நாம் செய்யும் தியானத்தின் முக்கிய நோக்கம்…!

aim of meditation

நாம் செய்யும் தியானத்தின் முக்கிய நோக்கம்…!

 

உங்கள் வாழ்க்கையில் சங்கடம் சலிப்பு வெறுப்பு வேதனை கோபம் குரோதம் பயம் ஆத்திரம் அவசரம் என்ற உணர்வுகள் வரும் பொழுதெல்லாம் ஈஸ்வரா… என்று உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பால் உங்கள் நினைவைச் செலுத்துங்கள். அதனின்று வெளி வரும் பேரருளைப் பெறவேண்டும் என்று ஏங்குங்கள். கண்களை மூடி ஏங்கி ஒரு நிமிடம் தியானியுங்கள்.

பின் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று உங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உள்முகமாகப் படரச் செய்யுங்கள்.

நாம் எத்தகைய தீமைகளைக் கேட்டுணர்ந்தாலும்…
1.நம் ஆன்மாவில் தான் (நெஞ்சுப் பகுதிக்கு முன்னாடி) முதலில் பெருகும்.
2.ஆனால் அதிலிருந்து உடலுக்குள் போகாது தடைப்படுத்திவிட்டால் முன்னாடியே நிற்கும்.
3.பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நம் உடலுக்குள் பெருகப் பெருக
4.நமது ஈர்ப்பு வட்டத்தைக் கடந்து வெளியே செல்லும்… சூரியன் அதைக் கவர்ந்து செல்லும்.
5.நம் ஆன்மா தூய்மையாகும்.

ஏனென்றால் பிறர் படும் கஷ்டங்கள் பிறர் படும் துயரங்கள் இதை எல்லாம் நுகர்ந்த உணர்வுகள் ஊழ்வினை என்ற நிலைகளில் வித்தாக நம் எலும்புகளில் பதிவானாலும்
1.அவர்கள் உடலிலிருந்து வந்த உணர்வுகளை நம் ஆன்மாவில் கவரப்பட்ட பின் தான்
2.நாம் நுகர்ந்து அவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்ற நிலையை அறிய முடிகின்றது.
3.அந்த உணர்வுகள் நம் உடல் முழுவதும் பரவி நம்மை இயக்கச் செய்கின்றது.

இருந்தாலும் நம் உயிர் உடலுக்குள் “ஜீவ அணுவாக மாற்றும் கருவாக” மாற்றிவிடுகின்றது, இதை ஏற்கனவே சொல்லியுள்ளேன்.

இதைப் போல் தனித்த அந்த வேதனையும் கோபமோ சலிப்போ இதைப் போன்ற நிலைகளைக் கருவாக்குவதற்கு முன் அடுத்த கணமே ஈஸ்வரா… என்று உயிரை எண்ணுங்கள்.

உயிரான ஈசனிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

இதைப் போல் ஏங்கிப் புருவ மத்தியில் எண்ணி எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் எங்கள் இரத்தநாளங்கள் முழுவதும் படர வேண்டும் இரத்தங்கள் முழுவதும் கலக்க வேண்டும் என்று இப்படி ஒரு இரண்டு நிமிடம் செய்து வலுவை ஏற்றிக் கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு நோயாளியை சந்திக்கச் சென்றாலும்… மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடலிலே படர வேண்டும் அவர் உடல் நலம் பெற வேண்டும் அவர் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ வேண்டும் அவர்கள் குடும்பத்தில் உள்ளோர் நலம் பெறவேண்டும் என்று இப்படித் தான் எண்ண வேண்டும்.

நாம் இப்படி எண்ணிப் பழகினோம் என்றால்..
1.அந்த நோயாளியின் உணர்வுகள் நமக்குள் பெருகாது அதைச் சிறுத்து
2.அவர்கள் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை நாம் எண்ணியதை
3.நம் உயிர் இங்கே உடலுக்குள் கருவாக உருவாக்கி விடுகின்றது.

தியானம் என்பது… இப்படித்தான் வாழ்க்கையிலே நாம் மாற்றியமைக்க வேண்டும். தீமைகள் உருவாகாதபடி அருள் ஒளியின் உணர்வுகளைக் கருவாக்கி நமக்குள் பேரொளியாகப் பெருக்கிடல் வேண்டும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply