பிற உணர்வின் உந்துதலை நாம் கட்டுப்படுத்த வேண்டும் – ஈஸ்வரபட்டர்

பிற உணர்வின் உந்துதலை நாம் கட்டுப்படுத்த வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள ஆவிகளின் சுமையுடன் நம்மை அறியாமலேயே அவற்றின் சக்திகள் பலவற்றை நம்முடலில் நாம் ஏற்றிக் கொண்டுள்ளதினால் தான் நம்முள் உள்ள குண நிலையை
1.நம் குண நிலைக்கு மேல் பிற அணுவின் செயலை நம்முள் ஏற்படுத்தி
2.அதனால் நமக்கு வரும் பல இன்னல்களின் நிலையுடன் வாழ்கின்றோம்.

நம் சக்தியின் செயலை நாம் பெற வேண்டும். பல அணுக்கள் நம் உடலிலிருந்து செயல்பட்டாலும்…
1.அவ்வணுக்களின் எண்ணத்திற்கு நம் புத்தியை அடிபணிந்து செல்லாத நிலைப்படுத்தி
2.நம் தியான சக்தியின் ஜெபத்தை நாம் பெற வேண்டும்.

எண்ணத்தில் கலக்கத்தை அண்ட விட்டால்… நம் உடலிலிருக்கும் பிற அணுவின் துரிதம்தான் செயல்படும். நம் நிலை ஒரே நிலையிலிருந்தாலும் நம்முடன் கலந்து வாழ்பவர்களின் எண்ண நிலையின் சுவாச நிலையும் நம் சுவாசத்தில் தாக்கும் பொழுது நம் நிலையும் மாறுபடும்.

சந்தோஷமான சூழ்நிலை உள்ள இடத்தில் நாம் உள்ள பொழுது நம் நிலையும் அங்குள்ளோரின் நிலையும் மகிழ்ச்சியுடன் உள்ளதல்லவா…? அதே நிலைபோல் துக்கம் உள்ள இடத்திலும் அங்குள்ளோரின் நிலையும் கவலை கொண்டதாக உள்ளதல்லவா…?

ஏனென்றால் இந்தக் காற்றினில் அனைத்து நிலைகளும் கலந்துள்ளன.

நாம் எந்நிலையில் உள்ளோமோ அந்நிலையில் சுற்றிக் கொண்டுள்ள சுவாசத்தின் துரித நிலை நம் நிலைக்கும் வந்து தாக்கி நம்மையும் அச்சூழ்நிலையில் கலக்கச் செய்கிறது.

இக்காற்றினில் உள்ள துரித நிலை கொண்டு
1.எந்த இடத்தில் நாம் உள்ளோமோ அந்த நிலையின் சூழ்நிலைகேற்ப
2.நம்மை அறியாமலே நாம் அடிமைப்பட்டு செயல்படுகின்றோம்.

இவ்வெண்ணத்தின் நிலைதான் இவ்வனைத்து நிலைகளுக்கும் நம்மை அடிகோலுகிறது.

நம்மில் வாழ்ந்த பெரியோர்கள் இந்நிலையிலிருந்து நாம் மாறுபடுவதற்குத்தான்… பக்தி நிலை தியான நிலை என்று நம்மை நல்வழியில் அழைத்துச் செல்லப் பல வழிகளை நமக்கு உணர்த்தினர்.

இந்நிலையை அறிந்த சிலரும் சில வினாக்களை எழுப்புகின்றனர்.

ஆண்டவன் அருள் பெற்று மகான் என்று பலரும் போற்றும் நிலையில் உள்ளவருக்கும் பல கஷ்டங்களும் பல உபாதைகளும் அவர் உடலில் வருகிறதல்லவா…? அது எதனால்…?

நம் கலியுடன் வாழ்ந்த மகான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் என்ற நாமம் கொண்டவர் வாழ்ந்த கடைசிக் காலத்தில் அவர் உடலில் பல உபாதைகள் இருந்தனவே.

அவர் தான் இவ்வுலகத்திற்கு இக்கலியில் வாழும் மனிதர்களுக்காக அவர்கள் நிலைக்கு புரியும்படி பல அருட்சொற்களை வெளியிட்டுப் பல ஜெபங்கள் இருந்து பல வழிகளைப் புகட்டினார். பலருக்குப் பல நல் நிலைகளைப் புகட்டிய அவர் உடலிலேயே பல நோய்கள் ஏன் தாக்கின..?

அவர் அவ்வுடலை அவரின் சொந்தமாகக் கருதவில்லை. மக்களுடன் மக்களாக வாழ்ந்தது தான் இவரின் நிலை.

இவரிடம் உபதேசம் பெற வருபவர்களின் எண்ணத்திற்கும் மற்ற நிலையில் வருபவர்களுக்கும் இவரின் நிலையை ஆண்டவனாக எண்ணி அவர்களின் கஷ்டத்தை இவரிடம் செப்பிடும் பொழுது இவரின் ஜெபத்தின் பயனால் இவரிடம் அருள் வேண்டி வருபவர்களின் உடல்களில் உள்ள உபாதைகளை இவர் ஈர்த்து இவர் உடலில் ஏற்றுக் கொண்டு அவர்களை நலமுடன் வாழும் நிலைப்படுத்தி அனுப்பினார்.

இவர் பெற்ற சக்தி இவரைக் காண்பவரின் நிலையிலுள்ள உபத்திரவத்தைத் தான் ஈர்த்து வெளிப்படுத்தும் நிலை பெற்றிருந்தார்.

ஆனால் அந்நிலையில் அஜ்ஜெப நிலை செய்யும் பொழுது ஈர்த்து உடனே வெளிப்படுத்தா விட்டால் இவர் இஜ்ஜெப நிலைக்கு வரும் காலத்திற்கு முதலில் இவர் உடலில் இருந்த அணுக்களின் வேகத்தினால் மற்றவரிடமிருந்து இவர் ஈர்த்த அவ்வியாதியின் அணுக்கள் இவர் உடலிலேயே தங்கிவிடுகின்றன.

இந்நிலையில் வந்ததுதான் அவரின் அந்திமக் காலத்தில் நடந்த நிலை. நிலை அறிந்தேதான் அவரும் வாழ்ந்தார். இத்தவயோக முனிவர்களின் நிலையெல்லாம் இதைப்போல்தான்.

உடல் உபாதையில் மற்றவர்கள் நிலை இருக்கும் பொழுது அவற்றைத் தான் ஈர்த்து வெளிப்படுத்திட முடியும். அவர்களைக் குணமாக்கிடவும் முடியும்.

இதுவே இவ்வுடல் தசைப் பாகத்தில் மட்டும் இந்நிலையைச் செய்திட முடியுமே தவிர இவ்வுடலிலுள்ள எலும்பின் நிலையில் உள்ள மாற்றத்தையும் பிணியையும் எம்முனிவனாலும் சித்தனாலும் ஈர்த்துச் செயலாக்கிட முடியாது.

ஆவி நிலைகொண்ட தசையில் உள்ள நிலைகளை மட்டும் தான் குணப்படுத்திட முடியும்.

1.சக்திக்கும் சக்தி வாய்ந்த அச்சக்தி தேவனின் அருளை வென்றிட
2.எந்த ரிஷி நிலை பெற்றாலும் அச்சக்தியேதான் ஓங்கி நிற்கும் நிலை உள்ளது.
3.அச்சக்தியின் சொரூப நிலையை எண்ணியே வணங்கிடத்தான் முடியும்.

ஆகவே… நம்மில் நம் எண்ணத்தை நல் நிலைப்படுத்தி
1.நமக்குள் இருக்கும் மற்ற அணுக்களின் செயல்களிலிருந்து
2.நம்மை நாம் பாதுகாப்புடன் வாழும் நிலைக்கு முதலில் பக்குவம் கொண்டு வந்திட வேண்டும்.

புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றாலும் பாவத்தைத் தான் இன்று கட்டிக் கொண்டு வருகின்றோம் – ஈஸ்வரபட்டர்

புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றாலும் பாவத்தைத் தான் இன்று கட்டிக் கொண்டு வருகின்றோம் – ஈஸ்வரபட்டர்

 

நம் பாட நிலையில் உடலில்லாத ஆத்மாவுடன் கூடிய ஆவிகளின் நற்செயல்கள்… தீமைகள்… இவற்றையே பல நிலைகளில் சொல்லி வருகின்றேன்.

1.வாழ்பவரின் நிலையைக் காட்டிலும்… அவர்களின் எண்ண சக்தியை
2.இவ்வாவிகளின் செயல்தான் இவ்வுலக நிலையையே நடத்திச் செல்லும் தன்மை கொண்டதாக உள்ளது.

இன்று புனித கங்கை என்ற நிலையில் காசிக்குச் சென்று நம் பாவங்களைக் கழிக்கப் பல மைல்களுக்கப்பால் இருந்தும் அப்புண்ணிய நதியில் நீராடி வந்தால் பாவங்கள் குறையும் என்ற எண்ணத்தில் பக்தி கொண்டு பல கஷ்டங்களுடன் பாவத்தைப் போக்க காசிக்குச் செல்கிறார்கள். அதே போல் இராமேஸ்வரம் என்று புண்ணிய ஸ்தலத்தையும் நாடி மக்கள் செல்கிறார்கள்.

அக்காசி கோவிலில் உள்ள அத் தபசு ரிஷியான காசி விஸ்வநாதரின் அருளைப் பெற்றிட அப்புண்ணிய ஸ்தலத்திற்குச் செல்கின்றார்கள்.

ஆனால் அங்கும் நடக்கும் நிலை என்ன…?

அப்புண்ணிய ஸ்தலத்தில் வாழும் மக்களின் எண்ணமெல்லாம் புண்ணியாத்மாக்களாக புண்ணிய பூமியாக்கிடவா செயல்கள் நடக்கின்றன…?

பாவத்தைக் கழிக்கும் இடமாக எண்ணிச் சென்று புண்ணியத்தை வாங்கியா வருகின்றார்கள்…? கொலையும் கொள்ளையும் மலிந்து அப்புனித கங்கையில் புனித நீரைக் குருதி நீராக்கிக் கலக்க விட்டுள்ளார்கள்.

பல மைல்களுக்கப்பால் இறந்தோரை எல்லாம் அவ்வுடல்களை இக்கங்கையில் செலுத்தினால் “இறந்தவருக்குப் புண்ணியம்…” என்ற நிலையில் இந்நிலையில் கொண்டு வந்து விடுகின்றார்கள்.

பாவத்தின் பிறப்பிடமாக இன்று உள்ளது புனித கங்கையும் காசியின் திருத்தலமும். அங்கு செயற்கொண்டு இருக்கும் ஆண்டவனின் அஜ்ஜோதி மகான் இன்றும் அங்கு தான் உள்ளார்.

அனைத்துப் பாவங்களையும் அவரும் பார்த்துக் கொண்டே தான் உள்ளார். எண்ணத்திற்குகந்த அருளைத்தான் அவர் அளிக்கின்றார். பாவத்திற்கு அவர் என்ன செய்ய முடியும்…?

1.பாவத்தின் எண்ணம் கொண்டவன் அவன் செய்யும் பாவங்களின் அணுவையே மீண்டும் மீண்டும் தன்னுள் ஏற்றிக்கொண்டு
2.எப்பாவத்திற்கும் துணிந்தவனாகப் பல பாவங்களுக்கு உகந்தவனாகத் தன்னை ஏற்படுத்திக் கொண்டு
3.அப்புண்ணியக் கரையிலேயே பலர் இன்று வாழ்கிறார்கள்.

ஏன் அவ்வாண்டவன் இவர்களுக்கு நல்வழி புகட்டக் கூடாதா…? என்று கேட்பவர் பலர். ஆண்டவன் நிலையையும் ஆவியின் நிலையையும்தான் நாம் பிரித்துப் பிரித்துப் பல நிலைகளில் சொல்லியுள்ளோம்.

1.எண்ணத்தின் பேய்க்கு அடிமைப்பட்டவனை எவ்வாண்டவனும் வந்து நல்வழியில் செலுத்திட முடியாது
2.அவன் உடலைவிட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகு
3.அவ்வாத்மாவின் நிலை அடையும் அதிகாட்டத்திலிருந்துதான் அவன் உணர்ந்திட முடியும்.

அந்நிலையில் வாழ்ந்தவனுக்கு உணரும் தன்மையும் உடலை விட்டு ஆத்மா பிரிந்த பிறகும் அறிந்திட முடியாது. நரகலோகம் என்னும் அதி அவஸ்தை கொண்ட அழுகும் ஆவியாகத்தான் மிகவும் அல்லல்பட்டுச் சுற்றிக் கொண்டே இருக்க முடியும்.

அவ்வாவி பிறப்பெடுத்தாலும் நாயாகவும் அதற்கும் ஈன நிலையில் உள்ள மற்ற ஜெந்துக்களின் நிலைக்குத்தான் வந்திட முடியும்.

வாழும் காலத்தில் வாழ்க்கையின் சுகம் என்ற நிலையில் பல சுமைகளை ஏற்றிக் கொண்டு வஞ்சகம் குரோதம் ஆத்திரம் வெறி காமம் இப்படி பல வெறி கொண்ட நிலையை வாழ்க்கையின் சுகமாக எண்ணி வாழ்ந்து என்ன பயன்…?

வாழும் காலம் ஒரு மனிதனுக்கு 60, 70 ஆண்டுகளுக்கு மேல் இருப்பதில்லை. இக் குறுகிய காலத்தின் ஆசைக்குத் தன் ஆத்மாவை அடிபணிய வைத்து வாழ்கின்றான் இன்றைய மனிதன்.

அழிவில்லா இவ்வாத்மா மனித வாழ்க்கையில் வாழும் காலம் மிகவும் குறுகிய காலம். என்றுமே அழியாத ஆத்மாவை இம்மனித உடலில் உள்ள பொழுதினில் மட்டும் தான் கரை சேர்த்து என்றும் அல்லல் இல்லா வாழ்க்கை பெறும் சூட்சுமம் கொண்ட வாழ்க்கைக்குச் செல்லும் பொக்கிஷம் இம்மனித வாழ்க்கையில்தான் உண்டு.

1.அறியாமல் செய்திடும் பிழைதான் இன்று வாழும் வாழ்க்கை நிலை
2.கரை சேர்ந்திடும் நிலைக்கு நம்மைப் பக்குவப்படுத்தி வாழ வேண்டும் என்ற எண்ணம் பல மனிதர்களுக்கு இல்லை.

அன்று நம் முன்னோர் புண்ணிய ஸ்தலமாக்கி ஆண்டவன் சக்தி பெற்றுப் பல கோவில்களை அமைத்து நமக்கு வழிகாட்டிட ஏற்படுத்திய நிலையை எல்லாம் இன்று நாம் நம் வேடிக்கைக்காகவும் உல்லாசப் பயணங்களுக்காகவும் பொழுது போக்கும் நிலைக்காகவும் நமக்கு உகந்த ஆசைப்படி எல்லாம் ஏற்படுத்தி விட்டோம்.

அதனால் இன்று அந்தப் புண்ணிய ஸ்தலங்களும் பல புண்ணிய நதிகளும்
1.ஆவிகளின் அட்டுழியங்கள் நடக்கும் நிலையாக மாறி
2.இன்று புண்ணியம் வாங்கச் செல்பவர்களின் உடல்களில் எல்லாம் பல உடல்களில் ஏறிக்கொள்கின்றன.
3.அடங்கா ஆசையுடன் உள்ள ஆவிகள்தான் உடல்களில் ஏறிக்கொள்கின்றன.
4.தன் ஆசைக்குகந்த செயல்களையும் நடத்துகின்றன.

தன் செயலின் நிலை ஈடுபடுத்தாவிட்டாலும் அவ்வுடலில் இருந்து வெளிவர முடியாத நிலையில் பல உடல்களை இவ்வாவிகளினால் அவ்வாவிகளின் உந்தலுக்கு உட்படுத்திவிட்டன.

1.நாம் செல்வது புண்ணியம் வாங்க…
2.அப்புண்ணிய ஸ்தலத்தில் உள்ள இவ்வெண்ண மூச்சுக்கள் எல்லாம் நாம் சென்றதும் நம் எண்ணத்தில் கலந்து (நம் சுவாசத்தில்)
3.நம்மையே நம் செயலில் செயல்படாத நிலை ஏற்டுத்தி விடுகின்றன.

புண்ணிய ஸ்தலத்திற்குச் சென்று “பாவ மூட்டையைத்தான் சுமந்து வருகின்றோம்…!” இன்றைய நிலை இது தான்…!

நம்முள் ஈஸ்வரனே உள்ளான் என்பதை மறந்திடக் கூடாது – ஈஸ்வரபட்டர்

நம்முள் ஈஸ்வரனே உள்ளான் என்பதை மறந்திடக் கூடாது – ஈஸ்வரபட்டர்

 

நமக்கு வழி காட்டிய நம் முன்னோரும்… நம்மில் கலந்து வாழ்ந்த சப்தரிஷி நிலை பெற்றவர்கள் முதற்கொண்டு இயற்கையின் நிலையைத்தான் போற்றி வழி நடந்து வந்தார்கள்.

இன்றும் அவர்களின் செயல் பல ரூபத்தில் செயல் கொண்டு வழி நடத்தியும் வருகின்றார்கள். எந்நிலையில்…?

இன்று நீங்கள் பல இடங்களில் அகஸ்தியர் நாடி போகர் நாடி பிருகு மகரிஷியின் நாடி இன்னும் இப்படிப் பல நிலை கொண்ட நாடிகள் சில இடங்களில் உள்ளதாக அந்நிலைக்குச் சென்று அதை ஒதுபவர்களின் வாயிலாக அறிந்து வருகிறீர்கள்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய அந்நாடிக்கும் இன்றைய நிலைக்கும் பெயர் நாமம் முதற்கொண்டு ஒத்து வரும் தன்மை என்ன…?

அந்நாடியை ஓதுபவரின் ஜெபமும் எண்ணமும்… எப்பெரியோரின் நாடியைத் தெய்வ நிலை கொண்டு ஜெபம் கொண்டு அவர் ஏற்கும் பக்தி நெறியின் நிலைக்கு… அந்நாடியை எழுதிய பெரியோரை… அதை வணங்கி ஓதுபவரின் சப்த அலையுடன் வந்து கலந்து… ஓதச் செய்வதுதான் அந்நாடியில் உள்ள நிலை.

இன்று படிப்பவரின் அறிவுக்கு எட்டாத இன்றைய கல்வித் திறனும் அதை எழுதி வைத்த காலத்தின் கல்வித் திறனும் மிகவும் வேறுபட்ட நிலையில் இருக்கும் நிலை கொண்டு இன்று ஓதுபவருக்கு அச்சொல்லின் நயமும் அழகும் அவரால் ஈர்த்துப் படித்திடவும் முடியாது.

சில குறிப்புகள் மட்டும் இவரால் அறிந்திட முடியும். அந்நிலையில் வந்து சொல்வதெல்லாம் அந்நாடிகளை எழுதியவர்களே தான் வந்து உணர்த்துகிறார்கள்.

காமாட்சி நாடி மீனாட்சி நாடி என்றெல்லாம் சொல்லும் நிலையிலும் அந்நிலையிலுள்ள சித்து நிலை கொண்ட காமாட்சி அம்மனும் மீனாட்சி அம்மனுமே வந்து இவர்கள் நிலையில் உணர்த்துவதுதான்.

சிலருக்கு நாடியில் வந்ததை அதன் சொல்லிய வாக்குப்படி எந்நிலையில் நம்புகின்றார்களோ அந்நிலையின் பரிபூரண அருளாசி பெறுகின்றார்கள்.

நம்பிக்கையில் நடப்பதுதான் இவ்வுலகமே…!

நாடியில் கேட்டதையே மனச் சஞ்சலத்துடன் வளர விடுபவனுக்கு அனைத்து நிலைகளுமே தவறாகத்தான் நடந்திடும்.

ஆண்டவனே… ஆண்டவனே…! என்பது நாம் ஆண்டவனாக வணங்கும் பெரியோரின் நிலையையே சஞ்சலப்படுத்தும் நிலைதான் இவையெல்லாம்.

நம் பாட நிலையில் தான் ஆண்டவன் என்றால் யார்…? என்பதனைப் பல நிலைதனில் விளக்கியுள்ளோம். ஞான வழியின் பக்குவ நிலைக்கு நாம் பெறும் சொத்து தான் ஆண்டவனின் அருள் சொத்து.

ஆவி உலகின் சூழ்ச்சியினால் இவ்வுலக நிலையே தத்தளித்த நிலையில் உள்ளது. ஆவி உலகில் அல்லல்பட்டு…
1.பல செயல்களை அதி கஷ்டத்துடன் செயலாற்றும் பல நிலை கொண்ட ஆவிகளுடன் நாம் கலந்து வாழ்வதினால்
2.நம்மில் தியான நிலை கொண்ட செயலை வளரவிடுவது ஒன்றுதான் இன்று இவ்வுலகினில் உள்ள நிலையிலிருந்து நாம் தப்பும் வழி.

ஏனென்றால் இப்படர்ந்த உலகினில் நம் எண்ணத்தில் சிறு சலிப்புக்கும் கோபதாப குரோதத்திற்கும் இடம் அளித்திட்டாலும் இவ்வாவியின் நிலையிலிருந்து தப்புவது கடினம்.

நம்முள் உள்ள இறை சக்தியை உணர்ந்தே அவ் ஈஸ்வர ஜெபத்தை எந்நிலையிலும் நம் நினைவில் கொண்டிடல் வேண்டும்.

1.நம்முள் அவ் ஈஸ்வரனே உள்ளான் என்ற சத்தியத்தை மறந்திடாமல்
2.ஒவ்வொருவரும் இதன் வழி பெற்று வாழ்ந்தால்தான்
3.இவ்வாவி உலகிலுள்ள ஜீவ ஆத்மாக்கள் அனைத்தின் செயலிலிருந்தும் நாம் தப்ப முடியும்.

மனிதன் தனக்குள் இருக்கும் ஆற்றல்களை ஆக்கபூர்வமான காரியங்களுக்காகப் பயன்படுத்த வேண்டும் – ஈஸ்வரபட்டர்

மனிதன் தனக்குள் இருக்கும் ஆற்றல்களை ஆக்கபூர்வமான காரியங்களுக்காகப் பயன்படுத்த வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

அச்சு ஒன்று பதித்து உருவம் ஒன்று ஆவதில்லை. எந்த விதையைப் போடுகின்றோமோ அந்தச் செடிதான் வளரும்.

நம் எண்ணத்தை எந்த நிலையில் செயல்படுத்துகின்றோமோ அந்த நிலையின் தொடரின் வழி நிலையின் வாழ்க்கைதான் வந்தமையும் நமக்கெல்லாம்.
1.எண்ணப்படிதான் வாழ்க்கை…
2.உன் எண்ணம் போல் வாழ்ந்திடு…! என்ற பெரியோரின் வாழ்த்தைத்தான் நாம் பெறுகின்றோம்.

ஒரே தாயின் வயிற்றில் பிறக்கும் பல குழந்தைகளின் குண நிலை ஒன்று போல் இருப்பதில்லை. குண நிலை மட்டுமல்ல மன நிலையும் ஒவ்வோர் உடலுக்கும் ஒவ்வொரு வித மனம் உண்டு.

இப்பூமியில் உதித்த ஜீவன் பெற்ற அனைத்திற்குமே ஒவ்வொரு மணம் உண்டு. மணத்தைப் போலவே ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சக்தி நிலை உண்டு.

ஒவ்வொரு ஜீவ உடலுக்கும் அவரவர்கள் எந்நிலை கொண்ட குண நிலையையும் சக்தி நிலையையும் வளர்த்துக் கொள்கின்றார்களோ அந்நிலையின் வளர்ச்சிக்கு அந்நிலைக்கு ஒத்த குண நிலைகளில் உள்ள ஆவி உலகிலுள்ள ஆத்மாக்களின் தொடர்பு நிலையும் இவர்களுக்கு வந்தடைகின்றது.

இன்று இந்நிலத்தில் நீர் எங்குள்ளது..? எந்நிலையில் ஊற்று நிலை உண்டு…? என்பதனையறிய சிலரின் உடல் நிலையிலேயே அச்சக்தி நிலையுண்டு.

அவர் உடலிலேயே அச்சக்தி நிலையும் அந்நிலைக்கு ஒத்த அவர் நிலையில் உள்ள மற்ற ஆத்மாவின் தொடர்பும் அவர் உடலில் இருந்தால் தான் நீர் உள்ள நிலைகளைக் கண்டறிந்திட முடிந்திடும்.

நம் முன்னோரின் வழியில் வந்தது தான் இந்நிலையின் வழி. இவை போலவே இப்பூமியில் உள்ள உலோக நிலையையும் கண்டறியலாம்.

இவ்வுடலில் இப்பூமி எச்சக்தியெல்லாம் எடுத்து வெளிப்படுத்துகின்றதோ அந்நிலைக்குகந்த சக்தி நம் உடல்களிலும் உள்ளது. இக்காற்றில்தான் அனைத்து சக்திகளும் கலந்துள்ளன.

எப்படி இப்பூமியில் பல நிலை கொண்ட உலோகங்கள் வளர்கின்றனவோ அந்நிலைபோல் ஒவ்வொரு ஜீவ உடலுக்கும் பல நிலைகள் கொண்ட சக்தி நிலைகள் உண்டு.

நமக்குகந்த சக்தி நிலையை வளர விட்டு அவற்றின் நிலையை அறிந்து அதன் வழிக்குச் செல்லும் பக்குவ நிலை புரியாமல் வாழ்கின்றோம்.

இன்று பல இடங்களில் மனோவசிய நிலை (மெஸ்மரிஸம்) என்னும் நிலையைச் சிலர் அறிந்து ஒருவரது நிலை அனைத்தையும் கட்டுப்படுத்தி இவர்கள் எச்சக்தியைப் பாய்ச்சுகின்றார்களோ அச்சக்தியின் நிலை கொண்டெல்லாம் மனோவசியத்திற்கு உட்பட்டவர் நடப்பதாகப் பார்த்தும் கேட்டும் இருப்பீர்.

இவற்றின் நிலையென்ன…?

அறிந்து… கல்வி அறிவில் வந்த நிலை என்பர் பலரும். கல்வி அறிவில் மட்டும் வந்த நிலையல்ல அந்நிலை.

அவர்கள் நிலையும் இன்று பல நிலை கொண்ட சாமியார்கள் மந்திரம் செய்து பல பொருட்களை விபூதி புஷ்பம் இப்படிச் செய்யும் நிலைக்கும் இம்மனோவசியம் செய்யும் நிலைக்கும் ஒத்த நிலைதான்.

ஆவியின் தொடர்பு கொண்டு மனோவசியத்தால் யாரை அந்நிலைக்கு வசியப்படுத்துகிறார்களோ அவர்களின் எண்ணத்துடன் இவ்வாவியின் எண்ண அலையும் சப்த அலையும் கலக்கவிட்டு வசியப்பட்டவரின் நிலையை அடக்கி இவர்கள் ஏவிய ஆவியின் நிலைப்படியெல்லாம் அவ்வசியப்பட்டவர்கள் நடக்கும் நிலைதான் இம்மனோவசிய நிலை.

யார் இம்மனோவசியம் செய்கிறாரோ அவரது சொல்லும் அவரது எண்ணமும் இவ்வசியப்பட்டவரின் நினைவில் கலந்துள்ள ஆவியின் நிலைக்கும் தொடர்பு கொண்டு இவ்வசியப்படுத்தியவர் சொற்படியெல்லாம் அவ்வாவி அவ்வசியப்பட்டவரின் உடலில் இருந்து செயல்படுத்துகிறது.

1.அறிந்தோ அறியாமலோ செய்யும் பிழை இது
2.வசியப்பட்டவரின் சக்தியும் பாதிக்கப்படுகிறது
3.வசியம் செய்தவரின் சக்தியும் இதனால் பாதிக்கப்படுகிறது.

இதன் நிலையில் அடையும் நல் நிலை என்ன..? கால நிலையும் விரயமாகிறது.

ஆண்டவன் அருளிய சக்திதனை அன்பென்னும் பொக்கிஷமாக்கி அச்சக்தியான ஜெபத்தைக் கொண்டு பல உன்னத அறிவுச் செல்வத்தை நாம் பெற்று இவ்வுலகினைச் செழிப்பான உலகமாக்கி செழித்து வாழ்ந்திடும் இயற்கையின் செழிப்பிற்கு நம் சக்திதனை ஒன்றச் செய்தல் வேண்டும்.

அப்படிச் செய்தால் இவ்வுலகமே செழித்து…
1.இன்று இக்காற்றே கடும் விஷமாகச் சுற்றியுள்ள நிலையை மாற்றி
2.ஆனந்தமான மண நிலையைப் பரவச் செய்யத் தாவரங்களின் நிலையைத் துரிதப்படுத்தி… தாவரங்களை வளரச் செய்து
3.நற்கனிகளையும் நல் தானியங்களையும் நாம் பெற்றே
4.நற்சுவையுடன் நாம் உண்டே நல் மணத்துடன் நாம் வாழும் நிலை ஏற்படுத்திட முடியும்.

அதற்கு நாமெல்லாம் ஒன்றுபட்டு நம் சக்தியின் ஜெபத்தால் அந்த இயற்கைக்கே அடிபணிவோம்.

அமாவாசை தினத்தின் முக்கியத்துவம் – ஈஸ்வரபட்டர்

அமாவாசை தினத்தின் முக்கியத்துவம் – ஈஸ்வரபட்டர்

நம் முன்னோர்கள் நமக்குக் காட்டிய ஒவ்வொரு வழியிலும் உள்ள உண்மையினை அறியாமல் நாம் அவற்றைக் குடும்பங்களில் வந்த குடும்பச் சடங்கு… சாங்கியம்… என்று வழிப்படுத்தி விட்டோம்.

1.அதன் நிலையில் மாறுபடும் பொழுது மனச் சஞ்சலம் கொண்டு
2.நாம் தெய்வக் குற்றம் செய்து விட்டோம்… பாவத்திற்கு ஆளாகி விடுவோம் என்ற பயந்த நிலையில்
3.இன்றும் பல குடும்பங்களில் பல நிலைகள் நடக்கின்றன.

பக்தி நிலை வளர்வதற்காக நம் முன்னோர்கள் பல வழிகளில் அவர்களின் சந்ததியார் வர வேண்டுமென்பதற்காகக் காட்டிச் சென்ற வழிதான் அந்தப் பல வழிகளும்.

1.அமாவாசை அன்று அவரவர்களின் முன்னோர்களை நினைத்து வணங்குவது…!
2.அமாவாசையில் வைத்தியம் செய்து கொண்டால் நற்பயன் அடையலாம்…!
3.அமாவாசையன்று எந்தக் நற்காரியங்களுக்கும் நல்ல நாள்…!
4.அமாவாசையன்று சேமித்து வைத்த தானியத்தைச் சூரியனின் ஒளி படும்படி வைத்தால் பல நாட்கள் அவற்றில் பூச்சி புழுக்கள் அண்டாது…!
5.அமாவாசையன்று தொழில்களுக்குச் செல்லலாகாது…! என்றெல்லாம்
6.பல நிலைகளை நமக்கு உணர்த்திச் சென்றார்கள் நம் முன்னோர்கள்..

அமாவாசையின் நிலையென்ன…?

அன்று நமக்கு இப்பூமியின் மேல் சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளிக் கதிர்கள் அனைத்தும் அப்படியே வந்து தாக்குகின்றன. தாக்கும் நிலை கொண்டு இப்பூமியும் ஈர்த்து வெளிப்படுத்துகிறது.

அமாவாசையன்று கடல் பொங்குகின்றது என்கின்றோம். கடலும் பொங்குகிறது. அமாவாசையன்று மட்டும் கடல் நீர் அதிகரிப்பதன் நிலையென்ன…?

இப்பூமித்தாய் ஈர்த்து வெளிப்படுத்தும் நிலையில் அதிசக்தி வெளிப்படுத்துகிறது. கடல் நீர் எப்படி பொங்குகிறதோ அதைப் போலத்தான் ஜீவராசிகளின் நிலையும் தாவரங்களின் நிலையும் பனிமலையின் நிலையும் எரிமலையின் நிலையும் மற்றுமுள்ள பல இவ்வுலகில் இப்பூமியிலிருந்து இப்பூமித்தாய் வளர்க்கும் அனைத்து ஜீவ நிலை கொண்ட யாவுமே அமாவாசை அன்று சூரியனிலிருந்து கிடைக்கும் சக்தியின் மாற்றத்தினால் இந்நிலை பெறுகின்றது.

மனிதர்களுக்கு அமாவாசையன்று உடல் கனம் தெரியும். ஒரு வித சோர்வும் என்றும் இல்லாத நிலையில் சிறு தளர்ச்சியும் ஏற்படும்.

நாம் அன்று சுவாசிக்கும் காற்றில் கனமான அணு நிலை கொண்ட சூரியனிலிருந்து வெளிப்படும் சக்தியின் துரிதத்தினால் அக்காற்றை நாம் சுவாசிப்பதினால் நம் உடல் நிலையில் மாற்றம் தெரிந்திடும்.

1.ஆரோக்கியமுடன் வாழ்பவர்க்கே இந்நிலை ஏற்படும் பொழுது
2.நலிவுற்றோரின் நிலைக்கு அவர்கள் எடுக்கும் சுவாசம் கனம் பெறுவதால்
3.அவர்களின் உடல் நிலைக்கு முதலில் இருந்த நிலைக்கும் அவ்வமாவாசை நாளுக்கும் முன்னேற்றத்தை விட நலிவுத் தன்மை கூடிவிடுகின்றது.

நம் முன்னோர்கள் அதிக நலிவுற்றோர்களைக் காணும் பொழுது அமாவாசை தாண்ட வேண்டும் என்று சொல்வதன் நிலையும் இதுதான்.

நலிவுற்ற நிலையில்… இக்கனமான சுவாச நிலையை நலிவுற்றோர் ஈர்த்து சுவாசிப்பது கடினமாவதினால்தான் இந்நிலை நடக்கின்றது. புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கும் இவ்வமாவாசையன்று அவர்கள் மன நிலை அதிகமாக மாறுபடும் நிலைக்கு வருகின்றது.

அமாவாசையன்று சந்திரனில் இருந்து நாம் பெறும் பல நிலைகள் நமக்குக் கிடைக்காமல் போகின்றது. நமக்கு எப்பொழுதும் பாதுகாப்பு போல் உள்ள சந்திரனின் அன்பான அரவணைப்பு இல்லாததினால் இந்நிலை ஏற்படுகின்றது.

விண் சென்ற முன்னோரைப் பக்தி கொண்டு நாம் வணங்கும் பொழுது நம் எண்ணம் அனைத்தும் அவர்களின்பால் பக்தி கொண்டு செல்வதினால் அவர்கள் காக்கும் நிலைக்கு நம்மை நாம் நிலைப்படுத்துகின்றோம்.

அப்பொழுது நமக்கு அமாவாசையன்று கனமான சுவாசத்தை ஈர்த்துச் சுவாசித்தாலும் அந்நிலையில் அவர்களின் ஆசி பெறுவதினால் இந்நிலையில் சோர்வு நமக்குத் தெரிவதில்லை.

அமாவாசையன்று நம் முன்னோர் விரதம் இருக்கும் நிலை ஏற்படுத்தியது எந்த நிலையில்…?

நாம் எடுக்கும் சுவாசத்திலேயே அமாவாசை தினத்தில் பல சக்திகள் அதிகரித்து ஏற்பதினால் இவ்வுடல் நிலைக்கு அன்று பசியின் நிலையும் குறைவு.
1.அதன் நிலையை அறிந்துதான் நம் முன்னோர்கள் “விரதம்” என்னும் பக்தி நிலையை
2.அந்நிலையில் காட்டி நமக்கு வழிப்படுத்தித் தந்தார்கள்.

எந்த ஒரு சிறிய நிலையையும் நம் முன்னோர்கள் நமக்குப் பக்தி நிலையிலேயேதான் உணர்த்திச் சென்றுள்ளார்கள்.

ஆண்டவன் என்ற பக்தி நிலை ஒன்றினால் மட்டும்தான்… என்றும் இவ்வுலக மக்களின் நிலையை நல்வழிப்படுத்திட முடியும் என்ற உண்மை நிலையில் தான்… பல நிலைகள் கொண்ட செயல்களையெல்லாம் நமக்கு உணர்த்திச் சென்றார்கள். பல ஏடு நிலைகளில் எழுதி வைத்தும் சென்றுள்ளார்கள்.

எந்நிலையிலும் நம்பிக்கை என்ற ஆண்டவனை நம்பினால் அனைத்து சக்திகளின் ஆண்டவனையே ஆண்டவனின் அருளையே அந்நம்பிக்கையில் நாம் பெறலாம்.

நல்லோரின் வாயிலிருந்து வரும் சொற்கள் எல்லாமே ஆண்டவனின் நாமச் சொற்கள் என்ற நம்பிக்கையுடன்
1.நாம் நம் முன்னோரையும் நம் பெரியோர்களின் வாழ்த்தையும்
2.நம்பிக்கையுடன் ஆண்டவனின் சொற்களாக நம்பி வரம் பெற்றால் நடப்பவை யாவும் நல் நிலைகளாக நடந்திடும்.

நம் முன்னோரையும்.. நம்மில் பெரியோரையும்… அவர்கள் ஆசி பெற நாம் வணங்குவது ஆண்டவனின் அருள் சொற்களை அவர்களின் நிலையில் இருந்து பெறுகின்றோம் என்ற நம்பிக்கையில் நலம் பெறப் “பெரியோர்களின் ஆசி பெற்று வாழ்ந்திடுங்கள்…!”

மகரிஷியால் காக்கப்பட்டு வரும் ஞானப் பொக்கிஷம் – ஈஸ்வரபட்டர்

மகரிஷியால் காக்கப்பட்டு வரும் ஞானப் பொக்கிஷம் – ஈஸ்வரபட்டர் 

 

இவ்வுலக மக்களின் எண்ணங்களையும் செயல்களையும் அவர்கள் அறியாமலே அவர்களை இப்பேராசை என்னும் செயற்கைப் பேய் ஆட்டிப் படைத்துக் கொண்டுள்ளது.

1.அன்றாண்ட அரசர்களின் ஆவேச உணர்ச்சிகள் அன்றைய மக்களின் எண்ணங்களிலெல்லாம் கலக்கவிட்டு
2.இன்றும் அதே வழி வழியாய் வந்த அவ்வாவேச நிலை கொண்ட உணர்ச்சியினால்
3.இவ்வுலக நிலையே செயற்கைக்கு அடிபணிந்து வாழும் நிலையில் உள்ளது.

இன்றுள்ள மனிதர்களில் பெரும்பாலோரின் எண்ணங்கள் பெரும் பேராசை கொண்ட பணத்திற்கு அடிமைப்பட்டு வாழும் நிலை தான்…! செல்வத்தை ஈட்ட எவ்வழியையும் நாடலாம் என்று தான் உள்ளார்கள்.

இவ்வுலகில் வாழப் பணச் செல்வம் ஒன்றைத்தான் பொக்கிஷத்தின் பொக்கிஷமாகக் கருதி… அதற்கே அடிமையாகி… இவ்வுலகத்தையே செயற்கையின் கோளமாக்க இந்நூற்றாண்டில் அறிவு வளர்ச்சி பெற்ற மனிதர்கள் இவ்வுலக நிலையை நடத்திச் செல்கின்றார்கள்.

ஆண்டவனையே பல ஜாதி நிலை கொண்டு பிரித்து வைத்துள்ளார்கள். ஜாதி என்னும் வழியை உண்டு பண்ணியவர்களும் அதன் வெறி நிலையில் இன்று தன்னைத் தானே தன் ஜாதிக்குத்தானே அடிமைப்பட்டு உழன்று வாழ்கின்றார்கள் என்று எண்ணுவதில்லை.

தன் ஜாதிக்குத் தான் மதிப்பளிப்பதாக எண்ணுகிறார்கள் அச் ஜாதிக்கு அடிமைப்பட்டவர்களெல்லாம்…!

இவ்வுலக நிலையை இவ்வரசர்கள் ஆண்ட காலம் முதல் இப்பொழுது அரசாட்சி நிலை கொண்டும் ஆட்சியில் உள்ளவர்கள் நடத்திடும் நாடகத்தினால் வந்த வினைச் செயல்தான் இன்று இவ்வுலக நிலையில் உள்ளன.

சூழ்ச்சியான நிலையில் பேராசையின் பேயை வளர விட்டுத்தான் இன்று இவ்வுலக நிலையே உள்ளது.

அனைவரின் எண்ணமும் ஒன்றுபட்டுச் செயல்படும் நிலையாகக் கூடி வரும் நிலையை ஏற்படுத்திட
1.இன்றுள்ள பல மத வழிகளில் உள்ள பெரியோர்கள் எல்லாம் ஒரு நிலைப்பட்டு
2.இவ்வுலக நிலையை இவ்வுலக மக்களின் எண்ண நிலையை ஒன்றுபடுத்திட
3.பக்தி என்னும் நிலையை வளரவிட்டு அன்பு பாசம் என்ற பிணைப்பு நிலையை மக்களின் எண்ணத்தில் சுழல விட்டு
4.இப்பேராசையிலிருந்து விடுபட்டு ஆசையான அமுதை ஊட்டி தெய்வீக நிலையில் ஈர்த்து
5.இன்றுள்ள மக்களின் ஜன நெருக்கத்தை மிகத் துரித நிலையில் பெருகும் நிலையைச் சமப்படுத்தி
6.தாவர வர்க்கங்களை ஓங்கச் செய்து இவ்வுலகை நிலைப்படுத்தும் தன்மைக்கு
7.பல நூறு வருடங்களுக்கு முன் நம்மைப் போல் இவ்வுலகினில் பிறந்து நமக்கெல்லாம் வழிகாட்டியாய் இருந்த
8.இவ்வுலகின் ஞானச்சுடரான மகரிஷி ஒருவர் எழுதி வைத்த பெரும் பொக்கிஷம் ஒன்று
9.அவரால் பாதுகாக்கப்பட்டு அந்நிலையிலேயே ஜெபம் கொண்டும் காத்துள்ளார்.

அவருக்கு ஜாதி மதம் ஒன்றுமில்லை. இன்று இவ்வுலகிலுள்ள சக்தியின் செல்வங்களான சக்தி பெற்ற நம் மக்களில் யாவரும் அறிந்திடலாம் அதை.

அவரவர்களின் நிலையில் நடக்கும் நிலை கொண்டு ஜெபத்தின் அருளைப் பெற்றால் அந்த ஞானச் சுடரின்… அம்மகரிஷியின் அருளைப் பெற்று… அவ்வுலகப் பொக்கிஷத்தை எடுத்து அனைவருக்கும் அதிலுள்ள உண்மையை உணரும் பாக்கியத்தைப் பெற்றுத் தந்திடலாம்.

இம்மதம் என்ற நிலையை மாறுபடுத்தி இன்று இவ்வுலக நிலையைக் காத்து ஆண்டவன் அருள் பெற்று ஆண்டவனின் ஜோதிகளை…
1.பல ஞான நிலைகளை மக்களுக்கு உணர்த்திடும் நல் பெரியோர்கள் அனைவரும் ஒன்றுபட்டால்
2.இவ்வுலகில் உதித்த சக்தியின் செல்வக் குழந்தைகளை
3.இச்செயற்கையின் பேராசைப் பேயிலிருந்து விடுபடும் நிலைக்கு அழைத்திடலாம்.

இஜ்ஜாதி மதப் பேயின் வழி நடந்திடாமல் ஒன்றுபட்டுச் செயல் கொண்டு தன்னைத்தானே அடிமைப்பட்டு வாழும் நிலையிலிருந்து மீண்டு அருள் வழி நடந்திடுங்கள்.

இவ்வுலக மாற்றத்திலிருந்து அதை மீட்டிடும் வழி உண்டா…! – ஈஸ்வரபட்டர்

இவ்வுலக மாற்றத்திலிருந்து அதை மீட்டிடும் வழி உண்டா…! – ஈஸ்வரபட்டர்

தாவர வர்க்கங்களை நாம் இன்று அழித்தும்… அதிலிருந்து நாம் பெறும் உன்னத நிலைகளைச் சிதற விட்டும் வாழ்கின்றோம்.

1.இம் மனித வர்க்கத்தின் பெருக்கத்தினாலும்
2.மற்ற ஜெந்துக்களின் பெருக்கத்தினாலும்
3.நம் செயற்கைக்குகந்த நிலைகளைப் பிரித்ததினால் மட்டும் அல்லாமல்
4.இன்று ஆவி உலகத்தின் பெருக்கத்திலுள்ள ஆவிகளும் அச்சத்தை ஈர்த்து வாழ்வதினாலும்
5.இன்று இவ்வனைத்து இனப் பெருக்கத்தினால் அச்சக்தியெல்லாம் இந்நிலையில் ஈர்க்கப்படுவதினால்
6.தாவர வர்க்கங்களுக்குக் கிடைக்கும் சத்து நிலை குறைந்து விட்டது.

எத்தாவரமும் சூரியனின் சக்தி பட்டு மட்டும் வளரவில்லை. இப்பூமித்தாய் சக்தியை ஈர்த்து ஊட்டம் தரும் நிலையிலிருந்தும் தான் அத்தாவரங்களின் செழிப்பு நிலை உள்ளது.

சில தாவரங்களினால் இப்பூமியில் உற்பத்தியாகும் பல அணுக்களை ஈர்த்து வளரும் தன்மை உள்ளது.

உயிரணுக்களையே ஊட்டமாக ஈர்த்து வளரும் தன்மையில் பல தாவரங்கள் உள்ளன. உயிரணுக்களையே என்பது இன்று பல ஜீவன்கள் ஆத்மா பிரிந்த பிறகு நாய் நரி பன்றி இப்படிப் பல ஜீவன்களைத் தாவரங்களின் வேருக்கு அடிப்பாகத்தில் இஜ்ஜீவன்களின் உடலை உரமாக இட்டு… அதையே உரமாக்கித் தன் சக்தியில் ஈர்த்து நற்கனிகளைப் பல தாவரங்கள் நமக்கு அளிக்கின்றன.

அத் தாவரங்களின் சக்திக்கு உரமாக வைத்த அவ்வுடலில் உள்ள தன்மையெல்லாம் அத்தாவரமே சத்தாக ஈர்த்ததினால் அதிலிருந்து பல உயிரணுக்கள் ஜீவன் பெறும் நிலையில்லாமல் அதிலிருந்து சென்ற ஓர் ஆத்மா மட்டும்தான் சுற்றிக் கொண்டிருக்கும்.

மனிதனிலிருந்து மாறுபட்ட மிருக ஜெந்துக்கள் மற்றப் பிராணிகள் யாவையுமே
1.அதை எருவாக வைக்கும் பொழுது
2.தாவர வர்க்கங்கள் உரமாக ஈர்த்துச் செழித்து வளர்ந்திடும்.

ஆனால்… இம்மனித உடலைப் புதைத்தால் இம்மனித உடலைப் புதைத்த இடத்தில் அதன் சக்தி அங்கிருந்தால் இம்மனித உடலில் இருந்து “ஒரு புல் பூண்டும் வளர்ந்திடாது…!”

இம்மனித உடல் தாவர வர்க்கத்திற்கு எருவாக சக்தி தரும் பாக்கியமும் இம்மனித உடலுக்கில்லை…!

மற்ற ஜெந்துக்களும் இம்மனித உடலுக்கும் உள்ள வேறுபாடு இம்மனித உடல் “கடும் உப்பு நிலை” பெற்றது. இம்மனித உடலை உப்புக் கலந்த இரசாயன நிலைப்படுத்தி பல நாட்கள் ஆவி பிரிந்த உடலைப் பாதுகாப்பான நிலையில் வைத்திருக்கலாம்.

ஒன்றை அழித்து ஒன்று சக்தி பெறுகிறது. எதுவுமே அழிவதில்லை… வளரத்தான் செய்கிறது. இச்சூரியனின் சக்தியில் வந்த எவற்றையும் யாராலும் அழித்திட முடியாது.

வளர்ந்து கொண்டே உள்ள இவ்வுலகினில் இன்று நாம் ஆரம்பத்தில் உள்ள நிலையை… ஒரு சக்தியை அழித்ததினால் மற்ற சக்தி வளர்ந்து விட்டது. அந்நிலையை மாற்றி அச்சக்தியை அழித்துத்தான் முன் இருந்த சக்தியை வளரச் செய்ய வேண்டும்.

தாவர வர்க்கங்களை வளர்த்து மற்ற இனப்பெருக்கத்தை நாம் மாற்றி மாற்றி என்னும் பொழுது அழித்து மற்ற மிருக வர்க்கத்தை நாமே அதை உண்டு பல அணுக்களை வளரவிடாமல் மற்றப் பிராணிகள் இறந்த பிறகு அதன் உடலைத் தாவரங்களுக்கு எருவாக்கி தாவர நிலையை வளரச் செய்ய வேண்டும்.

மனித வர்க்கத்தின் பெருக்கத்திற்கும் எவ்வுடலையும் நாம் புதைக்காமல் மனிதன் இறந்த பிறகு அவ்வுடலை எரிக்கும் நிலைப்படுத்திட வேண்டும்.

செயற்கையின் ஆசையை மாற்றி வாழும் நிலையில்லை இன்று மனிதனுக்கு…! ஆகவே இவ்வுலக நிலையையே காத்து அதன் அழிவான மாற்றத்தைத் தாங்கும் சக்தி சித்தர்களாலும் ரிஷிகளாலும் முடியாத நிலையில் இன்றுள்ளது.

1.இச் செயற்கையை மனிதனின் நிலையிலிருந்து மாற்றிடவும் முடியாது…
2.இவ்வுலகத்தின் மாறும் தன்மையிலிருந்து
3.இவ்வுலக நிலையை மீட்டிடவும் முடியாத நிலையில் உள்ளது…!

காற்று மண்டலம் நஞ்சாக மாறியதன் காரணம் – ஈஸ்வரபட்டர்

காற்று மண்டலம் நஞ்சாக மாறியதன் காரணம் – ஈஸ்வரபட்டர்

 

செயற்கையின் பாவத்தினால் வந்த வினையான தாவரங்களின் நிலையின் குறைவினால் இன்று இவ்வுலக நிலையே மாறும் தன்மைக்கு வந்துள்ளது.

தாவரங்களின் நற்பயனை அறிந்து சுவையுள்ள காய் கனி வர்க்கங்களும் தானிய வர்க்கங்களும் நாம் பெற்று இயற்கையின் அமுதைப் புசித்திட்ட உன்னத கால நிலை மாறி இன்றைய மனிதனின் உணவில் தன் இனத்திலிருந்து மாறுபட்ட ஜென்மம் சென்ற மற்ற ஜெந்து வர்க்கங்களைச் சமைத்து உண்ணும் நாகரிக நிலைக்குத் தன்னையே அடிமைப்படுத்தி வாழ்கின்றான் இன்றைய மனிதன்.

இவ்வுலகம் ஒன்றின் சக்தியிலிருந்து ஒன்று சக்தி பெற்றுத்தான் வாழ்கிறது. ஒன்றை ஒன்று அழித்து ஒன்றின் சக்தியை ஒன்று பெற்றுத்தான் வாழும் சக்தியையே சக்தி நிலை நமக்கு அளித்துள்ளது.

அந்நிலையில் இதன் நிலையில் மட்டும் என்ன பாவம்…? என்பீர்.

மற்ற ஜெந்து வர்க்கங்கள் எப்படி உருவாகி வந்தன…? என்பதைத்தான் பாட நிலையில் உணர்த்தியுள்ளோம்.

இன்று இருக்கும் இவ்வுலக நிலையில்…
1.இவ்வுலகிலுள்ள பூமியிலுள்ள கனி வர்க்கங்களையும் தாவர வர்க்கங்களையும் நாம் சிதறவிட்டதனால்
2.(நாம் சிதறவிடவில்லை அதை எடுத்துப் பயன்படுத்தித்தான் கொண்டோம் என்பீர்)
3.நம் செயற்கையின் ஆசையினால் இவ்வுலகின் பொக்கிஷங்கள் குறைந்ததின் நிலையில்
4.மற்ற ஜெந்துக்கள் மனித வர்க்கம் முதற்கொண்டு அனைத்து ஜீவராசிகளும் மிகத் துரிதமாகப் பெருகியதன் நிலையில்
5.இம்மனிதனும் மற்ற ஜெந்துக்களும் இப்பூமியின் சக்தியை ஈர்த்து வாழ்வதினால்
6.இப்பூமியிலிருந்து மற்ற கனிவர்க்கங்கள் வளரும் நிலை குறைந்துவிட்டது.

இஜ்ஜீவ ஜெந்துக்கள் பெருகப் பெருக இன்னும் இவ்வுலக நிலையிலுள்ள சத்துத் தன்மை குறையும் நிலையில்தான் உள்ளது.

ஒரு ஜீவனை அழிப்பதினால் பல ஜீவன்கள் உற்பத்தியாகின்றன.

உங்கள் நினைவில் மண்ணில் புதைத்தால்தான் அவ்வுடலிலிருந்து பல உயிரணுக்கள் தோன்றுவதாக எண்ணுவீர். அப்படி அல்ல..!

1.மற்ற ஜீவ ஜெந்துக்களை நாம் சமைத்து உண்டு அதன் சக்தியைப் பெற்று
2.அதைக் கழிவாக வெளிப்படுத்தும் அக்கழிவில் இருந்தும்
3.எந்நிலைகொண்ட ஜீவ ஜெந்துவை உண்டு கழித்தோமோ அதன் நிலையிலிருந்து
4.அந்நரகமான அவ்வாடையிலிருந்து பல ஜீவ ஜெந்துக்கள் உயிர் பெறுகின்றன.

ஒன்றை அழித்துத்தான் ஒன்று சக்தி பெறுகின்றது. இஜ்ஜீவ ஜெந்துவின் பெருக்கத்திற்குக் காரணம்… ஆறறிவு படைத்த இம்மனிதனாலேதான் அனைத்துப் பெருக்கங்களும் வந்துள்ளன.

இன்று இவ்வுலகில் மனித இனத்தைக் (மக்கள் தொகையை) குறைக்கப் பார்க்கின்றான். ஒரு மனிதன் வாழும் காலத்தில் அவன் வாழ்க்கையில் அவன் எத்தனை குழந்தை பெறுகின்றானோ அவை தாம் அவனது பெருக்கம்.

ஆனால் இவ்வுடலை விட்டு அவனது ஆத்மா சென்ற பிறகு அவன் வாழ்ந்ததில் ஆசை வைத்து அவன் வாழ்ந்த காலத்தில் “அவன் பெற்ற இரத்தபந்தத்துடன் உள்ள குழந்தை வாழும் நாள் வரை…” அவனது ஆத்மா மறு ஜென்மத்திற்குச் செல்வதில்லை.

ஆனால் அவனின் உடலை அடக்கம் செய்த இடத்தில் அவன் உடலில் இருந்து பல உயிரணுக்கள் உயிர் பெற்று ஜென்மத்திற்கு வருகின்றன.
1.இம் மனிதனே மனித வர்க்கத்திற்கும் மிருக வர்க்கத்திற்கும்
2.மிருகத்திலிருந்து பல ஜெந்து வர்க்கங்களுக்கும் அடிகோலியாகின்றான்.

தாவர வர்க்கங்களின் உன்னத பொக்கிஷத்தைச் சிதற விட்டவனும் இவ்வாறறிவு என்னும் அறிவைப் பெற்ற ஆண்டவனின் அடிகோலிகள் என்று செப்பிடும் இம்மனிதனேதான்…!

இயற்கையின் சக்தியைச் செயற்கைக்காகச் செலவழித்த பாவத்தை மனிதர்கள் உணரும் நேரம் வந்து விட்டது – ஈஸ்வரபட்டர்

இயற்கையின் சக்தியைச் செயற்கைக்காகச் செலவழித்த பாவத்தை மனிதர்கள் உணரும் நேரம் வந்து விட்டது – ஈஸ்வரபட்டர்

 

நம் முன்னோர்கள்… ஆத்மா பிரிந்த உடலில் அவ் உடலிலிருந்து உற்பத்தியாகும் உயிரணுக்கள் தோன்றாத நிலைப்படுத்தி அவ்வுடலுடன் அவ்வுடல் கெடாத பக்குவ நிலைப்படுத்தி அடக்கம் செய்து வைத்தார்கள்.

இன்று இக்கலியில் மக்களின் தொகை பெருகுவதினால் அனைத்து ஆக்கச் சக்திகளும் அதிகரிக்கும் நிலைக்காக மக்களின் தொகையையே குறைக்கும் நிலையில் பல வழிகளைச் செய்கிறார்கள்.

மனிதனே மனிதனின் இன வர்க்கத்தை நிறுத்தப் பார்க்கின்றான் இன்று வாழும் மனிதன்.

ஆவி உலகில் பல மனித இன ஆவிகள் தன் எண்ணத்தை ஈடேற்றச் சுற்றிக் கொண்டே உள்ள நிலையில்தான்
1.இன்று பல இடங்களில் ஒரு தாய் ஒரு மகவு பெறும் நிலை மட்டும் இல்லாமல்
2.ஒரு தாய் ஒரே சூலில் பல மகவுகளை ஈனும் நிலையில்
3.மிருக வர்க்கத்தின் நிலைக்கு ஒப்ப வந்து பிறக்கின்றன.

பிறக்கும் மகவுகளைக் குறைக்க வழி காண்கின்றான் இக்கலியின் மனிதன். ஆனால் இறக்கும் உடலை எந்நிலையில் சிதற விடுகின்றான்…? இந்த நிலையைப் புரிந்து கொண்டால் பல நிலைகளில் இந்நிலையை மாற்றிடலாம்.

ஆவி உலகிலுள்ள ஆத்மாக்கள் மட்டும் பிறவி எடுத்தால் இன்றுள்ள மக்கள் தொகையுடன் கூடி வராதா…? என்பீர்..

ஆவி உலகிலுள்ள மனித ஆத்மாக்கள் எவையுமே உடனே பிறவி எடுக்கும் ஜென்ம ஆசையில் வந்து பிறப்பதில்லை. ஆவி உலகில் உள்ள ஆத்மாக்களுக்குத்தான் இவ்வுலகில் உடலுடன் வாழும் மனிதர்களின் நிலை புரிகின்றதே.

இப்புதிய புதிய உயிரணுக்கள் தோன்றும் நிலையை இம் மனிதன் மாற்றும் வழியை ஏற்படுத்தி வாழ்ந்தாலே…
1.மனிதனிலிருந்து மிருகம் மிருகத்திலிருந்து மற்ற ஜெந்துக்கள் இவற்றின் நிலையும் மாறி
2.சூரியனிலிருந்து வரும் சக்தியினால் தாவர வர்க்கங்கள் செழித்து வளரும் உன்னத நிலை பெறலாம்.

சூரியனிலிருந்து வரும் சக்தியில் குறைந்தோ அதிகப்பட்டோ வருவதில்லை. என்றும் ஒரே நிலைப்படித்தான் வந்து குவிகிறது.

இவ்வுலகினில் தோன்றிடும் உயிரணுக்களின் ஈர்ப்பு சக்தியின் துரிதத்தினால் (ஜீவன் பெற்ற உயிரணுக்களின் பெருக்கத்தினால்) தாவர வர்க்கங்களின் நிலை குறைந்து விட்டன.

இன்று தாவரங்களுக்குப் பல செயற்கை நிலை கொண்ட பக்குவம் (உரங்கள்) ஏற்றினாலும் முன் காலத்தில் உள்ளதின் சுவையும் மணமும் இன்றில்லை.

பூமியிலிருந்து வெளிப்படும் சக்தியையே மற்ற ஜீவன் பெற்ற உயிரணுக்கள் ஈர்த்து வாழ்கின்றன. இனப் பெருக்கம் ஆக ஆக இப்பெருக்கத்திலுள்ள ஜீவன்களுக்குத்தான் இப்பூமித்தாயும் நம் சூரியனும் தரும் சக்திகள் சரிப்படுகின்றன.

தாவர வர்க்கங்களின் நிலைக்கு அதன் ஈர்ப்புத் தன்மைக்கு உகந்த சத்துத் தன்மை குறைந்தே வருகிறது.

ஜீவன் பெற்ற உயிரணுக்களின் பெருக்கத்தின் சுவாசத்தினாலும் இன்று செயற்கையினால் வந்த வினை கொண்டு இக்காற்று மண்டலத்திலுள்ள சக்தியின் தன்மை குறைந்ததினாலும் இக்காற்றே கடும் விஷத்துடன் சுற்றிக் கொண்டுள்ளது. அதனால் தாவர வர்க்கங்கள் செழித்து வளரும் நிலையில்லை.

1.கலியான இம்மனிதன் தன் சக்தியின் சக்தியெல்லாம்
2.செயற்கையின் பேய்க்குப் பலியிட்டதின் பாவத்தை
3.உணரும் தன்மைக்கு வந்து விடுவான்… வந்து விட்டான்…!

இறந்த உடலைத் தகனம் செய்ய வேண்டும்… புதைக்கக் கூடாது – ஈஸ்வரபட்டர்

இறந்த உடலைத் தகனம் செய்ய வேண்டும்… புதைக்கக் கூடாது – ஈஸ்வரபட்டர்

 

ஒவ்வொரு பிறவியிலும் பல உயிரணுக்களின் நிலையுடன் வாழ்ந்த நாம் அவ்வுடலை விட்டு நம் ஆத்மா பிரிந்து செல்லும் பொழுது நம் ஆத்மாவுடன் கூடிய “சப்த அலையும்… சத்து நிலையும் தான்…” நம் உயிராத்மாவுடன் இஜ்ஜென்மத்திற்கு வரும் பொழுதும் வருகிறது

இக்காற்றினில் பல நிலைகொண்ட ஆவியான உயிரணுக்கள் சுற்றிக் கொண்டேதான் உள்ளன.

1.பிறவி எடுக்கும் ஆசையிலும்
2.தன் எண்ணத்தைச் செயலாக்கும் ஆசையிலும்
3.குடும்பத்தைக் காக்கும் பற்றுக் கொண்ட ஆசையிலும்
4.பழிவாங்கும் வெறி நிலை கொண்ட குரோதத் தன்மையிலும்
5.வாழும் காலத்தில் அகால மரணமடைந்து அவதியுறும் நிலையிலும்
6.பல நிலைகொண்ட ஆவியான உயிரணுக்கள் சுற்றிக் கொண்டே உள்ளன.

இவ்வுலகில் வாழ்ந்திடும் மனிதர்களைக் காட்டிலும் மற்ற ஜீவராசிகளைக் காட்டிலும் அதிக நிலையில் படர்ந்த நிலையில் பல உயிரணுக்கள் சுற்றிக் கொண்டே உள்ளன.

புதிய புதிய மனிதன் பிறக்கிறானா…? அப்படி என்றால் போன ஜென்மம் என்பதின் நிலையென்ன…? ஆதியில் வந்த உயிரணுக்கள்தான் நாம் எல்லாம் என்றால் ஆதி காலத்தில் மனிதர்களின் ஜனத்தொகை குறைவு…! இப்பொழுது அதிகமல்லவா…?

ஆவி உலகிலும் பல உயிரணுக்கள் சுற்றிக் கொண்டே உள்ளனவல்லவா என்று எண்ணுவீர்.

இவ்வுலகம் கல்கியில் தோன்றிக் கலியில் முடியும் காலத்தில் வந்த உயிரணுக்கள் மட்டும் அல்ல… இன்றுள்ள உயிரணுக்கள் மட்டும் இன்றுள்ள உயிரணுக்கள் எல்லாம்.

இவ்வுலகம் தோன்றிய நாள் கொண்டே வந்த உயிரணுக்கள்தான் எல்லாமே. படர்ந்துள்ள உயிரணுக்கள் எல்லாம் உலகம் மாறுபடும் நிலையிலும் இவ்வுலகுடனே சுற்றிக் கொண்டேதான் வருகின்றன.

புதிய புதிய உயிரணுக்கள் வளர்ந்து கொண்டேதான் உள்ளன. இப்பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் உஷ்ண அலைகளைக் கொண்டு பல கோடி உயிரணுக்கள் அன்றன்று வளர்ந்து கொண்டேதான் உள்ளன.

இம்மனித உயிரணுவில் இருந்து பல உயிரணுக்கள் உதித்து வெளிப்படுத்துகின்றன. ஒவ்வோர் உடலிலிருந்தும் அவ்வுடல் அழிந்து ஆத்மா பிரிந்து சென்ற பிறகும் பல உயிரணுக்கள் அவ்வுடலில் இருந்தே வளர்ச்சி பெற்று பல உயிரணுக்கள் உதிக்கின்றன.

ஆதியில் வாழ்ந்த மனித இனம் குறைவாயிருந்தாலும் அம்மனித இனத்தில் ஒவ்வோர் உடலும் அதன் ஆத்மா பிரிந்து சென்ற பிறகு அவ்வாத்மாவுக்குச் சொந்தமான ஆவி நிலையான சத்து நிலையும் சப்த அலையும் அதனுடன் சென்ற பிறகு இவ்வுடலை நாம் அடக்கம் செய்யும் நிலையில் இவ் உடலில் இருந்து பூமியில் இருந்து வெளிப்படும் உஷ்ண அலையின் ஈர்ப்பினால் அவ்வுடலில் இருந்து பல உயிரணுக்கள் உயிர் பெற்று புழுவான நிலையில் படர்ந்துள்ளன.

மனித உடலில் இருந்து உயிர் பெற்ற உயிரணுக்கள் அந்நிலைகொண்ட சக்தியையே தன்னுள் ஈர்த்து அதே நிலை கொண்ட சுவாசங்களைப் பெற்று மனிதக் கர்ப்பத்திற்கு வந்து மனிதனுடன் வந்து விடுகிறது.

ஒரு மனிதன் இறந்து விட்டால் அவ் ஒரே மனிதன் மட்டும் பிறவி எடுத்து வந்த நிலையல்ல இப்பொழுது உள்ள நிலை.

1.ஒவ்வொரு மனிதனும் அவன் இறந்த பிறகு
2.அவனிலிருந்து பல உயிரணுக்கள் மனிதனாகப் பிறவி எடுத்து
3.மனித இனமும் வளர்ந்து கொண்டே வருகிறது.

அதைப்போலத்தான் மற்ற ஜெந்துக்களின் உயிரணுவின் நிலையும்.

நம் முன்னோர்கள் இதன் நிலை அறிந்து தான் உடலை அடக்கம் செய்யும் நிலையிலிருந்து எரிக்கும் நிலையை ஏற்படுத்தினார்கள்.
1.உடலை எரிக்கும் பொழுது அவ்வுடலில் உள்ள ஆத்மா மட்டும்தான்
2.அதன் ஆவி நிலையான சத்து நிலையைத் தன்னுள் ஈர்த்துக் கொள்கிறது
3.உடலில் உள்ள நீர்ச் சத்துக்கள் அதை எரிக்கும் நிலையில் ஆவியாகி நீருடன் நீர் கலந்து விடுகிறது
4.தகனம் செய்த உடலிலிருந்து புதிதாக உயிரணுக்கள் தோன்றுவதில்லை.

இதன் உண்மையை அறிந்துதான் நம் முன்னோர்கள் உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகும் அவ்வுடலைப் பல நிலையில் பக்குவப்படுத்தும் வழி காட்டினார்கள்.

உயிரணுக்கள் பெருகும் நிலை புரிந்ததா…?