“போதும்” என்ற மனம் இல்லாது ஆசைகளைக் கூட்டுவதால் வரும் தீமைகள்

“போதும்” என்ற மனம் இல்லாது ஆசைகளைக் கூட்டுவதால் வரும் தீமைகள்

 

நமது உயிரணு பல கோடி உடல்களைப் பெற்று அவ்வுடல்களில் உள்ள தீமைகளை நீக்கி நீக்கி இன்று ஆறாவது அறிவு கொண்ட மனிதராக உருவாக்கியுள்ளது.

சூதாடுவது தீமை என்று தெரிகின்றது… ஆனாலும் சூதாடப் போகின்றோம். சூதாட்டத்தில், தோற்கத் தோற்க
1.விளையாட்டில் இழந்த பணத்தைப் பிடித்துவிடலாம் என்று
2.திரும்பத் திரும்ப விளையாடி எல்லாவற்றையும் இழந்து விடுகின்றோம்.

இதற்கு உதாரணமும் ஒன்றைக் குருநாதர் எமக்கு அனுபவப்பூர்வமாகக் காண்பித்தார்.

ஒரு பால் வியாபாரி அடிக்கடி எம்மை வந்து சந்திப்பார். யாம் குருநாதருடன் சேர்ந்து சுற்றிக் கொண்டிருக்கும் காலத்தில் அந்தப் பால் வியாபாரி எம்மிடம் வந்து “குருதேவரிடம் ஏதோ சக்தி இருக்கிறது…” என்று ஊரில் பெரும்பாலானவர்கள் பேசிக் கொள்கின்றார்கள்.

ஆகையினால் சற்குருதேவர் எனக்கு ஒரு ஆசீர்வாதம் கொடுத்தால் போதும் என்று யாம் தனித்து இருந்த நேரத்தில் வந்து கூறினார்.

“என்ன ஆசீர்வாதம் வேண்டும்…?” என்று பால் வியாபாரியிடம் கேட்டோம்.

அதற்குப் பால் வியாபாரி “நான் சீட்டு விளையாடியதில் என்னிடம் இருந்த எல்லா பணமும் போய்விட்டது, வேறு வழி இல்லை… இந்தச் சைக்கிளை வைத்து விளையாடலாம்…! என்று பார்க்கின்றேன்.

இதுவும் போய்விட்டதென்றால் பால் எடுத்து விற்பதற்கு வழி இல்லை. ஆகவே குருதேவரிடம் சொல்லி “நான் சீட்டு விளையாட்டில் ஜெயிப்பதற்கு ஆசீர்வாதம் வாங்கிக் கொடுங்கள்…!” என்று கூறினார்.

மறு நாள் குருநாதரின் அருகில் யாம் இருக்கும் பொழுது பால் வியாபாரி எம்மிடம் வந்து “அண்ணே… குருநாதரிடம் அந்த விபரம் கூறினார்களா…?” என்று கேட்டார்.

“பால் வியாபாரி கேட்டதை ஏன் என்னிடம் சொல்லவில்லை…?” என்று குருநாதர் எம்மைக் கேட்டுவிட்டு “நீ (பால் வியாபாரி) ஜெயித்து வா என்று ஆசீர்வாதம் கொடு…” எம்மை பார்த்து “அவனுக்கு ஆசீர்வாதம் கொடு…!” என்று கூறினார் குருநாதர்.

யாம் அவ்வாறே பால் வியாபாரியை ஆசீர்வாதித்த பின் அவர் சீட்டு விளையாடச் சென்றார்.

சீட்டு விளையாட்டில் பால் வியாபாரி ஒரே நாளில் 25,000 ரூபாய் சம்பாதித்தார். சீட்டு விளையாட்டில் 25,000 ரூபாய் சம்பாதித்து வந்தவுடனே, பால் வியாபாரி எமக்குப் புது வேஷ்டி புதுச் சட்டை பெட்ஷீட் வாங்கி வந்தார்.

குருநாதர் வெறும் கோவணத்துணிதான் கட்டியிருந்தார். எனவே அவருக்கு படுத்துக் கொள்ள பெட்ஷீட் இல்லையாம். அதனால் அவருக்கு ஒரு பெட்ஷீட் வாங்கி வந்திருந்தார் பால் வியாபாரி.

குருநாதர் அதை வாங்கித் தார்தாராகக் கிழித்தெறிந்தார்.

சீட்டு விளையாட்டில் ஓரே நாளில் 25,000 ரூபாய் சம்பாதித்ததும் பால் வியாபாரிக்கு “மேலும் ஆசை வந்துவிட்டது…” இன்னும் பத்து நாளைக்கு விளையாடினால் தான் பெரிய பங்களா… கார் வாங்கி விடலாம்” என்று திட்டமிட்டார்.

பால் வியாபாரி அன்று ரூபாய் 25,000 தான் சம்பாதிக்க முடிந்தது. அதையும் இங்கே கொண்டு வந்து செலவழிக்கின்றார். எங்களுக்குத் துணிமணியும் பெட்ஷீட்டும் வாங்கிக் கொடுத்துவிட்டு அவருடைய நண்பர்களுக்கெல்லாம் “நீ காபி சாப்பிடு… நீ காபி சாப்பிடு…” என்று கூறி, அதில் ரூபாய் 5,000 வரை செலவழித்தார்… 20,000 ரூபாய் மிச்சம்.

பால் வியாபாரி கொடுத்த பெட்ஷீட்டை, குருநாதர் கிழித்து எறிந்துவிட்டு
1.பால் வியாபாரியினுடைய ஆசை எதிலே போகின்றது…? ஜெயிக்க வேண்டும் என்று கேட்டான்.
2.அதைக் கொடுத்தபின் இவன் ஆசை எங்கே போகின்றது பார்
3.ஏதோ ஜெயித்துக் கொடுத்தால், இனிமேல் சீட்டு விளையாடப் போக மாட்டேன் என்று தானே கூறினான்.
4.இழந்த பணத்தைச் சம்பாதித்தான்… ஜெயித்த பணத்தை அனாவசியமாகச் செலவழிக்கின்றான்,
5.உனக்கும் எனக்கும் வேறு வாங்கிக் கொடுத்திருக்கின்றான்… நாளை எப்படி வருவான் பார்…? என்று கூறினார்.

மறு நாள் பால் வியாபாரி சீட்டு விளையாடி தன்னிடம் இருந்த சைக்கிளும் போய்விட்டது. பால் வியாபாரி எங்களிடம் வந்து “என்ன சாமி…? இப்படி ஆகிவிட்டது…!” என்று கேட்டார்.

முதலில் ஆசி கொடுத்து ஜெயித்த பின் அவரின் ஆசை சீட்டு விளையாட்டின் மீதுதான் போகின்றது.

இப்படி சமுதாயத்தில் மனிதர் சூதுகளில் ஆசையை வளர்த்துக் கொள்ளும் பொழுது “போதும்” எனும் மனம் வருவதில்லை. நம்முடைய தொழிலை முன்னேற்றி பொருளைச் சம்பாதிக்கலாம் என்ற நிலையும் இல்லை.

இப்படி சந்தர்ப்பங்கள் எப்படி வருகின்றது என்று அந்த இடத்தில் குருநாதர் காண்பித்தார்.

குருநாதர் சாதாரணமாக விடவில்லை.
1.ஒவ்வொரு நொடியிலும் மனிதரது உணர்வுகள் எப்படி இயங்குகின்றது…?
2.அதிலிருந்து நீ எப்படித் தப்புவது…? என்று அனுபவபூர்வமாக எமக்குக் காட்டினார்.

“நல்லது… கெட்டது…” பற்றிய உண்மை நிலை

“நல்லது… கெட்டது…” பற்றிய உண்மை நிலை

 

உதாரணமாக ஒருவர் தன் மகன் மீது பாசமாகப் பிரியமாக இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அவருடைய மகன் தீய பழக்க வழக்கங்களைக் கொண்டவனாக இருந்தாலும் அவன் மீது பாசம் வைத்திருந்ததால் அவன் எந்தத் தவறு செய்திருந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்.

அதே சமயத்தில் அவருடைய இரண்டாவது மகன் நல்லவனாக இருப்பான். தந்தையே தவறு செய்திருந்தாலும் தவறு என்ற வகையில் மகன் தந்தையை வெறுக்கும் பொழுது தந்தையும் அவன் மீது வெறுப்பைக் காட்டுவார்.

“இவன் அயோக்கியன்…!” நம்மையே குற்றம் சாட்டுகின்றானே இவன் மோசமானவன்… அப்பனையே எதிர்க்கிறான் பார்…! என்று தந்தை மகனையே வெறுக்கத் தொடங்கிவிடுவார். அவன் நல்லதையே செய்தாலும் “அவனைக் குற்றவாளி…” என்று தான் எண்ணுவார்.

ஆனால் முதல் மகன் தவறு செய்கின்றான். தவறு செய்தாலும் “மகனே நீ நல்லவன்டா…!” என்று அவனை ஆதரிப்பார்.

ஏனெனில் இந்த உணர்வுகள் இரண்டும் ஒன்றிக் கொள்ளும்.

மற்றவர்கள் முதல் மகன் செய்த தவறுகளைக் குற்றங்களாக அவன் தந்தையிடம் கூறினாலும் அவர் அதை ஏற்றுக் கொள்ளாமல் “இவன் இது போன்ற தவறுகளைச் செய்ய மாட்டான்… நல்லவன்…” என்று சொல்வார்.

ஆனால் இரண்டாவது மகனைப் பார்த்து “அயோக்கியன்… இவன் தவறு செய்வான்…” என்றுதான் கூறுவார்.

முதல் மகன் மீது பாசம் அதிகமாக இருப்பதால் அவன் செய்த தப்பை ஏற்றுக் கொண்டாலும் “தப்பு இல்லை” என்று தான் அவருக்குச் சொல்ல வரும்.

இது இயற்கையின் செயலாக்கங்கள்…!
1.நாம் எதை எண்ணுகின்றோமோ அதனின் உணர்வை நம்முடன் இணைக்கப்படும் பொழுது
2.அதே உணர்வின் தன்மை நமக்குள் செயல்படுகின்றது.

அதாவது… தம் பையனைக் கண் கொண்டு பார்த்து
1.அவன் தப்புச் செய்திருந்தாலும் கூட அவனை நல்லவன் என்று எண்ணும் பொழுது
2.அந்த உணர்வு கொண்டு அவருக்குள் படமாக்கி அவனை அவரிடத்தில் நல்லவனாக்குகின்றது.

இதைத்தான் கீதையிலே “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…” என்று உரைக்கப்பட்டது.

தந்தை செய்த தவறுகளையெல்லாம் முதல் மகனும் செய்து வருவான். இந்த நஞ்சின் உணர்வின் தன்மை அவருக்குள் வளரப்படும் பொழுது அது அவரிடத்தில் கடும் நோயாக விளைகின்றது.

ஆனால் அந்த சமயத்தில் தந்தைக்கு உதவ வேண்டிய முதல் மகனோ…
1.தந்தையால் நல்ல பிள்ளை என்று பாராட்டு பெற்றவன் கடும் நோயில் தவிக்கும் தந்தையைப் பார்த்து
2.“நீ செய்த செயல்களுக்கு நீ அனுபவிக்கின்றாய்… நான் என்ன செய்யட்டும்…?” என்று சொல்வான்.

நல்ல பிள்ளை என்று எவனைச் சொன்னாரோ அவனைப் பார்த்து “அடேய்… பாவி…!” என்று தந்தை தம் மகனைப் பார்த்துச் சொல்லும் நிலை பின் நாட்களில் வரும். இதை நாம் பார்க்கலாம்.

சில குடும்பங்களில் உணர்வின் இயக்கங்கள் இப்படி இருக்கின்றது…!

1.எந்த உணர்வுகளைக் காந்தம் (உயிரில் உள்ள காந்தமும் – உடல் அணுக்களின் காந்தமும்) கவர்ந்து தன்னிடத்தில் இணைக்கின்றதோ
2.அதனின் இயக்கமாகத்தான் அது இயக்கும்… வேறொன்றையும் இயக்காது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்றிடும் சக்தி பெற்று… வளர்த்துத் தான் இன்று மனிதனாக வந்துள்ளோம்

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்றிடும் சக்தி பெற்று… வளர்த்துத் தான் இன்று மனிதனாக வந்துள்ளோம்

 

இயற்கையின் நிலைகள் மாறுபட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில்… மனிதனாக உருப்பெற்ற பின் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிய துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நாம் நுகர்ந்து நமக்குள் அந்த உணர்வை வளர்த்துக் கொண்டால்… நாம் பிறவி இல்லா நிலை அடைய இது உதவும்.

1.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும்.
2.அந்த உணர்வினை நுகர்ந்து நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
3.துருவ மகரிஷியின் அருள் சக்தியை நாம் பெறுவதற்கு துருவ தியானம் இருந்து பழகுதல் வேண்டும்.

கஷ்டங்களையும் நஷ்டங்களையும் எப்போது பார்த்துணர்ந்தாலும் அடுத்த கணம் துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்தச் சக்தி எங்கள் ரத்த நாளங்களிலே கலக்க வேண்டும் என்று இதைக் கலந்து… கேட்டறிந்த தீமை வலுப் பெறாதபடி தடுத்துப் பழகுதல் வேண்டும்.

அதற்குத்தான் ஆத்ம சக்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம். அதை வைத்துத் தீமைகள் வளராது தடுத்தல் வேண்டும்.

ஏனென்றால்
1.பல கோடிச் சரீரங்களில் தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வை நாம் நுகர்ந்து நுகர்ந்து நுகர்ந்து
2.அதன் வழியில் தான் மனிதனாக வளர்ச்சி பெற்று வந்திருக்கின்றோம்.

மனித உடலிலிருந்து வெளிப்படும் மணம் கார்த்திகேயா என்றும்… தீமை என்று தெரிந்த பின் அந்தத் தீமை புகாது தடுக்கும் நிலை தான் சேனாதிபதி ஆறாவது அறிவு என்றும்… முருகன் பிரம்மாவைச் சிறை பிடித்தான் என்றும் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வருவது “நஞ்சினை வென்றிடும் சக்தி…? என்று அதை அறிகின்றோம் கார்த்திகேயா. அதை நமக்குள் நுகர்ந்து உருவாக்கினால் தீமை புகாது அதனை அடக்கி… “ஒளியின் சிகரமாக மாற்றும் சக்தி வரும்…”

மனிதனான பின் பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்றிடும் உணர்வைச் சேர்த்துச் சேர்த்து அதன் அறிவாக அறிந்திடும் அறிவைச் சேர்த்துச் சேர்த்து இன்று நாம் அனைத்தையும் அறிந்திடும் ஆற்றலைப் பெற்றிருக்கிறோம்.
1.அந்த ஆறாவது அறிவைத் தான் கார்த்திகேயா என்றும்
2.சேனாதிபதி என்றும் தீமைகள் புகாது பாதுகாக்கும் நிலை என்றும்
3.பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்றும் காட்டியுள்ளார்கள்.

இத்தகைய நிலைகள் வளர்ச்சி பெற்று அதிலே முழுமை அடைந்தவன் தான் துருவ மகரிஷி… துருவ நட்சத்திரமாக உள்ளார். அதனின்றி வெளிப்படும் உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.

அதை உங்களுக்குள் பதிவாக்கி நீங்கள் அதை எடுக்கும் நிலைக்குத் தான் உபதேசித்து வருகிறோம்.
1.அதன் உணர்வை நீங்கள் ஏங்கிப் பெற்று ஊழ்வினை என்ற வித்தாக வைத்து
2.அதை மீண்டும் நினைவு கொண்டு அருள் ஒளி என்ற உணர்வினைத் தனக்குள் வளர்த்துப் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

அது உங்கள் எண்ணத்தில் தான் இருக்கின்றதே தவிர… யாரோ வந்து அந்தப் பிறவி இல்லாத நிலை நம்மை அடையச் செய்வார் என்று எண்ணுதல் வேண்டாம்.

மனிதனின் முடிவு எங்கே போகின்றது…? சற்று சிந்தியுங்கள்…!

மனிதனின் முடிவு எங்கே போகின்றது…? சற்று சிந்தியுங்கள்…!

 

உதாரணமாக நாம் கண் கொண்டு பார்க்கும் பொழுது பையன் தவறு செய்கின்றான் என்று நாம் நுகர்கின்றோம்.

நமது உடலிலுள்ள நல்ல குணங்களுக்கும்… அவன் செய்யும் தவறான குணங்களுக்கும் எதிர்மாறான நிலைகளாக இருக்கப்படும் போது…
1.உயிரிலே பட்டபின் அவனுடைய உணர்ச்சிகள் “அவன் தவறு செய்கின்றான்…” என்று உணர்த்துகின்றது.
2.உணர்த்தியவுடனே நாம் அறிகின்றோம்.

அறிந்தவுடன் அதை நிறுத்திவிட்டு அவன் ஏன் செய்கின்றான்…? என்று சிந்தனை செய்து அவனை நல்வழிப்படுத்த வேண்டும். அதை விடுத்து நாம் வேதனைப்பட்டால் வேதனை என்பது விஷம். நாம் சிந்திக்கும் தன்மையை இழக்கின்றோம்.

சிந்திக்கும் தன்மை இழக்கப்பட்டால் கோபமென்ற உணர்ச்சியின் வேகம் கூடுகின்றது. அப்பொழுது சிந்தனையற்ற நிலைகளில் அதீதமான உணர்வுகளை நாம் சேர்க்கும் பொழுது… இந்த உணர்ச்சிகள் எல்லாம் நம் உடலில் கலக்கப்படுகின்றது.

அப்படிக் கலக்கப்படும் உணர்வுகள் நம் இரத்தங்களில் கலந்த பின் உடலில் உள்ள நல்ல அணுக்கள் அதை ஏற்க மறுத்தால் நாம் சோர்வடைந்து விடுகின்றோம்.

இப்படிப் பண்ணுகின்றானே என்ன பண்ணுவது…? என்று வேதனையில் வெறுப்பான பின் நம் உடலிலுள்ள நல்ல அணுக்கள் எல்லாம் சோர்வடைந்து… நாமும் சோர்வடைகின்றோம்.
1.செய்வதறியாது மயக்கப்படுவோரும் உண்டு.
2.சமாளிக்க முடியாத நிலையில் பதட்டமும் பயமும் நடுக்கமும் ஏற்படும்… அவனை எண்ணினாலே மயக்கம் வரும்.
3.நம் பக்கத்து வீட்டில் யாராவது இடைஞ்சல் செய்தாலும் மயக்கம் வரும்.

ரோட்டிலே அல்லது பக்கத்து வீட்டிலே ஒருத்தருக்கொருத்தர் சண்டை போடுவதைப் பார்த்தாலே நம் வீட்டிலும் சண்டை வரும். இவைகளெல்லாம் நம்மை அறியாது இயக்கக்கூடியது.

தவறு செய்யும் உணர்வுகள் பையன் உடலிலே “ரிக்…” அவன் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் வெளிப்படுவது “சாம…” இசை.

நமது உடல் ரிக்… அவன் மேல் அன்பு கொண்டு பரிவு கொண்ட நாம் பேசும் பொழுது நம்முடைய நல்ல எண்ணங்கள் வெளிப்படும்போது சாம… இசை.

பாலில் பாதாமைப் போட்டால் பாலிற்கு நல்ல சத்து இருக்கிறது. அதில் ஒரு துளி விஷம் பட்டால் அதற்குச் சக்தியிருக்கிறதா…? நம்மை மயக்கத்தான் செய்கிறது. பாதாமின் வலு இழந்து விடுகின்றது.

1.பையன் தவறு செய்கின்றான் என்ற உணர்வை நுகர்ந்தோமென்றால் அதைக் குறைத்துப் பழக வேண்டும்.
2.இல்லையென்றால் அவன் செய்த தவறான உணர்வுகள் நமக்குள் வந்து எதிர் நிலையாகி
3.நமது நல்ல குணத்தை அடக்கிவிடுகின்றது…!

இதற்குப் பெயர் “அதர்வண…”

அவன் இப்படிச் செய்கின்றானே, என்ற உணர்வின் தன்மையை வளர்க்க வளர்க்க “யஜூர்…” ஓர் வித்தாகின்றது. அதனை எண்ணும் பொழுது வேதனைப்படும் உணர்வுகள் நம் உடலில் வித்தாகின்றது.

அவன் இளையவன்… நாம் மூத்தவர்கள்…! “அவன் இப்படிப் பண்ணுகிறானே…” என்ற உணர்வுகளை வளர்த்து நம் உடலில் கலந்து விட்டால் நம் உடலில் இரத்தக் கொதிப்பு வரும்.

நாம் எதாவது எண்ணினால் இப்படியாகி விட்டதே…! என்ற வேதனை இரண்டும் கலந்து வரும்.
1.சிறு மூளை பாகம் செல்லக்கூடிய இடங்களில் இரத்த அழுத்தம் அதிகமாகி விட்டால்
2.அந்த நரம்பு மண்டலம் வெடித்துவிடும்.

யாரை நினைத்து இந்த ஆன்மா வெளியில் செல்கின்றதோ அவர் உடலுக்குள் சென்றுவிடுகிறது.

நாம் குழந்தையைக் காக்க வேண்டும் என்று நினைத்தோம்.
1.அவனாலே வேதனையை அதிகமாகச் சேர்த்தோம்.
2.இறந்தபின் அவன் உடலுக்குள்ளே போய் இதே வேதனை என்ற உணர்வை உருவாக்கும்.

மான் சாந்தமானது… புலி துரத்தும் பொழுது அதே நினைவாகின்றது. துரத்தும் நேரத்தில் அந்த உணர்வுகள் அதிகமாகின்றது. அது இறந்தால் புலியின் ஈர்ப்பிற்குள் வந்து இந்த உணர்வை நுகர்ந்ததனால் புலியாக மாறுகின்றது.

பரிணாம வளர்ச்சியில் புலிக்குண்டான குணம்… அது மற்றொன்றை வேதனைப்படுத்திக் கொன்று சாப்பிடும்.

இதைப் போன்ற உணர்வை வளர்த்துக் கொண்ட தந்தை… உடலை விட்டுச் சென்றபின் மகன் உடலுக்குள் சென்று அங்கிருக்கும் நல்ல குணங்களை எல்லாம் சாப்பிட ஆரம்பித்துவிடும்.

பையனைக் காக்க வேண்டும் என்று எண்ணினாலும்
1.இந்த உணர்வுகள் அதை பலவீனப்படுத்தி அதையே வளர்க்கும்.
2.அவனுக்கும் கோபம் வரவைக்கும்.
3.இதைப் போல அதன் உணர்வுகள் தவறாகப் போக வைக்கும்.
4.தேடி வைத்த செல்வத்தை அவன் பாதுகாக்க முடியாமல் போய்விடும்.
5.கடைசியில் அவனும் இதே கதியில் மடிவான்.

அதே சமயத்தில் இவர் ஆன்மாவும் உடலை விட்டு வந்தபின் எதன் உணர்வுகள் அணுக்களாக மாறியதோ அந்த உடலை விட்டு வெளி வந்தபின் புலி மேய்ந்து கொண்டிருந்தால் அதன் உணர்வின் வலுக் கொண்டு ஈர்த்துவிடும்.

அந்த உடலுக்குள் அதே உணர்ச்சிக்குத்தக்க அதனுடைய கருவாகி மனிதன் ரூபத்தைப் புலியாக மாற்றிவிடும். நாம் தவறு செய்யவில்லை.

இதே போன்று… அவரைப் பற்றி வீட்டில் அடிக்கடி பேசினால் “பரம்பரை நோய்…” என்று வரும். இரத்தக் கொதிப்பு வந்ததென்றால் மற்றவர்களுக்கும் இதே போல் வரும்.

அவர் இரத்தக் கொதிப்பில் இறந்தார். அதே போல அந்தக் குடும்பத்தில் பரம்பரை நோயாக மாறும்.
1.அந்தக் குடும்பத்தில் எப்பொழுது பார்த்தாலும்
2.யாராவது ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள்.

இப்படிச் சண்டை போட்டுக் கொண்டிருப்பது குடும்பத்தில் தாய் கருவுற்றிருந்தால் கருவில் வளரும் சிசுவுக்கும் அந்த உணர்வுகள் விளையும்.

ஆக… மனிதனின் முடிவு எங்கு போகின்றது…? சற்று சிந்தியுங்கள்.

ஒரு குடும்பத்தில் இப்படி ஏற்பட்டால் அடுத்து அந்தக் குடும்ப வரிசையிலும் இதே போன்று பரம்பரை நோயாக மாறும்.
1.ஆஸ்துமா நோய் போன்ற நோய்களும் இதைப் போன்று நாம் எடுத்துக் கொண்ட நிலைகளால் வருவதுதான்.
2.வாத நோய் வருவதும் இதைப் போன்று தான்.

எத்தனையோ கோடி சரீரங்களைக் கடந்து வந்த நம் அம்மா அப்பா மனிதர்களாகப் பிறந்து நம்மை மனிதனாக உருவாக்கினாலும் சந்தர்ப்பத்தால் நாம் மனிதனல்லாத உருவுக்குத்தான் நாம் திரும்பிச் செல்கின்றோம்.

வளர்த்துக் கொண்ட உணர்வுகள் எப்படியோ… அதற்குத்தக்கத்தான் மற்ற உடல்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்த உயிர்.

இதைப் போன்ற நிலைகளை மாற்றத்தான்
1.அடிக்கடி யாம் உங்களை ஆத்ம சுத்தி செய்யச் சொல்வது.
2.தீமை வரும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
3.அந்த அருள் சக்திகளை உயிரின் வழியாக நுகர்ந்து
4.உடலுக்குள் உள்ள எல்லா அணுக்களுக்கும் பாய்ச்சி உடனுக்குடன் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
5.நாம் நுகரும் உணர்வுகள் நோயாக உருவாகாதபடி “அந்தக் கணமே…” மாற்றி அமைக்க வேண்டும்.

நாம் பிறரைப் பார்த்து அங்கலாய்ப்பதால் வரும் தீமைகள்

நாம் பிறரைப் பார்த்து அங்கலாய்ப்பதால் வரும் தீமைகள்

 

கோபப்படுவோரின் உணர்வை சுவாசித்தால் நம்மிடத்தில் அது “காளி” ஆகின்றது. அதிகமானால் இரத்தக் கொதிப்பாகின்றது.

இரத்தக் கொதிப்பு வந்துவிட்டால் மனிதரின் கை கால் அங்கங்கள் சுருங்குகின்றன… கோபத்தின் தணலும் அதிகமாகின்றது. இதைப் போன்ற உணர்வுகள் வரப்படும் பொழுது உடலுக்குள் அணுக்களாகி… வேதனையின் உணர்வுகளே அதிகமாகும்.

ஆகையால்
1.யாரைப் பார்த்தாலும் கோபிக்கும் தன்மையும்
2.தான் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் உணர்ச்சி வசப்பட்டு அழுவதும்
3.அவர்களைக் கோபிப்பதுமான உணர்வுகளைத் தூண்டிவிடும்.

இவர் யார் மீது அதிகப் பற்று கொண்டு பார்க்கின்றாரோ அல்லது இவர் மீது யார் பற்று கொண்டு பார்க்கின்றனரோ அவருடைய உணர்வுகளில் இது பதிவாகி அந்த உணர்வின் தன்மை அதிகமாகி விட்டால் இவருடைய உயிரான்மா அவருடைய உடலுக்குள் செல்கின்றது.

பின்… உடலில் இருந்த பொழுது தனக்குள் விளைய வைத்த உணர்வுகளை அவரிடத்திலும் உருவாக்குகின்றது.

இவருடைய உடலில் அதை உருவாக்கி அதே உணர்வினைத் தனது உணவாக ஈர்க்கின்றது. இவருடைய உடலில் இந்த ஆன்மா புகுந்து விட்டதால்
1.இவருக்கும் கோபம் அடிக்கடி வரும்
2.ஏன் கோபம் வருகிறது…? என்றே இவருக்குத் தெரியாது.
3.பின் இவருடைய உடலையும் வீழ்த்திவிட்டு வெளியே சென்றபின் மனிதனல்லாத பிறவியைத்தான் அடைகின்றது.

இதில் எத்தகைய உணர்வின் வலுவைச் சேர்த்துக் கொண்டதோ… பரிணாம வளர்ச்சியில் வந்த பொழுது எந்தெந்த குணங்கள் கொண்ட உடலின் உருவங்கள் பெற்றதோ… அதற்குத்தக்க உருவத்திற்கு உயிர் அழைத்துச் சென்று… எங்கே அதனின் உணர்வின் வலு இருக்கின்றதோ அங்கே அழைத்துச் செல்கின்றது.

உதாரணமாக இன்று விஞ்ஞான அறிவு கொண்டு, ஒரு TV நிலையத்தில் ஒரு அலைவரிசையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பப்படும் பொழுது மறுமுனையில் அதே அலைவரிசையில் நமது TV.யைத் திருப்பி வைக்கப்படும் பொழுது அந்த நிகழ்ச்சிகளைக் காண்கின்றோம்.

இதைப் போன்று
1.நமக்குள் எவருடைய உணர்வுகளைப் பதிவாக்கிக் கொள்கின்றோமோ அதனின் உணர்வுகள் உந்தப்படும் பொழுது
2.அதே நினைவின் உணர்வுகளை நாம் சுவாசித்து அதன் வழிகளில் பெருக்கப்படும் பொழுது
3.இந்த உடலை விட்டுச் சென்றபின் அவருடைய உடலுக்குள் நாம் புகுந்து கொள்கின்றோம்.

இயற்கையின் நியதிகளைத் தெளிவாகக் கூறுகின்றது நமது சாஸ்திரங்கள்.

ஒருவர் தொழிலில் முன்னேற்றமடைந்து அவருடைய மகிழ்ச்சியின் நிலைகளைப் பார்த்து… நாம் தமது தொழில் முன்னேற்றம் அடையவில்லை என்று சோர்வடைந்து அங்கலாய்த்துக் கொள்கிறோம்.
1.பார்…! நான் இத்தனை தொழில் செய்கின்றேன் எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.
2.ஆனால் ஆண்டவன் அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான்…! என்று
3.அவர்பால் உயர்வைக் காட்டி தன்பால் அங்கலாய்த்துக் கொள்ளப்படும் பொழுது… “அந்த எண்ணம்”
4.நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்கு உணவு கொடுப்பதில்லை… நல்லதை வளர்க்கும் சக்தியை இழக்கின்றது.

அங்காளேஸ்வரி என்ன செய்கின்றது…? தன் குழந்தையையே பிளக்கின்றது. குடலை உருவுகின்றது. அதனுடைய வாழ்க்கையை அழிக்கின்றது.

இதைப் போன்றுதான் நாம் வேதனையை நுகர்வதனால் நமது உடலினுள் நம்மை மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களை நாம் பிளந்து விடுகின்றோம்.

இதைத் தான் அவ்வாறு உருவமாகக் காட்டினார்கள் ஞானிகள். அதாவது,,,
1.அருவ நிலையில் செயல்படுவதை உருவமாகக் காண்பித்து
2.அங்கே மடி மீது குழந்தையை வைத்துக் குடலை உருவுவதாகக் காண்பித்துள்ளார்கள் ஞானிகள்.

யாரையோ பார்த்து அங்கலாய்த்து அதனின் உணர்வின் சக்தியை நமக்குள் அதிகரிக்கப்படும் பொழுது… நமக்குள் வளர்ந்து வரும் நல்ல குழந்தைகளுக்கு உணவு கொடுக்காது அதாவது… “நம்மிடத்தில் உள்ள நல்ல அணுக்களைப் பிளந்து விடுகின்றது…” என்பதனைத் தெளிவாகக் காண்பித்தார்கள் ஞானியர்கள்.

ஆனால் நாம் இப்பொழுது என்ன செய்கிறோம்…?

அங்காளேஸ்வரிக்கு ஆட்டையும் கோழியும் கொடுத்தால் அவள் நம்மைக் காப்பாற்றுவாள் என்று நமது நல்ல குணங்களைக் கொன்றிடும் நிலையாக அவளுக்கு இன்னொரு ஜீவனைப் பலி கொடுக்கின்றோம்.

பலி கொடுத்தால் அவள் நமக்குச் செய்வாள் என்று அந்த அகங்கார உணர்வுகளை எடுத்துப் பலியிட்டு அதன் உணர்வினை நுகர்ந்து விட்டால் இந்த உணர்வின் தன்மையே நமது உடலில் விளைகின்றது.

பின்… எதிலும் நம் காரியம் சித்தி ஆகவில்லை என்றால் என்ன செய்கிறோம்…?

தன் சொந்தமோ நண்பர்களோ அவர்களுடைய உயர்வின் தன்மையைக் கண்டு அங்கலாய்ப்பதும்… வெறி கொண்ட உணர்வுகளைப் பெறுவதும்… ஆக இந்த உணர்வின் தன்மையினைக் கொண்டு வரப்படும் பொழுது…
1.எவர் மேல் இந்த உணர்வின் சக்தி கொண்டாரோ அவருடைய உடலுக்குள்
2.இவர் இறந்தபின்… இவருடைய உயிரான்மா புகுந்து கொள்ளும்.

அதாவது… இந்த ஆன்மா வெளி வந்தபின் “தன் மேல் வெறுப்பு கொண்டோர் உணர்விலேயோ… அல்லது இவர் மேல் பாசம் கொண்டோர் உடல்களிலோ…” இது ஈர்க்கப்படுகின்றது.

நோய்வாய்ப்பட்டு இவர்கள் மரணமடையப்படும் பொழுது… அவர் நண்பர்கள் உற்றுப் பார்த்து இதைக் கேட்டறிந்தால் இதே உணர்வுகள் கொண்டு அந்த ஆன்மா அங்கே “அங்காளேஸ்வரி போன்று…” காட்சி தரும்.

அந்த உணர்வின் தன்மை இங்கே பயமுறுத்தும். நல்லதை எண்ண முடியாதபடி “ஐயோ என்னை விரட்டுகின்றது… ஏதோ என்னைத் துரத்துகின்றது…” என்ற நிலை வரும்.

வாழ்க்கையில் வெறுப்படைந்தோர் உணர்வுகள் அதிகரித்து விட்டால் அவர் உடலுக்குள் சென்றால் இப்படித் தான் செய்யும்.

எதனின் உணர்வை இதற்குள் வளர்த்துக் கொண்டதோ அதன் ரூபமாகக் காட்சி கொடுத்து
1.“இது வருகிறது” என்றும்
2.சோர்வடையும் நேரங்கள் எல்லாம் “என்னைத் துரத்துகின்றது தூங்க விடுவதில்லை…” என்றும் சொல்வார்கள்.

அது மட்டுமல்ல…!
1.எந்தச் சிலையைப் பார்த்து அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்துக் கொண்டதோ
2.இன்னொரு உடலுக்குள் சென்றபின் “எனக்கு ஏன் ஆடு கொடுக்கவில்லை…?
3.எனக்குக் கொடுத்தது ஏன் சரியாகக் கொடுக்கவில்லை…” என்றும்
4.இந்த உணர்வு கொண்டு அந்த உடலிலே இயங்குகின்றது.
5.அசுர உணர்வின் செயல்களையே அங்கே செயல்படுத்தும்.

ஆகவே இந்த உணர்வுகள் சிறுகச் சிறுக அந்த உடலில் வளர்ந்து அந்த உடலில் இருக்கும் நல்ல அணுக்களைக் கொன்று புசித்துக் கொண்டேயிருக்கும்.

இவ்வழியில்தான் மரணங்கள் நேரிடுகின்றது. இதை எல்லாம் மாற்றியமைக்க என்ன செய்ய வேண்டும்…?

எத்தனையோ கோடிச் சரீரங்களில் பலவற்றிற்கு இரையாகி அதிலிருந்து மீண்டிடும் உணர்வை வளர்த்து மனிதனாக உருவாகி… பகைமை உணர்வுகள் இருந்தாலும் அதை அடக்கிப் பகைமையற்ற நிலையாக மாற்றி… உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி அதன் செயலாக்கமாக…
1.தமது ஆறாவது அறிவைப் பயன்படுத்திய அனைவருமே இன்று சப்தரிஷி மண்டலங்களாகவும்
2.துருவ நட்சத்திரமாகவும் வாழ்ந்து வளர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எடுத்து
4.நம்மிடத்தில் உள்ள பகைமை உணர்வுகளையும் வெறுப்பான உணர்வுகளையும் மாய்த்துப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம்முள் வளர்த்து உடலில் உள்ள அணுக்களில் அதை விளையச் செய்து… சப்தரிஷி மண்டலங்களின் அருள் வட்டத்தில் இணைந்திடும் உணர்வாக வாழ்ந்திடல் வேண்டும்

அவ்வாறு வாழ்ந்து வரும் அனைவரும் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் சக்தியையும் மலரைப் போன்ற மணத்தையும் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தியையும் பெறுவதற்கு எமது அருளாசிகள்.

நாம் ரிஷியின் தன்மை பெற வேண்டும்

நாம் ரிஷியின் தன்மை பெற வேண்டும்

 

ஒருவன் என்னைப் பழித்துப் பேசி விட்டான் என்றால்… பதிலுக்கு “அவனை நான் அழித்து விடுவேன்…” என்ற அசுர உணர்வுகள் நமக்குள் தோன்றுகிறது.

ஆனால் அவனை அழித்து விடுவேன் என்று எண்ணும் போது
1.உயிரான நிலைகளில் இங்கே பழித்து… அழிக்கும் சக்தியை நமக்குள் வளர்த்து
2.அவனை நாம் “நீ தொலைந்து போவாய்…” என்று சொல்லும் பொழுது
3.முதலில் அந்தத் தொலையக்கூடிய உணர்வு நமக்குள் வந்து விடுகின்றது.
4.இந்த உணர்வை அவன் கேட்டறிந்த பின் அவனையும் தொலைக்கிறது.

அதற்குப் பின்… இப்படிச் சொன்னானே இப்படிச் சொன்னானே என்று எண்ணும் பொழுது அது நம் உடலுக்குள் நோயாக மாறுகிறது. அதே போல் இப்படிச் சொன்னானே… அவன் உருப்படுவானா…? இப்படிச் சொன்னானே… அவன் உருப்படுவானா…? என்று அங்கேயும் விளைகிறது. அந்த வித்தாக ஊன்றப்படுகின்றது.

இதைத் தடைப்படுத்துவது தான் நரசிம்மா…! நரசிம்ம அவதாரம். நரசிம்மன் என்ன செய்கின்றான்…? வாசல்படியில் வைத்துக் கொல்கின்றான். நாராயணன் நரசிம்ம ரூபம் எடுத்து வாசல்படியில் வைத்துப் பிளக்கின்றான்.

1.நமக்கு வாசல்படி எது…? மூஷிகவாகனா… நாம் சுவாசிக்கும் வழி.
2.ஒரு கெட்டதைப் பார்த்தால் அது தனக்குள் வராதபடி அதைத் தடைப்படுத்துவதற்குப் பழக வேண்டும்.
3.அந்தத் திறன் நமக்குள் பிறக்க வேண்டும்.

அந்த திறன் பிறக்க வேண்டுமென்றால் அதற்கு எது வேண்டும்…?

அந்த மகரிஷிகள் ஞானிகள் உணர்வை நாம் எடுத்து அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று நம் உடலில் இருக்கக்கூடிய எல்லா உறுப்புகளிலும்… அதை உருவாக்கிய அணுக்களிலும்… அந்தச் சக்தியை இணைக்க வேண்டும்.

இந்த உணர்வின் “மணம்…” வரப்படும் பொழுது கெட்டது வந்தால் பிளக்கும்.

பன்றி எப்படிச் சாக்கடையைப் பிளந்து அதற்குள் நல்லதை எடுக்கின்றதோ அதைப் போன்று நரசிம்ம அவதாரம்…!
1.நம் சுவாசத்திற்குள் வரக்கூடிய எதுவாக இருந்தாலும் அதைப் பிளந்து விட்டு
2.மெய் ஒளியின் தன்மை நமக்குள் சேர்த்து “உயிருடன் ஒன்றிய ஒளியாகச் செல்வதுதான் கடைசி கல்கி…”

இயற்கையில்… ஒரு பொருளின் தன்மை தனக்குள் இணைக்கும் சந்தர்ப்பம் பிரம்மா… சிருஷ்டி. உலகிலேயே மனிதனின் ஆறாவது அறிவுக்குள் சிருஷ்டிக்கும் எண்ணங்கள் உண்டு. ஒவ்வொன்றையும் படைக்கும் சக்தி பெற்றவன் தான் மனிதன்.

மனிதனுக்கு ஜாதகம் இல்லை ஜோதிடம் இல்லை…! நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் சக்தின் நமக்குள் சிருஷ்டித்து அந்த உணர்வின் பாதையிலேயே தான் நாம் நடக்கின்றோம்.

அந்த ஞானிகள் சொன்ன மெய் உணர்வை நமக்குள் எடுத்து அதைச் சிருஷ்டிக்க வேண்டும் ரிஷி. ஆறாவது அறிவின் தன்மை… “ஏழாவது சப்தரிஷி…”

நாதங்கள் கொண்டு உணர்வின் தன்மை பாய்ச்சப்படும் பொழுது அந்த உணர்வுகள் அங்கே இயக்குகின்றது. அது தான் சப்தரிஷி என்பது. ஏழாவது அறிவு கொண்டு உணர்வினை ஒளியாக மாற்றி என்றும் விண்ணில் இருக்கக்கூடிய நிலைகளைத் தான் சப்தரிஷி மண்டலம் என்று சொல்வது.

1,மனிதனுக்குள் விளைந்த உணர்வுகளை உயிருடன் ஒன்றச் செய்து ஒளியாக மாற்றி
2.என்றும் நிலையான ஒளிச் சரீரம் பெறும் நிலை தான் அது.
3.அந்த ரிஷியின் தன்மையை நாம் பெற வேண்டும்
4.அதைப் பெறுவதற்கு நாம் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை உடலுக்குள் சிருஷ்டிக்க வேண்டும்.

“கொடுக்கல் வாங்கலில்…” கௌரவ உணர்வால் வரும் தீமைகள்

“கொடுக்கல் வாங்கலில்…” கௌரவ உணர்வால் வரும் தீமைகள்

 

நமது கண் காது மூக்கு வாய் உடல் இதைத்தான் பஞ்ச பாண்டவர்கள் என்றார்கள். “நமது கௌரவம் குறைந்து விடுமே…” என்ற உணர்வு வரப்படும் பொழுது கௌரவர்களுக்கும் பஞ்ச பாண்டவர்களுக்கும் போராகின்றது.

பஞ்ச பாண்டவர்கள்தான் நம்மை ஆளக்கூடியவர்கள் என்றாலும், இந்த உணர்வின் தன்மை கொண்டு நம்மை ஆட்சி புரிவது கௌரவர்கள்.

ஒருவர் நம்மை தரக்குறைவாகப் பேசி அதைக் காதால் நாம் கேட்கப்படும் பொழுது நமக்குள் உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

அப்போது கௌரவப் பிரச்சினை வந்து
1.“இப்படி நம்மைச் சொல்லிவிட்டானே…!” என்று நமது கௌரவம் குறைந்ததாக எண்ணி வேதனைப்படுகின்றோம்
2.வேதனை என்ற நிலைகள் வரப்படும் பொழுது விஷத்தன்மைகள் நமக்குள் வருகின்றன.

நமது கண் காது மூக்கு வாய் உடல் இவை ஆட்சி புரிந்தாலும் ‘கௌரவப் பிரச்சினை…” என்று வரப்படும் பொழுது கௌரவர்களுக்கும் பஞ்ச பாண்டவர்களுக்கும் போராகிறது என்பதைக் காவியத் தொகுப்புகள் தெளிவாகக் கூறுகின்றன.

நமக்குப் பணம் தர வேண்டியவர் அதைத் தரவில்லை என்று ஒரு பக்கம் வேதனை நாம் தருகிறோம் என்று கூறியவருக்குத் தரவில்லை என்றால் “கௌரவம் போய்விடுமே…” என்று ஒரு பக்கம் வேதனை.
1.நமக்குத் தர வேண்டியவன் தருகிறேன் என்று சொல்லித் தரவில்லையே என்று கோபமும்
2.”ஏமாற்றிவிட்டானே…” என்ற வேதனையும் சேர்ந்து எலிப்பொறியில் சிக்கியது போன்று ஆகி விடுகின்றது.
3.இதனின் வேதனைகளாகும் பொழுது அது நமக்குள் நரகாசுரனாக உருப்பெறுகின்றது.

அதே சமயத்தில் மனிதன் ஒருவன் மற்றொருவனை எண்ணி “அவன் நமக்கு நன்மை செய்தான்…” என்று எண்ணினால் அவனுக்கு விக்கல் ஏற்படுகின்றது.

“அவன் நமக்குத் தீமைகள் செய்தான்” என்று எண்ணினால் அவனுக்கு புரை ஏற்படுகிறது.

அதைப் போன்று நாம் நமக்குத் தர வேண்டியவனிடம் “எனக்குப் பணம் தராமல் இருந்து விட்டாயே…!” என்று உற்று நோக்கும் பொழுது அவனிடத்தில் இதனின் உணர்வுகள் பதிவாகி நல்ல குணங்கள் செயலற்றதாக மாறுகின்றது.
1.அவனிடத்தில் இனம் புரியாத பதட்டம் வரும்… அவருடைய வியாபாரம் குறையும்.
2.அவர் சீராக இயங்கும் தன்மையும் குறையும்.

அவரும் எண்ணுவார்… “அவருக்குக் கொடுக்க வேண்டுமே சரியான காலத்தில் அவருக்குக் கொடுக்கவில்லையே…” என்று நம்மை எண்ணி எண்ணி வேதனைப்படுவார்.

வேதனையின் உணர்வுகள் அவரிடத்தில் விளைகின்றது. கொடுக்க முடியாத நிலையில் அவருடைய வேதனை அதிகரிக்கும் பொழுது நம்மைப் பற்றிய நினைவு அவரிடத்தில் அதிகரிக்கின்றது.

இப்படி நம்மால் அவர் எடுத்துக் கொண்ட வேதனையின் உணர்வுகள் நோயாக மாறுகின்றது. அவர் நோயுடன் இருக்கும் பொழுது “நீ வேண்டுமென்றே எனக்குப் பணம் தரவில்லை…!” என்று நாம் கடுமையாகப் பேசும் பொழுது அதனின் உணர்வுகள் அவருக்குள் வளர்ந்து நரகாசுரனாக உருவாகி விடுகின்றது.

அது மட்டுமல்லாமல் நம்மைப்பற்றிய நினைவு கொண்டு வேதனையின் உணர்வுகளை வளர்த்து அது அவருள் கடுமையான நோயாக மாறி
1.அவருடைய உடலை விட்டு உயிராத்மா பிரிந்தால் அவருடைய உயிராத்மா நேராக நம்மிடத்தில் வந்துவிடும்.
2.வாங்கிய பணத்தைக் கொடுப்பதற்குப் பதிலாக அவருடைய உயிராத்மா நம்முள் வந்து விடுகின்றது.
3.அவர் தமக்குள் சேர்த்துக் கொண்ட நரக வேதனையின் உணர்வுகளை இங்கே உருவாக்கி விடுகின்றது.

இது ஒரு பக்கம்.

அதே சமயம் “இவர் கேட்டாரே அவருடைய பணத்தைக் கொடுக்க முடியவில்லையே…” என்று அவர் எடுத்துக் கொண்ட வீரிய உணர்வுகள் சாப அலைகளாக மாறுகின்றது.

இதைப் போன்ற நிலைகள்தான் மற்றவருக்குப் பணம் தர வேண்டிய நிலையில் கொடுக்க முடியாத பொழுதும் உருவாகின்றது.

அவருடைய சாப அலைகள் வளர்ச்சி அடைந்தபின் அவருடைய உயிராத்மாவும் நம்முடலில் புகுந்து பேய் மனம் என்ற நிலையில் நோயின் நிலைகளை நம்முள் உருவாக்கி விடுகின்றது.

அதன்பின் நாம் இந்த உடலை விட்டுச் சென்றால் மனிதனல்லாத பிறவியாகப் பிறக்கின்றோம். இதைத் தான் “சிவனின் கணக்குப்பிள்ளை நந்தீஸ்வரன்…” என்று சிவதத்துவத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

வேதனையின் உணர்வை நுகர நுகர அந்நிலைகள் அவரிடத்தில் அதிகரித்து யாரை நினைத்து வளர்த்துக் கொண்டாரோ அதன் நிலைகள் கொண்டு உடலை விட்டு அகன்றால் இந்த உயிராத்மா அங்கே சென்று விஷத்தின் தன்மைகளை உருவாக்குகின்றது.

இது போன்ற சந்தர்ப்பங்களில் வேதனையின் உணர்வுகளால் நம்மிடத்தில் “விஷத்தின் தன்மையான நரகாசுரன் தான்…” வலிமை பெறுகிறான். அவனை அடக்க வேண்டும்.

காலை 4.00 மணிக்கெல்லாம் எழுந்து “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணித் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி என் உடல் முழுவதும் படர்ந்து என் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணி ஏங்கிக் கண்ணின் நினைவை விண்ணை நோக்கிச் செலுத்தி நம் உடலுக்குள் அதனின் உணர்வைப் படரச் செய்தல் வேண்டும்.

1.அதன் பின் யார் மீது பகைமை கொண்டோமோ அவர்பால் நினைவைச் செலுத்தி
2.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெற வேண்டும்
3.அவருடைய தொழிலில் அதிக வருமானம் வர வேண்டும்
4.என் பணத்தை எனக்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கித் தியானிக்கும்போது
5.விஷத்தன்மையான உணர்வுகளிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்கின்றோம்.

காலரா நோயை ஊரை விட்டே விரட்டியது

காலரா நோயை ஊரை விட்டே விரட்டியது

 

ஒரு சமயம் யாம் வசித்த ஊரில் காலரா எனும் வியாதி பரவியது. ஊரில் உள்ள பலர் காலரா வியாதியால் தாக்கப்பட்டு இறந்தனர். அது சமயம் எமக்குத் தைரியம் அதிகம் இருந்தது.

அதனால் காலரா வியாதியால் தாக்கப்பட்டு இறந்த பலரை… அதாவது சுமார் 20 அல்லது 30 பிணங்களைத் தூக்கிச் சுடுகாட்டில் போட்டு வந்தோம். ஆனால் அது சமயம் இது போன்ற பணிக்குப் பயந்து யாரும் வரவில்லை.

அது சமயம் எமது தந்தையைப் பெற்ற அம்மாவிற்கு… அதாவது எம்முடைய பாட்டிக்குக் காலரா நோய் வந்துவிட்டது. உறவினர்கள் சிலர் அவரை தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டார்கள்.

பாட்டிக்குக் காலரா நோய் வந்துவிட்டது. அவரை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக் கொண்டு போய் விட்டார்கள் என்று யாம் கேள்விப்பட்டதும் எமக்கு வயிற்றுப் போக்கு ஏற்படத் தொடங்கியது.
1.காலராவில் இறந்த 30 பிணங்களை தூக்கிப் போட்டோம்… அப்பொழுது எமக்கு ஒன்றும் ஆகவில்லை.
2.எம்முடைய பாட்டிக்குக் காலரா நோய் வந்துவிட்டதே…! என்று எமது உணர்வில் சிறிது இடம் கொடுத்தவுடனே
3.எமக்கும் காலரா வந்துவிட்டது.

குருநாதர் இந்தச் சம்பவத்தைப் பின்னாட்களில் எமக்கு நினைவுபடுத்தி… “நீ தைரியத்துடனும் வலிமையுடனும் காலராவில் இறந்தவர்களைத் தூக்கிக் கொண்டு போய்ப் போட்டாய். உனக்கு ஒன்றும் ஆகவில்லை.

ஆனால் உன்னுடைய பாட்டிக்குக் காலரா நோய் வந்துவிட்டதே என்று எண்ணியவுடனே, உனக்கும் காலரா நோய் வந்துவிட்டது.
1.மனிதரிடத்தில் உணர்வு என்ன வேகமாக வேலை செய்கின்றது என்று பார்த்தாயா…? என்று கேட்டார்.
2.காலராவால் தாக்கப்பட்ட “பாட்டியின் மீதான எண்ணம் வந்தபின் தான்…” எமக்கும் காலரா நோய் வந்தது என்று
3.குருநாதர் சொன்ன பின் தான் யாம் தெரிந்து கொண்டோம்.

மதுரை சுப்பிரமணியபுரத்தில் ஒரு வாய்க்கால் இருக்கும். இப்பொழுது அந்த இடத்தில் மேம்பாலம் கட்டியிருக்கின்றார்கள். அந்த வாய்க்காலில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும். எமக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டதுமே யாம் அந்த வாய்க்காலுக்குச் சென்று விட்டோம்.

வாய்க்காலில் கால் கழுவி விட்டு வரலாம் என்று நினைத்தால் அது நடக்காத காரியமாக இருந்தது. ஏனென்றால் வயிற்றுப் போக்கு நிற்காமல் போய்க் கொண்டிருந்தது.

பிறகு, ஒருவாறாகச் சமாளித்து ஹோட்டலுக்குச் சென்று “தயிர் சாதம் கொடுங்கள்…” என்று சொல்லி தயிர் சாதம் வாங்கிச் சாப்பிட்டோம். மனதில் “யாம் ஒரு பயில்வான்…” என்று எண்ணி தயிர் சாதத்தை ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தோம்.

ஆனால் தயிர் சாதத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே எமக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டுவிட்டது. ஹோட்டலுக்குள்ளேயே நடந்து விட்டது, பிறகு மறுபடியும் வாய்க்காலுக்கு வந்து அமர்ந்து அலசிக் கொண்டிருந்தோம்.

ஒரு சந்தர்ப்பத்தில் எமக்குத் தைரியம் சிறிது குறைந்தது. ஆனாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “என்ன பண்ணிவிடும்…? பார்க்கலாம்…!” என்று இருந்தோம். பசித்தால் இன்னும் கொஞ்சம் தயிர் சாதம் சாப்பிடலாம் என்று எண்ணினோம்.

ஏனென்றால் தயிர் குளிர்ச்சி. தயிர் சாதம் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று இருந்தோம். அதனால் தயிர் சாதம் வாங்கிச் சாப்பிட்டோம். ஆனால் சாப்பிட்ட சாதம், வயிற்றுப் போக்கால் முழுது முழுதாக வெளியே சென்றது.

எமது கண் முழியெல்லாம் உள்ளே சென்றுவிட்டது. சரி…! நாம் இந்தத் தண்ணீரிலேயே உள்ளே சென்று விடுவோம் போலிருக்கின்றது. பாட்டியையும் பார்க்க முடியாது போலிருக்கின்றது என்று எண்ணினோம். நடந்த நிகழ்ச்சி இது.

காலரா வியாதி பரவியதால் ஊரை விட்டே நிறைய பேர் ஓடிவிட்டனர். பண்டம் பாத்திரங்களை அப்படி அப்படியே போட்டுவிட்டு “தாம் தப்பித்தால் போதும்…” என்று ஓடிவிட்டனர்.

வாய்க்காலை ஒட்டி ஒரு பாலம் இருந்தது. அதில் போய் அமர்ந்து கொண்டோம். அப்பொழுது அந்தப் பாலத்தின் வழியாக வண்டி ஓட்டிக் கொண்டு ஒருவர் வந்தார்.

அவர் எம்மைப் பார்த்து, “என்னய்யா… இப்படி உட்கார்ந்திருக்கிறாய்…?” என்று கேட்டார்.

“காலராவில் இறந்தவர்களைத் தூக்கிப் போட்டு வந்தேன், இப்பொழுது எனக்கே காலரா வியாதி வந்துவிட்டது” என்று அவரிடம் கூறினோம்.

“அட… நீ என் வண்டியில் ஏறி உட்கார்…” என்று கூறி எம்மை அவருடைய வண்டியின் பின் சீட்டில் அமரச் செய்து அவருடைய கரும்புக் காட்டிற்கு அழைத்து சென்றார். கரும்பைப் பிழிந்து ஜூஸ் எடுத்துக் கொடுத்து… “நன்றாக மூக்கு பிடிக்கச் சாப்பிடு…” என்று கூறினார்.

1.அவர் கொடுத்த கரும்புச் சாறைக் குடித்தபின் எமக்கிருந்த காலரா நோய் எங்கே போனதென்றே தெரியவில்லை.
2.யாம், பூரண குணம் அடைந்தோம்.
3.காலராவிற்கு மருந்து கரும்புச் சாறு…! இன்னும் கரும்புச் சாறு கொடுக்கச் சொல்லிக் குடித்து விட்டு அங்கிருந்து வந்தோம்.

எமது உடல் நிலை குணமானவுடனே, சும்மா இருக்கவில்லை. ஊர் முழுவதும் சுற்றி மக்களிடம் யாசகம் கேட்டுப் பெற்று காசு சேர்த்து கரும்புச் சற்றை வாங்கிக் காலராவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கொடுத்தோம்.

ஏனென்றால் யாம் அப்பொழுது தேசிய இயக்கத்தில் இருந்ததால் பொது சேவையில் ஆர்வமுடன் ஈடுபட்டு… “நீ குடி… நீ குடி…” என்று எல்லோருக்கும் கரும்புச் சாறு வாங்கிக் கொடுத்தோம்.

அதன் பின் காலரா நோயும் ஊரை விட்டே ஓடிப்போயிற்று. இது ஒரு சந்தர்ப்பம்.

அப்பொழுதுதான் சொன்னார் குருநாதர்
1.“டேய்… உன்னைக் காப்பாற்றுவதற்கு அப்பொழுது நான் தான்டா வண்டியில் வந்தேன்…”
2. நீ செத்துப் போவாய்… என்று எண்ணினாய்…! ஆனால் “நீ சாகக் கூடாது என்று நான் வந்தேன்…” என்று கூறினார்.

எமக்கிருந்த காலரா நோய் நீங்கியபின் ஆசனம் செய்வது பயில்வான் தனம் செய்வது என்பதெல்லாம் எம்மால் முடியாமல் போய்விட்டது.

யாம் சாதரணமாக மதுரையில் ஆண்டாள்புரத்திலிருந்து திருப்பரங்குன்றம் வரை உடல் பயிற்சிக்காக ஓடுவோம். ஓடியபடியே திருப்பரங்குன்றத்திலிருந்து ஆண்டாள்புரம் வரை திரும்பி வருவோம். ஆண்டாள்புரத்திலிருந்து திருப்பரங்குன்றம் 6 மைல் இருக்கும். அதன் பிறகு காலை 6 மணிக்கு மில்லிற்கு வேலைக்குப் போவோம்.

இது போன்று இருந்த யாம் பாட்டிக்கு நோய் தாக்கியவுடனே எமக்கும் காலரா நோய் வந்துவிட்டது. “பாட்டியை எண்ணினாய் என்ன ஆனது உனக்கு…?” என்று கேட்டார் குருநாதர்.

1.குருநாதர் சொன்ன பின்தான் உணர்வின் இயக்கத்தை யாம் அறிந்தோம்.
2.குருநாதர் சொல்லவில்லை என்றால் எமக்கு ஒன்றும் தெரியாது.

இறந்தவர்களைத் தைரியமாகத் தூக்கிக் கொண்டு போய்ப் போட்டாய். ஆனால் உன்னுடைய பாட்டிக்குக் காலரா நோய் தாக்கிவிட்டதே என்று ஏங்கினாய்,

உடனே இதன் உணர்வு உன்னிடத்தில் என்ன வேலை செய்தது…? என்று தெரிந்து கொண்டாயல்லவா…! என்று கேட்டார் குருநாதர். இது போன்ற உணர்வுகள் ஒவ்வொன்றையும் எமக்கு அனுபவபூர்வமாகக் காட்டினார் குருநாதர்.

குருநாதர் காண்பித்த அருள் வழியில் தங்களுள் மெய் ஞானம் பெற்று, மெய் வழியில் வாழ்ந்து மெய்பொருள் காணும் திறனை தங்களுக்குள் வளர்த்து வரும் அன்பர்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்று
1.உங்களுடைய வாழ்க்கையில் உணர்வின் இயக்கங்களை அறியும் ஆற்றல் பெற்று அருள் ஞானம் பெற்று
2.சர்வ தீமைகளிலிருந்து விடுபடும் ஆற்றல் மிக்க அருள் சக்தி பெற்று
3.இந்தப் பிறவியில், பெருவீடு பெரு நிலை பெறும் நிலையாக
4.என்றும் பதினாறு என்ற அழியா ஒளிச்சரீரம் பெறும் நிலையாக
5.பேரின்பப் பெரு வாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.

தியானத்தில் நம் நினைவுகள் திசை மாறினால் என்ன செய்ய வேண்டும்…?

தியானத்தில் நம் நினைவுகள் திசை மாறினால் என்ன செய்ய வேண்டும்…?

 

நாம் தியானம் எடுக்கும் பொழுது சில நேரங்களில் துருவ நட்சத்திரத்தை எண்ணினாலும் கூட அந்த எண்ணங்கள் திசை மாறிப் போகும். இது எதனால் ஏற்படுகின்றது…?

நம் உடலில் இதற்கு முந்தி நாம் நுகர்ந்து சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அது தீய அணுக்களாக மாறும் பொழுது “அதற்கு அந்த உணவு தேவை…”

நாம் துருவ நட்சத்திரத்தை எண்ணி அதை எடுக்க வேண்டும் என்று முயற்சி செய்தால்
1.தனக்காக வேண்டி அந்த எல்லா அணுக்களும் சேர்த்து அதனதன் உணர்வை நுகரப்படும் பொழுது
2.நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற முடியாதபடி அது தடுக்கும்.
3.வெறுப்போ வேதனையோ சலிப்போ சங்கடமோ பிறர் மேல் ஆத்திரமோ அந்த உணர்வுகள் தான் அதனுடைய உணர்ச்சிகளைத் தூண்டும்.
4.அதன் வழி நம் உடலில் உள்ள அந்தத் தீய அணுக்கள் உணவை எடுத்து வளரும்.

அதைத் தடுப்பதற்கு “உடனடியாக கண்களைத் திறந்து…” துருவ நட்சத்திரத்தின் பால் கண்ணின் நினைவைச் செலுத்தி அதிலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று மீண்டும் அதை எண்ணி எங்கள் உடலுக்குள் இருக்கும் ரத்த நாளங்களில் அந்தச் சக்தி கலக்க வேண்டும் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் செலுத்த வேண்டும்.

இவ்வாறு சிறிது நேரம் ஆன பின் கண்களை மூடித் துருவ நட்சத்திரத்தின் சக்தி உடல் முழுவதும் படர வேண்டும் என்று தியானியுங்கள்.
1.உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அதன் வழி உணவை எடுக்காதபடி
2.கண்ணின் நினைவை உயிரில் செலுத்தி அங்கே புருவ மத்தியிலே அடைத்து… விண்ணிலே நினைவைச் செலுத்தி
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை உயிர் வழி கவர்ந்து ரத்த நாளங்களில் கலக்கச் செய்ய வேண்டும்.

காரணம்… எத்தனையோ விதமான தீய அணுக்கள் உடலுக்குள் இருப்பதால் அதனுடைய உணவுக்கு “அதனுடைய வலுவை அது காட்டத்தான் செய்யும்…”

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் செலுத்தி உடலில் இருக்கக்கூடிய இரத்த நாளங்களில் கலக்கச் செய்யும் பொழுது அது வலிமை பெறுகின்றது.

உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவைச் செலுத்தப்படும் பொழுது “அதை இழுக்கும் சக்தி கிடைக்கின்றது…”

உதாரணமாக ஒரு தவறு செய்பவரைக் கண்ணிலே நினைத்தபின் எப்படி அந்த உணர்வின் நிழல் படம் தெரிகின்றதோ அந்த நேரத்திலே நம்முடைய உணர்ச்சிகள் பல விதமாக வெறுப்பாகத் தோன்றுகின்றது. கண் வழி நுகர்ந்து தான் ஏற்கனவே அது அணுவின் தன்மையாக அடைந்தது.

அதே கண் வழியாக உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்று உள்முகமாகச் செலுத்தும் பொழுது அந்த உணர்வுகளை எடுத்து
2.ஏற்கனவே உருப்பெற்ற அணுக்கள் இரத்தத்தின் வழி நுகர்வதை மாற்றி
3.துருவ நட்சத்திரத்திச் சக்தியை ஈர்க்கும் சக்தி பெற்று நல்ல அணுக்களாக அதை மாற்றும் சந்தர்ப்பம் வருகின்றது.

தியானம் இருந்தேன்… என் நினைவுகள் எங்கேயோ இழுத்துக் கொண்டு போகிறது…! என்று அப்படிச் சொல்லி விட்டு விடாதீர்கள்.

யாம் சொன்ன முறைப்படி அதை மாற்றி மாற்றி… உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் செலுத்தப் பழகிக் கொள்ளுங்கள்.
1.இரத்தங்களிலே அதைப் பெருக்கி பழகுங்கள்.
2.இப்படி… இந்த வலிமையைத் தான் நாம் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.

நண்பர்களுக்குள் பகைமை உணர்வுகள் எப்படி இயக்கும்…?

நண்பர்களுக்குள் பகைமை உணர்வுகள் எப்படி இயக்கும்…?

 

உதாரணமாக ஒரு நண்பன் நமக்குத் தீங்கு செய்துவிட்டால் அதை எண்ணி நமக்குள் பதிவு செய்து கொள்கிறோம்.

“பாவி எனக்குத் தீங்கு செய்தானே… அவன் உருப்படுவானா…!” என்று கோபத்தின் எல்லை கடந்து உணர்ச்சி பொங்கப் பேசுகின்றோம் (சாபமிடுகின்றோம்).

அவ்வாறு நமக்குத் தீங்கு செய்தவனை எண்ணி அது உடலில் விளைந்து “அவன் தீங்கு செய்தான்…” என்று நமக்குள் பதிந்தாலோ அவனுக்குள்ளும் இந்த பதிவு உண்டு.

இந்த சாபமிட்ட இந்த உணர்வின் நிலைகள் அங்கே சென்று அவனுக்குள் புரையோடி அவனுடைய நற்குணங்களை அழித்துவிடும்.
1.ஒவ்வொரு முறையும் இவ்வாறு சாபமிடும் நிலைகளில்
2.”பாவி அவன் தொல்லை கொடுக்கிறான்” என்று எண்ணினால்
3.இது அவன் செயலாக்கங்களுக்கே தடையாயிருக்கும்.

இப்பொழுது நண்பர்களுக்குள் ஒருவருக்கொருவர் வேதனைப்பட்டுப் பிரிந்திருந்தாலும் சில நேரங்களில் புரையோடும்.

புரையோடும் பொழுது சாதம் விழுங்கினாலும் விழுங்க முடியாது. எச்சில் விழுங்கும் பொழுதே புரையோடும். இவையெல்லாம் வெறுப்பின் உணர்வுகள் நமக்குள் வரும் பொழுது “நமது உறுப்பின் இயக்கங்களே தனி…”

நண்பனாக இருக்கும் பொழுது அவன் நன்மை செய்தான் என்று எண்ணப்படும் பொழுது விக்கல் வருகின்றது. அப்பொழுது உயிரின் தன்மை நமக்குள் ஊட்டி அது தணித்துக் கொள்ளும். மகிழ்ச்சியின் நிலைகள் நமக்குள் உருவாகின்றது.

இதெல்லாம் இயற்கையின் நிலையின் இயக்கங்கள். மற்றோருடன் ஒன்றி இயக்கும் நிலைகளை இங்கே உருவாக்குகின்றது.

நாம் நமது வாழ்க்கையில் மற்றோருடன் பழகிய நேரங்களில் தீமையின் உணர்வுகளை நமக்குள் பதிவு செய்யும் பொழுது நமக்குள் யாருடைய குணங்களைப் பதிவு செய்து கொண்டோமோ அது இங்கே விளையத் தொடங்கி விடுகின்றது.

இதைப் போன்று பற்றின் தன்மையால் தீமையே விளைகின்றது.
1.பாசத்தாலோ பண்பாலோ அன்பாலோ “பிறர்படும் துயரங்களைக் கேட்டறிய நேரும் பொழுது…”
2.அந்த உணர்வின் தன்மை நமக்குள் புகுந்து அந்த உணர்வின் வித்தாக விளைந்து
3.அந்த உடலிலிருந்து எது வெளிப்படுகின்றதோ அந்த அலைகளைக் கவர்ந்து நமக்குள் நோயாக உருவாக்குகின்றது.

சூரியன் தனக்குள் வருவதற்கு முன்பே நஞ்சினைப் பிளந்துவிடுவது போன்று… மனிதன் தன் உணர்வின் செயலால் தீமைகள் தன்னிடத்தில் வரும் பொழுது அதனைப் பிரித்துத் தனக்குள் ஒளியின் சுடராக மாற்றும் தன்மை பெற்றவன்.

கோளாக இருந்து நட்சத்திரமானதைப் போன்று
1.மனிதன் தன் உணர்வின் துணையால் ஒளியின் சரீரமாக மாறி அதனின் செயலாக்கங்களாக நட்சத்திரமாக இருந்து
2.தீமையைத் தன்னிடமிருந்து வெகு தூரத்திலேயே சுட்டுப் பொசுக்கும் ஆற்றல் பெற்றவன்.

இந்த ஆற்றல் மனித வாழ்க்கையில் தீமைகளை அகற்றும் உணர்வுகளைப் பெற்ற நிலையால் விளைவதுதான்.

இதைத்தான் “மாரியம்மன்” கோவிலில் நமக்குக் காண்பிக்கிறார்கள். ஒருவருடைய தீமையைக் கேட்டறிய நேரும் பொழுது, அது நமக்குள் மாறி (அவருடைய தீமை நமக்குள் மாறி — மாரி) தீமை செய்யும் நிலையாக விளைவதைப் போன்று
1,துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியை நாம் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது
2.அது நமக்குள் மாறித் தீமைகளை அகற்றும் சக்தியாக உருவெடுக்கின்றது.

ஆகவே நாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைப் பற்றுடன் பற்ற வேண்டும். அதைப் பற்றுடன் பற்றினால் நம்மை அறியாது சூழும் தீமைகளை அகற்ற முடியும். அறியாமை என்ற இருளை விலக்க முடியும்.

இந்த வாழ்வில் பெற வேண்டிய மெய்யான பொருளாக உயிருடன் ஒன்றும் உணர்வினை ஒளி பெறச் செய்ய முடியும்.

எல்லையில்லா பேரண்டத்தில்…
1.ஒரு எல்லையோடு நின்றாடும் இந்தப் பரம்பொருளில் வந்து உதித்த உயிராத்மாக்கள் நாம் அனைவரும்
2.மகரிஷிகளின் அருளாற்றலைப் பெற்று வாழ்வதே நமது எல்லையாக அமைத்திடல் வேண்டும்.
3.மெய் ஞானிகள் உரைத்த வழியை அனைவரும் பின்பற்றிப் “பெரு வீடு பெரு நிலை” அடைவதற்கு எமது ஆசிகள்.