
கணவன் மனைவி என்ற நிலை இல்லாது ரிஷித் தன்மை அடைய முடியாது
பூரண நிலவாக இருக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நாம் பெறுதல் வேண்டும்.
1.ஏனென்றால் அதிலே எதுவும் இருள் சூழாது… எதுவும் அதை அடக்கிட முடியாது.
2.எத்தகைய விஷத்தன்மை வந்தாலும் அது ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டே இருக்கும்.
அதன் அரவணைப்பில் வந்த ஆறாவது அறிவை ஏழாவது நிலை பெற்ற சப்தரிஷி மண்டலம்… அதைக் கவர்ந்து உணவாக எடுத்து என்றும் பதினாறாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.
மனிதன் ஆன பின் கடைசி நிலை பூரண நிலா என்ற நிலைகள் கொண்டு பூரண ஒளிச்சுடராக மாறுவது என்பது… மனிதன் எண்ணத்தால் கவர்ந்து உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிடும் நிலை. அந்த நிலையை நாம் பெறுதல் வேண்டும்… அனைவரும் அதைப் பெற முடியும்…!
அகண்ட அண்டத்தில் எல்லையே இல்லாத இடத்தில் விரிவடைந்த நிலையில் ஏகாந்த நிலைகள் கொண்டு எதனையும் அடக்கி உணர்வினை மகிழ்ந்து செயல்படும் நிலையாக நாம் பெற முடியும்.
அது தான் ஏகாதசி என்பது. ஏகாந்த நிலைகள் கொண்டு பத்தாவது நிலை என்ற ஒளியின் உணர்வாக நிலையான சரீரமாக நாம் இருக்க முடியும்.
அன்று வாழ்ந்த அகஸ்தியனும் அவர் மனைவியும் போன்று நாமும் வாழ முடியும். அகஸ்தியன் தான் பெற்ற சக்தி எல்லாம் தன் மனைவிக்குக் கொடுப்பதும்… மனைவி அதனை ஏற்று கணவன் வழி நடப்பதும்… கணவனால் பெற்ற சக்தி மீண்டும் தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுவதும்… கணவன் மேலும் உயர வேண்டும் என்று அது ஏங்குகின்றது.
1.எங்கள் இரு மனமும் ஒன்ற வேண்டும்… அந்த உணர்வின் ஒளியை உருவாக்க வேண்டும் என்று இருவருமே இணைந்த நிலையில் செயல்பட்டார்கள்.
2.ஏனென்றால் ஆண் பெண் என்ற நிலைகள் இணைந்தவன் அவன் (ஆகஸ்தியன்). அது இல்லை என்றால் எதுவும் உருப்பெறாது என்ற உண்மையை உணர்ந்தவன்.
கல்லானாலும் தாவர இனங்கள் ஆனாலும் ஆண் நட்சத்திரத்தின் இயக்கமும் பெண் நட்சத்திரத்தின் இயக்கமும் இணைந்தால் தான் உருப் பெற முடியும் என்று இதையெல்லாம் அகஸ்தியன் உணர்ந்தவன்.
1.கணவன் மனைவியும் இரண்டறக் கலக்க வேண்டும்… பேரொளியைத் தனக்குள் பெற வேண்டும் என்று
2.27 நட்சத்திரங்களின் மின்னலின் சக்தியைத் தனக்குள் கூட்டி
3.மின்னல் தாக்கப்படும் பொழுது எப்படி இருள்கள் மாய்கின்றதோ ஒளியின் மின் அணுக்களாகப் பரவுகின்றதோ இதைப் போல
4.உடலின் உணர்வுகள் அனைத்தையும் அவன் தனக்கும் தன் மனைவிக்கும் சேர்த்து
5.இந்த உணர்வினை ஒன்றாக இணைத்து “மின்னணுக்களாக உடலில் உள்ள அணுக்களை மாற்றிடும் சக்தி பெற்றான்…”
6.துருவத்தை உற்று நோக்கித் தனக்குள் அந்த உணர்வுகளை நுகர்ந்து
7.மின் அணுக்களைத் தனக்குள் மாற்றி துருவ மகரிஷி ஆனான். தனக்குள் சிருஷ்டித்துக் கொண்டான்.
ஆனால் கணவன் மனைவி ஒன்று சேராது தனித்த நிலையில் கடும் தவம் இருந்து சக்தி பெறுவேன் என்றால் முனி என்ற நிலையைத் தான் அடைய முடியும்… மனைவி என்ற நிலை இல்லாது ரிஷி என்ற நிலைக்கு வர முடியாது.
திருமணமாகாத பெண்களும் கடும் தவம் இருக்கிறேன் என்று சொன்னால் உருப் பெறும் தன்மையைக் கருவாக உருவாக்க முடியாது.
1.கணவன் மனைவி எவர் ஒருவர் ஒன்று சேர்ந்து இந்த அருள் உணர்வுகளைப் பெருக்குகிறார்களோ
2.அவர்களே ஒளித் தன்மையாக உருவாக்க முடியும்.
உயிர் எப்படி உருவானதோ… அதே போல தன் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தையும் உயிரைப் போன்றே உணர்வின் ஒளியாக அது மடியாது… தனக்குள் ஒளியாக மாற்றிடும் தன்மை பெற முடியும்.
அந்த நிலையை நாம் ஒவ்வொருவரும் பெறுதல் வேண்டும்.








