
மா… “பிரம்மா” – அம்மா…!
“ஓம் ஈஸ்வரா குருதேவா…” என்று அடிக்கடி சொல்கின்றோம். ஓம் என்று சொல்லப்படும் பொழுது சாஸ்திர விதிகளில் “ஓ…ம் – பிரணவம்” என்று சொல்வார்கள்.
அதனுடைய இயற்கையான உண்மையான நிலைகளைப் புரிந்து கொள்வதற்காக மெய் ஞானிகள் நமக்குக் காட்டியது…
1.உயிர் ஜீவனுள்ளதாக இருக்கின்றது
2.நம் உடலுக்குள் அனைத்து அணுக்களையும் அது இயக்கச் செய்கின்றது. அதற்குப் பெயர் “ஓ…!”
3.“ம்…!” என்கிற பொழுது நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ ம் என்று உடலுக்குள் அது இணையச் செய்து அதையும் ஜீவன் பெறச் செய்கின்றது.
அதாவது…
1.ஓ என்பது பிரணவம்
2.ம் என்பது பிரம்மம்.
3.ஓம்… ம் என்று ஆனாலும் நாம் எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ பிரம்மா… “மா…” தாயாகின்றது…!
நாம் எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அந்தக் குணத்தை உயிர் இயக்கச் செய்து ம் என்று உடலுக்குள் ஆகப்படும் பொழுது அது எந்தக் குணமோ அந்த அடிப்படையில் தான் மற்றதெல்லாம் இயங்கும்.
1.ஆகையினால் அது அம்மா… பிரம்மா…!
2.தாயின் நிலையை வைத்துத் தான் பிரம்மா என்று பெயரை வைத்தார்கள் ஞானிகள்.
நமது உயிரின் இயக்கத்தை “ஈசன்” என்றும்… நாம் எண்ணும் எண்ணத்தை ஜீவன் பெறச் செய்வதை “ஓ” என்றும்… நாம் எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அந்தக் குணத்தின் சத்து உடலுடன் ஐக்கியமாகும் பொழுது “ம்” என்றும் தெளிவாக்குகிறார்கள்.
அது தான் ஓ…ம் நமச்சிவாய…! சிவாய நம ஓ…ம்…! என்று பெயரை வைத்து அழைக்கின்றார்கள் நாம் புரிந்து கொள்வதற்கு.
ஆகவே… ஓம் ஈஸ்வரா என்று சொல்லும் பொழுது நாம் எதை எண்ண வேண்டும்…?
ஈஸ்வரா என்று நம் உயிரை எண்ணி… குருதேவா என்று சொல்லும் பொழுது நம் உடலுக்குள் இருக்கக்கூடிய குணங்கள் அனைத்திற்கும் நம் உயிரே குருவாகின்றது என்று எண்ண வேண்டும்.
கோபமாகப் பேசினாலும் சலிப்பாகப் பேசினாலும் சங்கடமாகப் பேசினாலும் சாந்தமாகப் பேசினாலும் உயர்ந்த நிலையில் பேசினாலும் வேதனையாகப் பேசினாலும்
1.இவை அனைத்தும் நாம் எண்ணியதை உயிர் ஜீவனாக்கி ம் என்று நம் உடலாக்கி
2.உடலில் இருக்கும் அனைத்திற்கும் குருவாக இருப்பது உயிரே.
இதைச் சொல்வதற்குத் தான் குருதேவா… குரு என்று காட்டுகின்றார்கள்.
பிரபஞ்சத்திற்குக் கோள்கள் உருவாவதற்கும் பிரபஞ்சத்திற்குள் இயக்குவதற்கும் இந்தப் பிரபஞ்சத்திற்குச் சூரியன் குருவாகின்றது. அதைப் போல நம் உடலுக்குள் உயிர் குருவாக இருக்கின்றது.
1.இதையெல்லாம் சாதாரண மக்களும் உணர்ந்து அறிந்து செயல்படுவதற்கும்
2.மனிதனாக ஆனபின் அடுத்து நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்பதற்கும் தான்
3.காவியங்களாக மெய் ஞானிகளால் படைக்கப்பட்டது.
இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்பதற்குத்தான் ஞானிகள் இதையெல்லாம் காட்டினார்கள்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.