எந்தக் காரியத்தை எண்ணி ஆண்டவனிடம் கேட்க வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

Image

எந்தக் காரியத்தை எண்ணி ஆண்டவனிடம் கேட்க வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

thought and mind power

இன்றுள்ள உலக நிலை அனைத்திலுமே
1.தன் புகழ் உயர வேண்டும்
2.அந்தப் புகழ் உயரச் செல்வம் வேண்டும்
3.அந்தச் செல்வம் சம்பாதிக்க இவ்வுடல் என்னும் கூடு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற
4.இப்படிப்பட்ட ஆசைகளுக்காகத்தான் அநேகம் பேர் பல வழிகளில் ஆண்டவனை வணங்குகின்றார்கள்.

ஆண்டவனிடம் தன் ஆசைக்கும்… தன் புகழுக்கும் வேண்டக் கூடாது…! என்பவர்களை எல்லாம் இன்றைய உலகம் “பெரும் பைத்தியமாக…” எண்ணுகின்றது. ஆண்டவன் எங்குள்ளான்…? என்ற கேள்விக்கும் இன்றைய உலகில் அறிந்து பார்க்கும் தன்மை இல்லையப்பா.

ஆண்டவனிடம் வேண்டிக் கேட்காவிட்டால் இவ்வுடலுக்கு ஆகாரம் வேண்டியது இல்லையா…? ஆண்டவன் தான் “பசி…” என்ற பெரும் பசியை இவ்வுடலுக்கு அளித்துள்ளானே.
1.இப்பசியை அடக்க… நாம் உண்டு வாழ்வதற்கு…
2,அவ்வாண்டவனை வேண்ட வேண்டாமா…? என்றெல்லாம் பல நிலைகளில் எண்ணுகிறார்கள்.

ஆனால் இவ்வெண்ணப் பசியைப் பேராசை கொண்ட பசியாக அலைய விட்டு அதனால் வரும் பல இன்னல்களுக்கு நாம் அடிப்பணிகிறோம்…! என்பதை நம் எண்ணப் பசியில் எண்ணிப் பார்த்தால் புரிந்துவிடும்.

இவ்வாத்மா பசியை யாரும் எண்ணுவதில்லை. இவ்வுடல் பசிக்குத்தான் இவ்வுலகமே இன்றுள்ளது. இவ்வுடல் பசியினால் தான் வரும் நிலைகள் எல்லாமே நமக்கு நடப்பவை.

இவ்வுடல் பசிக்கு நாம் எடுக்கும் உணவும் பிற நிலைகளும் நம் ஆத்மாவிற்கு எந்த நிலையில் ஏற்கிறது என்று எண்ணி
1.இவ்வுடல் என்னும் பசியை
2.மனம் என்ணும் பசியால் அடக்கி ஆண்டிட முடியுமப்பா.

இவ்வுலகில் உதித்த எல்லோரும் ரிஷிகளைப் போலவும் ஞானிகளைப் போலவும் இவ்வுடலுக்கு உணவு உண்ணாமல் “உடல் பசியை அடக்கி ஆளுங்கள்… என்று சொல்லவில்லையப்பா…!

அன்ன ஆகாரம் இல்லாமல் வாழ்ந்திடுங்கள் என்று சொல்லவில்லை.
1.இவ்வுடல் என்னும் கூட்டை
2.”எண்ணம் என்ற ஏவலனால்…” (CONTROL) எந்த நிலைக்கும் வைத்திருக்க முடியுமப்பா.

உண்ணும் உணவிலிருந்து இவ்வுடலுக்கு எப்படிப் பல நிலைகள் கிடைக்கின்றதோ அதேபோல் தான் அவ்வாத்மாவிற்கும் கிடைக்கின்றது.

நாம் உண்டு உடுத்தி மகிழ்ந்து வாழ்ந்திடத்தான் வேண்டும். ஆனால் அதற்காகப் பேராசை நிலை கொண்டு தன் தேவைக்கு மேல் சேமித்து வைப்பவன் ஒவ்வொருவனும் “தனக்குத்தானே எதிரி ஆகின்றான்…!”

இன்று இவ்வுலகில் பெருகி உள்ள மக்கள் நிலையில் அன்பும் ஆதரவும் காட்டி வாழும் நிலைமை மறைந்துவிட்டது. தன் உடல் பசி ஒன்றுதான் ஓங்கி நிற்கிறது.

நல்ல உபதேசங்களைக் கேட்பதும் நல்லோர் வழியில் செல்வதும் நம் ஆத்மாவிற்குச் செய்யும் நற்பணிகளை நாம் ஏற்று நடக்கவில்லை. நம் எண்ணங்கள் எல்லாம் இவ்வுடல் என்னும் பசியைத் தீர்த்துக் கொள்ளத்தான் ஆண்டவனை எண்ணுவதாகவே உள்ளது.

இவ்வுடல் வேறு… இவ்வாத்மா வேறு…! இவ்வுடலில் இவ்வாத்மா தங்கி இருப்பதையே நாம் பெற்ற பாக்கியமாகக் கொண்டு இவ்வுலக நிலையில் இவ் இயற்கையில் கலந்துள்ள உண்மைகளை அறிந்தே மெய் ஞானிகள் பெற்ற ஆற்றலைப் பெற்று (விண்ணின் ஆற்றல்) நாமும் வாழ்ந்திட வேண்டும்.

அச்சக்தி நிலை ஒரே நிலையில்தான் உள்ளது. நாம் எந்த நிலை கொண்டு ஏற்கின்றோமோ… “அந்த நிலைக்குத்தான்…” அச்சக்தி நிலை நம்முடன் வரும்.

இன்று வீசும் இக்காற்றையே நாம் எண்ணிப் பார்த்தால் நம் நிலைக்கு எல்லாம் விளங்கும்.
1.கொதிக்க வைத்த தண்ணீரை ஆற்றுவதும் அக்காற்றுதான்.
2.அனல் கொண்டு எறியும் விறகை எரிய விடுவதும் அக்காற்றுதான்.
3.ஒரே நிலை கொண்டு வீசும் காற்றுதான் இவ்வனலையும் எரிக்க உதவுகின்றது, கொதி நீரையும் குளிரவிடுகிறது.

அதைப் போல சக்தி நிலையும் நம் நிலைக்கு இப்படித்தான் வருகின்றது. எந்த நிலைகொண்டு நாம் எங்கு செல்கின்றோமோ அந்த நிலைகொண்டு தான் அச்சக்தி நமக்கு உதவி புரிகின்றது.
1.நம் எண்ணத்திற்கு உகந்தபடிதான் அவ்வாண்டவனின் சக்தியையும் நாம் பெற முடியும்.
2.இவ்வுலகமே இவ்வெண்ணம் என்ற பசி நிலையைக் கொண்டுதான் சுற்றி வருகின்றது.
3.தன் எண்ணமும் செயலும் அமைதி கொண்டு தன் ஆத்மாவை அடக்கி ஆள்பவனுக்கு
4.தன் நிலையில் பதட்டத்தை வளர விடாமல்
5.நான் என்ற எண்ணம் கொள்ளாமல் நல்லுணர்வுடனே வாழ்ந்திட முடியும்.

அமைதியுடனும் அன்புடனும் நடத்திச் செல்லும் மனப்பக்குவம் பெற்று வாழத்தான் யாம் சொல்லும் இந்த உபதேசமும் தியானமும்.

அகஸ்தியனின் கையில் கமண்டலத்தை ஏன் காட்டியுள்ளார்கள்…?

Image

Agastyan kamandalam

அகஸ்தியனின் கையில் கமண்டலத்தை ஏன் காட்டியுள்ளார்கள்…?

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அகஸ்தியன் காடுகளிலே அவன் வாழ்ந்து வந்தாலும் அவன் சந்தர்ப்பம் தன் தாய் தந்தையின் அருளால் விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெறும் தகுதி பெற்றான்.

அதன் மூலம் தீமைகளை அகற்றிடும் வல்லமையையும் இருள் சூழும் நஞ்சினை அடக்கி அதை அவனுக்குள் ஒளியின் தன்மையாகவும் பெருக்கிக் கொண்டான்.
1.அது மட்டுமல்ல…!
2.இந்த பூமியின் இயல்பான நிலைகளில் அதை உருவாக்கவும்
3.அதற்குள் மாற்றம் செய்யக்கூடிய வல்லமையும் அவனுக்கே உண்டு.

அதை வைத்துத்தான் இந்தப் பூமியையே அவன் வாழ்ந்த காலத்தில் சமப்படுத்தினான். அது எவ்வாறு என்பதைச் சாதாரண மக்களும் புரிந்து கொள்வதற்குக் காவியப் படைப்புகளும் உண்டு.

நம் பூமி சுழலும் போது துருவப் பகுதியின் வழியாக விண்வெளியில் இருக்கும் ஆற்றலைக் கவர்கின்றது. அது தான் பார்வதி…! – தன் பார்வையில் கவரும் சக்திகள். அவ்வாறு பூமி கவரும் அந்தச் சக்திகள் அனைத்தும் துருவப் பகுதியில் உறைந்து சிவமாகின்றது.

1.அதாவது பூமி சுழலும் சக்தி பார்வதி
2.அப்படிக் கவர்ந்த சக்திகளின் உறைவிடமாக அங்கே வருகின்றது துருவப் பகுதியில்
3.ஆகவே சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம்.

சிவன் என்பது பூமி. அதன் சுழற்சியின் வேக சக்தியால் விண்ணிலிருந்து வரும் சக்திகளைக் கவரப்படும் பொழுது சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம். கவர்ந்த உணர்வின் தன்மை சிவத்துடன் இரண்டறக் கலக்கின்றது.

ஆனால் பூமியுடன் சேர்த்து அது ஒன்றாகக் கலக்கின்றது என்ற நிலை வந்தாலும் இதனின் நிலைகளைப் பார்க்க வெகு கோடி ஜனங்கள் இங்கே வருவார்கள்

ஏனென்றால் பூமி கவர்ந்த அந்த உணர்வின் தன்மைகள் அனைத்தும் அணுக்களாகப் பெருகி
1.அந்தச் சக்தியின் தன்மை அகண்டு செல்லப்படும் போது
2.ஒரு பக்கம் எடை கூடி பூமி கவிழும் நிலை வரும்.

அதனால் பூமி திசை மாறி எடையற்ற பகுதிகள் மீண்டும் சக்திகளைக் கவர்ந்து அங்கே உறைந்து முதலில் உருவானது மீண்டும் கரைய இது வளரும்.

இப்படி பூமியின் சுழற்சியின் மாற்றங்கள் ஆவதிலிருந்து அதை ஆகாதபடி அன்று அகஸ்தியன் இதைக் காத்தான். அதைத்தான் சிவன் “அகஸ்தியா… நீ தெற்கே செல்…!” என்று சொல்வதாகக் காட்டியிருப்பார்கள்.

கல்யாணக் காலங்களில் இங்கே கூட்டங்கள் அதிகமாகிவிட்டால் எல்லாம் அதிர்ந்து விடும். அப்பொழுது பூமியின் நிலை தடுமாறி விடும். ஆகவே நீ தெற்கில் சென்று பூமியினைச் சமப்படுத்து..! என்ற எண்ணத்தை உருவாக்கியதாக அந்தக் காவியம் உண்டு.

அகஸ்தியின் தெற்கிலே சென்று சமமான பகுதியில் நின்று சூரியனின் காந்தப்புலனை அவன் எடுத்து இந்த பூமிக்குள் பரவச் செய்கின்றான்.
1.வடக்கில் கவரும் சக்திகள் பனியாக உறைந்தாலும்
2.தெற்கிலே நேராகக் கவரப்படும் சூரியனின் ஒளிக்கதிரால் அந்தப் பனிப்பாறைகள் உருகிக் கடலாகக் கரைந்து
3.இந்தப் பூமியின் தன்மைகள் சமமாக ஆனது.

இதைத் தான் சிவன் அகஸ்தியனைத் தெற்கிலே சென்று இந்த உணர்வின் தன்மையை உற்றுப் பார்த்து நீ பூமியைச் சமப்படுத்து…! என்று சொன்னதன் மூலக் கருத்து. அதனால் தான் அகஸ்தியனின் கையிலே கமண்டலம் கொடுத்திருப்பார்கள். அதற்குள் நீர்…!

ஏனென்றால் பூமியிலிருந்து விண் சென்ற அந்த முதல் மனிதன் அகஸ்தியன் தென் பகுதியிலே வெப்பத் தணல்களை ஈர்க்கும்படியாகப் பூமியைத் திருப்பிப் பனிப்பாறைகளை நீராகக் கரையச் செய்து இந்தப் பூமியைக் காத்தான்…! என்று அவனுக்குப் பின் வந்த ஞானிகள் அதை உணர்த்தினார்கள்.

இன்றைய விஞ்ஞான அறிவால் ஒவ்வொருவரும் தன் நாட்டைக் காக்க எண்ணினாலும் விஞ்ஞானத்தால் விளைந்த நஞ்சுகள் அதிகரித்து இந்தப் பூமியில் வாழும் மக்கள் அனைவரையுமே அழித்துவிடும் நிலையாக இன்று வளர்ந்து கொண்டுள்ளது.

அழிவை மாற்ற வேண்டும் என்றால் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று நாம் போற்றும் அந்த அகஸ்தியன் உணர்வுகளை எடுத்துப் பரவச் செய்தால்தான் இந்தப் பூமியின் நிலையை மீண்டும் சமப்படுத்த முடியும்…!

பதினெட்டாம்படிக் கருப்பு என்று ஏன் சொல்கிறோம்…!

Image

Lord Ayyappa

பதினெட்டாம்படிக் கருப்பு என்று ஏன் சொல்கிறோம்…!

வாழ்க்கையில் அவசரம் ஆத்திரம் போன்ற உணர்வுகள் கொண்டு தன்னைத் திரும்பி பார்க்காது போகும் பொழுது நம்மை அறியாமலே இருளில் மடிந்து (விழுந்து) விடுகின்றோம்…! அப்படி விழுகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..? என்ற நிலையைக் காட்டுவதற்குத் தான் பதினெட்டாம் படியை வைத்துக் காட்டுகின்றார்கள்.

பதினெட்டுப் படியைச் சீராக வைத்து அதை வழுக்கிடும் நிலைகளாக அமைத்து அங்கே அதற்கு அருகிலே “கருப்பாயி கருப்பணன்…” என்ற தெய்வங்களையும் காட்டுகின்றார்கள்.

ஐயப்பன் மேல் பக்தி கொண்டு வந்தாலும் ஐயப்பனைப் பார்க்க வேண்டும் என்ற வேகத்தில் வரும் போது மற்றதைச் சிந்திக்காது செயல்படும் தீமைகளை எவ்வாறு அகற்ற வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.

நம் எண்ணம் ஒருமித்து உயர்ந்த குணங்களைப் பெற்றாலும் நாம் போகும் பாதையில் எத்தனையோ இடையூறுகள் வருகின்றது. மற்றவர்கள் செய்யும் தவறுகளையோ மற்றதுகளையோ அதை எல்லாம் நம் கண்ணில் பார்க்காமல் இருக்க முடியாது.

அதன் உணர்வுகள் வரும் போது அதை எல்லாம் நம் உயிரான விஷ்ணு வரம் கொடுத்து நம் உடலாகப் பிரம்மமாகச் சிருஷ்டித்து விடுகின்றது.

ஆகவே இதை எல்லாம் அறிந்த பின் நாம் எதைச் சுவாசிக்க வேண்டும்…? எதை நம் உடலுக்குள் சிருஷ்டிக்க வேண்டும்…?
1.நமக்குள் தீமை விளைவிக்கும் இருளைத் தணித்து விட்டு
2.நம் வேகத்தின் உணர்வை அடக்கிப் படி மீது ஏறும் போது
3.தன் அருகில் வருவோரை அழைத்து அரவணைத்துச் செல்லும் உயர்ந்த பண்புகளை உடலுக்குள் வளர்க்கும்படிச் சொல்கின்றார்கள்.

அதாவது நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் தீமையான நிலைகளைத் தனக்குள் புகவிடாது தடுத்து அந்தத் தீமைகளை எவ்வாறு அடக்க வேண்டும்…? என்று நாம் தெளிந்திடும் நிலையாக ஐயப்பன் ஆலயத்தில் காவியத் தொகுப்பாகக் கொடுத்து பதினெட்டாம் படியை வைத்துள்ளார்கள்.

அன்று அவன் கூறிய அறிவுப்படி அதை அமைத்தாலும் இப்போது வெறும் ஐதீகம்… சாஸ்திரம்…! என்ற நிலைகளில் போய்விட்டது.

பதினெட்டாம்படிக்குச் சென்றால் நான் முதல் வருடம் போனேன். தேங்காய் சிதறுகாய் போட்டேன். அதற்கு வேண்டிய சாஸ்திரத்தைச் செய்தேன். ஐயப்பன் எனக்கு எல்லாம் செய்வான். ஆகையினால்
1.மூன்றாவது வருஷம் நான்காவது வருஷம் என்று இப்படிப் பதினெட்டு வருஷம் சென்றேன்.
2.இப்பொழுது முழுமை அடைந்து நான் ஐயப்பனின் அருளையே பெற்று விட்டேன் என்ற நிலைக்குத்தான் செல்கின்றார்கள்.

ஆனாலும் ஐயப்பன் கோவிலில் கூட்டம் கூடக் கூடக் அங்கே சென்று பதினெட்டாம்படி ஏறுவதற்குள் போகும் பாதையிலே எத்தனையோ பேர் மரணமடைகின்றார்கள்… (ACCIDENT) என்று கேள்விப்படுகின்றோம்.

ஐயப்பன் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டு சென்றாலும் அருகிலே இருப்போர்களை அரவணைத்துச் செல்வதற்குப் பதில் மற்றவரை வீழ்த்துகின்றோம்.

ஏனென்றால் அந்த வேக உணர்வுகள் கொண்டு செல்லும் பொழுது அருகில் வருபவனை அறியாது இருள் சூழ்ந்து கொள்கின்றது. அந்த இருள் சூழ்ந்த நிலைகள் வருவதைக் குறைப்பதற்குத் தான் அங்கே கருப்பாயி கருப்பணன் என்று வைத்து அந்த இருளை நீக்க வேண்டும் என்று காண்பிக்கின்றார்கள்,

ஆகவே ஐயப்பனின் அருள் கொண்டு மற்றவரையும் தன்னுடன் அரவணைத்துச் சென்று அவர்களுக்கு மகிழ்ச்சி ஊட்டுதல் வேண்டும்.
1.பதினெட்டாம் படி ஏறுவதற்கு முன் தான் அருகிலே இருப்போரை அரவணைத்து
2.அவர்கள் மேலே செல்லட்டும். அவர்கள் ஐயப்பனின் அருளைப் பெறட்டும் என்ற இந்த உணர்வின் தன்மை வரும் போது
3.நமக்குள் வரும் இருள் சூழும் நிலைகள் குறைந்து அமைதி கொண்டு நாம் அங்கே செல்ல போக முடியும்.

இதைத்தான் “வாழ்க்கையில் ஒழுங்குபடுத்தும் முறையாக… அங்கே காண்பிக்கப்பட்டு…!” அந்த உண்மையினுடைய நிலைகளை வளர்த்து பிறருக்குத் தீங்கு இல்லாத நிலைகள் மேலெ செல்லும் பொழுது அந்த மெய் ஞானி காட்டிய உணர்வின் தன்மையைப் பெற முடியும் என்று உணர்த்துகின்றார்கள்.

சாதாரண மக்களுக்கும் பக்தி என்றால் எது…? என்று காட்டி
1.மற்றோர்கள் உயர வேண்டும்.
2.அவர்கள் அருள் வாழ்க்கை வாழ வேண்டும்
3.அவர்களும் மெய் ஒளி காண வேண்டும் என்ற இந்த அரவணைப்பைக் கொண்டு செல்ல வேண்டும்.
4.அருள் ஞான உணர்வுகளைச் சீராக வளர்க்க வேண்டும் என்பதை அங்கே தலையில் சுமக்கச் செய்து
5.படி மீது ஏறுவதாக… அதாவது மேலே விண் செல்லும் மார்க்கத்தில் ஏறிச் செல்ல வேண்டும்…! என்று பதினெட்டாம்படியாகக் காட்டுகிறார்கள்.

ஞானத்தின் வளர்ச்சியைக் கொண்டவனால் எதைப் பெருக்க முடிந்தது…? ஞானத்தை அறியாதவர்கள் (சூனியமாக) எதைப் பெருக்கினார்கள்…?

Image

wisdom-light

ஞானத்தின் வளர்ச்சியைக் கொண்டவனால் எதைப் பெருக்க முடிந்தது…? ஞானத்தை அறியாதவர்கள் (சூனியமாக) எதைப் பெருக்கினார்கள்…?

 

ரைட் சகோதரர்கள் (WRIGHT BROTHERS) இரண்டு பேரும் சேர்த்து அன்று ஒரு விமானத்தைச் செய்யத் தொடங்கினார்கள். பறவைகள் பறப்பதை ஊன்றிப் பார்த்து “அதைப் போல எப்படியும் பறக்க வேண்டும்…!” என்று முயற்சி செய்தார்கள்.

பறவைகள் அதன் இறக்கைகள் வீசும் நிலைகள் கொண்டு அதற்குள் ஏற்படும் காற்றின் இயக்கத்தைக் கண்டுணர்ந்த பின்
1.“ரேடர்” (RUDDER) அதனுடைய வேகமான நிலைகள் சுழற்சியாகி
2.மறுபடியும் தனக்குள்ளேயே சுழலச் செய்து
3.அந்த உணர்வின் ஈர்ப்பலையால் உந்தச் செய்வதும்
4.அது ஈர்க்கும் நிலைகள் கொண்டு மிதக்கும் நிலைகளையும் கண்டுபிடித்தான்…! (இரண்டு ரெக்கைகளை வைத்து.)

அதன் மூலம் இடைமறித்து வரும் காற்றின் நிலைகளை ஊடுருவிச் செல்வதும் அதனின் சுழலும் வேகத்தில் தனக்குள் அந்தக் காற்றை ஈர்க்கும்படிச் செய்து “தானாகவே மிதக்கச் செய்ய முடியும்” என்று விமானமாக அன்று கண்டுபிடித்தான்.

அதைக் கண்டுபிடித்து அவன் பறப்பதற்காக முயற்சி செய்து கொண்டு இருந்தான். ஆனால் மற்ற அனைவரும் என்ன செய்தார்கள்…?
1.தற்கொலை செய்வதற்கு தயார் ஆகிவிட்டார்கள்…
2.இந்த இரண்டு பேரும் மரணமடைவதற்கு எதுவோ அதற்காக வழிவகுத்துக் கொண்டு உள்ளார்கள் என்று
3.அந்நாட்டு மக்கள் அந்த இருவருடைய நிலைகளை எண்ணிப் பரிதாபப்படுகின்றார்கள்.

ஆனால் தன் எண்ணத்தால் வெற்றிகரமாகப் பறந்தும் காட்டினான். அத்தகையை வலுவான சிந்தனை கொண்டு அதைச் செயல்படுத்திக் காட்டினான்.

அவன் கண்டுபிடிப்பைப் பின் தொடர்ந்தவர்கள் அவர்களைப் போன்ற சிந்தனையைக் கொண்டு இன்று புவி ஈர்ப்பைக் கடந்து செல்லும் இராக்கெட்டுகளைக் கண்டுபிடித்தார்கள்.

மேலே சென்று மீண்டும் புவி ஈர்ப்பிற்குள் வரும் போது உராயும் தன்மை கொண்டு அது சூடாகாமல் தணிந்து பூமிக்குள் இறங்கும் நிலையையும் கண்டுபிடித்தான் அதன் வரிசையில் வரக்கூடியவன்.

1.ரைட் சகோதரர்கள் விஞ்ஞானத்தின் அறிவை அங்கே பெருக்கினார்கள்… “விமானத்தைக் கண்டுபிடித்தார்கள்…!”
2.ஆனால் அதன் அருகிலே இருந்தவர்கள் அவர்களுடைய செயலைப் பார்த்து
3.பாவம்.. சாகப் போகிறார்கள்…! என்ற நிலையில் வேதனையத் தான் பெருக்கிக் கொண்டார்கள்.

இதைப் போன்று தான் முதலில் டி,வி.யைக் கண்டுபிடிக்கும் பொழுது புவி ஈர்ப்பின் நிலைகள் கொண்டு மனிதன் தன் எண்ணத்தால் எதைக் கவர்கின்றான் என்று அவன் உணர்ந்தான்.

அதை வைத்துத் தன் உணர்விற்குள் அவன் சிந்தனையை உயர்த்தினான்… பெருக்கினான்…! அந்தப் பெருக்கத்தின் தன்மை கொண்டு
1.ஒரு காந்தப்புலன் கவரும் நிலையும்
2.கவர்ந்திட்ட உணர்வின் தன்மை எதிலே உறைகின்றதோ
3.”அது நிழல் படமாகத் தெரிகின்றது…!” என்றும் அறிந்துணர்கின்றான்.

நீங்கள் வீட்டை அடைத்துக் கொண்டு பாருங்கள். அல்லது வீட்டில் ஜன்னலை அடைத்து விடுங்கள். அதன் வழியாகச் சிறிதளவு ஒளி வீட்டுக்குள் பட்டால் போதும்.
1.வெளியிலே யாராவது ரோட்டிலே நடந்து சென்றால்
2.அந்த ஒளி அலைகள் – “அவர்களின் நிழல்”
3.நம் வீட்டிலே தலை கீழாக நடந்து போவதைப் பார்க்கலாம்.

அதாவது அடைத்திருக்கும் வீட்டிற்குள் வெளிச்சம் புகும் இடத்தின் அருகிலே செல்லப்படும் போது தலை கீழாக நடந்து போகிற மாதிரித் தெரியும். (இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்)

கேமராக்களின் மூலம் நேர்முகமாக எடுத்த படங்களைத் தலை கீழாகப் போட்டால் தான் நேராகத் தெரியும். ஆரம்ப காலச் சினிமாப் படங்கள் எல்லாம் அப்படித்தான்.

விஞ்ஞான அறிவால் “எதிர் மறையின் இயக்கங்கள்” எவ்வாறு இயக்குகின்றது என்று அவன் அந்த அறிவைப் பெருக்கினான். பெருக்கிக் கொண்ட பின் அது எவ்வாறு ஒலி/ஒளியாக உணர்வலைகளை எவ்வாறு கவருகின்றது என்று டி.வி.யைக் கண்டுபிடித்த பின் அவன் பேரானந்தப் பெரு மகிழ்ச்சியைப் பெருக்கினான்.

அவன் டி.வி.யை உருவாக்கி மற்றவர்களிடம் அதைச் செய்து காண்பிக்கப்படும் போது பெண்களெல்லாம் சேர்த்து கோழி முட்டையால் அவனை அடித்துக் கொல்வதற்காக ஆரம்பித்தார்கள். அவன் போலீஸ் ஸ்டேஷனில போய்ச் சரணடைந்தான்.

புதிதாகக் கண்டுபிடித்தவன் விஞ்ஞான அறிவு கொண்டு சந்தோஷத்தைப் பெருக்கினான். ஆனால் இவர்கள் அவனைத் தாக்கும் உணர்வைப் பெருக்கினார்கள்.

காரணம்… நாங்கள் வீட்டிலே குளிப்போம். பெண்களை நிர்வாணமாகப் பார்ப்பதற்காக வேண்டி இந்த மாதிரிச் செய்திருக்கின்றான் என்பது அவர்கள் குறுகிய எண்ணம்.
1.எதனின் இணைப்பின் நிலைகள் கொண்டு எது இயங்குகிறது என்ற நிலையை அவர்கள் அறியாது
2.அந்தத் தீமையின் நிலையைப் பெருக்கிக் கொண்டார்கள் அவர்கள்,

ஏனென்றால் அவர்கள் கண்களால் அவன் கண்டுபிடிப்பைப் பார்க்கப்படும் போது அந்தக் குறையான உணர்வுகளை அவர்கள் உயிர் பிரம்மமாக்கி அதனின் குழந்தையாகச் சிருஷ்டித்து அதனின் செயலாக்கமாக அவனைத் தாக்கும்படிச் செய்கின்றது.

ஆனால் அவனோ உயர்ந்த நிலைகள் கொண்டு விஞ்ஞான அறிவைக் காணும் நிலைகளில் அவனுக்குள் அதைப் பெருக்கினான். அவனைப் போன்ற எண்ணம் கொண்டவர்கள் இன்று எத்தனை மடங்கு பெருக்கி உள்ளார்கள்…!

இதை எதற்குச் சொல்கிறோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் மற்றவர்கள் செயல்களை எல்லாம் உற்றுப் பார்த்தாலும் பார்த்த நிலையில் நாம் நமக்குள் எதைப் பெருக்குகிறோம் என்று சிந்திக்க வேண்டும்.

1.நமக்குள் வேதனையையும் கோபத்தையும் ஆத்திரத்தையும் கொதிப்பையும் பெருக்க வேண்டியதில்லை.
2.மாறாக மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் பெருக்கிக் கொண்டு வர வேண்டும்.
3.இந்த மனித வாழ்க்கையில் நாம் முழுமை அடைய வேண்டும் என்பதற்குத்தான் இதை உணர்த்துகின்றோம்.

தன்னை அறிந்தவன் இந்த மண்ணை அறிந்தவன் விண்ணை அறிந்தவன் அவர்கள் எல்லாம் இன்றும் விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக அழியாத நிலைகள் கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருமே இந்த வாழ்க்கையில் வந்த இருளை அகற்றி ஒளியின் சுடராகப் பெருக்கி உயிராத்மாவை ஒளியாக மாற்றி அந்த எல்லையை அடைதல் வேண்டும். அது தான் கடைசி எல்லை…!

வெறுமனே ஆற்று வெள்ளத்தில் குளித்தால் அது ஆடிப் பெருக்கு அல்ல…!

Image

Bliss light soul

வெறுமனே ஆற்று வெள்ளத்தில் குளித்தால் அது ஆடிப் பெருக்கு அல்ல…!

 

நாம் ஒரு தொழில் செய்யப் போகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதை ஆரம்பிக்கும் பொழுதே
1.தொழில் நஷ்டமாகி விடுமோ…!
2.சரியான லாபம் வராமல் போய்விடுமோ…! என்ற பயத்தை ஊட்டிச் செயல்படுத்துவோம் என்றால்
3.தொழிலைச் சீராகச் செய்யும் அறிவு இழக்கப்படுகின்றது.

ஆகவே அந்தக் குறையான எண்ணத்தை எடுத்துக் கொண்டு அதையே அதிகமாக வளர்த்தால்
1.குறையின் உணர்வுகள் அதிகரித்து
2.எந்தச் செயலை எடுத்தாலும் அது முன்னாடி வந்து நம்மைப் பலவீனப்படுத்திக் கொண்டேயிருக்கும்.

அதற்குப் பதிலாக அந்தக் குறைகளை எல்லாம் நீக்கும் உணர்வின் எண்ணம் கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துக் கொண்டு அதை அறிய முற்படும் போது
1.குறையை அகற்றிப் பிழைகளை நீக்கிச் செயல்படும் உணர்வுகள் இணைந்து
2.உங்கள் தொழிலைச் சீராக்கச் செய்யும். சரியான பலனும் கொடுக்கும்.

அதைப் போன்று குடும்பத்தில் குறைகள் வந்தாலும் அந்தக் குறைகள் எதிலே எப்படி வந்தது என்று அதை அறியும் தன்மைக்கு அந்த மகரிஷியின் அருள் சக்தியைத் தனக்குள் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்ற இதை நம்முள் பெருக்கி இருள் சூழ்ந்த நிலைகளைப் பிளந்து குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை நமக்குள் பெருக்க வேண்டும்.

உதாரணமாகக் காற்று அதிகமாக வரும் போது தூசிகளை எல்லாம் எப்படி அடித்துச் செல்கின்றதோ அதைப் போன்று எத்தகைய தீமைகள் நம்மைச் சூழ்ந்து வந்தாலும் அருள் ஞானியின் உணர்வை நமக்குள் சேர்த்து நம்மை அறியாது வந்த தீமைகளை நீக்கிடல் வேண்டும்.

இந்த உணர்வினை நமக்குள் பெருக்குதல் வேண்டும். இது தான் ஆடி பதினெட்டாம் பெருக்கு என்பது.

ஆனால் ஆற்றிலே வெள்ளம் போகிறது. பதினெட்டாம் பெருக்கு என்று அதிலே போய்க் குளித்துவிட்டுப் பின் உணவாக உட்கொண்டால் அது ஐதீகம் தான்…!

ஆடிப் பெருக்கு என்று ஆற்றிலே குளித்து விட்டு ஆலயத்திற்குள் செல்லும் போது நாம் எதைப் பெருக்குகிறோம்…?
1.அங்கே ஞானிகள் காட்டிய வழியில் செய்ல்படுகின்றோமா…?
2.ஒருவருக்கொருவர் உயர்ந்த எண்ணங்களையும் உயர்ந்த பண்புகளையும் அங்கே பெருக்குகின்றோமா…?

ஆலயத்திற்குள் உள்ளே செல்லும் பொழுதே நமக்கு முன் வருவோரைத் தள்ளி விட்டு நாம் முந்திச் செல்ல வேண்டும் என்று தான் எண்ணுகின்றோம். மற்றவரைத் தள்ளி விட்டு… “நாம் பெற வேண்டும்…!” என்ற நிலையைத்தான் ஆலயங்களில் பெருக்குகிறோம்.

ஆனால் ஆற்றிலே நீர் வெள்ளமாகப் பெருகிச் செல்லும் போது அதற்குள் வரும் அழுக்குகளை எல்லாம் கரைத்துச் செல்கின்றது. குளித்தவுடன் அங்கே நிற்பதில்லை.

அதைப் போன்று தான் அந்த மெய் ஞானிகளின் உணர்வை ஒவ்வொருவரும் நமக்குள் செலுத்தி வாழ்க்கையில் வந்த தீமைகளைக் கரைத்து அருள் மகரிஷியின் உணர்வை நமக்குள் பெருக்காகப் பெருக்கிடல் வேண்டும்.

அந்த அருள் உணர்வுகள் நமக்குள் பெருகினால்தான் நம்முடைய பண்புகள் பெருகும். பண்புகள் பெருகினால் வாழ்க்கை உயரும்.
1.தெய்வீக அன்பை வளர்த்து
2.தெய்வீகப் பண்புகளை வளர்த்து
3.தெய்வீக சக்திகளைப் பெருக்குவதற்கே ஆடி பதினெட்டாம் பெருக்கு.

மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று விரும்புகிறோம்…! ஆனால் வாழ்க்கையில் நாம் எதைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றோம்…?

Image

blissful ADI PERUKKU

மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று விரும்புகிறோம்…! ஆனால் வாழ்க்கையில் நாம் எதைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றோம்…?

 

ஒருவருக்கொருவர் ஒன்றிணைந்து செயலாக்கும் போது தான் ஒரு குடும்பமாக இயங்க முடியும். அதில் மகிழ்ச்சி தரும் நிலையும் வரும்.

ஒன்றிணைந்து வாழ்ந்தாலும் சந்தர்ப்பவசத்தால் கோபம் வெறுப்பு போன்ற குணங்கள் இயக்கப்பட்டு அந்தச் சக்திகள் நம் உடலிலே பிரம்மமாகச் சிருஷ்டிக்கப்பட்டு விடுகின்றது.

அதனால் மனைவி மீது கணவனுக்கு வெறுப்பும் கணவன் மீது மனைவிக்கு வெறுப்பும் வரும் போது
1.அந்தக் குணம் இருவர் உடலிலும் சிருஷ்டிக்கப்படும் பொழுது அது பிரம்மம் தான்.
2.அதனின் சக்தியாக இயக்குவது பிரம்மாவின் மனைவி சரஸ்வதி.
3.அந்த உணர்வின் ஞானமாக வெறுக்கும் உணர்வு வளர்ந்து வெறுப்பின் வித்தை உடலுக்குள் பெருக்குகின்றது

ஆனாலும் குடும்பம் ஒன்று சேர்த்து வாழ்ந்து அதிலே மனம் பெருகி அமைதி பெறுகி செல்வம் பெருகி ஞானம் பெருகி இவை எல்லாம் பெருகி வளரப்படும் போது வீட்டிற்குள் மகிழ்ச்சி பெருகுகின்றது. அந்த மகிழ்ச்சியினால் பொருள் காணும் நிலைகள் உருவாகின்றது.

அப்படி மகிழ்ச்சியின் நிலைகள் பெறப்படும் போது நல்ல பொருளின் தன்மைகளைக் கவர்ந்து அதைப்பெற வேண்டும் என்றும் அதன் வழிகளில் மகிழ்ச்சி பெற வேண்டும் என்றும் அதை எடுக்கின்றார்கள்.

1.சந்தோஷமாக இருக்கும் போது நீங்கள் ஒரு பொருளைப் பாருங்கள். அது தெளிவாகத் தெரியும்.
2.ஆனால் வெறுப்பின் தன்மை நமக்குள் வந்த பின் பொருளைக் காண்பதும் கஷ்டம்…! அந்தப் பொருளைப் பாதுகாக்கிறதும் கஷ்டம் தான்….!

மகிழ்ச்சியாக இருக்கும் போது ஒரு பொருளை எடுத்து நாம் பார்த்தாலும் அதைப் பந்தோபஸ்தாக வைப்போம். ஆனால் வெறுப்புடன் இருக்கும் பொழுது எந்தப் பொருளைக் கொடுத்தாலும் உடனே தூக்கி எறிவோம். எந்த வெறுப்பை நாம் எடுத்தோமோ அதனால் தீமையைப் பெருக்கும் நிலை வருகின்றது.

சநதர்ப்பத்தால் குடும்ப வாழ்க்கையில் மிகவும் வெறுப்பாகி விட்டால்… எதைக் கண்டாலும்
1.இது எதற்கு…? இந்த வீடு எதற்கு…? காடு எதற்கு…?
2.பொருள் எதற்கு…? துணி எதற்கு…? என்ற நிலைகள் இது பெருகிவிடும்.
3.இத்தகைய தீமையின் தன்மை பெருகி விட்டால் மனித உடலுக்குள் தீமைகள் பெருகி
4.தீமையின் உணர்வுகளைச் சேர்த்து அதற்குத் தகுந்த ஓர் உருவாக உடலின் அமைப்பாகப் பிரம்ம ரிஷி சிருஷ்டித்து விடுவான்.

யார்..?

நம் உயிரே பிரம்ம ரிஷியாக நின்று நமக்குள் அது சிருஷ்டிக்கும் பிரம்மாவாக நாம் எண்ணியதை எல்லாம் சிருஷ்டித்து உருவாக்கி விடுவான்.

1.நீங்கள் எதை எண்ணி எடுத்தாலும் அந்த ரிஷி தான் (உயிர்)
2.அதனின் உணர்வின் வேகமாக உங்களை இயக்குகின்றான்.
3.அதனால் தான் பிரம்ம ரிஷி என்பது.

ஆகவே உயர்ந்த குணங்கள் பெருக வேண்டும்… குடும்பம் உயர வேண்டும்… குடும்பத்திற்குகந்த செல்வம் உயர வேண்டும்…! என்றால் நாம் எதனைப் பெருக்க வேண்டும்…?

ஒவ்வொரு நாளும் காலையில் எழும் போதும் சரி இரவு படுக்கச் செல்லும் போதும் சரி “ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி நினைவை விண்ணிலே செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று குறைந்தது ஒரு பத்து நிமிடமாவது அந்த அருள் சக்தியை எடுத்து உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று சிறிது நேரம் தியானியுங்கள்.

பின் உங்கள் வாழ்க்கையில் தீமைகளைச் சந்திக்கும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து உங்கள் மனதைத் தூய்மைப்படுத்திக் கொண்டே வாருங்கள்.

சிறிது நாள் செய்து பழகிக் கொண்டால் மகரிஷிகளின் அருள் சக்தியை உயிர் அணுக்களாக உருவாக்கி உங்கள் உடலுக்குள் அதைப் பெருக்கத் தொடங்கும்.
1.அருள் சக்தி உங்களுக்குள் பெருகப் பெருக அதனின் ஞானமாக இயக்கி
2.உங்களை அருள் வாழ்க்கை வாழச் செய்யும்.

அஷ்ட திக்கிலிருந்து எது வந்தாலும்… அதை வெல்லும் ஆற்றலை நாம் பெறவேண்டும்…!

Image

asdadik balagarkal

அஷ்ட திக்கிலிருந்து எது வந்தாலும்… அதை வெல்லும் ஆற்றலை நாம் பெறவேண்டும்…!

 

ஆற்றிலே வெள்ளம் செல்கிறதென்றால் அந்த வெள்ளத்தை நாம் விவசாயம் செய்யும் வயல்களிலே பாய்ச்சினால் என்னவாகும்…? வயல்களிலுள்ள பயிர் பச்சைகளை அழித்துச் சென்று விடும்.

அதைப் போல் தான் நாம் இந்த மனித வாழ்க்கையில் ஆசைகளை நாம் வெள்ளமாகக் கொண்டு சென்றால் அது என்ன செய்யும்…?

நீரினால் ஏற்படும் வெள்ளம் மற்றதை அடித்துச் செல்வது போல்
1.மற்ற எந்தச் சிந்தனைகளும் சீராக வராதபடி
2.எந்த ஆசையை முன்னாடி வைத்தோமோ அந்த வழிக்கே நம்மை
3.மீண்டும் மீண்டும் அதிலேயே ஒரு நிலைப்படுத்திக் கொண்டு போகும்.
4.மற்ற எதையும் சீராக அறியவிடாது தள்ளிவிடும்.

ஆனால் அருள் மகரிஷிகளுடைய உணர்வுகளை நாம் இச்சைப்பட்டு நமக்குள் பெருக்கிக் கொண்டு வந்தால் நம்மை அறியாது சேர்த்த தீமைகளை எல்லாம் அது அடித்துச் செல்லும்.

உதாரணமாக ஓர் வெளிச்சத்தை நாம் போட்டோம் என்றால் அங்கிருக்கும் இருளைப் போக்கி மறைந்த பொருள்களை எல்லாம் காணச் செய்யும்.

அது போல் மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் இணைப்போமென்றால் நமக்குள் அது பெருகி நம் வாழ்க்கையின் இருளைப் போக்கி விடும். மெய்ப் பொருளைக் காணச் செய்யும்.

ஆகவே
1.மகரிஷிகளின் அருள் வெள்ளத்தை நமக்குள் பாய்ச்சி
2.நம்மை அறியாது வரும் இருளைப் போக்கி
3.மெய் உணர்வின் தன்மை நம் ஆன்மாவில் பெருக்கிடல் வேண்டும்.

ஏனென்றால் நம் உயிரின் துணை கொண்டு பத்தாவது நிலை அடையும் தகுதி பெற்றது மனிதனாக உருப்பெற்ற நம்முடைய இந்தத் தருணம்.

அஷ்ட திக்கையும் எட்டிப் பிடித்து… அதை உணரும் தகுதி பெற்றவன் தான் மனிதன்…! அஷ்ட திக்கும் என்றால் எந்தத் திசையிலிருந்து எது வந்தாலும் அது அனைத்தையும் அறியும் ஆற்றல் பெற்றவன் ஆறாவது அறிவு பெற்ற இந்த மனிதன்.

எந்தத் திக்கிலிருந்து எது வந்தாலும் அஷ்ட திக்கிலேயும் தன் ஒளியின் சுடரைப் பாய்ச்சி அந்த இருளை மாய்க்கும் நிலைகள் பெற்றது சப்தரிஷி மண்டலம். தீமைகள் வந்தாலும் இருள் சூழ்ந்தாலும் அது எல்லாவற்றையும் ஒளியாகப் பெருக்கிக் காட்டுகின்றது.

அதே போன்று தான் துருவ நட்சத்திரமும் தன் அருகிலே வரும் எத்தகையை நஞ்சினையும் அடக்கி ஒளியாகத் தனக்குள் வீசுகின்றது. இது தான் அந்த மகரிஷிகள் காட்டிய நிலைகள்.

1.அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் வெள்ளமாகப் பெருக்கி
2.அஷ்ட திக்கிலிருந்து வரும் இருள்களை எல்லாம் மாய்த்து
3.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக பத்தாவது நிலையை அடைவதே பதினெட்டாம் பெருக்கு,..!

காந்திஜிக்கு ஞானமும் மக்களைக் காக்கும் மன பலமும் கிடைத்தது எப்படி…?

Image

mahatma-gandhi

காந்திஜிக்கு ஞானமும் மக்களைக் காக்கும் மன பலமும் கிடைத்தது எப்படி…?

 

உலகம் முழுவதற்கும் பிரிட்டிஷ் ஆட்சியின் தன்மை கொண்டு வந்து கொண்டிருக்கும் நேரத்தில் காந்திஜி தன் பிழைப்பிற்காகத் தென்னாப்பிரிக்காவிற்குச் செல்கின்றார்.

தான் கற்ற சட்டக் கல்வியை வைத்து அந்த நாட்டிலே தான் உயர்வு பெறலாம் என்ற எண்ணத்தில்தான் செல்கின்றார். ஆனால் அங்கே செல்லப்படும் போது
1.இந்திய மக்கள் வாடுவதையும் கருப்பு இன மக்கள் துடிப்பதையும்
2.ஆங்கிலேயருடைய அதிகாரத்தின் நிலைகள் எவ்வாறெல்லாம் செயல்படுகின்றது…? என்பதையும் கண்டுணர்கின்றார்.

ஆங்கிலயேரின் செயல்பாடுகளை வக்கீலாக வாதாடி அந்த உண்மைகளைச் சொல்லப்படும் போது அவர் மேல் முட்டையை வீசுகின்றார்கள். அவரை அசிங்கப்படுத்துகின்றார்கள்.

அப்போது தான் அவர் சிந்திக்கின்றார்…!

அங்கே இருக்கும் மக்களின் உணர்வுகள் எப்படி இருக்கின்றது…? என்ற நிலையில் அவர்கள் படும் துன்பங்களையும் துயரமான உணர்வுகளையும் சந்திக்கப்படும் பொழுது ஈவும் இரக்கமும் அவருக்குள் வருகின்றது.

இவர் தன்னுடைய சிறிய வயதில் செய்த தவறுகளை எல்லாம் அப்பொழுது உணர்கின்றார். அப்படி உணரப்படும் போது தான் “சேவை…!” என்ற உணர்வுகள் அங்கே அவருக்குள் வருகின்றது.

ஏனென்றால் அன்று வேடுவனாக இருந்த வான்மீகி தான் இரு பட்சிகள் ஆனந்தமாக இருக்கப்படும் பொழுது ஒரு பட்சியைத் தன் அம்பால் வீழ்த்துகின்றான். அது துடிதுடித்துக் கீழே விழுந்து இறக்கின்றது.

கூட வந்த மற்றொரு பட்சியோ தன் பாச உணர்வுகள் கொண்டு ஏங்கிப் பார்க்கின்றது. அந்த பட்சியிடமிருந்து வெளி வரும் பாசமான உணவலைகள் அலைகளாகப் படரப்படும் போது அதையும் இவன் குறி வைத்துத் தாக்க எண்ணுகின்றான்.

இருந்தாலும் அந்தப் பட்சி… தன்னுடைய எல்லை கடந்த பாச உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது
1.அந்தப் பட்சி எண்ணிய உணர்வுகள் வேடுவனுக்குள் ஊடுருவி
2.இவன் உடலுக்குள் இருக்கும் பாச உணர்வுகளைத் தூண்டச் செய்து
3.தன் மனைவி குழந்தைகள் மீது வரும் “தன் இனத்தின்…!” பாச உணர்வுகளை உந்தச் செய்கின்றது.

அதன் பின் தான் வேடுவனான வான்மீகி பட்சியைக் கொல்வதை விடுத்து வானை நோக்கி ஏகுகின்றான். அப்படி வானிலே ஏகும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அவன் சுவாசத்தில் சிக்கப்பட்டுத் தன் தவறை உணர்ந்து திருந்துகின்றான்.

பட்சியிடமிருந்து வெளிப்படும் உணர்வலைகள் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாகப் பரப்பும் பொழுது அதை நுகர்ந்து சுவாசிக்கும் பொழுது
1.அது எப்படித் தனக்குள் எண்ணங்களாகத் தோன்றுகிறது…? என்றும்
2.அந்த எண்ணத்தின் தோற்றமும் இயக்கங்களும் எப்படிச் செயல்படுகின்றது என்பதையும்
3.இராமனாக உருவகப்படுத்தி இராமாயணமாக எழுதுகின்றான்.

அந்த வான்மீகியைப் போன்றுதான் தன் இளமைப் பருவத்தில் சிற்றின்பமும் மற்றவருடைய நிலைகள் தவறான நிலைகளையும் செய்து வந்தர்தான் காந்திஜியும்.

ஆனாலும் தென்னாப்பிரிக்காவில் மக்கள் துயர் படும் உணர்வினைக் கண்டார். அவர்களைப் பழித்துப் பேசுவதைக் காணப்படும் போது இதிலிருந்து எப்படி மீள்வது…? என்ற நிலையில் நன்மையைப் பற்றிச் சிந்திக்கின்றார்.

ஆங்கிலேயர்கள் காந்திஜியைப் பழித்துப் பேசுகின்றார்கள். இருந்தாலும் இந்த உணர்வின் தன்மை மாற்றமடையப்படும் போது “ஏழ்மையில் வாடும் மக்களை மீட்ட வேண்டும்…!” என்ற உணர்வு கொண்டு தான் கல்வி கற்ற உணர்வின் அறிவைப் பயன்படுத்தத் தொடங்குகின்றார்.

காந்திஜி வான்மீகியின் இராமாயணக் காவியத்தைப் படித்த அந்த உணர்வின் தொடர்கள் அவருக்குள் இயக்கமாகின்றது.
1.அன்று வேடுவனான வான்மீகிக்குள் எப்படித் திருத்தமானதோ
2.அதே போல இவருக்குள்ளும் இந்த நினைவுகள் திருத்தமாகி
3.உலக மக்களைக் காக்க வேண்டும்…! என்ற எண்ணம் வலுவாகின்றது.

தீமை செய்வோர் உணர்வுகள் தனக்குள் வரப்படும் போது அந்தத் தீமையின் உணர்வுகள் வளர்ச்சியாகி “நம்மையும் எப்படித் தீமை செய்ய வைக்கின்றது…?” என்று உணர்கின்றார்.

1.தீமையிலிருந்து மீள வேண்டும் என்றும் தன் இனத்தைக் காக்க வேண்டும் என்று
2.அன்று அந்தப் பட்சி எடுத்துக் கொண்ட “தன் இனத்தைக் காக்கும் உணர்வுகள்”
3.வான்மீகிக்குத் தீமையிலிருந்து விடுபடும் உணர்வை அந்தப் பட்சி ஊட்டியது போன்று
4.தீமை என்ற உணர்வுடன் வருவோரிடமிருந்து மக்களை ஏன் மீட்கக் கூடாது…? என்ற உணர்வினைக் காந்திஜி எடுத்துக் கொள்கிறார்.

இராம காவியத்தைப் படைத்த வான்மீகியின் நிலைகள் கொண்டு இந்த எண்ணங்கள் எப்படி…? என்ற நிலையைத் தெரிந்தோ தெரியாமலேயோ அதனின் உண்மை நிலையை தெளிவாக உணர்ந்து அதன் வழியில் கடைப்பிடித்துத்தான்
1.நாம் பெற வேண்டியது எதை…?
2.நாம் சாந்தமாகச் செயல்பட வேண்டியது எவ்வாறு…? என்ற
3.அந்த அருள் உணர்வினைத் தனக்குள் வளர்த்துக் கொண்ட அந்தக் காந்தி மகான்
4.எத்தனையோ துயர்களிலிருந்து எல்லா மக்களையும் மீட்டிக் கொடுத்தார்.
5.இந்தியாவிலும் மக்களை மீட்ட வேண்டும் என்ற நிலையில் நம்மையும் மீட்டிக் கொடுத்தார்.

காந்திஜியை நாம் எண்ணி அவர் பெற்ற சாந்தமும் ஞானமும் விவேகமும் பெறவேண்டும் என்று எடுத்தால் நம்மை அறியாது இயக்கும் கடுமையான பகைமைகளிலிருந்து விடுபட முடியும்.

அதே போல மற்றவர்களைக் காக்கும் சக்தியும் ஆற்றலும் அந்த மன வலிமையையும் நாம் நிச்சயம் பெற முடியும்…!

நாம் சேமிக்க வேண்டிய அழிக்க முடியாத சொத்து பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

Image

Treasure hunt for soul

நாம் சேமிக்க வேண்டிய அழியாத சொத்து பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

 

எண்ணத்திலும் செயலிலும் வார்த்தையிலும் உயர்வு தாழ்வு என்ற எண்ணம் தான் மனிதர்கள் மனதிலே ஊன்றியுள்ளது.

1.உயர்வு எனும் பொழுது அல்லது உன்னத நிலை எனும் பொழுது
2.நம் உடலுக்கு நம் உயிருக்கு அழியாச் செல்வம் என்ற உயர்ந்த நிலையைப் பெறவேண்டும் என்ற
3.அந்த உயர்ந்த எண்ணம் தான் நம் எண்ணத்தில் எல்லாம் ஊன்றி நிலைத்திட வேண்டுமப்பா…!

வாழ்க்கையில் சேர்த்திடும் சொத்து சுகத்தைத்தான் நாம் எண்ணி வாழ்கின்றோம். அழியாச் சொத்தை யாரும் எண்ணுவதில்லை. மனித உடல் பெற்ற இந்தப் பாக்கியத்தை உடலில் உள்ள பொழுதே அதைச் சீராகப் பயன்படுத்துவதில்லை.

இந்தத் தூல சரீரத்தைத்தான் எண்ணுகின்றார்கள். ஞானச் சரீரத்தை எண்ணிப் பார்ப்பதில்லை.

ஞானச் சரீரத்திற்கு… அந்த ஞான நிலை பெற… நம் உயிராத்மாவிற்கு அழியா நிலை பெற…
1.எண்ணத்திலும் செயலிலும் நல்ல உணர்வுகளையே நம் சுவாசத்தில் என்றுமே எடுத்துக் கொண்டால்
2.நம் உயிர் நிலை ஊட்டம் பெறுகின்றது.

மனிதர்களின் எண்ணமும் செயலும் இன்னும் ஒரு நிலைப்படாமல் இந்தச் சரீர நிலையை (உடலை) எண்ணிக் கொண்டே தான் வாழ்ந்திடுகின்றார்கள்.

வாழும் நாள் எல்லாம் மனித வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களுக்கு நாம் மனதைத் தந்து விட்டால்….!
1.நம் மன நிலையில் பல சோர்வுகளை அடைந்து
2.பல தீய அணுக்களின் செயல்களுக்கு நாம் உட்பட்டு
3.நம்மையே… நம் சுவாச நிலையையே… கெடுத்துக் கொள்கின்றோம்.

தீய எண்ணத்தை வளரவிட்டு அந்த நிலையையே எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது அந்தத் தீய அணுக்களின் வேலை துரிதப்படுகின்றது. அந்த நிலையில் நம் உயிருக்குப் பெரும் சோர்வின் தன்மையைத் தான் அளிக்கின்றோம்.

அதையே வளரவிட்டால் நம் சுவாச நிலையும் மாறுபட்டு இன்னும் பல தீய அணுக்களைத் தான் மேலும் மேலும் பெறுகின்றோம். இதை எல்லாம் அறிந்திடல் வேண்டும்.

ஆகவே
1.நம் உயிரணுவிற்கு நாம் பெறும் ஊட்ட நிலையை
2.அழியாச் செல்வமான ஆத்ம ஜோதி என்ற ஒளி நிலையைப் பெற
3.ஈஸ்வர தியானங்கள் பெற்று அந்த நிலையில் நமக்குக் கிடைத்திடும் அரிய பொக்கிஷங்களை
4.நம் உயிரணுவிற்குச் சேமித்திடல் வேண்டும்.
5.விண்ணிலே ஒளிரும் நட்சத்திரமாகலாம்…!

நம் உயிரான்மாவிற்குச் சேமிக்கும் அந்தச் சொத்தே என்றும் அழியாத சொத்தாகும். அதை யாரும் அழிக்கவோ திருடவோ முடியாது.

நன்றாகப் பழகினாலும் நண்பர்களுக்குள் எப்படிக் கடுமையான பகைமை வருகின்றது…?

Image

positive-energy-blog

நன்றாகப் பழகினாலும் நண்பர்களுக்குள் எப்படிக் கடுமையான பகைமை வருகின்றது…?

சகஜ வாழ்க்கையில் நண்பர் என்ற நிலைகள் கொண்டு நாம் ஒருவருடன் நெருங்கிப் பழகிவிட்டால் அவர் சில தவறுகள் செய்தாலும் அதை ஏற்றுக் கொள்கின்றோம்.

அந்தத் தவறை எளிய முறையில் ஏம்ப்பா…! இந்த மாதிரி செய்கிறாய்…? என்று லேசாகத்தான் சொல்கின்றோம். இப்படிச் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மற்ற காரியங்களில் “தான் எதிர்பார்த்தது நடக்கவில்லை…!” என்றால் என்ன நடக்கின்றது…?

1.இவ்வளவு காலம் என் நண்பன் அவன் எத்தனையோ தவறுகளைச் செய்தான்.
2.அதையெல்லாம் மறைத்து அவனுக்கு எல்லா உதவிகளையும் நன்மைகளையும் நான் செய்தேன்.
3.ஆனால் இவ்வளவு உதவிகளையும் பெற்ற அந்த நண்பன் இன்று நான் எதிர்பார்த்தபடி வராமல் அவன் பெரிய தவறு செய்கின்றான்.
4.அதை எப்படிக் கேட்காமல் இருப்பது…! என்ற நிலையில் நண்பனிடம் சென்று
5.“இது வேண்டாம்ப்பா… பெரிய தவறு…!” என்று சொல்கிறோம்.

அப்பொழுது அந்த நண்பனுக்குள் என்ன நடக்கின்றது…?

“இவன் என்னமோ பெரிய யோக்கியன்…!” மாதிரிப் பேசுகின்றான். என்னைப் பார்த்து இன்றைக்குத் தவறு என்று சுட்டிக் காட்ட ஆரம்பித்து விட்டான்…! என்ற இந்த உணர்வுகள் மோதலில் முடிந்து பகைமையாகி விடுகின்றது.

அந்தப் பகைமையின் தன்மையை வளர்க்கும் பொழுது பகைமையான அணுக்கள் உடலுக்குள் புகுந்து அதனால் போர் முறையே நமக்குள் வருகின்றது.

நமக்குள் இருக்கும் நல்ல குணங்களுக்கும் நண்பனாக வளர்த்துக் கொண்ட குணத்திற்கும் அதே சமயம் சந்தர்ப்பத்தில் உருவான அந்தப் பகைமையான அணுக்களுக்கும் ஒன்றுக்கொன்று எதிர் நிலையாகி மனக் கலக்கமாகி வேதனையே விளைகின்றது.

இப்படிப்பட்ட நிலை வரும் போது தன்னை அறியாமலேயே உடல் சோர்வடையத் தொடங்குகிறது. சோர்வடைந்த பின் நாம் நல்லதைச் சிந்திக்க முடியாத நிலைகள் ஆகி விடுன்றது.

சிந்திக்க முடியவில்லை என்றால் கோப உணர்ச்சிகள் தூண்டப்பட்டு என்ன பொருள் என்ற நிலையைத் தன்னால் (நல்ல தரத்தை) காண முடியாதபடி செய்து விடுகின்றது.

1.காண முடியாதபடி… அதைப் பெறுவதற்குத் தகுதி இல்லை என்று எண்ணினாலும்
2.அதை எப்படியும் தான் பெற வேண்டும் என்ற உணர்வுகளை மீண்டும் மீண்டும் ஊட்டும் பொழுது
3.தீமையின் விளைவுகள் அதிகமாக விளைந்து நம்மை அறியாமலேயே பகைமை உணர்வுகள் வளர்ந்தபின்
4.இந்த மனித உணர்வுகளையே உருக்குலையச் செய்து விடுகின்றது.
5.எந்த மனிதனைக் கண்டாலும் நம்பிக்கை இல்லாத நிலையாக உருவாக்கி விடுகின்றது.
6.அனைவரையும் பகைமையாக்கி “எல்லோரையும் பகைவர்கள்…!” என்று வெறுப்பின் உணர்வுகளை வளர்க்கச் செய்கின்றது.

இந்த வெறுப்பின் உச்சகட்டம் உடலிலே விளையப்படும் போது கடும் நோயாகி இதே மனித உடலில் வெறுக்கும் உணர்வுகளை வளர்த்து மனிதனல்லாத உருவாக அடுத்து உருவாக்கி விடுகின்றது.

நாம் எதை எண்ணுகின்றோமோ…! அதன் அடிப்படையில்
1.நம் உயிரின் இயக்கத் தொடர் நம்மை எப்படி எல்லாம் உருவாக்குகின்றது…?
2.நம் உருவை எப்படி மாற்றுகின்றது…? என்ற நிலையைத்தான்
3.கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் காட்டுகின்றது.

ஆகவே நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் வரும் பகைமைகளை அகற்ற வேண்டும் என்றால் அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து அடிக்கடி நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்தியே ஆக வேண்டும்.