சிவ நடனத்தைக் காணவேண்டும்…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Siva thandavam

சிவ நடனத்தைக் காணவேண்டும்…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

பூமியின் ஈர்ப்பில் பரவிப் படர்ந்து தன் செயலுக்கு வரும் உயிரணுக்கள் ஒன்றிலிருந்து ஒன்றாகப் பரிணாம வளர்ச்சியாக வளர்ச்சியின் முதிர்வில் பல நிலைகள் பெற்றுத்தான் இயற்கையின் கதியில் செயல்படுகின்றன.

படைப்பின் வித்தானது தன் இன வளர்ப்பிற்குத் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும் காத்தல் தொழிலுக்கு மண்ணின் தொடர்பில் நீரை உண்டு.. ஒளியை உண்டு.. காற்றையும் உண்டு… ஓர்மித்த ஈர்ப்பின் செயல் நிகழ்வுகளுக்குத் தன்னையே வளர்ச்சிப்படுத்திக் கொள்கிறது.

ஆகாரத்தை உண்டு வாழும் இந்த ஜீவ பிம்பச் சரீரத்திற்கும் அதே போன்ற செயல் உண்டு.

சிவன் உருவத்தில் முத்தலை சூலம் என்று காட்டப்பட்டதில் முத்தொடராகப் பல பொருள்கள் உண்டு.
1.கண்டத்தில் விஷம் – கழுத்தைச் சுற்றிப் பாம்பு என்பது
2.உயிரணுக்கள் உதித்திடும் செயல் அமில குணங்களாக விஷத்தின் எதிர் மோதல் தன்மைகளாக
3.பரவெளியில் உயிரணுக்களாக அசைந்திடும் தன்மைகளை உணர்த்தவே ஜீவனுள்ள பாம்பு.

அத்தகைய இருவினைச் செயல்கள் இயற்கையில் என்றுமே உண்டு. ஏனென்றால்
1.அமைதியாகத் தவழ்ந்திடும் காற்றே புயலாகவும் எழுகின்றது.
2.அமைதி காட்டும் நீரே கொந்தளிப்பாகவும் காணப்படுகின்றது.
3.நின்று எரியும் நெருப்பே உரத்து எழுந்து தாண்டவமாடுகின்றது.

இது எல்லாம் இயற்கையின் கதியில் செயலில் இரு தன்மைகள் என்று கூறப்பட்டாலும் “இரண்டும் ஒன்று தான்…!”

அவைகள் செயலுறும் காலத்தில் நிகழும் தன்மைகள் கொண்டே உணர்வாக அறிந்து கொள்ளும் பக்குவத்தில் “ஜோதி நிலையைக் காட்டவே..” சிவன் கையில் அக்கினி வைத்துக் காட்டப்பட்டுள்ளது.

ஒலியின் வேகத்தில் ஒளி பிறக்கின்றது. நாதமே ஒளியாகின்றது. நாதத்தில் கலக்கும் உஷ்ணமே காக்கும் செயலாகப் புரிகின்றது.

மான் மழு… புலித் தோல் ஆடை.. அபயஹஸ்தம்… குஞ்சிதபாதம் சுட்டும் நற்சுவாச நிலைகள்… பாதத்தின் அடியில் முயலகன்…! என்றிட்ட இவ்வகை விளக்கங்கள் எல்லாம் “ஜீவ பிம்பம் பெற்ற மனித ஆத்மாக்கள் பெற வேண்டிய.. கடைப்பிடிக்கக வேண்டிய வழிகளாக.. உண்மையை உணர்த்தும் தத்துவங்களே ஆகும்…!

“சிவ நடனம்…” காண வேண்டும் என்பதே…
1.ஆத்மார்த்தமாக…! இயற்கையுடன் ஒன்றிய உயர் ஞான வளர்ப்பில் இயற்கையுடன் கலந்தே
2.அதன் உள்ளிட்ட சக்தியாகச் சக்தி பெற்றிடவே போதனைகளை அளித்திடுகிறோம் இங்கே…!
3.அந்தச் சக்தியை யாரும் பெற்றுத் தருவதில்லை.

ஆக.. “சித்தன் போக்கு சிவன் போக்கு…!” என்பது இயற்கையுடன் ஒன்றி வாழும் வாழ்க்கையில் சிவ தத்துவமாகத் தன்னையே… “தன் உயிராத்மாவையே…” வழி நடத்தும் செயலுக்குத் தன்னை உணர்ந்து கொண்டது தான்.

ஒளியின் அமைதி பெற எனது (ஈஸ்வரபட்டர்) ஆசிகள்.

ஸ்வரூபம் சிவமாகவும் சக்தியின் ஸ்வரூபம் கலையாகவும் கண்டுணர்ந்த தன்மைகளில்… பூமியின் சுழற்சியும்.. பொருள் மறைவாக காந்த ஈர்ப்பின் செயலையும்… தன்னகத்தே தெளிந்து… சிவனாரின் உருக்கோலம் காட்டப்பட்டதில் ஜடாமகுட சிரசே… ஆகாய வெளியாகும்…!

ஆகாய கங்கை என்றால் என்ன…?

நீரமில சக்தி ஒன்றுடன் ஒன்று கனபரிமாணம் கொண்டு வானிலிருந்து பெய்திடும் நீராக வரும் நிலையில் “ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே…!” என்று இடி மின்னல் என்று சூட்சமமாக விளக்கப்பட்டுள்ளது.

(ஆனால் பூமியைச் சுற்றி ஓடும்… பூமியிலிருந்து குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் அமைந்திருக்கும் ஒரு புலத்தையே இன்றைய விஞ்ஞான உலகம் ஆகாய கங்கை என்று அழைக்கின்றது)

சிவன் நெற்றியில் பிறைச் சந்திரனைக் காட்டியது என்ன..?

பூமியின் சுழற்சியுடன் ஒட்டியே வலம் வந்து அண்ட இருளில் மறைந்தும் (அமாவாசை) பின் வெளிப்பட்டுச் சூரியனின் ஒளி காந்த சக்தியை ஈர்த்துத் தன் சமைப்பால் வெளிவிடும் “தண் ஒளிக் கிரகணங்கள்…” காட்டுகின்றது.

அது பூமியுடன் இணைவாகச் சுழன்று பார்வைக்கோண வளர் பிறையாகி… பின் பௌர்ணமியாகக் காணும் நிலையையே சிவனுக்குப் பிறைச் சந்திரனாகக் காட்டியது.

பரவெளியின் சக்தியை ஈர்த்துப் பூமி தன் சமைப்பாக வெளிவிடும் மூச்சலைகளில்
1.அதே நிகழ்வின் தொடர்வில் மீண்டும் மீண்டும் ஈர்த்திடும் செயலில்
2.காற்றின் சக்தியாகப் பரவெளி மோதலின் உராய்வும்
3.அதனுள் பிறந்திட்ட ஒலி நாதங்களையே சிவனாரின் கையில் “உடுக்கை” என்று காட்டியது.

பூமியின் துருவங்களில் ஈர்த்துப் படர்ந்திடும் பனித் துளிகள் (பனிப்பாறைகள்) அனைத்தையும் சதாசிவமாகக் காட்டி அறிவின் ஆற்றல் என்று சூட்சமமாக
1.மனித சரீரத்தின் நெற்றிப் பகுதியையே
2.சதாசிவன் மண்டலம் என்று தத்துவம் கூறப்பட்டது.

விழிப் பார்வையில் செயல்படும் நெற்றிப் பொட்டின் உள் நின்ற ஞான விழிப்பார்வை என்ற முத்தொடரையே முன் பாடங்களில் “புவியின் காந்த ஈர்ப்புக் கிணறுகள்..” என்று மறைபொருள் காட்டியுள்ளோமப்பா…!

முக்கண் என்று காட்டுவது
1.சிவனாரின் வடிவத்தில் பூமியை உணர்த்திடவும்
2.நாம் பெற்றிடும் உயர் சக்தியின் மெய் ஞான வளர்ப்பிற்கும்
3.அதே முக்கண் தெளிவா(க்)கும்…!

சரீரம் என்ற பாத்திரத்தில் நாம் ஈர்த்துத் தியானிக்க வேண்டியது எது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

meditation poses

சரீரம் என்ற பாத்திரத்தில் நாம் ஈர்த்துத் தியானிக்க வேண்டியது எது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இந்தச் சரீரம் சகலத்தையும் ஈர்த்துச் சமைக்கும் திறன் பெற்றது. உயர் சக்தியின் ஆகாரமான “ஆதி நீர் சக்தி என்ற குளிர்விப்புச் சக்தியே…” தியான வழித் தொடரில் வெப்ப நீர் சக்தியாக மாற்றப்படும் பொழுது எண்ணத்தின் வலுவிற்கு எது இலட்சியமோ அதுவே பெறப்படும் ஆகாரமாகின்றது.

அந்த ஆகாரத்தைப் பெறும் மூல சக்தியின் சமைப்பின் முன் போடப்படும் உணவுப் பொருள் என்ற அமில குணங்களும் இந்தச் சரீரமாகிய பாத்திரத்தில் நிறைந்துள்ள ஆதி சக்தியின் நீர் அமிலம்
1.தியானம் என்ற அக்கினியில் குளிர்விப்பு நீர் சக்தி வெப்பச் சக்தியாகச் செயல்படும் செயலுக்கு
2.இந்தச் சரீரப் பாத்திரம் தன்னுள் ஈர்த்துச் செயல் கொண்டிட வேண்டியது
3.சகல மகரிஷிகளின் அருள் சக்தியே ஆகும்.

விறகிற்குள் மறைந்திருக்கும் நெருப்பின் உணர்வு கொண்டு நல்லாக்கச் செயலை (புறத்திலே சமைக்கும் சமையல் போல்) உண்டாக்கப்படுவது போல்
1.மகரிஷிகளின் அருள் என்ற ஜோதித் தத்துவத்தில் இருந்து
2.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு வளர்த்திடல் வேண்டும்.

அதாவது
1.விறகினுள் உறைந்துள்ள நெருப்பைக் கலயம் ஈர்ப்பது போல்
2.கலயத்தினுள் குளிர்வு நீர் சக்தி அந்த வெப்பத்தை ஈர்ப்பது போல்
3.அந்த நீர்ச் சக்தியிலிருந்து எண்ண குண ஆகாரச் சமைப்பு
4.அந்த அருள் சக்தியின் தொடரை ஈர்த்துக் கொள்கிறது.

ஈர்த்துக் கொண்டாலும்… ஆகாரப் பக்குவம் பெற்றுவிட்ட தன்மையை அறிந்துணர்ந்து தெளிவுபடும் செயலுக்கு
1.மாற்று குண எதிர் மோதல் தன்மைகளை விலக்கிடவும் வேண்டும்.
2.சஞ்சல உணர்வுகளை நமக்குள் மோதவிடலாகாது.

பிறவிக்குக் காரணம் ஆசை தான்…! என்ற தொடரை புத்தன் வெளிப்படுத்தினாலும் வெளிப்படுத்தாச் சூட்சமம் புத்தன் அறிந்த அனுபவ ஞான ஆத்ம இரகசியம் “பேரின்பப் பிரம்ம ஐக்கிய லயம்…!” என்பது.

தியான வழித் தொடரில் நிலை நின்று தன் உயிராத்ம சக்தியை வலுக் கொண்ட தொடருக்குச் சகலத்தையும் ஈர்த்திடும் சித்தத்துவ ஆனந்த ஈஸ்வர அனுபூதியைத்தான் புத்தர் பெற்றார்.

ஒவ்வொருவரும் அந்த ஈஸ்வர அனுபூதியைப் பெற வேண்டுகின்றேன்…!

அரூபலிங்கம்… ஸ்வரூபலிங்கம்…! பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

sivalinga atoms

அரூபலிங்கம்… ஸ்வரூபலிங்கம்…! பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஆண்டாண்டு காலமாக மனித குல சமூக நெறி வாழ்க்கை அமைப்பில் ஒழுக்கவியலாக வரைமுறை மீறாச் செயலுக்கும் உயர்வெண்ணம் சிதறிடாத் தன்மை பெற்றிட வாழ்க்கை நெறிச் சட்டங்கள் மகரிஷிகளால் உணர்த்தப்பட்டதிலெல்லாம்
1.அறிவின் ஆற்றலும் வைராக்கிய சிந்தனையுமாகத் “தான் யார்…?”
2.இந்த ஜீவ பிம்ப சரீரம் பெற்றதன் நோக்கம் என்ன…? என்று
3.தன்னை உணரக்கூடிய வழி பிறந்து…
4.உயர் நிலை பெறவேண்டிய ஞானம் கொண்டு பெறும் மெய்ப் பொருளை
5.நாம் உணரத் தான் முடிந்திடும்.

மனோசக்தியின் ஆற்றலே இன்றைய விஞ்ஞானத்திற்கும் “புரியாத ஒரு புதிர் தான்…!”

அப்படியானால்… தன்னைத்தான் உணர்ந்து உயர் ஞான சிந்தனை கொண்டு மெய் ஞானத்தின் பொருளாக இயற்கைச் சக்திகளை அறிந்து கொண்டது எந்தச் சக்தியால்…?

1.உயிராத்ம சக்தி பலம் பெற்றிருந்தால்
2.அதை வெளிப்படுத்தும் செயல் தன்மை கொண்டாலே மனோசக்தி என்று பெயர் பெறுகின்றது.
3.ஆனால் இவைகளைக் கண்டு வியப்பு மேலிடுவதைத் தவிர ஆக்கச் சக்திக்கு அது ஒன்றும் பயன் இராது.

பிண்டமாகிய சரீரத்தைக் கொண்டே அண்டத்தை அறிந்து கொள்ளும் செயலில் பூமித்தாய் ஈர்த்திடும் சூரியனின் சக்திகளை சுவைத்து வளம் பெற்ற இயற்கையின் செயலைத் தன் சரீரத்தின் உள்ளேயும் அதே தொடர் நிகழ்வு பெறுகின்ற தன்மைகளை அறிந்து கொண்டாலும்
1.பரவெளியின் சூட்சமத்தில் சூரிய ஒளிக்கதிர் தன்மைக்குள்
2.இருவித உயிரணுக்கள் (சிவசக்தி அணுக்கள்) கலந்து செயல்படும் செயலை
3.ஞான விழிப்பார்வை கொண்டு அறிந்து கொள்வதே “அரூபலிங்கம்…!”

அந்த உயிரணுக்கள் சரீரத்தில் செயல்படும் நிலைகளில் சரீரம் கொண்டு ஆண் பெண் உடல் கூறுகளாக உயிர் தொகைகளாக ஜீவாத்மாக்களாகின்றது.

அரூபலிங்கம் என்ற அந்தப் பால்வெளி சூட்சமத்தைச் சரீர செயலில் கண்டு தெளிந்து அந்த உயர் சக்திகளை வான இயல் தன்மைகளில் உண்மைப் பொருள் காட்டி ஸ்வரூபலிங்கமாகச் சமைத்துப் பேரின்பச் சக்திகளைப் பெற்று “உயர் ஞான வளர்ப்பாக உயர் நிலை பெறவே வழி வகைகளை ஞானிகள் காட்டினார்கள்…!”

அப்படிக் காட்டியிருந்தாலும்.. இன்றோ சிவலிங்க வடிவு (உடலின் ரூபங்கள்) என்றாலே சிற்றின்ப இரசனைக்கே எண்ணத்தைச் செலுத்தித் தன் நிலையையே மறக்கின்றான் மனிதன்…! எண்ணுகின்ற எண்ணம் அன்றோ செயல்படுகின்றது.

இயற்கையின் செயல்பாட்டை உயர் ஞானத்தால் அறிந்த ஞானிகள் பூமியின் சுழற்சியில்
1.ஆகாயம் காற்று நீர் நிலம் நெருப்பு என்ற பஞ்சபூதத் தன்மைகளில் ஓசை ஒளி என்ற செயல் நிகழ்வுகளையும்
2.ஞாயிறு கோள் திங்கள் கோள் பூமியின் தொடர்பு கொண்ட செயல்பாட்டையும்
3.உயிரணுக்களின் அசைவு நிலைகளையும்
4.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட செயல்பாட்டில்
5.தன் எண்ணத்தால் தெளிந்த அந்தப் பேரானந்தப் பெருநிலையை
6.”கூத்தாண்டவன்…!” என்ற உருவச் சமைப்பில் இயற்கையின் தத்துவத்தைக் காட்டினார்கள்.

சிவன் உருவமும்… உருவத்தின் ஆனந்த லயமும்… அலங்கரித்துக் காட்டிய தத்துவங்களும்…
1.“இயற்கையின் பால் ஒன்றச் செய்த தன்மைகளை உணர்ந்து கொண்டால்…”
2.மனித எண்ணத்திற்கு மரண பயமில்லை…!

ஆண் பெண் ஆத்ம ஐக்கியக் கலப்பு பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

siva sakthi power

ஆண் பெண் ஆத்ம ஐக்கியக் கலப்பு பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஒலியாகி ஒளியாகி நீராகி உருவமானது தான் அண்டவெளியில் அனைத்துமே…!

சப்த நாத சுழலும் சக்தி (ஒலி) உயிரணுவின் ஈர்ப்பில் எண்ணம் கொண்டு வளரும் செயல் நிலையில் ஈர்த்தெடுக்கும் அனைத்துச் சப்த அலையின் குண விசேஷ ஆகார அமில நியதி என்ற வகையில் தன் ஒளி சக்தியின் காந்தத்தைப் புடமேற்றிக் கொள்கிறது.

தனக்குள் புடமேற்றிய நிலையில் எண்ண வலுவாக்கும் சுழல் சக்தியாக எந்த அமிலத்தின் வீரியத்தைக் கொண்டு ஈர்த்ததோ அந்த நட்சத்திர அமில சக்தியின் நிறம் மணம் அனைத்தையும் காத்திடும்
1.ஆதி சக்தியின் நீரமிலத் தொடர்பில் எண்ணம் கொண்டு அத்தகைய உயிரணுக்கள் பிறப்பிற்கு வந்தாலும்
2.சரீரத்தைச் சுற்றியும் அந்தச் சப்த அலை நாதங்கள் சுழல் வட்டமாகச் சழன்று ஓடிக் கொண்டே இருக்கும்.

ஆத்மாவை உணரத் தலைப்படும் ஞானி… ஆத்மாவின் தொடர் சரீரமாக உருமாறும் பஞ்ச பூதங்கள் செயல் தன்மையில்… அந்தப் பஞ்சபூத ஆரோக்கிய அமிலத்தை ஈர்த்திடும் பக்குவமாக… அமுதமாகச் செயல் கொள்ள சரீரம் ஈர்த்திடும் செயலுக்கு…. பரவெளியில் உயிரணுக்கள் உதித்திடும் சூட்சமமே சரீரம் பெற்ற பிறகு…
1.ஆண் பெண் என்ற இரு சரீரத்தில் செயல்படும் விதம் உயிரணுக்களின் செயல் தன்மை…
2.ஆணின் உடலிலிருந்து வருவதைச் சுக்கிலம் என்றும்
3.பெண்ணின் உடலிலிருந்து வருவதைச் சுரோனிதம் என்று கூறிய வகைகளில்
4.சிவ சக்தியின் கலப்பு ஆண் பெண் என்று பேதம் உள்ளது.

இருந்தாலும் உயிர் சக்தியின் வலுவிற்கு ஒவ்வொருவரும் உயிரான்ம இணைப்பின் செயலுக்கு வலுக்கூட்டிக் கொள்ளும் பஞ்சபூதத் தொடரில்
1.ஆண் சுக்கிலத்தையும் பெண் தன் சரீரத்தில் சுரோனிதத்தையும்
2.உயர் ஞான வளர்ப்பின் செயலுக்கு வலுக் கொள்ள வேண்டும்.

அதாவது சரீர கலப்பில் உயிர் தொகையை (குழந்தைகளை) உருவாக்குவது போல் எண்ண வலுவின் வீரிய சக்தியால்
1.ஆத்ம ஐக்கிய நிலையில் ஒத்த எண்ணம் கொண்டு
2.சிவசக்தி ஜோதிக் கலப்பாக மூலத்தில் படைப்பின் படைப்பு சக்தி கொண்டு
3.நமக்கென்று ஒரு மண்டலத்தையே சிருஷ்டிக்கலாம்.

சரீரம் கொண்ட நிலையில் காந்த ஒளி அலைகளை எண்ணம் கொண்டு பாய்ச்சி நெற்றிக் கண் என்ற ஞான விழிப்பார்வையால் அறிந்து ஈர்க்கும் தன் வளர்ச்சியின் வளர்ப்பிற்குத் தன்னைச் சுற்றி ஓடும் சப்த நாத அலைகளை ஈர்த்துச் செயல் கொண்டால் அதுவே தான் பெறும் சக்திக்கு உறுதுணையாகப் பாதுகாப்பு வளையமாக நம்மைக் காத்திடும்.

வளர்ச்சியின் நல் வினைச் செயலுக்கு எதை எண்ணி ஈர்க்கின்றோமோ…
1.அந்த எண்ணத்தின் ஜீவத் துடிப்பிற்கே வலுக்கொடுக்கும்
2.அதிதீவிர எண்ண வலுககூட்டும் அபூர்வ ஒலி ஈர்ப்பாக உயர் ஞான ரிஷி பத்தினி சக்தியை ஈர்த்திடும் நிலைக்கு
3.அதே தொடரில் ஈர்க்கப்படும் அனைத்துச் சக்தியின் வழிமுறைக்கும்
4.இச்செயலின் தொடரில் வளப்படுத்திக் கொள்ள வேண்டும்…!

கொம்பாயுதம் கொண்டு மத்தகத்தால் தகர்க்கப்பட வேண்டியது எது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Elephant-head ord ganesha

கொம்பாயுதம் கொண்டு மத்தகத்தால் தகர்க்கப்பட வேண்டியது எது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

உலகோதய எண்ண ஓட்டத்தில் நாம் செயல்படும் காலங்களில் கீழாம் அறிவு நிலையில் பூவி ஈர்ப்பின் சுவாச ஈர்ப்பில் சிக்குண்டு ஒவ்வொரு நாளும் நாம் அலைக்கழிக்கப்படுகின்றோம். (இதை இல்லை என்று யாரும் சொல்ல முடியாது)

அலைக்கழிக்கபடுவதோடு மட்டுமல்லாது
1.நம்முடைய எண்ண வலு வீரியமும் கீழான அறிவு என்ற செயலுக்கே ஈர்க்கப்பட்டு
2.அந்தந்த இச்சையின் குணங்களை ஏற்படுத்திக் கொண்டு கலக்கமுறும் காலங்களாக
3.மீள வழியில்லாதபடி மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் கால சகடத்திலேயே (CYCLE) சுழன்று கொண்டிருக்கின்றோம்.

உண்மை உயர் ஞானத்தைப் பெற விழைவோனுக்கு இதைப் போன்ற பந்தக் கட்டுக்களைத் தகர்த்தெறிய ஞானிகளால் சூட்சமப்படுத்திக் காட்டப்பட்டதே “மத்தகமும் கோடும் (கோடாயுதமும்)…!”

1.தீதெண்ணச் சங்கட அலைகளை எல்லாம் தவிர்த்து
2.மனித எண்ணம் என்ற உறுதி… “மலை மேல் நின்று…!”
3.காரிருளாகக் காட்டிய அசுர குண மாயைகளை “கோடாயுதத்தைக் கொண்டு…” மாய்த்தொழிக்க வேண்டும்.

சிற்றறிவின் ஆசைகள் எல்லாம் அகன்று பேரின்ப சாயுஜ்யமாக (உயிருடன் கலக்கும் நிலை) மேலாம் அறிவின் ஞானமாகப் பரவெளி ஞானத்தில் கலந்திடும் செயலுக்குத் தத்துவமாகக் காட்டப்பட்டதே “நீல வண்ண ஒளி பெறும் ஆத்மாவின் மறைபொருள்…”

1.மத்தகம் என்றாலே முன் மூளைப்பகுதி இரண்டும் சிறு மூளைப் பகுதி ஒன்றாக
2.ஞான உணர்வின் எண்ணம் ஆட்கொண்ட காலத்தில்
3.நெற்றிப் பொட்டில் ஜோதித் தத்துவமாக அறிந்திட வேண்டிய செயல் ஆகும்.

நீலவண்ண ஆத்மா சூட்சமத்தில் கலந்திடவே பேரின்பப் பெருநிலையில் இணைந்து செயல் கொள்ளும் மேலெழும் சக்தியாகக் காட்டியதே கணங்களின் பதி… “கணபதி…”

1.பரவெளியில் படர்ந்துள்ள ஒளிகாந்த மின் நுண் அணுக்கள் (நடத்திடும்) எண்ணம் கொண்டு (நட்சத்திரங்களின் கதிரியக்கச் சக்திகள்)
2.ஒன்றுடன் ஒன்று இணையும் செயலில் உயிர் ஆத்மாவாக மேலும் எண்ண வலு கூட்டிக் கொள்ள ஈர்த்திடும் தொடரில்
3.அதன் எண்ணமே வீரியமாகச் செயல் கொண்டிடும் பக்குவத்தில்
4.சரீரத்தில் ஆண் பெண் சங்கமத்தில் கருவாகத் தோன்றி வினையின் நாயகன் விநாயகன் என்ற சொல்லுக்கேற்ப
5.மேற்கொண்டு தான் ஈர்த்து உயிராத்மாவாகப் பின் கருவாக வந்துதித்த செயலில்
6.அதே எண்ண வலுவின் ஈர்ப்பினால் மேன்மேலும் உயிரணுக்களைக் கூட்டிக் கொண்டு
7.கணங்களாகிய சரீர உயிரணுக்களுக்கு.. “உயிராத்மா” – பதி என்ற பொருள்பட கணபதி ஆகின்றது.

அதே நிலை மனிதச் சரீரத்திலும் உயர் ஞான அறிவு கொண்டு விளங்கிக் கொள்ளும் பக்குவத்தில் ஓ…ம் என்ற ஒலி நாதம் சொல் வடிவ சூட்சமாகச் சுட்டிக் காட்டினர் ஞானிகள்.

1.சிரசைக் காட்டி சிரசில் மேற் பகுதி அசையா நிலையும்
2.தாடை என்ற கீழ்ப் பகுதி அசையும் நிலையும்
3.ஓ…ம் என்ற பிரணவமாகிய யானைகள் கலந்தன..! என்று சூசகப்படுத்தி
4.வாயிலும் உள் நாக்கில் மேலெண்ண நடுப்பகுதியும் உச்சிக்குக் கீழும் ஒளியின் சுடர்ந்த நிலையைத் தெளிவுபடுத்திக் கூறியவற்றில்
5.கடைவாயின் பற்கள் விநாயக உருவத்தில் கொம்பு என்றெல்லாம் மறைமுகப்படுத்தியதற்குப் பொருள்கள் பல உண்டு.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்று உணர்ந்திடல் வேண்டும்.

மனிதனுடைய இந்த உலக வாழ்க்கையில் உடல் பற்றில் வரும் எத்தனையோ எண்ணங்களையும் உணர்வுகளையும்
1.வைராக்கிய சிந்தனை என்ற கொம்பாயுதம் கொண்டு
2.மத்தகத்தால் தகர்க்கப்பட்டால்
3.மெய் ஞானிகள் பெற்ற மேலாம் அறிவு நிச்சயம் சித்திக்கும்…! என்பதே பொருள்.

“நீலவண்ண உயிராத்மாவாக…” எப்படி ஆகவேண்டும்…?

Image

om vinayakar

“நீலவண்ண உயிராத்மாவாக…” எப்படி ஆகவேண்டும் 

 

“மெய்யை மெய்யால் உணர்தலும் ஒன்று…
அறிவை அறிவால் அறிதலே நன்று…!
1.கோடாயுதம் கொண்டு மத்தகத்தால் தகர்க்கப்பட
2.மேலாம் அறிவு சித்தித்தது…! என்பது மெய்ப் பொருள் காணும் நிலை.

வழிவழியாக வந்த இந்தத் தத்துவங்கள் அனைத்தும் “குருவால் உபதேசிக்கப்பட வேண்டும்…!” என்று மறைபொருள் ஆக்கப்பட்டுவிட்டது. குரு என்பவன் மெய்ப் பொருளின் உண்மையை நாடிக் கோபம் சுடு சொல் தவிர்த்து மெய் ஞானம் உரைத்தலே நன்று.

ஆனால்
1.இனிய சொல்லால் வார்த்தைகள் ஆடி (ஏமாற்றும் நிலை)
2.நிலையற்ற பொருள் செல்வத்தை அடைவதிலும் அல்லது அதை அளிப்பதற்கும்
3.தான் ஒரு கருவியாகச் செயல்படும் எண்ணத்தையும் தவிர்த்திடல் வேண்டும்.

ஆக தான் பெற வேண்டியதைப் பெற்றே உயர்த்திடும் வழியாகப் பேரருள் செல்வத்தைப் பெற்றிடவே பூமியின் ஈர்ப்புப் பிடிப்பில் சிக்குண்டுவிடும் எண்ணச் செயல்களை எல்லாம் களைந்திடல் வேண்டும்.

குரு என்பவன் மெய்ப் பொருளை வாய்மையால் உபதேசிக்கும் நிலையில் நின்று அறிவின் அமைதிக்கு வழி காட்டிட வேண்டுமப்பா…!

ஆனால் இன்றைய குருமார்கள் செல்வத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். எந்தச் செல்வத்தைக் கண்டுபிடிக்கப் போகின்றார்கள்…?

வாழ்க்கை நிலையில் அருள் செல்வம் பெற்று உயர் நிலை பெறவேண்டியவன்…
1.செல்வச் செழிப்பை எண்ணத்தில் கொண்டு…
2.அதி ஆசைக்குத் தன்னையே அடகு வைத்து…
3.உயர் ஞானத்தால் ஆத்ம பலம் பெற்றிட வழிகாட்ட வந்த உபதேசியின் (குரு) நிலை எல்லாம்
4.குறி சொல்பவனின் நிலை ஆகிவிட்டது…!

அந்த நிலை நமக்கு வேண்டாம். “நான் தான்…!” என்ற நிலையே உயர் ஞான வளர்ப்பிற்குத் தடைக்கல் ஆகிவிடும்.

அறிவை அறிவால் அறிவது என்பதே தத்துவப் பொருள் காட்டப்பட்ட உண்மையின் சாரங்களைக் கைக் கொள்ள வேண்டும் என்பதே.

ஆகாரத்தை நாம் உண்ணும் நிலையில்… உண்ணும் ஆகாரங்களின் சுவை குணம் மணத்திற்கொப்ப கண்களால் பார்த்து எடுக்கும் சுவாசத்தின் எண்ணத்தால் ஜீரணத்தின் செயல்பாடு தொடங்கினாலும் “வாயின் கடைவாய்ப் பகுதியில் நடைபெறும் ஓர் சூட்சமம் உள்ளது…!”

ஓ…ம் என்ற வடிவத்தின் நாதமாக ஆகாயவெளி உயிரணுக்களின் கலப்பால் அந்த ஓங்கார நாதத்தையே ஒலி கொண்டு ஒளியாக்கும் தொடருக்கு வருதல் வேண்டும்.

மனிதச் சரீர அமைப்பில் சிரசையே ஓ…ம் என்ற வடிவமாகக் கண்ணுற்றுப் பார்க்கலாம். சிரசின் கீழ் தாடைப் பகுதி அசைவதிலும் ஓர் சூட்சமதைக் கண்டு கொண்டு வான இயல் தத்துவத்தையே எண்ணத்தால் உணர்ந்து தெளிந்தவர்கள் மெய் ஞானிகள்.

சிவசக்தியின் அணுக்கள் கலந்திடும் செயலில் கண்டப்பகுதியை (தொண்டை) ஆகாயம் என்றும் அங்கு கலந்திடும் அணுக்களுக்கு “{மஹேஸ்வரன் – லலிதை” என்று சூட்சமப்படுத்திக் காட்டினார்கள் ஞானிகள்.

அதாவது உணவாக உட்கொள்ளும் ஆகாரத்தையே அமில மூலங்களாக” மாற்றி… “பஞ்சேந்திரியங்கள் வழியாகச் செயல்படுத்திடும் நாடிகள் சரீரத்தின் கதியை இயக்குகிறது.

நாம் வழி காட்டிடும் தியானத்தின் தொடரில் உணர்வு (உணர்ச்சிகளாக) கொண்டு எடுத்திடும் ஒளிகாந்த சக்தியின் வீரியம் கொண்டு சரீரத்தில் சக்தியை ஈர்த்துப் பெற்று அதை விளைய வைத்து “நீல வண்ண ஒளி ஆத்மாவாக” ஒவ்வொருவரும் ஆக்கம் பெற வேண்டும்.

1.உடலுக்குள் பரப்பும் சக்திகள் அனைத்தும் மேலான அறிவெண்ணம் கொண்டு
2.உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் தியானமாக ஒன்று குவிக்கப்பட்டு
3.நீல வண்ண ஆத்மாவாக்கிடும் செயலுக்கு – “உந்திடும் விசைத் தன்மையாக”
4.கீழ் தாடைப் பகுதியினுள் அமைவு காட்டப்பட்ட மறை பொருளைத் தெளிவாக்கிவிட்டால்
5.அங்கு செயல்படும் உண்மை தெளிவுறும்…! (நீலகண்டா…! என்று கழுத்தளவில் நிறுத்தி விஷத்தையே ஆக்கச் சக்தியாக மாற்றிடும் பக்குவ நிலை கிடைக்கும்)

காம குணங்களுக்கும் மோக குணங்களுக்கும் மூலகாரணம் எது…?

AGATHIAR3

காம குணங்களுக்கும் மோக குணங்களுக்கும் மூலகாரணம் எது…? 

நாம் எடுத்த வினைக்கு நாயகன் இந்தச் சரீரம் என்றால் முழுமையின் பொருள் விளங்கிடுமா…? உருவத்தில் மனித உடலையும் யானையின் தலையையும் சித்தர்கள் காட்டியதன் சூட்சமப் பொருள் என்ன…?

மனித மனம் தீய குணத்தின் வசம் ஆட்படும் பொழுது எடுக்கும் எண்ணச் செயல் சோர்விற்குப் பின் உணர்வுகளின் உந்துதல் காமத்தின் வழி மோகமாகின்றது. அந்தச் சூட்சமப் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

1.விநாயகருக்குப் பெரிய வயிற்றினைக் காட்டி
2.சகல உலகமும் அதனுள்…! என்று தத்துவம் கூறினால் புதிர் விடுபடுமா…?

உணவாக உட்கொள்ளும் உணவின் அந்த அமில குணங்கள்
1.சலிப்பின் செயலுக்கு மனித மனத்தின் உணவின் மாறுபாட்டால்
2.பத்துத் தலைகள் கொண்ட உருவம் உதித்தது… என்பதுவே
3.”உணவினால் உண்டாக்கப்பட்ட மோக குணங்கள் தான்…”

அந்த மோகத்தின் செயலைச் சித்தரிக்கவே எலியை வாகனமாகக் காட்டினார்கள். பூமிக்குள் மறைந்து வாழும் எலியைப் போல்
1.மனித மனத்தில் புதைந்து கிடக்கும் காமமும்
2.உணவின் செயலால் உணர்வுகள் கிளர்ந்தெழுந்த மோகமும் உள்ளது என்ற வகையில் உண்மையை உணர வேண்டும்.

வினையின் நாயகனே விநாயகர் என்று சொன்னதன் உட்பொருள் என்ன…?

எண்ணம் கொண்டு எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப உருவான இந்தச் சரீரமான நாயகனைக் கொண்டு தன் உயிராத்ம சக்தியை வலுக் கூட்டிக் கொள்ள வேண்டும் என்பதே…!

பூமியின் ஈர்ப்பில் வாசனை கொண்டு எடுத்துக் கொண்ட எண்ணம் கொண்டு தன்னை அறியும் பக்குவ கதிக்காக வேண்டி
1.அன்று சித்தனால் வழியமைத்துக் காட்டிய
2.சூட்சம உருவகப்படுத்திக் காட்டப்பட்டதே விநாயக உருவம்.

இந்தச் சரீர பிம்பத்தில் இருக்கும் கோடானுகோடி உயிரணுக்களும் வினையின் நாயகன் செயலுக்கு தியான ஈர்ப்பின் தொடரில் ஆட்கொள்ளப்பட்டுச் சக்தி ஈர்த்துச் சக்தி அளித்திடும் செயல் வழியின் உண்மையை ஒவ்வொருவரும் உணர்ந்திடல் வேண்டும்.

அதை உணர்ந்தால் உலகோதய வாசனைப் பிடிப்பில் வாழும் நாம் ஒலி கொண்டு ஒளி பெற்றிடும் நிலையில்
1.உயிர் குரு (நம் உயிராத்மா) தன் தனித்துவச் சக்தியைப் பெற்றுக் கொள்ள
2.கணங்களாகிய இந்தச் சரீரத்தில் உள்ள உயிரணுக்களுக்கு ஒளி சக்தியை ஊட்டி
3.அந்தக் கணங்களின் கூட்டத்தில் “பதியாக” ஓர் சிறப்பிடத்தை உயிராத்ம சக்தி பெற்று
4.தன் வலு ஈர்ப்பின் சக்தி கொண்டு வலுவின் வலு வீரியமாகத் தன்னை வளர்ச்சிப்படுத்திட முடியும்.

இப்படி ஒவ்வொரு உயிரும் ஆத்ம சக்தியின் கலப்பில் தன்னைத் தானே வளர்ச்சிப்படுத்திக் கொண்டிட முடிந்திடுமே அல்லாது “பிறிதொருவர் அளிப்பது அல்ல எந்த ஜெப சக்தியையுமே…!”

மகரிஷிகளால் சூட்சமம் கொண்டு உணர்த்திட வருவதெல்லாம்…
1.தங்களின் வழித் தோன்றல்கள் வாழையடி வாழையாக வரும் உயிராத்மாக்கள்
2.”நன் நிலை பெற வேண்டும்…” என்ற பாச உணர்வினால் தானப்பா…!

இந்தச் சரீரத்தின் செயலில் அகத்தியர் அன்று காட்டினார் “வாதாபி ஜீரணம்…” என்று. வாதாபி ஜீரணம் என்றால் என்னப்பா…?

அறிந்து கொண்டிருக்கும். அனைத்தையும்… உணர்ந்து கொண்டிருக்கும் நிலையில்… அறியாத நிலையில் அசுர குணங்கள் மனிதனின் எண்ணத்தில் ஆட்கொள்ளும் பொழுது உடலில் சோர்வும் ஜீரண அவஸ்தையும் ஏற்படுகின்றது.

அதன் பின் அந்த அசுர குணங்களினால் இந்தச் சரீரம் கொண்டு செயல்படுத்திட முற்படும் மோக உணர்வுகளையும்… அந்த மோக உணர்வுகளைத் தூண்டிடும் உயிரணுக்களையும்… “ஞானாக்கினியான எண்ணம் கொண்டு சுட்டெரித்ததே வாதாபி ஜீரணம்…!”

பத்துத் தலைகள் என்று காட்டியதெல்லாம் மோகத்தின் கிளைகளே…!

“உணவின் மாறுபாடும்…” மோக உணர்வுகளைக் கூட்டும். அதைச் சுட்டிக் காட்டுவதே விநாயக உருவத்தில் சிவப்புத் திலகமிட்டுக் காட்டப்பட்டது.

எடுக்கும் எண்ண வலுவில் ஈர்த்து ஒளியைக் கூட்டிக் கொள்ளும் ஜெப நிலை பெற்றவன் மனிதச் சரீரம் கொண்டே உயிராத்ம சக்தியை உயர்த்திடல் வேண்டும் என்றால் “நாவின் சுவைக்கு…” அடிபணிந்திடாத பக்குவத்திற்கு வர வேண்டும்.

1.உணர்வுகள் கிளர்ந்திடும் மூலமே “வயிறு…” என்றும்
2.மோகத்தின் கிளர்தலின் மூலமும் அங்கு தான் என்றும்
3.அந்த மோகத்தின் கிளைகள் வலுப் பெற்றுவிட்டால் அறிவின் ஆற்றல் சிதைந்து விடும் என்ற
4.அந்த உண்மையின் கருப்பொருளை உணர்த்திடவே ஞானக்கண் என்றும் செந்தூரத் திலகம் என்று காட்டினார்கள் சித்தர்கள்.

நாம் கொள்ள வேண்டிய உயர் ஞான வலுவைப் பெற்று விட்டால் உரப்புயலாக எழுந்த அந்த மோக குணங்கள் அனைத்தும் ஞான அக்கினியில் பொசுங்கிவிடும்.

“எண்ண வலு கொண்ட ஜெப சக்தி பெற்றவனால்…” உணவின் உயிரணுக்களையும் அதனின் மோக குணங்களையும் மாய்க்க முடியும்.
1.அவைகளையும் தன் சரீர ஒளி உயிரணுக்களுடன் ஒன்றச் செய்து
2.அவைகளுக்கும் சக்தி அளித்திட முடியும் என்பதன் பொருளை
3.ஆய்ந்து தெளிந்து செயல்பட வேண்டும் என்பதே இந்தப் பாடத்தின் சிறப்பு.

எண்ணத்தில் பீடித்துள்ள நோய்களை நீக்க நற்சுவாசம் என்ற பரிசுத்தம் (பரிபூரணம்) தேவை என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

mindful-bliss.jpg

எண்ணத்தில் பீடித்துள்ள நோய்களை நீக்க நற்சுவாசம் என்ற பரிசுத்தம் (பரிபூரணம்) தேவை என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

சரீரத்தில் தாக்கப்படும் நோயை நீக்க மருத்துவ அறிவின் எண்ணமானது நோயின் குணத் தன்மைகளை நாடி அளவறிந்து “மருந்து கொடுப்பது…” என்பது அணுபோக முறைப்படி செயல்படுத்த வேண்டும்.

சரீரத்தில் செயல்படும் தன்மைகளை நாடிகளின் துடிப்பலையால் காலம் அறிந்து அந்த நோயின் தன்மைகளை அறிந்து கொண்டு நோய் கடிந்திடும் செயலின் மூலம் மருத்துவப் பொருள்களைச் “சூரணம்…” செய்து கொடுத்து நற்பயன் விளைவித்தனர் அக்காலங்களில்.

அப்படிக் கொடுக்கப்பட்ட வைத்திய முறையில் மனப்பக்குவம் பெற்றிடும் வழி முறைகளுக்கு
1.“நாவின் அதி சுவை குணங்களை…” நீக்கிடும் எண்ணத்திற்கே
2.மருத்துவத்தின் தன்மைக்கொப்ப விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டன.

ஆனால் இன்றைய விஞ்ஞான மருத்துவத்தில் நோயின் குணங்களைச் சரீரத்தில் கண்டவுடன் அந்த நோயை நீக்கிடும் செயலுக்கு அதி தீவிர செயல் புரிந்திடும் மருந்துகளைச் சரீரத்தினுள் செலுத்தி நோயைக் கண்டவுடனேயே மருத்துவத்தால் குணமாக்கினாலும்… “பல்கிப் பெருகிடும் புதிய புதிய நோய்கள் ஏற்படக் காரணம் என்ன…?”

1.மாறு கொண்ட எண்ணங்களால் நற்குணங்களையே சூரணம் செய்து
2.தீமையான குணங்களுக்கு அவைகளையே உரமாக்கிக் கொள்ளும் எண்ணம் செயல்படுவதால்
3.ஜீவாத்மா பிறவி என்ற நோயில் அகப்பட்டு வதைப்படுகிறது.
4.இத்தகைய செயலுக்கு மூல காரணம் யார்…?

ஆனால் ஆத்ம பலத்தில் பரிபூரணம் பெற்றிட வேண்டும் என்றால் உலக வாழ்க்கைச் சூழலில் நம்மை மோதிடும் எதிர் நிலைகளுக்கு நம் எண்ணத்தைச் செலுத்திடலாகாது… அதற்கு அடிமையாகிவிடக் கூடாது.

1.இந்த உண்மையின் முழுமையைக் கொண்டு ஆக்கம் பெற்றிடவும்
2.எண்ணத்தில் பீடித்துள்ள பிணிகளை நீக்கிச் செயல் கொள்ளவும்
3.நற்சுவாசப் பரிசுத்தம் கொள்ள வேண்டும் என்றே உரைக்கின்றேன்.
4.ஞானச் செல்வம் பெற்றிட வேண்டும் என்றே கூறுகின்றேன்.

பேரருள் சக்தியாகத் தன்னுள் “மெய் ஞான விழிப்பு…” கண்டால் எண்ணத்தின் பரிசுத்தத்தால் ஈஸ்வரரின் ஆசி கொண்டு மகரிஷிகளின் அருளாசி பெற்றிடலாம்.

சிலவற்றை மறைத்தே உரைத்திட வேண்டியதுள்ளது. பேரருள் உலகோதயச் செல்வத்தை அளித்திடும் நிலையில் இன்று இல்லை.

இன்றை மனிதனின் எண்ணத்தின் மாறுபாடே காரணம் என்றால் சூட்சமங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
1.எண்ணத் தூய்மை கொண்ட இந்தத் தியானத்தின் வழியிலேயே பேரருள் ஆசி பெற்று
2.வாழ்க்கை நிலையையும் கூட உயர்வு பெற முடியும்.

அகத்தியர் உணர்த்திய கணபதியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Lord ganapathy

அகத்தியர் உணர்த்திய கணபதியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

மனித குலம் உண்மையை உணர்ந்து வாழவும் அந்த வாழ்வில் உயர் ஞானச் செயலின் சிறந்த பேறு பெறும் வழியாகவும் மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய குணங்களின் விசேஷத் தன்மைகளைச் சிலை வடிவில் சித்தர்கள் அன்று உணர்த்தினார்கள்.

அந்தச் சித்தர்களின் மனித குல உயர்விற்கு வழி காட்டிய தெய்வச் சிலைகளின் தத்துவத்தையே கேடுறச் செய்து ஆர்ப்பரித்துப் பகட்டைக் காட்டிடும் நிலைக்கு இன்று வந்து விட்டார்கள்.

சித்தன் படைத்த செயலையே மனிதன் பகட்டிற்காகவும் கௌரவ வாழ்விற்கும் பயன்படுத்திச் சீர்குலைத்து விட்டனர். அப்படிச் சீர்குலைக்கப்பட்டதால்
1.வாழையடி வாழையாக வழி வரும் மெய் ஞான உயர் சக்தி பெற விழைந்த ஆத்ம ஞானிகளால்
2.உட்பொருள் வெளிப்படுத்தும் எண்ணமின்றி மறைக்கப்பட்டு விட்டது.

விநாயகர் உருவத்தைக் காட்டி ஆற்றங்கரையில் வைத்த நிலை எல்லாம் இன்று கேலிக்குரிய நகைச்சுவைப்படுத்தி ரசித்து மகிழும் நிலைக்குச் சென்று விட்டது.

இன்றைய மனித மனங்கள் உட்பொருளை நாடி அறிந்து கொள்ளத் தயங்குதுவும்… பயம் என்ற போர்வை கொண்டு பக்தி என்ற குளிர் போக்கத் தானும் நடுநடுங்கி… அறிவொழிந்து…! அதிலிருந்து விடுபட முடியாத நிலை ஆகிவிட்டது.
1.ஜோதி என்ற தன் உயிர்க்கனலின் நெருப்பே
2.பக்தி என்ற குளிரை விரட்டும்…! என்று அறியாமல் போனதென்ன…?
3.அந்தக் குளிரை நீக்க வந்தவனும் உட்பொருளை அறிந்ததில்லை…!

ஆவியான நீர் அமிலங்கள் எல்லாம் தன் செயலில் தான் நெருங்கி… ஒன்றோடொன்று கண பரிமாணம் கொண்டு… பிறிதொன்றின் சேர்க்கையில் நீர்த் திவலையாகும் நிலையில் “அதுவே சிவமாகின்றது” (திடமாகி உருவமாகின்றது).

அது பூமிக்குள் வரும் காரிய நிலை கொண்டு சுழலும் தன்மையிலே சக்தியாகவும்… பூமியில் படிந்து பின் எழும் செயலின் தொடர்பில் மீண்டும் நீராகவும்… அதுவே எழும் தொடரில் ஆவி நீர் அமிலமாகவும் செயலுறும் தொடர்புகளை அறிந்து கொள்தலே “பிரம்மம்…!”

அத்தகைய பேருண்மைகளை அறிந்து கொண்டவர் தான் “அகத்தியர்…!”

அவர் உயிரணுவின் செயல் சுழலும் சக்தியாகப் பரிணமித்துப் பூமிக்கு வந்த காரியத்தில் வினையான தன்மைக்கு நாயகனாக இந்தச் சரீரம் பெற்றார்.

வினையின் நாயகனே விநாயகர் என்று தன் உயிர் ஆன்ம சக்தியையே உயர்த்திக் கொள்ளும் வழியாக
1.எல்லா உயிர்த் தொகைகளுக்கும் உயிரணுக்கள் பொதுவாகவும்
2.அது பெறும் வீரியத்தில் வித்தியாசமும்… அதுவே பின் எண்ணத் தொடரில் சரீரமாகவும்
3.தன் அமில குண நிலைக்கொப்பத் தனக்குகந்த… தான் பெற்ற தன்மை கொண்டு… ஞான வழியில் “ஒவ்வொரு சரீரமும் பெறுகிறது…” என்றார் அகத்தியர்.

அத்தகைய உயிரணுக்களுக்குள் வீரிய சக்தி கொண்டது “யானை…” என்றும் அது பெற்ற சக்திக்கு அதன் “சுவாசமே…” காரணம் என்று தெளிவாக உணர்த்தினார்.

மனித குலம் ஞானத்தில் உயர்வடைய வேண்டும் என்றால் தான் எடுக்கும் எண்ண ஓட்ட சுவாச கதியை உயர்வாக்க வேண்டும் என்பதற்காக விநாயகரை உருவகப்படுத்திக் காட்டினார் அந்த அகத்தியர்.

நீர்ச் சக்தியைத் தன் எண்ண ஓட்ட கதியுடன் ஒன்றுபடுத்திக் கண்ட அந்த அகத்திய மாமகரிஷி “சுவாச வழியில் வீரியம் பெறும் நிலையைப் புகட்டினார்…!”
1.வினைக்கு நாயகனே விநாயகன் என்று
2.தன் உயிர் குருவைக் கண்டு கொண்ட பின்
3.அவர் சென்ற வழியின் உயர்வே “கணபதி…”

கணங்களை ஆளக்கூடிய தலைவன் “கணநாதன் என்ற உயிர்ச் சக்தியானது” தன்னுள் உள்ள கணம் என்ற கூட்டமாகிய அனைத்து உயிரணுக்களுக்கும் நாயகனாக வினையின் நாயகனாகச் செயல்படுகிறது.

1.கணங்களுக்கெல்லாம் (உயிரணுக்களுக்கெல்லாம்) அதிபதியாக ஒரு வழிகாட்டியாக
2.உயிர் ஆத்ம சக்தி தான் சக்தி பெறும் மார்க்கமாகச் சக்தி பெற்று
3.தான் பெறும் சக்தியையே சரீர உயிரணுக்களுக்கும் ஊட்டிடும் நிலையே கணங்களின் பதியான கணபதி ஆவான் என்று
4.உயிர் பெறும் உயரிய தன்மைக்குச் சித்தனால் காட்டப்பட்டதே விநாயகர் என்பதை அறிந்துணர்தல் வேண்டும்.

உபதேசிக்கும் தகுதி குருவிற்கு எப்பொழுது கிடைக்கிறது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

gurujis.JPG

உபதேசிக்கும் தகுதி குருவிற்கு எப்பொழுது கிடைக்கிறது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

பரவெளியில் படர்ந்துள்ள ஒளியான மின் அணுக்கள் காந்தத்தின் உள் நிகழ்வாக அசையும் நிலை சூட்சமமாக அதற்குள் இருந்தாலும் சஞ்சலமில்லாத மனத்திறன் கொண்டு வைராக்கியப் பற்று கொண்டோன் நல் ஆக்கத்தின் செயலுக்காகத் தன்னைத் தான் உணர்கின்றான்.

உணர்ந்து தெளிந்த வழியின் ஈர்ப்பினால் சகலத்தையும் தன்னுள் சக்தியாகக் கூட்டும் செயலாகப் “பேரருள்…” என்ற மூலத்தில் கலக்கின்றான்.

சகலத்தையும் அறிந்து கொள்வது என்பது நடைமுறைச் சாத்தியம் இயலாது என்றாலும்
1.தனக்குள் தானே நல் வழி ஆக்கத்திற்காகச் செயல்படும் விதம்
2.ஒவ்வொருவரும் தன் ஆத்மாண்டவனை உயர்த்தும் செயலே கடமை விதி.

அதே போல் சரீரத்துடன் கலந்து எண்ணிடும் செயல் அனைத்திற்கும் ஓர் வரைமுறைக்கு உட்படுத்தப்பட்ட செயலைக் காட்டும் கடமை விதியும் உண்டு.

உலகோதய நடைமுறை வாழ்க்கை நெறியில் தன் சிந்தனையைத் தெளிவாக்குவதற்காகக் குருவை நாடுகின்றான். குரு என்றால் என்னப்பா…?

குரு என்றாலே “ஒளி நிலை…” என்பது பொருள்…!

1.தனக்குத் தானே உபதேசத்தை ஏற்றுக் கொண்டவன் தான்
2.பிறருக்கு உபதேசிக்கத் தகுந்தவன்.

அவ்வகையில் கூறும் குரு எண்ணம் சொல் செயல் அனைத்தும் நேர்கோடாகப் பரிணமிக்கத் தன் செயல் நடைமுறைகளால் குருவாகின்றார்.

கடமை விதி சிஷ்யர்களாகிய அனைவருக்கும் உண்டு என்றாலும் குருவிற்கும் உண்டு.
1.கடமை விதி… உலகோதய நிலை விடுத்துப் பேரருள் தெய்வத் தன்மை நிலை அடைவதற்கு
2.ஓர் வழி காட்டும் அமைப்பே குரு.

பேரருள் சூட்சமம் அறிந்த கோடானுகோடி உயிராத்மாக்கள் நல்லாக்கச் செயல் நிகழ்வுகளில் மூலத்தில் கலந்து வாழ்கின்றனர்.
1.ஆனால் சிலரே அனைத்து உயிர்களும்
2.அந்தப் பேரானந்த லயத்தில் இன்புறுதல் வேண்டும் என்று கண்டுணர்த்தினர்.

அவர்கள் காட்டிய அன்பு நெறிகளில் “நான்…!” என்ற நிலை இல்லையப்பா…!
1.நான் என்ற சொல்லும்
2.நான் தான் பெற்றுத் தருவேன்…! என்ற சொல்லும் எதற்கப்பா…?

“தனித்துவமான சக்தி…” பெறும் நிலையன்றோ நாம் புகட்டியது.

ஒவ்வொரு உயிராத்மாக்களும் நல் நிலை பெறவேண்டும் என்று எமக்குள்ள ஆசையால் தானே எல்லாமுள் எல்லாமாக விளங்கும் பேரருள் சக்தியுடன்… மாமகரிஷிகளின் ஆசியுடன்… “மறைக்கப்பட்ட இந்த உண்மை நிலைகளை…” இங்கே எடுத்து இயம்பிக் கொண்டிருக்கின்றோம்.

1.இதில் நான் என்ற நிலை எங்கே உள்ளது…?
2.பரப்பிரம்ம நிலைதனில் சகல உயிர்களையுமே
3.அந்த ஈஸ்வரனாக எண்ணிச் செயல் கொள்ளும் அன்பு வழியைத்தானே இங்கே காட்டுகின்றோம்.

குருவே உன் உயிராக ஆத்மாவில் இயக்கும் செயலில்… சரீரம் கொண்டு செயல்படும் நிலையில் எல்லாம்… கடமை விதி என்பது பக்தி நிலை தானே தவிர “நீ உன்னை உயர்த்தும் சிங்கார அழகு எங்கே…?”

1.குருதேவர் (ஈஸ்வரபட்டர்) ஊட்டுவார்…! குருதேவரே ஊட்டட்டும் என்று
2.உன் முயற்சியின் வழியை விலக்கினால்
3.உன் உயிராத்மா உயர்ந்த சக்தி பெறும் அந்த ஒளியின் அழகு சுயப்பிரகாசமாக வளர்வது எங்கே…?
4.யாம் விரும்புவதே ஒவ்வொரு ஆத்மாக்களின் சுய முயற்சிதான்.
5.அதுவே நல்லாக்கத்தின் வழி.
6.வினைக்கு நாயகன் விநாயகன்..! என்று தன்னைத்தானே அறிந்து கொள்வதே குரு காட்டிய கடமை விதி.

உன்னை நீ உணர்ந்து சித்தன் காட்டிய விநாயகரின் உருவத்தில் மனித உடலும் யானையின் தலையும்…? எதற்காக என்ற வினாவிற்குரிய தெளிவை அறிவின் துணை கொண்டு தெளிதலே நல்லாக்கத்தின் வழி.

தெளிந்த பின் தன் உயிராத்ம சக்தியை வலுக் கூட்டிக் கொள்ளும் செயலும் வேண்டும்.