
கடவுள் தனித்து ஒருவன் இல்லை
அடிக்கடி ஞாபகப்படுத்துவது எதை ஆரம்பித்தாலும் “ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!” என்று நாம் செயல்படுத்துகின்றோம். காரணம் நமது உயிர் “ஓ…” என்று இயங்கிக் கொண்டே உள்ளது.
இதைத்தான் ஓ என்று ஞானிகளால் காரணப்பெயர் சூட்டப்பட்டது. நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அதை ஓ என்று ஜீவ அணுவாக மாற்றுகின்றது. ம் என்று நம் உடலாக மாற்றுகின்றது அதனால் தான் ஓம் ஈஸ்வரா குருதேவா.
1.நான் எண்ணியதை உருவாக்குகின்றாய்.
2.என் உடலுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளுக்கும் குணங்களுக்கும் நீயே குருவாக இருக்கின்றாய் என்ற பொருள்படும்படித் தான்
3.இதை நாம் அடிக்கடி பயன்படுத்துவது.
ஈசன் என்று சொல்வதும் இந்த உயிரைத்தான்… ஆண்டவன் என்று சொல்வதும் இந்த உயிரைத்தான்… கர்த்தர் என்று சொல்வதும் இந்த உயிரைத்தான்…!
ஆகவே நமக்குள் இந்த உயிர் நாம் எதை எண்ணி எடுக்கின்றோமோ அதை ஆட்சி புரிகின்றது… அதை இயக்குகின்றது… என்ற பொருள் படும்படித் தான் உணர்த்தியுள்ளார்கள்.
ஆண்டவன் என்று சொல்லும் பொழுது உடலுக்குள் இருக்கும் அனைத்தையும் ஆண்டு கொண்டிருப்பதும் உயிர்தான். ஆகவே
1.அவனன்றி அணுவும் அசையாது என்பது போன்று
2.நம் உயிர் இந்த உடலில் இல்லை என்றால் இந்த உடலில் உள்ள ஒரு அணுவும் அசையாது.
3.அதனால் தான் அவன் இன்றி அணுவும் அசையாது என்று சொல்கின்றோம்.
கடவுள் இல்லை என்றால் எதுவும் அசையாது என்பார்கள்.
நமக்குள் அந்த உயிர் கடவுளாக நின்று இயங்குகின்றது.
1.நாம் எண்ணும் எண்ணங்கள் அது எத்தகையதாக எண்ணுகின்றோமோ அவை அனைத்தும் நம் உடலாக இறையாகி…
2.இறையின் உணர்வுகள் நமக்குள் அணுவாகி அணுவின் சக்தியாக நமக்குள் இயங்கப்படும் பொழுது… நம்முள் நின்று இயக்கம் கடவுளாகின்றது.
ஆகவே கடவுள் என்று ஒருவர் தனித்து யாரும் இல்லை.
நமக்குள் பல விதமான குணங்களும் பல விதமான உணர்வுகளும் நம்மை இயக்கிக் கொண்டே தான் உள்ளது… நாம் இயங்கிக் கொண்டுதான் உள்ளோம்.
நாம் கோபமாகப் பேசுகிறோம் என்றால் அந்தக் கோபத்தின் உணர்வை உயிர் உருவாக்கி… அணுவாக்கி உடலாக்கப்படும் பொழுது நமக்குள் அது எந்தக் குணமோ அந்தக் குணத்தின் செயலாக இயக்கப்படும் பொழுது… அதற்குத் தெய்வம் என்று பெயர் வைக்கிறார்கள்… காரணப்பெயர்.
அதே சமயத்தில் நமக்குள் நின்று அது இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது நாம் நினைக்கின்றோம் அதைப் பதிவாக்கிவிடுகின்றோம்.
1.மறுபடியும் அதை நினைத்தோம் என்றால்
2.அது குருவாக வந்து அந்தத் தெய்வமாக நம்மை இயக்குகிறது என்று பொருள்.
ஆகவே அந்த அணுவின் தன்மை நமக்குள் இங்கே நிலை கொண்டிருந்து அதே உணர்வை நமக்குள் இயக்கிக் கொண்டே இருக்கிறது என்றால் “உருவாக்கிக் கொண்டே இருக்கும்…”
ஒரு வித்தினை மண்ணிலே ஊன்றி விட்டால் அது செடியாகித் தன் இனத்தின் வித்தினை உருவாக்குவது போன்று…
1.நமக்குள் கடவுளாக இருந்து அந்தக் குணத்தின் தன்மையைப் பெருக்கிக் கொண்டே இருக்கும் என்று பொருள்.
2.ஆக… கடவுள் தனித்து ஒருவன் இல்லை… இயக்கத்தை ஞானிகள் இவ்வாறுதான் உணர்த்தி உள்ளார்கள்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.