பிள்ளைகளைப் பெற்று அவர்களை வளர்த்து ஆளாக்கிக் கடைசியில் இறந்து போவது தான் கடமையா…?

பிள்ளைகளைப் பெற்று அவர்களை வளர்த்து ஆளாக்கிக் கடைசியில் இறந்து போவது தான் கடமையா…?

 

இந்தக் காற்றிலும் நீரிலும் இருந்துதான் மின் அலையை விஞ்ஞானிகள் எடுக்கின்றார்கள்.
1.இந்த உலகில் தோன்றும் மின் அலைகளின் துளிகள் தான் உயிரணுக்கள் யாவையுமே.
2.உயிர்த் துடிப்பு ஏற்படவே அம்மின் அலை இருந்தால் தான் செயல் கொள்ள முடியும்.

நீரைப் பாய்ச்சிச் சுழலவிட்டு மின் அலையை எடுத்து ஒளியையும் பல இயந்திரங்களை இயக்கவும் சாதன முறை கொண்டு செயலாக்குகின்றோம்.

இந்தப் பூமி பல மண்டலங்களிலிருந்து வரும் ஒளி அலைகளையும் அந்த மண்டலங்களின் இயற்கை குணத்தையும் ஒன்றுக்கொன்று ஈர்த்து எடுக்கிறதென்றால் காந்த அலையின் ஈர்ப்பினால் ஒவ்வொன்றும் சுழன்று செயல்படுகின்றது.

நம் பூமி சூரியனின் ஒளி அலையை ஈர்த்து வெளிப்பட்டு இந்த உலகச் சுழற்சி ஓட்டத்தில் ஓடியே செயல்படுவதுவும் ஒவ்வொரு உயிரணுவும் ஜீவ உடல்களும் வாழுகிறதென்றால் “காந்த மின் அலையின் சக்தி நிலையில் இருந்து தான் எல்லாமே செயல் கொள்கின்றன…”

1.மின்சாரத்தை விஞ்ஞானத்தில் மட்டும் காண்கின்றீர்.
2.இந்த உடலும் மற்ற எல்லாமே மின் அலையின் கூட்டுத்தான்.

மிகவும் சக்தி வாய்ந்த உயிரணுவின் ஆத்ம கூட்டை இந்த உடல் என்ற பிம்ப வாழ்க்கைக்குச் சொந்தப்படுத்தி இப்பந்தச் சுழற்சியிலேயே நம் சக்தியையும் செயலையும் விரயப்படுத்துகின்றோம்.

அது மட்டுமல்லாமல் பல சஞ்சலங்கள் கொண்ட ஆவேச உணர்ச்சியில் எல்லாம் நம் உயர் சக்தியை நம்மை அறியாமல் விரயப்படுத்துகின்றோம்.

பல கோடி கோடி உயிரணுக்களின் நிலை கொண்டு உயிர் வாழும்
1.நாம் இந்த வட்டச் சுழற்சியில் வாழ்க்கை என்ற நிலையிலும் நிறைவு பெறாத வாழ்க்கை வாழ்ந்து
2.மனிதனாக வாழ்ந்த வாழக்கூடிய செயலைப் பெற்ற நாம் இந்த எண்ணச் சுழற்சியிலும்
3.எதற்கும் பயன்படாத நித்தியக் கடனில் மூழ்கி வாழ்கின்றோம்.

கடமை கடமை என்று சொல்கிறோம்…! பிள்ளைகளைப் பெற்று அவர்களை வளர்த்து ஆளாக்கிக் கடைசியில் இறந்து போவது தான் கடமையா…? பின் அந்தப் பிள்ளைகளும் அவர்களுக்கென்று பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கி அவர்களும் இறப்பது தான் கடமையா…? இது தான் நித்தியக் கடமையா…?

தாய் தந்தையர் என்ன பலனைப் பெற்றார்கள்..? பிள்ளைகள் என்ன பலனைப் பெற்றார்கள்…? வாழும் வாழ்க்கையில்… படைப்பின் படைப்பில் “பலன் எது…?”

மனிதனாக பிறந்த நிலையில் இந்தப் பிறவிக் கடனைத் தீர்க்க வேண்டுமா இல்லையா..?

தன் சக்தி நிலை கூடக் கூட ஆத்ம பலம் வலுவேறித் தன் உயிராத்மாவிற்கு வீரிய உரம் ஏற்றி தன் பலம் என்னும் உண்மை பலத்தை இந்த மனித ஆத்மாக்கள் பெறக்கூடிய நிலை பெற வேண்டும்.

“தன் பலம்” பெறத்தக்க வழி முறையை உணர்த்திக் கொண்டே வருகின்றோம்.
1.மண் மணலாகி…
2.மணல் உருண்டு வளர வளரச் சிறு கல்லாகி..
3.பாறையாகி.. மலையாகி… வாழவில்லையா…?

ஒன்றுடன் ஒன்று சக்தி நிலை கூடிக் கூடி வலுப் பெற்று வளர்ந்து கொண்டே தான் உள்ளது. மனிதனின் வளர்ந்த நிலை தான் எல்லாவற்றின் ஐக்கியமும்.

அறிவாற்றல் கொண்ட மனிதன் தன் ஞானத்தை இவ்வழித் தொடரில் உரம் பெற்று ஆத்ம பலம் பெறப் பெற… மனிதனின் உயிரணுவின் வளர்ச்சி வளரப் பெறுகிறது.

உயிரணுவாக… உயிராத்மாவாக… இந்தச் சுழற்சி வட்டத்தில் பிறந்து வாழும் நாம்… அந்த வளர்ச்சியின் பாதைக்குச் செல்ல வேண்டும்.

ஏனென்றால் ஒவ்வொரு இயற்கையும் பலவாக வளரும் பொழுது
1.இயற்கையின் உயர் சக்தியான மனிதன் தன் உயிராத்மாவிற்கு உரம் கூட்டி
2.அவ்வுயிராத்மாவ வளர்க்கக்கூடிய பக்குவ ஞானத்தைச் செயல் கொண்டு வளர்த்திட்டால்
3.இந்த மனிதனின் உண்மையின் உயர்ந்த பலம் கூடி உயர் நிலை பெறலாம்.

காற்றில் தான் சகலமும் கலந்துள்ளன. அக்காற்றிலுள்ள அமில குணத்தில் தனக்குகந்த சக்தியை ஒவ்வொரு இயற்கை குணங்களும் அதற்குகந்த அமிலத்தை ஈர்த்து வளர்க்கிறது.

அத்தகைய செயலைப் போல் மனிதனாக வாழும் நாமும் இந்த இயற்கையில் காற்றுடன் கலந்துள்ள அமில சக்தியில் பலவும் உள்ள பொழுது
1,நம் எண்ணத்தைக் கொண்டு நாம் எடுக்கும் சுவாசத்தினால்
2.நாம் எடுக்கக்கூடிய எண்ண நிலைக்கொப்ப அதன் செயல் கொண்ட அமில குணத்தின் சக்தியை நம் சுவாசம் ஈர்த்து
3.நம் உயிராத்மா பலம் கொள்ளும் நிலை வருகிறது.
4.அத்தகைய பலம் கொண்டால் அழியாத நிலைகள் கொண்டு எக்காலமும் வாழலாம் ஞானிகளைப் போல… மகரிஷிகளைப் போல…!

Leave a Reply