
கடவுளின் பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்கள்
யாம் குருநாதர் உரைத்த வண்ணம் ஒரு கிராமத்துப் பக்கம் வந்து கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் ஒரு நான்கு முனை சந்திப்புள்ள இடத்தில் உள்ள கடையில் என்னை அமரும்படிச் செய்தார் குருநாதர்.
அப்பொழுது அந்த இடத்திற்கு ஒரு கார் வந்து நின்றது. அந்தக் காரில் ஆறேழு பேர் சாமியார் வேடம் பூண்டு மிகவும் அற்புதமாக இருந்தனர்.
அவர்கள் காரை நிறுத்திவிட்டு யாம் இருந்த கடைக்கு வந்து கடையில் இருப்பவரிடம் “டீ கொடுங்கள்…” என்றனர்.
ஆனால் டீ போடும் ஆளுக்குக் காது கேட்கவில்லை. அவர்கள், “அட.. தம்பி…. இங்கு… வா…” என்றனர். இப்படி இரண்டு முறை கூப்பிட்டும் கேட்காததால் ஜாடையில் காண்பித்து வரச் சொல்லி “உனக்குக் காது கேட்கவில்லையா…?” என்று கேட்டனர்.
டீ கடைக்காரர் “எனக்குச் சுத்தமாகக் கேட்காது…” என்றார்.
அதற்குப்பின் சாமியார் வேடம் பூண்டவர்கள் “முருகா…! ஏன் உன் பிள்ளையை இப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்…? உன் பிள்ளைக்குக் காது கேட்கவை முருகா…” என்றனர்.
உடனே அவருக்குக் காது கேட்க ஆரம்பித்துவிட்டது. அதன்பின் “எனக்கு முதுகுவலி தலைவலி இடுப்புவலி…” என்று ஒவ்வொருவரும் ஒன்றைச் சொல்லிக் கேட்டுக் குணமாகத் தொடங்கியதும் எங்கிருந்து அவ்வளவு கூட்டம் வந்ததென்று தெரியவில்லை…! அப்படி ஒரு பெருங்கூட்டம் கூடிவிட்டது.
அந்தக் கூட்டத்தில் முடக்குவாதம் வந்த ஒருவரைக் கொண்டு வந்து “ஐயா…! நீங்கள் எத்தனையோ பேருக்கு நல்லது செய்கிறீர்கள். ஐந்தாறு வருடங்களாகக் கட்டிலிலேயே படுத்திருக்கிறார். மல ஜலம் எல்லாம் கட்டிலில் துவாரம் போட்டு எடுக்கின்றோம். இப்படியேதான் படுத்திருக்கின்றார்… அவரைக் குணப்படுத்துங்கள்…!” என்று கேட்டனர்.
சாமியார்களாக வந்தவர்கள் விபரங்களைக் கேட்டுவிட்டு “முருகா…! உனக்கு இந்தப் பிள்ளை மேல் கருணை இல்லையா…? இவ்வளவு காலம் வேடிக்கை பார்க்கின்றாயே… முருகா…! அவர் உன்னை நினைக்கவில்லையா…? அய்யா…! நீங்கள் முருகனை நினையுங்கள்…” என்கின்றனர்.
முடமானவரும் முருகனை வேண்டுகின்றார். மீண்டும் அவர்கள் “முருகா… உன் பிள்ளையை எழுப்பிவிடப்பா… கொஞ்சம் இவர் மேல் கருணை வை…!” என்று சொல்கின்றனர்.
இப்படிச் சொன்னவுடனே முடமானவரும் சடாரென எழுந்திருக்கின்றார்.
“முருகா…! இவரை இந்த கல்லைத் தூக்கச் செய்யேன்…” என்றனர்.
அவரும் உடனே எழுந்து போய் நான்கு பேர் தூக்க முடியாத கல்லைத் தூக்கினார். அங்கே இருந்த அனைவருக்கும் ரொம்ப ஆச்சரியமாகப் போய்விட்டது. முருகனே… அங்கு வந்ததாக அந்தக் கூட்டம் நம்பியது.
கடைசியில் சாமியார் வேடம் தரித்தவர்கள் “நாங்கள் முருகன் கோயில் கட்ட வேண்டும் என்று எங்களுக்கு முருகன் உத்தரவிட்டு இருக்கின்றார்…” நீங்களெல்லாம் முருகன் கோயில் கட்டுவதற்கு உதவி செய்ய வேண்டும். எல்லா மக்களையும் முருகன் பெருமையை உணரும்படி செய்ய வேண்டும். ஆகவே உங்களால் இயன்ற பணம் கொடுங்கள் என்று சொன்னார்கள்.
உடனே, அங்கிருக்கும் கூட்டத்தினர் தாங்கள் போட்டிருக்கும் நகை மற்றும் பணம் ஏராளமாகக் கொடுத்தனர்.
சாமியார் வேடம் பூண்டவர்களும் அனைத்தையும் சுருட்டி கட்டிக் கொண்டனர். “முருகன் கோயில் கட்டி முடிந்ததும் உங்கள் அனைவருக்கும் அழைப்பு வைக்கின்றோம்… அனைவரும் வாருங்கள்…!”
அங்கு வரும் பொழுது உங்களுக்கு என்ன நோய் இருந்தாலும் முருகனிடம் சொல்லித் தீர்த்து வைக்கின்றோம் என்று சொல்லிவிட்டுக் காரில் ஏறிப் போய்விட்டனர்.
1.இதையெல்லாம் குருநாதர் பார்க்குமாறு சொல்லியதால் பார்த்துக் கொண்டிருந்தோம்.
2.உலகில் எத்தனை விதமாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்…? என்பதைக் கண்டுணரும்படி செய்தார் குருநாதர்.
நகைகளையும் பணத்தையும், அள்ளிக் கொண்டு சாமியார் வேடம் பூண்டவர்கள் காரில் ஏறிப்போன பின் 2 அல்லது 3 மணி நேரம் இருக்கும். முடமாகியிருந்தவர் குணமானதாக நம்பிய நிலையில் கட்டிலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
“எனக்கு முருகனே நேரில் வந்தார் காட்சி கொடுத்தார் குணமாக்கினார்…” என்று பேசிக் கொண்டிருந்தவர் திடீரென்று “ஐயோ… அம்மா…!” என்று கத்திக் கட்டிலிலே சுருண்டு படுத்துக் கொண்டார்.
காது கேட்காமலிருந்த டீ கடைக்காரருக்கு மறுபடியும் காது கேட்கவில்லை.
இது எப்படியென்றால் இவையனைத்தும் ஆவி வேலைகள். இத்தகைய ஆவிகளை ஏவினால் குறிப்பிட்ட நேரம் வரை செயல்படுத்தும்.
1.உலகில் உள்ள மக்களை எத்தனையோ வகைகளில்
2.கடவுள் பேரைச் சொல்லி ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்ற உண்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.








