“மனித உருப் பெறவே” பாக்கியம் பெற்றிருக்க வேண்டும்

“மனித உருப் பெறவே” பாக்கியம் பெற்றிருக்க வேண்டும்

 

ஒவ்வோர் ஆத்மாவிற்கும் அதனதன் ஜீவ அமில குணங்கள் உண்டு. அக்குணத் தொடர்ச்சியில் எவ் அமிலத்தின் விகித நிலை கூடியுள்ளதோ அதன் சக்தித் தொடரில் அவ்வாத்மாவின் செயல் சென்றிட்டால் அவ்வாத்மாவின் ஒளி பிரகாசிக்கும்.

ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் பன்னிரண்டு வகையான அமில குணங்களுண்டு. இவ்வமில குணத்தை எதன் தொடரில் உயிரணு உதித்து உயிராத்மாவான மனித உடல் பெறுகின்றோமோ அதிலிருந்தே இப் பன்னிரண்டு வகையான குணங்களில் ஒன்றை ஒவ்வோர் ஆத்மாவும் அதன் ஈர்ப்பிலேயே வளர்ச்சியை ஈடுபடுத்தி இழுக்கின்றது.

1.ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் இப் பன்னிரண்டு வகையான குண அமிலங்கள் இருந்தாலும்
2.ஏதாவது ஒன்றின் வளர்ச்சியின் வட்டத் தொடரில்தான் ஒவ்வோர் ஆத்மாவும் வளர்ந்து கொண்டே செல்கின்றதே ஒழிய
3.தனக்குள் உள்ள மற்றக் குண அமிலத்தை எண்ணுவதோ செயல்படுத்துவதோ இல்லை.

மனித ஆத்மாவாய் வரும் காலத்திலேயே இப் பன்னிரண்டு வகை குண அமில சக்தி பெற்ற பிறகு தான் மனிதனாகவே மனிதக் கருவிற்கு வர முடிகின்றது.

இயற்கையின் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு வகை நிலை ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பொழுதைய செயற்கையிலேயே எப்படி ஒரு தாவரத்திற்கு அளிக்கும் எரு மற்றொரு தாவரம் ஏற்பதில்லையோ அதைப் போல் ஒவ்வோர் இன வளர்ச்சிக்கும் உயிரணுவிலிருந்து அவை ஈர்க்கும் குண வளர்ச்சியின் தொடர்படுத்தித்தான் ஒவ்வோர் இன வளர்ச்சியும் வளர்கின்றது.

இப் 12 வகை குண அமில வளர்ச்சி பெற்ற பிறகு தான் மனித உருப் பெறுகின்றது. இம்மனித உருவில் அக்குண வளர்ச்சியின் சக்தியை அதன் வழித் தொடரிலேயே செயல்படுத்தினால் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு அதன் தொடர் நிலையினால் ஏழு ஜென்மங்கள் எடுக்கக்கூடிய அளவிற்கு மனித உருப்பெற்ற காலத்திலேயே சக்தி கூடி விடுகிறது. அதன் தொடரில் ஏழு ஜென்மம் எடுக்கக்கூடிய சக்தி ஆற்றல் உண்டு.

1.இச்சக்தியை உபயோகப்படுத்திச் செயல்படும் நல் ஆத்மாக்கள்
2.இவ் ஏழு ஜென்மத்திற்குள் இப் 12 வகையின் குண அமிலத்தை உரமாக்கிச் சூட்சுமம் கொண்டு
3.என்றென்றும் அழியாத வழித்தொடர் பெற்று விடுகின்றனர்.

இதில் சில ஆத்மாக்கள் இவ் ஏழு ஜென்மத்தின் வழித்தொடர் வந்து கரை சேராத நிலையில் உலக மாற்றத்தில் சிக்குண்டு மற்றொரு பிரளயத்தில் பல ஆயிரம் ஆண்டுகளின் சுழற்சி வட்டத்திற்குச் செல்கின்றது.

மனித ஆத்மா உடலுடனே மனித வளர்ச்சிக்கு… அடுத்த வளர்ச்சியில் அதி விரைவில் மனித உடல் பெறும் பக்குவத்திற்கு இழுத்துச் செல்லப்படுகின்றது.

சில ஆத்மாக்களின் நிலையில் இவ் 7 ஜென்மத்திற்கு செல்வதற்குள்ளேயே தான் பெற்ற இப்பொக்கிஷ குண சக்தியை உணராதபடி பேராசைக்கும் வெறி உணர்விற்கும் காம இச்சைக்கும் உட்பட்டு அவ்ஆத்மா வெறி உணர்வு கொண்ட மிருக வட்டத்திற்குள் சென்று… அதன் வழித் தொடர்ச்சியில் மிகவும் அல்லல்பட்டு அடுத்த சுழற்சி வட்டத்திலும் மனித இனம் பெற வேண்டிய இப் 12 வகையான குண அமிலம் பெறப் பல நாட்கள் சென்று விடுகின்றன.

இம்மனித ஆன்மாக்களுக்கு மனிதனாக வாழக்கூடிய குண அமிலத்தைப் பெற்ற சக்தியை உணராமல்… தன்னைத்தானே சிதறவிட்டு வாழும் நிலையை உணர்ந்தீரா…?

இப் பல கோடி மண்டலங்கள் இருந்தாலும் எல்லா மண்டலத்திலும் மனித உருப்பெற்ற ஜீவன்கள் இல்லையல்லவா. மனித உருப் பெறவே பாக்கியம் பெற்றிருக்க வேண்டும்.

பல கோடி வகையான ஜீவராசிகள் இருந்தாலும் மனிதனைப் போல் அறிவு வளர்ச்சியுற்ற செயல் திறன் மற்றவற்றிற்கு இல்லை. நாம் எதனை உணர்ந்தோம்…?
1.இன்று இருக்கும் நிலை நாளை இல்லை
2.நேற்று நடந்த நிலை இன்று கனவு தான்
3.இன்றைய நடைமுறை நாளைய கனவு என்பதையே மறந்து
4.நம்முள் ஏற்படும் இச்சைக்கெல்லாம் நம்மை நாமே அடிமைப்படுத்தி கால வெள்ளத்தை விரயம் செய்து
5.வீண் சஞ்சலமான வட்டத்திற்குள் நம்மைச் சிக்க வைத்து வாழும் நிலை தான் இன்று நாம் வாழ்ந்திடும் நிலை.

சில தாவரங்கள் எப்படி அதன் ஈர்ப்பின் தன்மையினால் வைரம் வாய்ந்த மரமாய் தன்னையே வளர்த்துக் கொண்டுள்ளனவோ இதைப் போல் “நம் ஆத்மாவை வைரம் வாய்ந்த ஞான வட்டத்தின் சுழற்சியாக்கி…” அச்சழற்சியின் ஈர்ப்பு வட்டத்தில் வழித் தொடரில் செல்ல வேண்டும்.

அவ்வளர்ச்சியின் வட்டத்திற்குச் சென்று விட்டால் அதன் தொடரில் பல சக்தி நிலையை நாம் உணரலாம். அவ்உணர்வின் சக்தியை உண்மையாக்கித்
1.தன்னடக்கம் பெறும் பக்குவம் கொண்டு செயல்பட்டால்
2.அதன் தொடர்பில் அடையும் பேரானந்தம் உள்ளதே அவ் ஆனந்தத்தில் தான் அகிலமே கலந்துள்ளது.

இந்நிலையில்… தான் பெற்ற நிலையைச் சிதறவிட்ட ஆன்மாக்களும் பல உண்டு. நான் என்ற நிலை ஏற்பட்டு… பெற்ற சக்தியை நானாக்கிக் காட்டினால் அச்சக்தி நிலைத்திடுமா…?

ஞானம் பெறவே பல ஆண்டுகள் ஆகி விடுகின்றன. பல காலம் சேமித்த ஞான சக்தியையே நான் எந்த நிலையில் சிதறவிட்ட ஆத்மாக்கள் பலர் உள்ளனர் இன்று நம்முடனே.

சிதறவிட்ட பிறகு அவ்ஆத்மாக்கள் அதன் தொடர்ச்சியில் செல்ல முடியாமல் அதன் கீழ் நிலைக்குத்தான் திரும்பவும் சென்று விடுகின்றன.

நம் பூமி ஆத்மாவிற்கே “ஜீவனுண்டு”

நம் பூமி ஆத்மாவிற்கே “ஜீவனுண்டு”

 

ஒன்றுடன் ஒன்று மோதுண்டு மோதுண்டு ஒன்றை ஒன்று பின்னியே அண்டக் கோளங்களும் அனைத்து நிலைகளும் உள்ளன. முந்தைய பாடத்தில் ஓ…ம் என்ற நாதத்தின் நிலையைச் சிறிதளவு விளக்கியுள்ளேன்.
1.ஓ…ம் என்ற நாதத்தின் உண்மை நிலையென்ன…?
2.அவ் ஓம் என்று ஒலி எப்படி ஒலிக்கின்றது…?

விஞ்ஞானத்தினால் கண்டுபிடித்த மின் விசிறிக்கு அதன் சுழலும் நிலை எப்படி வருகின்றது…? மின் விசிறி சுழல மின்சாரத்தை அதில் பாய்ச்சியவுடன் அதன் காந்த சக்தியை ஈர்த்து அம் மின் விசிறி சுழலுகின்றது.

சுழலும் நிலையில் காற்றை நாம் எவ் எண்ணில் வைத்து சுழல விடுகின்றோமோ (அதாவது எம் மீடியத்தில் அக் காந்த மின் அலையைப் பாய்ச்சுகின்றோமோ) அதன் தன்மை கொண்டு அது சுழல்வதற்கு ஏற்ப அது பரப்பிடும் காற்று அந்நிலையில் உள்ளதை உணர்கின்றோம்.

நம் பூமி சுழல… சூரியனிலிருந்து பாயும் காந்த அலையை நம் பூமி இழுத்து…
1.பூமி வெளிப்படுத்தும் காந்த சக்தியைக் கொண்டு இக்காற்று ஏற்படுகின்றது.
2.காற்றுடன் ஒளியும் நீரும் கலந்துள்ளன
3.நீரின் நிலையுடன்தான் நம் பூமி அவ்வொளியை ஈர்த்து வெளிக்கக்கி
4.அதி காற்றாய் இப்பூமியைச் சுழலவிடும் அவ் ஓசைதான் ஓ…ம் என்ற நிலையில் நமக்குத் தெரிகின்றது.

இவ் ஒலியை ஒவ்வொருவரும் உணரலாம்.

ஏனென்றால் நம் பூமி எதெதையெல்லாம் ஈர்த்து, உண்டு கழிக்கின்றதோ அச்சக்தியெல்லாம் நமக்கும் உண்டு. நீரிலிருந்து மின்சாரத்தைக் காந்த அலையுடன் எடுக்கின்றார்கள். நம் உடலில் உள்ள காந்த மின் அலையை நாம் அறிவதில்லை.

நம் காந்த மின் அலையை நாம் உணரும் பக்குவம் பெற்றோமானால் அதன் தொடரில் நம்மையே அவ்வொளியாகச் செயல்படுத்திட முடிந்திடும்.

இப்பூமி வெளிப்படுத்தும் இக்காற்று மண்டலம்தான் நம் உடலிலும் மோதுண்டு செல்லுகின்றது. சிறு எறும்பையும் பூவையும் இக்காற்றே மோதிச் செல்கின்றது.

1.இக்காற்று மோதும் இடமெல்லாம் ஒலி பெறுகின்றது.
2.அவ் ஒலியுடனே நீரும் சேருவதினால் ஒளியாகின்றது.
3.காற்று இல்லாவிட்டால் மணம் வீசிடாது.
4.அம்‌ மணம் பெறவும் அவ்வொளியும் ஒலியும் சேர்ந்துதான் நம் மணமே வீசுகின்றது.

இக்காற்றில் உள்ள ஜீவனுக்கு இக்காற்றினிலேயே படர்ந்துள்ள “நீர் தான் ஜீவசக்தி…”

இக்காற்று நம் பூமியில் வீசிடும் நிலைக்கும் பால்வெளி மண்டலம் மற்ற மண்டலங்களின் நிலைக்கும் பல கோடி மாறுபாடுகள் உண்டு. “ஜீவனுடன் கூடிய அதிசக்தி வாய்ந்த காற்று மண்டலம் நம் பூமியின் காற்று மண்டலம்…”

மற்ற மண்டலங்களின் தன்மையில் இந்நிலை மாறுகொள்கின்றது. நம் பூமியைக் காட்டிலும் சூரிய மண்டலத்தில் அக் காற்றுடன் கலந்துள்ள நீர் அலைகள் நம் பூமியைக் காட்டிலும் அதிகம்.

ஒவ்வொரு மண்டலமும் அதன் சுழற்சியில் அதன் சுவாசம் கொண்டு அவை உண்டு வெளிப்படுத்தும் பக்குவ நிலைக்கொப்பத் தான் அதற்குகந்த காற்று மண்டலம் உண்டு.

சூரியன் வளர்ந்து கொண்டே… சக்தியைப் பெற்றுக் கொண்டே… சுழன்று ஓடிக்கொண்டே… அனைத்து மண்டலங்களைக் காத்துக் கொண்டே இருந்திட்டாலும் “நம் பூமியின் ஜீவசக்தி சூரியனுக்கில்லை…”

அறிவு வளர்ச்சி பெற்ற ஆத்மாக்களைக் கொண்ட பூமி மட்டுமல்ல நம் பூமி.
1.நம் பூமியின் ”ஆத்மாவிற்கே” அறிவின் சக்தி ஜீவ பூமியப்பா நம் பூமி.
2.இப்பூமியின் ஆத்மாக்களின் நிலையை மாற்றி நம் பூமிக்குகந்த நிலையை
3.நம் பூமியின் ஆத்மாவே செயல் கொள்ளத்தான் போகிறது இன்னும் சில காலங்களில்.

நாம் தான் நம் விஞ்ஞானத்திற்காக பூமியின் மட்டத்தை நகரங்கள் ஆக்கி… தார் ரோடுகளாகவும் இல்லங்களை அழகுபடுத்தப் பல நிலைகளைச் செய்தும்… பூமியின் ஆத்மா சுவாசிக்கத் தடைப்படுத்தி தாவரங்களின் இன வளர்ச்சியைக் காடுகளை எல்லாம் அழித்துப் பூமியின் பொக்கிஷங்களை எல்லாம் நம் உல்லாசச் செயற்கைக்காக பாழ்படுத்தி விட்டோமே…!

நம் பூமியின் ஆத்மா ஜீவன் கொண்டது தன்னைத்தானே காத்துக் கொள்ளும். இம்மனித ஆத்மா எப்படி ஒவ்வொரு பிறவியாய் ஓர் உடல் கெட்டு மறு பிறவிக்கு வந்து மறு உடல் எடுத்து வாழ்கின்றனவோ அதைப்போல்
1.நம் பூமியின் ஆத்மாவிற்கும் பூமியின் கோளமென்ற இவ் உருவ உடல் வியாதிப்பட்டுவிட்டது.
2.எத்தருணத்திலும் அதன் நிலை மாறும் கால கட்டத்தில் தான்… நம் பூமியின் ஜீவ ஆத்மாவின் நிலை இன்றுள்ளது.
3.இதனை உணர்ந்து நாமும் நம் ஆத்மாவை இக்குறுகிய கால கட்டத்திற்குள் “சக்தி நிலை பெறும் பக்குவ நிலை எய்திடல் வேண்டும்…”

நம் பூமி ஆத்மாவிற்கே ஜீவனுண்டு. நம் சக்தியையும் “அச் சக்தியே காக்கும் பக்குவத்தை” வழி முறையை நாம் உணரல் வேண்டும்.

ஆடைகள் மூலமாக நமக்குத் தெரியாமலே நோய்கள் உருவாகிறது என்பதை அறிந்திருக்கின்றோமா…?

ஆடைகள் மூலமாக நமக்குத் தெரியாமலே நோய்கள் உருவாகிறது என்பதை அறிந்திருக்கின்றோமா…?

 

அக்ரிகல்ச்சரில் விவசாய நிலங்களில் களைகள் முளைத்தால் களைக் கொல்லிகளைப் போடுவார்கள். முதலிலே உழுகும் பொழுது களைக்கொல்லிகளை மண்ணிலே தெளித்து விட்டால்… அந்தக் களைகளுக்குக் கிடைக்கும் சக்திகளைக் குறைத்து விடுகின்றது.

ஆனால் அதே சமயத்தில் களைக்கு வரும் விஷம் வேறு பயிரினங்களுக்கு வரும் விஷம் வேறு. இதை மாற்றி அமைத்துத் தடுக்கும் சக்தி கொடுக்கப்படும் பொழுது விஷத்தின் ஆற்றலை அதிகமாகக் கொடுத்துப் பயிரினங்களை வளர்க்கச் செய்கின்றனர்.

பயிரினங்களில் விஷத்தன்மைகளைப் போட்டு வித்துக்களை வளர்க்கப்படும் பொழுது
1.களைகளை அடக்குகின்றது… பயிரைக் காக்கின்றது… ஆனால் அதிலே விளைந்த வித்துக்களில் என்ன செய்கிறது…?
2.விஷம் கலந்த வித்துக்களாக உருவாகின்றது
3.மனிதன் இதைச் சுவாசித்து உணவாக உட்கொள்ளும் பொழுது விஷத்தின் தன்மை இரத்தத்திலே கலந்து
4.உடலில் உள்ள நல்ல அணுக்கள் விஷத்தன்மை அடைந்து விடுகின்றது.

பயிரைக் காக்க விஞ்ஞானத்தின் மூலம் மருந்துகளை உபயோகப்படுத்துகின்றான். ஆனால் அதே சமயத்தில் மனிதனுக்குள் இந்த நிலை ஆகிவிடுகின்றது.

இதே போல பருத்திச் செடிகளில் தண்டுப்புழு என்று உருவாகும். அதைக் கொல்வதற்காகப் பல விஷங்களை இடுகின்றனர் ஆனால் இப்படிப் போடும் பொழுது அந்த விஷத்தின் தன்மை பருத்திகளிலே கலந்து விடுகின்றது.

அப்படி விஷத்தின் தன்மை தோய்ந்தபின் அதை ஆடையாக உருவாக்கும் நிலைகளில்
1.அந்த ஆடைகளை நாம் அணிந்தால் அந்த விஷத்தினைக் கவரும் நிலையாகின்றது
2.நம்மை அறியாதபடி உடலிலே பல நோய்கள் உருவாகக் காரணமாகின்றது.

ஆடைகளிலே விஷத்தன்மை கொண்ட பல கலர்களை இடுகின்றனர். அப்படிச் சேர்த்துக் கொண்ட பின் அது எத்தகைய விஷமோ காற்றிலே அந்த விஷத்தின் தன்மை ஆவியாகப் பரவிச் செல்வதை இழுத்து நம் சுவாசத்திற்கு கொண்டாருகின்றது.

நம் சுவாசத்தின் வழி உடலுக்குள் சென்று இரத்தங்களிலே கலக்கப்பட்டு உடலில் விஷத்தன்மையாக பரவுகின்றது.

சிலர் கருப்பு நீலம் இதைப் போன்ற நிறங்கள் கொண்ட ஆடைகளை அணிந்து சுவாசித்தார்கள் என்றால்
1.அவர்களுக்குக் கை கால் குடைச்சல் நிச்சயம் இருக்கும்…
2.மனநோய் பிடித்த மாதிரி அடிக்கடி சஞ்சலமாகக் கவலை தோய்ந்தவர்களாக இருப்பார்கள்.

அந்த ஆடைகளில் இருக்கக்கூடிய நிலைகள் இவ்வாறு செய்து விடுகின்றன. ஆனால் அவர்களுக்கு அந்த ஆடை தான் பிடிக்கும். வெண்மையான ஆடையாக இருந்தால் அது அவர்களுக்குப் பிடிக்காது.

விஷம் கொண்ட நிறங்களாகச் சேர்க்கப்படும் பொழுது அந்த நிறத்தை உருவாக்கும் ஆவியின் தன்மை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது

நம் உடலில் ஆடையாக அணிந்த நிலையில் காந்த்த்தால் ஈர்க்கப்படும் பொழுது நம் ஆன்மாவாக மாற்றி விடுகின்றது. சுவாசித்து உயிரிலே பட்டபின் அந்த உணர்வலைகள் இரத்தத்தில் கலந்து உடலிலே பெருகத் தொடங்குகின்றது.

அத்தகைய நிலை ஏற்பட்டால் அந்த சேலையைத்தான் அவர்கள் எடுப்பார்கள் நல்ல சேலைகளை ஒதுக்கிக் கொண்டே இருப்பார்கள். இந்த உணர்வு பெற்றபின் அதே உடைகளைத் தான் எடுப்போம் அந்த உணர்வுக்கொப்பதான் அது செயல்படுகின்றது.

கடந்த காலங்களில் அன்றைய ஞானிகள் இயற்கையின் உணர்வின் தன்மையை தாவர இனங்களில் இருந்து
1.விஷத்தை நீக்கும் தாவர இனங்களாக
2.ஒன்றுடன் ஒன்று இணைந்தால் விஷத்தினை நீக்கும் தன்மை பெற்று ஆடைகளுக்கு நிறத்தைக் கொடுத்தார்கள்.

தாவர இனங்களின் விஷத்தின் தன்மை
1.அந்த மணத்தைக் கண்ட பின் யானையோ, புலியோ நரியோ கொசுவோ அவைகள் விலகிச் செல்கின்றனவோ
2.அதைப் போன்ற நிலைகளை ஆடைகளிலே கலந்துவிட்டால் “விஷத் தன்மை கொண்ட கொசுக்கள் நம் அருகில் வருவதில்லை…”

ஏனென்றால் அனுபவரீதியிலே அந்தப் பச்சிலைகளைத் தனக்குள் எடுத்து அந்த உணர்வினைக் கலக்கச் செய்து சாயத்தை உடையிலே ஏற்றுவார்கள்.

இதே போன்று பண்டைய கால ஆலயங்களிலே பார்த்தோம் என்றால் பச்சிலைகளைக் கொண்டுதான் அங்கே வர்ணங்களைத் தீட்டியிருப்பார்கள். அதிலே கெமிக்கல் கலந்த சாயங்கள் கிடையாது.

கடந்த கால கோவில்களில் இதைப் போல வர்ணங்களைத் தீட்டப்படும் பொழுது அதை நாம் கண்ணுற்றுப் பார்த்தால் அந்த உணர்வின் தன்மை பதிவாகின்றது.

1.அந்தப் பச்சிலை விஷத்தின் தன்மைகளை எப்படி நீக்கியதோ அதைப் போல அந்த உணர்வின் தன்மை நமக்குள் ஆன பின்
2.நம் உடலில் உள்ள விஷத்தின் தன்மைகளை நீக்கிடும் உணர்வைச் சுவாசித்து அதைக் கவரும் சக்தியாக நம் உடலில் உருவாகின்றது.

இது எல்லாம் மெய் ஞானிகள் செய்த நிலைகள்.

பண்டைய கால கோவில்களுக்கும் இன்றைய ஆலயங்களுக்கும் இந்த வித்தியாசங்களைப் பார்த்துக் கொள்ளலாம்.

இது எல்லாம் எதைக் குறிக்கின்றது…? விஞ்ஞானம் வளர வளர அஞ்ஞானமாக வாழ்கின்றோம்.
1.ஆனால் மெய்ஞானத்தால் அஞ்ஞானம் அகற்றப்படுகின்றது.
2.இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும்.

நம் உடலில் உள்ள உயிரணுக்களை எல்லாம்… “நம் வசப்படுத்தி” நல் அணுக்களாக்கிட வேண்டும்

நம் உடலில் உள்ள உயிரணுக்களை எல்லாம்… “நம் வசப்படுத்தி” நல் அணுக்களாக்கிட வேண்டும்

 

மண்டலமாய்ச் சுழன்றாலும் மண்டலத்திற்கும் எண்ணமுண்டு சப்தரிஷிக்கும் எண்ணமுண்டு.

பரமாத்மாவின் நிலையுடன் ஐக்கியப்படும் நிலையென்ன…? சப்தரிஷியாய் சகலத்திலும் ஒளிந்து ஒளியாய்ச் செயல் கொண்டு சூரியனாய் ஒளி பெற்றாலும் அச்சூரியனக்கும் “தான்” என்ற நிலை வந்துவிட்டால் கோடி கோடி கோடி ஆண்டாய் பெற்ற சக்தியும் இழக்க நேரிடும்.

1.மனித ஆத்மாவாய் இருந்துதான் ஒளியுடன் கலந்திட முடியும்.
2.அவ்வொளியின் ஈர்ப்பினால் மண்டலமாய்ச் சுழன்று செயல் கொண்டிட முடியும்.
3.செயலிலேயே வழித்தொடர் பெற்றுச் சூரியனாயும் சூரியனுக்கு மேல் சக்தி பெற்ற பல சூரியனாயும் சுழன்றிட முடியும்.

அனைத்தையுமே செயல்படுத்திடும் அப்பரம்பொருளிடம் ஐக்கியப்படும் சக்தியைப் பெற்றிடும் சக்தியை அப்பரம்பொருளான அவ் ஆதிசக்திக்குதான் தெரிந்திடும் அனைத்துமே.

அவரவர்களுக்கு அளிக்கும் சந்தர்ப்பத்தைக் கொண்டு “பல கோடி ஆண்டுகள்” வளர்ச்சியுறல் வேண்டும். இம்மனித ஆத்ம உடலிலேயே வளர்ச்சி பெற்றால் தான் நம் ஆத்மா ஒளியுடன் கலக்க முடியும்.

இச்சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் மிருக ஜெந்துவாகி மிருகத்திலிருந்து கொசுவாய்… புழுவாய் பிறிதொரு உலக மாற்றத்திலிருந்து இவ்வுயிரணுக்கள் உயிராத்மா நிலை பெற எண்ணிலடங்கா ஆண்டுகளாகி அச்சந்தர்ப்பத்தில் நம் ஆத்மா எய்தும் நிலையைக் கொண்டுதான், நம் நிலை உயர்ந்திட முடியும்.

இதனை உணர்ந்தே…
1.பரம்பொருள் என்பது யாது…?
2.அப்பரம்பொருளுக்கு என்ன ஏற்றத்தாழ்வு…?
3.ஆண்டவன் அளித்த கஷ்டம் என்று வாழ்க்கையை எண்ணாமல்
4.இன்று வாழும் நம் ஆத்மாவை நல்ஞானம் பெறும் நிலையை எய்திட நம் ஆத்ம நிலை எப்படிச் செயல் கொண்டிடல் வேண்டும்…?
5.எப்படி எப்படி நம் வாழ்க்கை முறை அமைய வேண்டும்…? என்பதனை உணர்ந்து
6.நம் சுவாசம் சத்தியத்துடன் கலக்கும் நிலையினை முதல் பாடமாய்ப் பெறும் வழியினை உணர்த்திடுவேன்.

ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் அவ்வாத்மாவின் உடலில் பல உயிரணுக்கள் உள்ளன. எவ்வாத்மாவும் தனித்து வாழவில்லை என்பதனை முதல் பாடமாய் உணரல் வேண்டும்.

ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் உள்ள உயிரணுக்கள் அவ்வாத்மாவின் எண்ணத்தைப் பல திசைகளில் மாற்றிச் சென்று வாழச் செயல்படுத்துகின்றது.

அவ்வுயிர் அணுக்களின் ஆசைக்கும் அதனுடைய தூண்டுதலின் சோர்வுக்கும் நம்மை அறியாமலே, நமக்குத் தெரியாமலே அடிமைப்பட்டு சிக்குண்டுள்ளோம்.

நம் ஆத்மா ஞானம் பெற்று ஒளி பெறும் நிலையினால் நம் உடலில் குடி புகுந்துள்ள பிற உயிரணுக்களுக்கும் நம்மால் விமோசனம் கிட்டும்,

1.நம் உடலில் உள்ள அமிலத்தை ஞானத்தின் அமிலம் ஆக்கி
2.பரமாத்மாவின் சொத்துதான் நாம் என்பதனை உணர்த்து
3.தீய எண்ணப் பேய்க்கு அடிமை கொண்டிடாமல் நம் ஆத்மா செயல்படுவதினால்
4.நம்முள் உள்ள பல கோடி உயிரணுக்களும் இவ்வெண்ணத் தொடரின் சக்தியினால் ஒளிர்ந்திடும்.

ஒவ்வோர் உடலில் இருந்தும் ஒவ்வோர் ஆத்மா பிரியும் பொழுதும் அவ்வுடலுடன் கூடிய உயிரணுக்களுக்கு அவ்வுடலில் எடுத்த சுவாசத்தின் வழித்தொடர் கொண்டே இக்காற்றினில் படர்ந்து சுற்றுகின்றது.

இப்பொழுது நாம் வாழும் இவ்வாழ்க்கை உடலில் உள்ள உயிரணுக்கள் இவ்வுடல் காலத்தில் மட்டும் நம் உடலில் ஏறவில்லை.

ஒவ்வோர் உயிரணுக்களுக்கும் எண்ணமுண்டு சுவாசமுண்டு அமில சக்தியுமுண்டு மனித ஆத்மாவின் உடலில் உள்ள இவ்வுயிரணுக்களினால் இம்மனிதனின் எண்ணத்தை அதற்குகந்த ஆசையின் நிலைக்கொப்பத் திசை திருப்பிட முடிந்திடும்.
1.நம் ஆத்மா செயல் கொள்ள முதலில்
2.நம் உடலில் உள்ள உயிரணுக்களைத் தான் “நம் வசப்படுத்திடல் வேண்டும்…”
3.நல் அணுக்களாய்ச் செயல் கொள்ளப் பக்குவம் பெறல் வேண்டும்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

 

இந்நூலின் வாயிலாய் இப்பாட நிலை புகட்டிய நாள் தொட்டே யான் உணர்த்திய… “உயிர் ஜீவன் சுவாசத்தின் வழி பெற்ற எண்ண ஜெபத்தைத்தான்” மையப்படுத்தி உணர்த்தி வருகின்றேன்.

இவ்வெண்ணம் செயல்பட அன்பு சத்தியம் இவற்றில் நியதி பெறல் வேண்டும். சத்திய நிலை பெறப் பல ஆண்டுகளாய் வாழ்ந்து வந்த வழியில் இருந்து
1.இச் சத்தியத்தை நிலைநிறுத்தச் சில கடின நிலைகளை ஏற்க வரும் இத்தருணத்தில் “அன்பெனும்” ஆயுதத்தினால் தான் செயல்படும்.
2.இவ் அன்பினாலே தான் எச்செயலையும் நிலை நாட்ட முடியும். அன்பிற்கு அடிமைப்பட்டதுதான் அனைத்துமே.
3.நம்மை அன்பாகி அவ் அன்பையே எல்லா நிலையிலும் செயல்படுத்திடல் வேண்டும்.

நம் அன்பிற்குப் பிரதிபலனை எதிர்பார்த்துச் செயல் கொள்ளும் நிலைதனை அகற்றல் வேண்டும். நாம் அன்பு செலுத்துகின்றோமே… அவ்வன்பின் பிரதிபலிப்பிற்காக ஏங்கிடும் எண்ணத்திற்கு நாம் செலுத்திய அன்பும் விரயம் கொள்கின்றது.

பிறரின் அன்பிற்காக ஏங்காதீர். நம்மையே அன்பாக்கி அவ்வன்பின் சக்தியை அனைத்திலும் செயல்படுத்திடுங்கள். இவ்வன்பு வழியைப் பெற்று விட்டால் சத்திய நிலை ஏற்பட்டுவிடும். பிற அன்பிற்கு அடிமை கொண்டும் விடாதீர்.

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்…’ என்ற சத்திய நியதியைத்தான் இவ்வுலகமே செப்புகின்றது. ஆனால் அதனைக் கடைபிடிக்கும் ஆத்மாக்கள் இப்பரந்த உலகில் கோடியில் சிலர் தான்.

மதங்கள் என்ற ரூபப்படுத்தி ஒரே குலத்தைத் தான் அனைவரும் போதிக்கின்றனர். ஆனால் இவர்களே எம்மதம் சிறந்தது…? என்ற வினாவினையும் எழுப்புகின்றனர்.

எம்மதமாயினும் எச்செயலாயினும் அவர்கள் வகுத்த சத்திய நியதியைச் செயல் கொள்ளும் சிறந்த நிலையுடையதுதான் சிறந்த மதம்‌.

இந்து மதமும் இஸ்லாமிய மதமும் கிறிஸ்துவ மதமும்தான் இவ்வுலகினில் தனித்தனி நிலையாய்ச் செயல் கொள்கின்றன. இதன் தழுவலில் பல மதங்கள் ஜாதிகள் என்ற ரூபங்கள் வழி பெற்றுவிட்டன.

ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு நெறி முறைகள் உண்டு. அதற்குகந்த தத்துவத்தையும் உணர்த்துகின்றனர்… அவரவர்கள் மதம் சிறந்தது என்று.

எம் மதத்தவரும் தம் மதத்தின் நிலையைத்தான் பெரிதாகப் போற்றி வருகின்றனர். ஒவ்வொரு மதத்திற்கும் அம் மதம் பிறந்த கால கட்டத்தை உணர்த்துகின்றனர்.

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற நிலையினைப் பிரித்துத் தனக்குச் சாதகமான வழிமுறைகளை வகுத்துக் கொண்டவன் அவனுக்குகந்த தன்மையில் தன் மதத்தை வளர விடுகின்றான்.

இந்து மதத்தில் ஒரே நிலையையே பலவாக்கி வணங்குகின்றனர்.

இஸ்லாமிய மதத்தில் அவ் அல்லா என்ற ஒன்றே ஆண்டவன் என்ற சத்திய நிலைப்படி… அவ்வழி நிலை செயல் கொள்கின்றது. அவர்கள் வழியில் வந்த குர்ஆனின் வேத வாக்குப்படி இன்றளவும் மாறு கொண்ட ஆண்டவனின் ரூபத்தைக் காணாமல்… அல்லா என்ற ஒரே கடவுளைக் காண்கின்றனர்.

கிறிஸ்து மதத்தில் பரம பிதா என்ற ஜெபத்தை ஜெபித்து அவ்வழித் தொடர் பெற்றாலும் அதனையே சிலர் இரண்டு நிலைப்படுத்தி விட்டனர். அதிலும் தடங்கல் ஏற்பட்டுவிட்டது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நிலை.

நம் இந்து மத வழிபாட்டில் தான் இராமரின் நிலையை ஆண்டவனாக்கி இராமருக்கு ஒரு மனைவி, ஏக பத்தினி விரதம் கொண்டவர் இராமர் என்று ஒரு காலத்திலும்… கிருஷ்ணருக்குப் பல மனைவிகள் என்று ஒரு காலத்திலும்… முருகருக்கு இரண்டு மனைவிகள் என்று ஒரு காலத்திலும்… இந்து மதச் சட்டத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலையினையும் உணர்த்திப் பல வழிகளைச் செயல் கொள்கின்றோம்.

தன் செயலுக்குகந்த சாதகப்படி நம் சட்டத்திலேயே பல ஓட்டைகள் வைத்து மனைவி தாம்பத்ய நிலைக்கு உகந்தவளல்ல என்ற நிலையிருந்தால் மறுமணம் புரியலாம் என்றெல்லாம் சாதகப்படுத்தி நமக்குகந்த சத்திய நிலையைக் காலப் போக்கிற்குத் தகுந்த நிலையில் நாம் வாழ்கின்றோம்.

இந்து மதத்தின் பிறப்பு நிலை அறிந்தார் இல்லை. ஒன்றே குலம் என்ற நிலையில் ஏற்பட்ட மாற்றத்திலிருந்து பிரிந்து சென்று மதமானது தான் கிறிஸ்து மதமும் இஸ்லாமிய மதமும்.

1.இந்து மதத்தின் நெறிமுறை என்ற வழி நிலை சத்திய நிலையில் உணர்த்துவாரும் இன்று இல்லை
2.இந்து மதத்தின் நிலையிலிருந்து தான் பல சித்தர்கள் வெளிப்பட்டார்கள்.
3.ஆனால் சித்தர்கள் உணர்த்தியதை உணர்ந்து செயல் கொள்ள இந்து மதத்தாரின் எண்ணங்கள் கூடிச் செயல்படுத்தவில்லை.

மதங்களில் சிறந்தது எது…? என்பதை எம்மதமாயினும் அச்சத்தியை நியதியைக் கடைபிடித்துச் செயல்படுமாயின்… அதுவே சிறந்தது…!

மதம் என்ற பிரிந்த எண்ணத்திற்கே எண்ணத்தை அடிமை கொள்ளாமல் எல்லாம் ஒன்றே… ஒருவனே தேவன்… அத் தேவனின் சக்தி புத்தர்களாய் சகலத்துடனும் கலந்தே நாம் வாழ்ந்திடல் வேண்டும்.

சத்திய ஜெபம் பெற்று விட்டால் எந்தத் தீய சக்தியையும் நற்சக்தி ஆக்கிடலாம்

சத்திய ஜெபம் பெற்று விட்டால் எந்தத் தீய சக்தியையும் நற்சக்தி ஆக்கிடலாம்

 

எல்லாம் அப்பரம்பொருளின் ஐக்கியம்தான் என்ற எண்ண நிலை செயல்பட்டு… அவ் வழித்தொடரில் வாழ்ந்திடும் பக்குவத்தை மனித ஆத்மாக்கள் பெற்று அதன் வழித்தொடரினைச் செயல்படுத்திட
1.நல்லுபதேசங்களை ஏற்றிடல் வேண்டும்.
2.அந்நல்லுபதேசத்தையே நற்செயலாக்கிடல் வேண்டும்
3.வயது வரம்பு இதற்கு வேண்டியதில்லை.

பக்தியினால் மட்டும்தான் உபதேசிக்க முடிந்திடும் என்ற காலநிலை மாறிவிட்டது.

தீயோரைக் காண்பதுவும் தீதே
தீயோர் சொல் கேட்பதும் தீதே
தீயோருடன் இணங்கி இருப்பதுவும் தீதே என்றெல்லாம்
முந்தைய காலத்தில் செய்யுள்படுத்தி உபதேசித்தனர்.

விஷமாய் தீய சக்தி படர்ந்துள்ள நிலையில் நற்சக்தியை சத்தியத்தை நிலை நாட்டுபவர் “கோடியில் ஒருவர் கூட இவ்வுலகினில் மிஞ்சவில்லை…”

இவ்வுலகமே இப்பொருளாசை என்ற பேய்க்கு அடிமைப்பட்டு விட்டது.

ஆலயங்களுக்குச் சென்றாலும் இப்பொருள் உள்ளவனுக்குத்தான் முதலிடம். பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று எப்பொருளை வைத்து இவ்வாக்கியத்தை அமைத்தார்களோ அதுவே நிலைத்துப் பொருளுக்கே (பணம்) அடிமைப்பட்டு விட்டது இவ்வுலகம்.

பொருள் வைத்துத்தான் எச்சக்தியும் செயல் கொள்கின்றது இன்று இப்பூமியில்.

பல மடாலயங்கள் அமைத்து அங்கு செயல் புரியும் மடாதிபதிகளே இப்பொருள் உதவி புரிபவரின் நிலைக்கொப்பத்தான் அவர்களை நடத்திடும் நடைமுறை உள்ளது.

காரணம்… அவர்களின் சத்தியத்தை நிலைநிறுத்தப் பொருள் வேண்டுமாம்…!

பஜனைகள் பாடிட ஆண்டவனின் அடிமை நாமம் பூண்டு ஒவ்வொரு திரு ஸ்தலங்களுக்கும் சென்று அவ்வாண்டவனை எண்ணித் துதி பாடப் பொருள் உதவி அளித்துத் தான் “அவ்வாண்டவனுக்கும் துதி பாடுகின்றான் அப்பாடகன்…”

அவனுக்கு இட்டிருப்பது ஆண்டவனின் நாமம் ஆண்டவனின் அடிமையாம் அவன். ஆனால் அவன் ஆண்டவனிடம் அவனைத் துதித்துப் பாடக் கூலி பெற்றுக் கொள்கின்றான். ஆண்டவனை மனமுருக அன்புருக பக்திப் பாடலை இவன் பாடுகின்றானாம்.

பக்தியே விலை பேசிப் பாடுகின்றனர். அவனைத் துதிபாட இப்பக்கமேள மனித ஆன்மாக்கள் வேறு.
1.ஆண்டவனின் துதி பாடப் பொருள் வாங்குபவன் பக்தியினால்
2.ஆண்டவனின் அருள் எப்படிக் கிட்டும்…?

தான் பிழைக்க வேண்டாமா…? தன் சுற்றத்தாரை எப்படிக் காப்பாற்றுவது…? என்று வாதங்கள் புரிவார்கள். சோம்பேறி வாழ்க்கையாகப் பிறரின் உழைப்பில் இருந்து கிடைக்கப் பெறும் ஊதியத்தை ஏற்று இப்பஜனை பாடித் திரிபவனின் ஆன்மாவெல்லாம் எந்த நிலை பெறும்…?

எங்கு உள்ளான் அந்த ஆண்டவன்…?

பொருள் வாங்கி இசைத்திடும் இசைப்பவனின் இசையும் அப்பொருளுக்காகத்தான் அடிமைப்பட்டதேயன்றி ஆண்டவனுக்கு அடிமைப்படவில்லை.

1.தன்னுள்ளே உள்ள ஆண்டவனை அன்பாக்கி
2.தன்னை ஒத்த அனைத்து உயிர் ஆண்டவ ஆத்மாக்களிடம் அன்பு கொண்டு
3.தன்னையே அவ்விசையின் இசையாகப் பக்தி கமழச் செய்து
4.தன்னைச் சார்ந்தோரையும் இப்பக்தி இசையில் வழிநடத்திடல் வேண்டும்.

ஒவ்வொரு நிலைக்கும் உம்மால் மாறு கொண்ட வாதம் உள்ளதே…! சாதாரண நடைமுறை கொண்ட மனித ஆத்மாவினால் இச்சக்தி நிலை எல்லாம் பெற முடியுமா…? என்று எண்ணுவீர்.

ஒவ்வொரு ஆத்மாவும்
1.அச்சத்தியம் என்ற நேர்கோட்டைச் செயல்படுத்தினால் எத்தீய சக்தியும் நம்மை அண்டாது.
2.தீயது என்ற சொல்லுக்கே இடம் இல்லாமல் தீயவர் நல்லவர் என்ற பாகுபாடு எண்ணம் கொள்ளாமல்
3.நம் சத்தியக் கோடு நேராக இருந்து விட்டால் எச் சஞ்சலத்திற்கும் இடமில்லை.
4.தீயோரையும் காணலாம். தீயோர் சொல்லும் கேட்கலாம் தீயோருடனும் வாழலாம்
5.தீயது என்று ஒதுங்கி ஏனப்பா செல்ல வேண்டும்…?
6.நம் சத்தியத்தின் நேர்வழியினால் நாமும் இவ்வுலகினில் உதித்த உயிரணுதான்.
7.தீயோன் என்று ஒதுக்கப்பட்டவனும் நம்மை ஒத்த உயிரணுதான்.
8.நம்மால் தீயவனையும் நல் உணர்வு படுத்திடலாம் என்ற ஜெப நிலை கொள்ள வேண்டும்.

ஒதுங்கி வாழ்வதல்ல வாழ்க்கை.

பல காலங்களுக்கு முன்னே போகரினால் ஸ்தாபிதம் செய்து வைத்த திரு முருகன் சிலையை நவபாஷாணத்தைக் கொண்டு செய்விக்கப் பெற்றது.

விஷத்தையே ஆண்டவனின் உருவமாக்கி அபிஷேக ஆராதனை செய்து இம்மனிதர்களை உண்ணச் செய்தான் அப்போகநாதன்

இது எதை உணர்த்துகின்றது…?

விஷமென்று ஒதுங்கிச் செல்வதினால் நம்மையும் விஷமாக்கிக் கொள்கின்றோம்… பயந்த நிலையில்.

1.ஒவ்வொரு ஆத்மாவிற்கும் அச்சத்திய ஜெபம் ஓங்கல் வேண்டும்
2.சத்திய ஜெபம் பெற்று விட்டால் எந்தத் தீய சக்தியையும் நற்சக்தி ஆக்கிடலாம்.
3.நம் உடலில் பல கோடி அணுக்களையும் நம் நிலைக்குக் கட்டுப்படுத்தலாம்.
4.இந்நிலை பெற்றவனின் ஜெபத்தினால் அனைத்துச் சித்து நிலைகளையும் கண்டிடலாம்
5.சித்தனுடனே கலந்திடலாம் சிவபதம் எய்திடலாம்.

மனித எண்ணங்களின் தடுமாற்றத்தினால் இவ்வுலகமே இம்மனிதனால் தான் விஷம் கொண்டுள்ளது. சஞ்சலம் கொள்ளா அமைதி வாழ்க்கை வாழ்பவனுக்கு அவனின் ஆரோக்கியம் நிலையும் பாதிப்பதில்லை. அதன் வழித் தொடரில் எச்சிக்கலும் ஏற்படுவதில்லை.

மனச் சஞ்சலத்துடனும் கோபத்துடனும் உள்ளவன் புசிக்கும் உணவு அவனுக்குச் செரிப்பதில்லை.

உணவே விஷமாக ஆவியான அமில நிலை கொண்டு இவ் உடலுக்கு வாய்வு என்ற நிலை ஏற்படுத்தி அங்கங்கு உடல் உறுப்புகளில் தங்கி விடுகின்றது.

சீராய் இவை வெளியேறா விட்டால் ஆங்காங்கு தங்கி உள்ள இக்காற்றின் அமிலமே அங்கு உறைந்து மேலும் உண்ணும் உணவைச் செரிக்க விடாமல் இத்தங்கிய வாய்வு அமிலங்கள் உறைந்து கோழையாகக் கட்டி நிலை பெற்று சளி பிடித்து தும்மல் எய்தி இருமல் ஆகி இக்கோழை வெளி வரும் வரை இந்த உடல் மண்டலமே அவஸ்தையுற்று அதன் தொடர்ச்சியில் பல நிலைகள் ஏற்படுகின்றது.

ஆங்காங்கு தங்கிடும் அவ்வமிலத்தினால் சில உறுப்புகளும் கெடும் நிலை எய்துகின்றது. இதன் தொடர்ச்சியில் பல வியாதிகள் மனிதனுக்கு வருகின்றன.

நாமே சம்பாதித்துக் கொள்வது தான் இவ்வியாதியே அன்றி உண்ணும் உணவில் இருந்து மட்டுமல்ல மற்ற நிலையில் இருந்து மட்டுமல்ல நம்மைத் தொற்றிக் கொள்வது என்பதல்ல இந்த வியாதி.

வியாதியில் அடிபட்டவனின் சுவாசக் காற்றினிலே இந்நிலை கொண்ட அணுவைத்தான் வெளியிடுகின்றான். இவனைச் சார்ந்தவரின் நிலையையும் இவனின் வட்டத்தில் ஈர்த்துக் கொள்கின்றான்.

இவ்வெண்ணத்தின் நிலையை மாற்றுவதால் ஏற்படும் நிலையிலிருந்து “நம் ஆத்மா தப்பும் நிலை பெற வேண்டும்…”

தீய எண்ணங்கள் மனதில் ஏன் தோன்ற வேண்டும்…? எப்பொழுதும் நல்லெண்ணமே ஏன் இருக்கக் கூடாது…?

தீய எண்ணங்கள் மனதில் ஏன் தோன்ற வேண்டும்…? எப்பொழுதும் நல்லெண்ணமே ஏன் இருக்கக் கூடாது…?

 

கேள்வி:-
சர்வ ஜீவ ஜெந்துக்களும் ஆண்டவனால் படைக்கப்பட்டவை. மனிதனும் அவ்வண்ணமே படைக்கப்பட்ட பொருள்களில் ஒருவன். மனிதனுக்கு மட்டும் ஆறறிவு கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் ஆண்டவன் இருக்கிறார் என்பது சான்றோர்கள் வாக்கு.

அந்நிலையை நாம் அனுசரித்து வருகிறோம். அப்படி இருக்கத் தீய எண்ணங்கள் மனதில் ஏன் தோன்ற வேண்டும்…? எப்பொழுதும் நல்லெண்ணமே ஏன் இருக்கக் கூடாது…?

எண்ணத்தை வைத்துத் தான் செயல்படுகிறோம். ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் நல்ல எண்ணங்களே ஏற்படுமானால் நற்செயல்களே செய்வார்கள் அல்லவா…? தீய செயல்களுக்கு இடமில்லாமல் போய்விடும் அல்லவா…? ஏன் அப்படி நடப்பதில்லை…?

ஈஸ்வரபட்டரின் விளக்கம்:-
இறைவன் படைத்த படைப்பே நாம்… நாம் மட்டுமல்ல சகலமுமே ஐக்கியப்படும். இந்நிலையில் இயற்கையிலேயே பல மாற்றங்கள் உண்டு.
1.நீர் மனிதராய்ப் பிறந்துள்ளீர். நாயுமுள்ளது, பாம்பும் உள்ளது, மாங்கனியும் வளர்கின்றது. நச்சுச் செடியும் வளர்கின்றது.
2.மனித ஆத்மாக்களின் நிலையை மட்டும் கேள்வியாக்கினீர்…?
3.இவ்வுலகில் உதித்த உயிரணுக்கள் யாவுமே ஏன் ஒன்றைப்போல் ஒன்றில்லை. எண்ண நிலையும் மாறு கொள்கிறது.
4.உருவ நிலை மற்ற எல்லா நிலைகளுமே தான் மாறு கொண்டுள்ளது.
5.ஒன்றைப் போல் ஒன்றில்லை ஆண்டவன் படைப்பில் ஏன் இவ் ஏற்றத்தாழ்வு…? என்ற எண்ணம் தானே உம் எண்ணம்…?

சூரியனிலிருந்து வெளிப்படும் அணுக்கதிர்கள் நம் பூமியின் மேல் படும் நிலையில் ஒவ்வொரு நொடிக்குமே மாறு கொண்ட அணுக்கதிர்கள் தான் நம் பூமியில் வீசுகிறது.

நம் பூமிக்கும் மேல், நம் பூமியைச் சுற்றிக் கொண்டுள்ள காற்று மண்டலத்திற்கும் மேல் உள்ள பால்வெளி மண்டலத்திற்கும் ஜீவனுண்டு, இயற்கைத் தன்மை உண்டு. பால்வெளி மண்டலத்தில் பல நிலை கொண்ட அமிலங்கள் உண்டு.

எல்லாவற்றுக்கும் பொது மண்டலம் பால்வெளி மண்டலம். சுழலும் நிலையில் அப்பால்வெளி மண்டலத்தில் உள்ள அமிலங்கள் பல நிலை கொண்டதாகப் படர்ந்து சுழன்று அதன் ஜீவ சக்தியில் விளையாடுகின்றது.

நம் பூமி சுழலும் வேகத்தில் சூரியனின் ஒளிக் கதிர்கள் அப்பால்வெளி மண்டலத்தில் உள்ள அமிலத்தில் பட்டுப் பூமியின் காற்று மண்டலத்திற்கு வருகிறது.

1.இக்காற்று மண்டலம் சுழலும் நிலையில் பூமியின் ஈர்ப்பு சக்திக்குகந்த அமிலத்தன்மை அவ்வொளிக்கதிர்கள் வீசிப் படர்ந்தவுடன்
2.அந்தந்த நிலையில் அந்நிலைக்குகந்த அமிலங்கள் படர்ந்து அதைப் பூமி ஈர்த்து பூமி விடும் சுவாசத்தைக் கொண்டு, அந்நிலையின் உயிர் அணு பிறக்கின்றது.
3.அதன் தன்மையில் ஏற்படும் அமில சக்தி நிலை கொண்டுதான் பூமியின் இயற்கையில் வளர்ந்திடும் தாவரங்கள் மற்றக் கனிவளங்கள் எல்லாமுமே.
4.எவ்வமிலத்தை பூமி ஈர்த்ததோ அந்நிலைக்கொப்ப சக்தி நிலை வெளிப்படுகிறது.

பூமியிலேயே உயிரணுவாய் உதித்து உயிராத்மா நிலை பெறுவதற்குள் மனித ஆத்மாக்களுக்குப் பல எண்ண நிலைகள் கூடி விடுகின்றன. எவ்வெண்ணத்தை அச்சுவாச நிலையுடன் ஈர்த்து வாழ்ந்து பழக்கப்பட்டதோ அந்நிலை கொண்ட அமிலத்தையே ஒவ்வோர் உடலுமே சேமித்துக் கொள்கின்றது.

1.பல ஜென்மங்கள் எடுத்தாலும் உயிரணுவாய் உதித்து உயிர் ஆத்மாவாய் உருப்பெறும் நிலையில்
2.அமில சக்தியைக் கொண்ட தொடர்பின் எண்ணமும் அதன் தொடர்ச்சியின் குண நிலையும் தான் அவ்வாத்மாவுக்கு உண்டே ஒழிய
3.அப்பரம் பொருளான ஆண்டவன் அனுப்புவதல்ல “நல்லவளையும் கெட்டவளையும்…”
இயற்கையின் ஆதி சக்தியின் நிலை பொதுவான சக்தி தான். அவளிலிருந்து உதித்த உயிரணுக்கள் எடுக்கும் வளர்ச்சி நிலை எல்லாம் அதனதன் சக்திதான்.

பரம்பொருள் ஒன்றே அப்பரம்பொருளின் பொருட்கள் தான் நாமெல்லாம். அப்பரம்பொருளின் நிலையுடனே ஐக்கியப்பட்டு ஜெபப்படுத்தும் நிலையினால் நம்மையே அப்பரம்பொருளாக்கிடலாம்.

“அவரவர்கள் எண்ணும் எண்ணத்தைக் கொண்டுதான் வாழ்க்கை…”

இக்காற்றுடன் பல நிலைகளும் கலந்துள்ளன.
1.நல்லெண்ணத்தின் சுவாசமும் இக்காற்றினால் தான்
2.துவேஷ எண்ணத்தின் மூச்சுக் காற்றும் இக்காற்றினால் தான்.

நம் வாழ்க்கையுடன் மோதுண்டு வாழும் நிலையில் பல செயல்கள் நடக்கின்றன. அந்நிலையில் எடுக்கும் சுவாசத்தைக் கொண்டு பல நிலைகள் நடக்கின்றன.

நம் ஆத்மாவுடன் நாம் மட்டும் வாழவில்லை பல கோடி உயிரணுக்கள் வாழ்கின்றன. ஆனால் நமக்குத் தான் நம் ஆத்மா சொந்தம். நம் உடலில் தான் மற்ற உயிரணுக்களும் இருந்தாலும் அதற்கு நம் உடலும், நம் ஆத்மாவும் சொந்தமல்ல.

அதைப்போல் நாம் எடுக்கும் எண்ணமுடன் இக்காற்றில் உள்ள பல அலைகளும் நம் எண்ணமுடன் மோதுகின்றன. இதனால் நம்மை அறியாமலேயே நம்முள் பல எண்ணங்கள் மோதுண்ட நிலையில் பல செயல்கள் நடக்கின்றன.

1.மனித ஆத்மாவாய் வாழ்வதுவே பெரும் பொக்கிஷம்.
2.நம்மையே நாம் மற்றத் தீய அணுக்களுக்கு அடிமைப்பட்டு வாழ்வதினால் தான் நல்லவன் கெட்டவன் என்று நிலை வருவது.

ஐந்தறிவு ஆறறிவு என்பதெல்லாம் நம்மால் ஏற்படுத்திய நிலைதான். மனிதனிலிருந்து நம் அறிவின் நிலையைச் சிதறவிடுவதினால் மிருக ஜென்திற்குச் செல்கின்றோம். நம்மைக் காட்டிலும் நுண்ணிய அறிவு மிருகங்களுக்கு உண்டு.

ஆறறிவு ஐந்தறிவு என்பதல்ல வாழ்க்கையே…!

பேய் ஓட்டுகிறார்கள் என்றால் “இன்னொரு பேயை உள்ளே ஏற்றுகின்றார்கள்” என்று தான் பொருள்

பேய் ஓட்டுகிறார்கள் என்றால் “இன்னொரு பேயை உள்ளே ஏற்றுகின்றார்கள்” என்று தான் பொருள்

 

எண்ணற்ற காலம் முதற்கொண்டே இவ்வாவிகளை வசியப்படுத்தி செயல்படுத்திடும் பல நிலைகள், பல ஆயிரம் காலங்களாகவே இருந்து வருகின்றன. நற்காரியங்களுக்காகவும் தன் பேராசையின் நிலைக்காகவும் இந்நிலையைச் செயல்படுத்தி வந்தார்கள்.

மந்திரம் மாயம் செய்வதெல்லாம் ஒரு கலையாகவும் வம்ச வழியாகவும் நிலைப்படுத்தி செயல் கொண்டு வருகின்றனர். நம் நாட்டில்தான் பேய் ஓட்டுதல், மந்திரித்தல் என்பன போன்ற பல நிலைகள் நடக்கின்றன.

1.எண்ணத்தில் சோர்வு கொண்டவரின் உடலில் அவர்கள் எந்த எண்ணத்தைக் கொண்டு உள்ளனரோ
2.அவ்வெண்ண நிலைக்கொப்ப ஆவிகள் அவர்கள் உடலில் ஏறி விடுகின்றன.

உதாரணமாக பல ஆசை நிலையுடன் வாழும் ஒருவன் தன் இல்லத்தில் குழந்தைகளின் பற்றைக் கொண்டு, பல நினைவுகளுடன் இல்லத்தில் இருந்து வெளி இடங்களுக்குச் செல்லும் நிலையிலும், இல்லத்தில் இருந்த நிலையின் எண்ண ஆசையுடன், தன் குழந்தைகளுக்கு வேண்டிய பொருள் வாங்கும் ஆசையில், அதே எண்ண நிலையில் செல்லும் பொழுது அவ்வாசை நிலை கொண்ட நிலையில், மற்ற போக்குவரத்து இடையூறுகள் கவனிக்கப்படாமல் விபத்து ஏற்பட்டு, அந்நிலையில் அகால மரணம் எய்தி குருதி (இரத்த) வெள்ளத்தில் அடிபட்டு ஆத்மா பிரிந்த பிறகு
1.அவ்வாத்மா அவ்வாசை நிலையுடன் அங்கேயேதான் சுற்றிக் கொண்டிருக்கும்.
2.அதே நிலை கொண்ட எண்ண நிலை உடையவன் அந்நிலைக்குச் செல்லும் பொழுது
3.இவ்விரண்டு எண்ணங்களும் ஒரு நிலைப் பட்டவுடன் இவன் உடலில் அவ்வாவி ஏறிக்கொள்கின்றது.

இவனுடைய செயலுடன் அவ்வாவியின் செயலும் ஒன்றுபட்ட பிறகு இவன் உடல் நிலையில்… அவ்வுடலில் அவ்வாவி மனிதனாய் வாழ்ந்த காலத்தில் இருந்த நிலையெல்லாம் “இவன் உடலிலும் ஏறிக்கொள்கின்றது…”

தன் நிலையே, தான் மறந்து உடலில் உள்ள ஆவிக்குத் தன்னை அறியாமல் அடிமைப்பட்டு வாழும் நிலை ஏற்பட்ட நிலையில்… சோர்வு கொண்ட நிலையுணர்ந்து உள்ளவர்கள் மந்திரவாதிகளிடம் செல்லும் நிலை மிகுந்து விட்டது.

இந்நிலை கொண்டவன் மந்திரவாதியிடம் சென்றால்…
1.அவனுக்கு இவன் உடலில் ஏறியுள்ள மற்றொர் ஆவி ஆத்மாவின் நிலை புரிந்து பேய் ஓட்டுவதாகச் சொல்லி
2.மீண்டும் இதற்கு மேல் சக்தி கொண்ட மற்றும் ஒரு குட்டிச்சாத்தானை இவன் உடலில் ஏற்றி
3.அதன் சக்தியைச் செயல்படாமல் செய்து “பேய் ஓட்டுவதாய் அவ்வாத்மாவைப் பல இம்சைகள் செய்து” அவன் பொருளீட்டிக் கொள்கின்றான்.

இவன் உடலில் ஏறிய குட்டிச்சாத்தான் ஏவலிலிருந்து, “இவன் உடல் அழியும் வரை தப்புவது இயலாக் காரியம்…” இப்பேயோட்டும் நிலையினால் ஒவ்வொருவரையும் என்றென்றைக்கும் அதற்கே அடிமைப்படுத்துகின்றனர்.

இந்நிலையிலிருந்து தப்புவதற்கு நம் உடலில் எவ்வாத்மா எவ்வாவி நிலைகள் ஏறி இருந்தாலும்
1.அதன் பாதிப்பால் வரும் சஞ்சலம், சோர்வு, சோர்வில் இருந்து விடுபட
2.எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி மகரிஷிகள் உணர்வின் ஆற்றலைப் பெருக்கி
3.அந்தச் சக்தியை அந்த ஆன்மாவுக்கும் அன்பு கலந்த நிலையில் பெறச் செய்ய வேண்டும்.

அப்படித் தான் அதன் செயலைக் கட்டுப்படுத்த முடியும்.

நம் நிலையில் ஒரு நிலைப்பட்டுவிட்டால் எத்தீய தன்மைகளும் நம்மை வந்து தாக்காது

நம் நிலையில் ஒரு நிலைப்பட்டுவிட்டால் எத்தீய தன்மைகளும் நம்மை வந்து தாக்காது

 

ஏவல், குட்டிச்சாத்தான், மையிட்டு மந்திரம் செய்து பிறரை வசப்படுத்தி நம் ஆத்மாவை நாம் இந்நிலையிலிருந்து செயல்படா வண்ணம் நம்மைக் காத்திடும் நிலையை அறிந்து வாழ்ந்திடல் வேண்டும்.

அழியாச் சக்தியுள்ள நம் சக்தியை
1.நம்முள் ஊன்றியுள்ள நம் சக்தியை பல எண்ணங்களின் நிலையிலிருந்து காத்திடல் வேண்டும்.
2.சோதனை கொண்ட காலங்களில் சோர்வு நிலை கொண்டு முடங்கிடல் ஆகாது.
3.ஏவல்களின் தன்மை எல்லாம் சோர்ந்தவர்களை அதிவிரைவில் அண்டிக் கொள்ளும்.

இத்துர் ஆவிகள் நடமாட்டத்தைப் பல மிருக ஜெந்துக்கள் எப்படி உணர்கின்றன…?

ஏவலும் சூனியமும் மிருக ஜெந்திற்குச் செயல் கொள்ளாது. அதன் உடலிலேயே உணரும் தன்மை கலந்துள்ளது. இச்சுவாச சக்தி நாய்க்கு அதிகம். புலிக்குத் தன் பார்வையிலேயே கண்டிடும் சக்தி உண்டு.

இவ் ஏவலின் நடமாட்டம் உள்ள இடங்களை எல்லாம்… இவற்றை அறியும் தன்மை கொண்ட மிருகங்கள் உணர்ந்துவிடும்.

முந்தைய காலங்களில் வீடுகளில் நாய், பூனை இவற்றைத் திருடர்களிடமிருந்து காப்பதற்காக மட்டும் வளர்க்கவில்லை….
1.துர் ஆவிகளிடமிருந்து அவற்றின் ஏவல் இல்லங்களில் உட்சென்று செயல்படாமல் காக்கவும் இம் மிருகங்களை வளர்த்தனர்.
2.ஏவல்காரனையும் குட்டிச்சாத்தான் செயல் உடையவனையும் கண்டால் இந்நாய், நரி, பூனைகள் குரைத்துச் சப்தமிட்டு உணர்த்திவிடும்.

அக்கால இல்லங்களில் இல்லத்தின் முன் வாயிலுக்கு மேல் “நிலைக் கண்ணாடியைப் பதித்திருப்பார்கள்…” நாம் சாதாரண நிலையில் இருக்கும் நிலையில்… நம் கண்ணிற்குத் துர் ஆவிகளின் நடமாட்டம் தெரிந்திடாது.

நிலைக் கண்ணாடியில் தெரியும் நிலை என்ன…?

நிலைக் கண்ணாடியில் பூசி உள்ள அவ்வமில சக்தி இத் துர் ஆவிகளின் சக்திக்கு எதிர்கொண்டது. நாயின் உடலில் உள்ள அமில சக்திக்கும் நிலைக் கண்ணாடியில் உள்ள அமிலத்திற்கும் தொடர்பு உண்டு.

இத்துர் ஆவியின் நிலையைப் பலர் காண்கின்றனர். பேயின் நடமாட்டத்தைக் கண்டேன் என்பவர் பலர். பேயல்ல… குட்டிச்சாத்தானின் உருவ நிலை அது.

சிலருக்கு மட்டும் புலப்படும் நிலை என்ன…?

ஒவ்வோர் உடலுக்கும் அவரவர்களின் அமிலத்தன்மை ஒன்று உண்டு என்று உணர்த்தினேன் அல்லவா…? இவற்றைக் காணும் அமிலத்தன்மை கூடியவர்கள் உடல் இந்நிலையை அறியலாம்.

சிலரின் நிலையில் அவர்களின் உடலில் உள்ள அமிலத் தன்மையே அபூர்வத் தன்மையில் இயற்கையிலேயே கூடிப் பிறந்திருப்பர்.

எண்ணத்தில் ஞானசக்தி நிறைவு கொண்ட அபூர்வப் பிறவி எடுத்தவர் பலர் உள்ளனரே. அவர்களுக்கு இயற்கையின் அமிலமே தன்னுள் கூடி பிறவி எடுத்து பிறந்து வளர்பவர்கள்.

பல பிறவியில் சேமித்த அமிலத்தின் கூட்டு நிலையினால் பல ஞானிகள் மற்ற ஏவலின் சக்தி இல்லாமல் வாழ்கின்றனர்.

1.நம்முள் உள்ள நிலையையே நாம் நல் நிலையில் வளரும் பக்குவத்தை நாம் பெறல் வேண்டும்
2.நமக்காக ஏவாமல் பிறருக்காகச் செய்த மந்திர நிலையும் தாக்கும் நிலையும் நமக்கு உண்டு.
3.இருந்தாலும்… நம் நிலையில் ஒரு நிலைப்பட்டுவிட்டால் எத்தீய தன்மைகளும் நம்மை வந்து தாக்காது.

மக்களுக்கு ஏற்பட்டுள்ள மூடநம்பிக்கையின் வித்தே “சூனியக்காரர்களினால் வந்த நிலை தான்”

மக்களுக்கு ஏற்பட்டுள்ள மூடநம்பிக்கையின் வித்தே “சூனியக்காரர்களினால் வந்த நிலை தான்”

 

குருவி ஜோதிடம், எலி, அணில் இப்படிப் பல நிலைகளைச் செப்புவது எந்நிலை கொண்டு…? என்பதனை விளக்கிடுவேன்.

இவை எல்லாமே கரு வித்தையின் செயல்தான்.

அப்பிராணிகளின் உடலில் (மந்திரவாதிகள்) கருவின் மையை ஏற்றி விடுவார்கள். அந்நிலையில் இவர்கள் சொல்லும் பெயர் நாமத்தைக் கேட்டு, இப்பிராணிகளை வைத்து ஜோதிடம் செப்பிடும் நிலையில் உள்ளவர்களுக்கு, அவரின் பழக்கப்பட்ட பரிபாஷைகள் இப்பிராணிகளுக்குத் தெரிந்திடும்.

இப்பிராணியின் உடலில் உள்ள இக்குட்டிச்சாத்தான் தான்… நாமகரணத்திற்குகந்த செயல் கொண்ட எந்நிலை பெற்ற குண நிலைக்குகந்த ஏடுகளை ஓதிட வேண்டுமோ அதனையே சரியாக எடுத்துத் தரும் இவர்கள் மனநிலைக்குகந்த சொல்வாக்கே அதிலும் காணப்படும்.

அவ்வெண்ணமுடனே இவர்கள் செயல்பட்டால் அதன் தொடர்ச்சி நிலையில்தான் அவர்களின் வாழ்க்கை நிலையும் இருந்திடும்.
1.இவ்வுலகினில் பல பாகங்களில் இச்சூனிய வேலை நடக்கின்றது
2.பிறரைத் தன் வசியப்படுத்தவே இக்கரு வித்தை வேலையெல்லாம் செய்யப்படுகின்றன.
3.ஆவியின் தொடர்புபடுத்தி தன் உடலிலேயே பல ஆவிகளை துர் ஆவிகளை ஏற்றுக் கொண்டு அதனை ஏவிச் சூனியம் செய்வார்கள்.

சூனியத்திற்கு அடிமைப்பட்டவன் அச்சூனியத்தினால் தான் அவனுடைய ஆத்மாவும் பிரியும்.

1.பிற இடத்தில் ஜெபம் செய்து பல பொருட்களை வைத்து விட்டு
2.இக்குட்டிச்சாத்தானின் தொடர்புடைய நாமத்தை இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து ஜெபித்தால்
3.அவ்வாவியான குட்டிச்சாத்தானே அப்பொருளை இவர்கள் “வா…” என்றவுடன்
4.இவர்களின் கையில் அப்பொருள் கிடைக்கும் நிலையில் அக்குட்டிச்சாத்தான் செய்து தரும்.
5.இவர்கள் வைத்த பொருள் தான் அங்கிருந்து வருமே ஒழிய
6.ஆகாயத்தில் இருந்து ஆண்டவனால் செய்விக்கப் பெற்ற உருவச் சிலையோ விபூதியோ, புஷ்பமோ எவையுமே
7.இவர்களிடத்திற்கு மாறுபட்டு வராது.

இந்நிலையில் உள்ள எச்சாமியார்கள் ஆகட்டும் மந்திரவாதிகள் ஆகட்டும் அவர்கள் தன் புகழ் உயர தன் நாமத்தினால் பொருள் ஈட்டி இச்செயலையெல்லாம் செய்வித்து… மக்களை மட்டும் அவர்கள் ஏமாற்றவில்லை, “தன் ஆத்மாவையே… தானே ஏமாற்றி வாழ்கின்றார்கள்…”

சொந்தமில்லா இவ்வுடலின் வாழ்க்கை எத்தனை நாட்களுக்குச் சொந்தம்…?

இருக்கும் ஒரே சொந்தம் நம் ஆத்ம சக்தியை இயற்கை என்னும் சொந்தமுடன் சொந்தமாக்கி, நம் ஆத்மாண்டவனை நல்வழியில் செயலாக்குவதை விட்டு சாமியார்கள் என்ற நாமத்தில் ஏன் ஆண்டவனின் நாமத்தையே அடிமைப்படுத்திடல் வேண்டும்…?

இன்று மக்களுக்கு ஏற்பட்டுள்ள மூடநம்பிக்கையின் வித்தே இச்சூனியக்காரர்களினால் வந்த நிலை தான். நம் பூமியில் நாம் வாழும் இக் கண்டத்தில் நம்மை அறியாமலே நம்மில் பலர் இதற்கு அடிமை கொண்டு வாழ்கின்றனர்.

நமக்கும் மேல் சீனாவிலும் ஜப்பானிலும் இன்னும் சில ஆப்பிரிக்கக் கண்டங்களிலும் அரேபிய நாடுகளிலும் இந்நிலை அதிகம். ஒவ்வோர் இடத்திலும் வாழும் மனிதர்களின் எண்ண நிலைக்கொப்ப அங்கு வாழும் கருவித்தை வேலைகளும் நடக்கின்றன.

1.நம் பூமியில் இவ் இந்திய தேசத்தில்தான் பல ரிஷிகள் சப்தரிஷி பெறும் நிலையெய்திட வாழ்ந்த பூமி இது
2.அவர்களின் எண்ண ஓட்டமும் (சப்த அலைகள்) அவர்கள் விட்ட சுவாசத்தின் சப்த அலையையும் தாங்கி வாழும் நிலைதான் இப்பூமியின் நிலை.

இக் கரு வித்தையின் குட்டிச்சாத்தான் ஏவலில் உள்ளவர்கள் இதை உணர்ந்து நல் ஆத்மாவாய் இப்பொருள் என்னும் பேய்க்கு அடிமைப்படாமல் வாழ்ந்திட வேண்டும்.