மகரிஷிகளின் உணர்வலைகளைக் கவர்ந்து நம் உடலுக்குள் சக்கரம் போல் சுழலச் செய்ய வேண்டும்

மகரிஷிகளின் உணர்வலைகளைக் கவர்ந்து நம் உடலுக்குள் சக்கரம் போல் சுழலச் செய்ய வேண்டும்

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

புருவ மத்தி வழியாகத் தியானித்து நினைவுகள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பாலும் சப்தரிஷி மண்டலங்களின் பாலும் செலுத்தினால் அதனின்று வெளிப்படும் பேரருள் பேரொளியை நுகர்ந்து அறிய இது உதவும்.

இவ்வாறு செய்யும் பொழுது உங்கள் நினைவுகள் எல்லாம் வான மண்டலம் சென்றிருக்கும்.
1.ஒரு மத்தாப்பைக் கொளுத்திய பின் அதிலே பொறிகள் எப்படிக் கிளம்புகின்றதோ
2.இதே போல வான மண்டலத்தில் பல நிறங்கள் கொண்ட உணர்வலைகள் பரவிக் கொண்டிருப்பது
3.உங்கள் உணர்வுகளில் தோற்றமடைந்திருக்கும்… இந்த உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலுக்குள் படர்கிறது.

துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படுவது அனைத்தும் வைரத்தைப் போல இளம் நீல நிறமாக இருக்கும். சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வருவது அனைத்தும் பல வித வர்ணங்களில் இருக்கும்.

ஏனென்றால் ஒவ்வொரு மகரிஷியும் அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் பல வண்ணங்களில் இருக்கும். அந்த மத்தாப்பூ போல சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் உணர்வுகள் உங்களுக்குள் தெரிந்திருக்கும்.

தெரியவில்லை என்றாலும் கூட…
1.அந்த உணர்வின் அலைகள் சுழன்று கொண்டு வந்து உடலுக்குள் பாய்ந்து
2.உடலில் ஒரு சக்கரம் போல சுழன்று கொண்டு வந்திருப்பதையும் உணர்ந்திருக்கலாம்
3.ஏனென்றால் சுவாசித்தது உடல் முழுவதும் ஒரு ரவுண்டு அப்படி வரும்.

இந்த உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்திற்கும் உரம் போட்டது போல் ஆகிறது.

உதாரணமாக நாம் செடிகளுக்கு எப்படி உரம் போட்டு அதைச் செழித்து வளரச் செய்கிறோமோ அதே போல்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்
2.உடலில் உள்ள அணுக்களின் முகப்புகளில் பூராவும் போய்ச் சேரும்.

நமது வாழ்க்கையில் எத்தனை வகையான குணங்களை எடுத்துக் கொண்டோமோ அத்தனை வகையான அணுக்களும் உண்டு.

அதிலே நல்ல குணங்கள் கொண்ட அணுக்கள் இருப்பினும் பிறருடைய தீமைகளை உற்றுப் பார்த்து அதைக் கேள்விப்பட்டு என்ன… ஏது…? என்று அதை நுகர்ந்திருந்தோம் என்றால்
1.அந்த நல்ல குணங்களின் முகப்பில் இது அடைபட்டிருக்கும்
2.அப்பொழுது அந்த நல்ல குணங்கள் சீராகச் செயல்படாது.
3.அந்த நல்ல அணுக்கள் நலிந்து கொண்டே இருக்கும்.
4.அதே சமயத்தில் நல்ல குணங்கள் வளர்வதற்குண்டான அந்த ஈர்ப்பு சக்தியும் குறைந்தே இருக்கும்.

நல்ல அணுக்களின் வளர்ச்சி குன்றும் பொழுது நல்ல குணங்களால் வளர்க்கப்பட்ட நம் உடலில் சோர்வுத் தன்மை உண்டாகும்.

ஏனென்றால் அன்றாட வாழ்க்கையில் நாம் நல்லதை எண்ணி அதைச் செய்ய முற்படும் பொழுது பிறருடைய தீமைகளைக் கேட்டு அறிகின்றோம்.

நம் உயிரில் பட்ட பின் தீமை என்று அதை உணர்ந்தாலும் அந்த உணர்வுகள் உடலுக்குள் பரவப்படும் பொழுது எந்த நல்ல குணங்கள் கொண்டோமோ அதிலே முன்னோட்டமாக அடைபட்டு விடும். பின் அது நமக்குத் தீமை என்று அறிவித்தாலும் நல்லதை அடைத்துக் கொள்கிறது.

உதாரணமாக நாம் சமையல் செய்யும் போது மாவை எடுத்துப் பிசைகின்றோம். அது சுவை உள்ளது தான்.

இருந்தாலும் அதிலே மற்ற ஒரு பொருளைப் போட்டால்… காரமோ இனிப்போ அதில் எதைக் கலக்கின்றோமோ அதன் சுவை தான் முன்னணியில் இருக்கும்.

அதைப் போலத் தான் நம்முடைய நல்ல குணங்கள் கொண்ட அணுக்களில் தீமை செய்யும் உணர்வுகள் இணைந்து விட்டால் அது செயலற்றதாகிறது… நல்லதை எண்ண முடிவதில்லை.

அவ்வாறு ஆகாதபடி மாற்றுவதற்குத்தான்…
1.தீமைகளை அகற்றிய அருள் ஞானியின் உணர்வை
2.உங்கள் உடலுக்குள் சுழலச் செய்ய வேண்டும் என்று பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.

அந்த மெய் ஞானிகள் உணர்வுகள் சுழன்று வரப்படும் பொழுது செடிகளுக்கு உரம் போடுவது போன்று இந்த உணர்வின் தன்மை ஊடுருவிப் பாயும் தன்மை கொண்டு உடலில் ஊடுருவுகின்றது.

நல்ல குணங்களுக்குள் அருள் ஞானிகள் உணர்வுகள் ஊடுருவி அதனின் வலு பெறும் பொழுது நாம் கேட்டறிந்த தீமையின் நிலைகளைச் செயலிழக்கச் செய்து விடுகின்றது.

தியானிக்க வேண்டிய முறையை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதை உணர்த்துகின்றோம்.

என்ன தியானம் செய்து… என்ன பலன் என்பார்கள்…!

என்ன தியானம் செய்து… என்ன பலன் என்பார்கள்…!

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அடிக்கடி தியானிக்க வேண்டும் என்று உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்… நினைவுபடுத்துகிறோம்.

அதை வைத்துத் தீமைகள் புகாது பாதுகாத்துக் கொள்ள வேண்டியது உங்களுடைய பொறுப்புதான்…!

ஒரு பொருளுக்கு ஆசைப்படுகிறோம் கிடைக்கவில்லை. அதே போல் நமக்கு வேண்டியவர்களுக்கு உடலில் நோயாகி விட்டது. சரியாகவில்லையே…! என்ற நினைவைச் செலுத்தினால் வேதனை உணர்வு தான் வருகிறது. அத்தகைய நேரத்தில் நல்ல உணர்வு பெறும் தகுதியை இழந்து விடுகின்றோம்.

எத்தனையோ தியானம் இருந்தாலும் கூட இப்படி எல்லாம் வருகிறது என்று சில பேர் எண்ணுகின்றனர்.

1.அத்தனை தியானம் செய்தேன்… என் பிள்ளைக்கு உடல் நலம் இல்லாது போய்விட்டது…!
2.எவ்வளவு தியானம் செய்தேன்…? என்னிடம் சண்டைக்கு வருகின்றார்களே…! என்று
3.இந்த உணர்வை எடுத்து எடுத்து இப்படி மாற்றிக் கொண்டிருந்தால்
4.உணர்வுகள் அங்கே (தீமையின் பால்) சென்று விடும்… நினைவுகள் தீமையின் பக்கமே சென்றுவிடும்.

ஆகையினால் அது போன்று வராதபடி அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டுமென்று அதை வலுவாக்க வேண்டும். அருள் உணர்வை நம் உடலுக்குள் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.

ஏனென்றால் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ நிலைகளைப் பார்த்தாலும் நாம் நுகரப்படும் போது “தவறு செய்கிறார்கள்…” என்று உற்றுப் பார்க்கின்றோம்… அது பதிவாகிறது.

பதிவாகி விட்டால் பின் அது தன் உணவுக்காகக் கிளரும். அதை வைத்து அந்த உணர்வின் அணுக்கள் உடலுக்குள் பெருகிக் கொண்டே இருக்கும். தவறு செய்தவரின் உணர்வை உணவாக எடுத்துத் தான் அந்த அணுக்கள் தன் இனத்தைப் பெருக்கும்.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் எப்போது சங்கடம் சலிப்பு வெறுப்பு என்று வருகின்றதோ… அடுத்த கணமே அதை மாற்ற… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இதை கூட்டிக் கொண்டே வந்தால் அது குறைந்து கொண்டே வரும்.
1.அது குறையத்தான் செய்யும் தவிர முழுமையாக மாற்ற முடியாது
2.இதைப் (அருளை) பெருக்கினால் அது இதற்குள் அடங்கிவிடும்.

நல்ல குணங்கள் கொண்டு இருக்கும் பொழுது தீமை என்ற உணர்வுகள் அதிகமாகி விட்டால் அது நல்ல குணங்களை அடக்கி
வேதனை என்ற உணர்வும்…
வேதனைப்படும் சொல்லும்…
வேதனையான செயல்களும்…
வேதனையான பேச்சுகளும்…
வேதனையான மூச்சுகளையும் தான் செயல்படுத்தும்.

ஆனால் அந்த மகரிஷிகளின் அருளைப் பெற்று இதை மாற்றிடுவோம்… மாற்ற முடியும்… அவர்கள் நலம் பெறுவார்கள்…! என்ற எண்ணத்திற்கு நாம் வர வேண்டும்.

ஒரு நோயாளி அவருடைய கஷ்டத்தைச் சொன்னால் மகரிஷிகளின் அருள் சக்தியை அவர்கள் பெறுவார்கள்… நலம் பெறுவார்கள்…! என்று நாம் எண்ணி விட்டால் அந்த உணர்வுகள் நமக்குள் வராது.

ஆனால் அவர்களை உற்றுப் பார்த்து… சொல்வதைக் கேட்டறிந்து அவருடைய துயரத்தை எண்ணி நாம் எடுத்துக் கொண்டால் நமக்குள்ளும் அது விளைந்து அவர் சொன்ன கஷ்டங்கள் எல்லாம் நமக்குள்ளும் வரும்.
1.அவரை மாதிரித் தான் நமக்குள்ளும் இருக்கின்றது
2.அவரை மாதிரித் தான் நமக்கும் நோயாகி விட்டது…! என்று அவரின் உணர்வு வந்து
3.அதையே நாமும் வளர்த்துக் கொள்கிறோம்

உதாரணமாக ஒருவன் நம்மை ஏமாற்றினான் என்றால் “ஏமாற்றினான்… ஏமாற்றினான்…” என்று எண்ணி அதையே எடுத்துக் கொண்டே இருந்தோம் என்றால் நம்மை அறியாமலேயே நம் உடலுக்குள் நல்ல உணர்வுகள் வளர்வது நிச்சயம் தடைப்படும்.

இதைப் போன்ற தீமையான விளைவுகளிலிருந்து நாம் மாறுவதற்கு ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கூட்டுத் தியானத்தின் மூலம் எடுத்து வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நம் ஆன்மாவில் தீமை உருவானால் அதை “முளையிலேயே கிள்ளி எறிந்து விடவேண்டும்”

நம் ஆன்மாவில் தீமை உருவானால் அதை “முளையிலேயே கிள்ளி எறிந்து விடவேண்டும்”

 

உதாரணமாக நாம் வசிக்கும் இடத்தில் ஒரு வேப்பமரத்தின் வித்து கீழே விழுந்தால் அது முளைத்து வளர்ந்து மரமாகி விட்டால் பின் அதை வெட்டுவதற்கு அரிவாள் கோடாரி எல்லாமே தேவைப்படுகின்றது.

பந்தோபஸ்தாக அதை அப்புறப்படுத்துவதற்கு எத்தனையோ ஆள்களும் தேவைப்படுகின்றது. நம் வீட்டுப் பக்கம் விழுந்து சேதாரம் ஆகாதபடி அதையும் நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது. அப்போதுதான் அதை வெட்ட முடியும்.

இதைப் போன்றுதான்
1.நம் ஆன்மாவில் தீமை உருவானால் அதை முளையிலேயே கிள்ளி எறிந்து விடவேண்டும்
2.தீமைகளை நமக்குள் வளரவிடக் கூடாது.
3.அதற்காக வேண்டித் தான் தியானத்தின் மூலம் உங்களுக்கு உயர்ந்த சக்திகளைக் கொடுக்கின்றோம்.

நமக்கு முன் இருக்கும் இந்தக் காற்றிலே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி இருக்கின்றது. அதை எடுத்து வளர்த்துக் கொண்டால் உங்களைக் காக்கும் சக்தியாக அது நிச்சயம வரும்.

உதாரணமாக… ஜோசியக்காரன் நம்மிடம் ஏழரை நாட்டுச் சனி பிடித்திருக்கிறது. அதனால் பணம் விரயமாகும் தொழில் நஷ்டமாகும் எதிரிகள் அதிகமாக வருவார்கள் என்று சொல்வார்கள். அதைப் பதிவு செய்து விட்டால் ஜோசியக்காரன் சொன்னபடி தான் இங்கே உணர்வின் இயக்கம் ஆகின்றது.

அந்த அடிப்படையில் தொழில் செய்தால் அது நஷ்டமாகி விடுகிறது… இடைஞ்சல் தான் வருகின்றது.

ஒரு சிலர் (ஜாதகம் பார்ப்பவர்கள்) இதையே குறிப்பாகப் பார்த்து எடுத்துக் கொள்வார்கள். இந்த உணர்வுகள் வளர்ச்சியாகிச் சொன்னவுடனே அதைக் கேட்டவுடன் நமக்குள் பதிவாகின்றது. இதெல்லாம் வாக்குவன்மை தான்…!

ஜோசியக்காரன் சொன்னதை நுகர்ந்தால் உடலில் பதிவாகிறது.
1.நல்லது சொன்னால் ஓரளவுக்குப் பலிக்கலாம்
2.ஆனால் கெட்டதை அதிகமாகச் சொல்லி விட்டால் அது அதிகமாகிறது.
3.(பெரும் பகுதி ஜோசியக்காரர்கள் நல்லதை அதிகம் சொல்வதில்லை).

கெட்டதை எல்லாம் சொல்லிவிட்டுக் கடைசியில் சாங்கியத்தைச் செய்தால் நீக்கி விடலாம் என்று அதையும் சொல்வார்கள். அவன் சொன்னபடி காசைக் கொடுத்துத்தான் நீக்குவதற்குப் பார்க்கின்றோம்.

இருந்தாலும் அப்படி ஜாதகமும் ஜோதிடமும் பார்க்கும்போது
1.ஒரு விபரீத விளைவுகளைச் சொன்னார்கள் என்றால் அதனால் நாம் அதிர்ச்சி அடைந்து விடுகின்றோம்.
2.ஆக மொத்தம் காசு கொடுத்துத் தான் தீமைகளை நீக்க வேண்டும் என்ற நிலை வருகிறது.

ஆனால் நாம் நுகரும் உணர்வுகள் எதுவோ அதைத்தான் உயிர் இயக்குகின்றது. இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றிச் சென்ற அருள் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து நம் உடலுக்குள் அதை ஏங்கிப் பெற்றால் உயிர் அதனின் கருவை உடலிலே உருவாக்குகின்றது.

அந்த மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து வளர்க்கத் தொடங்கினால் தீமையான உணர்வுகளை மாற்றி அமைக்கலாம். ஞானிகள் காட்டிய வழிகள் இது தான். பல சரக்குகளைப் போட்டு ஒரு குழம்பை எப்படிச் சுவையாக வைக்கின்றோமோ அதைப் போல் நல்லதாக மாற்ற முடியும்.

ஆறாவது அறிவின் துணை கொண்டு பல உயிரினங்களின் அணு செல்களை எடுத்துப் புது விதமாக பல பல உயிரினங்களை விஞ்ஞானி மாற்றியமைக்கின்றான். விஞ்ஞானிகள் செய்வதை எல்லாம் இன்று நாமும் பார்க்கின்றோம்.

அதைப் போன்று தான் அந்த அருள் உணர்வை எடுத்து வளர்த்துக் கொண்டால் பகைமை உணர்வுகளையும் தீமையான உணர்வுகளையும் மாற்றிவிட முடியும்.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்றால் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ வெறுப்பு வேதனை கோபம் எல்லாம் நம்மை அறியாமலே வருகின்றது. அதை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும். நம்மை நாம் அறிதல் வேண்டும்.

1.பிறிதொரு உணர்வு எப்படி இயக்குகின்றது…?
2.அந்தப் பிறிதொரு தீமையான உணர்வு நமக்குள் புகாது எப்படித் தடுக்க வேண்டும்…?
3.அதற்குண்டான உபாயங்களையும் சக்திகளையும் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் உபதேசமாகக் கொடுக்கின்றோம்
4.அதை நீங்கள் எடுத்தால் நிச்சயம் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

துருவ நட்சத்திரத்தின் ஒளிப் பிளம்பலைகளை நாம் ஒவ்வொரு நிமிடமும் சுவாசிக்க வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் ஒளிப் பிளம்பலைகளை நாம் ஒவ்வொரு நிமிடமும் சுவாசிக்க வேண்டும்

 

ஒவ்வொரு நாளும் காலையிலிருந்து இரவு வரையிலும் சதா எத்தனையோ தீமைகளையும் நன்மைகளையும் நுகர்ந்தறிந்து கொண்டே உள்ளோம்.

அது எல்லாம் நம் உடலுக்குள் ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய என்று நம் உடலாக மாறிக் கொண்டே உள்ளது.

அப்படி மாறிக் கொண்டே இருந்தாலும் அந்தத் தீமையான உணர்வுகளை நீக்கத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் எடுத்தேயாக வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று உடலுக்குள் செலுத்தினால்
1.தீமைகளை மாற்றிடும் சக்தியாக அது வலுப் பெற்று
2.நல்ல உணர்வுகளாக மாறி… தீமையிலிருந்து நம்மை விடுபடச் செய்யும் என்று
3.ஞானிகள் இதை நமக்குத் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

அதே சமயத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நாம் மட்டும் பெற்றால் பத்தாது.

நாம் பெற்ற சக்திகளையும் நாம் கண்ட உண்மை உணர்வுகளையும் தன் மனைவிக்குக் கிடைக்க வேண்டுமென்று கணவனும் தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவியும் இந்த இரு உணர்வும் ஒன்றி உருவாக்கினால்தான் ஒளியான அணுத் தன்மை அடைகின்றது,

இதை ஒவ்வொருவரும் பழகிக் கொண்டால் இன்றைய விஞ்ஞான உலகில் விஷத் தன்மைகள் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அது நம்மைப் பாதிக்காதவண்ணம் மாற்றிக் கொள்ள முடியும்.

1.27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் அந்தத் தூசிகள் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது ஒளிப் பிளம்பலைகள் பரவுகின்றது.
2.அந்த ஒளிப் பிளம்பலைகள் பரவி வரும் போது துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தால்
3.அதிலிருந்து வரக்கூடிய அணுக்களைச் சுவாசித்து நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு அதைச் சேர்ப்பிக்கின்றது.

27 நட்சத்திரங்களும் ஒன்றுடன் ஒன்று மின்னலாகத் தாக்கி அது உணர்வலைகளாகப் பரப்பப்படும் போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துக் கொண்டால் ஒளிக் கற்றைகளாக உடலுக்குள் பரவும்.

ஏனென்றால்…
1.நட்சத்திரங்களிலிருந்து வரும் ஒளிக்கற்றைகள் பளீர்… பளீர்… என்று மின்னும்.
2.அந்த உணர்ச்சிகளை நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் ஏங்கிப் பெறும் போது நம் ஆன்மாவாக மாறுகிறது.
3.ஆன்மாவிலிருந்து சுவாசித்து உடலுக்குள் செலுத்தும் போது அந்த உணர்வின் அணுக்கள் ஒளியாக மாறும்.

ஆகவே உயிர் எப்படித் துடிக்கின்றதோ இதைப் போன்றுதான் இந்த உயிர் அணுவின் தன்மை இணைந்து இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது எந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எடுத்தோமோ அங்கே நம்மை அழைத்துச் சென்று ஆறாவது அறிவு கொண்ட நிலையில் ஏழாவது நிலையாக வளர்ச்சி பெற்று அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைய முடியும்.

தீமைகளை நீக்கக் கண்ணன் காட்டும் திருட்டு வழி

தீமைகளை நீக்கக் கண்ணன் காட்டும் திருட்டு வழி

 

இன்று மனிதனாக இருக்கும் நாம் நல்ல செழுமையாக இருந்தாலும் பிறருடைய துயர் துடைக்கக் கேட்டுணர்ந்த அந்தத் துயரமான உணர்வுகள் நமக்குள் வந்த பின் அந்த உணர்வுகள் நம் நல்ல உணர்வுடன் இரண்டறக் கலந்து விடுகின்றது.

பின் அது ஓங்கி வளர்ந்து விட்டால்
1.நம் உடலை… மகிழ்ச்சியாக வைத்திருந்த இந்த உடலின் சாரத்தை
2.அது செயல்படாது தடுத்து விடுகின்றது.
3.அதனால் உடல் நலிந்து… உணர்வுகள் குறைந்து… எண்ணங்கள் நலிந்து…
3.நம் வாழ்க்கையில் எதனையுமே வலுவான நிலையில் செய்ய முடியாத நிலைகளுக்குக் கொண்டு செல்கின்றது.

இதிலிருந்து நம்மைக் காத்திட… இத்தகைய நஞ்சிலிருந்து நாம் மீள்வதற்கு நமது குரு காட்டிய அருள் வழியில் நாம் ஆத்ம சுத்தி செய்வோம் என்றால் நம்மைக் காத்திட முடியும்.

அதற்காக வேண்டித்தான்,,,
1.அந்த அருள் ஞானிகள் கண்டுணர்ந்த இந்த உணர்வின் சாரத்தை
2.உங்களுக்குள் காத்திடும் எண்ண உணர்வுகளுக்குள் இணைத்து
3.அதை வலுப் பெறச் செய்யும் நிலைக்கு இதை யாம் (ஞானகுரு) உபதேசிப்பது.

மாமகரிஷி வியாசர் காட்டிய அருள் வழியில் கண்ணன் (நமது கண்கள்) காட்டிய நிலைகள் கொண்டு, “அதோ வருகின்றான் நாரதன்…!” என்று நாம் எண்ணும்போது புற நிலைகள் கொண்டு நமது ஆன்மாவைச் சுத்தப்படுத்திச் செயல்படுகின்றோம்.

1.நம் கண்ணின் நினைவலைகளை விண்ணை நோக்கிச் செலுத்தி…
2.இப்போது உங்களுக்கு உபதேசித்த உணர்வுகளின் வலுவின் துணை கொண்டு
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெற வேண்டும் என்று
4.கண்ணின் நினைவை உயிரோடு ஒன்றச் செய்ய வேண்டும்.

உயிரான கண் அகக்கண்… நம்முடய கண் புறக்கண். புறக்கண்ணால் அகக் கண்ணின் (உயிரின்) நினைவு கொண்டு அந்த ஆற்றல் மிக்க சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று நாம் ஏங்கினால் “சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தால் சுட்டுப் பொசுக்கிவிடுவான்” என்பதாகும்.

நம் உடலான சிவத்திற்குள்…
1.உயிர் அகக்கண்ணாக இயக்கும் நிலையில்
2.புறக்கண்ணின் நினைவு கொண்டு நினைவினை உயிருடன் ஒன்றி,
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி
4.அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் ஜீவாத்மாக்கள் பெற வேண்டும் என்று
5.உள் நினைவில் கண்களை மூடி
6.நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து அணுக்களிலும் படர வேண்டும்” என்று செய்வதே கண்ணன் காட்டிய திருட்டு வழி.

கண்ணன் காட்டிய நிலைகள் கொண்டு இந்த உணர்வுகளை (மகரிஷிகளின் உணர்வுகளை) உள் செலுத்தும் போது அந்த ஞானிகளின் உணர்வுகள் “பிராணாயாமம்”

அந்த ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் ஜீவன் பெறச் செய்து அது வளர்ச்சியாகும் பொழுது
1.நாம் ஒரு பொருளைப் பாத்திரத்தில் போட்டு வேக வைக்கும் பொழுது
2.அதனின் சத்து கொதித்து அதனின் மணம் வெளி வருவதைப் போன்று
3.அந்த மணத்தின் வீரியத் தன்மை (ஞானிகளின் அருள் சக்தி) உள் நின்று வெளி வருவதை
4.நாம் வேதனைப்பட்ட உணர்வின் தன்மையை இது பிளக்கின்றது.

முதலிலே சொன்ன… பிறர் துயர் துடைக்க எடுத்துக் கொண்ட துயரமான உணர்வுகள் நம் உடலுக்குள் சேர்க்கும் முன் நம் ஆன்மாவாக மணமாக மாறுகின்றது.

அது மடி மேல் ஆன்மாவாக இருந்தாலும்
1.நாம் கண்ணின் நினைவு கொண்டு உயிருடன் ஒன்றி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும்
3.அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவாத்மாக்கள் பெற வேண்டும் என்று
4.கண்ணான கண்ணின் நினைவுகளை உள் செலுத்தப்படும்போது நாம் எண்ணிய உணர்வுகள் பிராணாயாமம்…!

அது ஜீவன் பெற்று அந்த மணத்தின் வீரியத் தன்மை உள் நின்று வெளி வருவதை மடி மீது நம் வேதனைப்பட்ட உணர்வின் தன்மையைப் பிளக்கின்றது.

இந்த முறைப்படி ஆத்ம சுத்தி செய்தால் எத்தகைய தீமைகளையும் நாம் பிளக்க முடியும். நாம் செய்த நன்மை நிலைத்திருக்கும். நமக்கும் உயர்வைத் தான் தரும்.

கணஹோமம்

கணஹோமம்

 

எந்த ஆலயத்திற்குள் நாம் சென்றாலும்…
1.இந்த ஆலயம் வருவோர் அனைவரும் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும்… மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்
2.அவர்கள் குடும்பம் எல்லாம் மகிழ்ந்த நிலைகள் பெற வேண்டும்
3.இந்த உண்மைகளை எல்லாம் உணர்த்திய மகரிஷிகளின் அருள் சக்தி அனைவரும் பெற வேண்டும்
4.எங்கள் அனைவரது உடல்களிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
5.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி
6.ஆலயத்திற்குள் வருவோருக்கெல்லாம் நல் வாழ்வு கிடைக்க வேண்டும்
7.அவர்கள் குடும்பம் எல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணுவது தான் உண்மையான பக்தி…!

இதைக் கணங்களுக்கு அதிபதி ஆக ஆக்கினால் கணஹோமம்…!

கோவிலில் அர்ச்சனை அபிஷேகம் என்று எப்படிச் செய்கின்றோமோ அது போல்
1.புருவ மத்தியில் இருக்கும் உயிருக்குள் அருள் உணர்வுகளை எடுத்து… அதை உயிரான நிலைகள் கொண்டு ஹோமம் ஆக்கி
2.அந்த அருள் உணர்வின் தன்மைகளை உடலுக்குள் பரப்பி
3.அதிலே வரும் மணத்தின் தன்மையை வெளிப்படுத்தி
4.எல்லோரும் போற்றும் நிலையாக… நம்மைப் பார்க்கும் பொழுதே மற்றவர்களுக்கு அந்த மகிழ்ந்த நிலை வர வேண்டும்.

இதைத் தான் ஒவ்வொருவரும் தனக்குள் வினையாகச் சேர்க்க வேண்டும். அப்படிச் சேர்த்தால் இந்தப் பரமான பூமியில்
1.பரமாத்மாவைப் பரிசுத்தப்படுத்தும் நிலையாகவும்
2.நமது ஆன்மாவைத் தெளிவுபடுத்தும் நிலையாகவும்
3.நமக்குள் இருக்கும் ஜீவாத்மாவை உயர்வுபடுத்தும் நிலையாகவும்
4.நம் உயிரான்மாவை ஒளியாக மாற்றுவதும் ஆகும்.

ஆகவே இருளைப் போக்கி… ஒளி பெறும் நிலைகளாக உருவாக்குவதுதான் பக்தி. இதைத்தான் நாம் தியானமாக இருக்க வேண்டும்.

தனித்துத் தியானித்தாலும்… மேலே சொன்ன நல்ல ஒழுக்கத்தைத் தனக்குள் சேர்க்க்கவில்லை என்றால் அந்தத் தியானம் கைகூடாது.

அருள் ஞானிகளின் அருள் உணர்வைப் பதிவு செய்து… அருள் ஞானிகள் கண்டறிந்த உணர்வை நமக்குள் தெளிவாக்கி… அதனின் நினைவு கொண்டே வாழ்க்கையில் கடைப்பிடித்து வர வேண்டும்.

வாழ்க்கையில் எத்தகைய தீமை செய்வோரைக் கண்டாலும்
1.அதனின் உணர்வின் தன்மை நமக்குள் பதிவாக்கி விடக்கூடாது.
2.அவர் நிலைகளைப் பகைமையும் ஆக்கிவிடக் கூடாது.

நாம் மற்றவர்களுக்கு நல்லதையே செய்கின்றோம் வைத்துக் கொள்வோம். நம்மிடம் உதவி பெற்றவர்களில் ஒருவரைப் பார்த்தவுடன் அவரைக் கூப்பிடுகின்றோம்.

ஆனால் அவரோ ஏதோ அவசரத்தில் போகின்றார். (அது நமக்குத் தெரியாது…!) நம்மிடம் வரவில்லை. அப்பொழுது நாம் என்ன நினைக்கின்றோம்…?

அன்று என்னிடம் காசு வாங்கும் பொழுது என்னை மதித்தார். இப்பொழுது பார்… அவர் பாட்டுக்குப் போகின்றார்… கொஞ்சம் கூடக் கவனிக்காது செல்கிறார்…! என்று அவர் மேல் வெறுப்பை ஊட்டிக் கொள்கின்றோம்.

இத்தகைய வெறுப்பு நமக்குள் வளராது அந்தப் பகைமையற்ற நிலைகளாக உருவாக்க வேண்டும் என்பதற்குத் தான் ஆலயத்தை அமைத்தார்கள் அன்று ஞானிகள்.

அந்த ஆலயத்திற்குச் சென்று…
1.மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துக் கொண்டு
2.நம் ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்துவதும் ஜீவாத்மாவைத் தூய்மைப்படுத்துவதும் தான் கணஹோமம் என்பது.

ஆனால் அபிஷேகம் என்ற நிலையில் அங்கே ஆராதனை செய்து விட்டுக் கணஹோமம் என்று நெருப்பிலே பல பொருள்களைப் போட்டு வேக வைத்தால் இது தான் பக்தி என்று இன்று செய்கின்றோம்.

இப்படி மறைமுகமாக எடுத்துக் கொள்ளும் நிலைகள் கொண்டு “காசை விட்டெறிந்தால் ஆண்டவனை விலைக்கு வாங்கலாம்…” என்று இறுமாப்புடன் செய்யக் கூடியவர்களும் மந்திரத்திலே சிக்கி… அடுத்தவன் கையில் சிக்கி… அவர்களுக்குப் பொருள் தேடும் நிலைகளுக்குத் தான் பயன்படுவார்கள். ஆக அவனும் அழிந்து இவனும் அழிந்தது போன்ற நிலைள் தான் ஏற்படும்.

யார் மந்திரத்தை ஒலித்தாலும் சரி… அல்லது அதைக் கேட்டாலும் சரி… அதன் நிலையிலே தான் சிக்க முடியும்… அதிலிருந்து தப்ப முடியாது.

நம்முடைய பற்று அதுவாக இருக்கக்கூடாது. ஞானிகள் காட்டியது அது அல்ல…!

ஆக… அருள் ஞானம் பெற வேண்டும் என்று அந்த மகரிஷிகளை எண்ணி ஏங்கி அந்தப் பக்தி கொண்டு யாரெல்லாம் எண்ணுகின்றார்களோ அந்த உணர்வு கொண்டு தான் அங்கே விண் செல்ல முடியுமே தவிர இங்கே சுற்றிக் கொண்டிருப்பதற்கு அல்ல…!

1.பிறர் நலமுடன் வாழ வேண்டும் என்று ஒவ்வொருவரும் எண்ணுங்கள்… இந்தப் பக்தியை கூட்டுங்கள்.
2.தீமையாகப் பேசுகிறார்கள் என்றால் அதை ஏற்றுக் கொள்ளாதீர்கள்.
3.அவரும் உண்மையை அறியும் ஞானம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
4,அதைச் செயல்படுத்துங்கள்… இது தான் தியானம் என்பது.

ஒவ்வொருவரும் இதைக் கடைப்பிடியுங்கள். உங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்களைக் காத்திடும் சக்தியாகப் பெருகட்டும். உங்கள் உணர்வுகள் மற்றவர்களின் தீமையை அகற்றும் சக்தியாக வளரட்டும்.

இதன் வழி செயல்படுவோர் பேரின்பப் பெருவாழ்வு பெற்று ஒளியின் சரீரம் பெற்றுப் பிறவி இல்லா நிலையை அடைவீர்கள் (ஞானகுரு).

அகண்ட அண்டத்தின் சக்தியைத் தியானத்தின் மூலம் அவசியம் பெற வேண்டும்

அகண்ட அண்டத்தின் சக்தியைத் தியானத்தின் மூலம் அவசியம் பெற வேண்டும்

 

1.2000 சூரியக் குடும்பத்திற்குள் விளையும் அந்த உணர்வின் தன்மையையும்
2.அந்த அண்டத்திலிருந்து வரக்கூடிய கோள்களின் உணர்வுகளையும் ஊடுருவி
3.துருவ தியானத்தின் மூலம் வலுக் கொண்டு எடுத்து அதை நாம் நுகர முடியும்.

அதை நுகர்ந்து சிறுகச் சிறுகப் பெருக்கிக் கொண்ட பின் அதனின் வலுக் கொண்டு இந்தப் பிரபஞ்சத்தில் மனிதன் தனது உணர்வின் தன்மை வளரச் செய்து கொள்ள முடியும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இவ்வாறு நாம் வளர்ந்த பின் அந்த அகண்ட அண்டத்தில் வரும் உணர்வினை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று பெரும் சக்தியாகத் திகழ முடியும்.

1.ஒன்றின் பின் ஒன்று வளர்ச்சி அடைவதும்
2.ஒன்றில் சிக்குண்டு ஒன்றுக்குள் மடிந்து அது மாற்றங்களாவதும்
3.இயற்கையின் உண்மை நிலைகள் மாறிக் கொண்டு வரும் இந்த நேரத்தில்
4.உயிருடன் ஒன்றிய உணர்வுகள ஒளியாக மாற்றிடும் நிலையாக
5.அனைத்தையும் அறிந்திடும் அருள் சக்தி பெற்ற நாம் அந்த அகண்ட அண்டத்தின் சக்தியைச் செயல்படுத்துவோம் என்றால்
6.இந்த வாழ்க்கையில் என்றுமே ஏகாந்த நிலை என்ற நிலைகளில் வாழ முடியும்
7.அது தான் நமக்கு நிரந்தரமானது…!
8.இந்த உடல் நிரந்தரமானதல்ல… நாம் வாழும் இந்தப் பிரபஞ்சமும் நிரந்தரமானது அல்ல.

ஆகவே நம் உயிரின் உணர்வுடன் ஒன்றி அருள் உணர்வுகளை வலுக் கொண்டதாகச் சேர்க்க வேண்டும்.

அதைத் தான் இந்தப் பூமிக்கு ஓசோன் திரை என்றும் சூரியனுக்கு ஓசோன் திரை என்றும் மற்ற கோள்களுக்கும் அதனதனதற்குத் தக்கவாறு அந்தப் பாதுகாப்புக் கவசம் இருக்கின்றது.

ஆடு மாடுகளுக்கும் அது ஓசோன் திரையாக உள்ளது. ஏனென்றால் அது தன் உணர்வை மாற்றி விடாதபடி தனக்குள் எடுத்துக் கொள்வதும் இருந்தாலும் மற்றொன்று ஊடுருவிச் செயல்படுத்தும் பொழுது அதனுடைய மாற்றங்களானால் பல நோய்கள் ஆகி அது கெடுவதும் போன்ற நிலை ஏற்படுகின்றது.

நம் பூமிக்கும் இதே போன்று தான் அது நுகர்ந்த உணர்வுகள் பாதுகாப்பற்ற நிலைகளாகி… தீமையின் உணர்வுகள் ஊடுருவும் போது மாற்றமடைந்து ஓசோன் திரை கிழிகின்றது.

1.இருந்தாலும் இதை எல்லாவற்றையுமே பிளந்து
2.எதையுமே தகர்த்து எறியும் சக்தி பெற்றது தான் துருவ நட்சத்திரம்.
3.அது எத்தகைய விஷத்தையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது.
4.அதை நாம் பெறுதல் வேண்டும்… நமக்குப் பாதுகாப்புக் கவசம் அது தான்…!

உதாரணமாக சர்க்கரை ஆலைகளில் சர்க்கரைப் பாகு உற்பத்தி செய்யும் போது அதிலே சில கெமிக்கல்களைப் போட்டு அது போகும் போதே அதில் உள்ள அழுக்கை பிரித்துவிட்டு தூய்மையான சர்க்கரையாக மாற்றுகின்றார்கள்,

அது போன்று தான் அருள் உணர்வின் தன்மையை நமக்குள் எடுத்து ஒவ்வொரு நொடியும் நமக்குள் தூய்மைப்படுத்தும் உணர்வின் தன்மையாக ஒவ்வொரு அணுக்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைச் சேர்க்கும் பழக்கம் வர வேண்டும்.

நமக்குள் தீமைகளை மறந்து நமது உணர்வின் தன்மையை அது வருகின்றது

ஒரு சிலர் நான் எதைச் செய்தாலும் சரியாகவில்லை… என் காரியங்கள் தோல்வி அடைந்து விட்டது… என் பையன் இப்படி இருக்கின்றானே…! என்றே எண்ணுவார்கள்.

இப்படி எண்ணுவதற்கு மாறாக… பையன் இப்படித் தான் நல்லவனாக வர வேண்டும் எங்கள் தொழில் நன்றாக நடக்க வேண்டும் என்று இந்த உணர்வை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

அந்தத் தீமையான உணர்வுகள் நமக்குள் உட்புகாது மன உறுதியும் மன வலிமையும் பெறும் சந்தர்ப்பமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

சோர்வோ சங்கடமோ வந்தால் அதை எல்லாம் மறந்துவிட்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதை எடுத்து நாம் பழகிக் கொண்டால் அந்தச் சோர்வு அகலும். புதிய உணர்வு நமக்குள் தோன்றும்.

பரிவு பண்பு கொண்டவர்கள் பிறருடைய துன்பங்களைக் கேட்க நேர்ந்தால் அது எல்லாம் அவர்கள் உடலில் எளிதில் ஊடுருவிவிடும்.

அப்பொழுது பூமிக்கு ஓசோன் திரை எப்படிக் கிழிகின்றதோ இதைப் போல நமது ஆன்மாவில் இருக்கும் நல்லதைப் பிளந்து விட்டு உள்ளுக்குள் சென்று விடுகின்றது.

உடலில் உள்ள எதிர்ப்பு சக்திகளைக் குறைவாக்கச் செய்கின்றது. அதனால் நம் உடலில் வேதனை ஏற்படும் நிலையும் நல்ல சிந்தனையை மாற்றிடும் நிலைகளும் வருகின்றது.

1.இதைப் போன்ற நிலையில் இருந்தெல்லாம் விடுபட குருநாதர் கொடுத்த அருள் வழிப்படி
2.இந்த உலகத்தையும் அகண்ட அண்டத்தையும் அறியக் கூடிய சக்தியையும்
3.தீமைகளை அகற்றக் கூடிய வல்லமைகளையும் நீங்கள் பெற வேண்டும் என்று
4.உங்களுக்குள் துரிதமான நிலைகள் கொண்டு அரும் பெரும் சக்திகளைப் பதிவு செய்கிறேன்.
5.இந்த அருள் உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

துருவ நட்சத்திரத்தை எண்ணித் தியானம் செய்யும் போது நம் உடலுக்குள் ஏற்படும் நல்ல மாற்றங்கள்

துருவ நட்சத்திரத்தை எண்ணித் தியானம் செய்யும் போது நம் உடலுக்குள் ஏற்படும் நல்ல மாற்றங்கள்

 

ஈஸ்வரா… என்று கண்ணின் நினைவினை உங்கள் புருவ மத்தியில் வீற்றிருக்கும் உயிரான ஈசனிடம் நினைவைச் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து
2.நினைவு அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி
3.அதனின்று வரும் பேரருளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
4.உயிர் வழி கவர்ந்து புருவ மத்தியில் ஏங்கி தியானியுங்கள்.

இப்பொழுது உயிரிலே அந்தச் சக்திகள் ஈர்க்கப்படும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு மோதும் பொழுது அங்கே வெளிச்சம் வரும். இந்த உடலுக்குள் மகிழ்ச்சி வரும்.

1.உடலுக்குள் தீமை இருந்தால் எரிச்சல் வரும்… அது குறையும்… அந்தத் தீமை நீங்கும்.
2.எப்படி நெருப்பிலே ஒரு விஷத்தின் தன்மை பட்டால் அதிலிருந்து புகை வெளி வருகின்றதோ அதைப் போல
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் உடலில் படும் பொழுது
4.தீமை என்ற உணர்வுகளைக் கருக்கி வெளி வரும்போது அந்த உணர்ச்சிகள் தெரியலாம்.
5.தீமைகள் அகலும்… நன்மைகளை உணர முடியும்… நன்மைகள் பெருகும்…!

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் இவ்வாறு எண்ணி ஏங்கித் தியானியுங்கள். இது உங்களுக்கு ஒரு பயிற்சி…!

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் இரத்த நாளங்களில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினை இரத்த நாளங்களில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

இத்தகைய வீரிய உணர்வுகள் பெருகும் பொழுது அது ஓரளவுக்கு நம் இரத்தத்தில் உள்ள தீய அணுக்களை நல்ல அணுக்களாக மாற்றிக் கொள்ள முடியும்.

வெறுப்பு வேதனை சலிப்பு சங்கடம் கோபம் குரோதம் பயம் ஆத்திரம் போன்ற உணர்வுகளை நாம் நுகர்ந்தால்
1.அது உமிழ் நீராக மாறி அதுவே இரத்தமாக மாறி
2.இரத்தத்தில் அந்தந்த உணர்ச்சிகளைத் தூண்டும் அணுக்களாக – “கரு முட்டைகளாக…” விளைந்து விடுகின்றது.

ஏனென்றால் இப்படி அது எது விளைந்ததோ அதன் உணர்வை அது இயக்கும். தீமையான உணர்வாக அது இயக்கத் தொடங்கும்.

அதை மாற்ற வேண்டும் என்றால் அந்தக் கருமுட்டைகளுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவைச் செலுத்தப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் உணர்வு கலந்த… அண்ட நல்ல அணுக்களாக மாற்றிக் கொள்ள முடியும்.

ஒரு தட்டான் பூச்சி தான் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு எந்தப் பூ மீது அமர்ந்து தன் முட்டைகளை இடுகின்றதோ அந்தப் பூவைப் போல நிறம் கொண்ட ஒரு பட்டாம் பூச்சியாக வருகின்றது.

தட்டான் பூச்சி தான் பல வண்ணங்களில் பட்டாம் பூச்சிகளாக மாறுகின்றது. நெல் செடிகளில் தட்டான் பூச்சி முட்டை இட்டால் நெல் பூச்சிகளாக உருவாகின்றது.

இதைப் போன்று தான் நம் உடலுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பரவச் செய்து
1.இரத்த நாளங்களில் உள்ள அந்த அணுக்கருக்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணையச் செய்தால்
2.அது நல்ல கரு முட்டையாக மாற்றி நல்ல அணுக்களாக நமக்குள் உருவாக்கிக் கொள்ள முடியும்.

இதன் வழியில் உடலிலே நோய் வராது தடுக்க முடியும். பகைமைகளையும் வேதனைகளையும் அகற்றிக் கொள்ள முடியும்.

முன்னோர்களின் உயிராத்மாக்களை விண் செலுத்துவது தான் நம் முதல் குறிக்கோளாக இருக்க வேண்டும்

முன்னோர்களின் உயிராத்மாக்களை விண் செலுத்துவது தான் நம் முதல் குறிக்கோளாக இருக்க வேண்டும்

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானப் பயிற்சி கொடுக்கின்றோம் (ஞானகுரு).

இந்தப் பயிற்சி மூலம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை வலுப்படுத்திக் கொண்டு நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையர்களின் உயிர் ஆன்மாக்களை விண் செலுத்துவது தான் முதல் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

நம்மைக் காக்க… நம்மை வளர்க்க… அவர்கள் எத்தனையோ வேதனைப்பட்டு இருக்கின்றார்கள். அவருடைய உணர்வுகள் நமக்குள் இருப்பதனால் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் கூட்டி அந்த ஆன்மாக்களின் விண் செலுத்துவதே முறை…!

நம்முடைய முன்னோர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில்
1.சந்தர்ப்ப பேதத்தால் விபத்துக்களில் சிக்கி இருப்பார்கள்…
2.ஒரு சிலர் தற்கொலை கொலை கூடச் செய்திருப்பார்கள்…
3.எத்தனையோ வகையான சாபங்கள் இட்டும் அவர்கள் மடிந்து இருக்கலாம்.

இதைப் போன்ற உணர்வுகள் குல வழி என்று தொடரப்படும் போது குடும்பங்களில் கர்ப்பமுறும் தாய் கருவிலே இது இணைந்து பூர்வ புண்ணியமாக அமைந்து விடுகின்றது.

அப்படிப் பிறக்கும் குழந்தைகளின் குடும்பங்களில் ஏராளமான இன்னல்கள் வந்து விடுகின்றது. பிறக்கும் குழந்தைகள் தவறு செய்யவில்லை என்றாலும் இது போன்று இயக்கமாகின்றது.

ஆகவே எந்த வழியில் முன்னோர்கள் உயிரான்மாக்கள் உடலை விட்டுச் சென்றிருந்தாலும் அவருடைய உணர்வுகள் நமக்குள் இருப்பதனால்
1.அவர்களை அறியாது இயக்கிய விஷத்தன்மைகள்…
2.அவர்களை மாய்க்கச் செய்த அந்த விஷத்தின் தன்மைகளை
3.கூட்டுத் தியானங்கள் மூலம் விண் செலுத்த முடியும்… சப்தரிஷி மண்டலத்தில் இணைக்க முடியும்.
4.ஏனென்றால் அவர்கள் கடும் விஷத்தையும் முறித்தவர்கள்.

குடும்பத்தில் இருப்போர் அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்டமைப்பாகத் தியானித்து எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று உந்தித் தள்ளி அங்கே அனுப்பப்படும் பொழுது அந்த அலைகளுடன் கலந்து விஷத்தின் தன்மை குறைந்து விடுகின்றது.

முன்னோர்கள் துர்மரணமடைந்திருந்தாலும் கூட அவர்கள் ஒளி உடல் பெறுகின்றனர். துர்மரணத்திற்குக் காரணமான அந்த உணர்வுகளும் மடிந்து விடுகின்றது. அவர்கள் ஒளி உடல் பெற்றுச் சப்தரிஷி என்ற நிலை அடைகின்றனர்.

இப்படி அடையச் செய்தால் அவர்கள் வாழ்ந்த காலத்தில் வெளிப்படுத்திய உணர்வுகள் (துயரப்பட்டது நோய்வாய்ப்பட்டது) நம்மிடத்தில் பதிந்திருந்தாலும் இருளை நீக்கிப் பொருள் காணும் உணர்வாக அது செயல்படுத்தும்.

குடும்பத்தில் நமக்குத் தெரியாமல் அறியாமலே சூட்சமத்தில் எத்தனையோ வகையில் தீமைகள் நடக்கின்றது.

காரணம் பாசமும் பற்றும் கொண்டு இருந்தாலும் நம்முடன் வாழும் போது நோய்வாய்ப்பட்டிருந்தார் என்று நாம் எண்ணுகின்றோம். ஆனால் உடலை விட்டுப் பிரிந்த பின் யார் மீது பற்று உள்ளதோ அந்த உடலுக்குள் வந்து அவர் உடலில் இருந்த தீமைகளும் இங்கே இயக்கத் தொடங்கி விடுகின்றது.

இதைப் போன்ற நிலை ஆகாதபடி நாம் தடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

நம்முடன் வாழ்ந்து வளர்ந்தவர்கள் எந்த நேரம் உடலை விட்டுச் சென்றாலும் நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு ஏழாவது நிலையாக அவர்களை ஒளியின் தன்மை பெறச் செய்ய வேண்டும்.

நம் தூதுவராக அங்கே விண்ணுக்கு அனுப்பினால் அவர்கள் முதலில் ஒளி உடல் பெறுகின்றனர். அடுத்து நாமும் பிறவியில்லா நிலை அடையலாம். வழி வழி நாம் இதைச் செய்தால் இதன் வழி சீராக வருகின்றது.

ஆனால் “எங்களுடன் வாழ்ந்தீர்கள்… சம்பாதித்துக் கொடுத்தீர்களே… இப்படி எங்களை விட்டுப் போய்விட்டீர்களே…!” என்று பாசத்துடன் எண்ணினால் அந்த ஆன்மா நமக்குள் வந்து அவர் பட்ட கஷ்டத்தை நமக்குள்ளும் இயக்கும்.

இந்த உடலுக்குள் வந்து மீண்டும் வேதனையைத் தான் வளர்க்கும். இந்த உடலை விட்டு வெளியிலே செல்லும் போது கடைசியில் மனிதனல்லாத உயிரினமாகத் தான் பிறக்கும்… நம்மையும் அதே வழியிலே வீழ்த்திவிடும்.

இதைப் போன்ற நிலையில் இருந்தெல்லாம் நாம் தப்ப வேண்டும். நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் மூதாதையர்களைப் பிறவியில்லா நிலை அடையச் செய்வோம். அதற்கு அந்த அருளைப் பெறுவோம்.

1.இதைச் செய்வதற்குக் காசு பணம் எதுவும் தேவையில்லை
2.எல்லோருக்கும் அனுமதி கொடுக்கின்றோம்… தாராளமாகச் சொல்கின்றோம்
3.உங்களால் முன்னோரை விண் செலுத்த முடியும்
4.தீமைகளை நீக்க முடியும்… நன்மைகளைப் பெற முடியும்
5.ஆகவே நன்மை பெறும் சக்தியைத்தான் கொடுக்கின்றோம்.

திட்டியவனை எண்ண்ணும் பொழுது… அது தீமைகளைத் தான் செயல்படுத்தும். வேதனைப்படுவோரை எண்ணும்போது அது வேதனைப்படுத்தும் உணர்வாக வருகின்றது… மற்றவர்களையும் வேதனைப்படுத்தும் நிலைதான் வருகின்றது.

அதே போன்று
1.தீமைகளை நீக்கும் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டால்
2.தீமையை நீக்கும் அருள் சக்தியாக நிச்சயம் வளரும்.

கடலிலே செல்லப்படும் பொழுது அதிலே எத்தனையோ அலைகள் வருகின்றது. அதிலே ஒரு தீவிற்குப் போக வேண்டுமென்றாலும் அந்த அலைகளைக் கடந்து தான் செல்ல வேண்டும். ஆனால் பெரிய அலை வந்து விட்டால் அதிலே மூழ்கி விடுகின்றோம்.

ஆக… உங்கள் வாழ்க்கையில் வெறுப்பும் வேதனையும் கோபமும் போன்ற கடினமான அலைகள் வரும் போது அதிலே நீங்கள் கவிழ்ந்து விட்டால் கோபப்பட்ட உடலுக்குள்ளோ அல்லது வெறுப்படைந்த வேதனை அடைந்த உடலுக்குள்ளோ சென்று அங்கே அதே தீமைகளைத் தான் வளர்க்க முடியும்.

இதையெல்லாம் கடந்து வர வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஆழமாகப் பதிவாக்கிக் கொள்ளுங்கள். அந்தத் துருவ நட்சத்திரத்தைத் துடுப்பாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த மனித உடலில் பெற்ற பாவங்களை நீக்க முடியும். பிறவி இல்லா நிலை அடைய முடியும்.

ஆகவே தீமையை நீக்கும் ஒன்பதாவது நிலையிலிருந்து பத்தாவது நிலையான கல்கி ஒளி நிலை அடையக்கூடிய தகுதி பெற்றால் விஜய தசமி.

1.விண்ணிலே தோன்றிய உயிர் பூமிக்குள் வந்து
2.ஒளியின் உணர்வாக மாறி விண்ணிலே மீண்டும் ஐக்கியமாகி
3.என்றும் ஏகாந்த நிலைகள் பெறுவதுதான் யாம் (ஞானகுரு) சொல்லும் இந்த மார்க்கம்…!

அதிகாலையில் தினசரி எடுக்க வேண்டிய உண்மையான விரதம்

அதிகாலையில் தினசரி எடுக்க வேண்டிய உண்மையான விரதம்

 

உதாரணமாக நம்மிடம் ஒருவர் கடன் வாங்கிச் சென்ற பின் திரும்பக் கொடுக்கவில்லை என்றால் “அவர் எனக்குத் தொல்லை கொடுக்கிறார்…” என்று தான் எண்ணுகின்றோம். கோபமும் வேதனையும் படுகின்றோம்.

கடனைத் திரும்பக் கொடுக்க முடியவில்லை என்று அடிக்கடி அவர்களும் வேதனைப்பட்டால்
1.அந்த உணர்வுடன் வியாபாரம் செய்தால் நஷ்டம்தான் வரும்… வியாபாரம் ஆகாது…!
2.அவர்களுக்கு வியாபாரம் ஆகவில்லை என்றால் நமக்கும் பணம் வராது.
3.இத்தகைய நிலையில் நாம் அவர்களைத் தேடிச் சென்றாலும்
4.பணம் கொடுக்கவில்லை என்றால் அவர்களைச் சாபமிடும் நிலைகள் தான் வருகின்றது

இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா… என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய அனைத்து அணுக்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று முதலில் நாம் தியானிக்க வேண்டும்.

பின்… நம்மிடம் கடன் வாங்கிச் சென்றவர் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
1.அவர் குடும்பத்திலுள்ளோர் அந்தச் சக்தி பெற வேண்டும்
2.அவர் செய்யும் தொழில் முழுவதும் படர வேண்டும்
3.அவருடைய தொழில் நன்கு விருத்தியாக வேண்டும்
4.அவருடைய வாடிக்கையாளர்கள் பெருக வேண்டும்
5.அவருக்குத் தொழிலில் லாபம் வர வேண்டும்
6.நம்மிடம் வாங்கிச் சென்ற பணத்தினைத் திரும்பக் கட்டும் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்
7.அவர்களும் நன்றாக ஆவார்கள்… வர வேண்டிய பணமும் வந்து சேரும்.

இந்த முறைப்படி அவரை எண்ணி நாம் தியானிக்கும் போது அவர் மேல் பட்ட வேதனையோ கோபமோ நமக்குள் அணுவாக உருவாகாது… நோயாகவும் மாறாது… நம்முடைய வியாபாரமும் கெடாது.

ஆனால் கடனை அவர் திரும்பக் கொடுக்கவில்லை என்று வேதனைப்பட்டால் நம் வியாபாரத்திற்குக் குந்தகம் விளைவிக்கிறது. மன நோயாகி உடல் நோயும் ஆகின்றது.

ஆகவே நம் ஆறாவது அறிவைச் சேனாதிபதி என்ற நிலையில் பயன்படுத்தி அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை எடுத்து மேலே சொன்ன மாதிரித் தியானிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

அதே போல பிள்ளைகளை நினைக்கும் பொழுது சரியாகப் படிக்கவில்லையே என்று நினைக்கின்றோம். ஆனால் அப்படி நினைத்து வேதனைப்படாது
1.அவன் கல்வியில் சிறந்த ஞானம் பெற வேண்டும்
2.கருத்தறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
3.உலக ஞானம் பெற வேண்டும்
4.குடும்பப் பற்று வளர்ந்து… குடும்பத்தைக் காக்கும் அந்த அருள் ஞானம் பெற வேண்டும் என்று இப்படித் தான் எண்ண வேண்டும்.

இதே போல் குடும்பத்தில் உள்ளோர் யாராவது குறைகளைக் கூறினால் அவர் குறையிலிருந்து விடுபட வேண்டும் என்று அந்த உணர்வினை எடுத்தால் அவருடைய குறை உணர்வு நமக்குள் வராது.

இது தான் உண்மையான விரதம்…!

அருள் ஒளியை நமக்குள் பெருக்கப் பெருக்க நம்முடைய சொல்லும் செயலும் பிறருடைய தீமைகளை நமக்குள் விடாதபடி தடுக்கும் சக்தியாக வரும்.
1.அதே சமயத்தில் அவர்கள் நம்மை எண்ணும் போதெல்லாம்
2.இந்த உணர்வுகள் அவர்களைத் திருந்தி வாழச் செய்யும்.

ஆகவே நாம் அதிகாலை எழுந்தவுடன் துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை வலு ஏற்றிக் கொண்டு பிறரின் தீமையான உணர்வை நுகராதபடி குறைந்தது 10 நிமிடமாவது இந்த எண்ணத்தைக் கூட்டிப் பழக வேண்டும்.

பின் எங்கள் குடும்பத்தில் பண்பும் பரிவும் பெற வேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் வாடிக்கையாளர்கள் பெற்று நலமும் வளமும் பெற வேண்டும்.

நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் அந்த அருள் ஒளி படர வேண்டும் என்று ஒரு பத்து நிமிடமாவது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய நாம் தியானிக்க வேண்டும்.

1.அப்பொழுது அந்த அதிகாலை நேரத்தில் தீமைகளை நுகராது
2.அருள் ஞானத்தை உணவாக உட்கொள்ளும் பழக்கம் வந்து விடுகின்றது
3.பற்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் வருகின்றது
4.மற்றவர்கள் மீது பற்றற்ற நிலைகளை நாம் மாற்றிக் கொள்ள முடிகின்றது

அதே சமயத்தில் அவர்களையும் அந்த உயர்ந்த உணர்வை துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றும் படி செய்கின்றோம். இது எல்லாம் இந்த வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்.