
ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று வெறும் சொல்லாகச் சொல்லக் கூடாது
நமது உயிரை “ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…” என்று ஞானிகள் அழைத்தார்கள். “ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…” என்று நாம் சொல்லும் பொழுதெல்லாம் அது வெறும் சொல்லாக இல்லாமல் “புருவ மத்தியில்” நினைவைச் செலுத்திப் பழகுதல் வேண்டும்.
அவ்வாறு பழகிக் கொண்டால்
1.நமது உயிரை குருவாகவும் நாம் எண்ணியதை ஈசனாக உருவாக்கக் கூடிய நிலையை நாம் உணர முடியும்.
2.நாம் எதை எண்ணுகின்றோமோ அது உடலுக்குள் ஊடுருவது நமக்குத் தெரிய வரும்.
நம் உடலில் ஜீவ அணுக்களை இயக்கும் “உயிர்…” நம் நெற்றியின் புருவ மத்தியில் உட்புறமாக இருந்து கொண்டு உடலை இயக்கும் மூலக்கருவாக… குருவாக இருக்கின்றது.
உடலில் விளைந்த அனைத்து குணங்களின் உணர்வலைகளையும் உயிர் தன் ஈர்ப்பில் அணைத்துக் கொண்டு “மறு உடல் உருப்பெறச் செய்யும்…” கருவினையாகச் சேர்த்துக் கொண்டு இருக்கின்றது.
நமது கண்கள் ஒன்றைப் பார்க்கின்றது என்று வைத்துக் கொள்வோம். அதிலிருக்கும் உணர்வுகளைக் கண்கள் கவர்ந்து, நமது ஆன்மாவாக மாற்றுகின்றது. மூக்கு வழியாகச் சுவாசித்த பின் உயிரில் பட்டு அந்த உணர்வுகளை நாம் அறிகின்றோம்.
“ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…” என்று சொல்லுகின்ற போதெல்லாம் புருவ மத்தியில் உயிரை எண்ணி அதைப் பழக்கத்திற்குக் கொண்டு வந்து விட்டோமென்றால் நாம் அதன் வழி (உயிர் வழியாக) உணர்வுகளை உடலுக்குள் செலுத்தலாம்.
வாழ்க்கையில் பயன்படுத்துவது மூக்கு வழி சுவாசித்து, உணர்வுகளை உடலுக்குள் செலுத்துவது. இதை அறிந்து கொண்டாலும்…
1.தீமையான உணர்வுகள் உள்ளுக்குள் செல்லாதபடி
2.அடுத்த நிமிடம் “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி அதை இடைமறிக்க வேண்டும்.
ஏனென்றால்… நம்முடன் எவ்வளவு நல்லவர்கள் பேசினாலும் அந்த உணர்வில் அவர்கள் குடும்பக் கஷ்டம் உடல் நோய்கள் போன்ற உணர்வுகள் கலந்து சொல்லாக வரும்.
அவர்களைக் கண்ணால் பார்க்கும் பொழுது, நமது ஆன்மாவில் கலந்துவிடும். அவர்கள் பேசும் பொழுது, இந்த உணர்வுகள் கலந்தே வரும். இருந்தாலும்
1.அந்த நிலையிலும் “ஈஸ்வரா…” என்று சொல்லி உணர்வை இடைமறித்து அதைப் பலவீனப்படுத்த வேண்டும்.
2.அவ்வாறு “ஈஸ்வரா…” என்று சொல்லும் நிலைகள் வலுப் பெறும் பொழுது தீமையை அது மாற்றும்.
அதே சமயத்தில் அவர் பலவீனமான நிலைகளைச் சொல்லும் பொழுது, மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடலில் படர வேண்டும், என்று நாம் எண்ண வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் சமைத்து அதை எடுத்துப் போட்டால் தான் அது ருசியாக இருக்கும்.
கஷ்டம் என்று ஒருவர் சொல்லும் பொழுது “அடடா… உங்களுக்குக் கஷ்டமாகப் போய்விட்டதா…?” என்று நாமும் சொன்னோம் என்றால் அதையே தான் சமைத்து மீண்டும் எடுத்துக் கொடுக்கின்றோம் என்று பொருள்.
அதனால் இதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
இன்று பெரும்பாலோனோர் “ஏதோ ஒரு தெய்வம்தான் நமக்கு அனைத்தையும் செய்கின்றது…” என்று கருதுகின்றனர். ஆனால் நம் செயல்கள் நிகழ்வது அனைத்தும் நம் உயிரான கடவுளால் தான் என்பதை அறிய வேண்டும்.
“மகரிஷிகளின் அருள சக்தி நான் பெற அருள்வாய் ஈஸ்வரா…” என்று தியானித்திடும் பொழுதும் சரி… அல்லது “ஐயோ…! என் வாழ்க்கையில் இவ்வளவு சோதனைகளா…? எனது கஷ்டங்கள் தீராதா…?” என்று வேதனைப்பட்டாலும் சரி
1.அங்கே சாதனைகளையும் அல்லது சோதனைகளையும் உண்டாக்கிக் கொடுக்கின்ற குருவாக இருப்பது
2.நமது உயிர் தான்…! என்று அறிய வேண்டும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.