குருநாதர் எமக்குக் கொடுத்த “அழியாச் சக்தி”

குருநாதர் எமக்குக் கொடுத்த “அழியாச் சக்தி”

 

1.குருவிடம் சிக்கிக் கொண்டோம்…
2.காடு மேடெல்லாம் அலைய வைக்கின்றார்… பல துன்பங்களைக் கொடுக்கின்றார்
3.என்ன வாழ்க்கை…? என்று நான் (ஞானகுரு) வெறுக்கின்றேன்.

என் குழந்தைகள் என்ன செய்யும்…? அவர்களையெல்லாம் விட்டுவிட்டு குருநாதர் பின்னாடி வந்து விட்டோமே…! என்று மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்படி ஒரு இக்கட்டான நிலை…!

ஏனென்றால்
1.முதலிலே ஒரு மலை மீது ஏற்றி வைத்தார்
2.இரண்டாவது இமயமலையில் சீனா பார்டர் அருகிலே கொண்டு என்னை நிற்க வைத்து விட்டார்.
3.இந்தப் பக்கமும் வர முடியாது… அந்தப் பக்கமும் செல்ல முடியாது.

இரண்டு மலைகளுக்கு மத்தியில் உறை பனி அதிகமாக இருக்கின்றது. நான் முதலில் அதை தாண்டித் தான் இந்தப் பக்கம் வந்தேன். இருந்தாலும் அந்தப் பனிப்பாறைகள் அனைத்தும் திடீரென்று திடு…திடு… என்று இடிந்து விழுந்தது.

வந்த பாதையைக் காணவில்லை…!

நான் நடந்து வந்திருக்கும் போது விழுந்திருந்தால் என்ன ஆகியிருப்போம்…? என்று பயம் வருகிறது. பயந்து கொண்டிருக்கும் பொழுது வீட்டு மேல் ஞாபகம் வருகின்றது.

பிள்ளைகளுக்கு என்ன ஆனதோ…? ஏதானதோ…? பெண்டு பிள்ளைகள் என்ன ஆனார்கள்…? என்று இந்த எண்ணங்கள் வருகின்றது.

அந்தப் பனிப்பாறைகளில் நடந்து செல்லும் போது குளிர் பாதிக்காமல் இருப்பதற்காக
1.குருநாதர் சில இதுகளைச் சொல்லி நீ இதைத் தியானி.
2.இந்த பனியின் குளிர் தெரியாதபடி உன் உடலில் சூடு உருவாகும்.

இப்படி நான் (ஈஸ்வரபட்டர்) உனக்குச் சொன்ன நிலைகளில்
1.நீ எதை எதையெல்லாம் எண்ணுகின்றாயோ “அந்த உணர்வுகள் உனக்குள் வளர்ந்து”
1.அந்த அருள் சக்தி கொண்டு எதிர்காலத்தில் உன்னைக் காத்துக் கொள்ளலாம் என்று பல முறை எனக்குச் சொல்லி உள்ளார்.

இருந்தாலும் நடந்து வந்த பாதை இடிந்து விழுந்த பின் எந்னுடைய எண்ணங்கள் குழந்தை மீதும் குடும்பத்தின் மீதும் செல்கிறது. நான் நடந்து வரும் போது இடிந்து விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்…? என்று சிந்தனைகள் வருகின்றது

இப்படி எண்ணும் பொழுது உடலில் கிர்..ர்ர்ர்… என்று ஒரு இன்ஜின் ஓடினால் எப்படி இரையுமோ என் உடல்… இருதயம்… எல்லாம் இரைய ஆரம்பித்து விட்டது. கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டது ஒரு நிமிடம் ஆனால் மொத்தமாக இன்ஜின் ஆஃப் ஆவது போல ஆகிவிடும் போல இருந்தது.

அந்த நேரத்தில் குருநாதர் என் வீட்டில் நடப்பதையும் காட்டுகின்றார். அந்தக் காட்சி தெரிகிறது.

என் பையன் சிறியவன் ரோட்டில் முச்சந்தியிலே உட்கார்ந்து கொண்டு இரத்த இரத்தமாக அவனுக்கு வெளியே செல்கின்றது அவன் நானா… நானா… என்று என் பெயரைச் சொல்லி அவன் இருந்து கொண்டிருக்கின்றான்.

என் மனைவியோ அப்பொழுதுதான் அது நோயிலிருந்து விடுபட்டது. தன் குழந்தையைத் தேடி வந்து பார்க்கக்கூடிய நிலைகள் முடியாது இருக்கிறது. கவலையோடு மற்றதை எண்ணிக் கொண்டிருக்கிறது.

இவனுக்கு இங்கே ரோட்டில் இரத்தமாகப் போய்க்கொண்டிருக்கிறது இதை எல்லாம் நான் காட்சியாகக் கண்டபின் எனக்கு உணர்வுகள் மாறுகின்றது.

பனிப் பாறைகளுக்கு மத்தியில் அந்தக் குளிர் பாதிக்காது இருப்பதற்கு குருநாதர் எடுக்கச் சொன்னதை மறந்து விட்டேன். பின் இந்த உடல் இரையும் போது உயிரே போய்விடும் போலிருக்கிறது.

இப்பொழுது நான் யாரைப் போய்க் காப்பது…?

குருநாதர் காட்சி கொடுக்கின்றார்…! மனமே இனியாகிலும் மயங்காதே பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே…! மனமே இனி மயங்காதே…! மனமே இனி மயங்காதே…! என்று பாடலைப் பாடுகின்றார்.

உன் உயிர் போய்விட்டால் சொத்து சுகம் எல்லாம் எங்கே போகப் போகின்றது…? பல எண்ணங்கள் கொண்டு வாழ்ந்தாலும் இந்த உடலை விட்டு ஒரு நாள் போய்த் தான் ஆக வேண்டும்.

இந்த உடல் நமக்குச் சொந்தம் அல்ல… செல்வமும் சொந்தமல்ல ஆகவே நீ எதைச் சொந்தமாக வேண்டும்…? என்று வினா எழுப்புகிறார்.

1.எல்லோரையும் நலமாக்க வேண்டும் என்றும்
2.எல்லோருக்கும் அந்த அருள் உணர்வுகள் கிடைக்க வேண்டும் என்றும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி நான் பெற வேண்டும் என்றும்
4.அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்றும்
5.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அழியாச் செல்வமாகக் கூட்டி
6.அனைவரும் அதைப் பெற வேண்டும் என்ற வலுவைக் கூட்டினால் இது மறைவதில்லை.
7.உன் உடல் மறைகின்றது… ஆனால் உணர்வுகள் ஒளியாக மாறுகின்றது
8.நீ பிறவியில்லா நிலை அடைகின்றாய்… ஆகவே நீ அதைப் பெறு.

இந்த உடலே சதம் அல்ல நீ தேடிய செல்வங்கள் எப்படிச் சதமாகும்…? அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை உனக்குள் பெருக்கி… அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை வளர்த்து…
1.அனைவரும் நலம் பெறுவர்… அனவரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை உனக்குள் வளர்த்துக் கொள்.
2.இது தான் உனக்குச் சதமும் சொந்தமும் எல்லாமே…!

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் பல இன்னல்கள் படுகின்றனர் அத்தகைய நிலையில் இருந்து “அவர்களை மீட்ட வேண்டும்… அவர்கள் மீள வேண்டும்…” என்ற உணர்வை வளர்த்துக் கொள்…! என்று அடிக்கடி சொல்வார்.

மலைப்பகுதியில் அழைத்துச் சென்று பல துயரங்களை ஒவ்வொரு நிமிடம் எனக்கு ஊட்டித் தான் இந்த உண்மைகளை உணர்த்தினார் குருநாதர்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply