
பேய் ஓட்டுகிறார்கள் என்றால் “இன்னொரு பேயை உள்ளே ஏற்றுகின்றார்கள்” என்று தான் பொருள்
எண்ணற்ற காலம் முதற்கொண்டே இவ்வாவிகளை வசியப்படுத்தி செயல்படுத்திடும் பல நிலைகள், பல ஆயிரம் காலங்களாகவே இருந்து வருகின்றன. நற்காரியங்களுக்காகவும் தன் பேராசையின் நிலைக்காகவும் இந்நிலையைச் செயல்படுத்தி வந்தார்கள்.
மந்திரம் மாயம் செய்வதெல்லாம் ஒரு கலையாகவும் வம்ச வழியாகவும் நிலைப்படுத்தி செயல் கொண்டு வருகின்றனர். நம் நாட்டில்தான் பேய் ஓட்டுதல், மந்திரித்தல் என்பன போன்ற பல நிலைகள் நடக்கின்றன.
1.எண்ணத்தில் சோர்வு கொண்டவரின் உடலில் அவர்கள் எந்த எண்ணத்தைக் கொண்டு உள்ளனரோ
2.அவ்வெண்ண நிலைக்கொப்ப ஆவிகள் அவர்கள் உடலில் ஏறி விடுகின்றன.
உதாரணமாக பல ஆசை நிலையுடன் வாழும் ஒருவன் தன் இல்லத்தில் குழந்தைகளின் பற்றைக் கொண்டு, பல நினைவுகளுடன் இல்லத்தில் இருந்து வெளி இடங்களுக்குச் செல்லும் நிலையிலும், இல்லத்தில் இருந்த நிலையின் எண்ண ஆசையுடன், தன் குழந்தைகளுக்கு வேண்டிய பொருள் வாங்கும் ஆசையில், அதே எண்ண நிலையில் செல்லும் பொழுது அவ்வாசை நிலை கொண்ட நிலையில், மற்ற போக்குவரத்து இடையூறுகள் கவனிக்கப்படாமல் விபத்து ஏற்பட்டு, அந்நிலையில் அகால மரணம் எய்தி குருதி (இரத்த) வெள்ளத்தில் அடிபட்டு ஆத்மா பிரிந்த பிறகு
1.அவ்வாத்மா அவ்வாசை நிலையுடன் அங்கேயேதான் சுற்றிக் கொண்டிருக்கும்.
2.அதே நிலை கொண்ட எண்ண நிலை உடையவன் அந்நிலைக்குச் செல்லும் பொழுது
3.இவ்விரண்டு எண்ணங்களும் ஒரு நிலைப் பட்டவுடன் இவன் உடலில் அவ்வாவி ஏறிக்கொள்கின்றது.
இவனுடைய செயலுடன் அவ்வாவியின் செயலும் ஒன்றுபட்ட பிறகு இவன் உடல் நிலையில்… அவ்வுடலில் அவ்வாவி மனிதனாய் வாழ்ந்த காலத்தில் இருந்த நிலையெல்லாம் “இவன் உடலிலும் ஏறிக்கொள்கின்றது…”
தன் நிலையே, தான் மறந்து உடலில் உள்ள ஆவிக்குத் தன்னை அறியாமல் அடிமைப்பட்டு வாழும் நிலை ஏற்பட்ட நிலையில்… சோர்வு கொண்ட நிலையுணர்ந்து உள்ளவர்கள் மந்திரவாதிகளிடம் செல்லும் நிலை மிகுந்து விட்டது.
இந்நிலை கொண்டவன் மந்திரவாதியிடம் சென்றால்…
1.அவனுக்கு இவன் உடலில் ஏறியுள்ள மற்றொர் ஆவி ஆத்மாவின் நிலை புரிந்து பேய் ஓட்டுவதாகச் சொல்லி
2.மீண்டும் இதற்கு மேல் சக்தி கொண்ட மற்றும் ஒரு குட்டிச்சாத்தானை இவன் உடலில் ஏற்றி
3.அதன் சக்தியைச் செயல்படாமல் செய்து “பேய் ஓட்டுவதாய் அவ்வாத்மாவைப் பல இம்சைகள் செய்து” அவன் பொருளீட்டிக் கொள்கின்றான்.
இவன் உடலில் ஏறிய குட்டிச்சாத்தான் ஏவலிலிருந்து, “இவன் உடல் அழியும் வரை தப்புவது இயலாக் காரியம்…” இப்பேயோட்டும் நிலையினால் ஒவ்வொருவரையும் என்றென்றைக்கும் அதற்கே அடிமைப்படுத்துகின்றனர்.
இந்நிலையிலிருந்து தப்புவதற்கு நம் உடலில் எவ்வாத்மா எவ்வாவி நிலைகள் ஏறி இருந்தாலும்
1.அதன் பாதிப்பால் வரும் சஞ்சலம், சோர்வு, சோர்வில் இருந்து விடுபட
2.எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி மகரிஷிகள் உணர்வின் ஆற்றலைப் பெருக்கி
3.அந்தச் சக்தியை அந்த ஆன்மாவுக்கும் அன்பு கலந்த நிலையில் பெறச் செய்ய வேண்டும்.
அப்படித் தான் அதன் செயலைக் கட்டுப்படுத்த முடியும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.