கருத்துப் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பதன் அவசியம்

கருத்துப் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பதன் அவசியம்

 

என்னிடம் நினைவைச் செலுத்தி… வினாக்களை எழுப்பும் பொழுது விடைகளைப் பெற்று அனைவரும் அதன் மூலம் அதற்குண்டான விளக்கங்களைப் பகிர்ந்து கொள்ள எதுவாக இருக்கும்.

யாம் பல முறைகளிலும் வகைகளிலும் உபதேசத்தைக் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.
1.எந்த அளவிற்கு அது உங்களுக்குள் ஆழமாகப் பதிந்து இருக்கின்றது…?
2.உங்களுடைய மனோ நிலை என்ன…?
3.எதை அறிந்திருக்கின்றீர்கள்…? அறிய விரும்புகின்றீர்கள்…? என்பதற்குத் தான் “கேள்வி பதில்…” வைப்பது.

உபதேசம் பொதுவாகச் சொல்கின்றோம்… கேட்கின்றீர்கள். சாமி சொல்வது நன்றாக இருக்கிறது என்று ஒரே வரியில் சொல்லி விட்டுச் செல்வோரும் உண்டு.

சிலர் என்ன நினைக்கிறார்கள்…! சாமி சொல்கின்றார் ஆனால் சொன்னதையே திரும்பச் சொல்கின்றார் என்று திருப்பிச் சொல்லி விடுகின்றார்கள்.

ஆனால் நேற்று என்ன சொன்னார்…? அதற்கு முந்தி என்ன சொன்னார்…? இன்று என்ன சொல்கின்றார்…? என்று கேட்டால் முழிக்கின்றார்கள்.

ஆகவே… உபதேசம் என்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல…!

குருநாதர் காட்டிய அருள் வழியில் யாம் உபதேசம் கொடுக்கப்படும் பொழுது நான் எதையும் முதலில் நினைத்துக் கொண்டு ஆரம்பிப்பது அல்ல.
1.யார் யார் இங்கே முன்னாடி வந்து இதை விரும்புகின்றார்களோ… எதை அறிய வேண்டும் என்று எண்ணுகின்றார்களோ…
2.அதன் அடிப்படை ஆதாரமாக வைத்துத் தான் அன்றைய உபதேசமே அமையும்.

ஒரு பத்து பேர் நினைக்கின்றார்கள் என்றால் அவர்கள் அனைவருக்கும் கிடைக்கக் கூடிய அளவிற்கு இந்த உபதேசம் வரும். “நான் நினைத்துக் கொண்டு வந்தேன் சாமி சொல்லிவிட்டார்…! நான் நினைத்துக் கொண்டு வந்தேன் சாமி சொல்லிவிட்டார்…! என்று எல்லோரும் சொல்வார்கள்.

அத்தகைய நினைவு வந்தாலும் கூட நாம் பதிந்து கொண்ட நிலையும்… இந்த வாழ்க்கையை எவ்வாறு வழிநடத்த வேண்டும்…? என்பதையும் அறிய வேண்டும்.

இந்தக் காற்று மண்டலத்தில் “மகரிஷிகளின் அருள் சக்தி எவ்வளவு கலந்துள்ளது…” என்று பல ஏற்கனவே சொல்லி இருக்கின்றேன்.
1.அதை எண்ணும் போது நமக்குள் அந்தச் சக்தி எப்படிக் கவரப்படுகிறது…?
2.அதை எப்படி நமக்குள் சேர்த்து வலுப்படுத்துவது…?
3.அதற்கு நாம் எதை நினைவுபடுத்த வேண்டும்…? என்று இதையெல்லாம் அறிந்து கொள்வது மிகவும் நல்லது.

ஆகவே உபதேசத்தைக் கேட்டுணர்ந்த நீங்கள் எந்த அளவுக்கு மீண்டும் அதை உயர்த்திக் கொள்ள வேண்டும்…? எப்படி வலுப்பெறச் செய்ய வேண்டும்…? அருள் ஞானத்தை எப்படி வளர்க்க பெற வேண்டும்…? என்பதற்குத்தான் கேள்விகளை எழுப்பும்படிச் சொல்வது.

எல்லோருக்கும் இது பயனுள்ளதாக அமையும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply