
மகரிஷிகள் உணர்வை நமக்குள் புகுத்தி… அவர்களுடன் இணைந்திருப்பதே மேல்…!
சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றது.
நாம் எதனை உற்று நோக்கி அந்த உணர்வின் தன்மை பெற வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அது பதிவாகி அதனின் கணக்குப் பிரகாரம் தான் நமக்குள் வளர்கிறது. ஆகவே எதனின் கணக்கை நாம் கூட்ட வேண்டும்…?
1.நாம் மெய் ஞானிகள் உணர்வு கொண்டு என்றும் பிறவா நிலையை அடைந்திட
2.அவன் அருளுடன்… அவன் உணர்வை நமக்குள் புகுத்தி… அவனுடன் இணைந்து இருப்பதே மேல்…!
அந்த நிலைகள் எல்லோரும் பெற வேண்டும்.
உங்கள் வாழ்க்கையில் வரும் இடையூறுகள் எத்தனையோ எத்தனையோ…! அதற்கு மத்தியில் அந்த மகரிஷிகளின் உணர்வை இணைத்து வலு ஏற்றுகின்றேன்.
தாவர இனங்களுக்கு நாம் உரச் சத்தை ஏற்றும் பொழுது ஒரு முறை முதலிலே ஏற்றுகின்றோம். அதை ஏற்றுக் கொண்ட பின் அடுத்த முறை மீண்டும் புதுப்பித்துக் கொண்டு வருகின்றோம்.
இப்படி அது இணைத்துக் கொண்ட்தற்குத் தக்கவாறு தான் “புது வித்துக்களாக…” நாம் உருவாக்க முடியும். ஏனென்றால்
1.ஒரு வித்தினை நேரடியாக மாற்றிக் கொண்டு வர முடியாது.
2.அதனைப் பல முறைகள் கொண்டு இணைத்து இணைத்து
3.மாற்றுப் பொருளாக மீண்டும் மீண்டும் உருவாக்கி
4.சீராக அதனுடன் ஒன்றி இயக்கும் நிலைகள் கொண்டு தான் அதைச் செயல் வடிவுக்குக் கொண்டு வர முடியும்.
காரணம் நமக்குள் வேதனைப்படும் உணர்வுகள் ஏராளம் ஏராளம்… பகைமை உணர்வால் வளர்த்துக் கொண்ட வித்துக்கள் ஏராளம் ஏராளம்… தன்னை காத்துக் கொள்ளும் கோப குணம் ஆக இருந்தாலும் அதுவும் ஏராளம் ஏராளம்…!
இத்தகைய வித்துகள் நமக்குள் அதிகமாகப் பெருக்கி இருக்கும் நேரத்தில் இது அனைத்தும் ஒருக்கிணைந்து
1.இதையெல்லாம் இணைத்து அரவணைத்து அதை அடக்கிடும் நிலைக்காக
2.அருள் ஞானிகள் உணர்வினை உங்களிடம் இருக்கும் குணங்களுடன் இணைத்து இணைத்து
3.அதை இரண்டு முறை மூன்று முறை பிணைத்துப் பிணைத்து உங்கள் குணங்களுடன் ஒன்றச் செய்து
4.நினைவு கொண்டு அதை நீங்கள் பெறும் ஆற்றலை… அந்தத் தகுதியைப் பெறச் செய்கின்றோம்.
அது அல்லாதபடி நாம் செய்தோம் என்றால் அது முழுமை சேர்க்க முடியாது.
பாடப் புத்தகத்திலே படித்துவிட்டு “ஆகா நன்றாக இருக்கிறது…” என்று சொல்லிவிட்டு அதற்குப்பின் அதை நாம் ஓரம் கட்டி விடுகின்றோம். அடுத்து அதை மீண்டும் படிப்போம் என்ற நிலை வராது.
அதைப் போன்று அல்லாதபடி யாம் பதிவு செய்யும் உணர்வுகள் உங்கள் நினைவாற்றலுக்குள் அது ஓங்கி வளர வேண்டும். ஆகவே இதைக் கேட்டுணர்ந்த அனைவரும் மனதில் ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு எது சொந்தம்…?
1.அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பெருக்குங்கள்… அதைச் சொந்தமாக்குங்கள்.
2.பிறருடைய குறைகளை உங்களுக்குச் சொந்தமாக்க வேண்டாம்.
3.அந்தச் சொந்தத்தை நீங்கள் கொண்டாடவும் வேண்டாம்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.