
நல் வழி நடந்தால்… ரிஷிகளின் துணை நமக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் – ஈஸ்வரபட்டர்
“எண்ண நிலைப்படிதான் அனைத்து நிலைகளும் இயங்குகிறது…!” என்று உணர்த்தி வந்தேன். இந்நிலையின் சூட்சும நிலையை உணர்த்துகிறேன்.
முன் பாட நிலைப்படி… மகிழ்ச்சியாக உள்ள இடத்தில் அனைவரின் எண்ண நிலையும் மகிழ்ச்சி கொண்டதாகவும்… துக்கம் அனுஷ்டிக்கும் இடத்தில் அந்த நிலைக்கொப்ப அனைவரின் நிலையிலுமே துக்க நிலை சாடும் என்றுணர்த்தினேன்.
இப்படி இவ்வெண்ண நிலையின் சுவாச நிலை கொண்டுதான் இன்றைய “கைரேகை ஜோதிட நிலையும்… மனோவசிய நிலையும்” உள்ளன.
அந்நிலையிலுள்ளோர் (மனோவசியம் செய்பவர்) தன் எதிரில் அமர்ந்துள்ளவரின் எண்ணத்துடன் தன் எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தி அவரது எண்ணத்துடன் ஈர்க்கும் நிலையில் மனோவசியம் செய்யப்படுவோரின் அனைத்து நிலைகளுமே செய்யப்படுபவருக்கு இவரின் எண்ணக் கலவையுடன் வந்து மோதி அனைத்து நிலைகளும் அறிகின்றனர். இந்நிலை அறிபவர்கள் மற்ற ஆவியின் தொடர்பை வைத்து ஈர்க்கும் சக்தியைச் செயல்படுத்துகின்றனர்.
ஆனால் நம்மில் உயர்ந்த ரிஷிகளின் நிலையும் எண்ண சக்தியின் சக்தி நிலைத்தொடர் கொண்டுதான் அவர்கள் சூட்சும நிலைக்குச் சென்றதின் நிலையும்.
இவ்வுலகினில் பிறந்திட்ட அனைவருக்குமே ஒவ்வொரு நிலையான எண்ணக் கலவையின் வாழ்க்கை நிலையுண்டு.
அவ்வழியில் நல்லுணர்வு கொண்ட சக்தி நிலையின் எண்ணக் கலவையுடன்… வாழ்க்கையில் வழி வந்தவர்களின் நிலையில்தான் இவ்வுலகம் தோன்றிய நாள் கொண்டே…
1.பல சக்தி நிலையை இவ்வெண்ணத்துடனே ஈர்த்து இன்று ஆண்டவனாய்ச் செயல்படுகின்றனர்.
2.அவர்கள் மனித ஆத்மாவாய் நம்மைப் போன்ற நிலையில் வந்தவர்கள் தான்…!
எண்ணமுடன் தீய சக்தியை வளரவிட்டவர்களின் நிலை எல்லாம் எந்த நிலைக்குச் சென்றிட்டார்கள் என்று முன் பாட நிலையிலேயே உணர்த்தியுள்ளேன்.
நல்லுணர்வின் வழி வந்தவர்கள்…
1.தன் வாழ்க்கையில் நடந்திடும் கஷ்ட நஷ்டங்களை எல்லாம் ஜெயித்த நிலை கொண்டு வந்தவர்கள் தான்
2.இவ் உலகில் தோன்றிய மகான்கள் எல்லாரும்.
இதன் வழி வந்தவர்களின் உடல்களைத்தான் இவர்களின் நிலையைக் காட்டிலும் சக்தி கொண்ட ரிஷிகள் தன் உடலாக ஈர்த்துச் செயல்படுகின்றனர்.
ஆதிசங்கரர் போன்றோரும் மற்றும் அருணகிரிநாதர் முகமது நபி புத்தர் இயேசு பிரான் ஐயப்பர் கோலமாமகரிஷி இக்கலியில் வந்திட்ட இராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகாநந்தரும் இன்னும் பல ரிஷிகளும் இவ்வழியில் வந்தவர்கள் தாம்…!
நம் போகரே பல உடல்களைத் தன்னுடலாகச் செயல் கொண்டு செயல்படுத்தி வந்தார். இவ்வுலகினிலே ஆறுமுகனாய் இவர்கள் புராணக் கதையில் சொல்லிய நிலையில்லாமல் ஆறு உடல்களைத் தனதாகச் செயல்படுத்தி வந்தார்.
1.பிறவி எடுத்துப் பிறந்து வளர்ந்து வழிபடுத்தவில்லை தன் சக்தி நிலையை நம் போகர்
2.பல ஆத்மாக்களை ரிஷியின் நிலைக்குச் சென்றிடும் பக்குவ நிலை ஏற்படுத்தித் தந்தார் நம் போகர்
3.இன்று அனைவருக்கும் முருகனாய் ஜோதி அருள் அளித்திட ஆண்டவனாய்ச் செயல் கொண்டுள்ளார்.
இவ்வெண்ண நிலையின் தொடர் நிலையை வைத்துத்தான் நம் ரிஷிகளின் சக்தி நிலையெல்லாம் செயல் கொண்டு நடக்கின்றது. போகரைப் போன்றே இந்நிலையில் பல சித்தர்கள் இவ்வுலகெங்கும் செயல் நிலைப்படுத்தி நல் உணர்வுகளை இன்றும் செயலாக்கி வருகின்றனர்.
ஆனால் இக்கலியில் பக்தி நிலையும் தன் உணர்வும் குறைந்ததினால் பல நிலைகள் செயல்படாமல் செயற்கைக்கே அடிமைப்பட்டுச் சென்று விட்டனர்.
இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால்…
1.நம் எண்ண சக்தியின் தொடர் நிலையை ஈர்த்து
2.நல்லுணர்வு கொண்ட எந்த ரிஷியின் சக்தியின் தொடரையும் நாம் ஈர்த்துச் செயல் கொண்டிட முடிந்திடும்
3.நாமும் அவர்களின் நிலையை அடைய முடியும் என்பதற்குத் தான்…!
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.