மண்டலக் கணக்கு – 48 நாள்கள்

மண்டலக் கணக்கு – 48 நாள்கள்

 

மனிதர்கள் இந்த உடல் இச்சைக்குத் தான் செல்கின்றனரே தவிர “உயிரின் இச்சைக்கு” யாரும் செல்வதில்லை. ஆனால் அவனுடன் தான் நாம் ஒன்றி வாழுகின்றோம்.

எதை எடுக்கின்றோமோ அந்த உணர்வுக்கொப்ப உடலாகிறது. உடலாகும் போது “வேதனை.. வேதனை…” என்று எடுத்தால் வேதனைப்படும் நிலை தான் வருகிறது..

வேதனை அதிகமாகி விட்டாலோ அந்த வேதனைக்கொத்த உடலாக… அடுத்து உயிர் நம்மை மாற்றிவிடும். ஆகவே இது போன்ற நிலையிலிருந்து நாம் மீள வேண்டும்.

இந்த உண்மைகளை எல்லாம் இப்போது அறியக்கூடிய தகுதி பெற்றிருக்கிறோம் என்றால் அது யாரால்…?

நம்முடைய மூதாதையர்கள் முதலில் மனிதனாக உருவானார்கள். அவர்கள் வழியில் நம் தாய் தந்தை உடல் பெற்றார்கள். அவர்கள் வழியில் நாம் மனித சரீரத்தை இப்போது பெற்றுள்ளோம்.

ஏனென்றால் “மனிதன் ஒருவன் தான் இறந்த பிற்பாடு அவர்களை (முன்னோர்களை) விண் செலுத்த முடியும்…”

ஒருவருக்கொருவர் நாம் மனதில் நினைக்கின்றோம்… “எனக்குத் துரோகம் செய்தான் பாவி… எங்கிருந்தாலும் அவன் உருப்படுவானா…? என்று…!”

நாம் இப்படி எண்ணினால் அவன் அமெரிக்காவில் இருந்தாலும் கூட இந்த உணர்வு அங்கே சென்று அவனை இயக்குகின்றது… அவன் செய்யும் காரியத்தைக் கெடுக்கிறது.

அதே போன்றுதான் நம்முடைய மூதாதையரின் உணர்வுகள் நமக்குள் இருக்கின்றது. அதை வைத்து அவர்களை நாம் விண் செலுத்த முடியும்.

அருள் சக்திகளை இப்போது குரு வழியிலே நமக்குள் பெருக்குகின்றோம். அதற்குண்டான சக்தி கிடைக்கின்றது… காற்றிலே அந்த உணர்வுகள் உண்டு.

நம் முன்னோரின் ஆன்மாக்கள் இன்னொரு மனித உடலுக்குள் சென்று இருந்தாலும் கூட நாம் விண் செலுத்த முடியும். முன்னாடி செய்ய மறந்து விட்டோம். இப்பொழுதாவது நாம் செய்யப் பழக வேண்டும்.

உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று சொல்லி 48 நாட்களுக்குள் அனுப்பி விட்டால் அங்கே சென்று முழுமை அடைகின்றார்கள்… ரிஷியாகின்றார்கள்.

உதாரணமாக ஒருவருக்கொருவர் பிரியமாக இருக்கின்றார்கள் அதிலே ஓருவர் திடீரென்று இறந்து விட்டால் பற்றுடன் எண்ணும் போது அந்த உடலுக்குள் தான் போகும். அந்த உடலில் ஆவியாக இருக்கும்.

ஆனாலும் இறந்த ஆன்மா திடீரென்று உடலுக்குள் புகுந்த உடனே முதலில் தெரியாது. அதனால்தான் ஒரு மண்டலம் என்ற கணக்கை வைத்து ஞானிகள் நமக்குக் காட்டினார்கள்.

எது எது எந்தப் பொருளாக இருந்தாலும் “ஒரு மண்டலத்திற்குள் கருத்தன்மை அடைவது” மாறும் தன்மை வருகிறது. இதைத் தெரியப்படுத்துவதற்குத் தான் மண்டலக் கணக்கை ஞானிகள் கொடுத்தார்கள்.

உடலை விட்டுப் பிரிந்து சென்றார்கள் என்றால் அந்த ஒரு மண்டலத்திற்குள் (48 நாட்களுக்குள்) சப்தரிஷி மண்டல உணர்வை எடுத்து வளர்த்து இலேசாக அங்கே விண் செலுத்தி விடலாம்.

அங்கே சென்ற பின் உடல் பெறும் விஷத்தன்மைகள் எல்லாம் கரைந்து விடுகிறது. துருவ நட்சத்திரம் சமைத்துக் கொடுக்கும் உணர்வுகளை எடுத்து ஒளி உடலாகப் பெறுகிறது.

மனிதன் ஒருவன் தான் இதைச் செய்ய முடியும்…!

இதற்கு முன்னாடி நமக்குப் பழக்கம் இல்லை. இப்போது தெரிந்து கொண்டோம். அடிக்கடி இதைப் போன்று செய்து பழகினால் இன்றைய விஷ உலகில் அடிக்கடி வரும் தீமைகளை நீக்க முடியும்.

மூதாதையர்களை விண் செலுத்திய வலுக் கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் அதிகமாகப் பெருக்கிக் கொள்ள முடியும். இந்த உடலை விட்டு எப்பொழுது நாம் பிரிந்தாலும் நம்மையும் அது அங்கே இழுத்துச் சென்றுவிடும்.

மாறாக… “ஐய்யய்யோ இந்தக் காசை எல்லாம் என் பிள்ளை கண்டபடி செலவழிக்கின்றானே… நாளை அவன் என்ன செய்வான்…? என்று பிள்ளை மீது நினைவு அதிகமானா அந்த உடலுக்குள் தான் வர வேண்டும்

காசு சம்பாரித்துக் கொடுத்தேனே… நாளை என் பிள்ளை என்னை எங்கே ஏமாற்றப் போகின்றானோ…? என்று எண்ணினால் அவன் உடலில் புகுந்து விடுவோம். அங்கே பேயாகப் போய் அவனையும் வேதனைப்படுத்தத்தான் செய்யும்

ஆகவே எந்த நிமிடம்… எந்த நிலை… ஆனாலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கும் ஒரு பழக்கத்திற்கு வந்துவிட்டால் நம் உயிரின் இயக்கம் எலக்ட்ரிக்… எலக்ட்ரானிக்… அங்கே கவர்ந்து சப்தரிஷி மண்டலத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்.

அந்த உணர்வுக்குத் தக்க இருளை நீக்குகின்றது உணர்வின் அறிவு எப்பொழுதுமே சந்தோஷமாகப் பேரானந்த நிலையாகப் பெற முடியும். அது தான் விஜய தசமி. உயிர் தோன்றி பத்தாவது நிலையாக முழுமை அடையும் சந்தர்ப்பம்… பிறவி இல்லா நிலை…!

ஒவ்வொரு மாதத்திலும் ஞானிகள் தெளிவான காரணங்களைக் காட்டி நம்மை நல்வழியில் வாழச் செய்ய வழிவகுத்துக் கொடுத்தார்கள். மக்களுடைய எண்ணங்கள் தடுமாறும் இந்தக் காலகட்டத்தில் குரு வழியில் இதை நாம் செயல்படுத்துவோம்.

தீமையிலிருந்து மீட்டிடும் சக்தியைப் பெறுவதற்கு “எத்தனையோ துன்பத்திற்கு என்னை ஆளாக்கினார் குருநாதர்…”

தீமையிலிருந்து மீட்டிடும் சக்தியைப் பெறுவதற்கு “எத்தனையோ துன்பத்திற்கு என்னை ஆளாக்கினார் குருநாதர்…”

 

விஞ்ஞான அறிவு… எட்டாத தூரத்தில் இருக்கக்கூடிய கோள்கள் வெளிப்படுத்தும் உணர்வினை லேசர் என்ற இயக்கத்தைக் கொண்டு அதைக் கவர்ந்து எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று கம்ப்யூட்டரில் பதிவாக்கி அதனின் உணர்வின் ஓசைகளைக் கவர்ந்து கொள்கின்றார்கள்.

அதைப் பதிவாக்கி இராக்கெட்டை உந்து விசையால் செலுத்தப்படும் பொழுது வான் வீதியிலே பறக்கின்றது. எதன் உணர்வின் தன்மையோ அந்த ஒலிக்கொப்ப அந்தக் கோள் இருக்கும் இடத்திற்கு இழுத்து அழைத்துச் செல்கின்றது. அதாவது இந்த இராகெட்டை அங்கே இழுத்துச் செல்லும் தன்மை வருகிறது.

அந்தக் கோளிலிருந்து வெளிப்படும் உணர்வுகளைத் தரையில் இருந்தே மனிதன் விஞ்ஞான அறிவால் தெரிந்து கொள்கின்றான். அந்தக் கோளிலே என்னென்ன நடக்கின்றது என்று அறியும் ஆற்றல் வருகிறது.

அன்றைய மெய்ஞான அறிவுக்கும் இன்றைய விஞ்ஞான அறிவிற்கும் உங்களுக்கு தொடர்பு கொடுத்துச் சொல்கின்றோம். சாமிக்கு என்ன தெரியும்…? என்று விட்டு விடாதீர்கள்…!

இதை எல்லாம் குருநாதர் எனக்குத் தெளிவாகக் கொடுத்ததை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத்தன்மையை உங்கள் சுவாசத்திற்குள் மறுக்கும் சக்தியாக அது வர வேண்டும்… அத்தகைய ஆற்றலை நீங்கள் பெற வேண்டும்.

இல்லை என்றால் அந்த விஷத்தின் தன்மை ஈர்க்கப்பட்டு மனிதனுடைய ரூபத்தை மாற்றும் சக்தியாக வந்துவிடும். குருநாதர் அதைத்தான் சொன்னார்.

அவர் காட்டிய வழியில் உயர்ந்த ஆற்றலைப் பெற வேண்டும் என்பதற்குத் தான் பதிவு செய்கின்றேன். பதிவானதன் துணை கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று ஆசைப்படுதல் வேண்டும்

பத்தாவது நிலை பெற்றது… வசிஷ்டர்…! அதாவது கவர்ந்து கொண்ட உணர்வுகள். நமக்குள் அது பதிவாக்கப்படும் பொழுது பிரம்ம குருவாக வருகிறது.

அதன் வழி ஞானத்தின் உணர்வுகளை நுகரப்படும் பொழுது அது பிரம்மம் ஆகி அதனுடன் இணைந்து அருந்ததி… எதன் சக்தியின் ரூபம் பிரம்மம் ஆனதோ… அதன் மணத்தின் உணர்ச்சியாக அது இயக்கும்.

பெண்கள் இதையெல்லாம் அவசியம் கூர்ந்து… கவனித்து… அதைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டால் உங்களுக்குள் ரெக்கார்ட் ஆகி விடுகின்றது பெண்களுக்கு அணுத் தன்மையாக மாற்றும் சக்தி அதிகம் உண்டு.

தன் கணவருக்குத் தொழிலில் சிக்கல் ஏற்பட்டு விட்டது என்று அந்த உணர்வுகள் மோதும் பொழுது என் கணவர் அந்த அருள் சக்தி பெற வேண்டும்; சிந்தித்து செயல்படும் திறன் அவர் பெற வேண்டும்; அவர் பார்வையில் எல்லோருக்கும் நல்லதாக வேண்டும் என்று பெண்கள் உங்களுக்குள் இதை உருவாக்கி கணவருக்குப் பாய்ச்சினால் உங்கள் எண்ணம் நிச்சயம் அவரைக் காக்கும்.

ஏனென்றால் செல்வத்தைத் தேட என்று அவர் வெளியிலே தொழிலுக்குச் செல்லும் பொழுது எத்தனையோ எதிர்ப்புகள் வரும்… மாறுபட்ட உணர்வுகளைச் சந்திக்க நேரும்.

என் கணவருக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சினால் அவரை தெளிந்த மனிதனாக மாற்ற முடியும்.

என் கணவர் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும்… அவர் உயர்ந்த நிலை பெற வேண்டும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்… அனைவரும் போற்றும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று பெண்கள் நினைக்க வேண்டும்.

அதே சமயத்தில் சம்பாதித்துக் கொடுத்தால் “என் கணவர் மாதிரி இல்லை…” என்று மெச்சுவோம். அதிலே சிறிது குறைவானால் எல்லாவற்றையும் இப்படியே விட்டுவிடுகின்றார் என்று வேதனை வரும்.

இரண்டு தடவை இப்படி ஆனால் போதும். அடுத்து… இப்படிச் செய்து கொண்டிருந்தால் குடும்பம் என்ன ஆவது…? எதிர்காலத்தில் பிள்ளைகளுக்கு என்ன செய்வது…? என்று சந்தேகங்கள் வந்துவிடும்.

காரணம்… உணர்வுக்கொப்ப அந்த உணர்ச்சிகள் எழும்ப… உணர்வின் செயல்களாக அது வருகின்றது. எதைப் பதிவு செய்கின்றோமோ உயிர் கவர்கின்றது… உயிரிலே படுகின்றது… இரத்தத்தில் கலக்கின்றது தீமையின் உணர்வாக உடலுக்குள் அணுவாக விளையத் தொடங்குகிறது.

அவ்வாறு ஆகாது தடுப்பதற்காக வேண்டித் தான் வாழ்க்கையில் எவ்வாறு தெரிந்து வாழ வேண்டும் என்று எவ்வளவவோ சாஸ்திரங்களைக் கொடுத்துள்ளார்கள். நல்லதை எண்ணி எடுத்து அதன்வழி செயல்படுத்தும் போது அதுவே தெய்வமாக வந்து இயக்குகிறது.

ஆனால் இந்த வாழ்க்கையில் ஆசையின் பால் செல்லப்படும் பொழுது எத்தனையோ துயர்கள் வந்து சேருகின்றது… தன்னைக் காக்கும் சக்தியையும் இழந்து விடுகின்றோம்.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இது போன்று சந்தர்ப்பங்களில் ஏற்படுகிறது. இந்த உண்மை நிலைகளை அறிந்து கொள்வதற்கு குருநாதர் என்னை 20 வருடம் காடு மேடெல்லாம் அலைய வைத்து “எத்தனை துன்புறுத்தினார்…?” என்று எனக்குத் தெரியும்.

ஒவ்வொரு மனிதனும் அவனுடைய சந்தர்ப்பம் நுகர்ந்த உணர்வால் கொண்டு எப்படி எல்லாம் துன்பப்படுகின்றனர்… வேதனைப்படுகின்றனர்… வேதனை வந்த பின் எத்தனை நோய்கள் அவருக்கு வருகின்றது…? அதிலிருந்து மீட்டிட என்ன செய்ய வேண்டும்…? என்று தான் காட்டினார்.

அவர் எனக்குப் போதித்ததைத் தான் உங்களுக்கும் வாக்காகச் சொல்லிப் பதிவு செய்து உங்களை மீட்டிடும் சக்தியாக அதைக் கொண்டு வருகின்றேன்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

காலத்தை விரயம் செய்யாது ஆத்ம சக்தியை உயர்த்திக் கொள்ளுங்கள்

காலத்தை விரயம் செய்யாது ஆத்ம சக்தியை உயர்த்திக் கொள்ளுங்கள்

 

எல்லா மண்டலமும் ஒரே நிலை கொண்டு வளர்ச்சி பெறும் என்பதல்ல…!

வான மண்டலத்தில் நட்சத்திர மண்டலமாகவும்… சிறு சிறு கோளமாக உள்ள மண்டலங்களும்… ஜீவனற்று உள்ள மண்டலங்களும்… பெரிய மண்டலங்களின் ஈர்ப்பு சக்தியில்
1.அதன் சக்தி நிலையும் (அமில நிலை) பெரிய மண்டலங்களின் அமில நிலையும் ஒன்றுபடும் பொழுது
2.இதன் ஈர்ப்புடன் வந்து சேர்ந்து அந்நிலையிலேயே கலந்து சுழல்கின்றது.

மண்டல வளர்ச்சி கொண்ட சிறு சிறு நட்சத்திர மண்டலங்களாய் சுற்றிக் கொண்டுள்ள கோளங்கள் எல்லாம் பெரிய மண்டலங்களின் பிரளய நிலையின் காலங்களில்தான் வந்து சேருகின்றன.

பூமியின் பூமத்திய ரேகையின் இன்றுள்ள நிலை… நடக்க இருக்கும் பிரளயத்தின் போது பிரளயத்தின் அசைவினால்… சிறிது மாறுபட்ட இடத்தில் வரப்போகின்றது.

1.இன்று நீர் நிலைகளாய் ஆழ்கடலாய்ச் சூழ்ந்துள்ள இடமெல்லாம்
2.சமமான தரையாகச் (நிலங்களாக) செயல் கொள்ளப் போகின்றது.

இம்மனித ஆத்மாக்கள் ஜீவராசிகள் மட்டும் மாறப்போகின்றன என்பதல்ல. இன்று வளர்ச்சியில் உள்ள தாவர வர்க்கங்களின் நிலையும் மாறப் போகின்றது.

இன்று ஆத்மீக நெறியை அறியும் சக்தி நிலையே குறைந்துள்ளது. செயற்கைக்கு அடிமைப்பட்டுள்ள ஆத்மாக்கள் எல்லாம் இயற்கையின் சீற்றத்திலிருந்து தப்பும் நிலையை உணர்ந்திடல் வேண்டும்.

வாழும் வாழ்க்கை செயற்கைக்கு அடிமைப்பட்டுள்ளதை மாற்றி இவ் இயற்கையின் கால மாறுதலை உணர்ந்தே வாழ்ந்திடுங்கள்.

1.பல சித்தர்கள்… பல ரிஷிகள்… வாழ்ந்து செயலாக்கி இன்றும் ஆண்டவன் ரூபம் கொண்டு
2.நம் கோயில்களின் மூலமாகப் பல சக்தி நிலைகளை உணர்த்திக் கொண்டிருக்கும் பாக்கியம் பெற்ற நாம்
3.நம் ஆத்மாவிற்கு உயர்ந்த சக்தியின் நிலையைச் சேமிக்கும் சக்தி பெற்றிட வேண்டும்.

நம் சக்தியைச் செயற்கைக்கும் விளையாட்டிற்கும் வீண் விவாதத்திற்கும் இன்றைய அரசியம் ஆட்டத்திற்கும் அடிபணியச் செய்திடக் கூடாது.

1.நம்மைப் பற்றிக் கொண்டுள்ள அடிமைப்படுத்திடும் எத்தகைய நிலையிலிருந்தும் மீளும் நிலையில் நம் சக்தியை ஓங்கச் செய்தே
2.இக் குறுகிய காலத்தில் அன்பு என்ற ஜெபத்தின் செயல் கொண்டு
3.ஆத்ம சக்தியை வளர்க்கும் பரிபக்குவ நிலையில் வாழ்ந்திடுங்கள்.

சுவாசிப்பது உமிழ் நீராக மாறி உடலுக்குள் சென்று என்ன செய்கிறது…? என்று தெரிந்து கொள்ள வேண்டும்

சுவாசிப்பது உமிழ் நீராக மாறி உடலுக்குள் சென்று என்ன செய்கிறது…? என்று தெரிந்து கொள்ள வேண்டும்

 

குருநாதர் என்னை மலைப் பகுதிகளுக்கு எல்லாம் அழைத்துச் சென்று 27 நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படக்கூடிய மின்னல்கள் ஒளிக்கற்றைகளாகப் பூமிக்குள் பரவுவதை “எது எது எப்படிக் கவருகிறது…?” என்று காட்டினார்.

அதிலே ஜோதிப்புல் என்றும் காட்டினார்… ஒளிக்கற்றைகளை தன் விழுதுகளில் கவர்ந்து கொண்ட பின் மோதும் போது வெளிச்சத்தை எப்படிக் கொடுக்கின்றது…? இயற்கையினுடைய நிலைகள் எப்படி சந்தர்ப்பங்கள் வருகிறது என்று அனுபவத்திலே காட்டினார்.

குருநாதருடன் அலைந்து தான் இதையெல்லாம் தெரிந்து கொண்டேன். காட்டிற்குள் சாப்பாடு வெறும் பேரீச்சம்பழம் தான். இல்லை என்றால் ஒரு பச்சிலையைக் காண்பிப்பார். அதைச் சாப்பிட வேண்டும். தண்ணீரைக் குடித்துக் கொள்ள வேண்டும். இதுதான் உணவு.

அதே சமயத்தில் அரிசியையும் மோரில் ஊற வைத்த கத்திரிக்காய் மிளகாய் மாங்காய் ஒரு டப்பா இதையும் எடுத்துச் செல்லும்படி சொல்வார். டப்பாவில் தண்ணீரை ஊற்றி அதிலே எல்லாவற்றையும் போட்டு வேக வைத்துக் கஞ்சியாகக் குடிக்கும்படி சொல்வார்.

சோறு கிடையாது…! வெறும் தண்ணீராகக் கஞ்சியாகக் குடிக்கும்படி சொல்வார். ஏனென்றால் அரிசி சாதம் சாப்பிட்டுப் பழகியதனால் அந்த உணர்வின் சத்து உடலிலிருக்கும் அணுக்களுக்கு அத்தகைய உணவு கிடைக்கவில்லை என்றால் அது மாறிவிடும்.

ஆகையினால் உன்னை இப்படிச் சாப்பிடும்படி சொன்னேன் என்று அதிலேயும் விளக்கம் கொடுப்பார்.

காரணம்… பச்சிலையைச் சாப்பிடுகின்றாய்…! இதே உணர்வு உடலில் விளைந்தால் அதற்குண்டான வித்தியாசங்களாக வந்துவிடும். அதை மாற்ற வேண்டும் என்பதற்காக இதையும் சொல்லி அதையும் சொல்லி ஒவ்வொரு வகையிலும் அதைச் சீராக்கிக் கொண்டு வருவார்.

சக்தி இருக்கிறது என்று காட்டுக்குள் எடுத்தாலும் உணவுப் பழக்கத்தால் எப்படி மாற்றங்கள் ஏற்படுகின்றது…? என்று காட்டுவார்.

அப்போது அவர் என்ன முறைப்படி கஞ்சியாகக் காய்ச்சிக் குடிக்கப்படும் பொழுது அது தேவாமிர்தமாக இருக்கும். வெயில் காலங்களில் நீர் மோரைச் சாப்பிட்டால் எப்படி இருக்கும்…? ஒரு மாங்காயை உப்பைத் தொட்டுத் தின்றால் எப்படி இருக்கும்…?

இப்பொழுது வாயில் உமிழ் நீர் சுரக்கின்றது அல்லவா… இது எங்கிருந்து வருகின்றது…? ஒன்றுமே உங்களுக்குக் கொடுக்கவில்லை… ஆனால் மாங்காயைப் பற்றிச் சொன்ன உணர்வுகள் செவிகளில் படுகிறது… உங்களுக்கு அதைச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை வருகின்றது.

நுகர்ந்த உடனே அந்தப் புளிப்பு கலந்த உமிழ் நீராகச் சுரக்கின்றது. இது சாப்பாட்டுடன் கலக்கின்றது

இதே போன்றுதான் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் கண்ணுற்றுப் பார்த்து நுகரும் உணர்வுகள்… எதைக் கேட்டறிந்தாலும் உமிழ் நீராக மாறி ஆகாரத்துடன் கலந்துவிடுகிறது.

ஆனால் அது தீமை என்ற நிலையில் இருந்தால் விஷத்தன்மையாக மாறிவிடுகின்றது ஆக வயிறு நிறையச் சாப்பிட்டு விட்டு அடுத்துப் பிறருடைய கஷ்டங்களையும் நஷ்டங்களையும் கேட்டால் இந்த விஷங்கள் உமிழ் நீராக மாறி உடலுக்குள் சேர்ந்து ஆகாரத்துடன் கலந்து வயிற்றிலே “கட…புடா… கட…புடா…! என்று ஆகிறது.

இது ஏன்… எதனால்…? என்று நாம் அறிவதில்லை வயிறு நிறையச் சாப்பிட்டபின் சஞ்சலமாகச் சலிப்பாகப் பேசுவதைக் கொஞ்ச நேரம் கேட்டுப் பாருங்கள்.

அது எல்லாம் உமிழ் நீராக மாறி அடுத்து நெஞ்சு எரிகிறது கப கப என்று எரிகிறது என்பார்கள். பேசிய உணர்வு கவரப்பட்டு இப்படி உமிழ் நீராக மாறி நல்ல ஆகாரத்தையும் கூட நுகர்ந்த உணர்வுகள் மாற்றி விடுகின்றது.

இதை எல்லாம் குருநாதர் அனுபவத்தில் கொடுத்தார். நான் இதைப் புத்தகத்திலோ மற்ற நிலைகளிலோ பார்த்துப் படித்துச் சொல்லவில்லை. நம் உடலுக்குள் என்னவெல்லாம் நடக்கிறது…? என்று காட்டிற்குள் வைத்து இதை எல்லாம் அறியும்படி செய்வார்.

“இந்தப் பக்கம் வா…” என்று அங்கே வேறு ஒரு செடியைக் காண்பிப்பார்… அதனின் மணத்தை நுகரு…! என்பார் நுகர்ந்தவுடன் அந்த உணர்வுகள் சேரும்… உமிழ் நீர்கள் எனக்குள் மாறும்.

நீ சாப்பிட்ட தண்ணீரின் சத்து இப்போது எப்படி வருகிறது பார்…! என்று காட்டுவார். நீ நுகரும் இந்த மணத்திற்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கின்றது என்று நுகரச் சொல்லி… அறியச் செய்து… உணரும்படி செய்வார்.

இதையெல்லாம் முழுமையாக உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்குத் தான் சொல்கிறேன். காரணம் உங்கள் சந்தர்ப்பம் அந்தந்த நேரமோ அப்போது இந்த உண்மைகளை நீங்கள் அறிந்து… ஞானத்தின் வழியிலே சீராகச் செல்வதற்கு இது உதவ வேண்டும் என்பதற்காகத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.

ஆகவே இந்த அருள் உணர்வைப் பெருக்கிக் கொள்ளுங்கள். மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நொடிப் பொழுதும் உங்களுக்குள் வளர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

சாதாரண எண்ணத்துடன் ஆராய்ச்சி செய்தால் மெய் உணர்வைக் காண முடியாது

சாதாரண எண்ணத்துடன் ஆராய்ச்சி செய்தால் மெய் உணர்வைக் காண முடியாது

 

பூமி தோன்றிய நிலையை… சூரியனிலிருந்து சிதறி வந்த கோளங்கள் பல ஒன்று சேர்ந்து ஆரம்ப நிலையில் ஆவியாய்க் குளிர்ந்து ஒன்றுபட்டு இப்பூமியாகச் சுழல்கின்றது என்ற யூக நிலையில் உள்ளனர்.

பூமி தோன்றிய நிலையை ஆரம்ப நிலைப்படுத்திப் பல நிலைகளில் செப்பிவந்துள்ளேன். வரிசைத் தொடரை இன்று உணர்த்துகின்றேன்.

இந்தப் பூமியே “ஆண்பால் பெண்பால் கொண்ட இரண்டு ஆத்மாக்களின் ஜோதிக் கலப்பினால்…” உற்பத்தியானது.

இந்தப் பூமியைப் போன்ற… இன்று வாழ்ந்திடும் வளர்ந்த அறிவு நிலை பெற்ற… ஆத்ம உடல் கொண்ட மனித இனம் இப்பூமியில் வளரும் நிலைக்கும் முதலே…
1.நம் சூரியனைச் சார்ந்துள்ள 48 மண்டலங்களில்லாமல்
2.மற்ற சூரியனைக் காட்டிலும் சக்தி கொண்ட நிலையில் வாழும் மண்டலங்களில்
3.பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே மனித ஆத்மாக்கள் உண்டு.

நம் பூமியில் இம்மனித இன வர்க்கங்கள் தோன்றியதெல்லாம் மூன்று மாற்றங்களுக்குப் பிறகு தான் மனித இன வர்க்கமே அறிவு நிலை பெற்று வளர்ச்சி நிலையில் வாழ்ந்து வருகின்றது.

அதுவும் இக்கலியினால் மாற்றம் கொண்டு கல்கியில் இன்னும் மாற்றம் கொண்ட நிலையில்தான் செயல்படப் போகின்றது.

ஆனால் இந்நிலையில் செப்பியபடி மனித ஆத்மாக்கள் வளர்ச்சி கொண்ட மண்டலங்கள் பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வருகின்றன.

அத்தகைய மண்டலங்களில் வாழ்ந்த அறிவு நிலை பெற்ற ஆத்ம உடல் கொண்ட சூட்சும நிலையைக் கொண்டோருக்கு எந்த மண்டலத்திலும் தன் நிலையைச் செயலாக்கும் பக்குவம் உண்டு.

அத்தகைய வளர்ச்சி கொண்ட… ஜீவன் கொண்ட ஆத்மாக்களினால்தான்
1.ஒவ்வொரு மண்டலமுமே ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு
2.ஈர்ப்பு நிலையின் சக்தியினால் ஒவ்வொரு மண்டலமாக (புதிதாக) உருப் பெறுகின்றது.

சப்தரிஷிகளின் மண்டலம் ஏழு என்று உணர்த்துகின்றனர். இவ் ஏழு நட்சத்திர மண்டலம் மட்டும் சப்தரிஷியினால் உருக்கொண்டு செயல்பட்டு வாழ்கிறார்கள் என்பதல்ல பொருள்.

இந்த ஏழு சப்தரிஷி மண்டலம் என்பதின் பொருள்…
1.இந்தப் பூமியிலிருந்து இம் மனித ஆத்மா உயர் நிலை பெற்று
2.ஜெப நிலை கொண்ட ஆத்ம மண்டலங்கள்தான் அந்த ஏழு நட்சத்திர மண்டலங்களும்.

அனைத்து மண்டலங்களுமே ஆத்ம நிலை பெற்ற ஜீவன் கொண்டு வாழ்ந்து வழி வந்த ஆத்ம மண்டலங்கள்தான். இப்பூமி தோன்றிய நிலையும் இரண்டு ஒன்றுப்பட்ட ஆத்மாக்களின் அன்புக் கலவையினால் ஆண் பெண் என்ற சக்தி நிலையில் உருவானது தான்.

1.மற்ற சூரியக் குடும்பத்தில் இருந்து வீரிய ஜெபம் கொண்டு
2.ஒரே நிலையில் சூட்சுமம் பெற்று
3.இப்பூமியை இரண்டு ஆத்மாக்களுமே ஒன்றுபட்டு ஈர்த்து ஆவி நிலையாக ஆத்மாவுடன் இணைத்து
4.இரண்டு ஆத்மாவுமே ஆத்மாவுக்குகந்த சக்தியின் ஈர்ப்புத் தன்மையினால்
5.பல சக்திகளைத் தன்னுள் ஈர்த்தே சிறுகச் சிறுக வளர்த்துத்தான் உயிருடன்
6.உணர்வுடனே இப்பூமியை இன்றளவும் வளர்த்துக் கொண்டே தன் சக்தியின் செயலினால் சுற்றிக்கொண்டு
7.பல உயிரினங்களை வளர்த்துக் கொண்டே வாழ்கின்றது இந்தப் பூமி.

இப்பூமியில் ஆண் பெண் என்ற பிணைப்பு நிலையினால் மற்ற உயிராத்மாக்களின் உற்பத்தி நிலை ஏற்படுவதின் நிலையும் இப்பூமியின் நிலையும் ஒன்றுபட்டதுதான்.

இப்பூமி தோன்றி உயிரணுக்கள் உதித்துச் சில காலங்களிலேயே இனத்துடன் இனச் சேர்க்கையினால் இன வளர்ச்சி பெறும் நிலை வந்துவிட்டது.

உயிரணு உதித்தால் அந்த உயிரணுவிலிருந்து பல கோடி உயிரணுக்கள் வளர்ச்சி பெறுகின்றன. அதன் தொடர்ச்சியிலே எந்த உயிரணுக்களுமே அழிவதில்லை. உயிரணுவாய் உதித்த பிறகு அவற்றின் உடல் பிம்ப நிலைதான் மாறு கொள்கின்றது.

இந்நிலையில் வளர்ச்சி பெறும் உயிராத்மாவாக ஞானி சித்தன் ரிஷி சப்தரிஷியாக ஆகி சூட்சுமம் கொண்ட பிறகு
1.ஒவ்வொரு சப்த ரிஷியின் நிலையிலும் தான் ஈர்த்து செயல் கொண்ட ஆசை நிலைக்கொப்ப
2.மற்ற மண்டலத்துடன் சேர்ந்தும் தனி மண்டலமாய் உருப்பெற்றும்
3.தான் வாழ்ந்து வழிவந்த மண்டலத்தை ஆண்டவனாய்க் காத்திடும் நிலையிலும்
4.தன் தன் சக்தி நிலைக்கொப்ப இவ்வுலகில் மட்டுமல்லாமல்
5.மற்ற மண்டலங்களிலும் பால்வெளி மண்டலத்திலும் சென்று வரும் நிலையிலும்
6.தான் பெற்ற சக்தியைச் செயலாக்குகின்றனர் சப்தரிஷிகளெல்லாம்.

ஆகவே… பூமியில் இன்று மனித ஆத்மாவாய் வளர்ச்சி கொண்ட நிலையில் நாம் சேமிக்கும் சொத்து நிலைதான் அப்பேரானந்த நிலை. ஆனால் வழியின் நிலையை அறிந்திடாமல் வாழ்ந்திடும் நிலைதான் இன்றுள்ள நிலை.

இன்றுள்ள மக்களின் எண்ண நிலையே “ஆராயும் நிலையையும் தர்க்க நிலையையும்” வளர்த்துக் கொண்ட நிலையாக உள்ளது.

எந்த நிலையையும் ஆராய்ந்து… அறிவு நுட்பத்தின் வழித்தொடரின் ஞான வழியில் வந்திட்டால்… உண்மை நிலையின் வழித் தொடரை அறிந்திடலாம்.

1.ஆனால் இன்றுள்ள ஆராயும் நிலையோ சஞ்சலமுடன் செயல்படுவதினால்
2.மெய் உணர்வை அறிந்திட முடியாமல் உள்ளது.

“ரெக்கார்ட்” மிகவும் முக்கியம்

“ரெக்கார்ட்” மிகவும் முக்கியம்

 

விஞ்ஞான அறிவு கொண்டு கம்ப்யூட்டரில் ரெக்கார்டு செய்து கொள்கின்றார்கள். தட்டி விட்ட பின் அதனுடைய இயல்புகளைத் தெரிந்து கொள்கின்றனர்.

மனிதர்களாக இருக்கும் நாமும் இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள் என்றால் உற்று நோக்கி… அதைப் பதிவு செய்து கொள்கின்றோம்.

(கம்புயூட்டரில் பதிவானதைத் தட்டுவது போல்) சண்டையிட்டவர்களை மீண்டும் எண்ணியுடன் நமக்குக் கோபம் வருகிறது. அந்த நேரத்தில் நம் நல்ல காரியங்களைக் கெடுக்கின்றது.

கோவிலுக்குச் சென்று வணங்குகின்றோம். எண்ணியபடி நடக்கவில்லை என்றால் அதைப் பதிவு செய்து கொள்கின்றோம். எப்படி…! “என்னத்தைச் சாமி கும்பிட்டோம்…? ஒன்றும் நடக்கவில்லையே…!” என்று அதை எண்ணுகின்றோம்

அந்த ரெகார்டைத் தட்டியவுடன் சோர்வடைந்து… நல்லதையே எடுக்க முடியாது போய் விடுகின்றது

ஏனென்றால் எண்ணிய உணர்வுகளைத் தான் எலும்புகளில் (கம்ப்யூட்டர் போல்) ரெக்கார்ட் செய்து வைத்துக் கொள்கிறது. இப்படி எண்ணிலடங்காத பதிவுகள் நமக்குள் உண்டு.

ஒன்று விஞ்ஞானம் அதை எல்லாம் நிரூபிக்கின்றது…!

அதே போன்று தான் சண்டை போடுவதையும் பதிவாக்குகின்றீர்கள் குடும்பத்தில் வந்த கஷ்டங்களையும் பதிவாக்குகின்றீர்கள் அந்தந்தப் பதிவை எண்ணும் பொழுது அதன் வழியே நடக்கிறது.

அதே சமயத்தில்… அத்தகைய கஷ்டத்திலிருந்து மீள வேண்டும் என்று நிலை வரும் போது… “கஷ்டங்களை மறந்து…” அந்த மகரிஷிகளை அருள் சக்தி பெற வேண்டும் என்று உணர்வை எடுத்தால் அருளைப் பெருக்குகின்றோம்… சிந்திக்கும் ஆற்றலையும் அது கொடுக்கின்றது. “சிரமங்களை மீட்டுத் தருகின்றது நம்முடைய எண்ணம்…”

நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்.

உதாரனமாக துணி எடுக்க ஜவுளி கடைக்குச் செல்ல வேண்டும் என்று போகும் போது அந்த நேரத்தில் குழந்தை வந்து அடம்பிடித்தால் என்ன நடக்கிறது…?

ஏன்டா… இப்படி வெளியே போகும்போது அடம்பிடிக்கின்றாய்…? என்று இந்த வெறுப்படைந்தால் போதும். கடைக்குச் சென்று சரியான துணியை நீங்கள் எடுத்துக் கொண்டு வாருங்கள் பார்ப்போம்…!

இந்த சங்கடம் தான் அங்கே வேலை செய்யும்… வெறுப்பு உணர்வு தான் முன்னாடி கண்களில் வரும்.

நல்ல துணியை எடுத்துப் போட்டாலும் “இது வேண்டாம்… இது வேண்டாம்…” என்று சொல்லிக் கொண்டிருப்போம். கடைசியில் வெறுப்பு அதிகமாகி “சடைத்துக் கொண்டு… சரி இதையாவது கொடுங்கள்…” என்று எடுத்து வருவோம்.

வீட்டில் மற்றவர்களோ சந்தோஷமாக இருப்பார்கள். துணியைக் காண்பிப்போம். “என்னங்க… போயும் போயும் இந்தத் துணியைப் போய் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறீர்களே…!” என்பார்கள்.

இல்லைங்க… இதுதான் நல்லது என்போம் நன்றாகப் பாருங்கள் என்பார்கள். பார்த்தாலும் அன்றைக்கு அது தெரியாது.

ஆனால் மறுநாள் காலையில் பார்த்தால்… சனியன்…! போகும்போது குழந்தை குறுக்கே வந்து அடம்பிடித்தான். எத்தனையோ தொல்லை கொடுத்தான் என்று மீண்டும் “சனியன்…” என்று தான் நாம் சொல்வோம்.

இந்த உணர்வுகள் அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் இந்த வெறுப்பு வரும். இந்த உணர்வோடு அன்றைக்கு மற்ற காரியங்கள்… ஒரு சமையலையே செய்தாலும் (துணி எடுத்ததை எண்ணி) சனியன் என்று எண்ணிக் கொண்டு காயை அறுத்துக் கொண்டிருந்தால் போதும். அந்த உணர்வு என்ன செய்யும்…?

கையில் எடுத்து இப்படிப் பிடித்து அப்படி அறுப்பதற்குப் பதில் அது சிறிதளவு சாய்ந்தால் போதும் கையிலே அறுபட்டு விடும். என்ன கிரகமோ…? என்று சொல்வோம். இதைப் பார்க்கலாம்.

ஆக… கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய். மனித வாழ்க்கையில் இயக்கப்படும் உணர்வின் இயக்கங்கள் தான்.

ஏனென்றால் இந்த உடலில் எத்தனை நாள் வாழுகின்றோம்…? இன்றைய செயல் நாளைய சரீரம்.

ஆகவே இது போன்ற தீமைகளை நீக்க அருள் ஞானிகள் உணர்வுகளை… உங்களுக்குள் பெறச் செய்வதற்கு தான் இந்த உபதேச வாயிலாக தொடர்ந்து “ரெக்கார்ட் செய்கின்றேன்…”

எந்த அளவிற்கு நீங்கள் இதைக் கூர்ந்து பதிவு செய்கிறீர்களோ அந்த அளவுக்கு… அது திரும்ப எண்ணும் பொழுது “உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்”

குருநாதர் காட்டிய வழியில் மகரிஷிகளின் அருளாற்றலைப் பெற்றேன். அதை உங்களில் பதிவாக்குகின்றேன் நீங்கள் இந்தப் பதிவை எடுத்துக் கொள்ளலாம்.

பையனோ குடும்பமோ தொழிலோ சரியில்லை என்றால் அதை ரெக்கார்ட் செய்கின்றீர்கள். எப்போது பார்த்தாலும் இப்படியே நடக்கின்றது என்றும் பதிவு செய்து கொள்கிறீர்கள்.

உதாரணமாக… மனைவி மீது கொஞ்சம் வெறுப்பு இருந்தால் அதைப் பதிவு செய்து விட்டால் போதும். “தண்ணீர் கொண்டு வா…” என்போம்.

அவர்கள் வேலையில் கவனமாக இருக்கும் போது சரியாகக் காதில் விழுகாது. “எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான்…! நான் சொன்னால் என் மனைவி கேட்பதே இல்லை…! என்று கோபமாகத்தான் அடுத்துப் பேச வரும்.

அதே போன்றுதான் மனைவியும் கணவனை பார்த்து… “ஏதாவது ஒன்று என்றாலும் பொறுமை இல்லாதபடி உடனே இவருக்குக் கோபம் வந்து விடுகிறது. என்னை குற்றவாளியாகவே இவர் பார்க்கின்றார். இந்த உணர்வு தான் குடும்பத்தில் வளர்கின்றது.

இது எல்லாம் சந்தர்ப்பங்கள் தான்…!

அதை மாற்றி அமைப்பதற்குத் தான் அந்த ஞானிகள் உணர்வினைப் பெறச் செய்வதற்கு உபதேசமாக ரெக்கார்ட் செய்கிறோம்.

இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி. நீங்கள் அதை இச்சைப்பட்டு வளர்த்துக் கொண்டால் அது கிரியையாகி அந்த ஞானமாக நல்வழியில் உங்களை வழி நடத்தும்.

ஆகவே அந்தத் தெய்வீக பண்புகளை வளர்த்துப் பழக வேண்டும். அருள் ஞானிகள் உணர்வை வளர்த்தால் நாம் தெய்வமாகின்றோம். நாம் எல்லாம் தெய்வமாக ஆவதற்குத் தான் ஞானிகள் இத்தகைய தத்துவங்களை கொடுத்தார்கள்

நல் வழி நடந்தால்… ரிஷிகளின் துணை நமக்கு என்றும் உறுதுணையாக இருக்கும்

நல் வழி நடந்தால்… ரிஷிகளின் துணை நமக்கு என்றும் உறுதுணையாக இருக்கும்

 

“எண்ண நிலைப்படிதான் அனைத்து நிலைகளும் இயங்குகிறது…!” என்று உணர்த்தி வந்தேன். இந்நிலையின் சூட்சும நிலையை உணர்த்துகிறேன்.

மகிழ்ச்சியாக உள்ள இடத்தில் அனைவரின் எண்ண நிலையும் மகிழ்ச்சி கொண்டதாகவும்… துக்கம் அனுஷ்டிக்கும் இடத்தில் அந்த நிலைக்கொப்ப அனைவரின் நிலையிலுமே துக்க நிலை சாடும் என்றுணர்த்தினேன்.

இப்படி இவ்வெண்ண நிலையின் சுவாச நிலை கொண்டுதான் இன்றைய “கைரேகை ஜோதிட நிலையும்… மனோவசிய நிலையும்” உள்ளன.

அந்நிலையிலுள்ளோர் (மனோவசியம் செய்பவர்) தன் எதிரில் அமர்ந்துள்ளவரின் எண்ணத்துடன் தன் எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தி அவரது எண்ணத்துடன் ஈர்க்கும் நிலையில் மனோவசியம் செய்யப்படுவோரின் அனைத்து நிலைகளுமே செய்யப்படுபவருக்கு இவரின் எண்ணக் கலவையுடன் வந்து மோதி அனைத்து நிலைகளும் அறிகின்றனர். இந்நிலை அறிபவர்கள் மற்ற ஆவியின் தொடர்பை வைத்து ஈர்க்கும் சக்தியைச் செயல்படுத்துகின்றனர்.

ஆனால் நம்மில் உயர்ந்த ரிஷிகளின் நிலையும் எண்ண சக்தியின் சக்தி நிலைத்தொடர் கொண்டுதான் அவர்கள் சூட்சும நிலைக்குச் சென்றதின் நிலையும்.

இவ்வுலகினில் பிறந்திட்ட அனைவருக்குமே ஒவ்வொரு நிலையான எண்ணக் கலவையின் வாழ்க்கை நிலையுண்டு.

அவ்வழியில் நல்லுணர்வு கொண்ட சக்தி நிலையின் எண்ணக் கலவையுடன்… வாழ்க்கையில் வழி வந்தவர்களின் நிலையில்தான் இவ்வுலகம் தோன்றிய நாள் கொண்டே…
1.பல சக்தி நிலையை இவ்வெண்ணத்துடனே ஈர்த்து இன்று ஆண்டவனாய்ச் செயல்படுகின்றனர்.
2.அவர்கள் மனித ஆத்மாவாய் நம்மைப் போன்ற நிலையில் வந்தவர்கள் தான்…!

எண்ணமுடன் தீய சக்தியை வளரவிட்டவர்களின் நிலை எல்லாம் எந்த நிலைக்குச் சென்றிட்டார்கள் என்று முன் பாட நிலையிலேயே உணர்த்தியுள்ளேன்.

நல்லுணர்வின் வழி வந்தவர்கள்…
1.தன் வாழ்க்கையில் நடந்திடும் கஷ்ட நஷ்டங்களை எல்லாம் ஜெயித்த நிலை கொண்டு வந்தவர்கள் தான்
2.இவ் உலகில் தோன்றிய மகான்கள் எல்லாரும்.

இதன் வழி வந்தவர்களின் உடல்களைத்தான் இவர்களின் நிலையைக் காட்டிலும் சக்தி கொண்ட ரிஷிகள் தன் உடலாக ஈர்த்துச் செயல்படுகின்றனர்.

ஆதிசங்கரர் போன்றோரும் மற்றும் அருணகிரிநாதர் முகமது நபி புத்தர் இயேசு பிரான் ஐயப்பர் கோலமாமகரிஷி இக்கலியில் வந்திட்ட இராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகாநந்தரும் இன்னும் பல ரிஷிகளும் இவ்வழியில் வந்தவர்கள் தாம்…!

நம் போகரே பல உடல்களைத் தன்னுடலாகச் செயல் கொண்டு செயல்படுத்தி வந்தார். இவ்வுலகினிலே ஆறுமுகனாய் இவர்கள் புராணக் கதையில் சொல்லிய நிலையில்லாமல் ஆறு உடல்களைத் தனதாகச் செயல்படுத்தி வந்தார்.

1.பிறவி எடுத்துப் பிறந்து வளர்ந்து வழிபடுத்தவில்லை தன் சக்தி நிலையை நம் போகர்
2.பல ஆத்மாக்களை ரிஷியின் நிலைக்குச் சென்றிடும் பக்குவ நிலை ஏற்படுத்தித் தந்தார் நம் போகர்
3.இன்று அனைவருக்கும் முருகனாய் ஜோதி அருள் அளித்திட ஆண்டவனாய்ச் செயல் கொண்டுள்ளார்.

இவ்வெண்ண நிலையின் தொடர் நிலையை வைத்துத்தான் நம் ரிஷிகளின் சக்தி நிலையெல்லாம் செயல் கொண்டு நடக்கின்றது. போகரைப் போன்றே இந்நிலையில் பல சித்தர்கள் இவ்வுலகெங்கும் செயல் நிலைப்படுத்தி நல் உணர்வுகளை இன்றும் செயலாக்கி வருகின்றனர்.

ஆனால் இக்கலியில் பக்தி நிலையும் தன் உணர்வும் குறைந்ததினால் பல நிலைகள் செயல்படாமல் செயற்கைக்கே அடிமைப்பட்டுச் சென்று விட்டனர்.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால்…
1.நம் எண்ண சக்தியின் தொடர் நிலையை ஈர்த்து
2.நல்லுணர்வு கொண்ட எந்த ரிஷியின் சக்தியின் தொடரையும் நாம் ஈர்த்துச் செயல் கொண்டிட முடிந்திடும்
3.நாமும் அவர்களின் நிலையை அடைய முடியும் என்பதற்குத் தான்…!

சித்தனாக… மகரிஷியாக… ஆகும் செழுமை

சித்தனாக… மகரிஷியாக… ஆகும் செழுமை

 

பரிசுத்தம் தங்கும் மனம் என்பது எதுவப்பா…?

தங்கத்தைச் சுத்தம் செய்யும் ரசம் (திரவகம்) தங்கத்தின் செழுமையைக் காட்டும். “மகரிஷிகளின் அருள் சக்தி” பரிசுத்த மனதைத் தெளிவாக்கிடும் உண்மையின் நிலை ஆகும்.

1.“ஈஸ்வரா…!” என்று ஒலி நாதத்தைக் கூட்டி… உன்னுள் உன்னை நீ தெளிந்த விதம்
2.உலகத்தையே உன்னைப் பார்த்திடச் செய்துவிடும்.
3.யாம் சொன்ன தியான வழியைக் கடைப்பிடிக்கும் போது உன் உள்நிலை சுடர்விட்டுப் பிரகாசிக்கும்.

அதை யாம் (ஈஸ்வரபட்டர்) அறிவோம்.

பாய்மரக்கப்பலில் “விரிக்கபட்ட பாய்”
1.காற்றின் வேகத்தால் கடலில் படகைச் செலுத்துவதோடு மட்டுமல்லாதபடி…
2.சில நேரத்தில் படகையே நிலைகுலையைச் செய்திடும் செயலும் உண்டு.

அது போல்
1.அறிவின் விவேகம் (ஆறாவது அறிவு) அலைக்கழித்திடாமல் சமன்படுத்திட பழியைக் காண்கின்றது
2.காண்பதோடு செயல்படுத்தும் காரியமும் ஆற்றுகின்றது.

அறிவின் பரிணாம வளர்ச்சி விஞ்ஞான அறிவினால் இயந்திர பாகங்கள் பொருத்தப்பட்டு கடலோடும் வழிவகுக்க அறிவின் நிலைக்களன் வித்தாகின்றது.

மகரிஷிகளின் அருள் பார்வை உன் மீது விழும் பொழுதே அது சத்திய சோதனையின் துவக்கம் என்று நீ எண்ணுவாய். அது சோதனை அல்லவப்பா…!

தாய் தன் குழந்தையைப் பரிந்து எடுக்கும் பாசத்தின் விளைவு… தவழ்ந்திடும் குழந்தை தானே நடந்திடும் செயலில் கொள்கின்ற அனுபவ நடைமுறை போல்…
1.மகரிஷிகளின் ஒளி சக்திகளை எந்தெந்த உயிராத்மாக்கள் தன் நிலையை உயர்த்துவதற்காக வேண்டி ஏக்கமாய் ஏங்குகின்றதோ
2.அந்த மகான்களின் எண்ணத்துடன் தானும் ஒன்றி…
3.அவர்களுடன் இணைந்து ஜெபித்திடும் செயலில் தியானிக்கின்றதோ…
4.அந்த நல்வழி நிச்சயம் அங்கே சிறக்கும்.

உலக வாழ்க்கை நடைமுறையிலும் “பொன் (தங்க) நகை படும் பாடு… உன் பாடு…!” என்ற சூட்சுமப் பொருளாக உணர்த்தி வந்ததனை…
1.உம்மைப் பக்குவப்படுத்திட முனைந்ததன் பொருளாக
2.நீ அறிய வேண்டியது முக்கியம்.

காப்பிய ரிஷி தசரதன் பெற்றுக் கொண்ட “புத்திர சோகம்” என்று சுட்டிக்காட்டப்பட்டதை…
1.உறவின் வழிமுறைக்குப் போதனைப்படுத்தியதாக உணர்ந்து
2.சிந்தனையில் அதை நீ சீர்தூக்கிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மனதின் விசாலம் எது…? தயை என்ற சொல்…!

உலகளவிற்கு மனதிற்குள் இடர்கள் வந்தாலும்… அதுவும் ஒரு கடுகு அளவு தான். ஆனால் சித்தன் ஆகும் மனதின் விசாலம் எத்தனை பெரியது…? சிந்தனை செய்…!
1.முயற்சி வினையாக்கும்
2.விடாமுயற்சி திருவினைப் பயனாகும்.

ஆஞ்சநேயன் விஸ்வரூபம் காட்டினான்… ஆகாயத்தில் நீந்தினான்… அணுவளவாய் ஒரு மாறினான்… நெருப்பில் உலவினான்… நீரில் மிதந்தான்… உடலையே சிறகு போல் எளிதாக ஆக்கினான்… கணம் கொண்ட பக்குவ கதியாக்கினான்… பேரின்ப லயத்தை அனுபவித்தான்…! என்று காட்டுவதெல்லாம்
1.கூறிடும் பொருளின் அடிப்படை நிலைகளின்
2.தியானம்… தியானம்… தியானமே…!

கண்டவன் சக்தியை… மகரிஷிகளின் செயல்பாட்டை… “புறம் கூறி” செயலின் செயல்பாட்டை… அணை போட்டுத் தடுக்க முடியாது. ஆனால் மகரிஷிகள் “அறம் கூறினால்…” நிலைமை என்ன ஆகும்…? அவர்கள் அன்பு மகான்களப்பா.

நம் கைகளைக் கொண்டு சூரியனை மறைத்து விட முடியுமா…? முடியாது…! ஆனால் “நான் மறைத்துவிடுவேன்…” என்று அதைச் செயல்படுத்தித் தனக்குத் தானே மறைந்துக் கொண்டால் அது எண்ணத்தின் மாயை தான்.

ஒருமையைப் பலப்படுத்திடும் செழுமை… சித்தர்கள் மகரிஷிகளின் செயல். அதற்குள் ஐந்தும் அடங்குதல் என்பது விண் செல்ல வேண்டிய பாதையைக் காட்டும் தெய்வீக நிலை.

1.பூக்களின் மணத்தை நுகர்ந்திடும் மன நிலையே
2.யாம் சுட்டிக் காட்டும் இந்த எளிய தியானத்தில் உணர்ந்து கொள்ள வேண்டிய “ஆரம்ப அனுபவ நிலை…”

மகோன்னத நிலையே ஆத்ம சம்பூரணம்…!

அசுர உணர்வுகள் வந்தாலும்… அகஸ்தியனைப் போன்று அதை அடக்கக்கூடிய “ஜீரணிக்கும் வல்லமை” பெற வேண்டும்

அசுர உணர்வுகள் வந்தாலும்… அகஸ்தியனைப் போன்று அதை அடக்கக்கூடிய “ஜீரணிக்கும் வல்லமை” பெற வேண்டும்

 

அகஸ்தியன் காட்டிற்குள் செல்கின்றான்… அங்கே வாதாபி என்று அரக்க சகோதரர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் தங்கள் ரூபத்தை மாற்றக் கூடியவர்கள். (இன்றும் இது போன்ற ரூபத்தை மாற்றக்கூடிய புலையர்கள் காட்டுக்குள் இருக்கின்றார்கள்). வாதாபி சகோதரர்கள் அகஸ்தியனை விருந்தாளியாக வரவேற்கின்றார்கள்.

விருந்தாளியாக வருபவர்களுக்கு மாமிச உணவு கொடுப்பது தான் எங்களுடைய வழக்கம் என்று சொல்கிறார்கள்.

நான் மாமிசம் சாப்பிடுவது இல்லையப்பா…! என்று அகஸ்தியர் சொல்கின்றார்.

இல்லைங்க… எங்கள் ஊருக்கு யார் வந்தாலும் நாங்கள் இதைக் கொடுக்கத் தான் செய்வோம்… அது தான் எங்களுடைய வழக்கம் என்று சொல்கின்றார்கள்.

நடைமுறையில் பார்த்தோம் என்றால் எங்கள் வீட்டுக்குச் சாமி நீங்கள் வந்திருக்கிறீர்கள் சிறிதளவு காபி சாப்பிடுங்கள் என்பார்கள். ஆனால் சர்க்கரைச் சத்தாக இருக்கும்.

எனக்கு எதிரியாகும்… வேண்டாம்…! என்று சொன்னாலும்… பாசத்தால் நான் சாப்பிட்டேன் என்றால் என்ன ஆகும்…? சர்க்கரைச் சத்து அதிகமாகும்.

அல்லது முதலில் சாப்பிட்டு வந்திருப்பேன்… இங்கே மீண்டும் குடிக்க வற்புறுத்தும் பொழுது சாப்பிட்டால் அஜீரணம் ஆகிறது அதிகமாகச் சாப்பிட்டால் என்ன ஆகும்…? தள்ளாட்டமாகும்.

“வேண்டாம்…” என்று சொன்னாலும் கூடக் கொஞ்சமாவது அதைச் சாப்பிட வேண்டும் என்று அன்பால் கட்டளை இடுவார்கள். சாப்பிடவில்லை என்றால் மனவருத்தம் ஆகிறது.

“வருத்தப்படுகிறார்களே…” என்று எண்ணி நான் அதை உட்கொண்டால் என் உடல் தான் நலிவடைகின்றது.

அதே போல் கல்யாணத்திற்கு மற்ற விசேஷத்திற்கோ பத்திரிக்கை கொடுக்கப்படும் பொழுது என்ன நடக்கிறது…?

ஒரு முறை தான் வருகின்றீர்கள் நீங்கள் கண்டிப்பாகக் காபி சாப்பிட வேண்டும் அல்லது கொஞ்சம் பலகாரத்தையாவது சாப்பிடுங்கள் என்று சொல்கின்றார்களா இல்லையா…!

நாம் அதைப் பற்றி சிந்திக்கிறோமா என்றால் இல்லை. போற்றுவதற்கு அந்த நிலையைச் செய்கிறோம்.

அதே மாதிரித் தான் அக்காலத்தில் வாதாபி என்ற அரக்க சகோதரர்கள் அகஸ்தியனைக் கட்டாயப்படுத்தி “மாமிசம் சாப்பிட வேண்டும்” என்று சொல்கின்றார்கள்.

எங்கள் விருந்தாளிக்கு நாங்கள் செய்து தான் ஆவோம். நீங்கள் சாப்பிட்டுத் தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றார்கள்.

அகஸ்தியர் சரி என்று சொல்கிறார்… ஏனென்றால் அப்பொழுது அவர் புரிந்து கொள்கின்றார்.

வாதாபி ஆடாக மாறுகின்றான்… மற்றவன் அறுத்துச் சமைக்கின்றான் அகஸ்தியனுக்குக் கொடுக்கின்றான்.

சாப்பிட்டு முடிந்தபின் ஏ…வ்வ்வ்…! என்று அகஸ்தியன் ஏப்பம் விடுகின்றான்… ஏனென்றால் அவர் புரிந்து கொள்கின்றார் கணங்களுக்கு அதிபதியாகித் தீமைகளை அடக்கும் வல்லமை பெற்றவன் தான் அந்த அகஸ்தியன்.

அதனால் ஏ…வ்… என்று ஏப்பமிட்டபின் “வாடா வாதாபி…!” என்று தன் சகோதரனை அழைக்கின்றான்.

அவன் அப்பொழுதே ஜீரணம் ஆகிவிட்டானப்பா…! என்று அகஸ்தியர் சொல்கின்றார்.

ஆஹா அப்படியா…! உன்னை நான் இப்போது கொன்று சாப்பிடப் போகின்றேன் பார்… என்று அடுத்தவன் சொல்கின்றான். அகஸ்தியன் தன் பார்வையிலேயே அவனைச் சுட்டு பொசுக்கி விடுகின்றான்.

இராமாயணத்தில் படித்துப் பாருங்கள்… இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் புராணங்களில் இதை எப்படி மாற்றுகின்றார்கள் என்றால் “அகஸ்தியன் கணபதியை வணங்கிச் சென்றதால்தான்…” அரக்கனைக் கொன்றான். ஆகையினால் அந்தக் கணபதியை “வாதாபி கணபதி” என்று சொல்கின்றனர்.

அரக்க உணர்வு கொண்டு மற்றவர்களை வேதனைப்படுத்திய அந்த அரக்கனைக் கொன்றவன் அவன்…! ஆகையினால் “அந்தக் கணபதிக்கு” நீங்கள் அபிஷேகம் அர்ச்சனை செய்தால் உங்கள் பாவம் தோஷம் எல்லாம் போகும் என்று காசைக் கொடுத்து விலைக்கு வாங்கும் நிலைதான்.

யாரும் தப்பாக நினைக்காதீர்கள்…!

அகஸ்தியன் தீமைகளை வெல்லும் வலிமை பெற்றான்… அரக்க உணர்வுகளை அடக்கினான். திருமணமான பின்… தான் கண்ட ஆகண்ட அண்ட்த்தின் உண்மைகளை எல்லாம் மனைவிக்குப் பாய்ச்சினான் அகஸ்தியன்.

இருவருமே ஒருவரை ஒருவர் உயர்த்திடும் நிலையாக… மனைவி உயர வேண்டும் என்று கனவனும் கணவன் உயர வேண்டும் என்று மனைவியும் அருள் உணர்வென்ற கருவை உருவாக்கச் செய்தனர்.

வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து இரு மனமும் ஒன்றாகி… இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றிப் பேரருள் உணர்வை உருவாக்கி… உயிரைப் போன்றே உணர்வுகளை எல்லாம் ஒளியாக்கும் தனமை பெற்றனர்.

அவருடைய உணர்வுகள் துருவ நட்சத்திரத்தில் இருந்து வந்து கொண்டேயிருக்கின்றது.

அந்த உணர்வை வலுவாக்கிக் கொண்டால் நம்மை அறியாமல் வரும் தீமைகளைச் சுட்டு பொசுக்குமா இல்லையா… இந்த வழியை யாரும் காட்டவே இல்லையே…!

ஆனால் இப்பொழுது நான் (ஞானகுரு) இந்த விளக்கத்தைச் சொன்னால் “சாமி ஏதோ புதிதாகச் சொல்கின்றார்… கதை விடுகிறார்…” என்று தான் நினைக்கின்றார்கள்.

இயற்கையின் உண்மை நிலைகளை குரு எனக்குக் காட்டினார் அதைத்தான் நான் உங்களுக்குச் சொல்ல முடிகிறது.

“சூட்சம உலகிற்கு எல்லோரையும் ஞானியாக அழைத்துச் செல்லவே” ரிஷிகள் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்

“சூட்சம உலகிற்கு எல்லோரையும் ஞானியாக அழைத்துச் செல்லவே” ரிஷிகள் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்

 

இன்றும் இக்கலியில் ஆத்மீக நெறியும் நல்லொழுக்கம் அன்பு பாசம் பக்தி தர்மம் நியாயம் சமத்துவம் இப்படிப்பட்ட நல்லுணர்வுகளும் சத்தியத்துடன் வளர்ந்து கொண்டுதான் உள்ளன.
1.இந்த நிலையில் வாழும் ஆத்மாக்களின் நல்லுணர்விற்காகவே
2.இப்பூமியின் நிலை இன்றளவும் நிலைத்துச் செயல்படுகிறது.

எண்ணத்தில் நல் சக்தியும் தீய சக்தியும் உள்ள நிலையில்… நல்லுணர்வைக் காட்டிலும் தீய உணர்வின் வழி நிலைதான் பெருகும் நிலையில் உள்ளது.

இன்று வாழ்ந்திடும் மனித ஆத்மாக்கள் மட்டுமல்ல தீய உணர்வுடன் வாழ்வது. இவ்வுடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்களிலும் தீய சக்தி நிறைந்த எண்ண நிலைகள்தான் நல்லுணர்வைக் காட்டிலும் பெருகிய நிலையில் உள்ளன.

ஆவி உலகிலும் நல்லுணர்வு கொண்ட ஆத்மாக்களின் நிலையுண்டு. வாழும் மனித ஆத்மாக்களிலும் இந்நல்லுணர்வின் நிலை உள்ளதினால்தான் நம் ரிஷிகளின் சக்தி நிலை இன்றளவும் இப்பூமியின் நிலையைக் காத்தருளும் நிலையில் செயல் கொண்டு நடக்கின்றது.

இன்றைய விஞ்ஞானத்தினால் செய்து வைத்துள்ள அணு குண்டுகளும் விஷ மருந்துகளும் நிறைந்துள்ள இந்த நிலையிலும்
1.ஒரு நொடியில் அனைத்துமே மாற்றம் கொள்ளும் விஷ சக்தியின் தாக்குதலிலிருந்து
2.நல்லுணர்வு உடையோர் வாழ்வதினால்… இவ்வுலக நிலையே நம் ரிஷிகளினால் காக்கப் பெற்று வருகிறது.

நல்லுணர்வையே உலகெங்கும் பரப்பிடும் நிலைக்காக பக்தி நிலையை வளரவிட்டதின் நிலையே… இன்று பக்தியையே தன் பேராசைக்கு உகந்த சக்தியாக நாடும் நிலையாக இன்றைய எண்ண நிலை உள்ளது.

பூமிக்காகவும் இப்பூமியில் வாழ்ந்திடும் உயிராத்மாக்களுக்காகவும் தன் சக்தி நிலையைச் செயல்படுத்திய நம் ரிஷிகளின் சக்தி நிலை செயல்படாமல்… மீட்டுச் செல்லும் நிலைக்கு இன்று வந்துள்ளது.

“மீட்டுச் செல்லும் நிலை…” என்பது…
1.இம் மாறப்போகும் கலியில் வாழ்ந்திடும் மனித ஆத்மாக்கள் இக்கலியுடனே ஈன நிலை பெற்று…
2.கல்கியின் ஆரம்ப நிலை உயிரினமாகிப் பல நிலைகளை எய்தி…
3.பல கோடி ஆண்டுகள் இவ்வெண்ண சக்தியுடனே அல்லல் கொண்டிடாமல் தடுக்கும் நிலை தான்.

இக்கலியிலேயே மனித ஆத்மாவை மனிதனாய் ஞானியாய் சித்த அருள் பெற்று சூட்சும நிலைக்குச் சென்றிடச் செயல் கொண்டிடும் நிலைதான் இன்றுள்ள நம் ரிஷிகளின் செயல் நிலை.

இந்நிலையை ஒவ்வொருவரும் உணர்ந்து மாறப்போகும் இக்கலியின் நிலையை எண்ணத்தில் கொண்டு இவ்வெண்ண சக்தியினால் செயல் கொண்டே வாழ்ந்திடுங்கள்.