைத் தானே அடகு வைத்திடும் நிலைதான்
6.மந்திரமும் தந்திரமும் யாகங்களும் வேள்விகளும் ஆசார அனுஷ்டானங்களும்.

எவ்வொலியின் ஈர்ப்பில் உணர்வின் எண்ணம் செல்கின்றதோ அதற்கொத்துத் தான் ஆத்ம உயிர் ஜீவன் பெறுகின்றது. அவ்வொலியின் தொடர்பு கொண்டுதான் ஈர்ப்பின் தொடர் வலுக் கொள்கின்றது.

இறைத் தன்மை என்பது எங்குள்ளது.. இறைவன் யார்…? மனிதன் யார்…?

மனிதனின் அறியக் கூடிய உயர் ஞானத்தை மனிதனுக்குள் உள்ள உயிர்த் தெய்வம் பிரிந்ததென்றால் இவ்வுடல் அழியக் கூடியதுதான்…!

இந்தத் தத்துவத்தை தன்னுள் அறிந்த மனிதன் “தான் யார்…?” என்பதை உணராமல்… கலியின் செயலில் தெய்வமென்ற உணர்வில் ஆத்மாவை அடகு வைக்கும் வழித்தொடரிலேயே இன்று உலகம் செல்கின்றதப்பா…!

ஆனால்…
1.மெய் ஞானத்தின் உண்மையின் தத்துவத்தை உணரக்கூடிய பக்குவம்
2.இஜ்ஜீவ சரீரத்தில் இவ் உயிராத்மா இயங்கக்கூடிய காலம்தான் என்பதை உணர்ந்து
3.ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே உணர்ந்திடல் வேண்டும்.

மனிதன் என்ற உயர்ந்த வித்திலிருந்து… எடுக்க வேண்டிய பலன் எது…?

மனிதன் என்ற உயர்ந்த வித்திலிருந்து… எடுக்க வேண்டிய பலன் எது…?

 

இயற்கையில் அமிலத்தின் ஒளி பெற்று மண்டலக் கோள்களின் ஈர்ப்பு வட்டத்தில் பூமியின் நட்சத்திரக் கோள்களின் அமில வளர்ச்சியால் உருவானது தான் இவ்வுயிர் ஆத்மாக்கள்.

அவை வளர்க்கக் கூடிய வளர்ச்சியும்… உருவான அந்தத் தொடர் நிலையின் வழித் தொடரில்தான் வளர்த்துக் கொள்ள முடியுமேயன்றி
1.வளர்ச்சித் தொடருக்கு எதிர்ப்பு நிலை ஏற்படும் பொழுது
2.வளர்ச்சியின் உருமாறக்கூடிய தன்மை தான் வளர்ப்பில் காண முடியும்.

நம் பூமியின் இயற்கைத் தன்மையின் ஜீவ வித்தின் பலன் நிலையே… மனிதனின் உயர் ஞான ஒளி சக்தி பெறக்கூடிய… “தெய்வ நிலை தான்…”

எந்த வித்தின் தொடரிலும்…
1.ஒரு பயிர் வளர்ந்து அதனின் பலன் தந்தாலும்…
2.அந்தத் தொடரின் மகசூல் பலவாகப் பெருகும் பக்குவத்தில்தான் பலவும் நடைபெறுகின்றன.

அத்தொடரின் தொடரில் தான்… ஆதி மனிதனின் உணர்வில் மனித உரு எண்ண வளர்ச்சி ஞானம் கொள்ளும் உயர்வு நிலை…. மனித வித்தின் உணர்வின் உயர் மண்டலமாம் பூமி மண்டலத்தில் உருவான மனிதச் செயல்.

இருந்தாலும் இதிலே மனிதன் வளர்ச்சி கொண்டு வாழும் காலம் மிகக் குறுகியதுதான்.

ஓர் விதையை நாம் விதைத்து… அந்த விதை வளர்ந்து செடியாகி.. மரமாகி… பக்குவம் பெற்றுப் பலனாய் அதனுடைய மகசூல் திரும்பிப் பெறக்கூடிய காலம் நீண்ட நாட்களாகி விடுகின்றது.

அதைப் போன்று தான் இப்பூமியும் வளர்ந்து வந்தது.

அதனுடைய வளர்ச்சியின் பக்குவ முதிர்வு நிலைக்குப் பிறகு… வளர்ச்சியின் பயனாய் மனித உணர்வின் உயர் ஞானம் கொண்டு செயல்பட்ட காலம்தான்… பூமி வித்தின் பலன் கண்ட காலம்…!

கண்ட பலனை… மீண்டும் பயிராக்கினால்தான் பலனின் தொடர் வளர்ந்து கொண்டே இருக்கும்.

ஓர் மரம் பலன் தரும் காலங்கள் முடிந்து… அம்மரத்தின் வளர்ச்சியை ஒத்து… மரத்தின் முதிர்வைக் கொண்டு பட்டுப் போன பிறகு… அம்மரத்தின் விதைகள் பல கோடியாய் வளர வைக்கக் கூடிய பயனை அம்மரம் தருகின்றது.

அப்படித் தந்ததை விரையமாக்காமல் வளர்க்கும் வளர் தொடர்ச்சியைப் போன்று தான்
1.இப்பூமியின் வித்தின் தொடரில் விதையான நம் ஆத்மாவும்
2.மீண்டும் பல வித்துக்களை வளர்க்கக்கூடிய விதையாகும் பக்குவத் தொடரில் வளர வேண்டும்.

மனிதனுடைய எண்ணத் தொடர் தன்னைத் தானே தான் உணர்ந்து… இயற்கையின் ஒலி ஒளித் தொடர் கொண்டு உயர் ஞானத்தை அறியும் உண்மைத் தத்துவ ஞானியாய் உயர்ந்திட வேண்டும்.

தன் ஆத்ம உயிரின் ஜீவ காந்த மின் தொடருக்கு…
1.இக்காற்றலையில் கலந்துள்ள மகரிஷிகளின் ஒளி அலைகளை
2.தன் உயர்வின் எண்ணத்தால் நுகர்ந்தெடுக்கும் தியான வழி கொண்டு
3.இஜ்ஜீவ ஒளியின் ஒளி நாதத்தால் மனிதன் தெய்வ நிலை பெற வேண்டும்.

ஆத்ம உயிரை ஆண்டவனாக்கும் வழிமுறையைத் தான் இங்கே உணர்த்துகின்றோம்

ஆத்ம உயிரை ஆண்டவனாக்கும் வழிமுறையைத் தான் இங்கே உணர்த்துகின்றோம்

 

மனித உணர்வின் சூட்சுமத்தை… “மனிதனே அறியக்கூடிய ஒளி சக்தி வளரும் சுயநலச் செயலினால்தான்…” பொதுநலனின் பரிமாணத்தை விரிவுபடுத்த முடியும்.

மனிதனுக்குகந்த வீரிய மின் காந்த ஒளி சக்தி மிருகத் தன்மையின் சரீர இயக்கத்தில் அதிகப்பட்டிருந்தாலும் உணர்வின் செயலைப் பக்குவப்படுத்தக்கூடிய தன்மை அவைகளுக்குக் குறைவு.

ஆகவே “மனித எண்ணத்திற்குத்தான்” பகுத்தறிவின் சூட்சும ஒளியை வளர்க்கும் தன்மை… இப்பூமியின் சூட்சுமமுடன் வளர்ந்த “ரிஷிகளின் செயலினால் செயல்படுகின்றது…!” ஒன்றின் வளர்ச்சியில் ஒன்றின் பக்குவத்தால்.

மிருகங்களுக்குப் பிரித்துப் பார்க்கும் தன்மை மனிதனை ஒத்து இருப்பதில்லை. ஆனால் மிருகங்களும் இப்பூமியின் ரிஷிகளின் சூட்சுமத்தில் வளர்க்கப்பட்ட இறை சக்தி தான்.

அவைகளுக்குக் கழிவும் உணவும்… ஒரே இடத்தில் ஒன்றாக இருந்தாலும் மனிதனை ஒத்து அருவருப்பு… நாணம்… முதலியன மிருகங்களுக்கு இருப்பதில்லை.

மனிதனின் பகுத்தறிவால் தனக்குகந்ததை உயர்ந்ததாய்ப் பெற்று மகிழக் கூடிய பக்குவம் கொண்ட செயல் வளர்ச்சி வீரியம் பெற்ற ஜீவ இறையருளின் உன்னதத் தன்மை கொண்டவன்.

தாவரங்களும் மிருகங்களும் மனிதனும் இப்பூமியின் இறை சக்திகள் தான்.
1.இறை சக்தியே இறையுணர்வு பெற்று
2.இறைத் தன்மையில் பக்குவப்படுத்தக்கூடிய குணம் தான் தெய்வ குணம்.

இப்பூமியில் ஆரம்ப மனிதன் வாழ்ந்த வாழ்க்கைக்கும் இன்றைய மனித வாழ்க்கைக்கும் நிறைய மாற்றங்கள் உண்டு. மனிதத் தேவைக்குகந்த உணவு… உடை… இருப்பிடம்… ஒவ்வொன்றிலும் தன் ஞானத்தால் மனித வாழ்க்கையின் வசதிக்குகந்த பக்குவத்தை மனிதன் இன்று பல வகையிலும் வளர்த்துக் கொண்டுள்ளான்.

அதைப் போன்று… இச்சரீர சுகத்தின் தேவையில் வளர்ச்சியுற்ற மனிதன் ஆத்ம தேவையின் பக்குவத்தை… இறை குணத்தின் வளர்ச்சியை வலுக்கூட்டும் தெய்வத் தன்மையால்… இக்கலியின் மாற்றத்தில் கல்கியில்…
1.இன்றைய மனிதனைக் காட்டிலும்
2.மனித எண்ணத்தின் வீரியத்தின் தெய்வத் தன்மையால்
3.மனிதன் “பறக்கும் நிலை” கொண்ட உயர்ந்த செயல் நிலைக்கு வர முடியும்.

ஒன்றைப் பக்குவப்படுத்தி அப்பக்குவத்தின் பொருளை எப்படி நமக்குகந்ததாக ஏற்படுத்தி சரீர வாழ்க்கையில் இன்பத்தைக் காண்கின்றோமோ அதைப் போன்று… ஆத்மாவின் பக்குவத்தில் அகிலத்திலும் கலந்துள்ள ஆதி சக்தியின் செயல் சக்தியில் “உயர்ந்த தன்மையான சூட்சும ஒளியால் ரிஷி சக்தியை மனிதன் பெற முடியும்…”

மனிதனின் ரிஷி சக்தியைக் கொண்டுதான்… மூவுலக சக்தியான “ஆக்கல் காத்தல் மாற்றல்” என்ற வழித் தன்மையில்… வளர்ச்சியில் வளரும் அண்டக் கோள்களில்… பால்வெளி மண்டலத்தில் எண்ணிலடங்கா இறை சக்தியில் இறையுணர்வாகும் தெய்வ சக்தியில்… ஆண்டவன் என்ற படைப்பின் தன்மைக்குச் செயல் கொள்ளும் ரிஷித்தன்மையால்… அந்தந்த அமிலத்தின் உருத்தன்மையில் உருவாகும் உயிர்த் தன்மையில் பக்குவம் கொள்ளும் படைப்பின் ஒளித் தன்மையை… ரிஷித்தன்மையின் ஒளித் தன்மையால் தனக்கொத்த செயலுக்கு மண்டலங்களை உருவாக்கி… உருவின் உருக்களை உணரும் வளர்ச்சியைத் தன் வலுவாக்கி… அண்டக் கோள்களையும் படைக்கும் ரிஷிகளால்… படைப்பின் பலனாய்ப் பக்குவப்படுத்தப்பட்ட உணர்வின் தெய்வ குணத்தின் “ஆண்டவனாக்கும்” வழிச் செயல்தான்… “அண்டத்தின் சூட்சுமத்தில் ஆதி சக்தியின் உண்மைச் சக்தி – உருப்பெறும் நிலை…!”

இச்சரீரத்தின் உணர்வை… “மின் காந்த ஒளி சக்தியை” இப்பூமியின் பிடிப்பில் இச்சரீர வாழ்க்கையில் அடையும் சுகத்தால் உணர்வின் எண்ணம் ஆத்மாவை வளர்க்க உதவாது.

இச்சரீரத்தை இப்பூமியின் பிடிப்பிற்கு அடகு வைக்கும் மனித உணர்வினால் அடையப் போகும் நன்மை எதுவுமில்லை…!

ரிஷிகளின் சக்தியால் பல கோடி ஆண்டுகளாய் பலவற்றில் வளர்ந்து வலுவாகி உள்ள இவ்வுயிராத்மாவை… ஆத்ம உயிரின் வீரியத்தின் உண்மையை உணரும் எண்ணத்தில்.. மனிதன் தன்னைத் தானே உணரும் பக்குவத்தால்… ஆத்ம உயிரின் சுயநலத்தைக் கொண்டு பொது நலத்தை வளர்க்கும் சூட்சுமத்தை உணர முடியும்.

தான் உண்ணும் உணவிற்கு…
1.நெல்லை எடுத்து அதிலுள்ள உமியை ஊதிப் பிரித்து விட்டு
2.மணியை (அரிசி) எடுத்துப் பக்குவப்படுத்தி உண்ணும் மனிதன்
3.தான் எடுக்கும் எண்ணத்தின் உணர்வைப் பக்குவமாக்கி
4.ஆத்மாவின் ஒளியை வளர்க்கும் தன்மை ஏன் பெற முடியாது…?

தன்னில் உள்ள இறைத் தன்மையை… தெய்வமாக்கும் நற்குணம் கொண்ட பக்குவத்தால்
1.ஆத்ம உயிரை ஆண்டவனாக்கும் வழிமுறைதான்
2.இங்கே உணர்த்தப்படுவதன் சக்தி நிலையின் உண்மை நிலை.

”என்னுள்ளே நான்…” என்ற இறை தெய்வமான “உயிர் தெய்வத்தை ஒளிர வைக்க வேண்டும்…”

”என்னுள்ளே நான்…” என்ற இறை தெய்வமான “உயிர் தெய்வத்தை ஒளிர வைக்க வேண்டும்…”

 

1.என்னுள்ளே நான்… என்ற நிலைக்கொப்ப
2.தன்னுள் உள்ள தன் உயிராத்மாவை
3.தன்னை இயக்கும் எல்லாமில் எல்லாமாய்ப் படர்ந்துள்ள இறை உயிரை
4.தன்னுள் உள்ள உயிர்த் தெய்வத்தைத் தான் வளர்க்க
5.இச்சரீரத்தைப் பதராக்கி உயிரை மணியாக்க
6.ஜீவ வளர்ச்சி ஓட்டத்தில் வளரும் காலத்தில்
7.வளர்ச்சியின் முதிர்வு நிலை முற்றிய பிறகு மணியைப் பிரித்து
8.”என்னுள்ளே நான்…” என்ற இறை தெய்வமான உயிர்த் தெய்வத்தை ஒளிர வைக்க முடியும்.

ஜீவ உணர்வின் எண்ண சரீரம் ஆத்ம உயிருக்கு உயர்வு நிலையின் எல்லாவற்றையும் கடந்து ஒளி சக்தியின் தெய்வநிலை பெறத்தக்க வழிக்கு வளர்க்கும் செயல் சரீர உருநிலை.

நெற் பயிர் வளர்ந்து முதிர்ந்து மணியை வெளிப்படுத்துவதைப் போன்று இவ்வுயிராத்மா உடலில் இயங்கும் பொழுதே.. “இவ்வுடலைச் சக்கையாக்கி உயிரை மணியாக்கி வளரும் பக்குவத்திற்கு” நாம் வருதல் வேண்டும்.

மனிதனுக்குக் கிடைத்துள்ள எண்ணத்தின் ஞானத்தை ஒன்றை அறியக் கூடிய வளர்ச்சியை உயர்ந்த எண்ணத்தில் செயல்படுத்த வேண்டும்.

இப்பூமி பிற கோள்களின் துணை கொண்டு சுழன்று கொண்டே ஓடிக் கொண்டே உள்ள ஓட்டத்தில் பிற கோள்களின் தொடர்பு கொண்டு தான் வளர்ந்து வளரக்கூடிய நிலை பெற்றது.

இந்தப் பூமியின் மண்டல ஓட்டத்திற்கொப்ப…
1.இப்பூமியில் வளரக்கூடிய நம் உயிராத்மாவையும் ஓர் மண்டலமாக உருவாக்கக் கூடிய தன்மைக்கு
2.எதையும் வளர்க்கவல்ல எண்ணத்தின் சைவ சித்தம் மனிதனின் உணர்வில் இருக்க வேண்டும்.

“மனிதனின் எண்ணம்தான்” வீரியம் கொண்டு இப்பூமியின் பிடிப்பு வாழ்க்கையில் ஒன்றை வளர்க்கவும் அழிக்கவும் செயல் கொள்கின்றது. எதையும் சாதிக்கவல்ல சக்தி மனித ஆற்றல் திறமைக்கு உண்டு.

மனிதன் தெய்வமாகக் கூடிய வழி முறைக்கு எண்ணத்தைச் செலுத்தி இப்பூமிப் பிடிப்பின் இறுக்கத்திலிருந்து இப்பூமியின் சுழற்சியிலிருந்து விடுபடலாம்.

விஞ்ஞானிகள் இன்று தன் ஞானத்தால் கண்டுபிடிக்கும் விஞ்ஞானக் கருவிகளினால் வான மண்டலத்தில் உள்ள இரகசியங்களையும் ஒவ்வொரு கோள்களில் உள்ள உண்மைகளையும் அறிந்து பூமியில் மனித ஆத்மாக்களுக்கு வேண்டிய வளர்ச்சிக்கு மனித அறிவின் ஆற்றலை விஞ்ஞானத்தில் பெருக்க முயற்சிக்கின்றார்கள் அல்லவா..!

அந்தத் திறனைப் போன்று மனிதனும் தன் உயிராத்மாவைப் பிற கோள்களில் எண்ணத்தைச் செலுத்தி
1.அவ் எண்ணத்தின் தொடர்பை இச்சரீர உணர்வுடன் எடுக்க எடுக்க
2.இச்சரீரத்திலுள்ள உயிரணுக்கள் யாவையுமே எவ் அமிலத்தை இச்சரீர உணர்வுடன் அதிகமாக எடுக்கப் பழகிக் கொள்கின்றதோ
3.அத்தொடரின் வலுத் தன்மையால் இச்சரீரம் சக்கையாகி
4.ஆத்ம உயிர் தனித்துச் செயல்படக் கூடிய வளர்ச்சியால் இச்சரீரம் ஒளிச் சரீரமாகி
5.மற்ற ஈர்ப்பின் பிடிப்பில் இவ்வுயிராத்மா சிக்காமல் ஒளி நிலை பெறுகின்றது.

எவ்வித்து வளர்ந்தாலும் அவ்வித்தின் தொடர் அதனதன் ஜீவ வளர்ச்சியில் பலவாகப் பலன் தருகின்றது. மனித சரீரத்தின் வித்தின் உண்மைப் பலன் தன் பிறப்பில் பிறக்கக்கூடிய ஜீவ குழந்தைகள் மட்டுமல்ல… மனித சரீரத்தில் இம்மனிதனாய் ஆத்ம உயிர் ஜீவன் கொண்டு வளர… “பல கோடி கோடி ஜீவ அணுக்கள்” இச்சரீரத்தில் வளர்கின்றன.

ஓர் நெல் செடியாகி அதனின் பலனில் பல நெல்களைத் தருகின்றது. அதைப் போன்று
1.இச்சரீரத்தை இயக்கும்… “உயிராத்மாவை வித்தாக்கி”
2.உயிரணுக்கள் ஒவ்வொன்றையுமே வித்தின் பலன்களாக
3.உயிரின் பருமனை ஒளியாக்கக் கூடிய உயிர் காந்த வளர்ச்சிக்குப் பக்குவப்படுத்துவதுதான்
4.தியானத்தின் மூலம் எடுக்கக்கூடிய உயர் ஞானத்தின் மனோ வேகத்தை
5.மகரிஷிகள் காட்டிய சைவத்தின் சித்த குணமான நற்குணத்தைச் சம உணர்வுடன் கூடிய எண்ணத்தில் பக்குவபடுத்தி
6.மின் காந்த சக்தியை இச்சரீரம் எடுக்கும் வழிமுறையில்
7.இவ்வுயிராத்மா இவ்வுடலிலுள்ள ஒவ்வொரு உயிரணுக்களையும் பலனாக எடுத்து
8.தன் வளர்ச்சியின் வீரியம் பெற முடியும்.

தனக்குள் உள்ள உணர்வின் எண்ணத்தில் இருந்துதான் மனிதன் சக்தியைக் கூட்டி உயர்வு நிலைக்குச் செல்ல முடியும். இதனை உணர்ந்து பக்குவ முறையில் ஒவ்வொருவரும் பலன் பெறலாம்.

உடலின் தரம் உயிராத்மாவின் தரம்

உடலின் தரம் உயிராத்மாவின் தரம்

 

காட்சி:
நெல் குவியல் தெரிவதைப் போன்றும் அக்குவியலில் உள்ள நெல்லை ஒருவர் எடுத்துக் கையில் வைத்துத் தேய்த்துப் பதரை நீக்கி அரிசியான மணியை வாயில் போடுவதைப் போன்றும் தெரிகின்றது.
விளக்கம்
நெல்லைப் பதம் பார்த்து நெல் காய்ந்து விட்டதா… அதை அரைத்துச் செயலுக்குக் கொண்டு வரலாமா…? என்பதற்காகவும் பதம் பார்த்திருக்கலாம். அல்லது நெல்லிலுள்ள பதரை நீக்கி அரிசியைச் சுவைக்கவும் பார்த்திருக்கலாம்.

முதலில் சொன்னது போல் நெல்லில் உள்ள மணியைப் பிரிக்க வேண்டும் என்றால் அந்த நெல் காய்ந்து பக்குவப்பட்டிருந்தால் தான் அதைச் செயலுக்குக் கொண்டுவர முடியும்.

அதைப் போன்று இவ்வுடலான நெல் பக்குவப்பட்டிருந்தால் தான் இவ்வுடலின் உயிராத்மா செயலுக்குக் கொண்டு வர முடியும்.

காய்ந்த நெல்லில் உள்ள உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகின்றோம்.
1.மணியான அரிசி உள்ளே இருக்கும் வரை நெல் என்று சொல்கிறோம்
2.நெல்லிலிருந்து அரிசி விடுபட்டவுடன் பதர் என்று அந்த உமியை ஒதுக்கி விடுகின்றோம்

அதே போல் தான்
1.உயிராத்மாவானது (உயிர்) இச்சரீரத்தில் இயங்கும் வரை மனிதன் என்ற நாமகரணத்துடன் செயல் கொள்கிறது.
2.உடலை விட்டு உயிராத்மா பிரிந்தவுடன் பதரைப் போன்று உடல் கழிக்கப்படுகின்றது.

உடலில் இருக்கும் உயிராத்மாவின் உண்மையின் ஒளி சக்தியின் செயலை… ஆத்ம உணர்வை அறியாமல்… எண்ணத்தின் ஓட்டம் ஒவ்வொருவருக்கும் தன் தேவையின் செயலுக்காகத்தான் தெய்வங்களை வணங்குவது என்ற நிலையில் இன்று உள்ளார்கள்.

தனக்கு மேல் உயர்ந்த ஞானிகளையும் ரிஷிகளையும் சந்தித்தால் கூடத் தன் உணர்வின் தேவைக்காக மட்டும் தான் அந்தச் சந்திக்கும் நிலையையும் பயன்படுத்த எண்ணுகின்றார்கள்.

அதே சமயத்தில் தனக்கு மேல் உயர்ந்தவர்களுக்கு ஓர் இன்னல் ஏற்பட்டால்…
1.இவர்களுக்கே இந்த நிலை…
2.நாம் எல்லாம் சாதாரணமானவர்கள்… நாம் என்ன செய்ய முடியும்…! என்ற எண்ணத்தில்
3.தன்னையே ஒதுக்கிக் கொண்டு… மீண்டும் பிறிதொரு ஈர்ப்புக்கே தன் எண்ணத்தைச் செலுத்தி
4.உடலே பிரதானம் என்று “தான்… தனது…” என்ற செயலுக்குத்தான்
5.மனித உணர்வின் தத்துவம் செயல் கொள்கின்றது இந்தக் கலியில்.

நம் பிரபஞ்சத்தில் உள்ள சூரியன் மற்ற கோள்களின் தொடர்பு கொண்டு… பல விதமான குண அமிலத்தைத் தனக்குள் எடுத்து… அதைத் தன் சக்திக்குகந்தாக்கி… மீண்டும் வெளிக்கக்கித் தன் வளர்ச்சியை வளர்த்து ஓடிக் கொண்டே உள்ளது.

அதைப் போன்று மனிதனின் உணர்வின் எண்ணம் சூரியனைப் போன்று…
1.தன் உணர்வுடன் மோதக்கூடிய எந்த எண்ணத்திற்கும் தான் அடிமையாகாமல் தனக்குள் அதைச் சேர்க்கும் பொழுது
2.தன்னிலிருந்து வெளிப்படும் அலையானது மாற்று எண்ணங்களைத் தனக்குள் பஸ்பமாக்கி
3.தன்னிலிருந்து வெளியாகும் உணர்வின் எண்ணம் “சாந்தம்” என்ற ஒளியுடன் சமைக்கப்படும் பொழுது
4.மனிதன் தெய்வ நிலை கொண்ட செயலுக்கு வந்துவிடுகின்றான்.

நெல்லில் மணி இருக்கும் வரை தான் நெல்லிற்குத் தரமுண்டு. அதைப் போன்று இவ்வுடலில் உயிராத்மா இருக்கும் வரைதான் உடலுக்குத் தரமுண்டு. ஆகவே
1.இவ்வுடலில் இருந்து உயிராத்மாவை ஒளி கொண்ட முத்தாகப் பக்குவப்படுத்தக் கூடிய வழி முறையை
2.நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல் கொள்ள வேண்டும்.

ஒளியாகும் பருவம் பெற்றவர்களப்பா நீங்கள் எல்லோரும்…!

ஒளியாகும் பருவம் பெற்றவர்களப்பா நீங்கள் எல்லோரும்…!

 

ஒவ்வொரு மனிதனுக்கும்…
1.தன் தன் உடல் தேவைக்குகந்த எண்ண ஓட்டம் தான் ஓடிக் கொண்டே உள்ளதேயன்றி
2.தன் ஆத்மாவின் உயர்வை… உண்மையான சேவையில் உணரும் பக்குவம் இக்கலியில் வளரவில்லை.

இந்தப் பூமியின் சக்திக்கு வலு கூட்டக்கூடிய வலுத் தன்மைக்கு… இன்றைய இக்கலியின் உணர்வில் மனித ஆத்மாவின் சேவை உணர்வு செயல்படல் வேண்டும்.

சேவை என்பது… தான் பெற்ற உயர் ஞானத்தில் அறியும் உண்மை ஒளி சக்தியைக் கொண்டு ஒன்றை உருவாக்கி வளர்க்கக் கூடிய வளர்ச்சியின் சேவையை மனிதன் பெற வேண்டும்.

உடலின் சுகத்திற்குச் சேவையும்… புகழின் பேராசைக்குச் செல்லக்கூடிய சேவையும் உண்மையின் வளர்ச்சியின் சேவையல்ல…!

மனிதனின் உணர்வின் எண்ணத்தை ஒளியாக்கக் கூடிய ஆத்ம பலம் பெற வேண்டும்.
1.எந்த மனிதனின் உணர்வையும் பாதிக்கக்கூடிய எண்ணத்தையும்
2.அழிவின் குரோதத்தையும் எடுக்காமல்
3.தன் சரீரத்தையே சம குணம் கொண்ட நற்குணத்தின் சாந்தத்தைப் பெறவல்ல தன்மை பெற வேண்டும்.

இப்படிப்பட்ட செயல் வழியில் இவ்வாத்மாவை வளர்த்திடும் பக்குவத்தில் எந்த ஒரு ஈர்ப்பலைக்கும் ஆத்மா சிக்காமல் ஒளி சரீரமாகக் கூடிய முதிர்வு நிலையை ஒவ்வொருவரும் பெற வேண்டும்.

இப்பூமியில் வளரக் கூடிய தாவரங்களிலும் மற்ற கனி வளம் ஒவ்வொன்றிலுமே முதிர்வு நிலைக்குச் சேருவது மீண்டும் ஆவியாகக் கூடிய திராவக எண்ணை வித்து நிலை.

1.இப்பூமியையே சத்தாக்கி
2.அச்சத்தின் வளர்ச்சியின் முதிர்வு நிலைதான்
3.இப்பூமியில் இருந்து நாம் எடுக்கும் எண்ணை வித்துக்கள் யாவையும்.
4.இப்பூமியின் உலோகங்களான உலோகச் சத்தையும் வளர்ச்சியின் முதிர்வில் எடுத்து வளர்ந்தது தான் அந்த எண்ணை வித்து.

ஆவியாகி… குளிர்ந்து நீராகி… நீரின் தொடர்பு கொண்டு… தான் எடுக்கும் அமிலத்தில் ஓர் செடி வளர்ந்ததென்றால் அந்தச் சத்தை வித்தாக்குகின்றது.

சாதாரணமாக நீரை எடுத்து உறிஞ்சித்தான் கடலைச் செடியே வளர்கின்றது. அதன் வித்தான நிலக்கடலையிலிருந்து எண்ணைச் சத்தைப் பிரித்தெடுத்த பிறகு அந்த எண்ணை நீருடன் ஒட்டுவதில்லை.

மேலும் அந்த எண்ணையில் ஊன்றிக் கவனித்தோமென்றால்
1.நீரின் மேல் சிறிது அந்த எண்ணெயை விட்டால்
2.வானவில்லில் காணக்கூடிய ஏழு நிறங்களையும் இவ் எண்ணையிலும் காணுகின்றோம்.

அதாவது… நீரிலிருந்து உருவான தாவரங்களின் முதிர்வு வளர்ச்சியே
1.மீண்டும் நீருடன் ஒட்டாமல் எண்ணையாகி
2.எரி நிலையில் ஆவியாகிக் கூடிய வலுப் பெற்று விடுகின்றது.

அதைப் போன்று தான் மனிதனின் உணர்வின் எண்ணத்தால்
1.விண்ணிலிருந்து வரும் மின் காந்த சக்தியைச் சம குணமுடன் எடுத்து ஆத்ம பலத்தை வளர்த்து
2.இவ்வாத்மாவையே ஒளியாக்கக் கூடிய உயர் ஞானத்தின் ஒளி ஆத்மாக்களாக ஆக முடியும்
3.ஒளியாகும் பருவம் பெற்றது தான் (மனிதர்கள்) இப்பூமியின் வித்துக்களப்பா…!

இதை அறிந்து நீங்கள் ஒவ்வொருவரும் உயர் ஞான ஜோதிகளாக உருவாகுங்கள்…!

இயந்திரத்தனம் கொண்ட உருக்களை உருவாக்குவதால் எந்த வளர்ச்சியும் கிடைக்காது

இயந்திரத்தனம் கொண்ட உருக்களை உருவாக்குவதால் எந்த வளர்ச்சியும் கிடைக்காது

 

காட்சி:
ஓர் மனிதன் முயற்சியால் செயற்கையில் “பல இயந்திர உறுப்புகளைக் கொண்டு ஓர் வாகனத்தை உருவாக்கி…” பின் அதை ஓட்டுவதைப் போன்று தெரிகின்றது.

இன்னொரு மனிதன் “தன் உடலையே” இயந்திரத்தின் நிலைக்கொப்ப சர்க்கஸ் விளையாடுவதைப் போன்று உடலைப் பல கோணங்களில் வளைத்து வித்தைகள் செய்யும் காட்சி தெரிகின்றது.

சூரியனும்… சூரியக் குடும்பத்தின் நாற்பத்தி ஏழு மண்டலங்களும்… சனிக் குடும்பத்தின் பன்னிரண்டும்… பூமியைச் சுற்றியுள்ள இருபத்தியேழு நட்சத்திர மண்டலங்களும்… பூமியின் அதி தொடர்பு கொண்ட அருகிலுள்ள சில மண்டலங்களின் காட்சிகளும்… பூமியும்… பூமியின் வளர்ச்சியும்… பூமியின் எண்ணத்தின் உணர்வின் எண்ணம் கொண்ட மனிதச் செயலும் காட்சியாகத் தெரிகின்றன.

விளக்கம்:
(முதலில் தெரிந்த) வாகனத்தின் நிலை… மனிதனால் ஜடப் பொருள்களைக் கொண்டு மனிதனின் செயலின் தேவைக்கொப்ப உருவாக்கியது.

மனிதன் தன் எண்ணத்தைச் செலுத்தி எண்ணத்தின் உணர்வைக் கொண்டு தனக்கு இசைவுபட்ட வாகனத்தை உருவாக்க… ஜடப்பொருளைத் தன் எண்ணத்திற்கொப்ப உருவாக்கிச் செயலுக்குக் கொண்டு வருகின்றான்.

தன் தேவையின் உணர்வுக்கொப்ப எண்ணத்தைச் செலுத்தும் பொழுது தன் ஞானத்தை வளர்ச்சிப்படுத்தி தனக்குகந்த உருவாக்கும் செயல் தான் அது.

1.அத்தகைய வளர்ச்சியின் செயல் திறமை கொண்டு
2.சரீர உணர்வில் உடலில் ஓடக்கூடிய உயிர் அணுக்கள் ஒவ்வொன்றையுமே தன்னிச்சைக்குச் செயல்படுத்தி
3.ஓர் காரியத்தைக் கூர்மையாகத் தன் ஞானத்தின் வலுவில் பழக்கப்படுத்தும் செயல்படுத்தும் வழிமுறையினால்
4.மனிதனுடைய ஆத்மா குறுகிய நிலைக்கோ வலுவிழந்த தன்மைக்கோ செல்வதில்லை.

(இரண்டாது) அதே சமயம் மனிதனுடைய உடலையே வித்தையாக்கித் தன் உடலைப் பல நிலைகளில் அவ்வுறுப்புக்களைச் செயல்படுத்தும் பொழுது மனிதனுடைய உடலிலும் இயந்திர நிலைக்கொப்பத்தான் அந்தச் செயல் நிலை செல்கின்றது.

ஆகவே…
1.பிறிதொரு பொருளை உருவாக்குகின்ற இயந்திர நிலைக்கும்
2.உடலை இயந்திரம் போன்று சாகசம் புரிந்து… வித்தை காட்டும் வழி முறைக்கும் மாறுபாடு ஏதுமில்லை.

ஆனால் மனிதனின் உணர்வின் எண்ண ஓட்டமானது… இச்சரீர உயிராத்மா ஜீவன் பெற… இப்பூமியின் உணர்வின் எண்ணத்தில் செயல் புரிகிறது என்றால் அச்செயலுக்கு மூலத்தின் வழி முறை சூரியனும் சந்திரனும் சூரியக் குடும்பத்தின் நட்சத்திரக் கோள்களும் தான்…!

அப்படிப்பட்ட வழித் தொடரில்… பல உணர்வின் அமில வழி ஒளி சக்தியின் தொடர்பு கொண்டு இச்சரீரத்தின் உணர்வின் எண்ண ஓட்டம் எப்படிக் கிடைத்தது…? என்பதை மனிதன் தன்னைத் தானே உணர்ந்து… சிந்தனையில் உணரல் வேண்டும்.

ராகு கேது சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் வியாழன் சுக்கிரன் சனி என்ற நவக் கோள்களை எல்லாம் நவக்கிரகமாக அன்றே சித்தன் பூமிக்கும் நவக்கோள்களுக்கும் இருபத்தி ஏழு நட்சத்திரங்களுக்கும் தொடர்பு ஏற்படுத்திக் காட்டினான்.

பூமியின் சுழற்சியில் பூமிக்கு அருகிலுள்ள சந்திரனின் தொடர்பைக் கொண்டு அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் பூமியில் ஏற்படக் கூடிய தொடர் போன்றே நவக்கோள்களின் தொடர்பில் இருபத்தியேழு நட்சத்திரத்தின் தொடர்பு கொண்டு நவக்கோளையும் அதனின் இயக்கங்களையும் காட்டினான்.

1.அதே சமயத்தில் நட்சத்திர மண்டலத்தின் ஈர்ப்பில் வரும் அமிலத் தன்மைகளையும்
2.அதனால் இப்பூமியின் தொடர்புடன் சுழலுகின்ற காந்த ஒளி அலையில் உருவாகக்கூடிய உயர் சக்திகளின் குண நிலையையும்
3.மனிதப் பிறப்பும் தாவரங்களின் குணம் மணம் சுவை ஜீவன் யாவையுமே உருவாகக்கூடிய தன்மையையும்
4.ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று ஈர்ப்பு கொண்டு சுழலக்கூடிய கால மாற்றத்தில் வளரக்கூடிய உண்மைகளை
5.பல ஆயிரம் காலங்களுக்கு முதலிலேயே மகரிஷிகளினால் பூமியின் ஜாதகங்கள் குறிக்கப்பட்டன.

அந்தந்தக் கோள்களின் ஈர்ப்பின் தொடர்புக்கு ஒத்த கால மாற்றங்களினால் நம் பூமியின் செயலில் செயல்படும் வழி முறைதனை “இந்த நாளில்… இந்த நேரத்தில் மழை வரும்…! என்பதையும் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் போன்ற கிரகணங்களின் சந்திப்பின் காலத்தையும்…” குறித்தனர்.

அன்றைய மகரிஷிகளால் வானசாஸ்திர உண்மை ஞானத்தில் அறியப்பட்ட வழித் தொடரைத்தான் இன்றைய விஞ்ஞானமும் பேசுகின்றது. ஆனால்… மெய் வழி அறிந்து வந்த அந்த வளர்ச்சி விஞ்ஞான சாஸ்திரத்தால் “தன் ஞானம்” இன்று மறைக்கப்பட்டு விட்டது.

1.உணர்வின் எண்ண ஓட்டத்துடன் கூடிய தன் ஞானத்தின் உயர் ஞானத்தை
2.இப்பூமியில் உணர்வின் எண்ணத்தில் மனித ஆத்மாக்கள் வாழ்ந்த விதத்தை வளர்த்த
3.ரிஷிகளின் வம்சத்தின் தொடரின் ஜீவ நிலை வளரும் சக்தி நிலை வளர்ந்தால்தான்
4.மீண்டும் உணர்வின் எண்ணத்தின் செயல் வளர்ச்சி மனிதச் செயலின்
5.உயர் ஞானம் வளரக்கூடிய ஜீவ உருக்களை உருவாக்க முடியும்.

மனிதன் உருவாக்கிய இயந்திரங்களோ மற்ற தாவரங்களோ எல்லாமே தன் தன் தேவைக்குகந்த… தன் தேவையினால் அழியக் கூடியவை தான். அதனால் இப்பூமியின் சக்திக்கு வலுகூட்டக் கூடிய பலனோ பயனோ இல்லை.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்…!

ஒரு மிருகம் முன்னாடி சென்றால் அதன் பின் மிருகக்கூட்டம் செல்வது போல் தான் இன்றைய மனித அறிவின் ஞானம் சென்று கொண்டுள்ளது

ஒரு மிருகம் முன்னாடி சென்றால் அதன் பின் மிருகக்கூட்டம் செல்வது போல் தான் இன்றைய மனித அறிவின் ஞானம் சென்று கொண்டுள்ளது

 

இப்பூமியின் காற்று மண்டலமே விஷமாகிக் கொண்டுள்ள இக்கலியின் கடைசியில் மனிதனின் உணர்வுகளெல்லாம்…
1.மனிதன் உண்ணக் கூடிய உணவு முறையாலும்
2.வாழ்க்கை நெறியில் நாகரீகத்தின் வளர்ச்சியாலும்
3.மிருகங்களின் நிலையில் எப்படி ஆடு மாடுகள் ஒன்றைப் போன்றே பிறிதொன்றும் செய்கின்றதுவோ (ஒரு ஆடு போனால் அதற்குப் பின்னாடி எல்லா ஆடுகளுமே செல்வது போல்)
4.அதைப் போன்று மனிதனின் வீரியத் தன்மை தன்னைத்தானே தான் உணராமல்
5.மிருகத்தின் நிலைக்கொப்பத் தான் மனித அறிவின் ஞானம் சென்று கொண்டுள்ளது.

அந்தந்தச் சரீரத்திற்குகந்த அமிலத்தின் வீரிய குணத்தைக் கொண்டு அறிவின் ஞானத்தை உயர் ஞானமாக்கித் “தன் அறிவால் உயர் தன்மை பெறக்கூடிய சக்தி மனிதனுக்கு உண்டு…!” என்பதை அறியவில்லை… உணரவும் இல்லை.

இப்பூமியின் தொடர்பு கொண்ட நட்சத்திரங்களின் தொடர்பில் உயிர் பெற்ற ஜீவ ஆத்மாக்கள் அனைத்துமே ஒன்று போல இருப்பதில்லை.

எந்தெந்த நட்சத்திரத்தின் வலுவுடன்… எந்த நட்சத்திரத்தின் ஈர்ப்பு நிலையுடன் தொடர்பு கொண்டு இப்பூமி சுழல்கின்றதோ அத்தருணத்தில் உயிர் பெற்ற ஜீவாத்மாக்கள்
1.குணங்களிலும்…
2.செயல்களிலும்…
3.உருவ மாற்றத்திலும்…
4.வண்ணத்திலும்…
5.ஒருவரை ஒத்து ஒருவரில்லாமல் தான் இருக்கும்.

இதை முதலில் உணர்ந்து கொண்டு… மனிதனுக்குண்டான “உயிர்த் தன்மையின் உயர்வு நிலையை…” உணர்ந்து செயல்படுதல் வேண்டும்.

சூரியன் எப்படி நாற்பத்தி ஏழு கோள்களின் தொடர்புடன் தன்னையும் வளர்த்து… தன் குடும்பக் கோள்களின் தொடர்பிலும் வளர்ச்சி பெற்றுச் சுழலும் செயல் நடக்கின்றதோ… அதைப் போன்றே ஒவ்வொரு மண்டலத்துக்கும் அதனதன் ஈர்ப்பின் சுழற்சி தொடர் நட்சத்திர மண்டலங்கள் உண்டு.

நம் பூமியின் தொடர் நட்சத்திரம் இருபத்தி ஏழும் பூமியுடன் இருபத்து எட்டாகச் சுழலும் தொடர்ச்சியில் பூமியின் ஈர்ப்பு வளர்ச்சிக்குத் துணைக் கோள்களாக இந்நட்சத்திரங்களின் வலுவைக் கொண்டுதான் “ஜீவ ஞான சரீரங்கள் (மனிதர்கள்)” இந்தப் பூமியில் மட்டுமே உருப்பெற்று உள்ளது.

அதாவது ஜீவ அலையின் ஞான ஒளி உணர்வின் எண்ணத்தின் மையக் கருவின் செயல் வலுப் பெற்று வாழக்கூடிய தகுதி நாற்பத்தி எட்டுக் கோள்களில் இப்பூமிக்கு மட்டும் உண்டு என்றால் இப்பூமியைச் சுற்றியுள்ள வலுக் கொண்ட இவ் இருபத்தி ஏழு நட்சத்திரங்களும் “ஜீவன் கொடுக்கும் ஜீவ நட்சத்திரங்கள் தான்…!”

ஜீவனை வளர்க்கவல்ல அத்தகைய ஜீவ நட்சத்திரங்களும் நட்சத்திரங்களிலேயே பல மாற்றுச் செயலை நிலைக்கத்தக்க பல கோடி தன்மைகள் கொண்ட நட்சத்திரங்களும் உண்டு.

இப்பூமியின் வடிவ நிலையையும் இப்பூமியின் தன்மையையும் ஆதிகாலத்தில் ஒலி ஒளி தொடர்பு நிலை விஞ்ஞான ரீதியில் பெறாத காலத்தில்…
1.வான சாஸ்திரத்தின் பல உண்மைகளையும்
2.பூமியின் இயற்கை மாற்றத்தின் நிலைகளையும்
3.இப்பூமிக்கும் மற்றக் கோள்களின் சந்திப்பு நிலைகளையும்
4.இவ் இருபத்தி ஏழு நட்சத்திரத்தின் தொடர்பு கொண்டுதான் மனிதன்
5.விஞ்ஞானம் வளராத காலத்தில் தன் ஞானத்தால் அன்றே அறிந்தான்.

பல ஆயிரம் ஆண்டு காலங்களுக்கு முன்பு ஆழ்கடலில் பயணம் செய்தவர்களெல்லாம்
1.துருவ நட்சத்திரத்தையும் விடிவெள்ளி போன்ற சில நட்சத்திரங்களையும்
2.இப்பூமியின் ஈர்ப்புத் தொடர்பில் பூமியின் ஈர்ப்புடனே சுழலக்கூடிய நிலையை அறிந்த ஞானத்தால்
3.இயற்கை நிலைகளை மனிதர்கள் அன்றே அறிந்தார்கள்.

அவர்கள் அறிந்த வழியிலேயே நம் அறிவின் ஞானத்தை உயர் ஞானமாக்க வேண்டும் என்பதனை உணர்ந்து அந்த ஞானிகள் காட்டிய வழியில் செயல்பட வேண்டும்.

ஏனென்றால் மனிதனுடைய உணர்வின் எண்ண ஜீவ சரீரத்தில் இயங்கும் உயிராத்மாவின் ஒளியை “எந்நிலை கொண்டு அதிலே வீரியத் தன்மையைப் பெற வேண்டும்…?” என்ற பக்குவத்தைத்தான் பல வழிகளில் இது நாள் வரை போதித்துள்ளோம்.