
பிறர் நம்மைத் திட்டும் போது என்ன செய்ய வேண்டும்…?
உங்களை நீங்கள் காப்பாற்றாமல் சாமி காப்பாற்றுவார்…! சாமியார் காப்பாற்றுவார்…! ஜோசியம் காப்பாற்றும்…! எந்திரம் காப்பாற்றும்…! என்று நினைக்க வேண்டாம். ஆக ஒன்றும் காப்பாற்றாது,
இந்த உடலிலும் சரி… இந்த உடலை விட்டுப் போனாலும் சரி… உயிருடன் ஒன்றிய நிலையில் உணர்வைச் சேர்த்து உயிர் வெளியிலே போனால் அவனுடன் ஒன்றி அங்கே போக வேண்டும். அதற்கு நீங்கள் தயார் பண்ணிக் கொள்ளுங்கள்.
எமது குருநாதர் என்னைக் கஷ்டப்படச் சொன்னார். சரி என்று யாம் எமது நிலைகளில் எப்பொழுது வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் எங்கு வேண்டுமென்றாலும் போய்க் கொள்ளலாம்.
ஆனால் அவர் எனக்கு இட்ட கட்டளை…!
1.அனைவரது உயிரையும் கடவுளாக மதிக்கச் சொல்லியிருக்கிறார்
2.உங்களிடமெல்லாம் வரம் கேட்கச் சொல்லி இருக்கிறார்.
அதே மாதிரி நீங்கள் ஒவ்வொருவரும் நன்றாக இருக்க வேண்டும்… நன்றாக இருக்க வேண்டும்… என்று வரம் கேளுங்கள். நீங்கள் ஆத்ம சுத்தி செய்யுங்கள்.
ஒருவர் கஷ்டப்படுகின்றார் என்றால் நன்றாக ஆக வேண்டும் என்று வேண்டுங்கள். அந்த உடலிலிருந்து நல்லது கிடைக்கும்… அந்த உணர்வின் தன்மையில் நல்லது நடக்கும்.
1.உங்களுக்குப் பிடிக்காத நிலைகளில் இருக்கிறார்கள் என்று சொன்னால் விலகி நில்லுங்கள்.
2.அவர்கள் சங்கடத்தைப் பற்றி எண்ண வேண்டாம்… விலகி நில்லுங்கள்
3.அவர்களுக்கு நல்ல நேரம் வரட்டும் என்று சொல்லிவிடுங்கள்.
4.எனக்கு இம்சை கொடுக்கிறார்கள்… இம்சை கொடுக்கிறார்கள்…! என்று எண்ண வேண்டாம்…!
இதை நீங்கள் செய்து பழகி வாருங்கள்.
நான் எப்படி உங்களை வேண்டுகின்றேனோ அதைப்போல ஆத்ம சுத்தி செய்து விட்டு நன்றாக ஆக வேண்டும் என்று நீங்கள் சொல்லிப் பாருங்கள். இது உங்களுக்கு நன்மையைத் தரும்.
உங்களை யாராவது திட்டிக் கொண்டே இருந்தால்
1.மகரிஷிகள் அருள் சக்தியால் அவர் அறியாமல் திட்டிக் கொண்டிருக்கும் எண்ணங்கள் மாறி
2.எல்லோருக்கும் நன்மை செய்யக்கூடிய எண்ணம் அவருக்கு வரவேண்டும் என்று எண்ணுங்கள்.
அவர் திட்டும் பொழுதெல்லாம் கேட்கும் பொழுதெல்லாம் இதைச் சொல்லிக் கொண்டே வாருங்கள். அவர் திட்டுவது உங்களுக்கு வராது… நீங்கள் செய்வது அவருக்குப் போய்ச் சேரும்.
ஆனால்… இப்படித் திட்டுகிறானே…! இருக்கட்டும் பார்க்கிறேன்…! என்று சொன்னால்
1.ஆத்திரம் கொஞ்சம் கொஞ்சமாக நமக்குள் வந்து
2.இரத்தக் கொதிப்பு கை கால் குடைச்சல் தலைவலி போன்று நமக்குள் வர ஆரம்பித்து விடும்.
ஆகவே அத்தகைய நிலைகள் நமக்குள் வராதபடி ஆத்ம சுத்தியைக் கடைப்பிடித்துத் தீமைகளை அகற்றுவோம். இதைச் சீராகக் கடைப்பிடிப்போர் அனைவருக்கும் எமது அருளாசிகள்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.