மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் தகுதி

மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் தகுதி

 

நஞ்சு கொண்ட உணர்வுகள் எதுவாக இருந்தாலும் மகரிஷிகள் அனைவரும் அதனை அடக்கித் தன் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக இன்றும் நிலைத்துள்ளார்கள்.

இன்னொரு மனித உடலின் ஈர்ப்புக்குள் செல்லாதபடி
1.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகள்
2.அவர்கள் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வின் சத்தை நாம் கவர வேண்டும் என்றால் “நமக்கு வலு வேண்டும்…”

சாதாரண ஒரு நூலினைக் கொண்டு கடினமான பொருளைத் தூக்குவோம் என்றால் அந்த நூல் அறுந்து விடுகின்றது.

இது போன்று தான் சாதாரண மக்களாக இருக்கக்கூடிய நாம்
1.அந்த ஞானிகள் மகரிஷிகளின் மிக சக்தி வாய்ந்த ஆற்றல்களை அவருடைய உணர்வுகளை
2.நம் எண்ணத்தால் கவர வேண்டும் என்றால் அது முடியாத காரியம்.
3.நம்முடைய எண்ணத்திற்கு வலு இல்லை… செயலற்றதாக ஆகிவிடுகின்றது.

ஆக… அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் எப்படிப் பெறுவது…?

சிறு கல்லாக இருந்தால் ஒரு மனிதன் அதைத் தூக்கி விடலாம். அதுவே பெரிய கல்லாக இருந்தால் பலரும் சேர்ந்தால் தான் அதைத் தூக்க முடியும். அதே போன்று ஒரு நூல் அது வலு குறைவாக இருப்பினும்… பல நூல்களை ஒருங்கிணைத்துக் கயிறாகத் திரிக்கும் பொழுது… எடை கூடிய பொருளையும் அதை வைத்துத் தூக்க முடிகின்றது.

அதைப் போன்று தான் “கூட்டுத் தியானங்களின் மூலம்”
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வை அனைவருக்குள்ளும் தூண்டச் செய்து
2.அந்த உணர்வால் உந்தித் தியானிக்கும் போது
3.காற்றிலே படர்ந்திருக்கும் அருள் ஞானியின் உணர்வை நம் உடலின் அருகே (நம்மிடம்) கொண்டு வர முடியும்.

ஆலயங்களிலே தேரை வடம் பிடித்து இழுக்கப்படும் பொழுது பலரும் ஒருங்கிணைந்த நினைவுடன் இழுத்தால் தான் அந்தத் தேர் எல்லை வந்து சேரும்.

ஒருவர் தெற்கே… ஒருவர் கிழக்கே… ஒருவர் மேற்கே… ஒருவர் வடக்கு… என்று அந்த வடத்தினைப் பிடித்து இழுத்தால் தேர் எல்லை வந்து சேராது

ஆகையினால்… அந்த மகரிஷிகளின் நினைவலைகளை நீங்கள் முன் வைத்து… அனைவரையும் ஒருங்கிணைத்த நிலைகள் கொண்டு… அந்தச் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று உங்களை எண்ணும்படி சொல்கிறோம்.

குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் உயிரை ஈசனாக மதித்து… ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்… அந்த ஆலயம் புனிதமாக வேண்டும்… அதற்குள் இருக்கும் நல்ல குணங்கள் தெளிந்திட வேண்டும்… தெய்வ குணங்கள் அங்கே வளம் பெற வேண்டும் என்று உங்களை நான் (ஞானகுரு) தியானிக்கின்றேன்.

உங்களுக்குள் இந்த உணர்ச்சிகளை தூண்டச் செய்து…
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று உங்களை நான் எண்ணும் பொழுது
2.அந்த சக்தியின் துணை கொண்டு நீங்கள் பெற முடிகின்றது… அதைக் கவர முடிகிறது.

டி.வி..க்களுக்கு “ஆண்டனாவும்” அதற்கென்று சக்தி வாய்ந்த சில நுண்ணியக் கருவிகளையும் பொருத்தி இருப்பார்கள். ஆண்டனா அதனின் துணை கொண்டு தனக்கு முன் இருக்கும் மிக சக்தி வாய்ந்த அலைவரிசைகளைக் கவர்கின்றது.

கவர்ந்து… நிசப்தமான நிலைகள் சீராகத் திரைப்படங்களைக் காட்டுவதும்… ஒருமித்த நிலை கொண்டு இசையோ மற்ற எதுவாக இருந்தாலும் நாம் பார்க்கவும் கேட்கவும் முடிகின்றது.

அது போன்று மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குச் சீராக எப்போதும் கிடைக்க வேண்டும் என்று நான் தியானிக்கிறேன். அப்போது நீங்களும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தியானித்தால் அந்தச் சக்தியை எளிதில் பெற முடிகின்றது.

குருநாதர் காட்டிய வழியில்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும்
2.உங்களை அறியாது வரும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும்
3.பொருளறிந்து செயல்படும் திறன் நீங்கள் பெற வேண்டும்
4.உங்கள் உயிரான ஈசனுக்கு மகிழ்ச்சியூட்டும் உணர்வாக வளர வேண்டும்
5.அத்தகைய சக்தி உங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இப்படித்தான் நான் (ஞானகுரு) எண்ணுகின்றேன்.

அதைப் போன்று தான் நீங்களும் எண்ணிப் பழகுதல் வேண்டும்.

“காற்று நூல்” தருவது எதற்கப்பா…?

“காற்று நூல்” தருவது எதற்கப்பா…?

 

ஜீவ பிம்பச் சரீரத்தின் அகக்கருவிகளான மனம் அறிவு நினைவாற்றல் செயல்படுதலின் முனைப்பு கொண்டு அண்டசராசரங்களையும் பஞ்ச பூதத் தத்துவமாகச் சரீரத்தில் கண்டுணர்ந்த செயலுக்குத் தெய்வீக உருவ அமைப்புகளை ஞானிகள் காட்டியதே “உயர் ஞானத் தெளிவிற்கே…!”

அதனை எல்லாம் இன்று இந்த மனித குலம் எடுத்துக் கொண்ட விதங்களை என்ன என்று சொல்வது…?

பக்தியாகப் பஜனைகள் பாடுகின்றார்கள்
1.ஆனால் நாத விந்து தான் நாராயணன் என்பதை உணர்ந்தானா…?
2.நாராயணன் நீருக்குள் சர்ப்பப் பஞ்சணை மேல் பள்ளி கொண்டுள்ளான்…! என்று சித்தர்களால் சூட்சமமாகக் காட்டப்பட்டது.

“பச்சை வண்ணப் பரந்தாமன்…” என்று கூறிய நாராயணன் வயிற்றுப் பகுதியுள் நாபியுள்ள இடத்தில் சர்ப்பம் போல் வட்டமிட்டு ஓடும் பஞ்ச பூதத் தத்துவ நாடிகளைச் செயல்படுத்திடும் பத்துத் தலைகள் போன்ற பச்சை வண்ண நாடி நீரமிலம் என்று கூறப்பட்ட தொப்புள் இடத்தில் (நாபி) சுதியுற்றுச் செயல்படும் விதமே
1.குளிர்ந்த நீருக்குள் நாராயணன்…
2.அதாவது சரீர உஷ்ணத்தைக் குதம் என்றிட்ட மலவாய்ப் பகுதியில் சிறிது தூரத்தில் மேலே உள்ள
3.வெப்பமிலம் செயல்படும் அதி உஷ்ணத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திடும் செயலே “உஷ்ண நாதம் – காத்திடும் விஷ்ணு…!” என்பது.

மூலத்தைக் கணபதி என்றும்…
குறிப்பகுதி பிரம்மன் என்றும்…
நாபிப் பகுதி விஷ்ணு என்றும்…
இருதயப் பகுதியை உருத்திரன் என்றும்…
கண்டப் பகுதியை மஹேஸ்வரன் என்றும்…
நெற்றிப் பகுதியை சதாசிவன் என்றும்…
சிரசின் உச்சிப் பகுதியை ஆயிரம் இதழ் மலர்ந்த தாமரையினுள் ஆகாய ஜோதி என்றும்… ஈஸ்வரர் என்றும்…
மறை பொருளாக நற்சுவாசம் கொண்டு உண்மையை உணர்த்த வந்த ஞானிகளின் செயல் இன்று மாறு கொண்டு விட்டது.

இந்தக் காற்று நூல் தருவதெல்லாம் எதற்கப்பா…?

எந்தப் பொருளிலும் உண்மையை அறிதலே ஞானம். காற்று நூல் காட்டி உண்மையை உணர்த்தியது மூச்சைப் பிரித்தறியும் எண்ணச் செயலுக்கு அல்லவப்பா…! அந்த எண்ணம் கூடச் சுவாசத்தை மாற்றிவிடும்.

ஈஸ்வரபட்டனாகிய யான் சுட்டிக் காட்டும் இந்தப் பேரின்பத் தியான வழிதனில் நல்லெண்ணம் கொண்டு ஆத்ம வலுவைக் கூட்டி உயர்ந்த நிலை பெறவே “எல்லோரையும் அன்புடனே அழைக்கின்றேன்…!”

எண்ண வலு பெற்றிடும் நம் தியானத்தில்
1.சுவாசத்தின் செயலை உணராது செயல்படாமல்
2.உணர்வுடன் கூடிய சுவாசம் எடுத்திட்டாலே அனைத்து நற்பயன்களும் சித்திக்கும்…!
3.ஆத்மாவும் சுயப் பிரகாசத்தைப் பெற்றிடும்…!

தியானத்தின் மூலம் தான் எதையுமே அறியவும் உணரவும் முடியும்

தியானத்தின் மூலம் தான் எதையுமே அறியவும் உணரவும் முடியும்

 

பஞ்ச பூதங்களை ஆகாயம் காற்று நீர் நெருப்பு நிலம் என்று கூறுகின்றோம். ஆகாயம் என்ற பால்வெளிச் சூட்சமத்தில் பரவிப் படர்ந்துள்ள மற்ற நான்கும் ஒன்றுடன் ஒன்று கூடி
1.காந்தத்துடன் நீரமிலம்
2.காந்தத்துடன் காற்றமிலம்
3.காந்தத்துடன் வெப்பமிலம் என்று
4.இப்படிக் காந்தத்துடன் பிரிதிவியாகும் அமிலங்களின் கலப்பால் பல பல உருவாகின்றன.

கோடானு கோடி நிறங்களாகவும் மணங்களாகவும் அதிலிருந்து உயிரணுக்கள் ஒன்றுடன் ஒன்று ஈர்ப்பின் குணத் தொடரில் இணைந்து உயிராத்மாவாக பஞ்சபூதத் தத்துவமாக உருவாகின்றது.

மனம்… அறிவு… நினைவின் ஆற்றல்… செயலாக்கத்தின் உந்துதல்… என்று இவை அனைத்துமே எண்ணமாகக் காந்தத்தின் நிறைவாக ஆத்மா என்றிட்ட ஜீவனாகத் தான் ஈர்த்துக் கொண்ட அமில வீரியமாகப் பூமியில் பிறப்பிற்கு வருகின்றது.

ஒவ்வொரு நிமிடமும் புதிய புதிய உயிரணுக்கள் வானத்தில் உதித்துக் கொண்டே தான் உள்ளன.

இருந்தாலும் இந்தப் பூமியுடன் தொடர்பு கொண்டுள்ள “இருபத்தியேழு நட்சத்திர அமிலங்களின்…” நிலைத் தொடர்பு கொண்டு தான் உடல் பெற்றுப் பிறப்பிற்கு வந்திட முடியும்.

1.அண்ட வித்து முட்டையாகப் பிறப்பிற்கு வருகின்ற கரு நிலை உயிரணுக்களும்
2.நீருக்குள் தோன்றிடும் கரு நிலை உயிரணுக்களும்
3.வேர் பகுதியில் தோன்றி கிளைத்தெழும் உயிர் கருக்களும்
4.இந்தப் புவியில் சரீர வியர்வை கொண்டு வாசனைத் தொடர்புடன்
5.இதே தன்மையாக சூரிய வெப்பம் பட்டு உதிக்கும் உயிரணுக்கள் என்றும்
6.பல செயல் நிலைகள் இயற்கையின் கதியில் நடைமுறையில் உள்ளன.
7.உயிரணுக்கள் செயல்படும் தன்மைகளில் உள்ள அனைத்து இரகசிய நிலைகளையும் வகைப்படுத்தியே அளிக்கின்றோம்.

ஜீவ பிம்ப சரீரத்தைக் கொண்டு உயர் ஞான வளர்ச்சிக்குண்டான வழி முறைகளைச் செயல்படுத்திட உடலுக்குள் செயல்படும் உண்மையின் சாரங்களை
1.அந்த மறைக்கப்பட்ட மறை பொருளை
2.அறியச் செய்யும் நிலைக்குத்தான் இதை உணர்த்துகின்றேன்.
3.ஆனால் பாடத்தின் கடினத் தன்மையை விண்டு தருவதில் தான் தாமதம்.

அனைத்தையும் தியானத்தின் வலுவைக் கூட்டியே அறிந்து கொள்ளலாம். ஞானத்தை அறிதலும் அதன் தன்மைகளை உணர்தலும் சிந்தனையில் தெளிதலும் என்ற நிலைக்கு வளர்தல் வேண்டும்.

நாம் எடுக்கும் எண்ணம் நல் எண்ணமாக நல் சுவாசம் கொண்டு தியான வழிதனில் உணர்வுகள் பக்குவப்படுத்தப்பட
1.அதுவே மனத்தின் பக்குவமாக
2.சிந்திக்கும் ஆற்றலை நாம் ஒருமுகப்படுத்திப் பெற வேண்டிய
3.நல் நிலை என்று உணர்தல் வேண்டும்…!

உயிர் வழி சுவாசம்

உயிர் வழி சுவாசம்

 

எண்ணம் கொண்டே பிறப்பிற்கு வரும் உயிரணுக்கள் சரீர வளர்ச்சி பெற்று உயிராத்மாவாக மனிதன் என்ற அமில காந்தத் தொடரைப் பெற்றுத் தன்னைத்தான் வளர்ச்சிப்படுத்திடும் நிலைக்கு வருகின்றது.

அதனின் தொடரில் பஞ்ச பூதங்களின் கூட்டமைப்பாகச் செயல்படும் கால கட்டங்களில் அணுக்களாக மேன்மேலும் ஈர்த்தே தோல் தசை நரம்புகள் இரத்தம் எலும்புகள் மயிர் முதலிய அவயங்கள் வளர்கின்றது.

இவைகளுக்கு ஜீவன் கொடுக்க “ஐந்து கேந்திர நாடிகள்…” உடலிலே செயல் கொண்டாலும் இவைகளுக்கும் வழி நடத்திடும் கட்டளைக் கேந்திரம் என்று அழைக்கப்படும் “சிரசின் சூத்திர நாடியாக…!” (உயிர்) அனைத்தும் செயல் கொள்கிறது.

இத்தகைய பிறப்பின் செயலில் தன்னை உணர்ந்திடும் பக்குவத்திற்கு எதை முக்கியமாக்கிடல் வேண்டும்…?

காலம் குறுகியது…! நேரத்தைக் கடமையின் தொடரில் பெற்றே பயன் கொண்டிடும் ஒவ்வொரு செயலின் நிகழ்வுக்கும் யாம் உரைத்த உரையின் உட்பொருளை சித்தத்தில் ஊன்றிப்பார்.

பஞ்சலிங்கம் என்பதே மனித சரீரம் தான்…!

தன்னை உணர்ந்திடும் பக்குவத்தில் உயிர் ஆத்ம முலாம் வலுக் கொள்ளும் செயலுக்கு உடலினுள் அமைந்துள்ள மூலம் மூலாதாரம் நாபி இருதயம் கண்டம் என்றிட்ட ஐந்து கேந்திர நாடிகள் உண்டு.

அதிலே நாபி நாடியை ஞானிகள் நீரமிலச் சக்தியுடன் தொடர்பு படுத்திக் காட்டிய தொடரில் எண்ணம் கொண்டு உயிர் ஆக்கத்தினை வளர்ச்சி கொள்ளும் பக்குவத்திற்கு தியானத்தை வழிமுறையாகப் பெற வேண்டும்.

காலச்சக்கரம் சுழல்கின்ற இயற்கைத் தன்மையில் எண்ணம் கொண்டு ஜீவ பிம்ப சரீரம் பெற்ற மனிதன் அறிவின் ஞானத்தால் முதன்மையாகத் தன்னை உணர்ந்து கொண்டு
1.பின் மெய்யின் மூலத்தை உண்மை ஞானமாக்கும் உயர் ஞான வளர்ச்சிக்குச் செயல் கொள்ள
2.”சுய முயற்சி…” என்ற ஊக்கத்தால் தான் நல்லாக்கம் பெறுகின்றான்.

வானை நோக்கி ஏகி உயர் ஞானத்தினால் வான இயலின் கருத்தை அறிய வேண்டிய செயலில் நம் பிரபஞ்சத்தில் உள்ள நவக் கோள்களும் சூரியனை மையப்படுத்திச் சுழன்றே ஓடிடும் ஓட்ட கதியில் நவஜோதித் தத்துவமாக ஈர்த்தெடுத்து உயிராத்ம சக்தியையே நீல வண்ண இராமனாகக் காட்டியதுவும் அதற்குத்தான்.

சுவாசத்தையே சூரியன் என்றும் சந்திரன் என்றும் அக்கினி என்றும் வகைப்படுத்தி அதன் செயல்பாட்டைக் “கலைகள்…” என்றும் காட்டினான்.

1.நாசியின் இடது துவாரத்தைச் சந்திரனாகிய இடகலை என்றும்
2.நாசியின் வலது துவாரத்தைச் சூரியன் பிங்கலை என்றும்
3.இந்த வகைகளில் ஓடிடும் சுவாசத்தின் வேகத்தை உஷ்ண அலை கொண்டு மறைமுகமான அந்தச் சுவாசத்தையே
4.மறைமுகமான அக்கினி – சுழுமுனை என்றும் பெயர் வைத்தான்.

சுவாசங்களின் ஓட்டத்தைக் கொண்டே அனுபவ ஞான அறிவினால் தெளிந்து உலகோதய நடைமுறைச் செயல்களுக்கும் மெய் ஞானத்தைப் பெறும் வழிகளுக்கும் அதனின் சூட்சமங்களை உணர்த்திக் காட்டினான்.
1.சமமாக ஓடும் சுழுமுனைச் சுவாசமே (உயிர் வழிச் சுவாசம்)
2.”யோக சுவாசம்…” என்று சொன்ன சொல்லிலும் உண்மை உண்டு.

சூரிய கலையில் ஓடும் சுவாசத்தையும் சந்திர கலையில் ஓடும் சுவாசத்தையும் கொண்டு உட் சென்று வெளி வரும் சுவாசங்களில் முழுமையை மாத்திரம் கணக்கிட்டு அக்கினி என்ற சுழுமுனை சுவாசத்தை விலக்கி உலக வாழ்க்கையில் நன்மை தீமை என்ற காரியார்த்த நடைமுறைகளுக்குப் பயனுறும் விதமாக மூச்சலைகளின் எண்ணிக்கை கொண்டு காலத்தைக் கணித்து அறுபது நாழிகை ஒரு நாள் என்று காட்டினான்.

தியானம் செய்கிறோம்…! இருந்தாலும் தீய எண்ணங்கள் வருகிறதே… என்று நினைக்கலாம்

தியானம் செய்கிறோம்…! இருந்தாலும் தீய எண்ணங்கள் வருகிறதே… என்று நினைக்கலாம்

 

மழை பெய்யாத காலங்களில் “கட்டாந்தரை” போன்று இருப்பினும் மழைக் காலம் வந்து மழை பெய்தபின் மண்ணிற்குள் மறைந்துள்ள வித்துகள் அனைத்தும் தழைத்துப் புல் பூண்டுகளாக எழுந்து வளரத் தொடங்குகிறது.

1.இதைப் போன்று தான் நம் உடலில் ஏற்கனவே பதிவான அணுக்களின் இயக்கங்களும்
2.இப்பொழுது செய்யக்கூடிய தியானத்தால் அவைகளை மாற்றி அமைத்தாலும்…
3.அவைகளுக்கு வேண்டிய சத்து கிடைத்தால் மீண்டும் கிளர்ந்தெழத் தான் செய்யும்.

காரணம்… சோர்வு சஞ்சலம் சலிப்பு குரோதம் வெறுப்பு பயம் போன்ற உணர்வுகளை பதிவு செய்திருக்கும் பொழுது ஊழ்வினை என்ற வித்துக்களாக நமக்குள் இருக்கும்.

சந்தர்ப்பத்தில் ஒரு சோர்வுடன் இருப்பவரை உற்று நோக்கினோம் என்றால்…
1.ஊழ்வினையாக உள் இருப்பதற்கு நம் கண் மீண்டும் உஷாராக்கி அந்த உணர்வுகளை ஜீவன் கொடுத்துவிடும்.
2.அதை நுகரும் பொழுது நம்மை அறியாமலே அந்தச் சோர்வு வரத் தொடங்கும்.

அத்தகைய நேரங்களில்… மீண்டும் வளர விடாது அவைகளைத் தடுப்பதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம்.

ஏனென்றால் எப்பொழுதோ நடந்த நிகழ்ச்சிகள்… மற்றொருவர் திட்டியது நாம் வெறுப்படைந்தது… இது எல்லாமே ஒருவரைப் பார்த்த்தும் நம் நினைவுக்கு வரும்.

“எவ்வளவு தியானம் எடுத்தாலும் கூட…” ஒருவர் மீது நாம் வெறுப்படைந்த உடன் அந்த உணர்வை நுகர்ந்த பின் கண்ணின் கருவிழி பதிவாக்கப்படும் பொழுது உள்ளே பதிவான வித்திற்கு அது உஷாராக்கி விடுகிறது.
1.அப்போது அதற்குண்டான ஆகாரமாக அதை எடுத்து வளரத் தொடங்குகிறது.
2.உணர்வை இழுத்த பின் (சுவாசித்ததும்) உயிரிலே பட்டபின் அந்த உணர்வின் எண்ணங்கள் தொடர்ச்சியாக வரத் தொடங்கும்.

இவ்வளவு நாள் தியானம் செய்கின்றோம்… இப்படிப்பட்ட எண்ணங்கள் வருகின்றதே…! என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது வரும் பொழுது அதை இப்போது நாம் மாற்றி அமைக்க வேண்டும்.

ஒருவர் மீது வெறுப்படைவதோ சலிப்படைவதோ கோபப்படுவதோ அத்தகைய உணர்வுகள் வருகிறது என்றால்… உடனே அடுத்த கணம் “ஈஸ்வரா…” என்று உயிரை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்ற இந்த நினைவினைக் கண்ணுக்குக் கொண்டு வந்து உயிருடன் இணைத்து விடுங்கள். துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அது மிகச் சக்தி வாய்ந்தது.

உள்ளுக்கே ஏற்கனவே பதிவு செய்த பகைமை உணர்வோ வெறுப்பு உணர்வோ அதனுடன் இதைக் கலக்கப்படும் பொழுது
1.பிறருடைய உணர்வுகள் ஈர்க்கப்படுவதை இது தடைப்படுத்துகின்றது.
2.வந்தாலும் அதை அடக்கித் தீமை இல்லாத அணுக்களாக அது விளையச் செய்யும்.

அத்தகைய அணுக்களாக நாம் மாற்றிக் கொண்டே வந்தால் நம்முடைய எண்ணங்கள் கூர்மையாகத் துருவ நட்சத்திரத்தின் பால் செல்கின்றது.

இந்த வாழ்க்கையில் பல தீமைகள் வந்தாலும் அதை இடைமறித்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வை நமக்குள் சேர்க்கச் சேர்க்க அந்த அணுக்களும் வளர்ச்சி பெறும். ஆகையினால் நாம் இடைவிடாது அதைச் செயல்படுத்த வேண்டும்.

நம் தொழிலில் எல்லாம் நலமாக இருப்பினும் ஒருவர் என் வியாபாரம் நஷ்டமாகி விட்டது… ஒரே கஷ்டமாக இருக்கின்றது என்று சொன்னால் போதும்.

கண் அவரைப் படம் எடுத்த பின் அந்த உணர்வின் சக்தியை நுகர்ந்து கஷ்டம் நஷ்டம் என்று உணர்கின்றோம். இருப்பினும் அந்த உணர்வுகளை நமது உயிர் அணுவாக மாற்றி விடுகின்றது.

ஏற்கனவே கஷ்டம் நஷ்டம் என்று சொன்ன உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்துக்களாக இருக்கும்.
1.அதற்கு இடம் கொடுக்காது இருந்தால் ஈர்க்கும் சக்தி குறைகின்றது.
2.இடம் கிடைத்துவிட்டால் வேதனை என்ற உணர்வு நுகரப்படும் பொழுது அதை ஈர்க்கும் சக்தியாக நமக்குள் வந்து விடுகிறது.

புதிதாகப் பார்க்கப்படும் பொழுது ஊழ் வினையாக முளைத்து விடுகின்றது பின் அந்த உணர்வின் தன்மை நுகரப்படும் பொழுது அணுவின் தன்மையாக விளைகின்றது.

அணுவின் தன்மை விளையப்படும் பொழுது நாம் நுகர்ந்தது இரண்டாவது அதே உணர்வுகள் உயிரிலே உராயப்படும்போது இந்த உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது… அந்த எண்ணங்கள் வருகின்றது.

ஆகையினால் அத்தகைய எண்ணங்கள் நமக்கு வராதபடி ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவைப் “புருவ மத்தியில் மையம் கொண்டு நிலை நிறுத்தி விட வேண்டும்…”

துருவ நட்சத்திரத்தின் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இதை இடைமறிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இப்படி இணைக்கப்படும் பொழுது தீமை செய்யும் அணுக்கள் வலு இழக்கின்றது… அருள் உணர்வுகள் வலு கூடுகின்றது
1.இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் உயர்ந்த சக்திகளை
2.புதுப் புது அணுக்களாக நாம் உருவாக்கிக் கொண்டே வர வேண்டும்.

தியானம் செய்பவர்கள் அவசியம் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சுவாசத்தின் மூலம் (காற்றிலிருந்து) உணவை எடுப்பதே பேரின்பச் சுவை

சுவாசத்தின் மூலம் (காற்றிலிருந்து) உணவை எடுப்பதே பேரின்பச் சுவை

 

சுவையில் பொதுவாக இரண்டு வகை உள்ளது.
1.நாவினால் உணர்ந்து சரீரத்திற்குத் தேவையான ஆகார நியமனங்களின் மூலமாக ஊட்டப் பெறும் நிலை “அறுசுவை…!” ஒன்று.
2.மற்றொன்று எண்ணத்தால் சுவைக்கும் தனித் தன்மையான “பேரின்பச் சுவை…!”
3.இரண்டுமே பொது நிலைகளில் “எண்ணத்தின் வழி தான்…” கிடைக்கின்றது.

எண்ணத்தின் வழியாக இருந்தாலும் அனுபவ அணுகு முறைச் செயல்களின் மாறுபாட்டை உணரப் பெறும் பொழுது… “தான் உணர்ந்து… அனுபவத் தன்மையால்… பதிவு செயல் நடைபெறுகிறது…!”

உலக வாழ்க்கையின் எண்ண நினைவோட்ட வலுக் கொண்ட கால கட்டங்களில் அந்த எண்ண ஓட்ட வலுவிற்கு வீரியச் சுவை ஊட்டிட
1.ஆகார வழிகளில் பெறப்படும் முறைகள் அத்தனையும்
2.எதன் எதன் சுவைகளில் இச்சைப்படுகின்றோமோ
3.நாவின் அதி சுவைக்கு அடிமையாகும் அத்தனை நிலையும்
4.நம்மை அறியாமல் இயக்கும் உணர்வுகளின் உந்துதல்களின் வேகத்திற்கு நம்மை நாமே அடகு வைத்து
5.மீள முடியாதபடி ஓர் கட்டுக்குள் அடங்கி விடுகின்றோம்.

காற்றில் இருக்கும் அமில குணத் தன்மைகளில் படர்ந்துள்ள ஆகார நிலைகளை (மணங்களை) நுகர்ந்து அதற்குகந்த திட உணவைப் பக்குவப்படுத்திச் சமைத்துப் புசிக்கும் பொழுது ஏற்படுத்தப்படும் ஜீரண சமைப்பு அதன் மற்ற காலங்களில் கிரியா ஊக்கியாகி (உணவைப் பார்த்ததும் உமிழ் நீர் ஊறுகிறது அல்லவா…!) மறை பொருளாக நிற்கும்.

பின் சரீரச் செயல் நிலைக்கு அதை மாற்றும் பொழுது உடல் உறுப்புகளுக்குள் சுரக்கும் அமிலங்களும் அதில் சரீரம் சக்தி பெறுவதாகவே இருந்தாலும் காற்றில் கலந்துள்ள அமில குணங்களின் இயக்கமாகவே செயல்படும்.. “நம்மை அதன் வழியிலேயே இயக்கும்…!”

ஆனால் உயிர்த் தன்மையின் கட்டுக்குள் எண்ணமும் சரீரமும் செயல்படும் பொழுது
1.பேரின்ப நுகர்ச்சியை அனுபவிக்கும் ஆன்மா – தான் பெறும் நாவின் சுவையையே மாற்றி
2.நாசியின் வழி ஆகாரம் பெற்று
3.சரீர வளர்ப்புக்கும் உயிர்ச் சக்திக்கும் சக்தியூட்டி
4.புறக் கழிவுகளற்ற நியமனக் கட்டுப்பாடாக
5.மற்றொரு வழியை ஏற்படுத்திக் கொண்டு அனைத்துச் சக்தியையும் பெறும்.

இரகசியத் தன்மையாக ஒரே மரத்திற்கு இரு விதச் செயல் தன்மைகள் காட்டப்படுகிறது. அதாவது
1.உணர்வுகளின் அது உந்துதல் குணச் சுவை அமிலமே மரத்தின் மேல் நிலையும்
2.அது அடி மரமாகப் பக்குவமாக விளைந்த தன்மையே “மருந்தாவும்…” உபயோகப்படுத்தப்படும்.

ஒரு மரத்தின் அடி மரம் போன்ற விளைச்சலாக (மருந்தின் குணம் போல்) உள்ளடங்கி ஈர்க்கும் தியான முறைகளில் எல்லாம் எந்த எண்ணத்தை வழி நடத்துகின்றோமோ அந்த எண்ணத்திற்கொப்ப ஞான வளர்ச்சியின் வழி முறைக்கு அது வித்தாகும்.

ஆனால் அதுவே உணர்வின் உந்துதல் என்ற நிலையில் சரீரம் தொட்டு நீர்சக்தியாக அனுபோக முறைப்படுத்தப்படும் பொழுது எப்பொழுதோ உடலுக்குள் உணவு மூலமாக ஊட்டப்பட்ட நிலைகள் எல்லாம் தனக்குகந்த ஆகார நிலை அமிலம் (சுவாசத்தின் மூலம் உருவான உமிழ் நீர்) சூட்சமம் கிடைக்கப் பெற்றதும் நம் மனக் கட்டுப்பாட்டையும் மீறிச் செயல்கள் துரிதமாக நடைபெறுகின்றன.

சரீரத்திற்கு வலுக் கூட்டும் முறையாக சரீரத்திற்கு ஆகாரத்தை உட் கொண்டாலும்
1.காற்றின் வழி எடுக்கும் ஆகாரத்தையே (அந்தக் குணத்தையே)
2.முதன்மையாகக் கொடுத்துத் தன் ஞானத்தால் கூட்டிக் கொண்டான்
3.அன்றைய சித்தன் தனக்குகந்த வழித் தொடரில் எல்லாம்…!

சரீரத்திற்குக் கொடுக்கப்படும் திட உணவின் மூலம் உடலுக்குள் உருவாகும் அமிலங்களின் உணர்வின் உந்துதலை அடக்கிட காற்றிலிருந்து நேரடியாக ஆகாரத்தை எடுத்துத் தன் உயிரான்ம சக்தியை வலுப்படுத்திக் கொண்டார்கள் அன்றைய சித்தர்கள்…!

தியானம் செய்வதற்காகக் காட்டுக்குச் சென்றான்

தியானம் செய்வதற்காகக் காட்டுக்குச் சென்றான்

 

எந்த நிலை பெற வேண்டி விழையும் (ஆர்வம், விருப்பம்) மனம் அதைப் பெற நல்ல நிலையாக எண்ணிச் செயல்படும் காலங்களில்
1.செயல் நிலை எப்பொருளோ அப்பொருளே கருத்தாகவும்
2.அந்தக் கருத்தின் கருப்பொருளே வீரிய வளர்ப்பாகவும்
3.அப்படிச் செயல்படுத்தும் நிலை எதுவோ அதுவே “முயற்சி…!”

கடலில் உருவாகின்ற சிப்பி தனக்குள் முத்தை வளர்ப்பாக்க எடுக்கும் முயற்சி எப்படிப்பட்டதாக இருக்கிறது…?

சரியான காலமறிந்து அந்தக் காலத்தைப் பயன்படுத்தும் விதமாக மழை நீர் தன்னுள் விழும் நேரத்தை அறிகிறது. அந்த நேரம் வாய் திறந்த நிலையில் அது எடுக்கும் உணர்வின் ஞானம் தன்னுள் விழும் நிலை கருத்தறிந்து உயிரணுவின் கருக்கொள்கிறது.

பின் வாய் மூடி ஒரிடத்தே அமைத்துத் தன் கருவின் கருவையே முத்தாக்கும் செயல் நிலைக்கு வருகிறது. இருந்தாலும் சில மாறுபாட்டின் தன்மையால் முத்து விளையாமலும் போகலாம்.
1.ஆனால் ஆக்கத்தின் ஆக்கம் ஊக்கம் என்பது போல் “முயற்சி விளைவாக்கும்…!”
2.முத்தாக விளையாவிட்டால் என்ன செய்வது…! என்று
3.சிப்பி மழை நீரைக் கவர முயற்சிக்காமல் இருப்பதில்லை (இது முக்கியம்..!)

அதைப் போல் தான் உயர் தெய்வீக உயிர்ச் சக்தி (நீல வண்ணராமன்) உலகோதய உடல் வாழ்க்கை மோதல்கள் நடை பெறும் கால கட்டத்தில்… விதி என்ற எண்ணச் செயல் வழி முறை வலுப் பெற்று வேறு வேறு திசைக்குத் தள்ளினாலும்… தன் உணர்வுகளின் செயல்பாட்டைத் தன் ஞானக் கட்டுக்குள் அடக்கும் முறைப்படுத்தினான். (முயற்சி செய்து)

வெளி மோதல் எண்ணங்களின் செயலுக்குத் “தான் ஏகும் முறை என்பது…”
1.விதி முன்னாடி செல்ல இராமன் பின்ன்னாடியே சென்றான்…! என்ற சொற்றொடரில்
2.நடந்த நிகழ்ச்சிகளின் செயலே விதி வழி முறையானாலும்
3.தன் வாழ்க்கையில் அப்படி வந்த அந்த மோதல் காலங்களில்
4.தன் சூழலில் தனக்கு எந்த வித மாற்றத்தையும்.. உயிர்ச் சக்தியின் சக்திக்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை…! என்ற
5.சம நோக்குப் பெறும் நிலையை வான்மீகி மகரிஷி வற்புறுத்தி
6.பாசம் என்ற நிலையில் தனக்குள் வகுத்த சட்ட திட்டங்களுக்கும்… ஒழுங்கு வரை முறை நியமனங்களுக்கும் கட்டுப்பட்டே… உலக நியதி இயங்குகிறது…! என்று சொல்லி
7.இராமன் அதற்குக் கட்டுப்பட்டே அந்த “விதியின் வழி ஏகினான்…!” என்பதில்
8.உயர் சக்தி “மதியின் பால் இயங்க வேண்டிய அவசியத்தை… மாயமான் படலம்..!” மூலமாக வான்மீகியார் அருளியுள்ளார்.

ஆக வாழ்க்கையில் அன்றாடக் கடமைகளைச் செயல்படுத்திக் கொண்டு வந்தாலும்
1.விதி என்ற நிலையில் அது வீரியமாக இயக்கும் கால கட்டங்களில்
2.தன் உயிராத்மாவிற்குப் பாதிப்பு உண்டாக்கும் நிலைகளைத் தன் எண்ண வலு கொண்டு தவிர்த்த இராமன்
3.தியானம் செய்வதற்காகக் காட்டுக்குச் சென்றான்…! என்று காட்டும் நோக்கில் (சூட்சம உணர்வு)
4.உயிர் தன்மையின் உயர்வைக் காட்டுகின்றார் வான்மீகியார்.

உயிரின் உயர்வைக் காட்டும் வான்மீகி மாமகரிஷி விதி வழி செல்லும் செயல் வாழ்க்கையில் அதிலே வனத்தில் பட்ட துன்பங்களாகவும் கூறவும் தவறவில்லை.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டால் நாம் செல்லும் ஞானப் பாதையில்… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் சலிப்போ சோர்வோ சங்கடமோ சஞ்சலமோ நம்மை அண்டாது…!

நம்முடைய தினசரி தியானம் எந்த அடிப்படையில் இருக்கிறது…?

நம்முடைய தினசரி தியானம் எந்த அடிப்படையில் இருக்கிறது…?

 

மனித வாழ்க்கையில் நமக்குள் உயர்ந்த குணங்கள் இருந்தாலும்… சந்தர்ப்பத்தால் அதனின் இயக்கச் சக்திகள் மறைந்து நஞ்சுக்குள் சிக்கித் தவிக்கும் நிலைகள் வந்து விடுகின்றது.

இதையெல்லாம் அறிந்து கொள்வதற்கு எத்தனையோ காவியங்களை ஞானிகள் எடுத்துரைத்துள்ளார்கள்.

ஆனால் ஆறாவது அறிவைப் பயன்படுத்த முடியாது அதை இழந்ததனால் இன்று எவரோ செய்வார்… தெய்வம் செய்யும்… ஜோதிடம் செய்யும்… காலங்கள் செய்யும்… யாகங்கள் செய்யும்… சாமியார் செய்வார்… மற்றவர்கள் செய்வார்கள்…! என்ற இத்தகைய எண்ணங்களைத் தான் பரப்பி வைத்திருக்கின்றோமே தவிர “தன்னை நம்பப் பழகவில்லை…”

ஏனென்றால் நாம் எத்தகைய உணர்வை நமக்குள் இணைக்கின்றோமோ நமது உயிர் அதை இயக்கி நமது உடலாக மாற்றி விடுகிறது. அதாவது
1.நாம் எண்ணிய உணர்வுகளை வித்தாக (வினையாக) மாற்றி அந்த வித்தின் நிலையை இயக்கி
2.நாம் எடுத்துக் கொண்ட உயர்ந்த உணர்வை நம் ஆன்மாவாக மாற்றி அதே உணர்வின் உடலாக இயக்கி
3.அந்த உணர்வின் சத்துக்களாக நமக்குள் எவ்வாறு விளைகிறது என்ற நிலையை
4.ஞானிகள் தெளிவாக எடுத்துக்காட்டி இருந்தாலும் அதனை அறியாது இன்றும் இருக்கின்றோம்.

மற்ற உயிரினங்கள் அதனுடைய (எண்ணத்தால்) தியானத்தால் மனிதனாக வளர்ச்சிக்கு வருகின்றது. அப்படித் தான் நாம் வந்துள்ளோம். ஆனால்
1.மனிதனான பின் தீமைகள் அகற்ற முடியும்
2.மெய் ஞானிகளின் உணர்வை நுகர்ந்து நமக்குள் உயர்ந்த நிலைகளை உருவாக்க முடியும் என்று இருந்தாலும்
3.இப்போது நாம் எதைத் தியானிக்கிறோம்…? என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நமது குழந்தையை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்று எண்ணுகின்றோம். அதே சமயம் குழந்தை நாம் எண்ணியபடி கல்வியில் சிறந்து வரவில்லை என்றால் அவனைக் கண்டு “இவன் இப்படி இருக்கின்றானே… அவன் எதிர்காலம் என்னவாகும்…?” என்று வேதனைப்படுகின்றோம்.

இந்த வேதனையை மீண்டும் மீண்டும் எடுத்து அவனிடம் கடிந்து இரண்டு தரம் அழுத்தமாகப் பேசும் பொழுது அவன் நம் மீது பாசமாக இருக்கும் உணர்வுகளுடன் கலந்து விடுகிறது.

1.நமக்குள் விளைய வைத்த வேதனையான நஞ்சை அவனுக்குள் பாய்ச்சப்படும் பொழுது
2.நம் சொல் கடினமாகி அவனுக்குள் அவன் அறியாது இயக்க நிலைகள் தடையாகி
3.உடல் நலக் குறைவாகி… காய்ச்சலோ மற்ற குறைபாடோ வந்து விடுகிறது.

ஆனால் அவன் தவறு செய்யவில்லை… நம்முடைய நிலைகள் இவ்வாறு ஆகிவிடுகிறது. இந்த மாதிரி நேரங்களில் நாம் என்ன செய்ய வேண்டும்…? ஆனால் என்ன செய்கின்றோம்…!

குழந்தையை எண்ணி எண்ணி இப்படி ஆகிவிட்டானே என்று வேதனையை பாய்ச்சியபின் அந்தக் காய்ச்சலாகும் போது நமக்குள் வேதனை இன்னும் அதிகரிக்கிறது.

அவனைக் காத்திடும் நிலை கொண்டு… “வேதனைகளையே” நமக்குள் சமைத்துச் சமைத்து அதைத்தான் வளர்த்துக் கொள்கின்றோம்.

அவன் காய்ச்சலாக இருக்கப்படும் பொழுது “டேய் கண்ணு… கொஞ்சம் சாப்பிடுடா…!” என்று சொல்கின்றோம்.

அந்த வேதனையால் அவனால் உணவு உட்கொள்ள முடியவில்லை என்றால்… “சாப்பிட வேண்டும்…” என்று அழுத்திச் சொல்லப்படும் போது இன்னும் கொஞ்சம் அவனுக்கு வேதனை அதிகமாகி “நீ போ…” என்று வேகமாகச் சொல்லி விடுகின்றான்.

நாம் அதைக் கேட்ட பின்… அடப் பாவமே… அவன் சாப்பிடவில்லையே இரண்டு நாட்களாகி விட்டது… மூன்று நாட்களாக ஆகிவிட்டதே…! என்ற தாய்ப் பாசத்தால் இந்த உணர்வை நுகர்ந்து
1.அங்கே விளையும் நஞ்சினை இங்கே வித்தாக விளைய வைத்து
2.அவனை எண்ணும்போதெல்லாம் இது ஒரு தியானம் தான்.

இப்படி இருக்கின்றானே…! அவன் என்ன ஆவான்…? என்ற இந்த வித்தினை உருவாக்கி… அந்த உணர்வின் சத்தை நமக்குள் கருவாக்கி… அவனின் நிலையைத் தியானித்து… அந்தத் தீய வினையே நமக்குள் உருவாகிவிடுகிறது.

நாம் தவறு செய்யவில்லை அவனும் தவறு செய்யவில்லை
1.அவன் உயர வேண்டும் என்ற எண்ணத்தை வைத்தோம்
2.உயர வேண்டும் என்ற “செயலை” நமக்குள் வைக்கவில்லை.

பால் சத்தாக இருந்தாலும் அதற்குள் நஞ்சினை விட்டால் அது அந்தப் பாலைச் செயலற்றதாக ஆக்குவது போன்று “நம்முடைய நல்ல உணர்வுகள்” நாம் நுகர்ந்த உணர்வுகளால் நஞ்சாகப் பாய்ந்து… நஞ்சின் செயலாகவே மாறி விடுகின்றது.

இப்படித்தான் இன்று
1.குறைகளை எண்ணி எண்ணி அதையே தியானித்துக் கொண்டிருக்கின்றோம்.
2.ஆகவே நாம் எதைத் தியானிக்க வேண்டும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

அடிக்கடி நினைத்து ஜெபிக்க வேண்டிய ஜெபம்

அடிக்கடி நினைத்து ஜெபிக்க வேண்டிய ஜெபம்

 

அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று ஏங்கி வந்தால் தான் யாம் கொடுக்கக்கூடிய வாக்குகள் உங்களுக்குள் நல்ல முறையில் வேலை செய்யும்.

காரணம்…
1.மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று பல்லாயிரக்கணக்கானோர் உணர்வுகளைத் தூண்டி
2.அந்த ஏக்க உணர்வுகளின் அடிப்படையில் தான் பதிவு செய்கின்றேன்.

அதே சமயத்தில் எப்போதுமே அன்னை தந்தையரை வணங்கிப் பழகுங்கள். அவர்களுடைய அருளாசியால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். இது மிகவும் முக்கியம்.

யாம் கொடுக்கும் இந்த உபதேச வாக்குகளைச் சீராக உற்று நோக்கி அதைப் பதிவு செய்தால் ஞான வித்தாக வளர்ந்து
1.நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்கும்.
2.ஆத்ம சக்தி செய்யும் போது அந்த நேரத்தில் உடனுக்குடன் சிரமங்களைப் போக்க அது வழிகாட்டும்

ஆக… நீங்கள் எண்ணியதை உங்கள் உயிர் இயக்கிக் காட்டும். உணர்வுகள் உடலைத் தனக்குள் அணைத்துக் காட்டும். எண்ணிய உணர்வின் ஞானமாக உணர்த்தும்.

அதன் வழியில் உங்களைக் காத்திடும் உணர்வுகள் உங்களுக்குள் வரும். அந்த ஞானத்தின் தன்மை கொண்டு தீமைகளிலே சிக்காது உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.

ஆகையினால் யாம் உபதேசிக்கும் பொழுது கூர்ந்து கவனித்து இந்த வாக்குகள் பதிவாக்க வேண்டும் என்று அந்த எண்ணத்துடன் இருங்கள்.
1.எந்த நல்லது பெற வேண்டும் என்று ஏக்கத்துடன் வந்தீர்களோ
2.நல்ல முறையில் உங்களுக்கு அந்தப் பலன் கிடைக்கும்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற்று எங்கள் உடலில் அறியாது வந்த நோய்கள் நீங்க வேண்டும் எங்கள் உடல்கள் நலம் பெற வேண்டும்… எங்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் உலக மக்கள் நலம் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

“மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் உங்களுக்குப் பரிபூரணமாக இப்பொழுது கிடைக்கும்…”
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடல் நலம் பெற வேண்டும்
4.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் தொழில் வளம் பெற வேண்டும்
5.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்
6.மகரிஷிகளின் அருள் சக்தியால் உலக மக்கள் நலம் பெற வேண்டும்
7.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் வாடிக்கையாளர் அனைவரும் நலம் பெற வேண்டும்
8.மகரிஷிகளின் அருள் சக்தியால் நான் பார்ப்பதெல்லாம் நலமும் வளமும் பெற வேண்டும்
9.மகரிஷிகளின் அருள் சக்தியால் என்னைப் பார்ப்போர் எல்லாம் நலம்பெற வேண்டும்
10.மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ வேண்டும்
11.மகரிஷிகளின் அருள் சக்தியால் என் சொல்லிலே இனிமை பெற்று என் சொல்லைக் கேட்போர் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற வேண்டும்
12.மகரிஷிகளின் அருள் சக்தியால் என்னைப் பார்ப்போருக்கெல்லாம் நல்ல எண்ணம் வரவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்
13.பல உயர்ந்த உணர்வுகள் உங்களுக்குக் கிடைக்கும்
14.உங்கள் உடலை எத்தகைய பிணிகள் இருந்தாலும் நீங்கும்… வலியோ வேதனையோ இருந்தால் குறையும்
15.தீமைகள் உங்களை விட்டு அகலும்… உங்கள் உணர்வுகளால் அறிய முடியும்.

ஆகவே யாம் கொடுக்கும் இந்த (மகரிஷிகள்) அருள் வாக்குகளை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அதை நினைவு கொண்டால் நீங்கள் ஏங்கும் போதெல்லாம் அந்தச் சக்தி கிடைக்கும்.

ஒரு நாளைக்கு ஆயிரம் முறை நீங்கள் சொல்லிப் பாருங்கள். மகரிஷிகளின் அருள் சக்தி என் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் இப்படி சொல்லிக் கொண்டே இருங்கள்

பாலோ தண்ணீரோ அல்லது பதார்த்தங்களையோ வைத்து இவ்வாறு ஜெபித்து அதற்கு அப்புறம் அதை எடுத்து உட்கொண்டு வாருங்கள். நல் மருந்தாக அமையும் அரும் பெரும் சக்தியாக உங்களுக்குள் வரும்.

எமது அருளும் குரு அருளும் உங்களுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும்.

“நம்மைக் காத்திட்ட… அரும் பெரும் சக்திகள்” நமக்கு முன் காற்றிலே இருப்பதை எடுக்கப் பழக வேண்டும்

“நம்மைக் காத்திட்ட… அரும் பெரும் சக்திகள்” நமக்கு முன் காற்றிலே இருப்பதை எடுக்கப் பழக வேண்டும்

 

மனிதனின் வாழ்க்கையில் நாம் உணவாக உட்கொள்ளும் அதற்குள் மறைந்து வரும் நஞ்சினை ஆறாவது அறிவு பெற்ற இந்த மனித உடல் மலமாக மாற்றி விடுகின்றது.

ஆறாவது அறிவின் தன்மையால் “இயக்கும் சக்தி” நமக்குக் கிடைக்கின்றது. அதாவது நஞ்சு கொண்ட உணர்வினை நீக்கித் தெளிந்த உணர்வு கொண்டு விளைந்திட்ட அந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு இந்த வாழ்க்கையில் சந்திக்கும் தீமைகளை அகற்ற வேண்டும்.

அதை அகற்றவில்லை என்றால் நஞ்சு கலந்து… பின் சிந்திக்கும் திறன் இழந்து விடுகின்றது.

உடலில் அழுக்குப் பட்டால் குளிக்கின்றோம். வேலை செய்யும் போது கையில் அழுக்குப் பட்டால் சுத்தப்படுத்தி அதற்குப் பின் உணவை உட்கொள்கிறோம்.

நாம் அணியும் ஆடைகளில் அழுக்கு அதிகரித்து விட்டால் சோப்பைப் போட்டு நுரையேற்றித் துணியுடன் இரண்டறக் கலந்த அழுக்கினைப் போக்குகின்றோம். மனிதனின் ஆறாவது அறிவினுடைய செயல்கள் தான் இது எல்லாம்.

ஆனால் ஆறாவது அறிவை ஞானிகள் எப்படிப் பயன்படுத்தினார்கள்…?

1.அன்றைய மகரிஷிகள் தன் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றி
2.”சக்தி வாய்ந்த உணர்வைத் தனக்குள் நுகர்ந்து”
3.தன்னை அறியாது புகுந்த உணர்வினை ஆறாவது அறிவால் நீக்கி
4.தன் எண்ணத்தைத் தெளிவாக்கித் தெளிந்த உணர்வு கொண்டு வாழ்க்கை வாழ்ந்து
5.அருள் ஒளியின் சொத்தாகத் தன் உயிருடன் ஒன்றி விண்ணுலகில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அவரில் விளைந்த உணர்வின் சத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது காற்று மண்டலத்தில்… அதாவது பூமிக்குள் பரமாத்மாவாவிலே கலந்துள்ளது.

இதைப்போல மற்ற தாவரங்கள் உமிழ்த்தும் “அதனதன் உணர்வும்… அதனதன் மணமும்… அதனதன் குணமும்…” வெளிப்பட்டு வருவதை இதே சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பரமாத்மாவாவிலே சுழன்று கொண்டு தான் உள்ளது.

மனிதருக்குள் எத்தகைய நோய்களாக விளைந்ததோ அவர்களிடமிருந்து வெளிப்பட்ட நோயின் உணர்வுகள் அனைத்தும் இந்தப் பரமாத்மாவில் கலந்துள்ளது.

பரிணாம வளர்ச்சியில் மனிதனாக ஆவதற்கு முன் நாம் உயிரினங்களாக வாழும் பொழுது
1.அந்தந்தச் சரீரத்தில் தன்னைக் காத்திடும் உணர்வு கொண்டு விளைந்த உணர்வுகள் இதே பரமாத்மாவில் தான் உண்டு.
2.ஒவ்வொரு சரீரத்திலும் காத்திடும் உணர்வை ஊழ்வினையாகப் பதிவு செய்து அந்த வித்தின் தன்மையாக
3.அந்தந்த உடலிலே காத்திட்ட உணர்வுகளும் இந்தப் பரமாத்மாவிலே கலந்துள்ளது.

இவ்வாறு “எத்தனை சரீரங்களில் நம்மைக் காத்திடும் உணர்வாக எடுத்துக் கொண்டோமோ” அது அனைத்தும் நமக்குள் வித்தாக இருப்பினும்
1.அதில் விளைந்த உணர்வுகள் அலைகளாகப் படர்ந்து இந்த பூமியிலே பரமாத்மாவிலே படர்ந்துள்ளது.
2.அத்தகைய நல் உணர்வுகளைக் கவர்ந்து நமக்குள் வளர்த்திடும் நிலையாக வர வேண்டும்.

ஆகவே குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்ற நிலையை உணர்ந்து… நம்மை அறியாது மூடி மறைக்கும் தீமைகளை ஆறாவது அறிவு கொண்டு நீக்கப் பழகிக் கொள்ள வேண்டும். உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றப் பழகிடல் வேண்டும்.