தினசரி தியானம் எடுத்து முடித்த பிற்பாடு நாம் செய்ய வேண்டியது

தினசரி தியானம் எடுத்து முடித்த பிற்பாடு நாம் செய்ய வேண்டியது

 

சங்கடமோ சலிப்போ கோபமோ குரோதமோ தொழிலில் சோர்வோ இது எல்லாம் வரும் பொழுது அது நம்மை இயக்காமல் தடைப்படுத்துவதற்கு
1.அம்மா அப்பாவை நினைத்து மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரை ஒரு நிமிடம் எண்ணிவிட்டு
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா என்று கண்ணிலே ஏங்க வேண்டும்.

அடுத்து… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் ரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஒரு நிமிடம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

அப்படிச் செலுத்தி விட்டால் அந்தச் சங்கடமோ பிறருடைய கோபமோ பிறருடைய நோயோ அது எல்லாம் நமக்குள் வராதபடி சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.

1.எங்கள் தொழில் சீராக நடக்க வேண்டும்…
2.நாங்கள் பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் நலமும் வளமும் பெற வேண்டும்
3.நன்மை செய்யக்கூடிய எண்ணங்கள் எல்லோருக்குள்ளும் வளர வேண்டும் என்று எண்ண வேண்டும்.
4.இதைப் போன்று வாழ்க்கையில் நம் ஆன்மாவை ஒவ்வொரு நொடிப் பொழுதும் தூய்மைப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.

எண்ணியவுடன் அந்தச் சக்தி கிடைக்கும்படியாகத் தான் யாம் பதிவு செய்திருக்கின்றோம்.

நம்மைத் திட்டியவனை திட்டினான் திட்டினான் என்று எண்ணும் பொழுது அவனுடைய நினைவு எப்படித் தொடர்ந்து வருகின்றதோ… துரோகம் செய்தான் பாவி என்று அவனை எண்ணினால் நம் காரியங்கள் எப்படி அன்று கெடுகின்றதோ அவனுக்கும் கெடுகின்றதோ அதைப் போல்
1.நீங்கள் எப்போது அருள் சக்திகளை எண்ணினாலும்
2.உங்கள் எண்ணத்தால் அந்த சக்திகளை நீங்கள் எளிதில் கவர முடியும்… உங்கள் எண்ணம் உதவி செய்யும்.

தீமை செய்வோரைப் பார்த்து “இப்படிச் செய்கின்றார்களே…!” என்று நாம் எண்ண வேண்டியது இல்லை… எண்ணக் கூடாது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் அவருடைய அறியாத தீமைகளிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும்… பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று இப்படித் தான் நாம் எண்ணி வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் தீமை செய்வோரைப் பார்த்து இப்படிச் செய்கின்றானே என்று எண்ணினோம் என்றால் அவன் உணர்வு நமக்குள் வந்து விடுகின்றது. நம் வாழ்க்கையை அது கெடுக்கின்றது.

ஆகவே அப்படி அது நமக்குள் வராதபடி இந்த முறைப்படி சீர்படுத்திக் கொள்ள வேண்டும். எத்தகைய நிலைகள் வந்தாலும் இது போன்று கடைப்பிடிக்க வேண்டும். அப்படிச் செய்து வந்தால் பிறருடைய தீமை நமக்குள் புகாது.

இருவர் சண்டை இட்டு கொண்டிருந்தாலும் கூட இதைப் போன்று உடனே ஆத்ம சுத்தி செய்துவிட்டு அவர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும்… பகைமைகள் அகல வேண்டும் என்று சொல்லிவிட்டு வந்தால் போதுமானது.

அதை விடுத்து விட்டு
1.ஏன் இப்படிச் சண்டை இடுகிறார்கள்…? என்று அதை அழுத்தமாக எண்ணினால்
2.அவருடைய உணர்வுகள் நமக்குள் வந்து நமக்குள்ளும் சண்டையிடும் உணர்வை வளர்த்துவிடும்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா.

இப்படித்தான் நம்மை அறியாமல் எத்தனையோ தீமைகள் வந்து சேருகின்றது. அதை மாற்றுவதற்குத் தான் உங்களுக்கு அடிக்கடி இது போன்ற பயிற்சிகளைக் கொடுப்பது. உங்கள் வாழ்க்கையையே தியானமாகக் கொண்டு வர முடியும்.

கையிலோ உடலிலோ அழுக்குப்பட்டால் உடனே தூய்மைப்படுத்துகின்றோம் அல்லவா. விஷமான பொருளோ அசிங்கமான பொருளோ நம் மீது பட்டால் உடனடியாக அதை நாம் தூய்மைப்படுத்துகிறோம் அல்லவா.

இதே மாதிரித் தான் உடனுக்குடன் உங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதற்கு இந்தச் சக்தியைக் கொடுக்கின்றோம். கொடுத்ததைச் சரியாக நீங்கள் பயன்படுத்திக் கொண்டீர்கள் என்றால் ஜோசியமோ ஜாதகமோ மந்திரம் எந்திரம் எந்த மாயமும் தேவையில்லை.

1.யாம் சொல்லிக் கொடுக்கக்கூடிய முறைப்படி செய்தால்
2.உங்களாலேயே அதை மாற்றிக் கொள்ள முடியும்… எல்லாக் காரியங்களும் நல்லபடியாக நடக்கும்.

உங்கள் வியாபாரத்திலும் இது போன்ற அருள் உணர்வுகளைப் பாய்ச்சி உங்கள் வாடிக்கையாளர்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்களுக்குப் பொருளைக் கொடுத்தால் வியாபராமும் சீராகும்.

எங்கள் வீட்டிற்கு வருவோர் அனைவரும் நலம் நலம் பெற வேண்டும் நாங்கள் பார்க்கும் அனைவரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.

எந்தத் துறையாக இருந்தாலும் இதே போன்று அருள் உணர்வைப் பாய்ச்சி அங்கே இனைக்கும்படி செய்து
1.அனைவருக்கும் இதைக் கிடைக்கும்படி செய்து வந்தால் எல்லாமே மகிழ்ச்சியூட்டும் நிலையாக வளரும்.
2.இது உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.

இதன் வழி நீங்கள் கடைப்பிடிக்கப்படும் பொழுது இதைச் செய்து பார்க்கும் பொழுது
1.அதில் ஏதாவது தடைகள் ஏற்பட்டால் என்னிடம் கேளுங்கள்
2.அதற்கு என்ன வழி…? என்று நிச்சயமாக வழி காட்ட முடியும்.

“எம்முடைய உபதேசங்களை எல்லோரையும் கேட்கச் செய்து” உண்மைகளை உணரக்கூடிய நிலையை நீங்கள் உருவாக்குங்கள்

“எம்முடைய உபதேசங்களை எல்லோரையும் கேட்கச் செய்து” உண்மைகளை உணரக்கூடிய நிலையை நீங்கள் உருவாக்குங்கள்

 

நீங்கள் எல்லோரும் “அருள் வழியில் தயாரானால்தான்” மிகவும் நல்லது. ஒரு விதையைப் போட்டால் உயர்ந்த நிலைக்கு அதை விளைய வைத்து வளர்த்துக் காட்ட வேண்டும்.

ஒருவர் வேதனை நோய் என்று சொன்னால் அதைக் கேட்பவர்களுக்கு எல்லாம் அந்த நோய் வரும். அருள் ஒளியைப் பெற்று இருளை நீக்கக் கூடிய சக்தி பெற்று உங்கள் பேச்சும் மூச்சும் பிறருடைய நோய்களைப் போக்க வேண்டும்.
1.சாமியாக நீங்கள் இருக்க வேண்டும்…! சாமிக்கு மட்டும் அந்தச் சக்தி அல்ல.
2.அந்த உயர்ந்த நிலைகளில் நீங்கள் செயல்பட வேண்டும்.

அதை நீங்கள் சீராகச் செயல்படுத்த வேண்டும் என்றால் யாம் வெளிப்படுத்திய உபதேச கருத்துக்களைத் திரும்பத் திரும்பக் கேட்டுப் படிக்க வேண்டும். உங்களுக்குள்ளும் பாடமாகும்… மற்றவர்களுக்குள்ளும் பதிவாகும்.

தனித்துச் செல்லும் பொழுது தவறு என்று வந்தால்… பார்…! சாமி சொன்னதை இவர் தவறாகச் சொல்கின்றார் என்று ஆரம்ப நிலைகளில் வரும்.
1.ஆனால் எல்லோரும் உபதேசங்களைக் கேட்டுப் படிக்கப்படும் பொழுது “எல்லோருமே அந்த உண்மைகளை உணரக்கூடிய சக்தி வரும்…”
2.அப்படிப்பட்ட நிலையை உருவாக்க வேண்டும்.

காரணம்… போர் என்ற நிலையில் அணுகுண்டுகளையோ மற்ற கெமிக்கல் குண்டுகளையோ உயிரியல் குண்டுகளையோ பயன்படுத்தினால் அதை எல்லாம் “நாம் ரிமோட் செய்யக்கூடிய (தடுக்கும்) சக்தியாக வரவேண்டும்…”

ரோட்டிலே நாம் நடந்து சென்று கொண்டிருக்கின்றோம்… ஒருவன் தவறான எண்ணத்துடன் செல்கின்றான் என்றால் அவனுடைய நடை மாறும். அவன் மீது அறியாமலே நமக்கு ஒரு வெறுப்பு வரும்.

ஒருவன் சைக்கிளை ஓட்டிச் செல்கின்றான் கண்ணிலே உற்றுப் பார்த்த உடனே உயிரிலே மோதச் செய்கின்றது. அவன் மீது வெறுப்பு வருகின்றது. நாம் சும்மா ரோட்டில் நடந்தாலும்
1.இந்தக் கண் இப்படி அளந்து பார்க்கிறது… காண்பிக்கின்றது.
2.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற உணர்வுகள் பதிவாக்கி
3.அந்த உணர்வுகளைக் கவர்ந்து உயிரிலே மோதும் பொழுது தான் உணர முடிகின்றது.

ஜோசியம் பார்ப்பவர்கள் எல்லாம் அதே பழக்கத்தில் இருப்பார்கள். வந்தவுடன் தெரிந்து கொள்வார்கள். நீங்கள் கஷ்டத்துடன் வந்திருக்கிறீர்கள் என்று சொல்வார்கள். பழக்கப்படுத்தி வைத்திருப்பதால் அவர்கள் அதைச் சொல்லுகின்றார்கள்.

ஆனால் அதே பழக்கத்தில் எடுக்கப்படும் பொழுது மற்றவர்களுடைய கஷ்டத்தை நுகர்ந்தவர்கள் கடைசியில் அவர்களுக்குள் பல விதமான நோய்கள் வரும். எல்லோருக்கும் ஜோசியம் செல்வார்கள்.. கடைசியில் அவர்களுக்கு நோய்கள் தான் வரும்.

உங்களுக்கு நான் கொடுத்த “பவரை” (சக்திகளை) வைத்துப் பார்க்கப்படும் போது கஷ்டங்கள் தெரிய வரும். அல்லது மற்றவர்கள் தவறு செய்தால் தெரியும்… தவறான ஆள் என்றும் உணர்த்தும்.

அதைத் தெரிந்து கொண்ட பின் அவன் மோசமான ஆள்… ஏமாற்றுவான் என்று சொல்லிப் பழகினால் என்ன ஆகும்…?
1.இந்த உணர்வு தான் நம்மை இயக்கும்… அவன் உணர்வு தான் நம்மை இயக்குகின்றது…
2.நம் நல்ல உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை… அதை மாற்ற வேண்டும் அல்லவா.

இந்த மாதிரித் தவறான உணர்வு வந்தால் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலுக்குள் செல்லாதபடி தடுக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் வலுவாக்க வேண்டும். வலுவான பின் நம் ஈர்ப்பு வட்டத்தை விட்டு அந்தத் தீமைகள் அகன்று செல்கின்றது.

ஆகவே… உயர்ந்த சக்தியைக் கூட்டப்படும் பொழுது தீமைகளை நீக்குகின்றது. உள்ளே சென்று இயக்காதபடி தடைப்படுத்துகின்றோம். வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்திலும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும்.

குழந்தை படிக்கவில்லை சேட்டை செய்கிறான் என்று நினைத்தாலே அது உடனே வேலை செய்யும். ஆகவே இது போன்ற சமயங்களில் எல்லாம் ஆத்ம சுத்தியை உடனே கடைப்பிடித்தாக வேண்டும்.

ஈஸ்வரா என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி உடலுக்குள் செலுத்திப் பழகுதல் வேண்டும்.

இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

மனிதர்களுடன் நாம் பேசுகின்றோம். ஒருவருக்கொருவர் கோபமாகப் பேசிப் பதிவு செய்யப்படும் பொழுது நமக்குள்ளும் அது வந்து விடுகிறது. சந்தர்ப்பத்திலே நாம் சோர்வடையப்படும் போது இவனால் தான் எனக்கு எத்தனை கஷ்டம் வந்தது… இவனெல்லாம் உருப்படுவானா…! என்று சும்மா இருக்கும் பொழுது எண்ணங்கள் தோன்றும்.

இப்படிப்பட்ட எண்ணங்கள் வரும்பொழுது மற்ற வேலைகளை நாம் சரியாகச் செய்ய முடியாது… தவறுகள் வந்துவிடும்…! பெண்கள் சமையலிலே காரத்தை அதிகமாகப் போட்டு விடுவார்கள். குழம்பைச் சரியாக வைக்க மாட்டார்கள். காய்கறிகளை வித்தியாசமாகச் சமைப்பார்கள்.

எது இயக்குகின்றது…? நுகர்ந்த உணர்வு தான் நம்மை இயக்குகின்றது. ஏனென்றால் இது எல்லாம் நான் கண்ட உண்மைகள்.

அதே சமயத்தில் உங்களைக் கண்ட மாத்திரத்திலே உங்களுக்குள் இருக்கக்கூடிய அனைத்தையும் நான் சொல்லலாம்.
1.ஆனால் அதைச் சொல்வதை விடுத்து
2.உங்களுக்கெல்லாம் நல்லதாக ஆக வேண்டும் என்று தான் நான் மாற்ற வேண்டும்.

இதைப் போல நீங்களும் ஈஸ்வரா என்று துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று மற்றவர்கள் உணர்வுகள் வந்தால் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அடுத்து அவர்களுக்கு நல்ல மனதும் நல்ல எண்ணங்களும் நல்லது செய்யக்கூடிய எண்ணங்களும் வர வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.
1.அவரைப் பற்றி இவ்வாறு நாம் எண்ணினால் நாம் அந்த நல்லதைப் பெறுகின்றோம்.
2.அவருடைய தீமையின் உணர்வைக் குறைத்து இதை வளர்த்து அருளுணர்வைப் பெற்றால்
3.உயிர் நம் இரத்தங்களிலே படரச் செய்கின்றது… இரத்தத்தில் கலந்த அருள் உணர்வுகள் தீமைகளைத் தடைப்படுத்தி விடுகின்றது.
4.அதனுடைய இயக்கத்தைக் குறைக்கின்றது… நல்ல அணுக்கள் பெருகுகின்றது.
5.நல்ல உணர்வும் நல்ல உடலும் நல்ல வளர்ச்சியும் நமக்குள் வருகின்றது.

உங்களுக்குப் பவர் கொடுக்கின்றேன்… உங்களால் தானே முடியும். ஆனால் “சாமி ஒன்றும் செய்யவில்லை” என்ற எண்ணத்தில் பலர் இருக்கின்றார்கள்.

தியானத்தில் எடுத்துக் கொண்ட சக்தியால் பிறருடைய தவறைத் தெரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் அந்தத் தீமைகள் நம் உடலுக்குள் புகாதபடி தடுத்துக் கொள்ள “அதைத் தெரிந்து கொள்ள வேண்டும்…” இந்த உண்மைகளை எல்லாம் வெளிப்படுத்துகின்றேன்… பதிவு செய்து கொள்ளுங்கள்.

இயற்கையின் உண்மைகளை எல்லோரும் பெறச் செய்ய வேண்டும் என்பதற்கே இதை உணர்த்தி அந்தத் தன்னம்பிக்கையைக் கொண்டு வருகின்றேன்.

1.அந்த அருள் ஒளியை என்றுமே நம் உயிருடன் சேர்த்துச் சொந்தமாக்கி நாம் பழகுதல் வேண்டும்.
2.நான் யாரை நினைக்கின்றேன்…? உங்களைத்தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
3.உங்களுக்கு ஃபுல் பவர் (FULL POWER) சதா கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.

உங்கள் உயிரை ஈசனாக மதிக்கின்றேன் அவன் வீற்றிருக்கும் ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் புனிதத் தன்மைகள் ஏற்பட வேண்டும் ஈசன் வீற்றிருக்கக் கூடிய உடலான சிவம் உயர்ந்த சக்திகள் பெற வேண்டும் அதனால் உயர்ந்த நிலை ஏற்பட வேண்டும்.

உங்களிடமிருந்து வெளிப்படும் சொல் பிறருடைய தீமைகளைப் போக்கக்கூடிய நிலை வர வேண்டும். “என்னுடைய தியானமே இது தான்…” நீங்களும் அதே போன்று செய்து பாருங்கள்.

அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீரை ஊற்ற ஊற்ற அழுக்குத் தண்ணீர் குறைந்து கொண்டே வரும். ஆகவே… எங்கே குறைகளைக் கண்டாலும் அந்தக் குறை நமக்குள் இயக்காதபடி அருள் ஒளியைக் கூட்டி அன்பையும் பண்பையும் பேணிக் காக்கும் அருள் ஞானம் அவருக்குள் பெருக வேண்டும் உயர்ந்த சக்தியைப் பெற வேண்டும் என்று எண்ணி விட்டீர்கள் என்றால் அது ஒவ்வொரு நொடியிலும் நம்மைக் காக்கும்… அவர்களையும் காக்கும்.

துருவ நட்சத்திரத்தை எண்ணினால் விஷ்ணு தனுசாக மாறுகின்றது. அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் இரத்தத்திலே கலக்கப்படும் பொழுது சிவ தனுசை அடக்குகின்றது.

பிறிதொருவர் தீமைகள் சிவ தனுசு… அதைப் போய் இது அடக்குகிறது. ஏனென்றால்
1.அதைக் காட்டிலும் வலுவானது “விஷ்ணு தனுசு…”
2.இது செய்யப்பட்டது இனி நாம் செய்ய வேண்டியது.

அருள் மணங்களை நாம் எப்படி எடுக்க வேண்டும்…? என்று இராமாயணத்தில் இப்படித் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் சிவ சக்தி என்ற நிலையில் செயல்பட வேண்டும் சக்தி தான் சிவமாகின்றது பெண்கள் அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும்… அருள் ஞானம் பெற வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்தச் சக்தி என்ற நிலையை உருவாக்கித் தன் கணவனுடன் சேர்க்கப்படும் போது சிவமாகின்றது.

சக்தி என்ற உணர்வுகள் கணவன் தனக்குள் நுகர்ந்து
1.மனைவியின் ஆற்றல் எனக்குக் கிடைக்க வேண்டும்
2.என் மனைவி உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை எடுத்து
3.இருவருமே உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று இப்படி எண்ணி எடுத்து இதை வளர்த்துப் பாருங்கள்.
4.இரு உணர்வும் ஒன்றாகின்றது அதனுடைய நல்ல பலன்களை அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

விஞ்ஞான அறிவில் வளர்ந்து கொண்டே தான் செல்கின்றார்கள். எத்தனையோ விதமான நிலைகளைப் பரவ விட்டுள்ளார்கள். அதிலே தப்பும் வழி இல்லை.

ஆகவே நாம் ஒவ்வொருவரும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கிப் பழகுதல் வேண்டும். இரவு படுக்கப் போகும் போது முதலில் தாய் தந்தையை நினையுங்கள். அவர்தான் நம்மை மனிதனாக உருப்பெறச் செய்தார்கள்.

அந்த அரும் பெரும் சக்தியின் துணை கொண்டு அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷியின் அருள் சக்திகளையும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இந்த எண்ணத்தோடு படுங்கள்.
1.இரண்டு நிமிடம் மூன்று நிமிடம் சொல்லுங்கள்.
2.உங்கள் உடலுக்குள் இந்த அருளைப் பாய்ச்சுங்கள்… திரும்பத் திரும்ப எண்ணுங்கள்.

எங்கள் குழந்தைகளுக்கு நல்ல படிப்பு வர வேண்டும் கல்வியில் ஞானம் வர வேண்டும். நாங்கள் வேலை செய்யும் இடங்களில் எல்லோருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும். பகைமைகள் அகல வேண்டும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.

என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் எல்லோருக்கும் உயர்ந்த எண்ணம் வர வேண்டும் என்று இரவில் இப்படி எண்ணி வளர்த்துப் பழகுங்கள் இதை வளர்க்க வளர்க்க அந்தப் பகைமைகள் நிச்சயம் மாறும்.

இப்படி நம் வாழ்க்கையையே தியானமாக்கிப் பழக வேண்டும்…!

துருவத்தின் ஆற்றல்

துருவத்தின் ஆற்றல்

 

உயிரணு தோன்றி மனிதனிலிருந்து விடுபட்டு ஒளியின் உடல் பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குப் பழக்கத்தில் பெறும்படி யாம் செய்தது.

இதை நீங்கள் எளிதில் கவர்ந்து நுகர்ந்து உணர்ந்து தீமைகளை நீக்கிடும் ஞானத்தைப் பெற முடியும். அதைத்தான் இப்பொழுது பெறச் செய்தது.

இதை எடுத்துக் கொண்ட பின்
1.அடுத்து எப்பொழுது வேண்டுமென்றாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
2.கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதைப் பெற வேண்டும் என்று ஏங்கிக் கண்களை மூடி
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
4.எங்கள் உடல் முழுவதும் பரவ வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று ஏங்கி
5.ஒரு நிமிடம் இரண்டு நிமிடம் தியானித்தால் போதும்.

அதை நம் உடலுக்குள் வலுவாக்கி வேதனைப்பட்டோர் உணர்வைக் கேட்டறிய நேர்ந்தாலும் அது நம் உடலுக்குள் வலுப் பெறாதபடி அதை நீக்கி… நம் உடலுக்குள் இருக்கும் நல்ல அணுக்களைப் பாதுகாப்பாக… நல்ல உணர்வுகளை வளர்த்துக் கொள்ள முடியும்.

இல்லையென்றால் அந்த வேதனை என்று அணுக்கள் வளர்ச்சி அடைய கடுமையான நோய்களும் கடுமையான வேதனைகளும் வரும்.

தேடிய செல்வம் எது இருப்பினும் வைத்தியத்திற்குச் செலவழித்து அதை நீங்கள் பாதுகாத்தாலும் உங்கள் உடலில் இருந்த உணர்வுகள் கடைசி நிலை எதுவோ அதன் வழி இந்த உயிர் அழைத்துச் சென்று வேறு ஒரு உடலாக மாற்றிவிடும்.

ஆகவே இந்த உடலில் இருக்கும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உங்களுக்குள் வளர்த்துப் பிறவி இல்லா நிலை அடைவதே கடைசி நிலை.

ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் வரும் கஷ்டங்களையோ நஷ்டங்களையோ பையன் சொன்னபடி கேட்கவில்லை என்று வேதனைப்படுவதோ அல்லது வேதனைப்படுபவர்களை நுகர்ந்தாலோ உடனே நீங்கள் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

ஆறாவது அறிவு கார்த்திகேயா என்றாலும் சேனாதிபதி ஆறாவது அறிவின் துணை கொண்டு தான் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நுகர்கின்றோம்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை புருவ மத்தியில் உயிரின் நிலைகள் இணைக்கப்படும் போது
2.கண் வழி கவர்ந்தாலும் கண்ணின் நினைவினை உயிரிலே இணைக்கப்படும் பொழுது
3.உயிர் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை ஈர்க்கும் திறன் வரும் பொழுது
4.மூக்கின் வழி செல்லும் தீய உணர்வுகளை அது தடைப்படுத்துகின்றது.

பின் நம்முடைய நினைவாற்றல் நம் உடலில் உள்ள அணுக்களுக்குச் செலுத்தப்படும் பொழுது அதுவும் வலுப்பெற்று நம் உட;லுக்கு முன் முகப்பில் உள்ள விஷத்தன்மைகளை தூர ஒதுங்கிச் செல்லத் தள்ளி விடுகின்றது. நமது ஆன்மா தூய்மை அடைகின்றது.

1.அதே சமயத்தில் நம் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஆன்மா ஒரு வட்டம் உண்டு… அந்த ஜீவான்மாக்களும் சுத்தமாகின்றது.
2.இந்த உயிரைப் போல உணர்வின் தன்மை ஒளியின் அறிவாக அணுக்கள் வளர்ச்சி வரும் சக்தி பெறுகின்றது.

அப்படி ஒளியாக்கப்படும் பொழுது உயிருடன் இணைந்து… ஒளி என்ற அறிவு எப்படி இருந்ததோ அதன் அறிவின் தன்மை பெற்ற அணுக்களை இப்படிச் சிறுகச் சிறுக மாற்றி… இந்த உடலுக்குப் பின் நாம் நமது உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக மாறுவதே கடைசி நிலை.
1.எந்தத் துருவத்தின் உணர்வை நாம் நுகர்ந்தோமோ
2.அதன் ஈர்ப்புக்கே நம்மை அழைத்துச் செல்கின்றது நமது உயிர்.

மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறச் செய்யும் வலிமை

மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறச் செய்யும் வலிமை

 

வராகன் சாக்கடைக்குள் இருக்கக்கூடிய நல்ல பொருளை எடுத்து அது உணர்வுக்குள் நல்லதாக மாற்றி நாற்றமான உடலைப் பிளந்து மனிதனாகப் பிறக்கச் செய்தது

அதைப் போல் விஞ்ஞான அறிவால் இந்த காற்றுக்குள் இருக்கும் நச்சுத்தன்மைக்குள் மகா ஞானியின் உணர்வலைகள் நமக்கு முன் மிதந்து கொண்டிருக்கின்றது. அதை நாம் நுகர வேண்டும்.

1.அந்த மகா ஞானியின் உணர்வலைகளை உங்களுக்குள் ஊழ்வினையாகப் பதியச் செய்ய
2.உங்கள் நினைவின் எண்ணங்களைக் கூர்மையாக்க
3.அந்த ஞானிகள் காட்டிய உணர்வின் தன்மையை உங்களுக்குள் பதிவு செய்வதற்கே இந்த நிலை.

பதிந்தபின் நீங்கள் தியானித்து அந்த அருள் சக்தியைப் பெறுவதற்காக…
1.நாம் அனைவரும் சேர்ந்து எண்ணி ஏங்கி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணும் போது எளிதில் கிடைக்கும்.

ஒரு நூலால் ஒரு கடினமான பொருளைத் தூக்க முடியாது ஆனால் பல நூல்களை இணைத்துப் பெரும் கடினமான பொருளையும் தூக்க முடியும்.

சாதாரண மனிதன் இந்தப் புவியின் ஆசையுடன் இருக்கப்படும் பொழுது நம் எண்ணத்திற்கு வலு குறைவு. ஞானிகள் பிறவிக் கடனை வென்று இன்னோரு உடலின் ஈர்ப்புக்குச் செல்லாதபடி ஒளியின் சுடராகச் சென்றவர்கள்.

அவர்கள் உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகளுக்கு அருகிலே நம் உணர்வுகள் செல்ல அருகதையற்றது. அதனை நுகர்வது என்றால் மிகக் கடினமானது.

அந்த ஞானிகள் கற்றுணர்ந்த உணர்வின் தன்மைகளை எமது குருநாதர் காட்டி உணர்ந்து உணர்வின் தன்மையை எம்மை ஏங்கிப் பெறச் செய்து
1.அதை நீங்கள் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன்
2.ஞானிகள் கண்ட உணர்வினை உங்கள் நினைவினைக் கூர்மையாக்கி இந்த உணர்வுகளைக் கேட்க வைத்து
3.இந்த உணர்வுகளை நுகரச் செய்து நுகர்ந்த உணர்வுகள் உங்களுக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்து
4.இந்த நினைவின் ஆற்றல் எண்ணும் பொழுது
5.டிவியும் ரேடியோவும் எந்த ஸ்டேஷனைத் திருப்பி வைக்கின்றோமோ அதை காற்றிலிருந்து பிரித்து எடுத்துக் காட்டுவது போல
6.இந்த மகா ஞானிகளின் உணர்வலைகளை நம்மால் எடுக்க முடியும். வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற முடியும்.

ஆலயங்களிலே தேரை இழுக்கப்படும் பொழுது பலரும் ஒன்று சேர்த்து அந்தக் கடினமான தேரை இழுப்பது போன்று நாம் அனைவரும் இந்நேரம் வரை கேட்டுணர்ந்த உணர்வை அந்த மகரிஷ்களின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் தியானிக்கப்படும் பொழுது “காற்றுக்குள் மறைந்துள்ள இந்த ஞானிகள் உணர்வலைகளை இங்கே படரச் செய்வதுதான்…”

இங்கே படர்ந்த உணர்வின் சத்தை அவரவர்கள் ஏங்கிய நிலையில் கொண்டு பெற முடியும்.

இந்தத் தியானம் முடிந்த பின் தியானத்தில் அமர்ந்த அனைவரும் மகரிஷிகளின் அருள் ஒளி பெற்று அவர்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற வேண்டும்… எல்லோருக்கும் பெற வேண்டும் என்று உணர்வினை வெளிப்படுத்தும் போது சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து உயர்ந்த எண்ணத்தின் வலுவாக அது கூடி… நாம் கேட்டுணர்ந்த உணர்வுகள் புற நிலையில் ஈர்த்து உங்களுக்குள் சக்தி வாய்ந்தத உணர்வுகளாகப் பதியச் செய்வதே இந்தக் கூட்டுத் தியானம்.

கூட்டுத் தியானத்தின் மூலம்
1.அனைவரின் எண்ணத்தின் வலு கொண்டு நாம் ஈர்க்கும் திறன் பெற்று
2.இங்கே அணைத்து வந்த உணர்வுகள் நமக்குள் இணைத்திடும் சக்தியாக ஆக்கிய பின்
3.இதற்கடுத்து நாம் தனித்து இருந்தாலும் அந்த உயர்ந்த சக்திகளை “எப்பொழுது வேண்டுமென்றாலும் பெற்று வளர்த்துக் கொள்ள முடியும்…”

தியானத்தில் பெறுகின்ற வலு வீரியம்

தியானத்தில் பெறுகின்ற வலு வீரியம்

 

தியானத்தில் பெறுகின்ற வலு வீரியம் பற்றி வேதாள மகரிஷியினால் வலியுறுத்தி உபதேசமாக உரைக்கப்பட்டது.

மனிதச் சரீரத்தினுள்… சிவசக்தி நாடிகள் சுழுமுனை நாடியுடன் இணைந்து மூலாதாரத்தில் இருந்து மேல் எழுந்து… சிரசின் நெற்றிப் பொட்டு என்ற அறுகோணச் சக்கரத்தினுள் “சூலாயுதம் போல் தோன்றும்…”
1.செந்நிற ஒளியும் பொன்னிற ஒளியும் இரு புறம் விளங்க
2.மையத்தில் நீல வண்ண ஒளியாகத் தோன்றிடும் நிலையே அது.
3.உயிர் எனப்படும் குரு… இந்நிலை தருகின்ற செயல் எண்ணம் கொண்ட ஜீவன்… தான் என்று பெறல் வேண்டும்.
4.மகரிஷிகள் உவந்து ஊட்டுகின்ற “சூட்சுமங்களை” முயன்று பெற்றிட வேண்டும்.

இந்த நிலை எதனுள் அடங்கும்…?

சூட்சுமம் அங்கு உள்ளது. செய்கின்ற தொழில் என்பது…
1.கர்ம காரியங்கள் ஆயினும் சரி… உயர் ஞான சக்தி விளைவாக்கிடும் செயலாயினும் சரி…
2.ஒருவர் ஜெபித்து ஒருவருக்கு அளிப்பது அல்ல ஞானம்.
3.செய் தொழில் மேன்மைக்கு… தான்… தனக்கு ஜெபிக்கின்ற நிலை…!
4.அதுவே சாஸ்வதமாக நிலை பெற்று விளங்கும்.

முத்தலை சூலாயுதம் ஒளி வடிவாகச் சிரசினுள் உதிக்கும். இதனையும் கடந்த நிலையே சிவம் சூரியப் பிரகாசமாக உச்சியின் மேல் உதயம் காட்டுதல்.

சிவ சூரிய நிலை பெற்று வளர என்னுடைய ஆசிகள்… வேதாள மகரிஷி…!

மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் “செருகேற்றிக் கொள்ள வேண்டும்”

மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் “செருகேற்றிக் கொள்ள வேண்டும்”

 

நம் எண்ணத்தின் வலுவான நிலைகள் கொண்டு மகரிஷிகளைப் பற்ற வேண்டும் என்றால் நம்முடைய எண்ணத்தை அது அழித்து விடும்.
1.மகரிஷிகளை நுகர்ந்தெடுப்பது மிகவும் கடினம்.
2.தனித்து இருந்து மகரிஷியின் ஒளியைப் பெறுவேன் என்றால் அது முடியாத நிலைகள்.

தனித்துப் பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

பல கயிறுகளை எடுத்து ஒரு கயிறாகத் திரித்து வலுவாக்குவதைப் போன்று
1.நமது எண்ணங்கள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.ஒருக்கிணைந்த வலுவின் துணை கொண்டு நாம் ஏங்கி எடுப்போம் என்றால்
3.நமக்கு முன் படர்ந்திருக்கும் அவருடைய உணர்வுகள் நமக்குள் பலவாகி அவருடன் சமமாகி
4.அந்த உணர்வின் நிலைகள் நாம் எண்ணி ஏங்கும் பொழுது நம் ஆன்மாவிலே கலக்கிறது.
5.பின் அந்த உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் உறையும் தன்மையாக நினைவின் ஆற்றலை
6.மகரிஷியின் அருள் ஒளி எனக்குள் படர வேண்டும் என்று எண்ணி உள் செலுத்தும் பொழுது நமக்குள் ஊடுருவுகின்றது.
7.அப்பொழுது அந்த உணர்வின் சத்து மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது கருவுற்று “உணர்வின் வித்தாக உருப்பெறுகின்றது…”

நமக்காக எத்தனையோ வேதனைகள் பட்டு நம்மைக் காக்க நம்முடைய மூதாதையர்கள் அனுபவித்த நிலைகள் அவர்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்றாலும் அந்த உயிரான்மாக்களை விண் செலுத்த வேண்டும்.

கூட்டுத் தியானம் இருந்து வலுவேற்றிய உணர்வு கொண்டு உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்களை ஏகோபித்த நிலைகள் கொண்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தல் வேண்டும்.

அவர்கள் மீண்டும் உடல் பெறாத நிலைகளில் உடல் பெற்ற உணர்வினை அங்கே கரைத்துப் பஸ்பமாக்கி
1.உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை
2.அறிந்திடும் ஆற்றலின் இயக்கத்தின் தன்மை கொண்ட அந்த உணர்வின் நினைவலைகள் உயிருடன் ஒன்ற அங்கே செயல்படுத்த வேண்டும்.
3.அங்கே ஒளிக் கடலிலே கலக்கப்பட்டு உடல் பெறும் தன்மை அங்கே கருக்க வேண்டும்
4.உயிருடன் ஒன்றிய ஒளியின் தன்மையை அங்கே நிலைக்கச் செய்தல் வேண்டும்.

அப்போது அந்த ஒளி பெற்ற உணர்வின் தன்மை “அந்த ஞானியின் உணர்வுகள் இவர்களுக்குள் உணவாகச் சேருகின்றது…” ஒளியின் சுடராக ஒளியின் சரீரமாக அவரின் ஈர்ப்பு வட்டத்தில் என்றும் நிலைத்திருப்பார்கள்.

அதுதான் பெருவீடு பெரு நிலை என்ற நிலை…!

அந்த அருள் ஞானிகள் கண்ட உணர்வை நாமும் பின்பற்றி அதைப் போல நாமும் ஒருங்கிணைந்து அருள் ஞானிகள் ஆற்றலைப் பெற வேண்டும் என்று ஏங்கினோம் என்றால்… அந்த உணர்வின் ஆற்றல் நமக்குள் பட்டு நம்மை அறியாது வந்த இருளை அகற்றும் நிலையும்… பொருள் கண்டுணர்ந்து செயல்படும் தன்மையும் அவர்கள் உணர்வு கொண்டு நாமும் அங்கே விண் செல்லலாம்.

ஆகவே தீமைகளை அகற்றிட்ட அருள் ஞானியின் உணர்வின் வலுக் கொண்டு அதனை நாம் நுகர்ந்தோம் என்றால் அதைப் பற்றி அதனின் நிலைகள் கொண்டு பிறவா நிலையும் ஒளியின் சரீரமாகவும் ஒளியின் சிகரமாகவும் நாம் வாழ்ந்திட முடியும்.

என்றும் பதினாறு என்று நிலை…!

ஒளியின் சிகரம் வளர வளர அது என்றும் 16 என்ற பருவத்தையே அடைந்திருக்கும்… நிலையான நிலைகள் பெற்றிருக்கும்… இன்னொரு உடல் பெறாது இருளை அது கவராது.

ஒரு வைரம் ஒளியின் சுடராக இருக்கின்றது. அது சுக்கு நூறாகத் தெறித்தாலும் அது மங்குவதில்லை.
1.அந்த வைரத்தை வைத்து ஒரு பொருளை கோடிட்டால் அதைக் கீறி விடும் இதைக் கீற முடியாது.
2.இதனை ஒத்த அதே வைரத்தின் தன்மையை இதனுடன் இணைத்தால்
3.உராயும் தன்மை கொண்டு அதனின் நிலைகளைச் செருகேற்றலாம்… ஒளியின் தன்மை மின்னச் செய்யலாம்.

இதைப் போலத்தான்
1.அந்த அருள் ஞானிகளின் உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் எடுத்துச் செருகேற்றி
2.நமக்குள் இருக்கும் குணங்களை மின்னச் செய்யலாம்.
3.மின்னும் நிலை கொண்டு நஞ்சினை நீக்கிடும் உணர்வின் ஆற்றலும்… பொருள் கண்டுணர்ந்து செயல்படும் தன்மையும் நமக்குள் வருகின்றது.

ஆகவே அந்த மகரிஷிகளின் அருளாற்றலை நாம் அனைவரும் பருகுவோம்.

மனத்தூய்மை பெற்றிடும் முயற்சி… அக்னி அஸ்திரத்தை எறிகின்ற விசை போல் இருந்திட வேண்டும்

மனத்தூய்மை பெற்றிடும் முயற்சி… அக்னி அஸ்திரத்தை எறிகின்ற விசை போல் இருந்திட வேண்டும்

 

1.உள்ளத்தின் கூளமதை உணர்ந்து கொண்டு… அதை தூய்மையாக்கிடும் முயற்சிக்கு (தன் ஆத்மாவைச் சுத்தம் செய்வது)
2.இன்றைய மக்களின் நிலை வேர்விடும் ஒதிய மரமாகக் காணப்படுகின்றன.
3.சூறைக்காட்டில் ஒதிய மரம் (மிகவும் மென்மையான மரம்) நின்று நிலை பெற்றிடாது.

கருமானின் (கொல்லன்) உலைக்களத்தில் சென்று தேவையற்ற இரும்புப் பொருட்கள் அங்கே ஏன் கிடைக்கின்றது…? என்று கேள்வி கேட்க முடியுமா…! அவைகளை அவன் உளைக்களத்தில் தானே வைக்க முடிந்திடும்.

உலக சிருஷ்டியின் கூளத்தைப் பார்…! உலகத்தின் குப்பைகள் ஒவ்வொன்றும் புதிய புதினங்களாக உருவாக்கிக் கொண்டிருக்கும் சிருஷ்டியின் இரகசியங்களை நீ அறிந்து கொண்டிட வேண்டும்.

மனித மனத்தின் கூளங்கள்… மனிதனின் மனக்கருவையை மூடிக்கொள்ளும் அளவிற்கு வளர்ந்து… ஆத்ம பரிபாலன அரசை இந்த உலகோதயம் சூதிலே வீழ்த்திவிடும்.

உரத்து எழுகின்ற காற்றே குப்பைகளை அகற்றும். அது போல் மகரிஷிகளின் சக்தியை வைத்துத் தான் ஆன்மாவில் பட்ட அசுத்தங்களை அகற்ற முடியும்.

தூய்மைப்படுத்த வேண்டுமென்றால்… சப்தரிஷிகளின் அருள் வழி கடாக்ஷங்கள்… மகரிஷிகளின் அருள் ஒளியாக உரத்து மனத்தூய்மை காட்டும் அந்தச் செயல்பாட்டின் உறுதி நம்மிடம் எப்படி இருக்க வேண்டும்…?

தென்னம்பாளைப் பஞ்சு…
அம்பின் நுனிக் குஞ்சு…
பாறையின் மோதல் வேக நெருப்பு… (SELF IGNITION)
(இராம) காதையின் வழி கண்டுகொள் விருப்பு.

1.தென்னம்பாளைப் பூவின் பஞ்சு போல் அமைத்திட்ட கோலாக அம்பாக அமைந்து…
2.நாண் பூட்டிய வில்லின் மூலம் அதை எறிய…
3.காற்றின் உராய்வு சக்தி கொண்டு கனன்று எரிகின்ற நெருப்பாக…
4.மனத்தூய்மை பெற்றிடும் முயற்சி… அக்னி அஸ்திரத்தை எறிகின்ற விசை போல் இருந்திட வேண்டும்

நீ ஈர்த்துக் கொண்டிடும் “உயர் மின் நுண்காந்த அணுக்கள்” ஆகாயச் சித்தன் (அகஸ்தியன்) கண்ட செயலில்… சரீர உள் நிகழ்வில்…
1.உச்சி முதல் உள்ளங்கால் வரை… உள்ளங்கால் முதல் உச்சி வரை அந்த ஒளி அணுக்கள் ஓடிடும் ஓட்ட கதியில்…
2.மேலிருந்து கீழாக கீழிருந்து மேலாக ஓட்ட கதி சந்திப்பின் உராய்வில் உண்டாக்கப்படும் ஒலி நாதம்…
3.நம் சரீரத்தைச் சுற்றி ஓடும் அண்ட கோசம் என்ற ஒளிச்சுற்றலாக அமைவு கொண்ட அமைப்பில்
4.உன்னுள்ளே ஓங்கார நாதத்தை இடைவிடாது கேட்டு அனுபவிக்கின்றாய் அல்லவா.

ஞானமாகச் சுடர்கின்ற தன்மைக்கு அதுவே முன் முயற்சி. அனைத்தையும் அறிந்து கொள்ள… தெளிந்து கொள்ள முடியும். அத்தகைய மனித மனத்தின் மனோ சக்தியின் ஆற்றலை… இன்றைய மனிதன் இன்னும் அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

பூட்டி இருக்கின்ற மனக் கதவைத் திறந்து கொள்ள… இங்கே கொடுக்கும் உபதேச வாயிலாகத் “தியானம் என்ற சாவியை” மனமுவந்து அளிக்கின்றோம்.

அதை வைத்துத் தன் மனக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவன்… உள்ளே இருந்து கொண்டு கதவடைத்துத் தாழ்பாளை இட்டு பூட்டிக் கொண்ட பின்… சாவியைத் தொலைத்து விட்டானப்பா…! (மீண்டும் பிறப்புக்கு வராது மகரிஷிகளுடன் ஒன்றிடும் நிலை).

1.அத்தகைய மெய் ஒலி மெய் ஞானம் சுடராக விளங்க… உண்மை நிலை உணர்ந்து தங்களை உயர்த்திக் கொள்வோர்
2.இங்கே வழிகாட்டும் மாமகரிஷிகள் நிலையின் வழி ஒன்றுவர்.

படைப்பின் படைப்பே சிருஷ்டி… அனைத்தும் பெற என்னுடைய ஆசிகள்.

சரீரத்தின் அனைத்து அணுக்களும் “உயர் மின் நுண்காந்த அலைகளை…” ஈர்க்கும் பக்குவம் பெறல் வேண்டும்

சரீரத்தின் அனைத்து அணுக்களும் “உயர் மின் நுண்காந்த அலைகளை…” ஈர்க்கும் பக்குவம் பெறல் வேண்டும்

 

குணங்களாக உள் அடக்கும் “ஓர் மறை பேறு” என்பதே மனித மனம் வளர்த்துக் கொள்கின்ற குண நலன்கள்… அகத்தின் அருட் சிந்தனையில் பிரகாசிப்பதே “உயர் ஞானம்…”
1.ஞானச் செல்வங்கள் (நீங்கள்) அகத்தின் அருள் செல்வத்தினை
2.உங்கள் சிந்தையில் பற்றுக…! என அன்பு கொண்டே அழைக்கின்றோம்.

காலமாம் வேக கதியில்… அனைத்துமே மறைதல் தத்துவம் பெறுகின்றது.

உயிர் சக்தி வலு கூட்டிக்கொள்ள இந்தச் சரீரமும் காக்கப்பட வேண்டும். நோயுற்ற ஒருவனைப் பிழைத்தெழ வைத்திடும் வைத்திய நூல் கற்று அதனைச் செயல்படுத்திக் காட்டிட்ட எத்தனையோ மருத்துவர்கள் உள்ளார்கள்.

இருந்தாலும்… அவர்களும் காலத்தின் பிடியில் தான் சிக்கி உள்ளார்கள். உடலை விட்டு எப்படியும் பிரிந்து தான் ஆக வேண்டும்.

ஆனால்
1.மெய் ஞானத்தின் விழிப்பு கொண்டு உயர் ஆத்ம சக்தியை வலுக் கூட்டிய மாமகான்கள்
2.காலத்தால் இன்றும் அழியாது வாழ்ந்து வருகின்றனர்…

அவர்கள் செயல் கொள்கின்ற நிலை என்ன…?

காலில் அணியும் சலங்கை பார்த்திருக்கின்றாய் அல்லவா. உயர்ந்த உலோகத்தால் உருவாக்கப்படும் கால் சதங்கை ஒலிப்பது எவ்வாறு…?

பொருத்தமான பரல்கள் உள்ளிட்டு அமைக்கப்படும் அந்தச் சதங்கை வாய் ஒலிக்கின்ற ஒலி போல்…
1.இங்கே யாம் காட்டும் பொருளை
2.ஆத்ம பலம் கூட்டிடும் ஞானத்திற்கே காணுதல் வேண்டும்.

பொருந்தாப் பொருள் அமையப் பெற்ற சதங்கை எவ்வாறு ஒளி நாதத்தைக் காட்டாதோ அதைப் போன்றே
1.சரீரத்தின் அனைத்து அணுக்களும் “உயர் மின் நுண்காந்த அலைகளை…” ஈர்த்துக் கொண்டிடும் பக்குவம் இல்லை என்றால்
2.மனிதச் சரீரத்தை ஒளியாக்கிடும் சித்தன் நிலை குறைவுபடுமப்பா.

நாம் ஈர்க்கின்ற உயர் காந்த சக்தியை… சரீரத்தில் உள்ள அனைத்து அணுக்களும் பெற்று… உயிர் ஆத்ம சக்தியின் வலுவால் ஒலிக்கின்ற நாதமே பின் “விந்து கலையாகும்…”

அந்த நிலையின் பக்குவம் பெற்றுவிட்டால் “துடி முழவின்” (இசைக் கருவி) ஒலி கேட்டிருக்கின்றாய் அல்லவா. அத்தகைய முழங்கு நாதம்… சொல் (உன் சொல்) அறப்பெற்றிடலாம்.

இதையே சரீரத்தின் தொடர்பிற்கும் உணவினை உட்கொள்ளும் குணங்களாகக் காணலாம்.

உடல் பொருந்துகின்ற உணவினையே உட்கொள்ளல் வேண்டும் உணவின் குண மாறுபாட்டால் நம் சரீரத்திற்குள் பிற உயிர்த்தொகைகள் உட்கொள்ளும்… உணவின் குண விசேஷ வாசனையால் ஆட்கொண்டு உடல் வாழ்கின்ற நிலை தவிர்க்கப்பட வேண்டும்.

சமைக்கப்படும் உணவில் அதன் வாசனைக்கொத்த உயிரணுக்கள் அசைகின்ற தன்மைகளையும் அதன் செயல்பாட்டையும் காட்டி இருக்கின்றோம். “இலையில் திகழ்கின்ற பிண்டம்…!” என்று உரைத்திருக்கின்றோம்.

எல்லாமே வாசனைகள் ஆகுகின்றன. ஆனாலும்
1.குணங்களின் வேகத்தை அது எத்தகையதாக இருந்தாலும்
2.ஆத்ம பலத்திற்கே அதைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

தொழில் புரியும் ஓர் தொழிலாளி… கருத்தொன்றி தொழில் நாட்டம் கொண்டிட்டால் பசி தாகத்தை உணர்வதில்லை. சிலர் பொருளைப் பெற்றிடும் வேகத்தால் உத்வேகம் ஊட்டப்பெறும் ஒன்றின் கருத்தால் பசியினை மறந்தும் தொழில் புரிகின்றார்கள்.

இப்படி வாழ்க்கையில் எத்தனை எத்தனையோ சம்பவங்களைக் காண்கின்றோம் அதுவும் கருத்தொருமித்த நிலை தான்.

அதே மனநிலையைத்தான் “இந்தத் தியானத்திற்குச் சிறிதளவேனும் செயல் கொள்ளுங்கள்…” என்று உரைப்பதெல்லாம்.

1.ஞானத்தின் வித்துக்களைத் தேர்ந்தெடுக்கும் வேகத்திற்கே சப்தரிஷிகள் செயல் கொள்கின்றனர்…
2.ஆக்கம் அனைத்தையும் காக்கும்.

ஈஸ்வரா…! என்று உயிரின் ஏக்கத்துடன் விழிப்பார்வை இருக்க வேண்டுமப்பா…!

ஈஸ்வரா…! என்று உயிரின் ஏக்கத்துடன் விழிப்பார்வை இருக்க வேண்டுமப்பா…!

 

மனித நேயமனம் அன்பினுக்குகந்த அறவழி நடக்கலுற்று… பகுத்தறியும் ஆற்றல் வழி பண்பு கொண்ட தவமயர் இல்லறத்தின் வழி நடந்தே… மகோன்னத முனைப்பாற்றல் சக்தியை நிறைவாகப் பெற்று… அந்த ஆற்றலின் சிறப்பாக வளர்ச்சியில் வளர்ந்திட முடிந்திடும்.

பகல் இரவு என்று எண்ணாத எறும்பு ஊர்ந்து சென்று தன் இனங்களுக்கு ஊட்டும் சேமிப்பாகவே உணவினைத் தேடுகின்றது. அது போல்
1.அகம் ஜெபித்திடும்… (தனக்குத் தானே – உயிருடன்)
2.ஆத்ம பலம் கூட்டிடும்… (தன்னை வளர்ப்பதற்கு)
3.மெய்ப் பொருள் செல்வம் எனும் சேமிப்பின் சூட்சுமம் கொண்டு வளர்ந்திட… (உயிரான்மாவிற்குச் சேமிக்கும் அழியாச் சொத்து)
4.வழி நடத்தும் வழி முறைகள் காட்டியதே வல்லார் (மகரிஷிகளின்) தம் ஞான நிலை.
5.தவமாக வாழ்வின் நிறைவு பெற்ற மாமகான்களே அவர்கள்…!

அதை எண்ணி ஈர்த்திடும் பக்குவத்தில் வளரும் நம் ஞான நிலை.

1.நம் ஒளி காந்த சக்தியுடன் அந்த மகரிஷிகள் ஒளி காந்த சக்தியாக ஒன்றிச் செயல்படுகின்ற
2.அந்தத் தவப்பயன் வழியை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அகத்தின் அழகு பற்றி வழக்கில் உரைக்கும் உரையைச் செவி வழியாக அறிந்திருப்பாய். எது அகத்தின் அழகு…?
1.அல்லார் எனும் நிலை விடுகின்ற பொழுது அக மலர் மலர்ந்து மணம் வீசுகின்றது.
2.விருப்பு வெறுப்பற்ற தன்மை அக வாழ்வினோடு புற வாழ்க்கைக்கும் அது பொருந்தும்.

அந்த நிலை பெற்ற மனத்தின் மாண்பு செயலுறும் விதம் என்ன…?

அத்தகைய அக அழகு பெற்றவனும் ஏங்குகின்றான்… அது உயர்வு எண்ண ஏக்கமப்பா…!
1.அக அழகின் கண் ஏங்கும் வழிப்பாதை… விழிப்பார்வையில் உண்டு.
2.ஈஸ்வரா…! என்ற எண்ணமுடன் ஈர்ப்பின் நிலை ஏக்கமாகப் பெற்றிருத்தலே “விழிப் பார்வையின் காப்பு…”

இந்த நிலையால் மனத்தின் மாண்பு உயர்ந்து கொண்டிடும்.

“உயிரிடமிருந்து” நற்றேன் பருகிடல் வேண்டும்

“உயிரிடமிருந்து” நற்றேன் பருகிடல் வேண்டும்

 

நரலாகும் பொருள் உணவாகும் பொழுது அதைச் சுவைக்கின்றோம். எப்படி…?

மனிதன் எண்ணுகின்ற எண்ண ஓட்டத்தில் உலகோதய நடைமுறைச் செயலுக்கு கவனத்தைச் செலுத்தி உணவை உட்கொண்டிடும் பொழுது அது சுவைபட அருந்தும் நிலையன்றி இப்பரு உடலினுள் அமைவு பெற்றிருக்கின்ற பை “இரைப்பை…!”

அந்தப் பையினுள் எரிகின்ற நெருப்பு தன்னில் இடப்படுகின்ற எரியைச் செரித்திடும் முன்பாக
1.நாசியில்… சுவாச ஓட்ட கதியில்… எண்ண ஓட்ட வாசனைக்கொப்ப சமைப்பின் சமைப்பு தொடங்கப் பெற்றே
2.இரசமாகிய சக்தி நரம்புகளின் சுவாச ஓட்டச் செயலில் ஈர்த்துக் கொண்டிடும் துடிப்பு அலைகளாக ஓடி
3.இரைப்பையில் இடப்பட்ட எரிவைப் பயனுறும் செயலாக்கி
4.கழிவையும் நீக்குகின்ற உடல் தொழில் சூட்சுமத்தில் “ஆத்ம பலம் கூட்டுமப் பொருள் காண வேண்டும்…”

நரல் என்று தேனை உரைத்தோம். முதல் பண்ணவன் (உயிர் – குரு)) இடத்தில் நற்றேன் பருகிடல் வேண்டும். நேற்றைய பாடத்தின் தொகுப்பில் மறைபொருளாகக் காட்டியதையே விண்டு உரைக்கின்றோம்.

நாத நாதாந்தம் காட்டிடும் எண்ணக் குவிப்பாக உயிரான்ம சக்தியை ஜெபிக்கின்ற வழிதனில்
1.உயிரே குரு என அழைத்திடும் முதல் பண்ணவன்
2.”உயிரை எண்ணி,,,: அகம் விடாது ஜெபித்திடும் ஜெப நிலையில்
3.நாதவாகினி அமுதமாகப் பெருகிடும் ஜெபத்தின் சக்தியே “நாம் கூற வந்த நரல்…” (உயிருடன் ஒன்றும் நாதம்)

புற உடல் பயனுறச் செயல் கொள்ளும் நிலை போல் அக உடல் அருந்தும் ஞானத்தேன் எந்த நிலை பெறும்…?

அனைத்துமே அவரவர்களின் எண்ணத்தின் செயல்பாட்டில் இயங்குகின்றதப்பா…!

காட்சி:- வெற்றிடமான இடம்… பின்பு தென்னங்கன்றுகள் நடப்பட்டு வளர்ந்து தோப்பாகின்றது. தன் இனத்தைக் கூவி அழைத்து உணவு உண்ணும் காக்கை. உணவினை எடுத்துச் செல்கின்ற சிற்றெறும்புகளும்.

இதன் பொருளைக் கூறும் முன் தெரிய வேண்டியது… எரிகின்ற அக்கினியில் போடப்படுகின்ற பொருள்கள் எல்லாமே ஒரு நிலை பெற்று “கனன்று…” உருமாறி பொருள் தன்மையே மாறி விடுகின்றது.

ஆனால் பரு உடலில் இயங்கிடும் மறைமுக அக்கினி பொருளின் ரசத்தினைப் பிரித்து உடல் செயல் கொண்டிடச் சேமிப்பாக்குகின்றது.

சேமிப்பின் நிலையைப் பற்றிக் காட்டிடவே காட்சியின் விளக்கம்…!

நீர் நிலை கொண்ட இடமாகத் தேர்வு செய்து பயிர் வளர்த்து வளர்ந்த பின் அது தோப்பாகின்றது. அதையே தனக்கு உகந்த இடம் எனத் தேர்வு செய்து கூடு கட்டுகின்றது காகம்.

தன் இனத்திற்கு உணவை ஊட்ட… அரற்றியே கரைகின்றது… உணவை உண்கின்றது… தன் குஞ்சுகளுக்கும் ஊட்டுகின்றது. உணவாம் சேமிப்பு செயல் கொண்டிட அது கொண்டிட்ட உணர்வால் சேமிப்பின் வழிமுறைகள் இன்றி உலவுகின்றது.

ஆனால் எறும்போ ஊர்ந்து கொண்டிருக்கும். தன் தொழிலின் நிலையில் தன் இனத்திற்கு ஊட்டும் சேமிப்பையும் பெற்று விடுகின்றது.

அப்படி என்றால் நமக்கு இனமூட்டும் சேமிப்பு எது…?

ஜீவ ஆதார சக்தி வலு கொண்டிடும் ஜெபமாக…
1.சரீர உயிரணுக்கள் அனைத்திலும் ஒளியை ஊட்டமாகப் பெற்று
2.அதை வழி நடத்தும் தன்மையாக தொழில் படவே இனமூட்டும் சேமிப்பை உரைத்தோம்.