
துருவ நட்சத்திரத்தின் ஒளிக்கற்றைகள்
தீமையின் உணர்வுகளைச் சமப்படுத்தி அதை ஒளியாக மாற்றும் அந்த அறிவின் ஞானமாக மாற்றிடும் நிலைகளுக்காகத் தான்… அன்று சைவ சித்தாந்தம் மகரிஷிகளால் உருவாக்கப்பட்டது.
மின்மினிப் பூச்சிகளைப் பார்க்கின்றோம். அது தனது உணர்வின் தன்மையை மூச்சலைகளாக மாற்றும் பொழுது
1.அதற்குள் இருக்கக்கூடிய கந்தகத்துடன் உராய்ந்து
2.ஒளிக்கற்றைகளாக மின்னி வெளிச்சத்தை ஊட்டுகின்றது.
அதைப் போன்று தான் மகரிஷிகளும் விண்ணிலிருந்து வரும் உணர்வை அடக்கி ஒளியாக மின்னிக் கொண்டிருக்கின்றார்கள்… ஒளிக்கறைகளை உமிழ்த்திக் கொண்டுள்ளார்கள்.
நமது வாழ்க்கையில் இருள் சூழும் நிலைகள் வரும் பொழுது… அந்த இருளை மீட்டிடும் நிலையாக நாம் நம்முடைய ஒவ்வொரு அணுக்களிலும் அந்த மகரிஷிகளின் ஆற்றலை இணைக்க வேண்டும்.
அதாவது இருள் சூழ்ந்த நிலையை நீக்கிவிட்டு உட்பொருளை நாம் அறியும் சக்தியாக அந்த மகரிஷிகளின் ஆற்றலை நாம் பெறுதல் வேண்டும்.
எப்பொழுதெல்லாம் சங்கடமும் வேதனையும் தோன்றுகின்றதோ அந்த நேரத்தில் எல்லாம்
1.அதை மாற்றியமைத்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் நுகர்ந்து அதனுடன் இணைத்து விட்டால்
2.தீமையின் உணர்வு தனக்குள் வராதபடி தடுத்து அதற்குள் உட்பொருளை அறியும் அறிவின் ஞானமாக நமக்குள் வளரும்.
மனிதனான பின் இதைத்தான் கார்த்திகேயா என்பது…! பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்கி வளர்ச்சி அடைந்த அந்த ஆறாவது அறிவால் நாம் மாற்றி அமைத்து அதற்குத் தக்க ரூபங்களை மாற்றி அந்த உணர்வின் எண்ணங்களால் இன்று மனிதனாக உருவாக்கி வைத்துள்ளது நமது உயிர்.
ஆகவே… எதனையும் அறிந்திடும் செயலாக்கங்கள் மனித உடலுக்குள் உண்டு. ஆறாவது அறிவைச் சீராகச் செயல்படுத்திய மனிதன் தான் விஞ்ஞானியாக ஆகின்றான்.
அதைச் சீராகச் செயல்படுத்தும் மெய் ஞானி தன் உணர்வின் தன்மை கொண்டு உடலின் மாற்றத்தை உருவாக்கி… ஒளியாக மாற்றிடும் நிலையாகப் பிறவி இல்லாத நிலை அடைகின்றார்.
வானவியல் புவியியல்… அதாவது
1.வானிலே விளைந்த அணுக்களின் தன்மை புவியியலாக மாற்றப்படும் பொழுது தாவர இனங்களாக மாறுகின்றது
2.தாவர இனங்களாக மாற்றிய உணர்வின் தன்மையை உயிரணு நுகரப்படும் பொழுது உயிரியலாக மாறுகின்றது.
உயிரியலின் தன்மை தனக்குள் மாற்றப்படும் பொழுது
1.விண்ணுலகில் உயிரணுக்களின் மின் அணு போன்று தீமைகளை நீக்கி
2.தீமையற்ற உணர்வுகளைத் தனக்குள் வளர்த்தவர்கள் தான் மகரிஷிகள்.
மின்மினிப் பூச்சி தான் நுகரும் உணர்வின் தன்மை கொண்டு “வெளிச்சத்தை உருவாக்கி” இரை தேடிச் சென்று அந்த உணர்வினை அது வளர்க்கின்றது. அதைப் போன்று தான்
1.துருவ மகரிஷி தனக்குள் ஒளியின் சரீரமாக ஆகி வளர்ந்து இன்றும் துருவ நட்சத்திரமாக உள்ளான்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் ஒளி அலைகளாக இன்றும் வெளிப்பட்டுக் கொண்டுள்ளது… நமக்கு முன் பரவிக் கொண்டுள்ளது.
உதாரணமாக ஒரு மனிதன் வேதனைப்படுகிறான் என்றால் உற்றுப் பார்த்து அவனுக்கு வேண்டிய உதவிகளை நாம் செய்தாலும் அந்த வேதனையான உணர்வுகள் நம் உடலில் உள்ள நல்ல அணுக்களில் படரப்படும் போது இருள் சூழ்ந்து விடுகிறது.
அப்போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவர்ந்து அதை அடக்கி ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.
மின்மினிப்பூச்சி தன் ஒளிக் கதிர்களைப் பாய்ச்சி
1.மற்ற எதிரிகளிடம் இருந்து தப்பி
2.தாவர இனங்களில் விஷத்தன்மையான அணுக்களை விலக்கிவிட்டு
3.தான் எந்த இடத்தில் உணவாகத் தேடியதோ அதைத் தெளிவாக எடுத்து அந்த உணர்வின் அணுக்கள் ஒளியாக விளையும்.
இதைப் போன்று தான் துருவ மகரிஷி துருவ நட்சத்திரமாக “ஒளியின் நிலைகளாக ஜொலித்துக் கொண்டு” இந்தப் பிரபஞ்சத்திற்குள் வருவது அனைத்தையுமே ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டுள்ளார்.
அதிலிருந்து வெளிப்படும் ஒளிக்கற்றைகளை சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்ந்து பரவச் செய்கின்றது.
1.அதை யாரெல்லாம் உற்று நோக்குகின்றார்களோ…
2.அதைப் பெற வேண்டும் என்று பதிவு செய்து அந்த ஆற்றலைப் பருக எண்ணுகின்றார்களோ…
3.அவர்கள் அனைவரும் அதைப் பெறும் தகுதி பெறுகின்றார்கள்.
எத்தகைய வேதனையோ அல்லது நஞ்சான உணர்வுகளோ வந்தாலும்… அதனால் அவதிப்படுவோருக்கு நாம் உதவி செய்தாலும்… அந்த உணர்வினைத் தனக்குள் கவராது “துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதனுடன் இணைக்கப்படும் பொழுது” இருளை நீக்கி… தனக்குள் பொருள் காணும் நிலைகளுக்கு “அந்த உணர்ச்சிகளைத் தூண்டிச் சமப்படுத்தும் எண்ண வலிமையை உருவாக்கும்…!”
ஆகவே ஒவ்வொரு நொடியிலும்
1.துருவ நட்சத்திரத்தின் ஒளிக் கற்றைகளை நாம் நுகர்தல் வேண்டும்…
2.உயிருடன் ஒன்றும் உணர்வினை ஒளியின் அணுக்களாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.