முன் ஜென்மத் தொடர்ச்சி தான்… இன்றைய வாழ்க்கை

முன் ஜென்மத் தொடர்ச்சி தான்… இன்றைய வாழ்க்கை

 

பிறவி எடுத்து நம் பிறவியில் நமக்கு வரும் குணாதிசயங்கள் எல்லாம் ஜாதகத்திலும் ஜோதிடத்திலும் சொல்வதைப் போல்
1.நாம் பிறக்கும் நாளைக் கொண்டோ
2.பிறந்த நட்சத்திரத்தைக் கொண்டோ வருவதல்ல அந்தக் குண நிலைகள் எல்லாம்…!

இந்தக் குண நிலைகளின் உண்மை நிலை ஒவ்வொரு மனிதனுக்கும் வருவது அவன் முதல் பிறவியில் செய்ததின் தொடர்ச்சி தான்… இந்தப் பிறப்பில் நாம் சாந்தமாக உள்ளதும் கோப நிலையில் உள்ளதும் மற்ற எல்லாமே.

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குண நிலையில் வாழ்கின்றோம். எல்லோரும் ஒன்றாக நினைப்பது அவ்வாண்டவனின் சக்தி ஒன்றைத்தான்.

குண நிலையில் பல மாற்றங்கள் இருந்தாலும் அவ்வாண்டவனின் சக்தியை ஒரே நிலையில் எப்படி வணங்குகின்றோமோ அந்நிலையிலேயே எல்லோரும் வாழ்ந்திடலாம்.

1.ஒருவர் கோபக்காரராக இருந்தால் அந்தக் கோப நிலை முதல் ஜென்மத்தின் தொடர்ச்சி தான்.
2.சாந்தமுள்ளவராக இருப்பதும் முன் ஜென்மத்தின் எண்ணத்தை வைத்துத்தான் அமைகிறது.

முன் ஜென்மத்தின் தொடரிலேயே இப்பொழுது பிறவிக்கு வந்தாலும் இந்த ஜென்மத்தில் நாம் வாழும் வாழ் நாட்களை வீண் விரயமாக்கிடாமல் வாழ வேண்டும்.

அந்த வினைப்பயன்கள் எல்லாம்
1.நாம் பிறந்த நேரம்…
2.நாம் செய்த பாவ புண்ணியங்கள்… என்று தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

இப்பொழுது வாழ்ந்திடும் வாழ் நாட்களில் நம் எண்ணத்திலும்… நம் சுவாசத்திலும் அந்த மகரிஷிகள் ஞானிகளின் அருள் சக்திகளை எடுத்து வாழ்ந்து சுவாசத்தைச் சீராக்கி அருள் மணங்களை நம் சுவாச நிலைக்குக் கொண்டு வந்து வாழ்ந்திட வேண்டும்.

இந்தப் பிறவியில் இதை அதிகமாக வளர்க்கும் பொழுது நம்முடைய நாளைய சரீரம் அது ஒளியின் சரீரமாக அமையும்.

இந்த உடலைக் கழட்டிவிட்டு விட வேண்டும்

இந்த உடலைக் கழட்டிவிட்டு விட வேண்டும்

 

இன்றைய சூழ்நிலையில்… வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து எடுத்துப் பழக வேண்டும். தனுஷ்கோடி…! அருள் உணர்வுகளைச் சேர்த்துக் கொள்கின்றோம்.

காரணம்… நாம் கோடிக்கரையில் (மனிதப் பிறவியின் கடைசியில்) இருக்கின்றோம். இதை விட்டுச் சென்றால்
1.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குச் செல்கின்றோம்
2.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெறுகின்றோம்.
3.“உடலைக் கழட்டிவிட்டு விடுகின்றோம்…!”

ஏனென்றால் இந்த உடலிலிருந்து மீண்டும் இன்னொரு உடல் பெறுவதற்குப் பதிலாக இந்த உடலில் இருக்கும் பொழுதே உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாற வேண்டும்.

இன்றைய உலகில்
1.விஞ்ஞான வழியில் எத்தனையோ கடும் விளைவுகள் வந்து கொண்டிருக்கின்றது
2.விஷமான உணர்வுகளும் பரவிக் கொண்டுள்ளது
3.”புதிய புதிய வைரஸ்களும்” அதிக அளவில் பரவிக் கொண்டே உள்ளது.

தீமையான உணர்வுகளை வளர்க்கும் சில குடும்பங்களிலோ ஊர்களிலோ இது அதிகமாகப் பரவுகின்றது. ஒருவருக்கொருவர் சண்டையிடுவதும்… வேதனைப்படுவதும்… மந்திர ஜாலங்களைச் செய்வதும்… மாயாஜாலங்கள் செய்து அது நடக்கவில்லை என்றால் சாப அலைகள் விடுவதும்… அதன் மூலம் சாபமிட்ட ஆன்மாக்கள் வெளியேறி… எல்லை கடந்து செல்லப்படப் போகும்போது அந்தத் தெருக்களிலே பல தொல்லைகளும் துயரங்களும் அங்கே வாழும் மக்களுக்கு ஏற்படுகின்றது.

அதிலிருந்தெல்லாம் மக்களை மீட்டிடும் சக்தியாக நாம் செயல்படுத்த வேண்டும். ஆகவே… எல்லோரும் அந்த அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானத்தைக் கடைபிடிப்போம்.
1.அவரவர்கள் வீட்டிலும் தெருவிலும் ஊரிலும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளைப் பரப்புவோம்.

ஒவ்வொரு உயிரும் கடவுள் என்றும் ஆண்டவன் என்றும் ஈசன் என்றும் அவன் வீற்றிருக்கும் ஆலயம் அந்த உடல் என்றும் நமது குருநாதர் காட்டிய வழியில் அதைத் தூய்மைப்படுத்துவோம். உடலான அந்த ஆலயத்தைச் சுத்தப்படுத்துவோம்.

மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களுக்கெல்லாம் அருள் உணர்வுகள் கிடைக்கப் பெற வேண்டும் என்று பரப்பி… மக்கள் அதைப் பெறும்படி செய்வோம்… அவர்களை மகிழ்ந்து வாழச் செய்வோம்.

அவர்கள் வெளிப்படுத்தும் மகிழ்ந்த உணர்வைக் கண்டு நாம் சந்தோஷப்பட வேண்டும். ஏனென்றால் அந்த மகிழ்ந்திடும் உணர்வு நமக்குக் கிடைக்கின்றது.

1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து அவர்கள் உடலை ஆலயமாக மதித்து
2.அவர்களுக்குள் அறியாது சேர்ந்த குறைகள் நீங்கி அருள் உணர்வுகள் பெருக வேண்டும் என்று எண்ணி
3.இந்த வழிப்படுத்தி நாம் வாழ்ந்தாலே போதுமானது… என்றுமே அந்த உயர்ந்த நிலையை நாம் பெற முடியும்.

கோடிக்கரையில் இருக்கும் நாம் தனுசுக்கோடியாக உணர்வுகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்த்து ஒளியின் உணர்வாக மாற வேண்டும். எதிலுமே இருள் என்ற நிலைகள் வராதபடி ஒளியாக மாற்றிடும் சக்தி பெற அந்த முயற்சியை நாம் எடுப்போம்.

நாம் இந்த உடலில் வாழும் காலத்தைக் காட்டிலும் ஆவி உலகில் தான் அதிக காலம் வாழ நேருகிறது

நாம் இந்த உடலில் வாழும் காலத்தைக் காட்டிலும் ஆவி உலகில் தான் அதிக காலம் வாழ நேருகிறது

 

இந்த உலகில் தோன்றிய மனிதர்கள் தன் எண்ணத்திலும் சுவாசத்திலும் பல துவேஷங்களையும் ஆசைகளையும் வளர்த்து
1.நாம் இருக்கும் காலம் வரை எல்லாவற்றையும் அனுபவிக்கலாம்…
2.இறந்த பின் நமக்கு என்ன தெரிகிறது…? என்ற மனப்பான்மையிலே தான் ஊறி வாழ்கிறார்கள்.

நாம் இறந்த பிறகு தான் நம் ஆத்ம நிலை நாம் இந்தப் பூமியில் வாழ்ந்த நாட்களைக் காட்டிலும் “அதிகக் காலங்கள்” ஆவி உலகில் சஞ்சரிக்கின்றது.

பூமியில் வாழ்ந்த காலங்களை வைத்தே அவ்வெண்ணத்தில் ஒரு சிறு அணுவும் தான் விட்ட சுவாச நிலை மாறிடாமலே சுற்றி வருகின்றது.

தன் எண்ணத்திற்கும் சுவாசத்திற்கும் உகந்த உடல் கிடைக்கும் நாள் வரை
1.எந்த ஆசையில் இந்த உடலை விட்டு ஆவி பிரிந்ததோ அந்த ஆசை நிலை கொண்டே
2.பல நூறு வருடங்களும் தன் எண்ணத்திற்கு ஏற்ற பிறப்பிடம் கிடைக்கும் நாள் வரை இருந்து தான் பிறக்கிறது.

நாம் நம் தாய் தந்தையரை முதலில் வணங்குவதும் இந்நிலை வைத்துத்தான். முதல் ஜென்மத்தில் விட்ட குறையை வைத்து ஆவி உலகில் பல காலம் சஞ்சரித்து
1.நம் எண்ணத்தைச் செயல்படும் இடமாக வந்து சேருமிடம் தான்
2.நம் முதல் தெய்வமாக வணங்குவதின் உண்மை நிலையும் அதுவே.

யாரும் யாருக்கும் சொந்தமில்லை. எல்லோருமே அந்த ஆண்டவனின் சக்தியில் அச்சூரியனின் சக்தியில் வந்து உதித்த தனித் தனி பிம்பங்கள் தான்.

1.நாம் பல பிறவிகள் எடுத்து
2.ஒவ்வொரு பிறவியிலும் பல வகைச் சொந்தங்களை அடைந்து
3.”சொந்த பந்தங்களுடன் வாழ்கிறோம்…” என்பதல்ல சொந்தமும் பந்தமும்…!

எல்லோருக்குமே ஒரே சொந்தம்… “அவ்வாண்டவனின் சக்தி தான்…!”

சொந்தம் பந்தம் எல்லாம் கூடும் நாள் ஒரே நாள்… அவ் ஈஸ்வர சக்தியில் இருந்து இம்மனித வாழ்க்கையில் வாழ்ந்துவிட்டு.. நிறைவுடன் வாழ்ந்து விட்டு.. அந்தச் சூட்சம உலகிற்குச் சென்றிடல் வேண்டும்.

அங்கே சென்று அந்நிலையில் சகல நிலையையும் பெறும் பாக்கியம் பெற்று… அந்த சப்தரிஷிகளின் சக்தியுடன் சக்தியாகக் கலந்து
1.இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் சித்தர்கள் ஞானிகள் இந்நிலை உள்ளவர்களுடன் நாமும் கலந்து
2.அவர்களுடன் வாழும் நாட்கள் தான் நாம் சொந்த பந்தங்களுடன் வாழும் வாழ் நாட்கள்.

நம்முடைய ஒவ்வொரு குணத்திலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஒரு பாதுகாப்புக் கவசமாகச் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்

நம்முடைய ஒவ்வொரு குணத்திலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஒரு பாதுகாப்புக் கவசமாகச் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்

 

அகஸ்தியன் உண்மையான நிலைகள் தன் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றியவன். அவன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனவன்.

யார் ஒருவர் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளைப் பெறுகின்றார்களோ அவர் வாழ்க்கையில் வரக்கூடிய இருளான நிலைகளை ஒவ்வொன்றாக… அடுக்கடுக்காக… ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.

அதற்குத்தான் திரும்பத் திரும்ப உங்களுக்கு இதை யாம் (ஞானகுரு) ஞாபகப்படுத்துவது. கஷ்டமோ நஷ்டமோ துன்பமோ துயரமோ எதைப் பார்த்தாலும்… அல்லது நுகர்ந்தாலும்…
1.அடுத்த நிமிடம் அந்தத் தீமைகள் உடலுக்குள் புகாதபடி ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் எண்ணி நிறுத்திவிட்டு
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்…
3.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இதை முந்தி
4.இந்த உணர்வுகளை உடலுக்குள் வலுவேற்றிக் கொள்ள வேண்டும்.

இப்படி வலு ஏற்றியவுடன் தீமைகளைப் பிரித்து விடுகிறது.

அடுத்து நாம் எந்தத் தீமை செய்வோரைப் பார்த்தோமோ… அவர்கள் அறியாத தீமையிலிருந்து விடுபட வேண்டும்… பொருளறிந்து செயல்படும் சக்தி அவர்கள் பெற வேண்டும்… என்று இந்த உணர்வைச் சேர்த்துக் கொண்டோம் என்றால் “புதிய உணர்வின் அணுக்களாக” நமக்குள் உருவாகின்றது.

ஒவ்வொரு உடலிலும் எத்தனையோ விதமான நிலைகள் இருந்தாலும் நாம் அந்த அருள் ஒளியைக் கூட்டிப் பேரொளியாக மாற்றுதல் வேண்டும்.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும்… தன்னைக் காட்டிலும் வலு கொண்ட உணர்வைப் பார்த்துச் சுவாசித்து… ஒன்றை ஒன்று கொன்று தின்று மற்றதுக்கு இரையாகி… வலிமையான உடலுக்குள் சென்று தான் பரிணாம வளர்ச்சிக்கு வந்தது.

ஆனால் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வளர்ந்து வந்திருந்தாலும் விஷத்தின் தன்மை கூடி தேய்பிறையாகும் நிலையில் இருந்து மாற வேண்டும் என்றால்
1.அந்த அருள் ஞானத்தின் உணர்வை
2.ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு குணத்திலும் நாம் சேர்த்துச் சேர்த்து
3.நாம் இந்த உடல்களில் அதை நன்மை செய்யும் சக்தியாக மாற்றி மாற்றி
4.எல்லாவற்றையும் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்துக் கொண்டே வர வேண்டும்.

எதன் வழி கொண்டு…?

நம் உயிரின் துணை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலுக்குள் பாய்ச்சி… தீமை செய்யும் உணர்வுகளை மாற்றி… தீமைகள் வராது தடுக்கக்கூடிய கவசமாக “ஒவ்வொரு குணத்திலும் அதைச் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்…”

அப்பொழுது அது நம்மை காக்கக்கூடிய உணர்வாக வரும்.

மண்ணுடன் மண்ணாகும் மாய வாழ்க்கை… வேண்டாம்

மண்ணுடன் மண்ணாகும் மாய வாழ்க்கை… வேண்டாம்

 

சூரியனின் சக்தியிலிருந்து ஒவ்வொரு நாளும் எண்ணிலடங்கா ஜீவ அணுக்கள் தோன்றித் தோன்றி மறைகின்றன.
1.ஒவொரு ஜீவராசியும் எந்த நிலை கொண்டு ஜீவன் பெற்றதோ
2.அந்நிலையில் அந்த ஜீவராசிகள் எண்ணம் ஈடேறியவுடன்
3.அதனுடைய ஜீவ உடலைப் பெற்ற நிலையும் மாறிவிடுகின்றது.

அதே போல் தான் பறவைகள் மிருகங்கள் மனிதர்கள் எல்லோருடைய நிலையும் உள்ளன.

மனிதர்களுக்கு… மனிதன் ஜீவன் பெற்ற நாளிலிருந்து தாயின் கருவில் எப்படிப் பத்து மாதங்கள் இருந்து பிறக்கின்றதோ அந்நிலை வைத்து மனிதனின் சராசரி ஆயுட்காலமும் உள்ளது. யானையின் ஆயுட்காலம் கருவில் இருபது மாதங்கள் இருந்து அதனுடைய சராசரி ஆயுட்காலமும் கூடி இருக்கின்றது.

இப்படி ஒவ்வொரு மிருகத்தின் நிலையும் கழுதைக்கு ஏழு ஆண்டுகள் கோழிக்கு இரண்டு ஆண்டுகள் நாய்க்கு பதினாறு ஆண்டுகள் இப்படிப் பறவைகள் நிலையிலும்
1.அவை அவை எத்தனை நாட்கள் அடைகாத்துக் குஞ்சு பொரிக்கின்றனவோ
2.அந்நிலை கொண்டு தான் அதனதன் ஆயுட்காலமும் உள்ளன.

உங்கள் எண்ணத்தில் மனிதர்கள் ஏன் ஆறு ஆண்டுகளும் வாழ்கிறார்கள்… அறுபது ஆண்டுகளும் வாழ்கின்றார்கள்…? என்று எண்ணக்கூடும்.

அற்ப ஆயுளில் ஜீவன் பிரிவதெல்லாம் அவரவர்கள் எண்ணத்தைக் கொண்டு தான்…!

ஆனால் இந்த மனித உடல்களுக்கு மட்டும் தான் அந்தச் சூரியனின் சக்தியிலிருந்து அழியா உடலையும் அழியா உயிரையும் அவ்வாண்டவனின் சக்தியில் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்நிலை பெற்ற நாம் எல்லோரும்
1.அந்த ஆண்டவனின் சக்தியை அந்த நிலையில் நாம் பேணிக் காத்து
2.இந்த உலகில் நாம் உதித்ததையே அழியாச் செல்வமாக்கி
3.நாம் சேர்த்திடும் ஒரே சொத்து… உன்னதமான சொத்து… நம் உயிராத்மாவுக்கு அளிப்பது தான்…!

அந்தச் சூரியனின் சக்தியிலிருந்து பல ஒளிக்கதிர்கள் நம் பூமியைத் தாக்கிப் பெற்ற செல்வங்கள் தான் இன்றைய உலகில் உள்ள எல்லாமுமே…!

அந்த இயற்கையிலிருந்து தான் செயற்கையையும் செய்கின்றோம். அந்தச் செயற்கை அழிந்தாலும் இயற்கையுடன் தான் கலக்கின்றது.

இந்தப் பூமியில் உள்ள
1.இயற்கைத் தன்மையும்…
2.செயற்கைத் தன்மையும்…
3.நம் உடல்..
4.நாம் சேர்த்த பொருள் எல்லாமுமே
5.மண்ணுடன் மண்ணாகத் தான் ஆகின்றது.

அழியாச் செல்வமான நம் ஆத்மா மட்டும் தான் ஆண்டவனிடம் ஐக்கியமாக முடியும். ஆகவே
1.மண்ணுடன் மண்ணாகும் இந்த உடலுக்காகவும் பொருளுக்காகவும் வாழாமல்
2.வாழ்வாங்கு வாழச் செய்யும் உயிராத்மாவை ஆத்ம ஜோதியாக்குவோம்…!

நல்லதைச் செய்தாலும் “அதைத் தடைப்படுத்துகின்றார்களே…” என்று எண்ணினால் இரு மடங்கு வேதனையாகிவிடும்

நல்லதைச் செய்தாலும் “அதைத் தடைப்படுத்துகின்றார்களே…” என்று எண்ணினால் இரு மடங்கு வேதனையாகிவிடும்

 

தியானம் செய்து நல்லதையே வளர்த்துக் கொண்டு வரும் பொழுது ஒருவன் கடுமையான தவறு செய்தால் எப்படி நினைக்கின்றோம்…?

1.நான் இவ்வளவு நல்லது செய்து கொண்டிருக்கின்றேன்…
2.இப்படித் தவறு செய்கின்றானே…! என்று “இரண்டு மடங்கு” வேதனைப்படும் நிலைகள் வந்து விடுகின்றது.

அதாவது… தியானம் செய்து நல்ல உணர்வுகளை வளர்த்துக் கொண்டு வந்தாலும்… வேதனைகளை வளர்த்துக் கொள்ளும் ஆயுள் மெம்பராக இணைந்து விடுகின்றார்கள்.

ஆனால் வாழ்க்கையில் வரும் வேதனைகளை நீக்கும் நிலைகளுக்குத் தான் இங்கே உபதேசம் கொடுக்கின்றோம்.
1.நல்லதைச் செய்தாலும்… தர்மத்தைச் செய்தாலும்
2.எத்தனையோ பல நன்மைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று செயல்பட்டாலும்
3.வாழ்க்கையின் நிமித்தம் இடையில் வரக்கூடிய தவறுகளையும் தீமைகளையும் வேதனைகளையும் சுத்தப்படுத்தும் நிலைக்கு வர வேண்டும்.

பரிவு கொண்டு பண்பு கொண்டு பிறரைக் காக்கும் நிலை இருந்தாலும் வெறுப்பு வேதனை என்ற உணர்வுகளை எடுத்து நம்மையே படுபாதாளத்திற்குத் தள்ளும் நிலையாக வந்து விடுகிறது.

அது போன்று ஆகாதபடி தடுப்பதற்குத்தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம். அந்தப் பதிவை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வர வேண்டும்.

திட்டியவனை மட்டும் இப்படித் திட்டினான்… திட்டினான்… என்று நினைவுக்குக் கொண்டு வருகின்றோம். அப்பொழுது அது கோப உணர்ச்சிகளைத் தூண்டிவிடுகிறது.

அந்த நேரத்தில்
1.நம் குழந்தை ஏதாவது அழுதால் கூட “போடா நாயே…” என்று திட்டும்படி செய்யும்.
2.யாராவது நல்லது செய்தால் அட போய்யா…! என்று கோபமாகப் பேசும்படி வரும்… ஆக நல்லது செய்தாலும் கூட வெறுப்போம்.

என்ன இவர் இப்படிச் சீறிப் பாய்கிறார்…? என்று அவர்கள் நினைப்பார்கள்.

வேலை செய்யும் இடங்களிலே “மேலதிகாரி” தன்னிடம் வேலை செய்பவர்களை இது போன்று கடுமையாகத் திட்டினால் அது பய உணர்ச்சிகளைத் தூண்டி அவர்கள் சிந்திக்கும் வலுவை இழக்கச் செய்யும். கடைசியில் தவறு செய்யும் நிலையில் கொண்டு போய் விட்டுவிடும்.
1.நீங்கள் அதிகாரியாக இருந்து உங்களிடம் வேலை செய்பவர்களை மிரட்டிப் பாருங்கள்.
2.அடுத்து… அவர் செய்யும் வேலைகளில் தவறுகளை அதிகமாகச் செயல்படுத்துவார்கள்.

ஒரு சிலர் அவன் அப்படிச் செய்தான்… இப்படிச் செய்தான்… என்று ஆத்திரத்துடன் சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு இரத்தக் கொதிப்பு நிச்சயம் இருக்கும்.

இது போன்ற நிலைகள் எல்லாம் நாம் மாற்ற வேண்டும் அந்த்த் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் அவசியம் எடுத்து ஆக வேண்டும்.

காரணம் கோபப்பட்டுக் கொண்டிருந்தால் நம் காரியங்கள் தடைப்படுகின்றது யாரைப் பார்த்து நாம் கோபித்தோமோ அவனுக்கும் இதே உணர்வுகள் ரிமோட் செய்து அவனையும் இயக்கும்.

ஏனென்றால் காற்றிலே இருக்கின்றது… இந்த உணர்வின் வேகங்கள் அவனை இயக்கி…
1.கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தால் அதைத் தப்பாக்கி விடுகின்றது…
2.இயந்திரத்தை ஓட்டிக் கொண்டிருந்தான் என்றால் அதைத் தவறாக இயக்கச் செய்யும்…
3.வாகனத்தில் சென்று கொண்டிருந்தான் என்றால் சிந்திக்கும் தன்மை இழந்து விபத்து ஆகிவிடும்.

இது எல்லாம் எதனால் வருகிறது…? சந்தர்ப்பம்…!

இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் இருந்து நாம் எப்படி மீள்வது…?

சந்தர்ப்பங்களில் இது போன்ற உணர்வுகள் மோதல் ஆனாலும்…
1.அடுத்த கணம் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி…
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உடலுக்குள் தீமை புகாது தடைப்படுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதற்குப் பின் யாரால் நமக்குக் கோப உணர்ச்சிகள் தோன்றியதோ அவர்கள் சிந்தித்துச் செயல்படும் சக்தி பெற வேண்டும் என் பார்வை எல்லோரையும் நலமாக்க வேண்டும் என்று எண்ணி எடுத்தால் கோப உணர்ச்சிகள் வருவதைத் தடைப்படுத்தும்.

நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.

ரூபமில்லா சக்தி… கடவுளின் சக்தி…

ரூபமில்லா சக்தி… கடவுளின் சக்தி…

 

எல்லோரும் வணங்கிடும் அந்தக் கடவுளின் சக்தி ஒன்றே தான். அந்தச் சக்தியின் நிலைக்குப் பல ரூபங்களும் பல நாமங்களும் இட்டு அவரவர்கள் வழிக்கு அவரவர்கள் வணங்குகிறார்கள்.

ரூபமில்லா சக்தியின் நிலை என்னப்பா..? அந்த ரூபமில்லாத நிலை தான் காற்றும்… மழையும்… ஒளியும்…! இவற்றில் கலந்துள்ள அச்சக்தியின் நிலை இல்லாவிட்டால் இந்த உலகிலே தோன்றிடும் பல கோடி உயிரணுக்கள் எல்லாமே எப்படி உதித்து இந்நிலையில் உயிர் பெற்று வாழ்ந்திடுமப்பா…?

அவ் ஈசனின் சக்தியின் ஆற்றல் எல்லாம் அச்சூரியனின் சக்தியிலிருந்து தான் பல வழிகளில் நமக்கு அருள் தருகின்றது. எல்லா அருளையும் தன்னுள் ஏற்றிருக்கும் அச்சூரியனின் சக்தியிலிருந்து பல கோடி உயிரணுக்கள் தோன்றுகின்றன.

அந்த உயிரணுக்களின் உண்மை நிலைகளை எல்லாம் பலர் பல வழிகளில் அறிந்தும் அறியாமலும்… பல ஆராய்ச்சிகளிலும்… பல வகை விஞ்ஞான ரூபத்திலும்… கண்டு உணர்கின்றார்கள். கண்டு உணர்வதற்குப் பல வழிகளைக் கையாளுகிறார்கள்.

அந்த உயிரணுக்கள் உயிர் பெற அச்சக்தியின் அருள் கொண்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையில் உயிர் பெறும் நிலையில் உள்ளது.

பல இடங்களில் பல வகைச் செடி கொடிகள் வளர்கின்றன. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகைச் செடிகளும் அந்த ஊரின் மண் நிலைக்கு ஏற்ப வளர்ந்து பயன் தருகின்றன.

1.நாம் பயிர் செய்து பலன் பெறும் செடி கொடிகள் பல.
2.நாம் பயிர் செய்யாமலேயே இப்படர்ந்த பூமியில் பல வகைச் செடி கொடிகளும் மரங்களும் வளர்கின்றன.

அவை எல்லாம் எந்நிலையில் அவ்விடத்தில் வளர்கின்றன…?

விதை விதைத்து வளர்கின்றனவா எல்லாமே என்று சிலர் எண்ணுகின்றார்கள். பறவைகளின் எச்சம் பட்டும் காற்றிலே பல விதைகள் பறந்து வந்தும் அந்நிலையிலிருந்து பல வகைச் செடிகள் வளர்கின்றன என்று..!

திடீர் திடீரென்று மழை பெய்து சூரிய ஒளி பட்டவுடன் ஈரம் உள்ள இடங்களில் எல்லாம் பல வகை புல் பூண்டு தாவரங்கள் எல்லாமே வளர்கின்றன. புல் பூண்டிற்குத்தான் விதையே இல்லாத பொழுது அவை எப்படி அந்நிலையில் எல்லாம் வளர்கின்றன…?

பல உயிரணுக்களின் உண்மைத் தத்துவங்களை இந்நிலையில் செப்புகின்றோம்.

சூரியனிலிருந்து கிளம்பி வரும் ஒளிக்கதிர்கள் பூமியின் மேல் எந்தெந்த நிலையில் வந்து தாக்குகின்றனவோ அந்நிலையில் அப்பூமித் தாய் ஈர்க்கின்றாள்.

அந்நிலையில் உள்ள ஈரப்பசையின் மேல் அச்சூரிய ஒளி பட்டதும்
1.அப்பூமியின் நிலைக்கும் அந்நிலையில் உள்ள ஈரப்பசையின் நிலைக்கும் ஏற்ப சூரிய ஒளி பட்டவுடன்
2.அங்குள்ள உயிரணுக்கள் உயிர் பெற்று அம்மண்ணின் நிலை கொண்டு பல வகைத் தாவரங்கள் உண்டாகின்றன,

அந்நிலையிலே தான் பல கோடி உயிரணுக்கள் தன் தன் நிலைக்கு ஏற்ப தன் தன் சுவாச நிலைக்கேற்ப சேர்த்து
1.தன் ஆகாரம் உள்ள இடத்தில் படர்ந்து இருக்கும் பொழுது
2.அந்நிலையில் தன் ஆகாரத்தின் சுவாச நிலைக்கு ஏற்ப… “ஆகாரம் உள்ள இடத்தில் அச்சூரிய ஒளி பட்டதும்”
3.பல உயிரணுக்கள் உயிர் பெறுகின்றன.

இந்நிலையில் உயிர் பெறுபவை தான் பல வகைப் புழு… பூச்சிகள்… எறும்புகள்… கொசுக்கள்.. ஈக்கள்…! எல்லாமே. இவை எல்லாம் முட்டை இட்டு முட்டையிலிருந்து குஞ்சு பொரிப்பதில்லை.

இதன் நிலை எல்லாம் தன் சுவாச நிலைக்கேற்ப அழுகும் தன்மை நாற்றம் வாய்ந்த இடம் இப்படிப் பல பல இடங்களில் அந்தந்த இடத்திற்கு ஏற்பச் சுவாச நிலை கொண்டு தான் அந்த உயிரணுக்கள் எல்லாமே உற்பத்தியாகின்றன.

தன் சுவாச நிலைக்கேற்ற உணவுள்ள இடங்களில் தான் இந்த உயிரணுக்களும் தோன்றித் தோன்றி மறைகின்றன.

ஆடி மாதத்தில் பலாப்பழத்தில் ஈ மொய்க்கிறது என்கிறோம்.
1.அந்த ஆடி மாதத்தில் மட்டும் தான் அந்த ஈ உற்பத்தியாகின்றதா…?
2.திடீரென்று தோன்றி மறைய அந்த ஈக்களுக்கு முட்டை எங்கிருந்து வந்தது…?
3.பல ஈக்கள் ஒரே சமயத்தில் வருகின்றன. அந்த ஈக்கள் திடீரென்று தோன்றுவதெல்லாம் இந்நிலையிலிருந்து தான்.

அச்சூரியனின் சக்தியிலிருந்து பல உயிரணுக்கள் இந்தப் பூமியின் மீது படர்ந்துள்ளன. இந்நிலையில் அதற்கு ஏற்ற சுவாச நிலை கிடத்தவுடன் அந்தந்த நிலையிலேயே அந்த உயிரணுக்கள் எல்லாம் ஜீவன் பெற்று தன் ஆகாரத்தைத் தேடிக் கொள்ளச் சுற்றி வருகின்றன.

எவ்வளவு குறுகிய காலத்தில் ஜீவன் பெற்றதோ அந்நிலையிலேயே அந்த உடலை விட்டும் அது ஜீவன் பிரிகின்றது. பல உயிரணுக்களின் நிலை எல்லாம் அந்நிலையிலிருந்து தான் உற்பத்தியாகின்றன.

மரப்பொந்துகளிலும் வீட்டின் பல பகுதிகளிலும் திடீர் திடீரென்று எறும்புகள் படர்ந்து காணப்படுபவை எல்லாமே இந்நிலையிலிருந்து தான்…!

துருவ நட்சத்திரத்தின் உணர்வை உணவாக எடுத்து “ஒளிப்பிளம்பாக…” நாம் மாற வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் உணர்வை உணவாக எடுத்து “ஒளிப்பிளம்பாக…” நாம் மாற வேண்டும்

 

வாழும் பொழுது நம்மை அறியாது சில உடல் நோய்கள் வந்தாலும் தியானத்தின் மூலம் அதை நீக்கிக் கொள்ள முடிகிறது.
1.ஆனால் நோய்களை நீக்கினாலும் சிறிது காலமே இந்த உடலிலே வாழ்கின்றோம்.
2.எப்படியும் இந்த உடலை விட்டுச் சென்று தான் ஆக வேண்டும்
3.இந்த உடல் நமக்குச் சொந்தம் அல்ல…!

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

“எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்…” என்ற அந்த அருள் ஒளியை எடுத்துப் பாய்ச்ச வேண்டும் என்ற உணர்வுகளை நாம் வளர்த்துக் கொள்ளும் பொழுது “அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்கு சொந்தமாக்கிக் கொள்கின்றோம்…”

உணர்வுகள் நோய்வாய்ப்பட்டாலும் உடல் சுருங்கத் தான் செய்கின்றது. அருள் ஒளி பெற்ற பின் தீய உணர்வுகள் தீய அணுக்கள் குறையும் பொழுது அப்பொழுதும் உடல் சுருங்கத் தான் செய்யும்.
1.ஆனால் பேரருள் என்ற உணர்வுகள் உயிரிலே அந்த வழிப்பட்டு ஒன்று சேர்த்து இணைந்த பின்
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இருந்து அதைக் கவர்ந்து
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உணவாக எடுத்து ஒளியின் பிளம்பாக மாறும்
4.நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

இதைத்தான் இராமன் நேரமாகிவிட்டது என்று மணலைக் குவித்துத் தியானிக்கின்றான் என்று இராமாயணத்தில் காட்டுகின்றார்கள்.

நம்முடைய தியானங்கள் அனைத்தும்… நம் எண்ணங்கள் அனைத்தும் ஒன்றாகச் சேர்த்துப் பகைமை இல்லாத உணர்வுகளை வளர்த்து… உயிருடன் ஒன்றி… உடலில் இருக்கும் பொழுதே ஒளியின் உணர்வைச் சேர்த்து ஒளியின் சரீரமாக மாற்ற வேண்டும்.

இதுதான் கடைசி நிலை…!

குளவி புழுவின் மீது விஷத்தைப் பாய்ச்சிக் கொட்டியபின் புழு குளவியாக மாறுகின்றது. சில புழுக்கள் எதுவுமே செய்யவில்லை என்றாலும்
1.அந்த உடலில் இருந்து தன் உணர்வைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி… தான் சுவாசித்துப் புழு – பூச்சிகளாக மாறுகின்றது.
2.இந்தப் பூச்சிகள் வேறு இலையில் மீது பட்டால் அந்த உணர்வை எடுத்து வண்டாக மாறுகின்றது
3.இந்த வண்டுகள் மற்ற நிலைகள் பட்டபின் பலவிதமான உணர்வுகள் மாறி ஒரு உடலாக சேர்த்துக் கொண்ட உணர்வு மேல் ஒடுகள் மாறிப் போகின்றது.

இதைப் போன்று தான் நாம் அந்த அருள் உணர்வுகளை எடுக்கும் பொழுது இந்த உணர்வுகள் இங்கே விளைந்து… இந்த உடல் ஒளியாக மாறுகின்றது. அடுத்து நாம் பிறவிக்கு வருவதில்லை.

இதற்காக வேண்டித் தான் பல கோடி தவயோகிகள் எத்தனையோ வகைகளில் முயற்சி செய்து செயல்படுத்தி உள்ளார்கள். இருந்தாலும் மார்க்கங்கள் மாறிவிட்டது.

இமயமலைப் பக்கம் நான் (ஞானகுரு) செல்லும் பொழுது ஜீவ சமாதியாக எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். இமயமலைச் சாரல்களில் மண் இடுக்குகளில்… சந்துகளில் குகை மாறி அமைத்து… ஓ…ம் நமச்சிவாய… என்றும் ஓ…ம் நமோ நாராயணா… என்றும் இந்த ஒலிகள் வருகின்றது.
1.சிறையில் அடைத்தது போன்று குகைக்குள் இருக்கின்றார்கள்
2.வேறு எங்கும் செல்ல முடியவில்லை… உடல் என்ற இந்த கூட்டில் தான் அடங்கியுள்ளார்கள்

இதெல்லாம் குருநாதர் எமக்குக் காட்டிய பேருண்மைகள்…! ஆகவே இப்போது நல்ல நினைவு இருக்கும் போதே ஒளியின் உணர்வாக மாறுங்கள்.

உணவு பற்றிய இரகசியங்கள்

உணவு பற்றிய இரகசியங்கள்

 

சக்தியின் நிலை கொண்டு உயிர் பெற்ற உயிர் அணுக்கள் எல்லாமே தன் தன் உயிர் நிலை நிலைத்து நிற்க உணவை உட்கொள்கின்றன. மனிதர்களுக்கு அவரவர்கள் உண்ணும் உணவிலிருந்து சில உணர்வுகளும் உண்டாகின்றன.

நாம் உண்ணும் உணவெல்லாம் நம் உடலை வளர்க்கத்தான் என்ற நிலையில் உண்ணுகின்றோம். நாம் உண்ணும் உணவிலிருந்து மட்டும் தான் நம் உடலை நாம் காத்திட முடிகிறது என்றால்…
1.பல கோடிச் சித்தர்களும் பல தவசு முனிவர்களும் பல ரிஷிகளும்
2.பல நாள்கள் ஆகாரம் புசிக்காமலே ஜெப நிலையிலிருந்து இன்றும் இருந்து கொண்டுள்ளார்கள்.
3.அது எந்நிலையப்பா…?

நாம் உண்ணும் உணவு நமக்குச் சக்தியளித்து சக்தி எல்லாம் நமது உடலில் ஈர்த்து… பாக்கி நிலையில் உள்ளது கழிவாகிறது என்னும் நிலை தான் மனிதர்களுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் உள்ளது.

நம் உடல் ஒரு இயந்திரம் போல் உள்ளது என்று எண்ணுகின்றோம்.

நாம் உண்ணும் உணவின் நிலை என்ன…? என்றால் நாம் எந்த ஆகாரத்தைப் புசிக்கின்றோமோ அந்நிலையிலிருந்து அவ்வாகாரத்தின் தன்மை “நம் சுவாச நிலைக்கு வந்துதான்” நாம் பிறகு சுவாசம் எடுக்கும் பொழுது நம் உடல் அந்த ஆகாரத்தை ஏற்கிறது.

சித்தர்கள் ஞானிகள் பெற்ற நிலை எல்லாம்
1.”அச்சுவாச நிலையிலிருந்தே” தன் உடலுக்கு வேண்டிய ஆகாரத்தை ஏற்று எடுக்கும் நிலையை
2.அச்சூரியனிலிருந்தே பூமிக்குக் கிடைத்திடும் அணுவின் சக்தி நிலை கொண்டு தன் சுவாச நிலைக்கு ஏற்றுக் கொள்கிறார்கள்.

மரம் செடி கொடிகளின் நிலை எல்லாம் மனிதருக்கும் மற்ற ஜீவராசிகளின் நிலைக்கும் உயர்ந்த நிலை பெற்ற நிலையப்பா…!

அச்சூரிய சக்தியிலிருந்து ஒளிக் கதிர்கள் நம் பூமியைத் தாக்கி அந்நிலையிலிருந்து தான் நாம் சுவாசிக்கின்றோம். மற்ற மிருகங்களின் நிலையும் மற்ற ஜீவனின் நிலையும் சூரியச் சக்தியின் ஒளிப் பிளம்பு பூமியில் பட்ட பிறகு தான் தன் சுவாச நிலைக்கு எடுத்துக் கொள்கிறது.
1.கீழ் நோக்கிய சுவாச நிலை கொண்டு தான்
2.இயற்கையில் எல்லோருமே ஜீவன் பெற்றுள்ளோம்.
3.அப்பூமி ஈர்த்து அந்நிலையில் தான் நம் சுவாச நிலைக்கு எடுக்கின்றோம் சுவாசத்தை.

மரம் செடி கொடிகளின் இலைகள் எல்லாம் அவ்ஈசனின் சக்தியைப் பெற்று அவ்ஈசனின் சக்தி என்பது சூரியனிலிருந்து வெளி வரும் ஒளிக் கதிர்களை நேராகவே தன் சுவாச நிலைக்கு ஈர்க்கின்றது.

அந்நிலையிலிருந்து நாம் பெறும் புஷ்பங்களும் காய் கனிகளும் நாம் உண்ணும் பொழுது நம் உயிரணுவிற்கும் நம் உடலுக்கும் பெரும் ஆரோக்கிய நிலை தருகின்றன. மற்ற அணுக்களின் நிலை நம்மை வந்து தாக்குவதில்லை.

1.மற்ற ஜீவராசிகளைச் சமைத்து உண்ணும் பொழுது
2.எந்நிலை கொண்டு எப்படி உஷ்ணத்தை ஏற்றிச் சமைத்தாலும்
3.அந்த அணுக்களின் நிலை நம்மை வந்து தாக்கத்தான் செய்யும்.

அந்த அணுக்களின் நிலையிலிருந்தெல்லாம் தப்பி… நாம் உண்ணும் உணவில் நல்ல நிலையை எடுத்துக் கொள்ள… அன்று வாழ்ந்த சித்தர்கள் நமக்குச் சொல்லிய பல வழிகள் மறைந்து விட்டன.

நாம் ஜெப நிலையிலிருந்து நல்ல உணர்வுடன் நாம் விட்டிடும் சுவாச நிலையிலிருந்து
1.அந்த ஈஸ்வர சக்தியை எடுத்துக் கொண்டால்
2.நம் நிலைக்கும் அச்சூரியனிலிருந்து வரும் சக்தி நிலைகள் பூமிக்கு வந்து தாக்கிடாமல்
3.பெரும் உன்னதமான நிலையில் நம் சுவாச நிலைக்கே அது வந்து
4.அழியாச் செல்வமான நம் உயிரணுவிற்கு… நம் ஆத்மாவிற்கு… சகல நிலையையும் பெற்றிடலாம்.

சித்தர்களும் ஞானிகளும் பல காலங்கள் ஆகாரம் புசித்திடாமல் இருந்த நிலைகள் எல்லாம் எப்படி…? என்று இப்பொழுது புரிந்ததா…!

தியான நிலையில் இருந்து கொண்டிருந்தால் இந்நிலையில் தியானம் பெற்றவர்கள் நிலை ஆயிரம் அணுகுண்டுகளை வெடித்தாலும் நம் சுவாச நிலைக்கு அவ்வணுகுண்டின் “அழிக்கும் தன்மை” என்றுமே வந்து தாக்கிடாது.

நம் கண்ணிற்குத் தெரியாமல் வாழும் பல கோடி ரிஷிகளின் நிலை எல்லாம் இது தானப்பா…!

கெட்ட கனவுகள் வரக் காரணம் என்ன…?

கெட்ட கனவுகள் வரக் காரணம் என்ன…?

 

அன்றாட வாழ்கையில் காலையிலிருந்து இரவு வரையிலும் சண்டை போடுபவர்களை… வெறுப்படைபவர்களை… கோபப்படுபவர்களை… குரோதப்படுபவர்களை… எல்லோரையும் நாம் பார்க்க நேர்கிறது. அந்த உணர்வுகளை எல்லாம் நாம் நுகர்கின்றோம்.

அவர்களுக்கும் நமக்கும் நேரடியான சம்பந்தமே இல்லை. இருந்தாலும் பதிவு ஆகிவிட்டால் இரவு தூக்கத்தில் கனவுகளாகப் பார்க்கலாம்.

பகலில் நல்ல இடத்திலே… எப்படிச் சண்டை போட்டார்கள்…? என்று
1.“தூங்குவதற்கு முன்…” இந்த உணர்வலைகள் வரும்.
2.அடுத்து தூக்கத்தில் பார்த்தால் நாம் யாருடனோ சண்டை போடுகின்ற மாதிரி கனவுகள் வரும்… முழிப்பாகி விடும்… எழுந்து விடுவோம்…!
3.யார்… என்ன…? என்ற நிலையில் தெரியாது… உருவமும் தெரியாது
4.நம் எண்ணமும் இந்த உணர்வுகளும் சேர்த்துச் சரியான உருவம் தெரியாதபடி நமக்கு அதிர்ச்சியாகிவிடும்
5.யாரோ நம்மைத் தாக்க வருகிறார்கள்…! என்று கனவிலே வரும்.

ஏனென்றால் நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் இரத்தத்தில் கலந்து இதே உணர்வுகள் “மற்ற அணுக்களுக்கு எதிர்மறையாக வரும் போது…” இந்தப் பதட்டமும் பயமான உணர்ச்சிகளும் தூண்டப்பட்டுத் திடீரென்று இரவிலே எழுந்து விடுவோம்.

இது எல்லாம் எது செய்கின்றது…? பகலில் நுகர்ந்த உணர்வுகளை நமது உயிர் இயக்கிக் காட்டுகிறது.

அந்த உணர்ச்சியின் தன்மை அந்தந்த அணுக்களுக்கொப்ப அதனதன் உணர்வுகளை நுகரப்படும் பொழுது அந்தச் செயல்களை உணர்ச்சிகள் வழி தான் செயலுக்கு வருகின்றது.

இந்த இயற்கையின் நிலைகளை அறிந்து கொள்ள வேண்டும்.

காரணம் பகலில் எல்லாவற்றையும் நாம் பதிவு செய்து விடுகின்றோம். இரவு தூக்கத்திலே அந்த மாதிரி நம்மை இயக்குகிறது.

நம்மை ஒருவன் திட்டிவிடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அதற்கடுத்து மற்ற வேலைகளைச் செய்கிறோம். வேலையில் சோர்வடையும் பொழுது… தன்னை அறியாமலே அந்தத் திட்டியவனின் நினைவு வரும்.

என்னை இப்படி எல்லாம் பேசினான்… செய்தான்… என்று எண்ணினால் அந்த நேரத்திலே செய்யக்கூடிய வேலை கெட்டு விடுகின்றது… வேலையைச் சரியாகச் செய்து முடிக்க முடியாது.

அப்போது வீட்டில் ஏதாவது ஒன்றைச் சொன்னார்கள் என்றால் அவர்களிடம் சண்டைக்குச் செல்வோம்… நண்பர்களிடத்திலும் பகைத்துக் கொள்வோம்.

அதாவது மிகவும் பழகிய நண்பர்களாக இருந்தாலும் கூட வீட்டிலோ வெளியிலோ வெறுப்பாக இருந்தால் தமாஷாக ஏதாவது சொன்னால் போதும். இரண்டு பேருக்கும் நிஜமாகவே சண்டை கடுமையாகிவிடும்.

சந்தோஷமாக இருக்கும் போது ஒன்றும் இருக்காது. ஆனால் சங்கடமாக இருக்கும் பொழுது… வெறுப்பாக இருக்கும் பொழுது… என்னைக் கிண்டல் செய்கின்றாயா…? என்று இந்த நல்லவன் மீது… உதவி செய்தவர்கள் மீது… சண்டை வந்துவிடும்… பார்க்கலாம்… எதிரியாகவே மாற்றிவிடும்.

ஆகையினால் தமாஷாக… விளையாட்டாக… எப்போதும் நாம் செயல்படுத்தக் கூடாது. அன்புடன் அரவணைத்து ஒரு அர்த்தத்துடன் நாம் சொல்லி
1.நீங்கள் இப்படிச் செய்ததால் தான் தீமையின் விளைவுகள் இப்படி உங்களுக்கு வந்தது
2.அதற்குப் பதிலாக இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னால்
3.அந்த நேரத்தில் நல்ல நிலைகளைக் கொண்டு தீமைகளை மாற்றி அமைக்க முடியும்.

ஆகவே இந்தத் தியானத்தை கடைப்பிடிப்பவர்கள் கேலியாகப் பேசுவதோ கிண்டலாகப் பேசுவதோ அல்லது அடுத்தவர்களைச் சிரிக்க வைப்பதற்காகச் செயல்படுத்துவதோ அந்த வழிக்கே நாம் போகக் கூடாது. கடும் எதிரியாக மாறிவிடும்… சிந்திக்கும் தன்மையை இழக்கச் செய்துவிடும்.

வேதனையாக இருக்கிறார் என்ற சிந்தனை இல்லாதபடி அவர்களை நாம் கேலி செய்வோம்… கிண்டல் செய்வோம்…
1.உடனே அவர்கள் நம் மீது சீறிப்பாய்வார்கள்… கடும் சண்டையாகும்…
2.நம்மை அறியாமலே… நாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் நமக்கு எதிரியாக மாறி வரும்.
3.பின் வேதனையாகி உடலில் கடும் நோயாக மாறி நம்மைத் தீமையின் எல்லைகளுக்குக் கொண்டு சென்றுவிடும்.

இதையெல்லாம் நாம் தெரிந்து… அவைகளை நாம் மாற்றிப் பழகுதல் அவசியம். அதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களிடம் பதிவு செய்கிறோம்.

எந்த நேரத்திலும் இந்த ஆயுதத்தை எடுத்துச் சீராகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பகைமை இல்லாது வேதனை வராது மகிழ்ந்து வாழும் சக்தி பெறுங்கள்.