தெய்வச் செயல்

தெய்வச் செயல்

 

தீமையானவற்றை நாம் காணும் பட்சத்தில்
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கும் பொழுது
2.நம்மிடத்தில் உணரப்பட்ட தீமை துடைக்கப்படுகின்றது.

இதைத் தான் “தெய்வச் செயல்” என்பது.

மேலும் யார் நமக்குத் தீமை செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றாரோ அவரிடத்தில் “நல்ல உணர்வுகள் வளர வேண்டும்” என்று எண்ணி அதனின் உணர்வை நாம் பரப்பும் பொழுது அங்கே கடும் சொல் வராது,

அது கனிந்திடும் நிலையாகக் கேட்போரின் உணர்வில் இனிமையானதாகப் பாய்ந்து அவரிடத்தில் இருக்கும் தவறை மாற்றி அவர் நம் மீது கொண்ட பகைமையை நீக்கி நட்பினை வளர்க்கும்.

பிறவிப் பெருங்கடல் நீந்தி தன் ஞானத்தால் பிறவி இல்லாப் பெரு நிலையை அடைந்து உயிருடன் ஒன்றி ஒளிச்சரீரமாக இன்றும் விண்ணிலே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மகரிஷிகள்.

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் ஏக்கத்துடன்
2.நமது நினைவின் ஆற்றல் அடிக்கடி அவர்கள் பால் செல்லும் பொழுது
3.அவர்களிடம் நமது உயிரான்மா இணைந்து அங்கே சுழலும் சக்தியாக
4.”பிறவா நிலை” என்னும் நிலையை அடையச் செய்கின்றது.

அவ்வாறில்லாமல் நமக்குத் தீங்கு செய்பவரைப் பற்றியே நாம் எண்ணிக் கொண்டிருந்தால் இந்த உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிரான்மா இந்த உடலில் வாழ்ந்த காலத்தில் எவரைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தோமோ அவரின் உடலுக்குள் இந்த உயிரான்மாவை அழைத்துச் சென்றுவிடும்,

பின் அந்தத் தீங்கின் விளைவை அனுபவிக்கச் செய்து அதன் மூலம் அவரிடத்தில் விளைந்த உணர்வின் சத்தை இந்த உயிரான்மா கவர்ந்து அவரின் உயிரான்மாவையும் வீழ்த்தி இதுவும் வீழ்ந்து பிறிதொன்றைக் கொன்று புசிக்கும் உயிரினங்களின் ஈர்ப்பிற்குள் சிக்கி அதனின் சரீரத்தை இந்த உயிரான்மா பெறுகின்றது.

ஆகவே நாம் தேய்பிறை போன்று இல்லாது வளர்பிறையாக
1.மெய் ஞானத்தை வளர்க்கும் விதமாக மெய் ஞானிகளின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்து வாழ்வில் வரும் தீமைகளை ஒடுக்கி
2.விண்ணில் நிலைத்த ஒளி சரீரத்துடன் இருந்து வரும் மகா ஞானிகளின் ஈர்ப்பில் கலந்து நாமும் அந்த ஓளிச்சரீரமாக வாழ்வோம்

இதன் வழியில் கூட்டுத் தியானங்களில் ஏங்கித் தியானிக்கும் அனைத்து உயிராத்மாக்களுக்கும் எமது ஆசீர்வாதங்கள்.

இன்று உலகில் நடப்பதெற்கெல்லாம் மனிதனின் எண்ணமே மூலமாக இருக்கின்றது

இன்று உலகில் நடப்பதெற்கெல்லாம் மனிதனின் எண்ணமே மூலமாக இருக்கின்றது

 

இன்று உலகில் போர்கள் நடந்து கொண்டுள்ளது. சிந்திக்கும் ஆற்றல் மறைந்து கொண்டுள்ளது.
1.நல்ல செய்திகளைக் கேட்க முடியவில்லை.
2.அன்பும் பண்பும் அரவணைப்பும் மறைந்து வருகிறது.

பண்டைய கால மனிதர்கள் விலங்குகளைப் போல் வாழ்ந்தது போன்று இன்று நாம் நகரில் வாழ்ந்தாலும் “காட்டில் வாழ்வது போல் தான் இருக்கிறது…”

ஒருவருக்கொருவர் கொல்லும் உணர்வே வளர்ந்து கொண்டிருக்கின்றது. அத்தகைய தீமையான நிலைகளை அகற்றிடும் சக்தி எங்குமில்லை.
1.எந்த மதக் கடவுளும் அதைக் காக்கவில்லை.
2.இன்றைய உலகில் கடவுளாக வணங்கி வரும் எந்தக் கடவுளும் தீமை செய்பவர்களுக்கு நல்ல போதனையைக் கொடுக்கவில்லை.

நாம் எண்ணிய உணர்வுகள் உயிரால் இயக்கப்பட்டு அந்த உணர்வின் செயலே தான் நமக்குள் நடக்கின்றதே தவிர “மனிதனுடைய எண்ணம் தான் இதற்கு மூலமாகிறது…”

எண்ணியதைத் தான் உயிர் இயக்குகின்றது. அந்த உணர்வை அணுவாக மாற்றுகின்றது… அதன் வழியே செயலும் நடந்து கொண்டிருக்கிறது.

தனித்து ஒரு கடவுள் இல்லை…!

1.நாம் எண்ணும் உணர்வுகளில் எத்தகைய தீமைகளை நாம் செய்கிறோம் என்று நம் உயிர் கணக்குப் போட்டுக் கொண்டே இருக்கும்.
2.அதே சமயத்தில் எந்த வகையில் எந்தெந்தத் தீமைகளை நீக்கினோம் என்று அந்தக் கணக்கையும் உயிர் வைத்துக் கொண்டே இருக்கும்.

ஆக மொத்தம் முடிவில் நமக்கு ஜட்ஜ்மெண்ட் – தீர்ப்பு கூறுவது நம் உயிர் தான். எதன் கணக்காகின்றதோ…
1.நீ இவ்வளவு செய்தாய்… அதற்குண்டான உடலை நீ பெறுவாய்… அதனை நீ அனுபவித்துப் பார்…! என்று தீர்ப்புக் கூறி
2.அதன் வழி அடுத்த வாழ்க்கை தொடர்கின்றது.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானத்தின் மூலம் தீமையை அகற்றிடும் அருள் சக்திகளைப் பெற்றுப் பழகி அதை வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

பிறருடைய கஷ்டமோ துன்பமோ துயரமோ அதை உற்றுப் பார்த்து அவர்கள் சொல்வதைக் கேட்டு நுகர்ந்திருந்தாலும் அந்த உணர்வுகள் நமக்குள் இயக்கிடாது தடைப்படுத்தி ஒவ்வொரு நொடிப் பொழுதும் துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும்

உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெருக்கி இப் பிறவியில் வரும் இருளை அகற்றி… “உயிருடன் ஒன்றி ஒளி என்ற உடலைத் தான் பெறுவோம்…” என்று உறுதிப்படுத்துங்கள்.

1.எந்த நிலையிலும் இந்த உடலை விட்டுத் தான் உயிர் செல்கிறது.
2.செல்லும் பொழுது இந்த உடலில் எதைச் சேர்த்துக் கொண்டோமோ அதற்குத்தக்க மாற்று உடலை உருவாக்குகின்றது உயிர்.
3.உணர்வுக்கொப்ப உடலை உயிர் மாற்றுகின்றது என்று குருநாதர் காட்டிய அருள் வழியில் ஏற்கனவே பல முறை உபதேசித்துள்ளேன்.

ஆகவே குரு வழியில் நமக்குள் அருள் சக்தியினைக் கூட்டித் தீமை புகாது தடுத்து… நாம் பார்ப்போருக்குத் தீமை என்று உணர்ந்தால் அது வராது தடுத்து வேதனைப்படும் உணர்வுகளிலிருந்து அவரை நாம் மீட்டு… அவரையும் அருள் வழியில் அழைத்துச் செல்லும் அருள் ஞானத்தை நாம் பெறவே இந்தத் தியானத்தை அமைத்துள்ளோம்.

உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கும் பொழுது “நீங்களும் அதன் வழியில் அதைப் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்குங்கள்…”

உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்தச் சக்தியைப் பெற்று அதன் வழியில் உங்கள் உடலில் தீமை அகற்றிடும் சக்தியாக அத்தகைய உறுப்புகளாக மாற்றி ஓர் தெளிந்த மனம் பெறும் சக்தி பெறுவீர்கள்.

1.வரும் இருளை அகற்றி… இந்த வாழ்க்கையை ஒரு புனிதப் பயணமாக வைத்து
2.இந்த வாழ்க்கைக்குப் பின் என்றும் ஏகாந்த நிலையாகப் பகைமையற்ற நிலையில்
3.பிறிதொன்று நம்மைக் கவர்ந்திடாத நிலையை அடையச் செய்யும் மார்க்கம் தான் “நமது குருநாதர் காட்டிய அருள் வழி…”

தவறைச் சுட்டிக் காட்டும் பொழுது ஏற்படும் நிலைகள்

தவறைச் சுட்டிக் காட்டும் பொழுது ஏற்படும் நிலைகள்

 

நாம் ஒரு மனிதனிடத்தில் “நீ செய்யும் தவறுகளிலிருந்து விடுபட்டு இந்த நல்ல வழியில் செல்” என்று கூறினால் உடனே அவரிடத்தில் “எதிர் நிலையாகின்றது…”

தனக்கு விரோதமாக ஒருவர் சொல்லும் பொழுது அவர் தமது தாய் தந்தையராக இருந்தாலும் வெறுக்கின்றார்… சகோதரனாக இருந்தாலும் வெறுக்கின்றார்… நண்பராக இருந்தாலும் வெறுக்கின்றார்.
1.ஏனென்றால் மனிதர் தமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எதுவோ
2.அதன் வழியே அவரை அழைத்துச் செல்கின்றது.

ஆனால் அப்படி ஒருவர் மற்றவர்களை வெறுக்கும் தன்மைக்குக் காரணம் என்ன…?

குழந்தைகள் விளையாட்டில் ஆர்வமாக இருப்பவர்கள். அதனால் நமது குழந்தையிடமும் விளையாட்டுக் குணம் அதிகமாக இருக்கின்றது. இதனால் அவன் விபத்தில் சிக்குவான்… கல்வியில் ஞாபகம் இருக்காது… ஞானம் வராது என்று நாம் அவனைத் திட்டினால் அப்போது அங்கே எதிர் நிலையாகின்றது.

நாம் கோபமாகப் பேசினால் அவன் நம்மை எதிர்த்து பேசும் நிலை வருகின்றது. இதைப் போன்று அவன் நம்மை எதிர்த்துப் பேசும் நிலை வரும் பொழுது நமக்குள் வெறுப்பின் தன்மை இயக்கி அவனின் வெறுப்பைத் தணிப்பதற்கு மாறாக நாம் வெறுப்பின் உச்சக்கட்டம் அடைந்து அவனை உதைக்கும் தன்மை வருகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

நுகர்ந்த உணர்வுக்கொப்ப நமது உயிர் நம்மை இயக்குகின்றது.
1.நுகர்ந்த உணர்வுக்கொப்ப உயிர் நம்மை இயக்கினாலும்
2.நமது ஆறாவது அறிவால் நமது உயிரான்மாவை நம் வழிக்கு கொண்டு வரமுடியும்.

நாம் இதைக் காட்டிலும் வலுவான உணர்வுகளை நுகர்ந்தோம் என்றால் நமது உயிர் அவ்வுணர்வின் வழி நம்மை வழி நடத்தும்.

1.தீமைகளை நீக்கும் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் நுகர்ந்தறிந்தால்
2.நமது உயிர் நம்மிடத்தில் தீமைகளை நீக்கும் உணர்ச்சிகளை ஊட்டி நமது அங்கங்களைச் செயல்படுத்தும்.
3.தீமைகளை நீக்கும் அருள் உணர்ச்சிகள் நமது இரத்தத்தில் அணுவாக உருவாகும்.

இதை போன்று தீமைகளை நீக்கும் அரும் பெரும் சக்திகளை நாம் நுகர்ந்து அதன் உணர்ச்சிகளை நம்முள் இயக்கினால்… நமது சொல்லில் நயமும்… நமது சொல்லைக் கேட்பவரிடத்தில் இனிமையும்… நமது சொல்லை ஏற்றுக் கொள்வோரிடத்தில் மகிழ்ச்சியும் வருகின்றது.

அருள் வழியில் நீங்கள் முழுமையாக யாராவது தயாரானால் தான் நல்லது

அருள் வழியில் நீங்கள் முழுமையாக யாராவது தயாரானால் தான் நல்லது

 

முந்தைய காலங்களில் யாம் கொடுக்கும் உபதேசத்தையெல்லாம் யாரும் எட்டிப் பிடிப்பது என்றால் கஷ்டம். எக்ஸ்பிரஸ் மாதிரி ஓடிக் கொண்டேயிருக்கும்…. யாரும் அர்த்தம் காண முடியாது.

ஆனால் இப்பொழுது எல்லோருக்கும் அர்த்தம் புரியும் அளவிற்குத் தான் உபதேசித்துக் கொண்டு வருகின்றேன்.

காரணம் ஆரம்பத்தில் சில ரகசியங்களை எல்லாம் சொல்வேன்.

மந்திரவாதிகள் அதை எல்லாம் திருடி எடுத்துக் கொள்வார்கள் என்பதற்காகப் பட்டும் படாதபடி அவர்களுக்குப் புரியாமல் இருப்பதற்காகக் கட…கட… என்று உருட்டிக் கொண்டு செல்வேன்.
1.இப்பொழுது அது எல்லாம் இல்லை.
2.உலகம் மிகவும் மோசமான நிலையில் இருள் சூழும் நிலைகளாகச் சென்று கொண்டிருப்பதால்
3.எல்லோருக்கும் இதைக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்குத்தான் பவரைக் கொடுக்கின்றேன்.

இதைச் சிதற விட்டு விடாதீர்கள்.

1.இந்த உபதேசத்தைக் கேட்டவர்கள் நீங்கள் தயாரானால் போதும்.
2.உலகையும் காக்கலாம் ஊரையும் காக்கலாம் வீட்டையும் காக்கலாம்.

முறைப்படுத்திப் பக்குவப்படுத்திக் கொண்டால் போதும். சிரமப்பட வேண்டியதில்லை… சிரமமான நிலையில் இருந்து விடுபடுவதற்குத் தான் உணர்த்துகின்றேன்.

நான் சிரமப்பட்டேன்… தெளிந்தேன்…! நீங்கள் அதைப் பெற வேண்டும் என்று தான் உபதேசிக்கின்றேன்.
1.இதிலே நீங்கள் முழுமையாக யாராவது தயாரானால் தான் நல்லது.
2.அரையும் குறையுமாக விட்டு விட்டுச் செல்லக்கூடாது.

விஷ உலகமாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில் காற்று மண்டலமும் நச்சுத்தன்மை ஆகிக் கொண்டுள்ளது. கடவுளின் அவதாரத்தில் வராகன் சாக்கடையில் உள்ள நாற்றத்தை எப்படிப் பிளந்து நல்ல உணர்வை நுகர்ந்ததோ இதைப் போல அந்த நச்சுத்தன்மைகளை எல்லாம் நீக்கிவிட்டுத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெருக்கி உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைவதே கடைசி நிலை.

இந்தச் சூரியன் அப்படியே இருக்கப் போவதில்லை. அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் இருக்கக்கூடிய இந்தப் பூமியும் எந்த நிமிடத்திலும் தலைகீழாக மாறிவிடும்.

அணுகுண்டுகள் வெடித்தாலே போதும். எந்தப் பகுதியில் இதைச் செயல்படுத்துகின்றார்களோ சரமாரியாக அவைகள் வெடித்தால் சூரியனை ஒளிக் கதிர்கள் அங்கே தடுக்கப்படுகின்றது. வெயில் படவில்லை என்றால் பனிப்பாறைகளாகி அந்த இடத்தில் பூமி உறைந்து விடும்… தலை குப்புறக் கவிழ்ந்து விடும்.

ஆரம்பத்திலே துருவத்தின் வழி பூமி சக்திகளைக் கவரப்படும் பொழுது முட்டை வடிவில் வளர்ந்தது. அப்போது அது திரும்பும் நிலை வந்தது.
1.அந்தச் சந்தர்ப்பத்தில் தான் அகஸ்தியன் இந்தப் பூமியை லேசாகத் திருப்பி வைத்தான்… பூமி சமமானது.
2.இதுவரையிலும் இந்த வண்டி ஓடிக் கொண்டுள்ளது.

ஆனால் விஞ்ஞான அறிவு இன்று சென்று கொண்டிருக்கும் நிலையில் பூமி எங்கே போகும்…? எப்படி ஆகும்…? என்று சொல்ல முடியாது. அத்தகைய நிலை இருக்கின்றது… குறுகிய காலமே இருக்கின்றது.

எங்கே பார்த்தாலும் தீவிரவாதம்…! இந்த உணர்வு நமக்குள் பதிவானால் காற்றலைகளில் அது இருக்கிறது. நாம் மீண்டும் எண்ணினால் நம் உடலுக்குள்ளும் அது தீவிரவாதமாக வருகிறது… அறியாமலே பகைமை…! உடலுக்குள் தீமையாக வருகின்றது.

இதிலிருந்தெல்லாம் நீங்கள் விடுபட வேண்டும்.
1.எப்படியும் கொஞ்சம் பேராவது முந்திக் கொண்டீர்கள் என்றால் மற்றவர்களுக்கும் நன்மை செய்ய முடியும்.
2.நான் ஒருவன் பெற்றால் போதுமா…? நீங்கள் எல்லோரும் தயாராக வேண்டும் அல்லவா…!

ஆனால் இன்னும் ஒன்றாம் வகுப்பிலே இருந்தது போன்று… அருள் வழியில் பெற்ற அனுபவங்களை ஒவ்வொருவரையும் சொல்லச் சொன்னால் எதை எதையோ சொல்கின்றார்கள். தான் பெற்ற அனுபவங்களைச் சரியாகச் சொல்ல முடியவில்லை.

உங்கள் அனுபவங்களை ஏன் கேட்கிறோம்…? என்றால்
1.நீங்கள் கற்றுக் கொண்ட உணர்வு மற்றவர்களும் அதன் வழி கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்குத்தான்.
2.அதைத் தெளிவாகச் சொன்னால் போதும்.
3.100 பேர் இது போன்று 100 விதமான கருத்துக்களை அனுபவங்களைச் சொன்னால் 100 விதமான உணர்வுகள் அங்கே வருகின்றது.
4.மற்றவர்கள் அதைத் தெரிந்து கொள்ள உபயோகமாக இருக்கும் என்று சொல்கின்றோம்.

யாம் சிரமப்பட்டுத் தெரிந்து கொண்டு வந்தோம். அதை எல்லாம் நான் உங்களுக்குச் சொல்லிக் கொடுப்பதற்கு முன் விரயம் ஆகி விடுகின்றது. ஒரு சிலர் அனுபவங்களுக்குப் பதில் கதையைச் சொல்கின்றார்கள்.

ஆகவே எந்தெந்த நேரங்களில் எதை எதைச் செய்ய வேண்டும்…? எப்போது அதைக் கேட்க வேண்டும்…? என்ற பொறுப்புணர்ந்து
1.குருவிடம் எப்படிப் பேச வேண்டும்…?
2.குரு வழியில் நாம் எப்படிச் செல்ல வேண்டும்…?
3.குரு வழியினை எப்படிப் பின்பற்ற வேண்டும்…? என்று நீங்கள் பக்குவப்பட வேண்டும்.

உங்களுக்குச் சக்தி கொடுக்கிறோம் என்றால் அதைப் பயன்படுத்திய நிலையில் அடுத்து அதை வளர்ச்சியின் பாதைக்கு எப்படிக் கொண்டு செல்ல வேண்டும்…? என்று எம்மிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

அதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சாமியிடம் எப்படிக் கேட்பது…? என்று எண்ண வேண்டியதில்லை. “அதையெல்லாம் தெரிந்து கொள்ளக்கூடிய சக்தியை நீங்கள் பெற வேண்டும்…”

அதற்குத்தான் இதை உணர்த்துகின்றோம்.
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் வளர்த்துக் கொண்டால் ஆயிரம் பேருடைய தீமைகளை நீங்கள் போக்க முடியும்.
2.உங்கள் அரவணைப்பில் ஆயிரம் பேரைக் காக்க முடியும்.

ஆகவே பழமையை எண்ணாதபடி எதிர்காலத்தில் இதைப் போன்ற ஆக்கபூர்வமான செயல்களைச் செயல்படுத்த வேண்டும் என்ற உங்கள் ஆர்வத்தைக் காட்டுங்கள்.

துருவ நட்சத்திரத்திற்குச் சென்று பழகும் நிலை

துருவ நட்சத்திரத்திற்குச் சென்று பழகும் நிலை

 

பரிணாம வளர்ச்சியடைந்து மனிதனாக இன்று நாம் வந்திருக்கிறோம். இனி நாம் எப்படி இருக்க வேண்டும்…? என்பதை அறிதல் வேண்டும்.

1.அகஸ்தியனும் பரிணாம வளர்ச்சியில் வந்தவன் தான்.
2.அகஸ்தியன் கதிரியக்கங்களை தனக்குள் நுகர்ந்து உடல் பெறும் உணர்வை மாற்றி உயிரைப் போல உணர்வின் அணுக்களை மாற்றி
3.ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக இன்றும் நிலை கொண்டிருப்பவன்.
4.மனிதனில் அவன் வளர்ச்சி பெற்றவன்.

அவ்வாறு ஆன அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் ஒவ்வொரு நேரத்திலும்… அதாவது வெறுப்போ வேதனையோ சலிப்போ பகைமையோ இதைப் போன்ற உணர்வுகள் வரும் போதெல்லாம் அந்தத் தவறின் உணர்வுகள் இயங்குவதைத் தடுத்து அதனை அடக்க வேண்டும்.

காரம் புளிப்பு உப்பு என்று தனித்தனித் தன்மையாக இருக்கும்போது அந்தந்த உணர்ச்சிகளை அது ஊட்டுகின்றது, அதனதன் வழியில் செயலாக்குகிறது. இவை அனைத்தையும் மனிதனின் ஆறாவது அறிவு ஒன்றாகச் சேர்த்து கலவையாக்கிச் சுவையான உணவாக்கி அதை உட்கொள்கின்றோம்.

அப்படிப்பட்ட அந்தச் சுவையாக மாற்றும் தன்மையை நம் வாழ்க்கையில் நாம் பெறுதல் வேண்டும்.

நாம் நமது வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் பகைமை உணர்வு வருகின்றதோ அதை அடக்க உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பதிவு செய்கின்றோம்.

1.துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை யாம் பதிவு செய்ததை அதன் நினைவு கொண்டு நீங்கள் எடுக்க வேண்டும்.
2.நினைவு கொண்டு எடுத்தால் உங்களைக் காக்க… அந்த உங்கள் எண்ணம் உதவும்.

திட்டியவனின் உணர்வை நுகர்ந்தபின் அந்த உணர்ச்சியின் எண்ணங்கள் வருகின்றது. அதன் வழி எண்ணும் பொழுது அவனை வெறுக்கும் தன்மை, வருகின்றது.

அந்த வெறுக்கும் தன்மை உங்களுக்குள் வரும் பொழுது ஒரு நல்ல காரியத்தைச் செய்ய முடியாதபடி அது தடையாக வருகிறது.

இத்தகைய தடைகள் வருவதைத் தடுப்பதற்கும் அந்த உணர்வின் தன்மையை அடக்குவதற்கும் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இப்பொழுது உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்வது.

அப்பொழுது இந்த உணர்வை எடுத்தால் அந்தத் தீமைகளை மாற்றி அமைக்க முடியும்.

என்னுடைய ஜெபமே என்னுடைய தியானமே யார் யார் இதைக் கேட்டறிந்தனரோ
1.அவர்கள் எண்ணும் பொழுதெல்லாம்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள்
2.அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று உணர்வின் வலுவை ஊட்டிக் கொண்டிருக்கின்றேன்.
3.இதை நீங்கள் எடுத்து வளர்ந்தால் தான் நாட்டுக்கும் நல்லது… நம் அனைவருக்கும் நல்லது.

ஏனென்றால் நாளை வரும் எதிர்காலம் மிகவும் விஷத்தன்மையாக மாறும் பொழுது அதைக் கழித்து வடித்து… நாம் இந்த உடலில் வளர்ச்சியான நிலைகள் கொண்டு… எந்த நிமிடம் அது நடந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நாம் சென்று விடலாம்.

இல்லையென்றால் இந்தப் பூமியில் மாற்றங்கள் துரித நிலைகள் ஆகிப் பூமி கொஞ்சம் நகர்ந்தால் ஐஸ் பாறையாக மாறிவிடும். அந்த ஐஸ் பாறையாக மாறியபின் விஞ்ஞான அறிவில் உள்ளவர்களும் சிலர் தப்பலாம்.

ஆனாலும் இங்கே அசுத்தமான நிலைகள் பனிப்பாறைகள் மூடி உள்ளுக்குள் சென்று விட்டால் யார் காப்பாற்றுவது…? அந்த நிலைகள் சீக்கிரம் வரத்தான் செய்யும்.

அதற்குள் நாம் என்ன செய்ய வேண்டும்…?

1.பூமியை விட்டுத் தப்பிச் சென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்கி
2.நாமும் உடலை விட்டுச் செல்லும் பொழுது (துருவ நட்சத்திரம் சென்று பழகும் தன்மை வர வேண்டும்.

இன்றைய உலக சூழ்நிலையில் எந்த நிலையானாலு சரி இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல. உயிருடன் ஒன்றிடும் உணர்வை ஒளியாக மாற்றும் தன்மை பெற வேண்டும்,

அதற்குத்தான் இந்த உபதேசமே…!

நான் சொத்தைச் சம்பாரிக்க வேண்டும்… இதைச் செய்தேன் என் பிள்ளை இப்படி இருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருந்தால் அந்தப் பிள்ளையின் தவறின் உணர்வை நாம் வளர்த்தால் தவறின் உணர்வுகள்தான் நமக்குள் விளைகின்றது.

அவன் செய்யும் தவறின் தன்மை வீரியத்தன்மை பெற்றது, இப்படிச் செய்கிறான் என்று, பாசத்தால் நுகரப்படும்போது இங்கே நல்ல குணங்கள் அனைத்தையும் வீழ்த்தி விடுகின்றது.

நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எடுத்து “அவன் உணர்வு நம்மை இயக்கிடாது…”
1.அவனுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும்
2.அவனுக்குள் நல்ல உணர்வுகள் வர வேண்டும்; அவன் சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும் என்று
3.அவன் உடலிலே இந்த உணர்வின் தன்மையைப் பாய்ச்சி அவனை மாற்றி அமைக்க வேண்டும்.

சிந்தித்துப் பாருங்கள்… பிற தீமைகளின் உணர்வுகள் நம்மை இயக்கிவிடக் கூடாது. ஏனென்றால் உங்களைப் பக்குவப்படுத்துவதற்காகத் தான் யாம் இதைச் சொல்வது.

ஆகவே
1.நமக்குள் இதைப் பேணிக்காக்கும் திறன் வர வேண்டும்.
2.அந்தப் பேணிக் காக்கும் திறன் இருக்கும் போது தான் ஞானிகள் மற்றவர்களுக்கு இதைக் கொடுப்பார்கள்.

அவ்வாறு இந்த அருள் உணர்வுகளை நீங்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் வளர்த்து… அதைப் பேணிக் காக்கும் திறன் பெற்றிட எமது அருளும் குரு அருளும் உறுதுணையாக இருக்கும்.

ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்த வேண்டும்

ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்த வேண்டும்

 

நாம் எத்தனையோ பேருக்கு உதவி செய்கின்றோம். ஒரு சந்தர்ப்பத்தில் ரோட்டில் நாம் சென்று கொண்டிருக்கின்றோம். நம்மிடம் நல்ல உதவிகளைப் பெற்றவர் அங்கே செல்கின்றார்… பார்க்கின்றோம். அதே சமயத்தில் அவர் அவசரமாகப் போகின்றார்.

நாம் அவர் பெயரைச் சொல்லி “இங்கே வாப்பா…” என்று கூப்பிடுகின்றோம். இருங்கள்… கொஞ்சம் நான் வந்து விடுகிறேன்…! என்று அவர் சொல்கின்றார்.

1.பார்…! அன்று காசு வாங்குவதற்கு நம்மைத் துரத்தி துரத்தி வந்து வாங்கிச் சென்றான்.
2.இன்று நாம் கூப்பிடுகின்றோம் வரமாட்டேன் என்கிறான்.
3.காசு வாங்குவதற்காக அன்றைக்கு என்னை மதித்தான்.
4.இப்பொழுது கூப்பிடுகிறேன்… அவன் ஓடுகின்றான்…! என்று நாம் சொல்வோம்.

ஆனால் அவருடைய சூழ்நிலை எது…? ஒரு முக்கியமான காரியத்திற்கு இரயிலுக்குச் செல்பவர்கள் அதற்குண்டான டிக்கெட்டை மறந்து வைத்துவிட்டுப் போய் விட்டார்கள். அதை எடுத்துக் கொண்டு அந்த நேரத்திற்குள் கொண்டு போய்க் கொடுத்தால் தான் செல்ல முடியும்.

வண்டியில் ஏறிய பின் அங்கே அந்த டிக்கெட் இல்லை என்றால் அவர்கள் முழிப்பார்கள். ஆகையினால் வண்டி கிளம்புவதற்கு முன் அதைக் கொடுக்க வேண்டும் என்று அவசரமாகச் செல்கிறார்.

ஆனால் நாம் என்ன நினைக்கிறோம்…? கூப்பிட்டதற்கு மரியாதை செலுத்தாமல் செல்கின்றான் பார்…! என்ற இந்த உணர்வு தான் மனிதனுடைய வாழ்க்கையில் தூண்டுகிறது.

ஒரு தடவை நாம் உதவி செய்தால்…
1.இரண்டாவது அவரை நாம் கூப்பிடும் பொழுது வரவில்லை என்றால் உடனே அவர் மேல் பகைமை ஆக்கிக் கொள்கின்றோம்.
2.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இது மாதிரி நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
3.எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால் உடனடியாக அங்கே பகைமை ஆக்கி விடுகின்றோம்.

இதற்குக் காரனம் என்ன…?

நாம் நுகர்ந்த உணர்வு தான் நம்மை அப்படி இயக்குகிறதே தவிர “நம் ஆறாவது அறிவை அங்கே சரியாகப் பயன்படுத்தவில்லை…” என்று தான் பொருள்.

அதை எப்படிச் சீராகப் பயன்படுத்த வேண்டும்…? என்பதற்குத்தான் ஞானிகள் எத்தனையோ காவியப் படைப்புகளைக் கொடுத்துள்ளார்கள்.

இச்சா சக்தி… கிரியா சக்தி… ஞான சக்தி…!
1.தீமையை நீக்கிய அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இச்சைப்பட்டால்
2.உயிரிலே பட்டுக் கிரியை ஆகி
3.அந்த ஞானத்தின் வழி நம் உடலை அது இயக்கும்.

சிவனுக்கே ஓதினான் ஓம் என்ற பிரணவத்தை…! இந்த உடலிலே பிறந்தது தான் ஆறாவது அறிவு கார்த்திகேயா… சிவத்திற்குள் விளைந்தது தான். ஆனால் வேதனை என்ற உணர்வை நுகர்ந்த பின் அந்த உணர்ச்சிகள் பிரணவமாகி அதுவே நம்மை இயக்குகின்றது.

ஆறாவது அறிவு படைத்தவன்…
1.“இது நமக்குத் தீங்காகும் இருள் சூழ்ந்த நிலையாகும் வேதன என்ற நிலையாகும்” என்று தெரியக்கூடிய நிலையான கார்த்திகேயா
2.இந்த உடலில் விளைந்த அந்த உணர்வுகள்… இந்த உடலுக்குத் தீங்கு வராது பாதுகாக்கச் செயல்படுகின்றது.

தீமையை நீக்கிய அருள் மகரிஷிகள் உணர்வைப் பெற வேண்டும் என்று இச்சைப்பட்டால் அதை நுகர்ந்தால் நம் உயிரிலே பட்டுக் கிரியை ஆகின்றது. அதன் வழி நம் எண்ணம் சொல் செயலாகி தீமையை நீக்கி வாழ்க்கை ஒழுங்குபடுத்த இது உதவும்.

ஆகவே ஒவ்வொரு நிமிடமும் ஞானிகள் காட்டிய அருள் வழியில் அந்த அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று நாம் இச்சைப்பட வேண்டும். இது ஒரு பழக்கத்திற்கு வந்தால் உயிரிலே பட்டுக் கிரியை ஆகி
1.நாம் சிந்தனை இழந்து இருந்தாலும் சிந்திக்கும் ஆற்றலைக் கொடுத்து அதன் வழி செயல்படும் சக்தி கிடைக்கும்.
2.குறைகள் கூறுவதை விட்டுவிடலாம்… மன நிறைவு என்றுமே நமக்குள் வளரத் தொடங்கும்.

உயர்ந்த சக்தியை உங்களுக்குக் கொடுத்திருக்கின்றேன்… கொடுக்கின்றேன்.
1.யாருமே செய்யாததை உங்களுக்குச் செய்து கொடுத்துள்ளோம்.
2.எப்பொழுது வேண்டுமென்றாலும் அந்தச் சக்தியை நீங்கள் எண்ணி எடுக்கலாம்… தீமைகளைப் போக்கலாம்.

நாம் அனைவரும் மெய் உலகைப் படைக்கும் சக்தியாக ஒருங்கிணைந்து செயல்படுவோம்

நாம் அனைவரும் மெய் உலகைப் படைக்கும் சக்தியாக ஒருங்கிணைந்து செயல்படுவோம்

 

ஞானத்தின் வழித்தொடரை நமக்குள் விளைய வைத்துக் கொண்ட பின் இந்த உடலை விட்டு அகன்றால்
1.பேரண்டத்தில் எத்தகைய கடும் நஞ்சாக இருப்பினும்
2.அது தன்னை அணுகாது அதை அடக்கிடும் நிலைகள் கொண்டு ஒளியின் சரீரமாக மாற்றிடும் நிலைகள் வருகின்றது.

அப்படி ஆனவர்கள்தான் இன்று எதனையும் பிளந்திடும் நிலைகள் பெற்றவர்கள் சப்தரிஷிகள். இந்தப் பூமியின் தொடர் கொண்டு வாழுகின்றார்கள்.

இந்தப் பிரபஞ்சம் செயலிழந்தாலும் இவர்கள் தனி மண்டலமாக இயக்கப்பட்டுத் தீமையற்ற உலகை அவர்களுக்குள் சிருஷ்டித்துக் கொண்டிருப்பார்கள்.

ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் ஏற்பட்ட இந்த மண்டலங்கள் வேறு வேறு விதமாக இருப்பினும்
1.உடல் பெற்ற உணர்வின் நிலைகளிலிருந்து தீமைகளைப் பிளந்த உணர்வுகள் ஒருக்கிணைந்து பெரும் மண்டலமாகத் திகழ்கின்றார்கள்.
2.இந்த அகண்ட பேரண்டத்தில் இப்பேர்ப்பட்ட மகரிஷிகளும் உண்டு.
3.மனிதனில் தெளிந்த நிலைகள் கொண்டு அது பெரும் வட்டமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்.

மனிதனின் நிலைகள் நாம் இன்று அதிலே இணைந்தால்தான் நல்லது.

பேரண்டம் முதலிலே இருண்ட நிலைகளில் இருந்தது, ஒன்றுடன் ஒன்று மோதி சுழற்சி வேகம் கொண்டு சூரியன்களாக விளைந்து நட்சத்திரங்களாக விளைந்து அதிலே தோன்றிய கோள்களாக விளைந்து உயிரணுக்களாக விளைந்தது.

உயிரணுக்கள் அதனின் நிலைகள் நுகர்ந்து நுகர்ந்து உணர்வின் தன்மை உடல் பெற்று
1.எண்ணத்தின் நிலைகள் கொண்டு இயங்கத் தொடங்கும் நிலைகள் கொண்டு
2.தன்னைக் காத்திடும் காத்திடும் நிலைகள் கொண்டு வந்தது.
3.இப்படி இந்த உயிரின் நிலைகள் உடல்களைக் காத்திடும் நிலையாக வந்தாலும்
4.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகத் தன்னைக் காத்திடும் நிலைகளில் விளைந்தவர்கள்தான் மகரிஷிகள்.

ஆகவே அது அனைத்தும் நாம் பெற முடியும்.

நமக்குள் இருக்கும் இந்தப் பாதுகாப்பு நிலையைப் பிளக்காது… அதிலே இந்த மகரிஷிகளின் உணர்வுடன் பாதுகாக்கும் அரணாக நாம் அமைத்திடல் வேண்டும்.

நமக்குள் நம் ஆறாவது அறிவை இந்த ஓசோன் திரையைக் கிழித்திடாது மற்ற தீமைகள் நமக்குள் படர்ந்திடாது
1.அருள் மகரிஷிகளின் நிலைகளை நாம் ஓசோன் திரையாக அமைத்திடல் வேண்டும்… அமைக்க முடியும்.
2.அத்தகைய நிலைகளைப் பெறச் செய்வதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி
3.விண்ணின் ஆற்றலைக் காண அந்த உணர்வைப் பெற
4.அவர் அருளியதைப் பெறும் பாக்கியத்தை நாம் அனைவரும் பெற்றுள்ளோம்.

ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும் மெய் உலகைப் படைக்கும் சக்தியாக ஒருங்கிணைந்து செயல்படுவோம். நம்மால் நிச்சயம் முடியும். எமது அருளாசிகள்…!

மற்றவர்களை நல் வழியில் வழி நடக்க “நம் சொல்” உதவ வேண்டும்

மற்றவர்களை நல் வழியில் வழி நடக்க “நம் சொல்” உதவ வேண்டும்

 

நம்முடைய குழந்தையை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்று விரும்புகின்றோம். பற்றுடன் நாம் சொன்னாலும் அவனால் ஏற்க முடியாது சந்தர்ப்பத்தால் படிப்பில் மந்தமாகின்றான்.

அப்போது நம் உணர்வு என்ன செய்கிறது…?

1.எண்ணியபடி அவன் படிக்கவில்லை என்கிற போது வேதனை உருவாகின்றது.
2.இவ்வளவு தூரம் படிக்க வைத்து இந்த மாதிரி ஆகிவிட்டது…! என்ற வேதனையை எடுத்துக் கொள்கிறோம்.

பாலிலே பாதாமை போட்டு பல சத்துக்களைப் போட்டாலும் விஷத்தைப் போட்ட பின் அதற்குச் சத்து இருக்கின்றதா…? இல்லை.

இதைப் போன்று தான் குழந்தை நல்ல முறையில் படித்து முன்னுக்கு வர வேண்டும் என்று விரும்பினாலும் அப்படி நடக்கவில்லை என்கிற பொழுது வேதனையாகி அது வளர்ந்த பின்…
1அடுத்து நல்ல முறையில் அவனை வளர்க்க முடியும் என்ற சிந்தனை வருகின்றதா…?
2.உங்கள் நல்ல எண்ணங்கள் வீணாகத் தொடங்குகிறது.
3.நம்மை அறியாமலே குழந்தையைப் பார்க்கும் பொழுதெல்லாம் வெறுப்பு.
4.குழந்தையைப் பற்றி யாராவது பேசினால் அவர்கள் மீதும் வெறுப்பு.
5.வேறொரு குழந்தை நம் குழந்தையுடன் விளையாண்டாலும் அந்தக் குழந்தை மீதும் வெறுப்பு வருகின்றது.

ஏனென்றால் இப்படிப்பட்ட உணர்வுகள் பதிவாகி வளர்ந்த பின் வெறுப்பான உணர்வு தான் அலைகளாக மாறுகின்றது. அப்பொழுது அதை மாற்ற என்ன செய்ய வேண்டும்…?

வேதனை என்று வரும் பொழுதெல்லாம்… “யாம் உங்களுக்குள் பதிவு செய்த ஞான வித்தினை எடுத்து” ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஏங்க வேண்டும்.

நாம் எடுக்கும் உணர்வுகள் உயிர் வழி சென்று தான் உடலுக்குள் செல்ல வேண்டும். அங்கே தடைப்படுத்தி விட்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் ரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும் என்று தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

1.என் குழந்தை கல்வியில் சிறந்த ஞானமும் கருத்தறிந்து செயல்படும் திறனும்
2.பொருளறிந்து செயல்படும் அந்த ஞான சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வினை உருவாக்கி
3.”அந்த உணர்வின் சொல்லாகச் சொல்லப்படும் பொழுது” அவருடைய செவிகளிலே படுகின்றது.
4.அப்பொழுது நம் சொல்லை ஈர்க்கும் தன்மை அவன் கண்ணுக்கு வருகின்றது.
5.அவன் உடலுக்கு அருகில் அந்த உணர்வலைகள் வந்த பின் மூக்கால் நுகரும் தன்மை பெறுகின்றான்
6.சுவாசித்த பின் அந்தக் குழந்தைக்கு உயிர் வழி உணர்ச்சிகளை ஊட்டும் அந்தப் பருவம் பெறுகின்றது.

இப்படித்தான் அதைத் திருத்த வேண்டும்.

இல்லை என்றால் வேதனை என்ற உணர்வாகி அவன் மீது இருக்கும் நல்ல அன்பு நம்மிடம் முதலில் மறைகின்றது. பார்க்கும் பொழுதெல்லாம் வெறுப்பு தான் வரும்.

ஆகவே இதையெல்லாம் மாற்றுவதற்குத் தான் ஆத்ம சுத்தி என்ற ஆயதத்தைக் கொடுத்துள்ளோம்.

எப்பொழுது எந்த நிமிடம் எதை எடுத்தாலும் ரேடியோ டிவி அலைவரிசைகளில் வேலை செய்து காற்றிலிருந்து எடுப்பது போன்று
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை இந்தக் காற்றில் கலந்திருப்பதை உடனடியாக எடுத்து உடல் முழுவதும் படரச் செய்தால்
2.அதைப் பிரித்து உங்கள் ஆன்மாவாக மாற்றி இந்த உணர்வின் வலு கொண்டு “அந்த உணர்வின் சொல்லாக”
3.குழந்தை இப்படித்தான் வரவேண்டும் என்று எண்ணினால் உங்கள் வழிப்படி நல்ல உணர்வு பெறுவான்,

ஆனால் இப்படி ஒரு தரம் சொல்லி அவன் கேட்கவில்லை என்றால் மறுபடியும் வேதனையை எடுத்து “என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறான்…” என்று எண்ணி விட்டால் மீண்டும் பழைய நிலைக்கு ஆகிவிடும்.

திரும்பத் திரும்ப இந்த அருள் வழியில் நாம் செயல்பட்டு இந்தக் குழந்தை இப்படித்தான் வளர வேண்டும் என்று நிர்ணயித்து அதன் உணர்வை நாம் எடுத்துக் கொண்டு
1.நீ இப்படிச் செய்தால் உனக்கு நலமாகும் என்று உணர்த்திப்
2.பல முறை அவனுக்குச் சொல்லித் திருத்தும் நிலைக்கு வர வேண்டும்.

நீங்கள் மட்டும் அல்ல உங்கள் மனைவியாக இருந்தாலும் அல்லது உங்கள் கணவனாக இருந்தாலும் இதைப் போன்று அவர்களுக்கும் இதைச் சொல்லி ஒன்று சேர்ந்த நிலையில் இந்த முறைப்படி செய்தால் கூடுமான வரையிலும்
1.முதலில் சரியாகவில்லை என்றாலும் கணவன் மனைவி இருவருமே ஒருங்கிணைந்த நிலையில் ஞானத்துடன் செயல்பட்டு
2.உங்கள் வழியில் அந்தக் குழந்தைக்கு அருள் ஞானத்தை ஊட்ட முடியும்.

நமக்கும் நல்லதாகிறது… குழந்தைக்கும் நல்லதாகிறது. குடும்பத்தைச் சீராக்கவும் இது உதவும். அருள் ஞானத்தை ஊட்டி அனைவரும் நல் வாழ்க்கையாக வாழ முடியும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை மற்றவர்களுக்கும் கிடைக்கச் செய்யும் முறை

துருவ நட்சத்திரத்தின் சக்தியை மற்றவர்களுக்கும் கிடைக்கச் செய்யும் முறை

 

வேதனைப்படுபவரை நாம் சந்தித்தால்… நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை வலுவாக்கி அந்த வேதனைப்படும் உணர்வைத் தள்ளிவிட்டு
1.அந்த வேதனைப்படுபவர்களுக்கு நல்லதாக வேண்டும் என்ற உணர்வைக் கலந்து எடுத்துச் சொன்னால் இந்த உணர்வு வீரியமடைந்து
2.அவருடைய செவிகளில் பட்டு காது வழி உணர்ச்சிகளைத் தூண்டி மூக்கு வழி நுகர்ந்து
3.இந்த உணர்வு உயிரிலே பட்டு உமிழ் நீராக மாறி அவருடைய நோயைக் குறைக்க உதவும்.

இதை அவர்கள் பின்பற்றினால் வளர முடியும்.

குருநாதர் காட்டிய வழியில் யாம் உங்களை ஆசிர்வதிக்கும் பொழுது உடனடியாக நோய் இறங்குகின்றது. அந்த அருள் சக்திகளை நீங்கள் கவர்ந்து உங்களுக்குள் வலுவாக்கிக் கொண்டால் தீமை வராது தடுத்துக் கொள்ள முடியும். நமக்கு அந்தச் சக்தி உண்டு.

1.ஆகவே வேதனப்படுவோரிடம் துருவ நட்சத்திரத்தினைப் பற்றிச் சொல்லி…
2.அந்தச் சக்திகளை அவர்களுக்குப் பாய்ச்சப்படும் போது அதைப் பெற்றுத் தீமைகளை அவரும் போக்க முடியும்.

அதற்குத் தான் கூட்டுத் தியானங்களை அமைத்துக் கொடுத்துள்ளோம்.

ஒருவருக்கு மன நோயோ அல்லது கடுமையான உடல் நோயோ இருந்தால் கூட்டுத் தியானங்களில் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்கள் ரத்த நாளங்களில் கலந்து… உடல் முழுவதும் பரவி… உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற
1.இந்த உணர்வின் ஒலியை எழுப்பி செவி வழி இந்த உணர்வுகளைத் தூண்டச் செய்யும் போது
2.அதைப் பெற வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டால் அதை நுகர்ந்து உயிரிலே பட்டு
3.உணர்வுகள் உமிழ் நீராக மாறி உடலுக்குள் சேர்ந்து நல்ல அமிலங்களாக மாற்றப்பட்டு
4.அவர் உடலில் இருக்கக்கூடிய நோயை நீக்க இது உதவும்.

அவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்…! நாம் வெறுமனே சொன்னால் பொருள் இல்லை.

யாம் மற்றவருக்கு ஆசீர்வாதம் கொடுக்கும் போது பாருங்கள். கேட்டுக் கொண்டிருப்பவர்கள் ஒரு சிலர் வேறு எண்ணத்தில் இருப்பார்கள்.
1.இப்போது உடலில் மின்சாரம் பாய்வது போல் இருக்கின்றதா…? என்று கேட்டால்
2.இல்லை…! என்று சொல்லிவிடுவார்… ஒன்றுமே தெரியவில்லை தெரியவில்லை என்று சொல்வார்கள்.

காரணம்… ஆசையின் நோக்கம் வேறு…! அதைக் கேட்கும் நிலை வேறு…!

ஆகவே இது போன்ற நிலைகளை விடுத்து விட்டு… சொல்லும் போது (காதிலே கேட்கும் போது) அந்த அருள் சக்திகளை எடுக்கப் பழகும் “ஒரு பயிற்சிக்கு வர வேண்டும்….”

1.நோயால் வேதனைப்பட்டு அவர் சொல்லும் போது நாம் அதைக் கேட்டால்
2.அவருடைய வேதனை நம் உடலுக்குள் வருகின்றது… அதனின் வலிமை நமக்குள் செயல்படுகிறது,

இதைப் போன்று தான் வேதனைகளை நீக்கிய ஞானிகள் உணர்வை நாம் பெற்று… அதைச் சொல்லாக சொல்லி அவரைக் கேட்க வைத்தால் அந்த நோயை நம்மால் போக்க முடியும்.

தியானத்தைக் கடைபிடிப்போர்கள் இதைச் சீராகக் கடைப்பிடித்துச் செயலாக்கத்திற்குக் கொண்டு வர முடியும்.

தீமை செய்யும் நிலைகள் எதுவாக இருந்தாலும்… அதனுடன் நேரடியாக நாம் மோதக் கூடாது

தீமை செய்யும் நிலைகள் எதுவாக இருந்தாலும்… அதனுடன் நேரடியாக நாம் மோதக் கூடாது

 

இந்த உலகில் யாரையெல்லாம் நாம் சந்தித்திருந்தாலும்… அவர்கள் உணர்வை எதன் வழி நுகர்ந்திருந்தாலும்… நுகர்ந்த உணர்வை நமது உயிர் அணுவாக மாற்றி உடலுக்குள் இணைத்து விடுகின்றது.

அனைவரது உணர்வுகளும் நமக்குள் இப்படி வரப்படும் பொழுது
1.அதிலே இருக்கும் தீமைகளிலிருந்து விடுபட…
2.நமக்குள் அறியாது விளையும் அத்தகைய அணுக்களை வலு இழக்கச் செய்ய…
3.அருள் மகரிஷிகள் உணர்வு கொண்டு இருளை அகற்றிடும் சக்தியாக… அந்த வாலியை வென்றிட வேண்டும்.

ஒரு நோயாளியின் உணர்வை நாம் அடிக்கடி பதிவாக்கிக் கொண்டால் அல்லது ஒருவன் நமக்குத் தீங்கு செய்கின்றான் என்று அவனை அடிக்கடி நினைவுக்குக் கொண்டு வந்தால் அது வாலியாகிறது.

இராமன் வாலியை மறைந்திருந்து தான் தாக்குகின்றான் என்று காட்டியுள்ளார்கள்.
1.பிறருடைய எண்ணங்களை நாம் நேரடியாக எண்ணப்படும் பொழுது அந்த உணர்வுகள் வருகின்றது.
2.அவ்வாறு வரும் போதெல்லாம்… கஷ்டமோ… தொழிலிலே நஷ்டமோ வந்தால் அல்லது உடலிலே நோயோ வந்தால்
3.அது நமக்குள் வராது மாற்றி அமைக்க அடுத்த கணமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
4.இருளை அகற்றிய அந்த அருள் ஒளியின் உணர்வை நுகர்ந்து நம் உடலுக்குள் சேர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

காரணம் இராமன் வாலியை நேரடியாகப் பார்க்கவில்லை. மறைந்திருந்தே தாக்கினான். இந்த வழியினை நமக்குள் எடுத்து அருள் உணர்வினை நமக்குள் சேர்த்து அதாவது
1.தீமை செய்யும் உணர்வுகளுடன் நாம் மோதிக் கொண்டே இருக்காமல்
2.நஞ்சான வாலியைச் செயலிழக்கச் செய்ய வேண்டும்.

நாம் எடுக்கும் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள் உயிரிலே பட்டபின் உணர்வின் ஒளியாக எண்ணங்கள் நமக்குள் வருவதும் இந்த உணர்ச்சிகள் உடலை இயக்குவதும் என்ற நிலைகள் கொண்டு… மகரிஷிகளின் உணர்வை எதனுடன் கலக்கச் செய்கின்றோமோ அதுவாக மாற்றுகின்றது.

உதாரணமாக… சாயங்களை எடுத்துக் கொண்டாலும் பல கலவைகள் உருவாக்கப்படும் பொழுது அதனதன் சக்தியை இழக்கின்றது. எதனின் உணர்வு மாறுகின்றதோ அதற்குத் தக்க நிறங்கள் மாறுகின்றது.

இதைப் போன்று தான்
1.நமக்குள் பலருடைய எண்ணங்களும் குவிந்திருப்பினும்
2.அந்த எண்ணங்களை உருவாக்கும் அணுக்கள் அத்தகைய இயக்கங்களை உடலில் செய்து கொண்டிருந்தாலும்
3.அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் எடுத்து அனைவரும் அதைப் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினைக் கலந்து விட்டால்
4.நமக்குள் இருக்கும் தீமை செய்யும் அணுக்கள் பலவீனம் அடைகின்றது… வாலி என்ற நிலை வலு இழக்கப்படுகின்றது.

இதைத் தான் இராமன் வாலியை மறைந்திருந்து விழ்த்தினான் என்று காட்டினார்கள். இராமாயணக் காவியத்திலே இராமனைக் கடவுள் என்று சித்தரித்தாலும் “அவன் ஏன் மறைந்திருந்து தாக்க வேண்டும்…?” என்று இப்படியும் வாதம் செய்வார்கள்.

ஏனென்றால்
1.தீமையான உணர்வை நேரடியாகக் காணும் பொழுது அந்த உணர்ச்சிகள் நம்மைத் தூண்டுகின்றது.
2.ஆனால் அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்வை எடுக்கப்படும் பொழுது அதை மறைத்துவிடுகிறது…
3.அதனின் செயலாக்கங்களைக் குறைத்து விடுகின்றது.

காவியத் தொகுப்பின் மூலம் மனித வாழ்க்கையில் எண்ணங்கள் எப்படி உருவாகிறது…? எது வலிமை பெறுகின்றது…? எதன் வலிமையில் மனிதன் இயங்குகின்றான்…? மனிதன் என்ற நிலையில் அது எந்த வலிமை கொண்டு அவனை மாற்றுகின்றது…? என்று தான் நமக்குக் காட்டினார்கள்.

இத்தகைய பேருண்மையை உணர்த்தப்படும் நிலை தான் கார்த்திகை தீபம்… அண்ணாமலையார் தீபம்…!

1.ஒவ்வொரு நொடிப் பொழுதும் நம் உடலின் உச்சியிலே… நம் உயிரிலே…
2.அருள் உணர்வினை ஏற்றி வைக்க வேண்டும்… அதை இயக்கச் சக்தியாக மாற்ற வேண்டும்.