
சினிமா படம் மூலம் உணர்த்தினார் குருநாதர்
ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும்
1.சந்தர்ப்பங்கள் அவர்களை எந்தெந்த நேரத்தில் எது எது இயக்குகின்றது…? என்பதையும்
2.அவரவர் வாழ எதைச் செய்கின்றனர்…? என்பதையும் நமது குருநாதர் எமக்குத் தினம் தினம் அனுபவப்பூர்வமாக உணர்த்தினார்.
ஒரு உடலில் ஒரு உணர்வின் தன்மை எப்படிப் பெருகுகின்றது…? பெருகியபின் அவ்வுடல் என்ன நிலையாகின்றது…? என்பதையெல்லாம் எமக்குத் தெளிவாக உபதேசித்து அருளினார்.
குருநாதர் எமக்கு எழுத்து வடிவில் எதையும் கற்றுக் கொடுக்கவில்லை. ஆனால் அருள் வழியில் எமக்குக் கற்றுக் கொடுத்தார்.
1.பார்த்தால் சின்ன விஷயமாகத் தோன்றும்.
2.ஆனால் அதனுள் விஷயம் ஏராளமாக இருக்கும்.
எமது சொந்தக்காரர்கள் எல்லாம் எம்மைப் பார்த்துப் பைத்தியத்துடன் சேர்ந்து அலைந்து கொண்டிருக்கின்றேன் என்று எம்மைத் திட்டுவதற்குதான் வந்தார்களே தவிர “குருநாதருக்கும் எமக்கும் இடையே உள்ள உண்மை நிலை என்ன…?” என்பதை அறிந்து கொள்ள முன் வரவில்லை.
நண்பர்களாக இருந்தவர்களும் எம்மைப் பைத்தியத்துடன் சேர்ந்து பைத்தியமாகி விட்டார் என்றுதான் பேசினார்கள். ஏன்…! எமது வீட்டில் சாமி அம்மாவும் அப்படித்தான் பேசினார்கள். வீட்டில் இருந்த மாமா அத்தை எமது குழந்தைகள் என்று அனைவரும் எம்மை அப்படித்தான் நினைத்தார்கள்.
அருள் உணர்வின் தன்மையை சாமி அம்மாவும் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்து கொண்டார்கள். ஏனென்றால் நாங்கள் வைத்திருக்கும் விறகுக் கடைக்குக் குருநாதர் வந்து ஹாயாகப் படுத்துக் கொள்வார்.
சாமி அம்மாவிடம்… இவர்களைப் பார் அவர்களைப் பார் என்று தனது உள்ளங்கையைக் காண்பிப்பார். இப்படியெல்லாம் பல நிலைகளைச் செய்து உலகம் எப்படி இருக்கிறது…? என்று உணர்த்தினார் குருநாதர்.
பிறகு… சினிமாத் தியேட்டர்களில் என்ன படங்கள் ஓடுகின்றன…? என்று குருநாதர் கேட்பார். சினிமாத் தியேட்டர்களில் ஓடும் படங்களைச் சொன்னால் எந்தச் சினிமாப் படம் பார்க்க விரும்புகின்றாய்…? அதை இங்கேயே பார்க்கலாம்…! என்று கூறுவார்.
அது எப்படித் தியேட்டரில் ஓடும் சினிமாப் படத்தை இங்கிருந்து பார்க்க முடியும்…? என்று யாம் கேட்போம்.
இப்பொழுது பார்…! என்று கூறுவார். சினிமாப் படத்தை அப்படியே நாங்கள் நின்ற இடத்தில் இருந்தே பார்க்க முடிந்தது. எமது மகள் மீராவிடம் தியேட்டரில் என்ன படம் ஓடுகின்றது…? என்று கேட்பார் குருநாதர். மீராவிடம் கேட்டு மீரா விரும்பிய படத்தை அங்கே காண்பிப்பார்.
யாம் குருநாதர் எமக்குக் கொடுத்த உணர்வுகளை வரிசைப்படுத்தி, ஒழுங்குபடுத்தி எந்தத் தியேட்டரில் என்ன படம் ஓடுகின்றது…? என்று குழந்தைகளிடம் கேட்டு அதைப் பாருங்கள் என்று கூறி “யாமும் மற்றவர்களுக்குச் சினிமாப் படம் காண்பிக்க ஆரம்பித்தோம்…”
இதனால் எம்மைப் பார்த்தால் போதும், குழந்தைகள் கூட்டம் கூடிவிடும். நைனா… நைனா…. என்று குழந்தைகள் எம்மைச் சூழ்ந்து கொள்வார்கள். இந்தந்தச் சினிமாப் படங்களைக் காண்பியுங்கள் என்று கேட்பார்கள். அவர்கள் கேட்ட சினிமாவைக் காண்பித்தால் உடனே குழந்தைகளுக்குக் குஷியாகும்.
அதன் பிறகு குருநாதர் எம்மைத் திட்டுவார். உன்னைச் சினிமா பார்க்கச் சொன்னேனா…? என்று கேட்டார்.
1.ஒவ்வொருவரும், சினிமாவில் நடிப்பதைப் போன்று வாழ்க்கையில் எப்படி நடிக்கின்றார்கள்…?
2.இதனின் உணர்வு எப்படி வருகின்றது…?
3.ஒருவருக்கு நடிப்பு எப்படி வருகின்றது…?
4.ஒரு உணர்வை நுகர்ந்தபின் எப்படி நடிக்கின்றார்கள்…?
5.நுகர்ந்த உணர்வின் உணர்ச்சிகள் ஒருவரை எப்படி ஆட்டிப் படைக்கின்றது…? என்று
6.அதைத்தான் உன்னைப் பார்க்கச் சொன்னேன்…! என்றார் குருநாதர்.
ஒருவருடைய உணர்வுக்குத் தக்க அவருடைய வாழ்க்கையில் வீட்டில் ஒருவருடன் சண்டைக்குச் செல்கின்றார். ஒரு பக்கம் அரவணைக்கின்றார் மறு பக்கம் வெறுக்கின்றார்… இத்தகைய உணர்வுகளைச் சுவாசிக்கின்றார்.
அதனின் உணர்வுகள் அவருக்குள் எப்படி அங்கே இயங்குகின்றது…? என்று உபதேசித்தார்.
நீ குழந்தைகளுக்குச் சினிமாப் படம் காண்பிக்கின்றாய். அதனால் குழந்தைகள் சந்தோஷப்படுகின்றன. ஆனால் பெரியவர்களிடம் சொன்னால், அவர்கள் எதற்கு ஆசைப்படுகிறார்கள்…?
ஏதாவது, புதையல் கிடைக்குமா…? புதையல் இருக்கும் இடம் தெரியுமா…? என்று கேட்டு வருகின்றார்கள். புதையல் கிடைத்தால் நான் நன்றாக ஆகிவிடுவேன்… குபேரனாக வாழலாம் என்பது பெரியவர்களுடைய ஆசை.
1.ஆனால் அருள் ஞானத்தைப் பெருக்க வேண்டும் இருளைப் போக்க வேண்டும் என்ற நிலைக்குத்தான் அருள் ஆற்றலை உனக்குக் கொடுத்தேன்.
2.நீ மற்றவர்களுடைய ஆசைகளைப் பெருக்கவா போகின்றாய்…? என்று கேட்டார் குருநாதர்.
ஆகையினால் எந்த ஆசையினைப் பெருக்க வேண்டும்…? அருளை ஆசைபட்டால் இருளைப் போக்கும். உடலின் ஆசையை வளர்த்தால் இருள் சூழும். ஆக
1.உயிர் ஆசை
2.உடல் ஆசை என்பதற்கு விளக்கம் கொடுத்தார் குருநாதர்.
ஏனென்றால்… விஞ்ஞான அறிவில் எலெக்ட்ரிக் எலெக்ட்ரான் என்ற நிலை வரப்படும் பொழுது கம்ப்யூடர் போன்ற சாதனங்களை உருவாக்குகின்றனர்.
கெமிக்கல் கலந்த நிலைகளில் நாம் எப்படி
1.“சிக்கி முக்கி” கல்லைத் தட்டுகின்ற பொழுது அதில் உணர்வின் அதிர்வும் ஒளியும் வருவதைப் போன்று
2.கெமிக்கல் கலந்த பொருள்களில் அதிர்வைக் கொடுத்து உணர்வின் ரூபத்தை விஞ்ஞான அறிவால் காட்டுகின்றனர்.
நாம் கோபம் என்ற நிலையை எடுத்துக் கொண்டபின் கோபத்தின் உணர்வுகள் எலெக்ட்ரானிக் கோப உணர்வின் உணர்ச்சிகள் அழுத்தங்கள் வரப்படும் பொழுது நமது கண் எப்படிச் சிவக்கின்றது…? நரம்புகள் எப்படி முறுக்குகின்றது…? எதன் வழி செயல்படுகின்றது…? என்று குருநாதர் எமக்கு உணர்த்தினார்.
எலெக்ட்ரிக் எலெக்ட்ரான் என்ற நிலையில் ஒரு பொருளுடன் ஒரு பொருள் கலக்கப்படும் பொழுது அதனின் கலவையின் நிலைகள் எப்படிச் செயல்படுகின்றன…? செடி கொடிகள் எப்படி வளர்கின்றன…? எப்படி ரூபம் மாற்றமடைகின்றன…? என்பதையெல்லாம் எமக்கு உணர்த்தினார்.
இப்படி…
1.எங்களுக்குள் நடைபெறும் உணர்வுப் பரிமாற்றங்கள் வேறு யாருக்கும் தெரியாது.
2.அனுபவரீதியாக ஒவ்வொன்றையும் சினிமாப் படம் போன்று காண்பித்தார்.
3.இந்த உண்மையின் இயக்கத்தை நமது அகத்திற்குள் பதிவு செய்ய வேண்டும் என்ற நிலைகளில்
4.குருநாதர் எமக்கு உபதேசித்த அருள் வழி கொண்டுதான் இப்பொழுது யாம் உங்களிடத்தில் பதிவு செய்கின்றோம்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.